Tuesday, 29 June 2021

ஹாசினி சந்திரா -19

 ஹாசினி சந்திரா -19

      பெங்களூர் மாநகரம் சட்டசபைத் தேர்தல் நடந்து, வாக்கு எண்ணிக்கைக்குக் காத்திருக்கும் நேரத்தில் ஒரு கட்சித் தலைவரின் மகளைப் பிரச்சாரம் முடிந்து வரும் போதே, அதன் துணைத் தலைவர் மகனே , ஒரு திமிரில், கோபத்தில் ஒரு பெண்ணைக் கொல்லத் துணிந்தது, பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. தற்போது நகரம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், கட்சி வித்தியாசம் பார்க்காமல் குண்டர்களை அடித்து நொறுக்கி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர்.

        தங்கப் பாண்டியன், யுவராஜ் கைது, ரிமேண்ட், ப்ரெஸ்மீட் மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முடித்து வர நள்ளிரவு ஆனது. அது வரை அவரது மனைவியும் அவருக்காகக் காத்திருந்தார். சிரம பரிகாரம் செய்த பின்பு, கணவருக்கும் தனக்குமாகப் பால் எடுத்து வந்த தான்வி கதை கேட்கத் தயாரானார். மனைவி கையால் தண்ணீர் அருந்தினாலும் சுகமே என்றிருந்தவர் பாலை ருசித்தும், மனைவியை ரசித்தும் பருகினார்.

      “ இன்னைக்கு ரொம்ப அலைச்சலோ” எனத் தனது மடியில் கணவரைச் சாய்த்துக் கொண்டு அவர் முடியைக் கோதியபடியும் , தோள்பட்டையை அழுத்தி விட்ட படியும் தான்வி கேட்கவும்,

      " நீ இருக்கிறதால சீக்கிரம் வந்துட்டேன். இல்லைனா இன்னைக்கு இருக்க டென்ஷனுக்கு இராத்திரி பூரா ரோந்து போயிட்டு தான் இருந்திருப்பேன் " என மனைவியின் அருகாமையை அனுபவித்தபடி சொன்னார்.

      " லவ் ஸ்டோரி சொல்றேன்னு சொன்னேளே" எனத் தனது பதவியும் மறந்து, கணவனின் பேச்சை ரசிக்கும் மனைவியானார் இஆபெ பட்டம் பெற்ற ஆணையர் தான்வி தங்கப்பாண்டியன்.

      “ உனக்கு உன் கவலை" என அவர் சொல்லவும். " சொல்லாட்டி போங்கோ. எங்க டிபார்ட்மெண்ட்ல கதைக்கா பஞ்சம், போனா போறது , டென்ஷனா இருப்பேளே, கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவாரே மனுஷன்ட்டுக் கேட்டேன். புள்ளைக் குட்டிய விட்டுன்டு அறக்கப்பறக்க ஓடி வந்தேன் பாருங்கோ. நேக்கு நன்னா வேணும். " என அவள் அவர் சிகையைக் கோதுவதை நிறுத்தி கையைக் கட்டிக் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார் தான்வி.

      " அப்பாடி, இப்ப தான் தங்கம் ரிலேக்ஸ் ஆயிருக்கான். ரெட்சில்லி இப்படிக் கோபப்பட்டாத் தான் நல்லா இருக்கும். அதை விட்டுட்டு கொடமொளகாய் மாதிரி சவசவன்னு இருந்தா நல்லாவா இருக்கும். " என வம்பிழுத்து, லஞ்சம் கொடுத்து, திரும்ப வாங்கிக் கணக்கை நேர் செய்த பிறகு விசயத்துக்கு வந்தார்.

       " இந்தக் கேஸ்ல , ஜஸ்டிஸ் இல்லை ஆனால் பொயட்டிக் ஜஸ்டிஸ் உண்டு, நானே நியாமா, தர்மமா,மனசா, புத்தியான்னு நிறையத் தடுமாறின ஒரு கேஸ் தனுமா ” என்றார் பாண்டியன்.

    “சுத்தமா குழப்பறேள் , புரியும்படி சொல்லுங்கோ” எனத் தான்வி கேட்கவும்.

      “ இந்த நஞ்சப்பா, அப்பா மகனுங்க, எஸ்ஆர்சிக்கும், அவர் குடும்பத்துக்கும் நிறையத் துரோகம் செஞ்சுருக்காங்க. அவங்களைச் சும்மா விடலாமா” எனக் கேள்வி எழுப்பினார் பாண்டியன்.

       “நீங்க எங்க சும்மாவிடேள், அது தான் சட்டத்துக்கு முன்னாடி நிறுத்திட்டேளே “ எனத் தான்வி சமாதானம் சொல்லவும், “ஹாசினி சந்திரா படுகொலை வழக்குல தான், இப்ப அரெஸ்ட் பண்ணியிருக்கேன். யுவராஜ் சதி செஞ்சது நிஜம், ரெட்டி பாம் வச்சது நிஜம், பாம் ப்ளாஸ்ட் ஆனதும் நிஜம், இதுக்குப் பக்கவா ஆதாரம் இருக்கு. அதை வச்சு தான் அரெஸ்ட் பண்ணி கேஸ் பைல் பண்ணியிருக்கோம். ஆனால் “ என எழுந்து உட்கார்ந்தார்.

     தான்வியில் க்யூரியாசிட்டி அதிகமானது, கணவரின் முகத்தில் விழிகளைப் பதித்திருந்தவர், அவர் சிறு நகையுடன், “ஆனால் ஹாசினி சந்திரா உயிரோட இருக்கா “ எனக் குண்டை தூக்கிப் போட்டார்.

      “என்ன சொல்றேள்” எனத் தான்வி அதிர்ச்சியாகக் கேட்கவும், “ஆமாம்மா, நானே என் கண்ணால் பார்த்தேன், ஆனால் நான் பார்த்தேன்னு மத்தவங்களுக்குத் தெரியாது” என்றவர் ,

      ஹாசினி கார் பாம் பிளாஸ்செய்யப் பட்ட அன்று, மங்களூரில் ஹாசினியின் தொண்டர்கள் வண்டி இல்லாமல், இரண்டு வண்டிகள் தொடர்ந்ததிலிருந்து தனது விசாரணை விவரத்தைச் சொன்னார். இரண்டு வண்டிகளில் ஒன்று ரெட்டியுடையது, மற்றொன்று அவனைக் கடத்தி வைத்திருந்தவனுடையது. அந்தக் கார் எண் வைத்து விசாரித்ததில், கோவா அரசியல்வாதி ஒருவருக்காக அந்தப் பெரிய வண்டியும், ஒரு கேரவேனும் தயாரித்து அன்று தான் டெலிவரி கொடுத்தது தெரிய வந்தது. எல்லாச் செக் போஸ்டுகளிலும் விசாரணை செய்த போது, கேரவேனை புகைப்படம் எடுத்த காவலர்கள் அதனைக் காட்டினார். காவலர்களிடமிருந்து தனது மொபைலுக்கு மாற்றி வைத்திருந்தவர், அதனை உற்று நோக்கும் போது மேலும் சிலவை கண்ணில் பட்டது.

     அதோடு காவலர்கள் ஓட்டுநரோடு புகைப்படம் எடுத்திருந்தனர், அதனைப் போட்டு வலைத்தளத்தில் தேடிய போது தேவ் குடும்பத்தின் கடைக் குட்டி நிருபன் தேவ் மாறுவேடத்தில் அதில் சிக்கினான். ரத்தனதேவின் மகன் எனத் தெரிய வரவும், அவர்கள் நிறுவனத்தைப் பற்றி விசாரித்தார்.

       உலகம் முழுவதுமான அவர்களது தொழில் மற்றும் கட்டுமானங்களைப் பற்றிப் பெருமை பேசிய வலைத்தளம் சுஹானா தீவு பற்றியும் பேசியது. ஏற்கனவே எஸ்.ஆர்.சந்திரா சம்மந்தப்பட்டவர்கள் போன் கால்களை ஆராய்ந்த போது, சில போன் அழைப்புகள், அரபிக்கடலிலிருந்து வந்ததைப் போலீஸ் தொலைத் தொடர்புத் துறை காட்டிக் கொடுத்தது. அந்த லொகேசனை ட்ராக் செய்து, விசாரிக்கத் தீவின் முழு விவரமும் வந்தது. உபரித் தகவலாக ஹெலிக்காப்டர் இறங்கு தளம் அமைந்ததும், அடுத்த இரண்டு நாட்களில் அங்கு வர ஓமன் நாட்டு ஹெலிகாப்டர் அனுமதி பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

       அதோடு லாஞ்சர் வைத்திருக்கும் மீனவர்கள் இருவர், கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப் பட்டனர். அவர்களைக் கவனித்ததில் சுஹானா தீவைப் பற்றியும் , ஹாசினி சந்திரா போன்ற அமைப்பு உடையவரை இறக்கி விட்டதாகச் சொன்னார்கள். புயல் மலை காரணமாக இரண்டு நாள் கழித்தே கடற்படை உதவியுடன் அங்கே இறக்கியதையும், சி.பி,தேவ் எனும் சந்திர பிரகாஷ் தேவை சந்தித்ததையும் சொன்னார்.

       சந்திர தேவ், சுத்தி வளைத்து காட்டேஜ்க்கு தங்கப் பாண்டியன் மற்றும் கடற்படை வீரர்களை அழைத்துச் சென்றான். அவனது நம்பிக்கை பவன் தான். இந்தத் தாமதத்தைக் கணித்து ஏதேனும் செய்திருப்பான், என நம்பியே ஆபீசரை அழைத்துச் சென்றான். 

       அதே போல், ஹாசினி வந்து சொல்லும் போதே அவனும் ஹெலிகாப்டர் சத்தத்தைக் கவனித்து இருந்தான், ஆனால் அது தேவைக்கு அதிகமான முறை வட்டமிட்டதாக அவனுக்குப் பட்டது , எனவே பெண்களைத் தயாராகச் சொல்லிவிட்டு, அவன் ஹெலிபேட் இருக்குமிடம் விரைந்தான். ஆனால் அங்குத் தரையிறங்கியது இந்தியக் கடற்படை ஹெலிகாப்டர், இறங்கியவர்கள் தலை முடி வெட்டில் காவல் துறை என முடிவு செய்தவன், காட்டேஜுக்கு விரைந்து வந்தவன்,

      " ப்ரியூ, மேம் " என அலறியபடியே வந்தான். லக்கேஜ்களை ஏற்கனவே பேக்கிங் செய்து வைத்திருக்க, சில சாமான்களை மட்டும் இருவரும் வேகமாக ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தனர். இவன் அலறலில் அவர்கள் திரும்பிப் பார்க்கவும்,

       " இந்தியன் நேவி ஹெலிகாப்டர், ஐபிஎஸ் ஆபீஸர், நம்மளை தேடி வந்திருக்காங்க. மாட்டுனா பாஸை அரெஸ்ட் பண்ணுவாங்க" என்ற அவனின் தந்தி மொழியில்,

        "இப்ப என்ன செய்யறது" என இருவரும் பதட்டமாகக் கேட்கவும், லக்கேஜ்களை மறைத்து விட்டு, காட்டேஜை பூட்டாமல் சாத்தி வைத்துவிட்டு அவர்கள் இருவரையும் லாஞ்சரில் வந்து தரை இறங்கிய பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றான். பவன் பத்து நாளில் தீவை ஓரளவு பழகி இருந்ததால், லாஞ்சர் இறங்கிய இடத்துக்கு அருகில் ஓர் மறைவிடத்தில் மூவருமாக மறைந்தனர். இவர்கள் காட்டேஜிலிருந்து மறைந்த பத்து நிமிடங்களுக்குப் பிறகே தங்கப் பாண்டியன் காட்டேஜை வந்து அடைந்தார்.

       அங்கு யாரும் இல்லாததைக் கண்டு நிம்மதியடைந்தான் தேவ். ஆனால் ஆபீஸரின் கண்களில் பலர் தங்கியதற்கான பாத தடங்கள் பட்டது. அதுவும் மழையும் சகதியுமாக இருந்த பகுதியில் கால் தடங்கள் தெளிவாகவே காட்டிக் கொடுத்தன. ஆனால் அவர் விசாரிக்கவில்லை.

       காட்டேஜையும், சுற்றுப் புறத்தையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டார். சி.பி.தேவுடனும் போட்டோ எடுத்துக் கொண்டவர், தான் அங்கு வந்ததற்கான ஆதாரங்களைப் பதிவு செய்தார்.

        " சார் நான் தான் சொன்னேனே, இங்க வேற யாரும் இல்லைனு. இப்ப நம்புறீங்களா" என அவன் எரிச்சலாகக் கேட்கவும்,

           " இருந்தா நல்லாருக்குமேங்கிற நப்பாசையில் வந்தேன் சார். மேனகாம்மாவுக்கு இது ஒரே பொண்ணு. உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப் போறேன். நான் எஸ்ஆர்சி செக்யுரிட்டி இன்சார்ஜா இருந்தவன். எஸ்ஆர்சிக்கு மகள்னா உயிர். பாவம் அந்தப் பொண்ணு இல்லைங்கிறதைக் கூட அந்தம்மா கணவர்ட்ட சொல்ல முடியாமல் தவிக்கிறாங்க ." என்றவர்.

" சப்போஸ், இங்க இருந்திருந்தால், நான் கேஸை வேற மாதிரி கொண்டு போவேன்" எனத் தூண்டில் போட்டார் பாண்டியன்.

      " என்ன ஸார் செய்வீங்க. ஹாசினியை கொலை செய்ய மூன்றுதரம் ட்ரை பண்ணான் , அப்பல்லாம் கூடப் போலீஸ் கூடவா இருந்தது. பாம் வெடிச்ச பிறகு தானே வர்றீங்க" எனத் தேவ் காட்டமாகவே கேட்டான்.

     "மூணு தடவை கொலை செய்ய முயற்சி செய்ததா எப்படி அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க" எனப் பாண்டியனின் கேள்விக்கு, அவ்வை சண்முகி கமல் பாணியில், "நீங்க தானே, சேர்ச் வாரண்டுக்கு விளக்கம் சொல்லும் போது சொன்னீங்க, அதோட நீங்க மேனகா ஆண்டி கிட்ட நீங்க சொன்னதா, அதிபன் சந்திராவும் சொன்னார்" எனவும், "எல்லா இன்பார்மேஷனும் இங்கிருந்தே கேட்டுக்குறீங்களோ " என வினையமாகவே கேட்டார் பாண்டியன்.

        "வேற என்ன செய்யமுடியும், ஹாசினி என் சிறுவயது தோழி, சந்திரா மாமா லீவுக்கு வரும் போதெல்லாம் கூட்டிட்டு வருவார், என் மனைவியுடைய ட்வின் சிஸ்டர் " என ஒரு பிட்டையும் தேவ் போட்டு வைத்தான் , 

      "வாட் " எனப் பாண்டியன் அதிர்ச்சியாகக் கேட்கவும், "எஸ் சார், இது குடும்ப ரகசியம் , தயவு செய்து வேற யார்கிட்டையும் சொல்லாதீங்க. நீங்க விசாரணை அதிகாரி அதனால் சொல்றேன்.இந்த விஷயம் இப்ப வெளிய தெரிஞ்சா அவள் நிம்மதியும் போகும், ஒரு அரசியல்வாதிக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் , என் மனைவிக்கும் ஆபத்து வரலாம் அதனால் சொல்றேன் " எனச் சுஹாசினி சந்திர பிரகாஷ் தேவ் கதாபாத்திரத்தை அதிகாரியிடம் அவிழ்த்து விட்டான். பாண்டியன் சந்திரா தேவின் சாமர்த்தியத்தை நினைத்து மனதில் புன்னகைத்துக் கொண்டவர்.

