Tuesday, 2 November 2021

யார் இந்த நிலவு-9

யார் இந்த நிலவு-9


கைலாஷ் , அபி-ஆதிராவை சற்றே விலக்கி வைக்க முடிவெடுக்க,  வலிமையான விதியை யாரால் மாற்ற இயலும், அது அக்கணமே  ஆதிராவை அபிராம் முன் கொண்டு வந்து நிறுத்தியது. அபிராம், வேகமாக கைலாஷ் அறையிலிருந்து ஏமாற்றத்தோடு வெளியேற, வராண்டாவில் புயல் வேகத்தில் முன்னேறியவனை எதிர் கொண்டாள் ஆதிரா. 


அவ்வளவு வேகமாக ஒருவன் வரக்கூடும் எனும் எதிர் பாராததால் அவன் மீதே மோத, அவள் கையிலிருந்த பேப்பர்கள் சிதற, கீழே விழப் போனவள், " ஓ சாரி" என ஆதாரத்துக்காகக் கையை வீசி அனிச்சையாக அவன் சட்டையைப் பிடிக்க, அவன், உடற்பயிற்சியால்  இரும்பான தன் மேனிக் கொண்டு, அதுவும் கோபமாக விறைத்து வந்தவன், மென்பஞ்சு மேனியாளை இடித்ததில், அவள் மென்வதனம் ,ஏற்கனவே பரிட்சியமானதை நொடியில் மூளைக்கு உணர்த்த, உணர்வால் தன் மதிமுகத்தவளை உணர்ந்து, உள்ளே உருகியவன் அவள் விழுந்து விடாமல் சட்டென வளைந்து அவளின்  இடையில் கை கொடுத்துத் தாங்கினான். 


அவள் பயந்தபடியே கண்ணை மூடியிருந்தவள், விழவில்லை என்ற தைரியத்தில் மெதுவாகக் கண்ணைத் திறக்க, அவளைக் கண்டதிலேயே சிலையாகிப் போயிருந்த அபிராம், அவளின் ஒவ்வொரு அசைவையும் மனதில் படமெடுத்துக் கொண்டான். யாருக்காக அவன் இரவெல்லாம் கார் ஓட்டி பறந்து வந்தானோ, அந்த மதிமுகத்தவளின் தரிசனம் கிடைத்து விட்டது. அதில் அவன் முகத்தில் அத்தனை நேரமிருந்த ஏமாற்றம், வருத்தம், கோபம் எல்லாம் நொடியில் காணாமல் போனது. கனிந்த முகமும் காதலால் கசிந்துருக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். 


" ஆதிரா, என்னாச்சு" என்றபடி சங்கீதா ஓடி வர, அதில் மீண்டவன், மாமன் கூறிய வார்த்தைகள் நினைவில் வர , சட்டென ஒரு நிமிட கண் மூடலில் அத்தனை காதலையும் உள்ளடக்கி , அறிமுகமில்லாதவள் போல் ,அவளை நேராக நிறுத்தி, " ஆர் யூ ஓகே" என சம்பிரதாயமான வார்த்தையைக் கேட்டான். 


" யெஸ், ஐ யம் ஓகே" என்றவள், " சாரி நீங்க" எனப் பெங்களூரில் காப்பாற்றியவன் தானே எனச் சந்தேகமாகக் கேள்வியை எழுப்ப, அதைக் கண்டு கொள்ளாதவனாக, "சாரி, நான் தான் பார்க்கமா வேகமா வந்துட்டேன். " என்றவன்,கீழே சிதறி  கிடந்த காகிதங்களையும்  அவளையும்,  சங்கீதாவையம் பார்க்கவும்,


 " நீங்க கிளம்புங்க அபி சார், நான் எடுத்துக்குறேன்" என்ற சங்கீதாவுக்கு , ஒரு தலையசைப் போடும், ஆதிராவிடம் அதையும் சொல்லாமல் கடந்து போனான் அபிராம்.


ஆதிராவுக்கு, அவனா இவன் என்ற குழப்பம், அவன் தான் எனில் ஏன் என்னைத் தெரியாதது போல் கடந்தான் , ஒருவேளை தன்னை இங்கு எதிர்பார்த்திருக்க மாட்டான், என் முகமும் கூட மறந்து போயிருக்கும் என தனக்குத் தானே எண்ணிக் கொண்டவள் சங்கீதாவை  இவன் யார் என்பது போல் பார்க்க, அவள் அபிராம் என்ற பெயரோடு, அவன் குடும்ப வரலாற்றையும் சொல்லி முடித்தாள். 


இரண்டு நாட்களாக அபிராம் முறுக்கிக் கொண்டு திரிகிறான். சரியான நேரத்துக்கு, சாப்பாடு, தூக்கமின்றி, ராஜா மாமா சொன்ன, " வேலையைப் பார்" என்ற ஒரு சொல்லுக்காக ஓடுகிறான்.  ' இவர் எப்படி என்னை அப்படிச் சொல்லப் போச்சு, நான் என்ன பொண்ணுங்க பின்னாடி திரியிறவனா, இவரு தான், வாழ்க்கைத் துணைனா இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும்னு ஏத்தி விட்டார். அதே மாதிரி ஒரு பொண்ணைப் பார்க்கவும் ஓடிவந்தேன். இது ஒரு தப்பா" என யோசித்தவன் வேலையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். இதுவும், அவர் பாடம் தான்.


இரண்டு நாட்களாக மகன் சரியாகச் சாப்பிடக் கூட இல்லை, என்ன இவ்வளவு வேலை வாங்குகிறீர்கள் எனக் கஸ்தூரி, கைலாஷ்க்கு போன் அடித்து விட்டார். " விடுமா, இந்த வயசில் வேலைப் பார்க்காமல் எப்ப பார்க்கப் போறான்" என முடித்து விட்டார். ஆனாலும் அன்னை மனம் பொறுக்காமல் குன்னூர் வரை சிபாரிசு பிடிக்க, சௌந்தரி மகனிடம் பேசினார். அதற்க்கு ஒரு பலன் இருந்தது.


அபிராமின் ஒரு  மில் ஆர்டர், குறிப்பிட்ட வகை எம்பாஸ்டு ரகம் துணி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தோடான தானியங்கி  தறிகள் கே. ஆர் மில்லில் தான் இருந்தது. இங்கு தன் மில்லில் ஓட்டிக் கொள்ள கேஆர் ஸ்பெஷல் பர்மிசன் தந்திருந்த நிலையில், அதுவும் அதே வளாகத்தில் தான்  ஓடிக் கொண்டிருக்கிறது. அதை மேற்பார்வையிடும் வேலையை அபி அங்கு தான் செய்ய வேண்டும். அதற்காக மாமாவையும் பார்க்காமல், ஆனால் உங்களால் தான் இரவு, பகல் பாராமல் வேலை செய்கிறேன் பாருங்கள் எனும் வீம்போடு அவன் வேலையில் பலியாய் கிடந்தான். 


கஸ்தூரி போன் அடிக்கவுமே யோசித்தவர், அம்மாவும் சிபாரிசு செய்யவும், இரண்டு நாட்களில் ஆதிராவை கவனித்ததில் அவள் மேல் நம்பிக்கை கொண்டு, அபி இருந்த இடத்தை, அந்த ப்ராஜெக்டை பார்த்து வரும்படி  சொல்லி அனுப்பி விட்டார். ஆதிரா ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தவள், இந்த வகை மிஷின்கள், அதன் தயாரிப்புகளைப் பற்றி, சென்ற பருவத்தில் லேட்டஸ்டாக படித்திருக்க, அவளுக்கும் அதில் ஆர்வம் இருக்க, கைலாஷ் அனுப்பவும் ஒத்துக் கொண்டு வந்தாள். 


அங்கிருந்த சூப்பரவைசர்களிடம் அதனைப் பற்றி விசாரிக்க, அவர்கள் தொழில் ரகசியத்தைச் சொல்வதா, வேண்டாமா என்பது போல் பார்க்க, சங்கீதா சூப்பரவைசர் காதில், " பெங்களூர்லருந்து அப்பா கூட்டிட்டு வந்திருக்காருங்கண்ணா, எனக்கென்னமோ, ஒரு பக்கம் சாயலைப் பாருங்களேன், அவர் மகளோன்னு தோனுதுங்க. எல்லாத்தையும் கத்துக்குடுக்க வேற சொல்றாருங்க " என ரகசியம் பேச, அதன் பிறகு ஆதிராவை குறுகுறுவெனப் பார்த்து, அவரும் ஆமெனத் தலையாட்டினார். 


" அப்ப, அபிசாருக்கு பொண்ணு ரெடி" எனத் தொழிலாளர்களே இவர்களை ஜோடி சேர்த்தனர். இதே விசயம் தான் மூன்று நாட்களாக பேக்டரி முழுவதும் முக்கியமானவர்களுக்கு மட்டும் தெரியாமல் வதந்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது. 


ஆனால், அபியும், ஆதிராவும் அறிமுகமில்லாதவர்கள் போல் நடந்து கொள்ள, "நாம சேர்த்து வைப்போம்" எனக் களத்தில் இறங்கியவர்கள், " மேடம், நீங்க கேக்குற விவரமெல்லாம், அபி சாருக்குத் தான் தெரியுமுங்க. நீங்க அவிககிட்டையே கேட்டுக்குங்க" என சூப்பரவைசர், வினையமாகச் சொல்லிவிட  ஆதிரா ஓர் தலையசைப் போடு அபிராமிடம் வந்து நின்றாள். 