        " பாதுகாப்பு கொடுக்கவேண்டியவர்கள் பட்டியல் இந்தியால ரொம்ப நீளம் மிஸ்டர்.தேவ் . இந்தப் பொண்ணு இப்ப தான் அரசியலுக்கு வந்துச்சு. எந்தப் போஸ்ட்லையும் இல்லை. தேர்தல் நேரம் நாங்க எத்தனை பேரைப் பாதுகாக்கிறது " எனப் பாண்டியன் பேச்சோடே தீவை நடையில் சுற்றிக் கொண்டு தான் இருந்தார்.

     " இது பொறுப்பில்லாத பேச்சு. செத்தபிறகு எதுக்கு விசாரணை" எனத் தேவ் மடக்கவும்.

       " இவ்வளவு கோபப் படுறவரு, ஹாசினி உங்களுக்கு, அத்தை மகளா, மாமா மகளா, உங்க மனைவியுடைய இரட்டைனு வேற புதுசா ஒரு கதை சொல்றீங்க ,அவங்களைப் பாதுகாத்து இருக்கலாமே. அட்லீஸ்ட் மாமா குடும்பத்து மேல அக்கறையாவது இருந்திருக்கலாம். அவர் பணம் வேணும், அவர் வேண்டாமா. விட்டுட்டீங்க" என நன்றாகவே கேட்டார் பாண்டியன்.

 " யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்" எனத் தேவ் நெற்றிக் கண்ணைத் திறக்கவும்.

“கூல் மிஸ்டர் .தேவ், எஸ்ஆர்சி மேல உள்ள நல்ல அபிப்ராயத்தில் தான் கேட்டேன். ஆமாம் இங்க ஒரு அருவி இருக்கிறதா உங்க வெப்சைட் சொல்லுதே பார்க்கலாமா” என இவர்களது வெப்சைட் சொன்ன இடத்துக்கு எல்லாம் , மர வீடு முதல் அனைத்துக்கும் அலைந்தவர் , கடைசியாக நினைவு வந்தவராக , லாஞ்சர் வந்து நிற்குமிடத்தையும் கேட்டு அங்கு வந்தார்.

       இன்று தங்கப்பாண்டியன் தான்வியிடம், “ஒவ்வொரு இடமா , நான் கேட்கக் கேட்க, தேவுடைய முகத்தைப் பார்க்கணுமே, உள்ளுக்குள்ள என்னைக் கொல்லணும்னு வெறியோட இருந்தான் , ஆனால் வெளியே அவ்வளவு அமைதி. “ எனச் சிரித்தார் பாண்டியன்.

       “ஹாசினியை எங்க பார்த்தேள், இது என்ன ட்வின் சிஸ்டர் புதுசா இருக்கே“  எனக் கேள்வி எழுப்பவும், “சொல்றேன் பொறு, நான் அவ்வளவு நேரம் தங்கினதுக்குக் காரணமே, சந்திரதேவ் மேல கோபம் இருந்தால், மத்த இரெண்டு பேரையும் தாக்கிட்டு, ஹாசினி எங்கிட்ட வருவான்னு எதிர் பார்த்தேன். ஆனாலும் மறைவிடத்திலிருந்த அவளை நான் பார்த்துட்டேன், தேவ் என்னை மிரட்ட ஆரம்பிச்சான். ஹெலிபேட் வரைக்கும் திரும்பி அனுப்பி விட்டவன், மான நஷ்ட வழக்குப் போடுவேன் சொன்னதை எல்லாம் மறந்து எங்களை அனுப்புறதில் தான் குறியா இருந்தான்." என்றார்.

சந்திரதேவ் ஹாசினியிடம், அவளைத் தன் கை வளைவுக்குள் வைத்துக் கொண்டு, "அந்த நாள் மறக்கவே முடியாதுடி ஹசி. அந்த மீசைக்காரன் கூட ஒவ்வொரு இடமா வரவர எனக்குப் பக்பக்குனு இருந்தது. கடைசியா, நீங்க மறைஞ்சிருந்த இடம் வரைக்கும் வந்ததுமே, உனக்கு வேற டென்ஷன் ஆனால் மயக்கம் வரும், மூக்கிலிருந்து இரத்தம் வருமேன்னு ஒரே டென்ஷன் " என்றான் .

         " அதுவும் வந்துச்சு சந்திரா. பவனும் ப்ரீத்தியும் தான் என்னைக் காப்பாத்துச்சுங்க . எந்த ஜென்மத்துச் சொந்தமோ தெரியலை. அதுங்க பாஸ்போர்ட் ல பிரச்சனை இல்லையா" எனக் கேட்கவும்.

      " அதுங்க உங்க கிட்டச் சொன்ன அடையாளம் மட்டும் தான் வேற. மத்தபடி இங்கிருந்து போனது, வந்தது எல்லாம் ஒரிஜினல் ஐடி தான்" என்றான் தேவ்.

      ஆபீஸர், தன் மனைவியிடம், "புருசனும் பொண்டாட்டியும் ஒன்னை ஒன்னு காப்பாத்துறதில் தான் குறியா இருந்ததுங்க " எனவும் தான்வி அவர் முகத்தைப் பார்த்தாள். "ஹாசினி சந்திர தேவை கல்யாணம் பண்ணிக்கிட்டா ” என அடுத்தக் குண்டை தங்கப் பாண்டியன் வீசவும், “அவள் எப்போ கல்யாணம் பண்ணிண்டா” என்ற தான்வி சஸ்பென்ஸ் நாவல் படிப்பது போல் ஆர்வமானார்.

        “சந்திரதேவின் மனைவி , சுஹாசினி சந்திரா, ஹாசினியின் இரட்டை. எஸ்ஆர் சி மகள்னு, தேவ் சொன்னது ஹாசினியைத்தான். ஒரு வேளை ,ஹாசினியை நான் தீவில் பார்த்துட்டா என்ன செய்யறதுன்னு இந்தக் கதையைச் சொல்லியிருப்பான். ஆனால் பவன் ப்ரீத்தி அதுங்களுக்கு ஒரு கதை வச்சிருப்பான். எல்லாத் தப்பையும் அறிவியல் பூர்வமா செய்யறான். இப்ப பாரு சுஹாசினி சந்திரா பேருக்கு பெர்த் சர்டிபிகேட்ல இருந்து, ஸ்கூல்,காலேஜ், மேரேஜ் சர்டிபிகேட் வரை , அண்ணன் சந்திர தேவும், தம்பி நிருபன் தேவுமா பக்காவா ரெடி பண்ணிட்டானுங்க .” என்றார்.

       "இந்தப் போர்ஜெரி வேலையெல்லாம் புகழா தீங்கோ கோல்ட், நேக்கு கெட்ட கோபம் வர்றது, ஏன் இதை உங்களால உடைக்க முடியாதா, போஸ்மாட்டம் ரிப்போர்ட் எல்லா உண்மையும் சொல்லிடும்" எனத் தான்வி கோபப்படவும்.

         "அதைத் தான் சொல்றேன், இவனோட கையாள் இங்க இருக்கான், ப்ரபஸனல் கொலைகாரனுங்க. போஸ்ட்மாடம்ல இருந்து எல்லாமே பக்கா. தேவ் திட்டப்படி நஞ்சப்பாவுக்கு எதிரா எல்லா ஆதாரமும் எனக்குப் பக்காவா கிடைச்சுடுச்சு. கேஸ் கிளியர். கேராவேன் பெரிய சாட்சி இல்லை சுலபமா உடைக்கலாம், அதே மாதிரி கடத்தல்காரன் சாட்சியையும் உடைக்கலாம் " எனத் தங்கப் பாண்டியன் வரிசையாகச் சொல்லவும்.

         "நேக்கு நீங்க தேவை பாதுகாக்கிற மாதிரி தோண்றது " எனத் தான்வி கோபப்பட்டார். "நான் உன்கிட்ட பேச ஆரம்பிக்கையிலேயே என்ன சொன்னேன், தர்மம், நியாயம் ,மனசு ,புத்தின்னு நானே தடுமாறின கேஸ்னு சொன்னேனா இல்லையா " என்றவர்

        “நானும் ,கிளம்பும் முன்ன, ஐபிஎஸ் படிச்சவன் முட்டாள் இல்லைனு , சொல்லிட்டு தான் வைத்தேன்” என்றார் பாண்டியன்.

சந்திரதேவ் , ஹாசினியை தன் மார்பில் தாங்கியவாறு படுத்திருந்தவன், விளக்கை அணைத்த பின்பும் அன்றைய தங்கப்பாண்டியனின் பேச்சை நினைத்தவாறே படுத்திருந்தான்.

      " மிஸ்டர். தேவ், நியுட்டனோட லா சொல்லுவாங்க, ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை அவசியம் உண்டு. அதே மாதிரி வினை விதைத்தவன் வினை அறுப்பான். உப்பை தின்றவன் தண்ணீருக்காக அலைவான். எவ்வளவு தான் பவர் பதவி எல்லாம் இருக்கட்டுமே ,நீங்களும் ஒரு நாள் உங்க உயிரானவங்களுக்காக என்னைத் தேடி வருவீங்க. அன்னைக்கு மீதியை சொல்றேன். போலீஸ்காரன் அவ்வளவு முட்டாள் இல்லை. காட் இஸ் தேர்" என்று விட்டுக் கிளம்பினார். அவர் வார்த்தை அவன் மனதில் உறுத்திக் கொண்டே தான் இருந்தது.

     தான்வி பொறுப்புள்ள அதிகாரியாக “நன்னா கைக்குக் கிடைச்சவளை விட்டுட்டு வந்திருக்கேள் , தேவ் சட்டத்தை ஏமாத்துறான், அத்தனையும் தெரிஞ்சுண்டே, விட்டுட்டு வந்து இதுல உங்களுக்குப் பெருமை வேற” எனத் தங்கப்பாண்டியனை நொடித்தார். .

      “ புறாவைக் கொல்ல நினைப்பவனை விடக் காப்பாற்றுபவனுக்கே அது சொந்தம்னு, நீதிக் கதை படிச்சது இல்லையா தனுமா , நானும் சுத்தோதன மகாராஜாவா இருந்து தான், அந்த முடிவை எடுத்தேன்.” எனத் தங்கப் பாண்டியன் சொல்லவும்.

      “ஆஹா, அந்தத் தேவ் என்ன புத்தனா, ஒரு பொண்ணைப் படுகொலைன்னு நாடகமாடி உலகத்தை நம்பவைச்சு ,கடத்திண்டு போன அரக்கனா இல்ல இருக்கான் “ எனத் தான்வி திட்டவும்.

     “கூடிய சீக்கிரம் புத்தனா மாறிடுவான், அது தான் , நான் அவனுக்குக் குடுக்குற தண்டனை “ எனப் பாண்டியன் சிரித்தார், “அது எப்படியாம்,ஓமன் நாட்டுல போதி மரம் இருக்கா “ எனத் தான்வி குதர்க்கமாகக் கேட்கவும், “ இல்லைடி, சுய அடையாளம் தொலைச்ச அவன் பொண்ண்டாட்டி இருக்கா , அவளை விடப் பெரிய ஜெயிலரோ, அவனுக்கான தண்டனையோ எதுவுமே இல்லை “ எனப் பாண்டியன் கூறிவிட்டு, “போலீஸ் காரனே ஆயுள் கைதியா இருக்கான், அவன் எம்மாத்திரம்” எனச் சொல்லி தான்வியிடம் தண்டனை வாங்கிக் கொண்டு அதிலிருந்து தப்பிக்க லஞ்சமும் கொடுத்தார்.

        தங்கப்பாண்டியனின் ஆரூடத்தை மெய்யாக்கக் காலம் காய்களை நகர்த்த ஆரம்பித்தது. இன்னமும் தேவின் விருப்பப்படியே எல்லாம் நடக்க, ஹாசினி படுகொலை விசயத்தைப் போட்டு உடைத்து, சந்திரதேவ்க்குப் பாம் வைக்க வந்து கொண்டிருந்தான், ஹாசினியின் உயிர் நண்பன் மேத்யூ ஆர் வில்லியம்சன்.

        ஹாசினியை அமெரிக்கா அனுப்புவதற்கு மேனகா பயந்தார். ஆனால் எஸ்ஆர்சி, பட்டமேற்கும் இளவரசன் நாடு நகரங்களைச் சுற்றி அறிய வேண்டும் என்பது போல், தான் இல்லாவிட்டாலும் மகள் உலகத்தைச் சமாளித்து, தாயையும் பாதுகாக்க வேண்டும் என எண்ணினார். ஊர் உலகைச் சுற்றுவதில் ஒருவருக்குக் கிடைக்கும் அனுபவம் போல் வாழ்வின் சூட்சமங்களைச் சொல்லாமல் சொல்லி ஆசான் வேறு எதுவுமில்லை. எத்தனை புது இடங்கள், மனிதர்கள், வாழ்வியல் சூழல்கள். சிறுவயது முதலே அப்பாவோடு உலகம் சுற்றிய ஹாசினி, அவர் அரசியலில் பிசியாக இருந்த போதும் இந்தியாவின் பல பகுதிகளையும் சுற்றிக் காண்பித்து உள்ளார். அதனால் ஹாசினி தயக்கமின்றி நியூயார்க்கில் மேற்கல்விக்காகக் கிளம்பினாள்.

       தனது நண்பரும், பிஸ்னஸ் பார்ட்னருமான ரிச்சர்ட் வில்லியம்சனுக்கு மகள் தங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்து தரச் சொன்னார். அவர் தனது வீட்டிலேயே ஹாசினி தங்கட்டும் என யோசனை சொன்ன போது, எஸ்ஆர்சி வேண்டாமென மறுத்து, பேயிங் கெஸ்டாகக் கல்லூரிக்கு அருகில் உள்ள பகுதியில் சேர்த்துவிடச் சொன்னார். 

     அதன்படி ஹாசினி நியூயார்க்கில் எந்த வித நட்சத்திர அந்தஸ்துமின்றிச் சுதந்திரமாக வலைய வந்தாள். இங்குத் தாய் தந்தையர் அதே ஊரிலிருந்தாலும் பதின்ம வயதிலேயே தங்களது தேவைக்காகத் தாங்களே சம்பாதித்துப் பிஜிக்களில் தங்கும் மாணவ மாணவியர் நிறைய இருந்தனர். பாலின பாகுபாடு இன்றிச் சுற்றித் திரிந்தார்கள். ஹாசினி அவர்களோடு சோசியலாகப் பழக வேண்டும் என்பதற்காகப் போவாளே ஒழிய ஒரு எல்லையில் எல்லோரையும் தள்ளி நிறுத்தி விடுவாள்.

          ஒரு நாள் தோழிகளுடன் சென்ற ஒரு பார்ட்டியில் மூச்சு முட்டக் குடித்து விட்டு மேத்யூ அங்கே தகராறு செய்து கொண்டிருந்தான். பிடரி வரை வழிந்த முடியும் சிவப்பேரிய கண்களும், நலுங்கிய ஆடைகளுமாகச் சைக்கோ போல் தெரிந்தவனை அணுக அனைவருமே பயந்தனர். மது அருந்திய கண்ணாடி டம்ளரை கைகளால் நொறுக்கி இரத்தம் வழிந்தது. ஹாசினிக்கு அவனை ரிச்சர்ட் வில்லியம்சன் வீட்டில் பார்த்து அறிமுகம் இருந்தது. அவனைப் பற்றி அறிந்திருந்ததால், ஹாசினி தைரியமாகவே அவனிடம் சென்றாள்.

        மேத்யூவின் அம்மா, ஓரிடத்தில் நிலை கொள்ளாதவள், ஆரம்பத்தில் ரிச்சர்டை காதலித்து மணந்தாலும், அவரும் அவளுக்குச் சிறிது காலத்தில் சலிப்பு தட்டி விட்டார். ஆனால் அந்தச் சமயம் மேத்யூ வயிற்றிலிருந்ததால் அவனைப் பெற்றெடுக்கும் வரை மேத்யூவின் தகப்பனோடு வசித்தவள், பிள்ளை பெற்றதுமே குழந்தை அரவணைக்கவுமின்றிப் புறக்கணித்துச் சென்றாள். செவிலியர்களிடம் வளர்ந்த மேத்யுவுக்கு அளவுக்கு மீறிய செல்வம் கிடைத்து , ஆனால் பாசம் கிட்டவில்லை. ரிச்சர்ட் காதலித்த மனைவி விட்டுச் சென்ற வெறுப்பில் தடம் மாறியவர் தன்னை , வியாபாரத்துக்குள் மூழ்கடித்துக் கொண்டு , எந்தப் பெண்ணோடும் கல்யாணம் எனும் கட்டு இன்றி லிவ்விங் டு கெதராகவே இருந்தார். அதிலும் பெண்கள் மாறிக் கொண்டே இருப்பார். இதில் மேத்யு முற்றிலும் பாதிக்கப்பட்டான்.

        ரிச்சர்டின் ஐம்பதாவது வயதில் ஏஞ்சலினா என்றொரு பெண்ணை அவளது குணநலனுக்காக மணம் புரிந்தார். ஆனால் மேத்யு அவரை அப்பாவின் மற்றொரு கேர்ல் ப்ரெண்டாகவே நினைத்தான். அவனது அடல்ட் ஏஜ் வந்த நாளிலிருந்து, அவனோடும் சல்லாபித்தே வந்திருந்தனர். அதே போல் ஏஞ்சலினாவிடமும் நடக்க முயல, ரிசர்ச்ட் வெகுண்டு மேத்யூவை மாட்டை அடிப்பது போல் அடித்தார். அதிலிருந்து அவரையும் வீட்டையும் விட்டு வெளியேறியவன் அமெரிக்க மண்ணின் மற்றொரு அநாதை ஆனான்.

       ரிச்சர்ட் திரும்ப வந்து அழைத்த போதும் அந்த வீட்டுக்குச் செல்ல மறுத்தவன் எப்போதாவது விருந்தினன் போல் சென்று வருவான். அது போல் ஒரு முறை சென்ற போது ஹாசினியை அவனும் பார்த்திருக்கிறான். அவளின் தோற்றமே மூதாதையரான தமது தந்தை வழி பாட்டிகளை இந்திய வம்சத்தை நினைவுறுத்தியது. அதனால் அவள் முகத்தை மறந்தான் இல்லை.

        ஹாசினி அன்றைய இரவு அவனை மிகுந்த சிரமப்பட்டுத் தான் தங்கியுள்ள அறைக்கு அவனை இழுத்து வந்தாள். அடுத்த நாள் போதை தெளிந்து பார்க்கையில் ஒற்றை ஷோபாவில் குறுகிப் படுத்துத் தூங்கும் குழந்தை முகத்தைத் தான் கண்டான். ஆனாலும் தன் நெகிழ்வைக் காட்டாமல் அவளிடம் எரிந்து விழுந்தான். சராசரி பெண் என அவளையும் தரமிறக்கினான்.

          அத்தனையும் பொறுமையாகக் கேட்ட ஹாசினி, புன்னகை மாறாமல், "முடிச்சிட்டியா. இஸ் இட் ஓவர். நீ இப்ப சொன்ன எதுவுமே நான் இல்லை. அதனால உன் வார்த்தை, எனர்ஜி எல்லாமே வேஸ்ட். சரி உன் ரூம்க்குக் கிளம்பு " என விரட்டி விட்டாள். அவளின் செய்கையே அவனுக்கு வியப்பாக இருந்தது. அதன் பின்னும் அவன் எங்காவது அரக்கத்தனமாகச் செய்கை செய்து கொண்டிருந்தால் மிகவும் கூலாக அவனைக் காலி செய்து விட்டு, அது ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் வருவாள். அவளின் கன்னக்குழி சிரிப்பில் விழுந்தவன் மேத்யூவும் தான்.

        ஹாசினிக்காகப் பாதியில் விட்ட தனது படிப்பை அவளது கல்லூரியிலேயே தொடர்ந்தான். இவனோடு அவள் பழகுவதைப் பார்த்து மேலும் சிலர் அவர்களோடும் டேட்டிங் வரச் சொல்லி அழைக்க, அவள் முறைத்து விட்டு வந்தாள். அவர்கள் இவளை அனுபவித்தே தீருவது என ஒருநாள் துரத்த மேத்யு ஆபத்பாந்தவனாக அவளைக் காத்தான். அன்றே அவளைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான். ரிச்சர்ட் தன் மகனின் மாற்றத்தை பார்த்து தன் வீட்டுக்கு அழைக்க, பெண்கள் மீதான அவனது பார்வை மாறியதில் அம்மா ஸ்தானத்தில் இருக்கும் ஏஞ்சலினாவைச் சந்திக்கக் குற்ற உணர்ச்சியால் மனம் வரவில்லை.

       ஹாசினியோடு பழகிய சிறிது நாட்களில் அவள் தன்னோடு பழகுவதில் ஒரு எல்லை இருப்பதை உணர்ந்தவன், அதைப் பற்றிக் கேட்க, இதுவரை யாருக்கும் தெரியாத பெட்டகத்தை அவனுக்குத் திறந்து காட்டினாள். அதில் நிறைந்த சந்திராவைப் பற்றியும் சொன்னாள். ஆனால் இது அவர்களுக்குள்ளான ரகசியம் மட்டுமே. அவனும் எல்லா விசயங்களையும் அவளிடம் பகிர்ந்து கொள்வான்.

        சந்திரதேவ் ரிச்சர்ட் வில்லியம்சனுடன் மட்டுமே பிஸ்னஸ் செய்து கொண்டிருந்தான். அதுவும் தொழில் உலகில் அவன் சி.பி.தேவ் மட்டுமே. எனவே மேத்யூவுடன் எந்தப் பழக்கமும் இல்லை. மேத்யு ஹாசினி ஒரே வீட்டில் வசித்ததை ரிச்சர்ட் காதல் எனவே நினைத்தார். எஸ்ஆர்சி யிடம் பேசி இவளை மருமகளாக்கிக் கொள்ளவும் நினைத்தவருக்கு அதைப்பற்றிப் பேச எஸ்ஆர்சி உடல்நிலை இடம் கொடுக்கவில்லை.

      மேனகாவிடமிருந்து ஹாசினியை இந்தியா வரச் சொன்ன அழைப்பு அவள் வாழ்வை மாற்றிப் போட்டது. முதலில் ஹாசினி திரும்பி விடுவாள் என நினைத்த மேத்யு அவளது அரசியல் பிரவேசத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். ஹாசினி கூறிய இந்திய அரசியல் சிக்கல் அவனுக்குப் புரியவில்லை. அப்பாவிடம் யோசனைக் கேட்க, அவர் சி.பி.தேவை கை காட்டினார்.

       அவனிடம் வந்து நின்றவன், " அட் எனி காஸ்ட், என் ப்யூட்டியை எனக்கு வேண்டும்" என்ற அவனது வார்த்தைகள் சந்திரதேவுக்குக் கூர் ஊசியாகத் துளைத்தாலும், தன் மனம் கவர்ந்தவளைக் காக்க இந்தியா பறந்தான்.

      ஹாசினி பாம் ப்ளாஸ்ட் நாடகத்தை முடிவெடுத்த சந்திரதேவ் ,மேத்யு குட்டையைக் குழப்பாமலிருக்க அவனுக்கு மட்டும் திட்டத்தைச் சொல்லவும். " ஓகே டன். நான் ஐலேண்ட் வந்து ஹாசினியை பிக்கப் பண்ணிக்கிறேன்" என எடுத்த முதல் முடிவின் படியே சந்திரதேவ், "உன்னை ஒருத்தனிடம் ஒப்படைக்கனும்" என ஹாசினியிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

        மேத்யுவுக்குமே சி.பி.தேவ்.தான் ஹாசினியின் சந்திரா என்பது தெரியாது. சி.பி.தேவ் ஹாசினியின் உறவினன் , ஆகச் சிறந்த தொழிலதிபன். எப்படியாகினும் தான் நினைத்த காரியத்தைச் சாதித்து விடுவான் எனத் தந்தை சொல்லிக் கேட்டவன், ஹாசினியை காப்பாற்றித் தந்தால் தான் சிபி தேவின் கனவு ப்ராஜெக்ட்டில் இன்வெஸ்ட் செய்வதாக வாக்குத் தந்திருக்கிறான். எதிலுமே ஆதாயம் தேடும் சந்திர தேவ், தன் பிரியமானவளைக் காக்க , தனது கடமைக்கே தனக்குச் சன்மானம் தருகிறேன் எனச் சொல்லும் அந்த ஒப்பந்தத்தை , ஹாசினி அருகில் இருக்கலாம் என்பதற்காக ஒப்புக்கொண்டு, பிரியங்கா, ப்ரணவேஸை இதில் பயன்படுத்திக் கொண்டான். இதில் எதிர்பார்த்து ஹாசினியின் காதல் மனம் , அதனை அறிந்த நொடியே உலகத்தை எதிர்த்து அவளைத் தன்னவள் ஆக்கிக் கொண்டான் சந்திர தேவ்.

       அடுத்த நாள் விடியலில் மேனகா, அனுசுயா எனும் இரண்டு தாய்மார்களும் என்ன முடிவெடுப்பார்கள். சந்திரதேவ் அவர்களை எப்படிச் சரிக்கட்டுவான். உண்மை அறியும் காசினி சந்திராவின் நிலை என்ன பொறுத்திருந்துப் பார்ப்போம்.

18. ஹாசினி சந்திரா.

18. ஹாசினி சந்திரா.


       சாந்த் தேவ் மஹால், வெள்ளியும் தங்கமும் சேர்த்து இழைத்து தான் இதனைக் கட்டினார்களோ என ஐயப்படும் அளவுக்கு அதன் தரை , சுற்றுச் சுவர், விதானம், மாடிப்படிகள், சாண்டிலியர், திரைசீலை என அத்தனையிலும் ஒரு செல்வ வளம் மின்னும். கட்டிடக்கலையை கரைத்துக் குடித்து அதனையே தொழிலாகச் செய்யும் இவர்களிடம்த் தான் கட்டுமானத்துறையின் ஒவ்வொரு புது யுக்தியும், டிசைன்களும், பொருள்களும் பயன்பாட்டிற்கு வரும். பெங்களூரின் சந்திரபவன் ராஜமாளிகை எனில், இது நவீன உலகின் உதாரணமாக காட்டக்கூடிய ஆடம்பர மாளிகை. 

       அத்தனை சந்திராக்களுமே கூடத்தில் கூடியிருந்தனர். ஆனால் அத்தனை பேரும் சந்திர பிரகாஷ் சிம்ம தேவனின் விளக்கத்துக்காகக் கவலையோடும், ஒருவித பதட்டத்தோடும் காத்திருந்தனர். பேச்சை எப்படி ஆரம்பிப்பது என அறியாமல் தவிக்கும் போது , ரத்தின தேவ் தான் விசயத்தைப் பட்டெனப் போட்டு உடைத்தார்.

       " யுவராஜ் நஞ்சப்பாவை ஹாசினி கேஸ்ல அரஸ்ட் பண்ணிட்டோம்னு காவல்துறை பிரஸ்க்கு பேட்டிக் கொடுத்த நியுசை பார்த்திட்டு தான் மச்சான் மயங்கி விழுந்தார் " எனச் சந்திர தேவைப் பார்த்து ரத்தன் கோபக்கனையைத் தொடுக்கவும், சந்திரா நெற்றியைத் தேய்த்தான். சந்திரதேவ் தனக்காகத் திட்டு வாங்குவதாக நினைத்த ஹாசினி அவனுக்குப் பரிந்து ,

       " என்னை யுவராஜ் கிட்னாப் பண்ணதா நினைச்சிட்டாங்களா. ஆனால் அவனெல்லாம் ஜெயிலுக்குப் போகவேண்டியவன் தான் அங்கிள். மூணு தடவை என்னைக் கொல்ல ட்ரை பண்ணியிருக்கான். பவன் ப்ரீத்தியை வச்சுச் சந்திரா தான் என்னைக் காப்பாற்றினார்." என ஹாசினி விளக்கம் தரவும், குடும்பமே அவளைப் பாவமாகப் பார்த்தது. யாருக்குமே அவள் படுகொலை செய்யப்பட்டதாக வந்த தகவலைச் சொல்ல மனம் வரவில்லை.

      சந்திரதேவ் , ஹாசினி அருகிலிருந்ததால் அந்தப் பகுதியை மட்டும் மறைத்தவன் , தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தான். "நம்ம கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் பிஸ்னஸை யுஎஸ்லையும் விரிவுபடுத்த ஆரம்பிச்ச நேரம் ,ஒன்றறை வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. ,சந்திரா மாமா ஆபரேஷனுக்கு முன்னாடி, என்னை இந்தியாவுக்கு வரச்சொன்னார். மதுவோட பேர்ல இன்வெஸ்ட்மென்ட் பண்றதை டிஸ்கஸ் பண்ணனும்னு கூப்டாங்க. " எனவும் ஹாசினி ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

         "மச்சான் விவரம் தான். அவருகிட்ட இல்லாத ஆட்களா, உன்னை நோட்டம் விட்டுருப்பார்" என்றார் ரத்தன தேவ். "நானும் அப்படித்தான் கேட்டேன். அதுக்கு, மாமா சொன்னார்" என அன்று இவர்கள் இருவருக்குமிடையே நடந்த உரையாடலைச் சொன்னான்.

         " வீரா போனதே எனக்கு மனசளவுல பெரிய பாதிப்பு தான். இப்ப ரீசன்டா ஹெல்த் இஸ்யூஸ்ம் இருக்கு. பானுவையும் ப்ரதி, அதியையும் உங்க அப்பா பார்த்துக்கிட்டான். அவங்க செட்டில் ஆகிட்டாங்க. நான் இருக்கிறதோ , இல்லாததோ அவங்க வாழ்க்கையில பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. " என அவர் சொல்லவும் " அத்தையும், அத்தான் இரண்டு பேரும் இன்னைக்கும் உங்களை மிஸ் பண்றாங்க. நீங்க இப்படிச் சொல்லக் கூடாது" என்றான் தேவ். அவர் சிரித்து விட்டு,

       "நான் அப்படிச் சொல்லலை மாப்பிள்ளை, பைனான்ஸியலாவோ, பிசிக்கலாவோ அவங்க என்னைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லைனு சொல்றேன். ஆனால் மேனகா, மது இரண்டு பேருக்கும் என்னைத் தவிர வேற உலகமே தெரியாது. வெளி உலகம் தெரிஞ்சுக்கட்டும்னு தான் மதுவை யூ எஸ் அனுப்பியிருக்கேன். அவளையும் செட்டில் பண்ணனும்.

         இதுக்கு என் மகனுங்களை விட்டுட்டு உன்னை ஏன் கூப்பிட்டேன்னு தோணும். " என அவர் கேள்வி எழுப்பவும், " பேஸ் ரீடிங் படிச்சிருக்கீங்களா மாமா" எனத் தேவ் வியந்தான்.

        " மாப்பிள்ளை, உன் வயசை விட என் அனுபவம் ஜாஸ்தி. எவ்வளவு ஜனங்களைச் சந்திச்சு இருப்பேன்" என விளக்கியவர்

       " நேராவே சொல்லிடுறேன் மாப்பிள்ளை, மதுவை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எனக்கு ஆசை. எனக்குப் பின்னாடி அவளுக்கு இங்க பாதுகாப்புக் கிடையாது. இப்ப செய்யப் போற சர்ஜரி பத்தி எனக்கு ஒண்ணும் நல்லதா தோணலை. ஆனால் செஞ்சு தான் ஆகனும். அது எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும் அதைப் பற்றிக் கவலை இல்லை.