" ஹலோ மிஸ்டர். ராம், ஐயம் ஆதிரா.பிகே , ப்ரம்" என தன் கல்லூரியையே தனது அறிமுகமாகச் சொன்னவள், " இங்க ட்ரைனியா வந்திருக்கேன். பாபாசாப் , பீல்டு சூஸ் பண்ணச் சொன்னாங்க. கேன் யூ ப்ளீஸ் கைட்மீ" எனக் கொங்குத் தமிழ் பேசுபவனிடம், கொங்கணி உச்சரிப்போடான, கொஞ்சு தமிழில் அவள் கேட்கவும்,  அபிராம்க்கு உள்ளே பட்டாம் பூச்சி பறக்க, ஆனால் மாமன் விரித்து வைத்திருந்த வலையில் பறக்க இயலாமல் சிக்கியிருந்தான்.


"மின்னல் ஒருகோடி சேர்த்து


மின்னும் வெள்ளித் தகடாய்


என் மதி நிறைக்க வந்தவள்


நின் மதிமுகம் கண்ட நாள் முதலாய்


ஆர்ப்பரிக்கும் ஆழி பேரலையாய்


என் மனம் அதிருதடி -ஆதிரா "

                     

அதுவும் அவளது ராம் என்ற அழைப்பே அவனுக்கு ஸ்பெசலாகத் தோன்றியது. நிமிடத்தில் உள்ளே உருகிய காதல் ரசம் கசிந்த உள்ளத்தை அடக்கியவன், வெளியே, " ஹாய், ஐ ஹேவ் நோ, அப்ஜக்சன். ஆனால் நீங்க சேர்மன் சார்ட்ட பர்மிஷன் வாங்கிக்குங்க" என பிரயத்தனப்பட்டு சாதாரணமாகச் சொன்னான். 


" ஓ, தாங்க்யு வெரி மச், நீங்க சரின்னு சொல்லிட்டிங்க, அதுவே போதும். பாபா' ட்ட ஈசியா பர்மிஷன் வாங்கிடுவேன்" என அவள் அகன்ற கண்களை மேலும் அகற்றி, ஆர்வம் தொனிக்க நன்றி சொன்னவள், " ஏக் மினிட், பாபா'ட்ட கேட்டு வந்திடுறேன்"  எனக் கண்களால் நயந்து அவள் அனுமதி கேட்க, அவனுள் மேலும் மகிழ்ச்சி பிரவாகம். 


'மாம்ஸ், என்னை இவள் பின்னாடி அலையாதன்னு சொன்னீங்கல்ல, இப்ப என்னச் செய்வீங்க பார்ப்போம், ஆனால் ப்ளீஸ் ஆப்பு வச்சிறாதீங்க " என கேஆரை எண்ணி உள்ளே கலவரமாகவும், வெளிப் பார்வைக்கு மெஷின் மேல் பார்வை பதித்தவாறு அசட்டையாகவும்  நின்றான் . 


ஆதிரா, கைலாஷின் பர்சனல் நம்பருக்குப் பேசி விட்டு, " ஓகே பாபாசாப், மஸ்து ஹை னா, படியா மஹ்து. ஹாங் தேதி ஹூம்" ,என முகத்தில் மகிழ்ச்சி பொங்க, அலைப் பேசியை அவனிடம் கொண்டு வந்து நீட்டினாள். அவன் கேள்வியோடு நோக்கவும், " பாபாசாப்" என்றாள், அப்பாவைத் தான் இப்படி அழைக்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டவன்,  சம்பிரதாயமாக , " யெஸ் ஸார்" என்றான். 


அடுத்த முனையில், "மாப்பிள்ளைங்க, ஓவாரா நடிக்காதீங்க. இரண்டு நாளா நீ வீட்டில் காட்டுற கூத்தெல்லாம் எனக்கு லைவா அப்டேட் ஆகிட்டுத் தான் இருக்கு. என்ன என் தங்கச்சிக்கிட்ட முறைக்கிறியாமாம். தொலைச்சு போடுவேன். கொஞ்சம் அடங்கு" என்றவர், " ஆதிராவை அனுப்பியிருக்கேன். பார்த்து தொழிலைக் கத்துக் கொடு" என்றார், அவனுக்கும் முகத்தில் புன்னகை அரும்ப, " இப்ப எப்படிங்க மாமா, மருமகன் மேல நம்பிக்கை வந்திருச்சுங்களா" என அவன் குசும்பாக வினவவும், 


" நம்பிக்கை மருமகன் மேலே இல்லை கண்ணு, மகள் மேல வந்திடுச்சாக்கும். அது வந்து பாருங்குது. " என ஆதிராவை புகழ்ந்து விட்டு போனை வைத்தார் கைலாஷ்.


அது முதல் ஒரு வாரமாக இருவரிடமும் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது. அன்று அவளைக் காப்பாற்றியது, தான் தான் என அபியும் சொல்லவில்லை, ஆதிராவும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பெரும் நகரங்களில் படித்தவளான ஆதிராவிற்கு அந்த மாணவர்கள், தொட்டுப் பேசுவதும், லேசான அணைப்பு, சிலர் வக்கிரமாக அணைப்பது போன்ற பல்வேறு வகைப்பட்டவர்களைக் கையாண்டு எச்சரிக்கையோடே இருக்க வேண்டிய சூழல் இல்லாமல், அபியின்  இயல்பான மரியாதையான பேச்சும், கண்ணியமான பார்வை, நடவடிக்கையுமே அவளை, அவன் பால் ஈர்த்திருந்தது. 


சில நாட்களில் ஆதிராவின் குணம் பற்றியும் ஓரளவு புரிந்திருந்தவன், இவளுக்குப் பின் உள்ள மர்மத்தையறிய , அங்கு இங்கு என அவள் கல்லூரியில் ஓர் ஆளைப் பிடித்து,அவள் பின்புலத்தை  விசாரிக்கச் சொன்னான். ஆதிராவைத் தேடும் மராட்டியர்களைப் பிடித்து விசாரிக்கவும் ஆளை ஏற்பாடு செய்திருந்தான். ஆதிராவைப் பற்றி நேர்மறையான கருத்துகள் வரவேண்டும் என எதிர் பார்த்துக் காத்திருந்தான். மாமாவை ஆதாரத்தோடு மட்டுமே எதிர் கொள்ள இயலும் என்பது அவனது கணக்கு. 


பெங்களூரு சென்று வந்ததிலிருந்து முதல் இரண்டு நாட்கள், இருந்த மகனின் போக்குக்கும், அடுத்து வந்த நாட்களில் அவன் நடந்து கொள்ளும் விதம் என அத்தனையையும் குறிப்பெடுத்த விஜய ரங்கன், சத்தியனிடம்  கேட்டு விசய மறிந்து சிரித்துக் கொண்டார். 


'மாமனும், மருமகனும் துப்பறிஞ்சு வந்து சேருங்க. நானும் காத்திருக்கேன்' என மனதில் நினைத்துக் கொண்டவர், கதவை அடைத்து விட்டு போனில்  பேசினார். 


" தங்கச்சிமா, நீங்க நினைக்கிற மாதிரி , அவ்வளவு நாள் தாக்குப் பிடிக்கிறது கஷ்டம். சீக்கிரம் இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கம்மா. உண்மை தெரிஞ்ச பிறகு உன் புருஷன், என்ன ஆட்டம் ஆடப் போறானோ , எனக்குக் கதி கலங்குது. சமீபமா இரண்டு வருசமா தான் உன்னைப் பார்த்தேன்னு சொன்னாலும் நம்ப மாட்டான். " எனப் புலம்பிக் கொண்டிருந்தவர், அந்தப் பக்கம் சொன்ன மறுமொழிக்குப் பின் தயங்கியபடியே, "நான் ஒரு யோசனை சொல்றேன். என் மகன் அபி இருக்கான், அவனுக்கு உங்க  மகளைக் கல்யாணம் செஞ்சு வச்சிருவோம். உங்கப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வா இருக்குமில்ல" என்றவர். 


" இது தியாகமெல்லாம் இல்லைமா,என் சுய நலம், பிராயச்சித்தம் எல்லாமும் தான். விதியும் அவுங்களை சந்திக்க வச்சிருக்கே , அபிக்கும் உன் மகள் மேல நோக்கமிருக்கு , அவன் காட்பாதர் மாமா கேஆரை எதிர்த்துக்கிட்டு நிற்கிறான். இவ்வளவு பேர் இருக்கோம். இருபத்திரண்டு வருஷம் முன்னாடி இருந்த நிலைமை இப்போ இல்லை. ராஜனே எல்லாத்தையும் சமாளிச்சிடுவான்" என நம்பிக்கை தந்தவர் மேலும் சில வார்த்தைகள் பேச, யாரோ அலைக்கும் சத்தம் கேட்டு  " சரி, நீங்கப் போங்க, உங்க அத்தையம்மா கூப்பிடுறாங்க" எனச் சிரித்தபடி போனை வைத்தார். இங்கும்,  கதவைத் தட்டும் ஓசையில் அவர் திறக்கவும் , " ஏனுங்க, அதென்ன ரூம்பை அடைச்சிக்கிட்டு யார்க் கிட்ட ரகசியமா போன் பேசுறீங்க. " எனக் காபியோடு வந்தார் கஸ்தூரி. 


" ஏனுங்க அம்மணி, ஊன்றப் புருஷன் மேல நம்பிக்கை இல்லையாக்கும்" என்றபடி விஜயன் காபியை எடுத்துக் கொள்ளவும், 


" சின்ன வயசில அபி பிறந்த வீட்டுலையே , என்னைத் தனியா விட்டுப் போட்டு, அண்ணனோட வேலை பழகுறோம்னு வடக்க போனீங்க. அப்பையே சந்தேகப்படலை, இப்பத்  தான் சந்தேகப் படப் போறானாக்கும். இந்த வயசானகாலத்தில வயசுக்கு வந்த புள்ளைகளை வச்சுகிட்டு, அப்படி என்ன பெரிசா செஞ்சு போடுவீங்க" எனக் கணவன் மேலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையில் கேட்டார் கஸ்தூரி . ஒரு சிரிப்பு சிரித்துக் கொண்டவர், "அப்ப, என்னை கிழவன்கிறியா,  சோதிச்சு பாத்திருவோமா " எனக் கஸ்தூரியின் தோள் மீது, விஜயன்  இரண்டு கையையும் போடவும், ஒரு கையால் அவர் வாயை அடித்தவர் " ஐயோ, மாமா பேசாத கிடங்க, பையன் வர்ற நேரமாச்சு, உங்க மகள் ஹால்ல தான் உட்கோர்ந்து இருக்கிறா" என மெல்லப் பேசி அவர் கையை விலக்கி விட, 


" அப்ப இது தான் பிரச்சனை, குன்னூர் வரைக்கும் போயிட்டு வருவமா" என விஜயன் கண் சிமிட்டவும். 


" அது என்னாத்துக்கு, பெரியவிகளுக்கு பணிவிடை பண்றதுக்கா.நம்ம போனாலும் அவிக, பவானி, பவானின்னு அந்த மேடத்தைத் தான் கூப்பிடுவாங்க " என அவர் வசந்த விலாசவைத்தவர்களைக் குறிப்பிட்டுச் சொன்னார் கஸ்தூரி. 


" பெரியவிகளும் வேணாம், சின்னவிகளும் வேணாம்னா, பெங்களூர் போவோம்" என விஜயன் விடாப்பிடியாக நிற்க, 


" எதுக்கு, உங்க சினேகிதர் மகளைச் சம்பந்தம் பேசவா, பிச்சுப் போடுவேன் பிச்சு . நல்லாப் பொண்ணு  பார்த்திங்க. " என வகையாக கஸ்தூரி கணவனைத் திட்டிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டுப்  பெற்றவர்கள் படுக்கையறையை எட்டிப் பார்த்த இளைய மகள் ரஞ்சனி , " அம்மா, அந்தப் பொண்ணு ஒண்ணும் கேவலமா எல்லாம் ட்ரெஸ் பண்ணலை. பெங்களூர்ல, அது மாதிரி பார்ட்டிஸ்க்கு அப்படித் தான் வருவாங்க. முட்டி வரைக்கும் போட்டு நல்லா தான் இருந்தது" எனச் சப்பைக் கட்டுக் கட்டி வந்தாள். இவள்  கல்லூரியில் பேசன் டெக்னாலஜி இளங்கலை இரண்டாமாண்டு படிக்கும் மாணவி. 


மகளைத் திட்டுவதற்கு இந்தக் கூற்று பத்தாதாக் கணவனை விடுத்து , மகளைப் பற்றிக் கொண்டார் கஸ்தூரி. உல்லாசமாகச் சீட்டியடித்தபடி அபிராம் வீட்டுக்கு வரும் வரை வளர்ந்தது அந்த மண்டகப்படி. 


" இந்த உன் மகன், ரொமாண்டிக் ஹீரோவட்டமா , ஒரு வாரமா வானத்துலையே மிதக்கிறார். அவரையெல்லாம் கவனிக்க மாட்டீங்க , எதார்த்தமா, ஒரு வார்த்தை சொல்லிப் போட்டேன்னு, என்னை இப்படி வதைக்கிறியே , இது உனக்கே நல்லா இருக்கா கஸ்தூரி" என ரஞ்சனி , அபிராமை மாட்டி விட, 


" ஏய் ரஞ்சி, நீ தப்பிக்க, என்னைக் கோர்த்துவிடாதடி " என அபிராமும் வரப் பேச்சு களைக்கட்டியது. 


" எம்பட பையன்  சந்தோஷமா இருக்கிறது, உன் கண்ணுக்கு பத்தலையாக்கும். நீ சொன்னாலும், சொல்லலைனாலும் அவன் ஹீரோ தான்" என கஸ்தூரி மகனுக்கு கொடிப் பிடிக்க, பார்த்துக்கிட்டேயில்லை, என காலரைத் தூக்கி விட்டு, கர்வமாகப் பார்தான் அபி. 


" ஏங்கண்ணு, உங்க அம்மா , அண்ணனுக்கு வைக்கிற ஐஸ் வைக்கிறதை பார்த்தா, போட்டு வாங்கிடுவாளாட்டத்துக்கு " என விஜயன் மகளகடம் ரகசியம் பேச. 

" க்க்கூம், எனக்கும் அப்படி தானுங்கப்பா தோனுது. இருங்க வேடிக்கை மட்டும் பார்க்கலாம். " என ரஞ்சனியும் அம்மா மகன் பேச்சுக்கு செவி கொடுக்க, கஸ்தூரி , சொன்னது போலவே, 


" அபிக்கண்ணு, அண்ணன் பெங்களூர்லிருந்து, ஆரா ஒரு பொண்ணை கூட்டியாந்திருக்காராம். ஹாஸ்டல்லையும் கூட தங்க வைக்காம, தான் வூட்டுலையே வச்சிருக்காராம், ஆத்தா சொன்னாங்க. நிஜமா " என இழுக்கவும். " ஆமாம் மா" என ஆதிரா புராணத்தை ஆரம்பித்து  விட்டான் அபிராம். 


" அட, விட்டா , மருமகளாக்கி வூட்டுக்கே  கூட்டிட்டு வந்திருவியாட்டத்துக்கு " என கஸ்தூரி நூல் விடவும், 

" நீங்க நேர்ல வந்து பாருங்க. இது தான் என் மருமகன்னு, கையோட  கூட்டிட்டு வந்திடுவீங்க. என்ன ஒன்னு, உங்க அண்ணன் தான் நந்தியாட்டமா குறுக்க நிப்பாரு" என சலித்துக் கொண்டவன்,  விஜய ரங்கனின் வெடிச்  சிரிப்பிலும், கஸ்தூரியின் முறைப்பிலும், " இரு மாமாட்ட போட்டுக் குடுக்குறேன்" என்ற தங்கையின் மிரட்டலிலுமாக ,  ஆதிராவுக்காக, கைலாஷ் ராஜனையே குறை சொல்லியிருக்கிறோம் என்பதை உணர்ந்தவனாக,  அசடு வழிந்து விட்டு வேலை  இருப்பதாக, அவசரமாக ஓடிவிட்டான். 


இவர்கள் மகிழ்ச்சி நிலைக்குமா, அபிராம் காதல் கை கூடுமா. பொறுத்திருந்து பார்ப்போம். 

நிலவு வளரும். 


Tuesday, 26 October 2021

யார் இந்த நிலவு -8

யார் இந்த நிலவு -8

பவானி சற்றுத் தாமதமாக எழுந்தவர் மணியைப் பார்த்ததும் விழுந்தடித்து எழுந்து குளித்து உடுத்திக் கொண்டு கீழே ஓடினார்.

" அம்மா, சாரிமா லேட்டாயிடுச்சு, சாரி, சாரி" எனப் பூஜையறையிலிருந்த அபரஞ்சியிடம் இறைஞ்சி விட்டு, கிச்சனுக்கு ஓடினார். அந்தந்த நேரம் தேநீர், மால்ட் எல்லாம் பெரியவர்களுக்குச் சென்று சேர்ந்துவிட்டதா என விசாரித்துக் கொண்டவர், தனக்கான சாயோடு வராண்டாவில் வந்து அமர, அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் சாரதாவும், சௌந்தரியுமாக ஆளுக்கொரு ஸ்பீக்கரில் கைலாஷ் வீட்டு வேலைக்காரர்களிடம் காசிப் கேட்டுக் கொண்டிருந்தனர். தூண்டி துருவும் வேலையைச் சௌந்தரி செய்ய, சராதா சுவாரஸ்யமாகக் கதையை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென வேலைக்காரர்கள் பேச்சை முடித்துக் கொண்டு போனை வைத்து விட, " அடக் கருமம் புடிச்சவளே, சஸ்பென்ஸோட போனை கட் பண்ணிட்டா. சத்தியனுக்குப் போன் போடுவோம்" எனச் சௌந்தரி , சத்தியனுக்கு அழைக்க,

" ஆத்தா, அப்பா வர்றாருங்க. நீங்க போனை வைங்க. நானே அப்புறம் கூப்பிடுறேனுங்க" என அவனும் போனை வைத்தான். கைலாஷ் அங்குக் காதை தீட்டிக் கேட்டுக் கொண்டிருக்க, பவானி இங்குச் சுவாரஸ்யமாக இரண்டு மாமிகளையும் வேடிக்கை பார்த்தார்.

சௌந்தரி ,"இவனொருத்தேன்" என நொடித்துக் கொண்டவரை, "மகனுக்கே போனைப் போடு சௌந்தி" என்ற சாரதாவின் யோசனையில் அடுத்து டயல் செய்யும் முன், கைலாஷே அம்மாவுக்குப் போன் அடித்து விட்டார்.

"ராஜா, பெங்களூருக்கு போயிட்டு இரண்டு நாள் இருந்துட்டு வருவேன்னு பார்த்தேன். உடனே வந்துட்ட" என வியந்தார்.

" போன வேலை முடிச்சது வந்துட்டேன்" எனத் தான் ரணங்களைப் பெற்று வந்ததை நினைத்துச் சொல்லவும், " புரியுது, புரியுது. பெங்களூர்லருந்து அம்மா கேட்டேன்னு பேத்தியை கூட்டிட்டு வந்துட்ட, மருமகளை எப்பக் கூட்டிட்டு வருவ" எனக் கேட்கவும், சத்தமாகச் சிரித்தவர்,

" அதுக்குள்ள உளவுத்துறை ரிபோர்ட் வந்திருச்சா. ஆனாலும் நீங்க ரொம்பப் பாஃஸ்ட் தான்" என்றவர்,

"ரொம்பக் கற்பனையை வளர்த்துக்காதீங்க. அது வேலைக்கு வந்த பொண்ணு. ஒரு ஆபத்து நேரம் உதவியிருக்கேன், அவ்வளவு தான்" எனச் சொல்லவும்.