        நீ மதுவை சின்னவயசில பார்த்தது தானே மாப்பிள்ளை, இப்ப யு எஸ் ல இருக்கா. நீ போய்ப் பாரு. இரண்டு பேருக்கும் பிடிச்சா ஒத்துப் போகும்னா நான் உங்க வீட்டில் பேசுறேன். உங்க அப்பா இருந்திருந்தா உரிமையாவே கேட்டிருப்பேன். மதுவுக்கு எனக்குத் தெரிஞ்சு வேற அபேர்ஸ் கிடையாது." என்றவர் அவன் பார்வையில், சிரித்துக் கொண்டே ,

       "நாங்க அப்பா மகள் எல்லாமே ஓபனா பேசுவோம், இன்னும் சொல்லப் போனால், உன் மேல அவளுக்கு ஒரு க்ரஷ் இருக்கு. உங்கம்மாவுக்காகப் பயப்படுறா. நான் கோடு போடுறேன். நீ ரோடு போட்டுக்கோ " என்றவர் தொடர்ந்து,

       " அடுத்த முக்கியமான விசயம் பிஸ்னஸ் பேசுவோம், உங்க பிஸ்னஸ் யு எஸ்ல எக்ஸ்பேண்ட் பண்றீங்கன்னு கேள்வி பட்டேன். எனக்குத் தெரிஞ்ச மில்லினர் ரிச்சர்ட் வில்லியம்சன் நியுயார்க்ல இருக்கார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.ஆனால் அவங்க தாத்தா காலத்துலையே அமெரிக்காலச் செட்டில் ஆகிட்டாங்க. எனக்கு நல்லா பழக்கம்.

       நாங்க இரண்டு பேரும் உங்க ப்ராஜெக்டல இன்வெஸ்ட் பண்ண ரெடி. ஆனால் மது பேர்ல போடுறது வெளியே தெரியக்கூடாது. உன்னால சமாளிக்க முடியுமான்னு சொல்லு." என அவன் பதிலுக்காகக் காத்திருந்தார்.

      " மாமா, பொண்ணையும் கொடுத்து, பிஸ்னஸும் தரேங்கிறீங்க. பத்து வருஷம் முன்னாடி சொன்ன ஜாக்பாட் இது தானா " என இவன் கேட்கவும்,

       " கண்டுபிடிச்சிட்டியா. நம்மகிட்ட இருக்க மிகச்சிறந்த பொக்கிசத்தை, நமக்குப் பிடிச்சவங்களுக்குத் தானே தருவோம். என்னோட பொக்கிசம் என் மகள். எனக்குப் பிடிச்சவன் வீரா, நீ அவனோட மகன். அது தான் இந்த ஜாக்பாட் . நீ மதுவை இப்ப பார்க்கலையே , பார்த்திருந்த இவ்வளவு கேள்வியே கேட்க மாட்ட " என அவர் விஷமமாகச் சிரிக்கவும், " மாமா" என இவன் ஆட்சேபனை செய்தான். மகளின் போட்டோவை காட்டினார். சந்திரதேவ் அதையே பார்த்திருந்தவன்,

    "மாமா ,நீங்க இந்தப் படத்தைக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை, அவள் என் மனசில இருக்கா. ஆனால் நான் மதுவைப் பார்த்த பிறகு தான் அவளைக் கல்யாணம் செய்கிறதைப் பத்தி உறுதி தர முடியும், அவள் மனசில யும் நான் இருந்தா , இந்த உலகமே எதிர்த்தாலும் நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்குவேன். ஒரு வேளை அவளுக்கு வேற நோக்கம் இருந்தால், அவள் என்னோட பொறுப்பு. நீங்க அவளைப் பத்தி கவலைப்படாமல் இருங்க. " என வாக்கு தந்தான். 

"நான் அவளைப் பார்த்துக்குறேன்னு, ஓகே சொல்லித் தான் ஸ்டேட்ஸ் போனேன்" எனச் சந்திரதேவ் எஸ்ஆர்சியுடனான சந்திப்பிலிருந்து அதற்குப் பிறகான தங்களது கதையை ஆரம்பித்தான்.

      " அதுனால தான் நீ அமெரிக்கன் இன்வெஸ்டர் யாருன்னு சொல்லலையா. இருந்தாலும், அப்பா எங்களை நம்பலைப்  பாரு" என ப்ரதிபன் வருத்தப்படவும். ஆராதனா இடைப்புகுந்தாள்,

     " ப்ரதி , மாமா தன் சொத்தை காப்பாற்ற ஆள் தேடலை. மகளைப் புரொக்ட் பண்ண மருமகன் தேடியிருக்கார். அதுக்குத் தான் இந்தத் தூண்டில்" என அவள் சொல்லவும்.

      " மச்சானுக்கு, யாரை எப்படிப் பிடிக்கனும்னு தெரியும். சந்துவை பத்தி வீரா அண்ணன் நிச்சயம் புலம்பி இருப்பார். அதுனால தான் பழைய காலத்து ராஜாக்கள், மகளைக் கட்டிக் கொடுத்து நாட்டையும் கொடுப்பாங்களே , அப்படி ஆசை காட்டியிருக்கார். இவனுக்கு எல்லாமே பிஸ்னஸ் தானே" என ரத்தின தேவ் சந்துவின் குணாதிசயத்தை உடைத்துப் பேசவும்.

       " அப்ப பிஸ்னஸ் மோடிவ்ல தான் யு எஸ் க்கு ,என்னைத் தேடி வந்தியா. பெரிசா லவ் கிவ்வுனு பீலா விட்ட" என ஹாசினி தன்னை மறந்து சநாதிரதேவிடம் அனைவர் முன்னும் சண்டைக் கட்டினாள். சந்து அவளை ஆட்சேபனையாகப் பார்த்தான்.

          " என்னது லவ்வா, டேய் கேட்க ஆள் இல்லைனு எங்க தங்கச்சி வாழ்க்கையில் விளையாடுறியா, அப்படின்னா அப்பவே கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல " என அதிபன் கோபத்தைக் காட்டினான். ஹாசினி படுகொலை என நாடகமாடியதன் கோபம் இருந்தது.

       "அத்தான், ரொம்பப் பாசமலரா பொங்காதீங்க. உங்க தங்கச்சி, இந்தப் பேபிடால்க்காக எங்க அண்ணன், என்ன என்ன செஞ்சார் தெரியுமா" என நிருபன் எடுத்துச் சொல்லச் சாட்சியாக ப்ரீத்தியும் பவனும் அந்தக் கூட்டத்தில் இணைந்தனர்.

       " அதியண்ணா, நாங்க இரண்டு பேரும் ஆறுமாசமா மேடம் கூடத் தான் இருக்கோம்" என ப்ரீத்தி சந்திரதேவ் ஹாசினியை பாதுகாகக்கவே தங்களைப் பணித்ததைச் சொன்னாள். நர்ஸ் வந்து மேனகா முழித்து விட்டதாகவும், மகளை அழைப்பதாகவும் சொல்லவும், ஹாசினி அழைத்துக் கொண்டு சந்திர தேவ் மட்டும் உள்ளே சென்றான்.

      "மது" எனக் கண்ணீர் மல்கியவரிடம் சந்திரதேவ் , "அத்தை, என்னை மீறித் தான் யாரா இருந்தாலும் உங்க மகளை நெருங்க முடியும். நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா, பெரிய அரசியல்வாதிங்க பில்டப் குடுத்த அப்பாவும் மகளும் சின்னப் பிள்ளையாட்டம் அழறாங்க" எனக் கேலியோடு மேலும் இரண்டு வார்த்தை பேசியவன்.

       ஹாசினியிடம், " உணர்ச்சி வசப்படாம உங்க அம்மாட்ட செல்லம் கொஞ்சிக்கோ. ஆனால் அத்தையைப் பேச வைக்கக் கூடாது" என அவளுக்கும் உரிமையாகக் கட்டளையிட்டுச் சென்றான். அறைக் கதவைச் சாத்திவிட்டே ஹாலுக்கு வந்தான். சந்திரதேவ் இப்போது சுதந்திரமாக வீட்டினரின் கேள்விகளுக்கு விடையளிக்கத் தயாரானான்.

      " சந்துண்ணா, யூ எஸ் போனீங்களே , அந்தக் கதையைக் கன்டினியு பண்ணுங்க " என்றாள் மயூரா " ஏண்டி எங்க மகன் என்ன படமா ஓட்டுறான். கதை கேட்கிற' என நிரஞ்சனா அக்காள் மகளைத் திட்டவும்.

       " அவன் தான்,ட்ராஜிட்டியா ஒரு சஸ்பென்ஸ் நாடகத்தை நடத்திட்டு இருக்கான. இதில பாதிக்கபட்டவங்களுக்கு, நீ என்ன நியாயம் செய்யப் போற சந்து " எனச் சரியான பாயிண்டை பிடித்தான் பிரதிபன்.

    " என் மேல நம்பிக்கை இல்லையா அத்தான், நான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவேன். ட்ரெஸ்ட் மீ" என்றான் சந்திரதேவ்.

       " சந்து இத்தனை நாள் நீ ரிஸ்க் எடுத்து ஆடினது எல்லாம் பிஸ்னஸ்ல. அதுல லாபமோ நட்ஷடம்னாலும் பணம் தான் . இப்ப நீ என்ன செஞ்ச காரியத்தில் என்ன என்ன இழக்கப் போறமோ. " என ப்ரதிபன் கோபத்தோடு சொல்லவும்

        " அத்தான், ஆறு மாசமா ஹாசினி சந்திராவை காப்பாத்துற வேலையைத் தான் பார்த்தோம். கடைசி நாள் அன் எக்ஸ்பெக்டட். யுவராஜ் மூணு தடவை அவளைக் கொல்ல ட்ரை பண்ணான். ஒவ்வொரு தடவையும் மயிரிழையில் உயிர் தப்பிச்சா. அதனால தான், அதிரடியா மதுவோட சேஃப்டி ஆஸ்பெக்ட் யோசிச்சு, என் கஷ்டடியில் எடுத்துக்கிட்டேன். வேற யாரை நம்பியும் அவளை அங்க விட்டு வைக்க முடியலை. அந்த நேரம் அவளோட உயிரை விட எதுவுமே எனக்குப் பெரிசா தெரியலை. எது வந்தாலும் நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். இனி அவள் என்னோட பொறுப்பு " என்றான் சந்திரதேவ். அதன் பின்னர் மேத்யு வில்லியம்சன் பற்றி, ஹாசினியின் நண்பன், சந்திராவுக்கும் குடும்ப நண்பர் எனச் சொன்னவன், தான் சந்தேகப்பட்டதை மறைத்து விட்டான்.

    ஹாசினி இந்தியா சென்றது. இவன் பின் தொடர்ந்தது எல்லாம் சொன்னவன், " பாம் ப்ளாஸ்ட் ஆன அன்னைக்கு மேத்யு ,மதுவை தன்கிட்ட ஒப்படைக்கனும்னும், அவள் அப்பா அம்மாவையும் அமெரிக்க வரவழைச்சு தான் பார்த்துகிறதா சொன்னான். எனக்கும் இவள் ஏன் அரசியலுக்குப் போனா, நஞ்சப்பா எதை வச்சு மிரட்டுறான்னு தெரியலை. சந்திரா மாமாவை இந்தியாவிலிருந்து வெளியேற்ற, நஞ்சப்பாவுக்குக் குழி தோண்டனும்னு முடிவு பண்ணித் தான் மதுவை மாறுவேடத்தில் கிட்னாப் பண்ணேன்" என்றவன்.

       " சுஹானா தீவில் ஏதேச்சியா , அரை மயக்கத்தில் என் பெயரைத் தான் சொன்னா. அதுவும் , என்கிட்ட வராதா சந்திரா, நீயாவது நல்லா இருன்னு புலம்பினா. அப்போ தான், என்னை மாதிரியே அவளும் என்னை நினைக்கிறான்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம் மேத்யூகிட்ட ஒப்படைக்கிற யோசனையை மாத்திக்கிட்டேன்" என்றான்.

      " இந்திய போலீஸ், அவ்வளவு ஏமாளி இல்லை. தங்கப்பாண்டியனை நேரில் பார்த்ததை வச்சு சொல்றேன். அவர் உன்னைத் தேடி வருவார் " என்றான் அதிபன்.

      " பாஸ் , அதெல்லாம் வந்துட்டார். நம்ம பாஸ் கண்ணுளையே விரலை விட்டு ஆட்டிட்டு தான் போனார்" என்ற பவன், அந்த விவரத்தையும் சொன்னான்.

" எல்லாம் சரி. இப்ப மதுவோட ஐடென்டிடி " என அதிபன் கேள்வி எழுப்பினான்.

    " யாரோட சம்மதம் இருந்தாலும், இல்லைனாலும். மதுரஹாசினி சந்திரா இனிமே திருமதி சுஹாசினி சந்திர பிரகாஷ் சிம்ம தேவா என்கூடத் தான் இருப்பா. சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் அவள் என் மனைவியாகிட்டா. உங்க எல்லாருக்காகவும் வேணும்னா வீட்டில சிம்பிளா மேரேஜ் அரேஞ்ச் பண்ணுங்க. எல்லார் முன்னாடியும் அவள் கழுத்தில் தாலி கட்டுறேன்" எனப் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான் சந்திரதேவ்.

         " அண்ணா, ஆனா அம்மா சம்மதிக்கனுமே" என ஆராதனா கேள்வி எழுப்பவும், " அவங்க மறுத்தால், அவங்க மகன் ஜெயில்ல கலி திங்கனும் .அவங்களுக்கு எது சம்மதமோ, அது எனக்கும் சம்மதம் " என்றான்.

         " சந்து உன் அட்டகாசம் தாங்கலைடா . நீ எப்போ தான் மாறப் போற. நீ செஞ்ச எல்லாத்திலும் பெரிய விசயம் , ஹாசினியோட படுகொலை ட்ராமா. " என ரத்தின சிம்மன் புலம்பவும்.

     " அவள் இன்னும் உன்னை நம்புறா. உலகத்தைப் பொறுத்தவரை ஹாசினி சந்திரா இறந்திட்டாங்கிறதே அவளுக்குத் தெரியலையே.இதை எப்படிச் சமாளிப்ப " என அதிபன் கேள்வி எழுப்பினான்.

 " நானே சொல்லிக்கிறேன். வேற யாரும் சொல்ல வேண்டாம்" என்றவன், அதோடு விளக்கவுரை முடிந்தது என்பது போல், மேனகா இருந்த அறைக்குள் சென்றான்.

      ஹாசினி  அம்மாவின் கையைப் பிடித்தபடி அருகிலிருந்த சேரில் அமர்ந்து பெட்டில் தலை வைத்துத் தூங்கியிருந்தவளை, பார்த்தவன் , அங்கிருந்த நர்சிடம் அவசர தேவையெனில் இன்டர்காமில் காட்டி ஒன்றாம் எண் நம்பரில் அழைக்கச் சொன்னவன், அவளை எழுப்பித் தன்னுடன் வருமாறு அழைத்தான். 

        சைகையில் அவள் அம்மாவைக் காட்டவும், அவனும் சைகையில் பதில் தந்து அவளை வெளியே அழைத்துச் சென்றவன், எல்லாரும் பார்க்கவே தங்களது அறைக்குச் செல்லும் லிப்டை நோக்கிச் சென்றான்.

   ரத்தின சிம்மன், நிரஞ்சனாவைப் பார்க்கவும், மற்றவர் ஆட்சேபிக்கும் முன், "சந்து, மது என் கூடத் தங்கிக்கட்டும்" என்றார் நிரஞ்சனா. அவர்களை நோக்கித் திரும்பியவன்,

      " ஏன் சித்தி, இப்ப தானே சொன்னேன், சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் மது என்னோட மனைவி . அவள் என்கூடத் தான் இருப்பா" என்றான்.

     " அதுசரிப்பா, ஆனால் அக்கா இருக்காங்க, அண்ணேன் அண்ணிகள் இருக்காங்க " என அவர் இழுக்கும் போதே, ஹாசினி அவனிடமிருந்து விலக முயன்று. " நான் அம்மா ரூம்லையே இருந்துக்குறேன். எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை" என  சொல்லவும், அவளை முறைத்தவன், முகத்தை இன்னும் கடுமையாக வைத்துக் கொண்டு, மற்றவர்களை நோக்கி,

      " உங்கள் எல்லார் முன்னாடியும் நான் தாலி கட்டளைனா, இவள் என் மனைவி இல்லைனு ஆயிடுமா. நிரு அந்தச் சர்டிவிகேட் காட்டு" என்றான் தேவ். நிருபன் அதனைத் தேடி எடுக்கும் போதே, ரத்தன தேவ்,

           " போங்கடா, பெரிசா சர்டிபிகேட் காட்ட வர்றானுங்க. நீ உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு போடா ராசா " என அவரே அண்ணன் மகனைப் பார்த்துச் சொன்னவர். " நல்லா சேனைத் தொட்டு வச்சாரு. அவர் போகாம வந்திருக்கான்" என மச்சினனையும் மகனையும் இரண்டு சந்திரர் பெயரில் இருக்கும் சூரிய ஆளுமைகளையும் ஒரு சேரத் திட்டிவிட்டு, மற்றவரை அவரவர் அறைக்குச் செல்லப் பணித்தார்.

 சந்திரதேவ் தனது மனைவியான சுஹாசினி சந்திரதேவை ,அவளது அண்ணன்கள் ,அண்ணிகள் ,தனது சித்தப்பா குடும்பம் தங்களையே பார்ப்பதை உணர்ந்து , வேண்டுமென்றே அவளை இடையோடு இறுக்கமாக அணைத்து தனது அறைக்கு அழைத்து சென்றான். 


ஹாசினி சந்திரா- 18 part-2


பதின்ம வயதிலேயே 

தனது மனதில் நுழைந்து 

அவனது இதய சிம்மாசனத்தில் 

ராணியாக அமர்ந்தவளை, 

காதலாகி, கடத்தி 

கசிந்துருகி, 

கைத்தலம் பற்றி, 

காந்தர்வ விவாகம் முடித்து,  

கற்பியல் தவராமல் கலவி, 

காமுற்று களித்து 

காந்தவிழியாளை 

கவர்ந்த கள்வனவன். 


      உற்றாரும், உறவினரும் சுற்றி நிற்க, அவள் இடையை இவன் இரும்புகரத்தால் இறுக்கி, இருவருக்கும் இடையில் இடைவெளியின்றி , இழுத்துச் சென்றான். இடையில் தவழ்ந்த அவன்கரம் இம்சையைக் கூட்ட, பிறர் பார்க்கிறார்களே என லஜ்ஜையுற்று அவன் பிடியிலிருந்து நழுவ முயல, இன்னும் இறுகியது அரக்கனவனின் கரம். அதோடு, " நெளியாமா வாடி லங்கினி. இல்லைனா கண்ணாடி லிப்ட், எல்லாரும் பார்க்கும் போதே, வாயோடு வாய் பதிப்பேன்" என தனது விஷமரூபத்தைக் காட்டினான் அவன். 


        அரக்கன் சொல்லாததையும் சேர்த்து செய்பவன், சொன்னதை செய்யாமலா விடுவான், அதற்கு பயந்தே அவனோடு அவளும் நன்றாக ஒண்டிக் கொண்டாள். அவள் செயலில் திருப்தியுற்றவனாக, லிப்டில் ஏற்றி, கரிசனமாய் அவளைப் பார்த்துக் கொள்வது போல் நெற்றியில் விழுந்த அவளது கற்றை முடி எல்லாம் எடுத்து விட்டு, ரொமான்டிக் லுக் கொடுத்து, மற்றொரு லிப்டில் ஏறி அறைக்குச் சென்று விட்ட மூத்த தம்பதியைத் தவிர மற்ற அனைவருக்கும் தரமான ரொமான்டிக் ட்ரைலர் காட்டியே சென்றான். 


      நிருபன் தேவைத் தவிர மற்றவர் ஜோடியாக நின்று நெஞ்சில் கை வைத்தபடி பார்க்க, ப்ரதிபன் ஆராதனாவை முறைத்தான். அதன் அர்த்தம் புரிந்து, "என்னைய முறைச்சா, உங்க தங்கச்சியும் தானே போறா" என  நொடிக்க, அந்த ஜோடி சண்டையிட்டுக் கொண்டே சென்றது. 


      " திமிரெடுத்தவன், தீவிலதான் அவன் ராஜ்ஜியம், இங்க பெரியவங்க இருக்காங்கன்னாவது மரியாதை குடுக்குறானா பாரு" என அதிபன் திட்டவும், "  ஒரு முத்தம் குடுக்கவே ரூல்ஸ் பேசின ஆளுக்கு, இதெல்லாம் பார்த்தா அதிர்ச்சியாத் தான் இருக்கும். ஆனால் சந்து அண்ணா ரொமான்டிக் தான். நிரு நீயெல்லாம் வேஸ்ட்டா" என மயூரா கணவனையும் தம்பியையும் ஒரே நேரம் உபயோகமற்றவர்களாக்கி, அவர்களின் ஆட்சேபனை பார்வையில் ,திடிரென மகளின் நினைவு வந்தவளாக, " சுபி எந்திருச்சுடும்" என ஓடினாள். 


        " ப்ரியு, அன்னைக்கு சொன்னது தாண்டி, அண்ணனுங்க முன்னாடியே ஃப்ரி ஷோ காட்டிட்டு தள்ளிட்டு போறார் பாரு. இந்த தைரியம் யாருக்கு வரும். பாஸ், பாஸ் தான்" என ப்ரீத்தியும் பவனும்  மெச்சிக் கொண்டு, அவர்களும் அவுட்ஹவுஸுக்குச் சென்றனர். 


        தனித்து விடப்பட்ட நிருபன், " டேய் அண்ணா, ஒரு கன்னிப் பையனை வச்சுகிட்டு உனக்கே ஓவராத் தெரியலையா. என் பேபிடால்கிட்ட ஒரு வார்த்தை கூட நான் பேசலை. வரும் போதே அண்ணியாக்கி கூட்டிட்டு வந்திருக்கான். எவனையுமே நம்ப முடியலை" என புலம்பியபடி மாடிப்படியில் ஏறினான். 



         சந்திரதேவ், ஹாசினியை அழைத்துச் சென்றவன், தனது ராயல் சூட் அறையைத் திறந்து அவளோடு உள்ளே நுழைந்தவன், அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்து, " வெல்கம் டூ அவர் பேரடைஸ், மை ப்யூட்டி குயின்" என்றான். கன்னத்தில் ரோசாப்பூ பூக்க, கன்னக்குழி விழ கண்கள் சுருக்கி விகசித்து சிரித்தவள், அவன் கையைப் பிடித்துக் கொண்டு, " யெஸ் மை டியர் ஹேண்ட்ஸம் பீஸ்ட்" என குனிந்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். 


     " ஹேண்ட்ஸம் சொன்னதோட நிறுத்தி இருக்கலாம். ஏண்டி பீஸ்ட்டுன்னு சொன்ன" என அவன் செல்லமாக கோபிக்கவும். 

" உள்ளதை தானே சொல்ல முடியும் ஆறடி அரக்கா. " என அவனைக் கட்டிக் கொண்டவள் அப்போது தான் அவனைத் தாண்டி அந்த அறையைப் பார்த்தாள். 


     " சந்திரா, இது என்ன பெட்ரூமா, ராயல் சூட் மாதிரி இருக்கு" என மான் விழியாள் இன்னும் அகலமாய் தன் கண்களை விரித்து அந்த அறையைப் பார்த்து வியந்து கேட்டாள். அவள் அறையை ரசிக்க அவன் அவளை ரசித்தபடி மீண்டும் இடையை அணைத்தபடி 

" நம்ம ரூம் தான். இத்தனை நாள் என் ப்யூட்டி இல்லாமல் டல்லடிச்சது.  இப்ப என் ப்யூட்டி குயின் வந்தவுடனே டாலடிக்குது " என அவளை அணைத்தபடி அந்த அறையைக் காட்டினான். 


         ஓக் மரத்தாலான அலங்கார வேலைப்பாடோடு கூடிய அந்தப் பெரிய கட்டிலில் , உட்கார்ந்தால் புதையுமளவு மென்மையான பத்து இன்ச் மெத்தை இவையாவும் பழுப்பும் தங்கமும் கலந்த நிறமாக காட்சியளிக்க, அதன் மேல் மட்டும் பாரசீக கட்டிட அமைப்பு போன்று டூம் வளைவும் அதில் அழகிய கிரிஷ்டல் சாண்டிலியரும் மிளிர்ந்தது. 

கட்டிலின் இரண்டு புறமும் என்கிரேவிங் வேலைப்பாடோடு கூடிய ஆள் உயர அகலமான பெல்ஜியம் கண்ணாடிகள்.  அதனைக் காட்டி அவள் காதில் அவன் ஏதோ கிசுகிசுக்க, அவனுக்கு அன்புப் பரிசாக இரண்டு அடியைக் கொடுத்துவிட்டு, " இப்படி பேசினா, எனக்கு ஒண்ணுமே பார்க்க வேணாம்" என கோபித்து அதன் முன் போடப்பட்டிருந்த பளிங்கு மோடாவில் அமர்ந்தாள். அவன் வெடிச் சிரிப்புச் சிரித்தவன், 


        " ஹசி பேபி, பெட்ரூம்க்கு வந்துட்டு இதெல்லாம் பேசாதன்னா எப்படி. சரி வா , இன்ட்ரஸ்டிங்கா இன்னோன்னு காட்டுறேன். " என்றவன் அவள் முறைக்கவும், " சீரியஸ்லி, நீ பார்த்தேனா. மச்சான் மேல மையலாயிடுவ" என்றான். அவள் " வாட் கம்அகெயின் " எனவும். 


       " ஐயோ, தெரியாம சொல்லிட்டேன். இதுக்குத் தான் மறத்தமிழச்சியா கட்டனும்கிறது" என்ற அவனது கமெண்ட்டுக்கும், முறைத்து நின்று அவனை கெஞ்ச விட்டு கட்டிலைத் தாண்டி இருந்த திரைச்சீலையை திறந்து விட அந்த பக்கம் முழுவதும் ஸீத்ரு கண்ணாடி, அதில் ஒரு ஸ்லைடிங் டோர் திறப்பு வழியே சென்றால் அகலமான பால்கனி அங்கும் உட்கார ஏதுவாக ஷோபாக்கள் இருந்தது. அதன் கூரையும் க்ளாஸ் ரூப் டாப். இடுப்பு உயர சுவற்றின் ஓரம் நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம், நீலவானமும் கடலுமாக இருந்தது. இன்டோர் பாளான், செடி கொடிகள் என காற்றும் நன்றாக வீச ஹாசினி அத்தனையும் ரசித்தாள். 


         அடுத்து உள்ளே அழைத்து வந்து வார்ட்ரோப் அறைக்கு அவன் அழைக்கவும். " இங்க எல்லாம் நானே பார்த்துக்குறேன். நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்" என அவள் கவனமாக பின் வாங்கவும், அவன் சிரித்துக் கொண்டே, "பயப்படாம வா, இது வேற" என அழைத்து வந்தான்.


      அலமாரிக்குள் அலமாரியைத் திறந்துக் காட்ட, அதில் குண்டு கண்ணங்களோடு, மிரட்சியில் மானுடனும், வெக்கத்தில் பன்னீர் ரோஜாக்களுடனும் , மஞ்சள் அப்பிய முகத்தோடு புதுபருவ மலராக மதுரஹாசினியும் அவளுக்கு மாலை அணிவிக்கும், அரும்பு மீசை பருவ பருக்களோடு சந்திரதேவும் நிழற்படமாக இருந்தனர். அதன் கீழே ஹாசினி அமெரிக்காவில் அங்கங்கு நின்று எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கொலாஜ். அதனைப் பார்த்தவள், சிலையென சமைந்து நிற்க , பின்னின்று, முன்னாக  அவள் முன்னங் கழுத்தில் இதழ் பதித்தவன், " ஐ லவ் யூ ஹசி " என்றான். 

   

        அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கோடு அவன் புறம் திரும்பியவள், "இவ்வளவு லவ்வை வச்சிட்டு, ஏண்டா ஒரு தடவைக் கூட நேரா வந்துப் பார்க்கலை. நான் இவ்வளவு கஷ்டப் பட்டுருக்கமாட்டேன்ல" என்றபடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழவும், அடாதடியாக எதிலும் இறங்கும் அவனுமே நெகிழ்ந்துதான் போனான். 

  

     அவள் முகமெங்கும் இதழ் பதித்தவன், "அது தான் வந்துட்டேன்ல, இனிமே நீ கஷ்டப்படவே விடமாட்டேன். உன் கண்ணிலிருந்து கண்ணீரே வரக்கூடாதுடி " என உருகி நின்றான். ஆனால் வரும் நாட்கள் சந்திரதேவுக்கு பாடம் புகட்ட ஹாசினியை பகடைக் காயாக உருட்டும் என அவன் கனவிலும் நினைத்தான் இல்லை. 

 

        எதையும் சாதிக்கும் வல்லமையுண்டு எனும் இறுமாப்பிலிருப்பவனுக்கு சோதனை காலம் ஆரம்பிப்பதை அறியாதவன், அதே இறுமாப்போடு. "என் மேல நம்பிக்கை வைடி குண்டு கோஸ், எல்லாம் சரியாகிடும்" என்றவன், இன்னொரு லாக்கரைத் திறந்து அவளது நினைவாக அவன் வைத்திருந்த ஹேர்கிளிப், ப்ரேஸ்லெட் உடைந்த ஜிமிக்கி என இத்யாதி பொருட்கள், ஒவ்வொரு சம்பவத்தின் கதை பேசின. அதை காட்டி மீண்டும் பத்திரப்படுத்தி விட்டு தங்களது மெத்தைக்கு அவளை அழைத்து வந்தான்.


         மேனகா இருந்த அறைக்கு இன்டர்காமில் அழைத்து அவரது நலம் விசாரித்துக் கொண்டான். பிறகு பால்கனி சென்று யாருடனோ போன் பேசிவிட்டு வந்தான். அவள் அங்கே கிடந்த ஹோபாவில் தான் அமர்ந்திருந்தாள். 


" ஏண்டி, படுக்க வேண்டியது தானே" என்றான். " அங்க இருக்கும் போது ஒண்ணும் தெரியலை. இப்போ அன்கம்ஃபர்டபிலா இருக்கு" என்றாள். 


        " கீழே டயலாக் எல்லாம் அடிச்சனே. அது எல்லாம் நிஜம். யு ஆர் மை ஃபைவ் " என்றவன் " உனக்கு சந்தேகமோ, கில்டினெஸோ வேண்டியது இல்லை. மிஸஸ் சந்திரதேவ்னு கர்வமாவே சொல்லலாம். " என்றவன் அவளை அள்ளி மெத்தையில் கிடத்தினான். 


"சந்திரா, வேண்டாம் ப்ளீஸ். நான் அம்மா ரூம்க்கு போறேனே" என அவள் பாவமாகக் கேட்கவும், முதலில் அவனுக்கு கோபம் தான் வந்தது. " நீயே நம்ம உறவை குறைச்சலா நினைச்சா எப்படி. மேரேஜ் ரிஜிஸ்டர் சர்டிவிகேட் காட்டவா" என்றான். 


       " நான் கையெழுத்து போடாமல் எப்படி கல்யாணம் ரிஜிஸ்டர் ஆச்சு" என முதல் முறையாக புத்திசாலித்தனமான கேள்வி கேட்டாள். 