"இல்லைனாலும் பரவாயில்லை, ஏதாவது இருக்கிற மாதிரி சொல்லு, கற்பனையிழையாவது சந்தோஷமா இருந்துக்குறேன் " என்றவர், "எனக்கும் வயசாகுது , உன்னை ஒத்தையா விட்டுட்டு போயிடுவேனோன்னு மனசு பதறுது.

" ராசா, நீ மனசில நினைச்சப் பொண்ணு யாருன்னு சொல்லேன். அந்தப் பொண்ணு கைல, கால்ல விழுந்தாவது நான் உன்கூடச் சேர்த்து வைக்கிறேன்" என வழக்கமான கேள்வியையே மறுபடியும் கேட்கவும். சிரிப்பு மாறி, அமைதியானவர், அம்மா விடாபுடியாகக் கேட்கவும், " அவள் உயிரோட இருந்திருந்தா நானே கூட்டிட்டு வந்திருக்க மாட்டேனாம்மா. நான் தான் அவளைத் தேடிப் போகனும். அவள் வரமுடியாத இடத்துக்குப் போயிட்டாமா " எனக் குரல் கம்மியவரை,

" அந்த வார்த்தையைச் சொல்லாத ராசா, அம்மாவைத் தூக்கிப் போட்டுட்டு, அவளைத் தேடிக்கலாம்" எனச் சௌந்தரியும் உடைந்து பேச, " அத்தை" எனப் பவானி முறைத்தார்.

" இல்லமா சொல்லலை." எனப் பவானிக்குப் பதில் தந்தவர், " இங்க பாரு, மருமகள் உன்கிட்ட இப்படிப் பேசறதுக்குத் திட்டுது" என இயல்புக்குத் திரும்பியவர், அவர் அழைத்து வந்த பெண்ணைப் பற்றிக் கேட்கவும், " நீங்களே வந்து பார்த்துக்குங்கம்மா" என அம்மாவை தன்னிடத்தில் வரவழைக்கும் ஆர்வத்தைத் தூண்டினார் கைலாஷ். "வர்றேன், வர்றேன், நேத்து கிளம்புறேன்னு சொன்னதுக்கே உங்கப்பாவுக்குக் கோபம், சமாதானம் பண்ணிட்டு வர்றேன் " என்றவர் அபிராம் க்குப் பார்த்திருக்கும் பெண்ணைப் பற்றியும் துப்பறிஞ்சு விட்டுப் போனை வைத்தார் சௌந்தரி.

கைலாஷ்க்கு அதன் பிறகு தான் மருமகன் நினைவு வர அவனுக்குப் போன் போட்டார், ஆனால் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவன் தாத்தாக்களோடு பேசிய பிறகு போனை சார்ஜில் போட்டிருந்தான்.

கைலாஷ் ராஜன் , தன் அம்மாவிடம் போனில் பேசும் போதே, அங்கிருந்த வேலைக்காரப் பெண் அடுப்படிக்கு ஓடியிருந்தாள். அம்மாவிடம் பேசிவிட்டு வைத்த பின் " இன்னைக்கு எந்த கருப்பு ஆடு" என்பார். ஏனெனில்  மகன் வீட்டை குன்னூரிலிருந்தே ஆட்டிப் படைப்பார் சௌந்தரி. கோவையிலிருந்த இரண்டு வீடுகளுமே அவருடைய ராஜாங்கத்துக்கு உட்பட்டது தான். அவர்களை அதிகாரம் செய்வதில் தான் அவருடைய பொழுதும் போனது. அதனால் கைலாஷ் வேலையாட்களை எதுவும் சொல்ல மாட்டார், ஆனால் அவர்கள் யாரென தனக்குத் தெரியும் என்று மட்டும் தெரியப் படுத்தி விடுவார். 

 

அம்மா கேட்கவும் தான், அபிராம் , ஆதிராவைத் தேடிக் கொண்டிருப்பது நினைவில் வர, அவனுக்கு போன் செய்தார். ஆனால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. யோசனையோடு அமர்ந்திருந்தவர் அருகில், " குட்மார்னிங் பாபாசாப்" என்றபடி வந்தாள் ஆதிரா. அந்தக் குரலில் நிமிர்ந்து பார்த்தவர், மாற்று உடையாக அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த நீளமான நைட் ட்ரெசில் பார்க்கவும், " குட்மார்னிங் டா மா" எனச் சிரித்தவர், "அழகான தேவதைக்குப் பாதிரியார் அங்கியை குடுத்துட்டாங்களே " என குறைபட்டவர், " என் கூட வா. வேணுங்கிற ட்ரெஸ்ஸை எடுத்துக்கோ" எனப் பங்களாவுக்குப் பக்கவாட்டிலிருந்த மற்றொரு கட்டிடத்திற்குக் கூட்டிச் சென்றார்.

 

" புது இடம் தூக்கம் வரலையாக்கும் " என விசாரித்தவரிடம், " ஏற்கனவே, சேர்மன் சாரை சொன்ன நேரத்துக்கு பார்க்கவரலைனு ப்ளாக் மார்க் இருக்கு. இப்பவும் தூங்கினேன். இது தேறாத கேஸ்னு, அவரும்  வெளிய விரட்டி விட்டுட்டா மே க்யா கரூங். " என்றாள். அவர் சிரித்துக் கொண்டவர், " உங்க மாஸி வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் நீ என்னுடைய பொறுப்பு " என்றார். 

 

" மஸ்து ஹை, படியா மஸ்து " என்றவள், " ஆனால் ஒரு கண்டிசன், ஆயி எந்த அட்வான்டேஜும் எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. என்னையும் ஹாஸ்டலுக்கு மாத்தி விட்டுடுங்க." எனவும் அவருக்கு வருத்தமானது, ஒன்றும் பேசாமல் அந்த அறைக்குள் ஆதிராவை அழைத்துச் சென்றார்.


அங்கிருந்த துணிகளைப் பார்த்தவள், "யே, சப் க்யா ஹை" என விழி விரித்தாள். " இதெல்லாம் சாம்பில் பீஸ். ஒரு பக்கம் நெசவு துணி, பனியன் துணி, ரெடிமேடுன்னு எல்லாமே உண்டு கண்ணு, இதுல வேணுங்கிறதை எடுத்துக்க" என்றவர், அவள் மலைத்து நின்றவளைப் பார்த்துத் தானே அவளுக்கு அளவாக எடுத்துக் கொடுத்தார். 

 

" ஜ்யாதா நஹி சாஹியே, நாலு செட் போதும். ஆயி என் திங்க்ஸ் அனுப்பி விட்டுருவாங்க. இதோட பில் அனுப்பிட்டா, அதுவும் பே பண்ணிடுவாங்க " என்றாள் ஆதிரா. 

 

அவளை, ஆட்சேபனையாகப் பார்த்தவர், " அப்ப நீ பாபா ன்னு கூப்பிட்டது, வேலை கிடைக்கனும்கிறதுக்காகத் தான். இவன் பாபான்னு சொன்னா, மயங்கி வேலை கொடுத்துவான்னு சொல்லியிருக்க" என கைலாஷ் குற்றம் சுமத்தவுமே , ஆதிராவின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டது. 

 

" உங்களுக்கு நான் ஃபேக்கா தெரியிறேனா, அப்படின்னா எனக்கு எதுவுமே வேணாம். காம் பீ நஹி சாஹியே ,நான் என் ஆயிக்கிட்டையே போறேன். " என அவள் அந்த அறையை விட்டுக் கிளம்பவும். கைலாஷ்க்கு மனம் பொறுக்கவில்லை. அவள் அழுகை அவருக்கு பாருவை நினைவுறுத்த, "ரஜ்ஜும்மா நில்லுடா. நீ மட்டும் பாபாவுக்குக் காசு தர்றேன்னு சொல்லலாமா" என அவளைப் பிடித்து நிறுத்தியும் அவளது கேவல் அடங்கவில்லை. 

 

" நான் அப்படிப் பட்ட பொண்ணு இல்லை. என் ஆயி யார்க்கிட்டையும் நிறைய உரிமை எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. மோர் ஓவர், நான் என் காலில் நிற்க விரும்புறேன். இதுவரைக்கும் நான் யாரையும், மாஸி தவிர வேற யாரையும் ரிலேசன் சொல்லிக் கூப்பிட்டதும் இல்லை. உங்களை பாபான்னு சொன்னதும் வேலைக்காக மட்டும் இல்லை" என்றவளை, அணைத்துக் கொண்டவர், கண்களும் கசிந்து இருந்தது. 


" ரஜ்ஜும்மா, இது எந்த ஜென்ம பந்தம்னு தெரியலை. உன்னைப் பார்த்து அரை நாள் கூட ஆகலை, ஆனால் நீ அழுதா, அப்பாக்கு இங்க துடிக்குது பார்" என தன் நெஞ்சைத் தொட்டுச் சொன்னவர், அவளைக் கொஞ்சி, கெஞ்சி இனி சந்ததி எனச் சொல்லிக் கொள்ள யாருமற்ற தனக்கு , அவளுடைய தாய் அழைத்துச் செல்ல வரும் வரையாவது மகளாக தன்னோடே இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். இருவரும் சமாதானம் ஆகி, துணிகளை அள்ளிக் கொண்டு வந்தவர்கள், காலை உணவைச் சாப்பிட்டு உடை மாற்றிக் கொண்டு மில் அலுவலகத்துக்குச் சென்றார்கள். 

 

கைலாஷ் ராஜன், சங்கீதா என்ற பெண்ணை அழைத்து, ஆதிராவுக்கு தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பிக்கச் சொன்னார். 

" ஆதிரா  பேக்டரி முழுசும் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டா சுத்திட்டு வா. அதுக்குப் பிறகு,  பேசுவோம்" என்றவர் , அவரது உதவியாளர் சம்பத் கொண்டு வந்த கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தார். 

 

பெங்களூருவில், கௌரி தனது உடைமைகளை மட்டும், ஒரு ஹோல்டால் பேகில் எடுத்துக் கொண்டவர், தான் இருந்த இடத்தை விட்டு கிளம்பி பைரவி சொன்ன இடத்துக்கு செல்லத் தயாராகி, விடியும் முன்னரே மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டை அடைந்தார். 

 

முன்னதாக, நேற்றே தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தவர், தன்னை ஆட்கள் பின் தொடர்வதை உணர்ந்து, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, தலைமறைவாகியிருந்தார். 

 

ஆதிரா , பாதுகாப்பாக இருப்பதை அறிந்து, இனி தனக்கு இங்கே வேலையில்லை என பைரவி சொன்ன இடத்துக்கு கிளம்பினார். ஆனால் சரியான நேரத்தில் அவர் முன் வந்து நின்ற ஓர் வெளி நாட்டு வாகனம், பெரிதாக மிரட்டவெல்லாம் இல்லாமல், மந்திர வார்த்தையையும், ஒரு மோதிரத்தையும் காட்டவுமே, கௌரி வாயைப் பொத்திக் கொண்டு, பவ்யமாக ஏறினார். உள்ளிருந்தவர் தன் கையை நீட்ட, கௌரி தனது மொபைலை நீட்ட, அதிலிருந்து ஒரு குறுஞ்செய்தியை பைரவிக்கு அனுப்பி விட்டு, " மாஸி, போஸ்லே குடும்பத்துக்கு உங்கள் சேவை போதுமானது. இனி நீங்க எனது விருந்தினர்" என மர்மப் புன்னகையை சிந்திய அந்த வாலிபன், " அம்மாவும், மகளும் எந்தக் கோட்டைக் குள்ள இருந்தாலும், வந்து தூக்குவேன்" என முணு , முணுத்துக் கொண்டான் ஆதர்ஷ். 

 

அபிராம்க்கு இரவு, செய்தி தெரிந்ததிலிருந்தே பெங்களூரில் இருப்புக் கொள்ளவில்லை. கைலாஷ் சேலத்தில் இருக்கும் போதே , கிளம்பும் போது மனம் சரியில்லாமலிருந்த மாமன் என்ன செய்கிறார் என விசாரிப்பதற்காக  சத்தியனுக்கு போன் போட, அவன் ஆதிராவைப் பற்றிச் சொன்னான்.  கைலாஷ் கோடிட்டுக் காட்டியிருந்ததால் சத்தியன் அபிராமிடம் உண்மைச் சொல்லி விட, அடுத்த ஒருமணி நேரத்தில் கிளம்பி விட்டான். காலையில் கைலாஷ் போன் செய்த போது, சார்ஜ் இல்லாமல் செத்துக் கிடந்ததை உயிர்ப்பிக்க, ப்ளக்கில் சொருகியிருந்தான். 


அதிகாலையில் வந்த மகன், இரண்டு மணி நேரக் கோழித் தூக்கத்தை முடித்துக் கொண்டு, வழக்கம் போல் பணிக்குச் செல்லக் கிளம்பி  வந்ததைக்  கண்டு  கஸ்தூரிக்கு, மனம் பொறுக்கவில்லை. 


" அபிக்கண்ணு , காலையில தான வந்த, இன்னும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கலாமில்லை கண்ணு. அவதி, அவதியா போகாட்டி என்ன. அப்படி ஒன்னும் உடம்பை கெடுத்துக்கிட்டு நீ சம்பாதிக்க வேணாம்" என வருத்தப்படவும் , அபிராம் மனதில், ' எதுக்கு இந்த அவதின்னு தெரிஞ்சுது. அம்மா டின்னு கட்டிப் போடும், அபிக் கண்ணு எஸ்கேப்டா' என மனதில் புலம்பியவன், “வேலை இருக்குமா’ என அம்மா சுவையாகச் செய்திருந்த இட்லியையும், பூரியையும் உள்ளேத் தள்ளிக் கொண்டு, அதிகம் பேச்சுக் கொடுத்து மாட்டாமலே ஓடிச் சென்றான். 


விஜய ரங்கன் சாப்பிட வந்தவர், அவசரமாகச் செல்லும் மகனை விநோதமாகப் பார்த்தார். மனைவியிடம், " நேத்து அந்த பொண்ணை பார்ட்டியில பார்த்தானாம். அவனுக்கு புடிச்சிருக்கா, எதாவது கேட்டியா" என வினவினார். 


" எங்கிங்க கேக்கிறது, விடியகாலைல தான் வந்தான், சரி லேட்டாத் தான போவான்னு பார்த்திட்டு இருக்கிறதுகுள்ளாற திடுதிடுன்னு இறங்கி வந்தான், இரண்டு பூரியைப் பிச்சுப் போட்டு ஓடிப் போயிட்டான்" எனப் பெற்றவர்கள் மகனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே அதே போல் மின்னல் வேகத்தில் வந்தவன், மாடியேறி  தனது அறைக்குச் சென்று விட்டு, திரும்ப வரும் போது மொபைலும் கையுமாக வந்தவன்,


" மொபைல் எடுக்க வந்தேன், வர்றேன் மா பை" என அப்பாவைப் பார்க்கக் கூட இல்லாமல் கிளம்பி ஓடினான். இவ்வளவு பரபரப்பாகவும் ,ஆர்வமாகவும், அலைபேசியை மறக்குமளவு பதட்டமாகவும் செல்கிறானெனில்  மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என உணர்ந்து கொண்டார் தந்தை. தனக்கு அப்படியான அனுபவம் வாய்க்கா விட்டாலும், நண்பனின் உணர்வுகளை அருகிருந்து பார்த்தவர் ஆயிற்றே. 


கே ஆர் மில்ஸ் வளாகத்தில் அபிராம் கார் உள்ளே நுழையும் போதே கைலாஷ் சிசிடிவியில் பார்த்து விட்டார். அவன் வேகத்தையும் அவசரத்தையும் பார்த்தவர் தனக்குள் சிரித்துக் கொண்டார். அவரும் ஒருகாலத்தில் இப்படி ஓடியவர் தான். நேராக தன்னிடம் வரட்டும் என இருந்தவர், சிந்தையில் தன்னை ஒப்பிட்டே மருமகனுக்காகக் கவலையும் குடி  கொண்டது. 


ஆதிராவை கூட்டிச் சென்ற சங்கீதா விலவரியாக ஒவ்வொரு இடத்தையும் விவரிக்காமல் விட மாட்டாள் என்பதும், ஓரிடத்தில் நிற்க மாட்டார்கள் என்பதும் அவர் அறிந்ததே, எனவே இப்போதைக்கு அபியின் கண்களில் ஆதிரா படமாட்டாள் , அதற்குள் அவனை உரசிப் பார்க்க எண்ணம்  கொண்டார். ஒரே நாளில் ஆதிரா அவரது மனதில் நெருங்கியிருந்தால் எனில் , தன்  வளர்ப்பு மகனின் வாழ்க்கை பற்றிய அக்கறையும் இருந்தது. 


மெயின் பில்டிங் முன் வண்டியை நிறுத்தியவன், அங்கிருந்த காவலாளியிடம் சாவியைத் தூக்கிப் போட்டு காரை பார்க் பண்ணச் சொல்லி விட்டு ஓடி வந்தான். 


கே ஆரை சந்திப்பதற்கு , அபிராம் க்கு மட்டும், எந்த கட்டுப்பாடும் கிடையாது. கிட்டத்தட்ட கே ஆரின் வாரிசாகவே அங்கு வளைய வருவான். எனவே கதவைத் தட்டவும் இல்லாமல், நேராக கைலாஷின் அறைக் கதவைத் திறந்து கொண்டு, " மாமா" என  வந்தவன், அவர் தனது  உதவியாளர் சம்பத்திடம் ஏதோ முக்கியமான விசயம் பேசிக் கொண்டிருக்கவும், "சாரி" என்ற படி எதிரே அமர்ந்தான். 


கைலாஷ் நிதானமாகத் தனது உதவியாளரோடு சேர்ந்து வேலைகளைப் பார்த்தவர், அரை மணியாவது அவன் தன் ஆர்வத்தை அடக்கி அமரட்டும் என தன் வேலையைப் தொடர்ந்தார் . ஆனால் அபிராம் அலைப்பேசியைப் பார்ப்பதும், மேஜையிலிருக்கும், பேப்பர் வெயிட், பேனா பென்சில் என அத்தனையையும் எடுப்பதும், வைப்பதுமாக ஆர்வ மிகுதியிலேயே இருந்தான். 

உதவியாளர் சம்பத் கோப்புக்களோடு வெளியேறவும், அவ்வளவு நேரம் இருந்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க, "மாமா" என அழைத்தபடி ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டவன், " ஆதிரா எங்கிங்க மாமா" என்றான். 

 

" ஆதிரா யாரு" என்றார் அவர், " சும்மா விளையாடாதீங்க மாமா, உங்க கார்ல தான், பெங்களூரிலிருந்து டிக்கில மறைஞ்சு வந்தாலுன்னு  சத்தியன் சொல்லிட்டான். மறுபடியும் அதே  ஆளுங்க தான் துரத்தி  இருப்பாங்க. எங்கிங்க மாமா, வீட்டில இருக்குதுங்களா, இல்லை ஹாஸ்டல்லையா" என ஆர்வமாகக் கேட்டவனையே அவர் நிதானமாகப் பார்த்துக் கொண்டிருக்க, " என்னங்க மாமா" என்றான். 