" இன்னைக்கு இமிகிரேசன்ல எப்படி கையெழுத்துப் போட்ட " எனக் கேட்டான். " நீதான் சுஹாசினி சந்திரதேவ்னு லெப்ட் ஹாண்ட்ல போடச் சொன்ன. அங்க நிண்ணுட்டு ட்ரஸ்ட் மீ, ட்ரெஸ்ட் மீ ன்னு சொன்ன, அது தான் போட்டேன். அதுக்குள்ள அப்பாக்கு முடியலைனு நியூஸ் வந்துடுச்சே"  என்றாள். 


" ஓகே இந்த அளவு அறிவாளியா இருக்க. மரவீட்டில போன் பேசப் போனமே , அதுக்கு முன்னாடியே நான் யாருன்னு தெரியவும், இதே மாதிரி டிஜிட்டல் சைன் போடச் சொன்னேன். " என்றான். " அன்னைக்கும் இதுமாதிரி, ஏதேதோ பேசிதான் போட வச்ச. " என அவள் குறைப்பட்டாள். 


" உன்னை கிட்னாப் பண்ணிட்டு வந்திருக்கேன். அதே பேர்ல ட்ராவல் பண்ண முடியுமா. அந்த போலீஸ் ஆபீஸர் , இங்கையும் துரத்திட்டு வந்திடுவார்" என்றான். 


" ஆனால் அதுக்காக ஃபோர்ஜரி பண்றது தப்பில்லையா. அப்புறம் நமக்கும், சிவராஜ்க்கும் என்ன வித்தியாசம்" எனக் கேட்டாள். 


" அப்ப நானும், சிவராஜூம் ஒண்ணுங்கிறாயா, அப்படின்னா சொல்லு, இப்பவே போய் தங்கப்பாண்டியன்கிட்ட சரண்டர் ஆகுறேன்" என வேகமாக எழுந்தான். 


       அவனைப் பிடித்து இழுத்தவள், " அதுக்குத் தான் அன்னைக்கு மூச்சடக்கி அங்க மறைஞ்சி இருந்தனாக்கும். அந்த ஆபீஸர், அப்பாவுக்கு நல்லா தெரிஞ்சவர். என் மேல இருக்க அக்கறைல தான் வந்திருப்பார். ஆனால் அவர்கிட்ட இருந்தே உனக்காகத் தான் மறைஞ்சிருந்தேன்" என இவர்கள் இங்கே மஸ்கட்டில் தங்கப்பாண்டியன் ஐபிஎஸை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது கடல் தாண்டி இந்தியாவில் பெங்களூரில் அவரும் தன் மனைவியிடம் இவர்களைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார். 


சுஹானா தீவிற்குச் சென்ற தங்கப் பாண்டியன் , ஹாசினியை பார்த்தாரா, மனைவியிடம் காதல் கதையைச் சொல்வதாகச் சொல்லிச் சென்றார், அவருக்கு எது வரை உண்மை தெரியும் . கடமை தவறாத காவல் அதிகாரியை சந்திரதேவ் எப்படிச் சமாளித்தான். ஆபீசர்  ஜோடிகளின் படுக்கையறையில் நுழைந்து நாளை ஒட்டுக் கேட்போம். அதுவரை ஹாசினி சந்திராவின் இனிமையில் இணைந்திருங்கள். 



Thursday, 24 June 2021

ஹாசினி சந்திரா -17

 ஹாசினி சந்திரா -17 -part-1

         எஸ்ஆர்சி மகளின் மறைவு குறித்த செய்தியை டிவியில் பார்த்து அடியற்ற மரம் போல் சாய, மேனகா தனது துக்கம், சோகம் எல்லாம் மறந்து தனது ராம்ஜியை காப்பாற்ற வேண்டும் என்ற தாரக மந்திரத்தை மட்டுமே எப்போதும் உரு போட்டுக் கொண்டிருப்பவர், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் போடுவதற்காக மருத்துவர் தந்திருந்த ஊசி மருந்தை விவரம் சொன்னபடி நடுங்கும் கரங்களோடு சிரஞ்சில் ஏற்றியவர், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது கணவருக்கு ஊசியைப் போட்டார்.

        மருத்துவருக்கு அழைப்பு விடுத்து கீழே இருந்த அறையிலேயே அவரைப் படுக்க வைத்திருக்க, மயக்கத்திலிருந்தார். ரத்தின சிம்ம தேவனும், நிருபன் தேவும் இன்று இன்னும் வீடு திரும்பவில்லை. அவர்களுக்கும் போன் பறந்தது.

       ஆம்புலன்ஸில் வந்த டாக்டர், எஸ்ஆர்சியை பரிசோதித்து விட்டு, "இப்போ மயக்கத்தில் இருக்கார். முழித்த பிறகு தான் மெமரி பற்றிச் சொல்ல முடியும். பல்சஸ் நார்மல். பிபி கொஞ்சம் கூடியதும் இப்ப பரவாயில்லை. ஆனால் அவரோட ஸ்ட்ரெஸ்க்கு என்ன காரணமோ, அதை மட்டும் ரிபீட் ஆகாமல் பார்த்துக்குங்க" என்ற மருத்துவர் பரிசோதித்து விட்டுக் கிளம்பியவரை, ப்ரதிபன் வரவேற்போடு இணைந்த விருந்தினர் அறையில் காத்திருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டான்.

       எஸ்ஆர்சி ஒரு மணி நேரத்தில் கண் விழித்தவருக்கு முதலில் பார்த்த காட்சி நினைவில் இல்லை. ஆனால் மகளுக்கு ஏதோ ஆபத்து என மட்டும் உணர்வில் பதிந்திருந்தது. கவலையான தன் மனைவி மக்களின் முகத்தை வைத்து, ஏதோ சரியில்லை என யூகித்தவர், "என்ன ஆச்சு. மேனு மது எங்கே. நாம எங்க இருக்கோம்" எனக் கேள்விகளை அடுக்கினார். சுற்று நின்றவர்களுக்கு ஒரு நிம்மதியும் வந்தது. ஹாசினி டிவி செய்தியை மறந்து விட்டாரே, என அவரது மறதியை நினைத்து முதல் முறையாக நல்லது என நினைத்தார்கள்.

       "ஒண்ணுமில்லை ராம்ஜி, நீங்க ரெஸ்ட் எடுங்க. பசிக்கிறதா சாப்பிட எதாவது கொண்டு வரவா" என்றார் மேனகா, ஆனால் முகத்தில் என்றுமில்லாத வெறுமை இன்று இருந்தது. அந்த முகமே அவருக்கு ஏதோ செய்தது. மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக் கொண்டே போகவும், "மதுவைப் பார்க்கனும். போன் போடு" என்றார். 

       மேனகாவுக்கு அடக்கிய அழுகை, மீண்டும் பீரிடும் போலிருந்தது. மகளைப் பறிகொடுத்த நாளிலும் மோசமான நாளாக இன்றைய நாளை உணர்ந்தார். எஸ்ஆர்சி மீண்டும் மீண்டும் கேட்கவும் ," நீங்க இப்படிப் பிடிவாதம் பிடிச்சா, நானும் எங்கையாவது போயிடுவேன்" என மேனகா வெடிக்கவும். மற்றவர் செய்வது அறியாது தவித்தனர். பானுமதி தான் இடை புகுந்தார்.

     " இந்தர், நீங்க சாப்பிட்ட பிறகு மதுவுக்குப் போன் பண்ணுவோம்" எனப் பானுமதி கணவரைச் சமாதானம் செய்தார்.

      " மேனு ஏன் அப்படிப் பேசுறா. நான் உங்களுக்கு எல்லாம் தொல்லையா இருக்கேனா" என எஸ்ஆர்சி ஆரம்பிக்கவும்,

         "அப்பா, இத்தனை வருஷம் , நீங்க எங்க கூட இருக்கனும்னு தான் ஏங்கினோம். அப்படி எல்லாம் சொல்லாதீங்கப்பா " என ப்ரதியும்.

       "நீங்கதான்பா, எங்களுக்கு எல்லாமே" என அவர்களும் ஆளுக்கொரு பக்கம் வந்து அவரைப் பற்றிக் கொள்ளவும், அவர் குழப்பமாக மேனகா முகத்தையே பார்த்தார். அதிபன் ," அம்மா" என மேனகாவைக் கைபிடித்து அப்பாவிடம் அழைத்து வந்தவன், "அப்பா இனிமே ஸ்வீட் கேக்கமாட்டாங்க. நீங்க கோவப்படாதீங்க" என அதற்காகத் தான் அவர் மீது மேனகா கோபமாக இருப்பது போல் ஒரு காட்சியை எஸ்ஆர்சி முன் சித்தரித்தான்.

      ஆராதனா மாமனாருக்கு இரவு உணவை எடுத்து வந்து மாமியார்களிடம் தந்தாள். தங்கள் அறைக்குச் செல்லாமல் ஹாலிலிருந்த ஓய்வறையில் தான் இருந்தனர். மூவருக்கும் இடையிலிருந்த மௌனத்தைப் பானுமதி தான் சகஜமாக்க முயன்றார். பொதுவாகப் பானு தான் அடிக்கடி கோபித்துக் கொள்வார், மேனகா சமாதான தூதுவராக இருப்பார். இன்று எல்லாம் தலைகீழ்.

       மேனகாவின் பொறுமை எல்லை கடந்தது, இத்தனை வருடம் ராம்ஜி, ராம்ஜி என அவருக்காகவே வாழ்ந்து, பெற்ற மகளையும் பலி கொடுத்தவருக்கு , சந்திராவின் "எல்லாத்தையும் மறைச்சு ஏமாத்திட்டியே மேனகா " என்ற வார்த்தையும், அதற்கு முன் அனுசுயாவின் வார்த்தைகளுமாக அழுத்தத்தைத் தர, கணவர் சாப்பிடும் வரை பொறுத்தவர், நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, "மதும்மா, நானும் உன்கிட்டயே வந்திடுறேன்டி " எனப் புலம்பியவாறு ஏதோ அவஸ்தையாக அறையின் வாசலைக் கடக்க முயன்றார். பானு எஸ்ஆர்சியைக் கவனித்துக் கொண்டிருந்ததால் இருவருமே மேனகாவைக் கவனிக்கவில்லை.

         மேனகா நெஞ்சைப் பிடித்துச் சரியும் நேரம் சரியாக ,புயல் வேகத்தில் தந்தையைக் காண வந்த மகள் மதுர ஹாசினி சந்திரா, "அம்மா" எனக் கதறியபடி தாயைத் தாங்கினாள். அப்படியே அம்மாவைக் கீழே சரித்து மடியில் போட்டுக் கொண்ட ஹாசினி, " அம்மா , அம்மா" எனக் கதறவும் கண் திறந்து பார்த்த தாயின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

      "மதுமா உன்னைப் பார்க்கச் சொர்கத்துக்கே வந்துட்டேனாடி " எனக் கன்னடத்தில் சொற்களை உதிர்த்து அவள் மடியில் மயங்கினார்.

        ஹாசினிக்கு அவரின் வார்த்தைகள் எதுவும் புரியவில்லை. வந்து இறங்கியவுடன், இமிகிரேஷன் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. சந்திரதேவ் நீட்டிய காகிதங்களில் அவன் சொன்னபடி கையெழுத்துப் போட்டவள் அதற்கான காரணங்களைக் கேட்டு நிற்கும் முன்னர், இடி போல் எஸ்ஆர்சி க்கு முடியவில்லை என்பதை மட்டும் நிருபன் சொல்லவும், சந்திரதேவ், பவன் ப்ரிதியை அவனது பொறுப்பில் விட்டு மற்றதை முடிக்கச் சொல்லிவிட்டு ,ஸ்பெஷல் பர்மிஷனில் சித்தப்பா ரத்தின தேவுடன் . மஸ்கட்டிலிருந்து தொலை தூரம் இருக்கும் தங்கள் மாளிகைக்கு விரைந்தான்.

      “அம்மா, இங்க பாரு உன் மது வந்துட்டேன், நான் நல்லா இருக்கேன். நீ எந்திரிமா. அம்மா இங்க பாரு “ எனக் கண்ணீர் பெருக்கிக்கொண்டே பேச்சுக் கொடுத்தாள் ஹாசினி

         ஹாசினியின் சத்தத்தில் எஸ்ஆர்சி யும் பானுமதியும் ஓடி வர, அவள் பின்னால் வந்த சந்திரதேவ், "அதி ,டாக்டரைக் கூப்பிடு " என இடி முழக்கமாய்க் கத்திவிட்டு, உள்ளே வந்து, ஹாசினியின் மடியிலிருந்த மேனகாவை எஸ்ஆர்சி தூக்க முயல்வதைப் பார்த்து அவரை விலக்கி அவன் தூக்கி எஸ்ஆர்சி இருந்த பெட்டிலேயே படுக்க வைத்தான்.

      ஹாசினி, "அப்பா" என்ற கதறலோடு எஸ்ஆர்சி யின் மார்பில் சாய்ந்தாள். அவரும் "மதும்மா" என மகளை அணைத்துக் கொண்டவர், மகளைத் தேற்றவும் , தான் தேறவும் வழியின்றி மகளோடு மனைவியின் அருகில் நின்று அழுதார். பானுமதி மேனகாவை நெருங்கி, அவர் மயக்கத்தைத் தெளிய வைக்க முயன்றார். ஹாசினியை சந்திரதேவுடன் பார்த்ததில் நிம்மதியாக உணர்ந்தவர், மேனகா மயங்கியதில் குற்ற உணர்வுக்கு ஆளானார்.

        எஸ்ஆர்சியைப் பார்க்க வந்த ஆம்புலன்ஸ், டாக்டர் நர்ஸ் அங்கேயே தங்கியிருந்தவர்கள், எஸ்ஆர்சிக்கு எதுவோ என விரைந்தனர். குடும்பத்தாரும், எஸ்ஆர்சி யை எதிர் நோக்கிய கட்டிலில் மேனகா இருக்கவும் பதறிப் போனார்கள்.

        டாக்டர் எல்லாரையும் வெளியேற்றி மேனகாவுக்குச் சிகிச்சையைத் தொடர்ந்தனர். ஆம்புலன்ஸில் அவசரத் தேவைக்கு இருக்கும் உபகாரங்களைக் கொண்டு மற்ற தேவையான சோதனைகளையும் செய்தனர்.

      ஹாசினியும் எஸ்ஆர்சியும் அறையிலிருந்து வெளியேற மறுக்க, பானுமதி கணவரையும், ஹாசினியை சந்திரதேவுமாகக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

        எஸ்ஆர்சியை அழைத்துச் சென்று ஷோபாவில் அமரவைத்த பானுமதி, மருமகள்களை ஏவி அவரது அறையிலிருந்து மாத்திரையும், தண்ணீரும் கொண்டு வரச் சொன்னார். " பானுமா, மேனுவுக்கு ஒண்ணும் ஆகாதில்லை, நான் எதுவும் திட்டிட்டேனா, அவள் முகமே நல்லா இல்லையே " என ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார். அவரைக் கட்டாயப் படுத்தி மாத்திரையைப் போடவைத்தார்.

   " அம்மாவுக்கு எதுவும் ஆயிடுமோன்னு எனக்குப் பயமா இருக்கு சந்திரா" எனச் சந்திரதேவின் மார்பில் புதைந்து கதறினாள் ஹாசினி.

     " மதும்மா, என் ஹசி இல்ல அழாத. அவங்களுக்கு ஒண்ணும் ஆகாது. ட்ரெஸ்ட் மீ. நீ வந்துட்டேல்ல, இனி ஒரு பிரச்சனையும் இல்லை" என அணைத்து ஆறுதல் படுத்தினான். வீட்டில் அனைவரும் இவர்கள் அந்நியோனத்தை அதிசயமாகப் பார்க்க, அனுசுயா தூரத்திலிருந்தே மகனையும், அவனோடு நிற்கும் மாயப் பிசாசையும் எரிச்சலாகப் பார்த்தார். ஆம் அவருக்கு மேனகாவும், ஹாசினியும் அவர்கள் வீட்டு ஆண்களை மயக்க வந்த மோகினிப் பிசாசுகளாகவே எப்போதும் நினைத்திருந்தார். அந்தக் கோபத்தில் மேனகாவின் நிலையை அறிய கூட விருப்பமில்லாமல் தனது அறைக்குச் சென்று விட்டார்.