 

" அபி, நான் சொல்றதை கவனமா கேளு. நீ போற வேகம் சரியில்லை. அந்தப் பொண்ணைப் பார்த்து உடனே என்ன செய்யப்போற, கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்கப் போறியா." என அவர் சற்றே கடுமையாகக் கேட்கவும். 

 

" என்னங்க மாமா, நீங்களே இப்படி கேக்குறீங்க " என முகம் கூம்பியவனை, "வேற எப்படிக் கேட்கச் சொல்ற, ஒரு தொழில் நடத்துறவன் மாதிரியா நடந்துக்கிற. டீன்ஏஜ் பையனாட்டமா, ஒரு பொண்ணைப் பார்க்கவும் வேலையை விட்டுட்டு நடுராத்திரில கிளம்பி ஓடி வந்திருக்க. இன்னைக்கு அங்க முடிக்க வேண்டிய வேலை எத்தனை இருக்கு. அந்தப் பொண்ணு என் பாதுகாப்புல இருக்குன்னு தெரியும், அப்புறம் என்ன" என்றவர். 

 

" உனக்கு எப்ப என்னச் செய்யனுமுன்னு எனக்குத் தெரியும். வேலையைப் பார்க்கக் கிளம்பு. அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துற வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது" எனக் கண்டிப்பான மாமனாக திடீர் அவதாரம் எடுக்கவும் அபிராம் அதிர்ந்து போனான். 

 

" ஏன் மாமா, நீங்க தானுங்க, மனசுக்கு புடிச்சப் பொண்ணை சொல்லு, உலகமே எதிர்த்தாலும் கட்டி வைக்கிறேன்னு சொன்னீங்க." என அவன் வார்த்தைகளை முழுங்கவும், 

 

" அந்தப் பொண்ணு பிரச்சனை பெரிசாத் தெரியுது. நீ இதிலிருந்து தள்ளியே இரு. நான் யாரு என்னன்னு விசாரிச்சுக்கிட்டு, எனக்கு சரின்னு பட்டுச்சுனா, கவனமாக் கேளு எனக்கு சரின்னு பட்டுச்சுனா தான் , உங்க அப்பாட்ட பேசுவேன்" எனவும், ஒளி இழந்த மின்விளக்கு  போல் அவன் முகமும் இருண்டதில், அவருக்கும் மனம் சுணங்கியது, ஆனால் செய்து தான் ஆகவேண்டும்.

 

" உங்கக் கிட்டயிருந்து, இதை நான் எதிர்பார்க்கலை மாமா" என்றவனை முறைத்தவர், " இதுக்கப்புறம் உன் இஷ்டம். ஆனால் அந்தப் பொண்ணுக்கு முன்னாடி நான் நிற்பேன்," எனக் கறாராகச் சொல்லவும், 

 

" உங்களை மீறி எதுவும் செய்யமாட்டேன் மாமா. ஆனால் என் காதலுக்கு வலிமையிருக்கு, அது அவளை என்கிட்டே  கொண்டு வந்து சேர்க்கும். நீங்களே அதை நடத்தியும் வைப்பீங்க " என்றவன், வந்ததை விட வேகமாக வெளியேறினான். 

 

கைலாஷ் வேதனையோடு தலையைப் பிடித்துக் கொண்டு, 'இந்தப் பொண்ணு ‘பாரு’ மாதிரி இருக்கலாம். ஆனால் நீ இன்னொரு கைலாஷ் ராஜனா மாற வேண்டாம் மாப்பிள்ளை' என மனதில் புலம்பிக் கொண்டவர், தனது அலைபேசியை எடுத்து ,

 

 தனது வாழ்க்கையையே புரட்டிப்போடும் உண்மைகள் வெளிவரப் போகிறது என்பதை அறியாமல் , தன்  தொழிலுக்கு உதவும் டிடெக்ட்டிவ் ஏஜெண்டை தொடர்பு கொண்டவர், ரஞ்சன், எனக்கு உங்களால் ஒரு வேலையாகணும், இது கொஞ்சம் பெர்சனலும் கூட “ என்றவர், ஆதிராவை பற்றியும், மீண்டும் தன்னோடு மோதத்  துடிக்கும்  சோலாப்பூர்காரர்கள் பற்றியும் விசாரிக்கச் சொன்னார். 

 

அபிராம் மீண்டும் ஒரு கைலாஷாக மாற வேண்டாம் என அவர்கள் சந்திப்பை தவிர்க்க நினைக்க, விதி மருமகன் மூலமாகவே,மாமனுக்கும் வம்பை விலைக்கு கொண்டு வந்தது. 


Sunday, 24 October 2021

யார் இந்த நிலவு- 7

யார் இந்த நிலவு-7

கைலாஷ் ராஜனுக்கு, இன்றைய தினம் ஆரம்பித்ததிலிருந்து அதிர்ச்சிக்குக் குறைவில்லாமல் இருந்தது. முதலில் அம்மாவின் பாசமான அழைப்பு, உடன்பிறவா தங்கையின் வேண்டுகோள், மருமகனின் சந்தோஷம் என ஆரம்பித்த நாள், ஆதிரா பிகே வின் மதி முகம் கண்டதிலேயே அதிர்ந்து உணர்ச்சிவயப் பட்டிருந்தவர், அவளே தன் வளர்ப்பும், மருமகனுமான அபிராமின் மனம் கவர்ந்தவள் என அறிந்ததில் மனம் நிறைந்தார். அடுத்து தன் பாருவின் நினைவைப் புதுப்பிக்க வந்த ராஜா வீட்டுக் குட்டிச் சிங்கம் ஆதர்ஷ் சவாலோடு அவரை அனுப்பி வைக்க, அன்றைய தினத்தின் உச்சமாக, காருக்குள் நிலவும், அதன் மாஸி எனப் பேசியவரும் அவருக்கு மேலும் குழப்பமான யோசனையில் ஆழ்த்தியிருக்க, கடைசியாக மதிமுகத்தவள், நினைவு திரும்பி அவரை "பாபா" எனத் திருவாய் மலர்ந்ததில் நெகிழ்ந்து போனார்.

தானாய்ப் பெற்றது எதுவும் இல்லையெனினும், ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அவரை 'அப்பா' வென அழைத்த போதும், இவளுடைய பாபா என்ற அழைப்பு அவர் உயிர் வரை தொட்டது.

அவள் அருகிலேயே அமர்ந்தவர், வாஞ்சையாகத் தலையைத் தடவி, " இந்தப் பாபா வை எப்படித் தெரியும்" எனக் கேட்டார். அவர் கையைப் பிடித்துக் கொண்டே எழுந்தமர்ந்தவள், 

" நான் உங்களை, இது தான் பஹலி பார் நேரில் பார்க்கிறேன். பட் ரொம்ப நாளாத் தெரியும். உங்களை, உங்க கம்பெனி வீடியோ, உங்க இன்டர்வ்யூ பார்த்திருக்கேன். உங்களை உங்க கம்பெனில வேலை செய்யறவங்க, "அப்பா" னு தானக் கூப்பிடுவாங்க. அது தான் நானும் எங்க லேங்க்வேஜ்ல உங்களைப் பாபான்னு கூப்பிட்டேன். இனிமே நீங்க எனக்கு வேலை இல்லைனு சொல்ல முடியாது, கைஸா ஹை, மஸ்து ஹை னா " என உரிமையாக அவள் மராத்தி, ஹிந்தி, தமிழ் எல்லாம் கலந்து புன்னகைத்துக் கேட்கவும் , 

புன்னகையோடு கண்ணீர் பளபளக்க, " மஸ்து. படியா மஸ்து. முல்கிக்கு பாபா வேலை கொடுக்கிறது என்ன, கம்பெனியே கொடுப்பார்" என்றார் ராஜ்.

" ஓ, நோ கம்பெனி எல்லாம் வேண்டாம். வேலை மட்டும் கொடுங்கோ. சொத்து, ஜாயிதாத், நாம் சப்குச் படா ஆஃபத்(அபாயம்) தான். ஐ மீன் ப்ராப்ளம். ஐ வான்ட் பீஸ்ஃபுல் லைப்" என்றாள்.

" எல்லா லேங்க்வேஜையும் கலந்து கட்டிப் பேசுறியே" என வியந்தார். "அத்தனை ஊர் தண்ணீர் குடிச்சிருக்கேன்" என்றவள், " ஓ நோ, மாஸி கவலைபடுவாங்க. என் போன் எங்கே" எனக் கேட்டாள்.

" உன் மாஸி, என்கிட்ட பேசிட்டாங்க. நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டேன். போகலாம்ல" எனக் கைலாஷ் கேட்கவும், " லட்டு சாப்பிட யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா. ஆனால் மாஸிட்ட பேசிடுறேன்" எனப் போனை எடுத்தவள், கௌரியை அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்தார். பேசி முடித்து, ஆயிரம் பத்திரம் சொல்லி, "ஆயி கிட்டையும் பேசிடு முலே. அவங்க தான் எனக்குத் தகவல் சொன்னாங்க" என்றார் கௌரி.

அடுத்து பைரவிக்கும் போன் போட்டவள் ஹலோ எனும் முன், " ரஜ்ஜும்மா நீ நல்லா இருக்கேல்ல. மயக்கம்னு சொன்னாங்களே என்ன ஆச்சு "எனக் கேட்கவும் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னவள், " ஆயி, இந்தப் பாபா'கூடப் போகட்டா " என ஆதிரா கேட்கவும், " க்யா, க்யா கஹி" என்றார் பைரவி.

" எனக்குத் தெரியும் ஆயி, யாரையுமே நீங்க பேச்சுக்குக் கூடப் பாபா ன்னு சொல்ல விட மாட்டிங்க. ஆனால் இந்தக் கே ஆர் சாப் வீடியோ, அனுப்பி விடுறேன் பாருங்களேன். நீங்களே பாபா ன்னு கூப்பிட பர்மிஷன் தருவீங்க" என்றாள். 

பைரவி மெல்லப் புன்னகைத்தவர், " ஆல்ரெடி பார்த்துட்டேன். பர்மிஷன் கிராண்டட், ஆனால் லிமிட்ல இருந்துக்கோ. நீ இருக்க இடத்துக்கு உன் திங்க்ஸ் எல்லாம் நான் அனுப்புறேன். கௌரி வேண்டாம். இப்பவும் அதே கட்டுப்பாடு தான் வெளியில் சுத்தக் கூடாது. அந்தக் கம்பெனி விட்டு வெளியே வரக்கூடாது. யார்கிட்டையும், அந்த " பாபா சாப்" கிட்ட கூட நீ யாருங்கிறதைச் சொல்ல வேண்டாம். உன் நன்மைக்காகத் தான் சொல்றேன் " என வரிசையாகக் கண்டிசன் போடவும் சரி, சரி என நல்ல பொண்ணாக " ஓகே ஆயி" எனப் பேசி முடித்து வந்தாள்.

கைலாஷிடம், " பாபாசாப் போகலாம்" எனச் சிரித்தாள் , " அதென்ன ஒரு சாப் சேர்ந்திருக்கு" என்றார் கைலாஷ்.

" ஆயி, இந்தளவு, " பாபாசாப்" சொல்றதுக்குப் பர்மிஷன் குடுத்ததே பெரிய விஷயம். அவுங்களுக்கும் உங்களைப் பற்றித் தெரிஞ்சிருக்கு. மஸ்து, மஸ்து ஹைனா" என அவள் ஆச்சரியமாகச் சிரிக்கவும், அவள் சிரிக்கையில் கன்னக் குமடுகள் உயர்ந்து அகன்ற கண்களும் சிரிக்க, மெய் மறந்து நின்றவர்," மஸ்து ஹை, வா போகலாம் " என அழைத்து வந்தார்.

காரில் வரும் போது , " மதியமே வரேன்னு சொன்னவள் ஏன் வரலை. சொன்ன நேரத்துக்குச் சேர்மனைப் பார்க்க வேணாமா. அப்புறம் எப்படி வேலைக் கிடைக்கும். ஒரு ப்ரபொசனலிசம் வேண்டாமா" என அவர் கேட்கவும், " சாரி" எனக் குனிந்து கொண்டவள், " குறிப்பிட்ட நேரத்துக்கு உங்களை மீட் பண்ண முடியாத சூழ்நிலை. நான் வந்த போது நீங்க அங்கிருந்து கிளம்பிட்டீங்க. ஆனால் இவினிங்கிலிருந்து, ஹோட்டல் ல உங்களுக்காகத் தான் வெயிட்டிங்க்" என்றாள்.

" என்னை மீட் பண்றதுக்காகத் தான் இந்த டிக்கில ஏறுனியா" என அவர் குறுஞ்சிரிப்போடு கேட்கவும், 

" நாஹி தோ, உங்க காடின்னே தெரியாது. தலையில இடிச்சுக்கிட்டேன். மயக்கம் வர்ற மாதிரி இருந்தது, மயங்கி இதில் விழுந்துட்டேன்" என அவள் சமாளிக்கவும். அவளையே கண்ணெடுக்காமல் பார்த்தவர்

"மயங்கி கீழே விழுவாங்க. யாரும் கார் டிக்கில விழமாட்டாங்க" என்றார்.

அவர் மேலும் விசாரிக்கவும், " நீங்க வேலைக் கொடுக்கிற சேர்மன். நான் எல்லாத்தையும் ப்ராங்கா உங்கள்ட்ட சொல்லனும். ஆனால் நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவ. என் முழு அடையாளம் உங்களுக்குச் சொல்ல முடியாது. பட் நான் தப்பான காரியம் எல்லாம் செய்ய மாட்டேன். யூ கேன் ட்ரஸ்ட் மீ. இதுக்கும் மேலையும் உங்களுக்கு விருப்பமிருந்தா, நீங்க வேலைக் கொடுக்கலாம். நீங்க வேலை இல்லைனு சொன்னாலும், நான் ஏத்துகிறேன். நான் இப்பவே கீழே இறங்கிக்கிறேன்" எனும் போதே அவள் முகம் கூம்பிப் போகவும்,

அவள் தலையை வாஞ்சையாகத் தடவியவர், " இவ்வளவு வெளிப்படையா பேசுறு முலே எங்கக் கிடைக்கும். அதுக்கும் மேல, இந்த நடுராத்திரியில் எந்த அப்பாவும், மகளைத் தனியா விடமாட்டான்" என்றவர்.

" உன் சத்தியம் தகர்ந்து போற ஒரு நாள், நீ யாருன்னு சொல்லு தெரிஞ்சுக்குறேன். ஆனால் யாருக்கோ பயந்து ஓடி ஒளியிறியே அதுவும் வேண்டாம். நம்ம கம்பெனிக்குள்ள எனக்குத் தெரியாமல் யாரும் உள்ள வரமுடியாது. அதுவரைக்கும் இந்த ரஜ்ஜும்மாவை எதுவுமே கேட்கவும் மாட்டேன்" என்றார்.

ஆதிரா அதிர்ந்தவளாக, " உங்களுக்கு எப்படி என் செல்லப் பெயர் தெரியும். " எனக் கேட்டாள்.

" உன் கௌரி மாஸி அப்படித் தான் கூப்பிட்டாங்க" என்றார்.

" மாஸியாச் சொன்னாங்க, என் ஆயி மட்டும் தான் இப்படிக் கூப்பிடுவாங்க நீங்க என் ஆயிட்ட பேசுனீங்களா, மாஸிகிட்டையா" எனக் குழம்பிக் கொண்டு போனை பார்த்தாள்.

கார் கோவையில் பல ஏக்கர் பரபரப்பில் அமைந்திருக்கும் கே ஆர் மில்ஸ் வளாகத்தில் உள்ளே உள்ள அவரது ப்ரத்யேக பங்களாவிற்குச் சென்றது. இதைத் தவிர ஆர் எஸ் புறம் பகுதியில் பாலநாயகத்தின் வீடும் உள்ளது. மகன் அப்பாவின் வீட்டில் தங்க மாட்டார்.அப்பா மகனின் வீட்டில் தங்க மாட்டார். அதற்காகவே சௌந்தரி தான் மட்டுமே மகனோடு தங்க வருவார்.

ஆதிரா விழிகள் விரித்து அவரது வீட்டைப் பார்த்து வந்தாள். வீட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் அதன் செல்வ வளம் இருந்தது. இதுவும் யாருக்கோ காட்ட கட்டியது போல் தான் வீம்புக்குக் கட்டினார்.

அந்த நேரத்திலும் வேலைக்காரர்கள் அவர் பணிவிடைக்குத் தயாராக இருக்க, ஆதிராவை மாடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றவர், பக்கத்து அறையையைக் காட்டி, "இது என்னோட ரூம், எனி டைம் யூ கேன் கால் மீ " என்றவர். " நைட் எதாவது சாப்பிட்டியா" எனக் கேட்டார்.

" ஓ, ஓபராய் ஹோட்டல் டின்னர். " என்றவளோடே அறைக்குள் சென்றவர், பணியாளைப் பால் கொண்டு வரச் சொன்னார். " பாபாசாப், தூத் நஹி, தூத் நஹி. ஒரு கட்டா சாய்" என்றாள். அவளையே பார்த்திருந்தவர், இரண்டு கட்டா சாய்க் கொண்டு வரச் சொன்னார். அதோடு அவளுக்கு மாற்றுடையும் வந்தது. இருவருமாகக் கட்டாசாயை ருசித்தனர். ஆதிரா "மஸ்து, மஸ்து " என வரடீயையும் சிலாகிக்க, " இதிலென்ன பெரிய மஸ்து இருக்கு" என்றார் வேண்டுமென்றே கேட்டார்.

" கட்டாசாய், அளவா தூள் போடனும்" என ஆரம்பித்தவள் அது போடும் முறையை விவரித்ததில் , தனக்கும் இதே போல் விவரித்தவரை நினைத்துக் கொண்டவர், " இது யார் சொல்லிக் கொடுத்தா" எனக் கேட்டார். " மாஸி போடும் போது பார்த்திருக்கேன். " என்றவள், "உங்களுக்கு முல்கி இருக்கா, என் சைஸ் ட்ரெஸ் வச்சிருக்கீங்களே, உங்க வீட்டு ஆண்டியை இன்ட்ரடியூஸ் பண்ணலை, தூங்குறாங்களோ. காலையில பார்த்துக்குவோம். என்னைக் கூட்டிட்டு வந்ததுக்குத் திட்ட மாட்டாங்கல்ல, என்னை ஹாஸ்டலுக்கு ஷிப்ட் பண்ணிடுங்க. நான் அங்கேயே தங்கிக்குவேன்" எனக் கேள்வியும் கேட்டு, பதிலும் அவளே சொல்லிக் கொள்ள , அவள் தலையை மீண்டும் வாஞ்சையாகத் தடவினார்.