      இரத்தின தேவன் மனைவியிடம் நடந்த ரகளைகளைக் கேட்டார், எஸ்ஆர் சி விஷயத்தை மட்டும் சொன்ன நிரஞ்சனா, அனுசுயாவின் பேச்சை அந்தச் சமயத்துக்குச் சொல்லாமல் விட்டார். டாக்டர் அழைக்கும் குரலில் அறைக்குச் சென்று மேனகாவை பார்த்தனர். ஹாசினி,சந்திராதேவின் கைப்பிடியில் தான் இருந்தாள். அவளுக்கும் தான் அடுத்து அடுத்து எத்தனை அதிர்ச்சி.

       " ஸ்ட்ரெஸ் தான் சார். மைல்ட் அட்டாக். இன்ஜக்சன் போட்டுருக்கேன். இப்போதைக்கு ஒண்ணும் ஆபத்து இல்லை. நாளைக்கு ஹாஸ்பிடலில் அட்மின் பண்ணுங்க. அப்சர்வேஷன்ல வச்சு ஃபுல் செக்கப் பண்ணிடுவோம்." என்றார். அதிபன் ,”இப்பவே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றதுனாலும் பண்ணலாம். நான் நைட் மேன்காமாவோட இருந்துக்கிறேன் “ என மருத்துவரிடம் ஆலோசனை கேட்டான்.

      “அந்த அளவு சிவியர் இல்லை ,நான் இங்க தானே இருக்கேன், நர்ஸ் கூடவே இருக்கட்டும். ட்ரிப்ஸ் போட்டுருக்கேன், அதுலையே மருந்து ஏத்துறோம் , ஒன்னும் பயப்படற அளவு இல்லை, அவங்க தைரியமா இருக்காங்க, யாரும் டிஸ்டப் பண்ணாதீங்க , ரெஸ்ட் எடுக்கட்டும் ” என்றார் மருத்துவர்.

       ஹாசினி டாக்டர் தந்த தைரியமான வார்த்தைகளுக்குப் பிறகு, சுற்றுப்புறம் உணர்ந்து சந்திர தேவை விடுத்து மீண்டும் அப்பாவிடம் ஒட்டிக் கொண்டாள். அப்பாவும் மக்களும் உணர்ச்சி பிழம்பாக ஒருவரை ஒருவர் அனைத்துக் கொண்டு மேனகாவைப் பார்த்து நின்றனர். மேனகா மயக்கத்திலிருந்து உறக்கத்துக்குச் சென்றிருந்தார். நர்ஸ் அதைச் சொல்லி இவர்களை அறையை விட்டு வெளியேறச் சொன்னார்.

       “புட்டிமா , அம்மாவை பாரு” என அழுத்தவரை, மகள் கண்ணைத் துடைத்து, “நீங்க அழாதீங்கப்பா , நீங்க அழுதா அம்மா ரொம்ப டென்ஷன் ஆவாங்க. அப்புறம் கண்ணே திறக்க மாட்டாங்க” என மகள் அப்பாவுக்கு அம்மாவானாள்.

         “நீ அழுதாலும் ,மேனகாவுக்குப் பிடிக்காது, நர்ஸ் பார்த்துப்பாங்க இரண்டு பெரும் வெளியே வாங்க. இந்தர் மது இன்னும் சாப்பிடலை கூட்டிட்டு வாங்க” எனக் கணவருக்கும் கட்டளையிட்டு இருவரையும் அறையிலிருந்து கூடத்துக்கு அழைத்து வந்தார் பானுமதி. அப்பாவுக்கும் பெத்தம்மாவுக்கும் நடுவில் வந்த ஹாசினியை, ஆசைதீர அணைத்து உச்சிமுகர்ந்து கொஞ்சினார் பானுமதி. 

        அதில் சந்திரா முன்னே செல்லவும், "தங்கம், வைரம், திரும்பி வந்துட்டியே, உன்னைப் பறிகொடுத்துட்டமேன்னு அம்மா பதறிட்டேன்" எனச் சந்திரா காதில் கேட்காமல் ரகசியமாகச் சொன்னார். காசினி தான் கடத்தப் பட்டதைத் தான் சொல்கிறார் என நினைத்தவள் , " பெத்தமா , உங்க சந்துவை நல்லா நாலு போடு போடுங்க." எனப் பெரியம்மாவுக்கு எடுத்துக் கொடுத்தால் ஹாசினி. "நாளைக்கு இருக்கு அவனுக்கு." என அம்மாவும் மகளுமாகப் பேசி சிரிக்கவும், அப்பா திரும்பி பார்த்தார்.

       ஹாசினி சந்திரா -17 -part-2

       சந்திரதேவ், வீட்டினரிடம் நடந்ததை விசாரித்துக் கொண்டிருந்தான். மற்றவர் அவனைக் கோபத்தோடு குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தனர். ஆனால் எஸ் ஆர்சியும், ஹாசினியும் வரவும் அனைவரும் அமைதி ஆனார்கள்.

           எஸ்ஆர்சி மகன் மருமகள் எல்லாரையும் ஹாலில் அழைத்து, மகளை அறிமுகம் செய்தார், “அப்பா எங்களுக்கு மதுவைத் தெரியாதா , என்ன அப்பக் குண்டு கன்னமெல்லாம் வச்சு குண்டு கோஸா இருந்தா, இப்போ நீட்டக் குச்சியா இருக்கா” என அதிபன் அவளது அருகில் வந்து தோளோடு அணைத்து உச்சி முகர்ந்து தன் சகோதர பாசத்தைக் காட்டவும் ,ஹாசினி "அண்ணா" எனக் கட்டிக் கொண்டாள்.

        "இந்த அண்ணன்களை எல்லாம் மறந்தே போயிட்ட, நீ கூப்பிட்டாலும் வரமாட்டோம்னு முடிவு பண்ணிட்டியா" என உரிமையாகக் கேட்கவும், " அப்படி எல்லாம் இல்லைணா, சிசுவேஷன் அப்படி ஆயிடுச்சு. எதையும் யோசிக்கவே முடியலை" என்றாள்.

      அவளின் மறுபுறம் வந்து தலையில் கை வைத்து தனது வாஞ்ஞையையும் அளவோடே காட்டும் ப்ரதிபன் ," அவள் என்னடா பண்ணுவா, பெரியவங்க சொன்னதைச் செஞ்சிருப்பா. சின்னப் பொண்ணு தானே " எனத் தங்கைக்கு ஆதரவாகப் பேசினான்.

       ப்ரதிபனின் கோபம் மேனகா மீது இருக்குமே ஒழிய ஹாசினியிடம் இருக்காது. இன்றும் அவள் அவனுக்கு ஒன்று மறியாத குழந்தை தான்.

     " இந்தச் சின்னப் பொண்ணுக்கு ஸ்டேட்ஸ் வரைக்கும் போகத் தெரியும், இங்க இருக்க மஸ்கட் வரத் தெரியாது. அவள் என் கூட எல்லாம் பேசக்கூடாது. நான் அவளோட சண்டை” என முறைத்து நின்றாள் ஆராதனா. அண்ணன்களை விடுத்து ஆராதனாவிடம் ஓடியவள்,

        “ சாரி அண்ணி, நீங்க எதுக்குச் சண்டைனு எனக்குத் தெரியும், உங்க கல்யாணத்தப்ப எனக்கு உடம்பு சரியில்லை. இல்லைனா அப்பா கூட வந்திருப்பேன். எல்லாப் பங்சனுக்கும் ட்ரெஸ் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருந்தேன் தெரியுமா " என ஆராதனாவிடம் காதைப் பிடித்து மன்னிப்பு கேட்டாள் ஹாசினி. ஆனால் அண்ணன் திருமணம் என அவள் ஆர்வமாகக் கிளம்பியது நிஜம், சந்திராவையும் பார்க்கும் ஆவலும் இருந்தது. ஆனால் அனுசுயா தேவியின் வார்த்தைகள் வடுவாக அவள் மனதைத் தைத்திருந்தது, இந்த மன உளைச்சலே காய்ச்சல் வரை கொண்டு வந்து விட்டது. ஆனால் விதி வலியது. அனுசுயா வார்த்தையை அது இன்று மெய்ப்பித்தே காட்டி உள்ளது.

       “மயூ , பார்த்துக்கோ இவ தான் நம்ம நாத்தனார், என் கல்யாணத்துக்கு வராததுக்கே இப்ப தான் சாரி கேக்குறா, உன்கிட்ட இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு சாரி கேட்பாள்” எனக் கேலி கிண்டல் பேசி சூழலை ஆராதனா சகஜமாக்கினாள், அந்தக் குரலில் மீண்டவள், அதிபன் மனைவி மயூராவிடம், " க்ளாட் டூ மீட் யூ அண்ணி. நீங்க அண்ணாவோட இருக்கப் போட்டோவை அப்பா அனுப்புனாங்க. நீங்க அதி அண்ணாவுக்கு ப்ர்பெக்ட் மேட்ச் " என அவளையும் கட்டிக் கொண்டவள் , அண்ணன் பிள்ளைகளைக் கேட்கவும், இங்கு நடந்த களேபரத்தில் அவர்களைச் சாப்பிட வைத்துத் தூங்க வைத்திருந்தனர்.

      " வீரு, சுபா இரண்டும் தூங்கிடுச்சுங்க. காலையில் பார்த்துக்கோ. உனக்கு நல்லா பொழுது போயிடும்" என்ற பானுமதி அவளைச் சாப்பிட அழைத்தார்.

       ரத்னதேவ், நிரஞ்சனாவிடம் தன்மகளை எஸ் எஸ்ஆர்சி அறிமுகம் செய்து வைத்தார், ஹாசினி வணக்கம் எனக் கரம் கூப்பினாள். " தீர்க்க ஆயுசோட நல்லா இருக்கனும்" என ரத்தன் வாழ்த்த, நிரஞ்சனா, " உன்னை நேரில் சந்திக்காமலே போயிட்டனேன்னு வருத்தப்பட்டேன். இனிமே எங்கயும் விடுறதா இல்லை. " என எஸ்ஆர்சிக்குத் தெரியாமல் மெல்லச் சொன்னவர், " ரதன், இத்தனை நாள் சந்திரா அண்ணா , இந்த அழகு பதுமையை நம்ம கண்ணுளையே காட்டாமல் வச்சிருந்தாங்களே, இனிமே இந்தத் தங்கச்சிலையை நம்ம வீட்டிலையே வச்சுக்குவோம். எங்கையும் அனுப்ப முடியாது " என ஹாசினியை அணைத்து உச்சி முகர்ந்து கொள்ளவும், நிரஞ்சனா மேல் அவளுக்கு ஒரு பிடிப்பு வந்தது.

      "அது தான் கடத்திட்டு வந்துட்டாரே அரக்கன் சார். வேற எங்கப் போறது" எனத் தன்னை மறந்து சொன்னவளின் கண்கள் சந்திர தேவையும் அனுசுயாவையும் தேடியது.

       " அரக்கன் ஸாரா, அது யாரு" என வியந்து கேட்ட நிரஞ்சனாவிடம், பேச்சை மாற்றும் விதமாக, " பெரிய மாமியைக் காணோம். நாங்க வந்தது அவங்களுக்குப் பிடிக்கலையா, நான் சந்திராட்ட சொன்னேன். அவன் தான் பிடிவாதமா அப்பா, அம்மா இங்க இருக்காங்கன்னு கூட்டிட்டு வந்துட்டார்" எனக் கண்களில் கலக்கத்தோடு அவள் கேட்கவும் , மூத்த பெண்கள் இருவரும் உருகித் தான் போனார்கள். அவள் கழுத்தில் கிடந்த சந்திரதேவின் செயினும், அவர்களது உடல் மொழியுமே இருவருக்குமிடையே உள்ள உறவை தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்க, இனி வரும் நாட்களைப் பற்றிய கவலை அவர்களிடமும் இருந்தது.

     " மதும்மா, இது உன்னோட வீடு. பெத்தம்மா இங்க தானே இருக்கேன். இந்த மாமிக்கு எல்லாம் உன்னைப் பிடிக்குதா, பிடிக்கலையான்னு நாம கவலைப்பட வேண்டாம். இது நம்ம வீடு. சரிதானே ரஞ்சி" எனப் பானுமதி மகளைத் தேற்றுவதற்காகக் கேட்கவும். ஆம் எனத் தலையாட்டினார் நிரஞ்சனா.

       நிருபன், ப்ரணேஷ், பிரியங்காவோடு (பவன் ப்ரீத்தி) உள்ளே வந்தான். "இதுங்க இரண்டும் எங்க போச்சு " என ஆரம்பித்தார் பானுமதி. "அத்தை, அவங்க ஆண்டியை பார்த்திட்டு வரட்டும்" என நிருபன் இடை புகுந்தான். அவர்கள் வீட்டினருக்கு ஒரு தலையசைப்போடு மேகலாவைப் பார்க்கச் சென்றனர்.

       சந்திரதேவ் இவர்கள் பேசி ஆரம்பிக்கும் போதே தன் அம்மா அனுசுயா தேவியைப் பார்க்கப் போனான். அம்மா மகனுக்கு இடையே நீண்ட நேரம் பெரிய வாக்குவாதமே நடந்தது. சந்திரதேவ் நாளைக்குப் பேசலாம் எனக் கீழே வந்துவிட்டான்.

       எஸ்ஆர்சி ஓய்வெடுக்க எப்போது செல்வார், சந்திர தேவை கேள்வி கேட்கலாம் எனக் குடும்பமே காத்திருந்தது. மேனகா இருந்த அறையையும் அடைத்து விட்டு எல்லோரும் இரவு உணவுக்குப் பின் கூடினர்.

       எஸ் ஆர்சி , முன் மாலைப் பொழுதில்( இந்திய நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாகும் ) டீவியைப் போட்டுப் பார்த்த பொழுது ,முதலமைச்சருடனான உயர்மட்ட ஆலோசனை முடிந்து, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு காவல்துறை தலைமை இயக்குநர்(டிஜிபி), விசாரணை அதிகாரி தங்கப் பாண்டியன் ஐபிஎஸ் , மற்றும் சில துறை சார்ந்த உயரதிகாரிகள் ஒன்றாக ஊடகங்களைச் சந்தித்தனர்.

      “ஹாசினி சந்திரா படுகொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர். நேரடியாகக் கொலையை நிகழ்த்திய குற்றவாளி சங்கரா ரெட்டியும் , அவரைக் கொலை செய்யத் தூண்டிய முதல் குற்றவாளி யுவராஜ் நஞ்சப்பாவும் கைது செய்யப் பட்டு, நீதிபதி முன் நிறுத்த பட்டு மேல் விசாரணைக்காகச் சிறையில் அடைக்கப் பட்டனர்.“ என டிஜிபி அறிவித்ததும் சரமாரியாகக் கேள்விகள் பறந்தன.

    “எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு, நீதிமன்றத்தில் சமர்பிப்போம்.சட்டம் தன கடமையைச் செய்யுது. கட்சி தொண்டர்கள் , பொது மக்கள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.“ எனச் செய்தியாளர் சந்திப்பை முடித்தனர்.

        சிவராஜ் நஞ்சப்பாவுக்கே சற்று முன்னர்த் தான் விஷயம் தெரியும், மாலையில் மகனோடு தொலைப்பேசியில் பேசினார். அவன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பிறகே மற்ற வேலைகளைக் கவனித்தார். ஆனால் தங்கப் பாண்டியன் மங்களூரில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இது அதிர்ச்சி தான். சிவராஜ் பேசிய பிறகு, யுவராஜை கைது செய்தவர்கள், நீதிபதி முன் நிறுத்தப் படுவதற்கு முன்பு தான் சிவராஜிற்குத் தகவல் தந்தனர். அவரது வக்கீல் குழு வந்தது, ஆனால் முதல் தகவல் அறிக்கை பக்காவாக இருந்தது, வக்கீல்களாலும் எதுவும் செய்ய இயலாத நிலை. குற்றவாளிகள் இருவரையும் வெவ்வேறு சிறைகளில் அடைத்தனர். அதன் பிறகே காவல் துறை சார்பாக ஊடகத்துக்குப் பேட்டி தந்தனர்.