அவளது மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டவர், தனது பர்சனல் நம்பரை அவளுக்குப் பதிந்து கொடுத்து விட்டு , " நல்லா தூங்கி எந்திரி. அப்புறம் பேசுவோம்" எனத் தனது அறைக்குக் கிளம்ப, " பாபாசாப்" என அழைத்தவளை நோக்கி அவர் திரும்பவும், உணர்ச்சி வயப்பட்டு நின்றவள், கேட்கத் தயங்கி நிற்கவும், "என்னடா முலே" என்றார். " உங்களைப் பார்த்ததிலிருந்து, கண்ணில தண்ணியா வருது. ஏன்" எனக் கேட்டு நின்றாள். அவருக்கும் அப்படித் தான் வருகிறது என்று எப்படிச் சொல்வார்,

இரு கைகளையும் விரித்து " வா" என்றார். பசு மடித் தேடும் கன்றாக ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்டவள், " என் பாபா ரொம்ப நல்லவங்களாம். ஆனால் நான் பிறந்ததிலிருந்து பார்த்ததே இல்லை. அவுங்களும் உங்களை மாதிரி இருந்தா நல்லா இருக்குமில்ல" எனக் கண்ணீர் விடவும், அவளை வாரியணைத்துக் கொண்டவரும் உணர்ச்சிப் பெருக்கில் தத்தளித்தார். வாஞ்சையான தலை வருடலுக்கே உணர்ச்சி வசப்பட்டவளுக்கு, இந்த அரவணைப்பு ஓர் பாசத்தையும் பாதுகாப்பையும் தந்தது. இதுவரை தன் ஆயியோடு இருக்கும் போது மட்டுமே எச்சரிக்கை உணர்வையெல்லாம் விடுத்து இயல்பாக இருப்பாள். இன்று இந்தக் கைலாஷ் ராஜனிடமும் அதே உணர்வை உணர்ந்தாள் ஆதிரா ராஜ் போஸ்லே. இதில் போஸ்லே குடும்பப் பெயர் எனில், ராஜ் யாரைக் குறிக்கும். அதையும் விடுத்து அவள் ஆதிரா பிகே வில் பி யார், கே யார். ஆதிராவின் ஆயியும், காலமுமே பதில் தரவேண்டும்.

குன்னூர் வசந்த விலாசம், காலை பனியில் நண்பர்கள் காலாற நடக்க வாக்கிங் ஸ்டிக்கோடு கிளம்பி விட்டனர். அவர்களுக்கு முன்னே எழுந்து பவானி ஒரு நடை சென்ற வந்து விடுவார். இவர்கள் கிளம்பும் நேரம் குளிருக்குச் சூடான தேநீர் தயாராக இருக்கும். இன்று தேநீர் மட்டும் வந்தது, பவானியைக் காணவில்லை.

பாலநாயகம், வேலையாளிடம் கேட்டார். " சின்னம்மா இன்னும் எந்திரிக்கலைங்கய்யா. " எனத் தகவல் சொல்லிச் செல்ல, " எதுவும் முடியலையோ" எனப் பாலா பதறினார்.

ராமு தான், " அதெல்லாம் ஒண்ணுமில்லை, நைட் டைம் தான, அது புருஷன், பொண்ணுக்கிட்ட பேச முடியும். நேத்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துச்சு. காலையில் தூங்கியிருக்கும் . வா" என அழைத்துச் சென்றார். ஆனாலும் பாலா சமாதானம் ஆகாமல் பேசிக் கொண்டே வர,

" நீ வாக்கிங் போக டிமிக்கிக் குடுக்கலாம்னு பார்க்காத " என்றார் பன்னீர்.

" டேய், யாரைப் பார்த்து, டிமிக்கிக் குடுக்குறேன்னு சொல்ற, வாங்கடா போட்டி வச்சுக்குவோம்" எனப் பாலா வீரமாக அழைக்க

" ரொம்ப உணர்ச்சி வசப்படாதடா, கீழ விழுந்து அடிபட்டைனாக்கும், உன் மகன் குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போயி, மில்லு பங்களால சிறை வச்சிடுவாப்ல" எனச் சுப்பு எச்சரித்தார்.

" ரொம்பச் செய்வானுல்ல, அவன் தூக்கிட்டுப் போக நான் விட்டுருவேனாக்கும். அவனுக்கு அவ்வளவு தைரியம் இருக்காக்கும், எத்தனை வருசமா இங்கே இருக்கோம், இடத்தை வாங்கின புதுசுல ஒரு தரம் அவுங்க அம்மாவுக்காக வந்ததோட சரி, கல்லு மனசுக் காரன், அவன் கூடவெல்லாம் போயி என்னால இருக்க முடியாது, அவன் பகுமானத்தைக் காட்ட கட்டி வச்சிருக்கப் பங்களாவுக்கு நான் போகமாட்டேன்" என வீம்பு பேசினார் பாலா.

" இது தான் உன் வீம்பு, அவனவன் மகன் சம்பாதிக்கிறதுக்கு , சாதிக்கிறதுக்குப் பெருமை படுவாங்க. நீயும் தான் இருக்கியே" எனச் சுப்புச் சத்தம் போட்டார்.

" அவன், அத்தனை சம்பாதிக்கிறது, எதுக்குன்னு கேக்கிறேன். ராஜியைத் தான் கடிக்க மாட்டேன்னு சொல்லிட்டான் , ஏதேதோ நடந்து போச்சு. அத்தனைக்கும் பிறகு பன்னீர் அவன்கிட்ட போய், உனக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டு, நீயாவது சந்தோஷமா இருன்னு, சொன்னானா இல்லையா கேளு. அந்த மனசெல்லாம் என் நண்பனைத் தவிர வேற யாருக்குடா வரும். அவன் தான் திமிரெடுத்தவன் பதிலே சொல்லாமல் எந்திரிச்சுப் போனான்" எனப் பாலா கோபப் படவும்,

" விடுறா, ராஜா மனசில் என்ன இருந்ததோ, அதைத் தான சௌந்தரியும் சொல்லுது" என ராமு நண்பனைச் சமாதானம் செய்தார்.பன்னீர் தான் பாலாவின் வீம்பான போக்கைக் கடிந்து கொண்டே வந்தார். "இன்னும் எத்தனை காலத்துக்குடா வாழப் போறோம். இந்தத் தரம் சௌந்தரி போகும் போது, நீயும் கூடப் போற, ராஜாவோட இருக்க மனஸ்தாபத்தை விட்டுட்டு வா. இழந்தவனுக்குத் தான்டா வலி தெரியும். ராஜாவோட சமாதானமா போ. உனக்காக இல்லைனாலும், எனக்காக இதைச் செய். நீங்க அப்பா, மகன் பேசாமல் இருக்கிறதுக்கு , என் குடும்பம் காரணமாயிடிச்சேன்னு எனக்கு மனசில குத்திக்கிட்டே இருக்கு" என அவர் சொல்லவும், பாலாவும் உள்ளே உருகித் தான் போனார்.

ராமசாமி நடந்து கொண்டிருக்கும் போதே, பேரன் அபிராமிடமிருந்து போன் வந்தது. "ஹலோ ஓல்ட் மேன் ஹவ் ஆர் யூ" என்றான்.

" ஆரைப் பார்த்துடா ஓல்ட் மேன்னு சொன்ன. இந்தா ஓட்டப் பந்தயம் வச்சிக்கிட்டு இருக்கமாக்கும். ஒத்தைக்கு ஒத்தை போட்டிக்கு வாரியா" எனச் சவால் விட்டார் ராமு. அபிராம் ஹாஹாவெனச் சிரித்தவன், " ஓகே யங் மேன், உங்க பையன் பார்த்து வச்சிருக்கப் பொண்ணை வேணும்னா கல்யாணம் கட்டிக்குங்க. " என்றான்.

" இந்த லொள்ளு லோலாயம்தான வேணாங்கிறது, என்கிட்ட இப்படி ஆசை காட்டிப் போட்டு, உங்க ஆத்தாள்ட்ட போயி, இந்த வயசில எனக்குக் கல்யாணத்துக்குப் பொண்ணு கேக்குதுன்னு போட்டு விடுவ. வேணாம் சாமி" என்றார்.

போனை ஸ்பீக்கரில் போட்ட பாலா, " பேராண்டி நீ போட்டுக் குடுத்துடுவேன்னு தான் வேணாங்குறான். இல்லைனா பொண்ணு கட்ட ,உன் தாத்தன் ரெடியாத் தான் இருக்கான்" என வம்பிழுத்து விட்டார்.

" தாத்தூஸ், நீங்க எல்லாருமே யங் மென் தான், ஆளுக்கு ஒரு பொண்ணு பார்க்கவா" என அபிராம் கேட்கவும், " எங்களுக்குப் பொண்ணு பார்க்கிறது இருக்கட்டும், கூடவே திரியிறியே, உன் மாமனுக்கு ஒரு அத்தையைப் பாரு" என்றார் பாலா.

" அது ரொம்பக் கஷ்டமான ஜாப், எங்க மாமா ரேஞ்சுக்கெல்லாம், உலகத்தில பொண்ணே கிடையாது. அதுனால தான் மாம்ஸ் பேச்சிலராவே இருக்கார்" என்றவனிடம் ,

" உன் மாமனுக்குக் கொடி புடிச்சது போதும், நேத்து ஒரு பொண்ணைப் பார்க்கப் போனியே பார்த்தியா" எனக் கேட்டார் சுப்பு.

"அதுக்குள்ள அங்க வந்திருச்சா நியுஸ். அந்தப் பொண்ணு போட்டோவை அனுப்புறேன், ஆத்தா, அம்மத்தால்லாம் சரின்னு சொல்லட்டும் , அப்புறம் பார்ப்போம்" என ஏற்ற இறக்கமாகச் சொல்லவும்,

" ஏதோ வில்லங்கம் இருக்குமாட்டத்துக்கு, அனுப்பு பார்ப்போம்" என ராமசாமி பேசி முடித்துப் போனை வைத்தார்.

" இவன் ஒருத்தன் தான்டா, நம்ம எல்லாருக்கும் பக்கத்தில இருக்கப் பேரன். அவனுக்குக் கல்யாணம் பண்ணும் போது, நாலு தரம் விசாரிச்சு ,அவன் மனசுக்கு புடிச்சப் பொண்ணா பார்த்துத் தான் செய்யணும்" எனத் தீவிரமாகச் சொன்னார் பன்னீர். ஆம் என ஆமோதித்தனர் மற்றவர்.