     பெங்களூரு கொந்தளித்துக் கொண்டிருந்தது, சிவராஜ் வீட்டையும் , எஸ்ஆர் சி வீட்டையும் , கட்சி அலுவலகத்திலும் தொண்டர்கள் சூழ்ந்தனர். காவல்துறை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பைப் பல படுத்தினர்.

      சந்திரதேவின் கையாள் ஸ்டீபன், ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி , யுவராஜ், ரெட்டி பேசிய ஆடியோவை , திறமையாகப் பரவச் செய்தான். அது மக்களிடையே நஞ்சப்பாக்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. "கல்யாணம் பண்ண இருந்த பொண்ணையே கொல்ல ஏற்பாடு செஞ்சிருக்கானே " என மக்கள் யுவராஜை காரி உமிழ்ந்தனர்.

              எஸ்ஆர்சி குடும்பத்தை ஊடகம் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் எஸ்ஆர்சி இரண்டு நாள் முன்பே குடும்பத்தோடு வெளிநாடு சென்றது அப்போது தான் வெளியானது. கட்சியின் முக்கியமானவர்கள் மேனகாவைத் தொடர்பு கொள்ள முயன்றனர். அவர்கள் வீடு கலாட்டாவில் தொலைப்பேசிகள் அலறிக்கொண்டு இருந்தனவே ஒழிய யாரும் எடுக்கவில்லை. 

பசவய்யா இரத்தின தேவை அழைத்து விவரம் கேட்கவும், அவர் கட்சியினரை ஒரு வாங்கு வாங்கினார். எஸ்ஆர்,சிக்கு விஷயம் தெரிந்து விட்டது எனவும், தான் வீட்டிற்கு விரைந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் பிறகு கட்சி கூட்டம் அவசரமாகக் கூடியது . அனைவரும் தலைவருக்கு எதுவும் ஆகக் கூடாது, அவர் முகத்தில் எப்படி முழிப்போம் , நமக்காக வந்த சிக்கமாவை நஞ்சப்பாக்கள் கொன்றார்களே என ஆத்திரம் பொங்கியது. 

கட்சி அலுவலகத்தில், யுவராஜை கட்சியை விட்டு நீக்கியும், சிவராஜ் நஞ்ப்பாவிடம் விளக்கம் கேட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவராஜ் தனது புதிய நண்பர்களான  மத்திய கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்த முனைந்தபோது, அவர்களும் கையை விரித்தனர். வேறு வழியின்றிக் காபந்து முதலமைச்சரிடம் பேரம் பேச ஆட்களை அனுப்பினார். ஆனால் அங்கு அவருக்கு மிகப் பெரிய நெருக்கடி காத்திருந்தது. வரிசையாக ஊழல் புகார்கள், எஸ்.ஆர்.சி சிகிச்சை குளறுபடி, மேனகாவை மிரட்டியது என அத்தனையும் அடுத்தடுத்து ஆதாரங்களோடு அவர் முன் கடைப் பரப்பப் பட்டது. நஞ்சப்பா நடுங்கித்தான் போனார். 

கர்நாடக அரசியல் களம் சூடு பிடித்தது. சந்திர தேவை கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கப் பந்தங்கள் தயாராக இருந்தது. தான்வி தனது கணவரும் விசாரணை அதிகாரியுமான தங்கப் பாண்டியன் வருகைக்காகக் காத்திருந்தார். ஹாசினிக்கு தனது படுகொலை பற்றிய செய்தி தெரியவருமா, அவளது அடையாளம் அழிக்கப் பட்டத்தை அவள் எப்படி எதிர் கொள்வாள். பொறுத்திருந்தது பார்ப்போம். 



    



ஹாசினி சந்திரா - 17 பார்ட்-3

  சாந்த்தேவ் மாளிகையில் அன்று அத்தனை சந்திராக்களுமே கூடியிருந்தன. ஆனால் அத்தனை பேரும் சந்திர பிரகாஷ் சிம்ம தேவனின் விளக்கத்துக்காகக் கவலையோடும், ஒருவித பதட்டத்தோடும் காத்திருந்தனர். எப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என அறியாமல் தவிக்கும் போது , ரத்தின தேவ் தான் விசயத்தைப் பட்டெனப் போட்டு உடைத்தார்.

       " யுவராஜ் நஞ்சப்பாவை ஹாசினி கேஸ்ல அரஸ்ட் பண்ணிட்டோம்னு காவல்துறை பிரஸ்க்கு பேட்டிக் கொடுத்த நியுசை பார்த்திட்டு தான் மச்சான் மயங்கி விழுந்தார் " எனச் சந்திர தேவைப் பார்த்து ரத்தன் கோபக்கனையைத் தொடுக்கவும், சந்திரா நெற்றியைத் தேய்த்தான். சந்திரதேவ் தனக்காகத் திட்டு வாங்குவதாக நினைத்த ஹாசினி அவனுக்குப் பரிந்து ,

       " என்னை யுவராஜ் கிட்னாப் பண்ணதா நினைச்சிட்டாங்களா. ஆனால் அவனெல்லாம் ஜெயிலுக்குப் போகவேண்டியவன் தான் அங்கிள். மூணு தடவை என்னைக் கொல்ல ட்ரை பண்ணியிருக்கான். பவன் ப்ரீத்தியை வச்சுச் சந்திரா தான் என்னைக் காப்பாற்றினார்." என ஹாசினி விளக்கம் தரவும், குடும்பமே அவளைப் பாவமாகப் பார்த்தது. யாருக்குமே அவள் படுகொலை செய்யப்பட்டதாக வந்த தகவலைச் சொல்ல மனம் வரவில்லை.

      சந்திரதேவ் , ஹாசினி அருகிலிருந்ததால் அந்தப் பகுதியை மட்டும் மறைத்தவன் , தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தான். " நம்ம கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் பிஸ்னஸை யுஎஸ்லையும் விடிவுபடுத்த ஆரம்பிச்ச நேரம் ,ஒன்றறை வருஷத்துக்கு முன்னாடி நடந்தது. ,சந்திரா மாமா ஆபரேஷனுக்கு முன்னாடி, என்னை இந்தியாவுக்கு வரச்சொன்னார். மதுவோட பேர்ல இன்வெஸ்ட்மென்ட் பண்றதை டிஸ்கஸ் பண்ணனும்னு கூப்டாங்க. " எனவும் ஹாசினி ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

         "மச்சான் விவரம் தான். அவருகிட்ட இல்லாத ஆட்களா, உன்னை நோட்டம் விட்டுருப்பார்" என்றார் ரத்தன தேவ். "நானும் அப்படித்தான் கேட்டேன். அதுக்கு, மாமா சொன்னார்" என அன்று இவர்கள் இருவருக்குமிடையே நடந்த உரையாடலைச் சொன்னான்.

         " வீரா போனதே எனக்கு மனசளவுல பெரிய பாதிப்பு தான். ஹெல்த் இஸ்யூஸ்ம் இருக்கு. பானுவையும் ப்ரதி, அதியையும் உங்க அப்பா பார்த்துக்கிட்டான். அவங்க செட்டில் ஆகிட்டாங்க. நான் இருக்கிறதோ , இல்லாததோ அவங்க வாழ்க்கையில பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. " என அவர் சொல்லவும் " அத்தையும், அத்தான் இரண்டு பேரும் இன்னைக்கும் உங்களை மிஸ் பண்றாங்க. நீங்க இப்படிச் சொல்லக் கூடாது"என்றான் தேவ். அவர் சிரித்து விட்டு,

       "நான் அப்படிச் சொல்லலை மாப்பிள்ளை, பைனான்ஸியலாவோ, பிசிக்கலாவோ அவங்க என்னைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லைனு சொல்றேன். ஆனால் மேனகா, மது இரண்டு பேருக்கும் என்னைத் தவிர வேற உலகமே தெரியாது. வெளி உலகம் தெரிஞ்சுக்கட்டும்னு தான் மதுவை யூ எஸ் அனுப்பியிருக்கேன். அவளையும் செட்டில் பண்ணனும்.

         இதுக்கு என் மகனுங்களை விட்டுட்டு உன்னை ஏன் கூப்பிட்டேன்னு தோணும். " என அவர் கேள்வி எழுப்பவும், " பேஸ் ரீடிங் படிச்சிருக்கீங்களா மாமா" எனத் தேவ் வியந்தான்.

        " மாப்பிள்ளை, உன் வயசை விட என் அனுபவம் ஜாஸ்தி. எவ்வளவு ஜனங்களைச் சந்திச்சு இருப்பேன்" என விளக்கியவர்

       " நேராவே சொல்லிடுறேன் மாப்பிள்ளை, மதுவை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எனக்கு ஆசை. எனக்குப் பின்னாடி அவளுக்கு இங்க பாதுகாப்புக் கிடையாது. இப்ப செய்யப் போற சர்ஜரி பத்தி எனக்கு ஒண்ணும் நல்லதா தோணலை. ஆனால் செஞ்சு தான் ஆகனும். அது எப்படி வேணா இருந்துட்டுப் போகட்டும் அதைப் பற்றிக் கவலை இல்லை.

        நீ மதுவை சின்னவயசில பார்த்தது தானே மாப்பிள்ளை, இப்ப யு எஸ் ல இருக்கா. நீ போய்ப் பாரு. இரண்டு பேருக்கும் பிடிச்சா ஒத்துப் போகும்னா நான் உங்க வீட்டில் பேசுறேன். உங்க அப்பா இருந்திருந்தா உரிமையாவே கேட்டிருப்பேன். மதுவுக்கு எனக்குத் தெரிஞ்சு வேற அபேர்ஸ் கிடையாது." என்றவர் அவன் பார்வையில், சிரித்துக் கொண்டே ,

       "நாங்க அப்பா மகள் எல்லாமே ஓபனா பேசுவோம், இன்னும் சொல்லப் போனால், உன் மேல அவளுக்கு ஒரு க்ரஷ் இருக்கு. உங்கம்மாவுக்காகப் பயப்படுறா. நான் கோடு போடுறேன். நீ ரொடு போட்டுக்கோ " என்றவர் தொடர்ந்து,

       " அடுத்த முக்கியமான விசயம் பிஸ்னஸ் பேசுவோம், உங்க பிஸ்னஸ் யு எஸ்ல எக்ஸ்பேண்ட் பண்றீங்கன்னு கேள்வி பட்டேன். எனக்குத் தெரிஞ்ச மில்லினர் ரிச்சர்ட் வில்லியம்சன் நியுயார்க்ல இருக்கார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.ஆனால் அவங்க தாத்தா காலத்துலையே அமெரிக்காலச் செட்டில் ஆகிட்டாங்க. எனக்கு நல்லா பழக்கம்.

       நாங்க இரண்டு பேரும் உங்க ப்ராஜெக்டல இன்வெஸ்ட் பண்ண ரெடி. ஆனால் மது பேர்ல போடுறது வெளியே தெரியக்கூடாது. உன்னால சமாளிக்க முடியுமான்னு சொல்லு." என அவன் பதிலுக்காகக் காத்திருந்தார்.

      " மாமா, பொண்ணையும் கொடுத்து, பிஸ்னஸும் தரேங்கிறீங்க. பத்து வருஷம் முன்னாடி சொன்ன ஜாக்பாட் இது தானா " என இவன் கேட்கவும்,

       " கண்டுபிடிச்சிட்டியா. நம்மகிட்ட இருக்க மிகச்சிறந்த பொக்கிசத்தை, நமக்குப் பிடிச்சவங்களுக்குத் தானே தருவோம். என்னோட பொக்கிசம் என் மகள். எனக்குப் பிடிச்சவன் வீரா, நீ அவனோட மகன். அது தான் இந்த ஜாக்பாட் . நீ மதுவை இப்ப பார்க்கலையே , பார்த்திருந்த இவ்வளவு கேள்வியே கேட்க மாட்ட " என அவர் விஷமமாகச் சிரிக்கவும், " மாமா" என இவன் ஆட்சேபனை செய்யவும், மகளின் போட்டோவை காட்டினார். சந்திரதேவ் அதையே பார்த்திருந்தவன்,

    "மாமா ,. நீங்க இந்தப் படத்தைக் காட்ட வேண்டிய அவசியமே இல்லை, அவள் என் மனசில இருக்கா. ஆனால் நான் மதுவைப் பார்த்த பிறகு தான் அவளைக் கல்யாணம் செய்கிறதைப் பத்தி உறுதி தர முடியும், அவள் மனசில யும் நான் இருந்தா , இந்த உலகமே எதிர்த்தாலும் நான் அவளைக் கல்யாணம் செஞ்சுக்குவேன். ஒரு வேளை அவளுக்கு வேற நோக்கம் இருந்தால், அவள் என்னோட பொறுப்பு. நீங்க அவளைப் பத்தி கவலைப்படாமல் இருங்க. நான் அவளைப் பார்த்துக்குறேன்னு, நான் ஓகே சொல்லித் தான் ஸ்டேட்ஸ் போனேன்" எனச் சந்திரதேவ் எஸ்ஆர்சியுடனான சந்திப்பிலிருந்து தங்களது கதையை ஆரம்பித்தான்.

      " அதுனால தான் நீ அமெரிக்கன் இன்வெஸ்டர் யாருன்னு சொல்லலையா. இருந்தாலும், அப்பா எங்களை நம்பளை பாரு" என ப்ரதிபன் வருத்தப்படவும். ஆராதனா இடைப்புகுந்தாள்,

     " ப்ரதி , மாமா தன் சொத்தை காப்பாற்ற ஆள் தேடலை. மகளைப் புரொக்ட் பண்ண மருமகன் தேடியிருக்கார். அதுக்குத் தான் இந்தத் தூண்டில்" என அவள் சொல்லவும்.

      " மச்சானுக்கு, யாரை எப்படிப் பிடிக்கனும்னு தெரியும். சந்துவை பத்தி வீரா அண்ணன் நிச்சயம் புலம்பி இருப்பார். அதுனால தான் பழைய காலத்து ராஜாக்கள், மகளைக் கட்டிக் கொடுத்து நாட்டையும் கொடுப்பாங்களே , அப்படி ஆசை காட்டியிருக்கார். இவனுக்கு எல்லாமே பிஸ்னஸ் தானே" என ரத்தின தேவ் சந்துவின் குணாதிசயத்தை உடைத்துப் பேசவும்.

       " அப்ப பிஸ்னஸ் மோடிவ்ல தான் யு எஸ் க்கு ,என்னைத் தேடி வந்தியா. பெரிசா லவ் கிவ்வுனு பீலா விட்ட" என ஹாசினி தன்னை மறந்து சநாதிரதேவிடம் அனைவர் முன்னும் சண்டைக் கட்டினாள். சந்து அவளை ஆட்சேபனையாகப் பார்த்தான்.

          " என்னது லவ்வா, டேய் கேட்க ஆள் இல்லைனு எங்க தங்கச்சி வாழ்க்கையில் விளையாடுறியா, அப்படின்னா அப்பவே கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல " என அதிபன் கோபத்தைக் காட்டினான். ஹாசினி படுகொலை என நாடகமாடியதன் கோபம் இருந்தது.

       "அத்தான், ரொம்பப் பாசமலரா பொங்காதீங்க. உங்க தங்கச்சி, இந்தப் பேபிடால்க்காக எங்க அண்ணன், என்ன என்ன செஞ்சார் தெரியுமா" என நிருபன் எடுத்துச் சொல்லச் சாட்சியாக ப்ரீத்தியும் பவனும் அந்தக் கூட்டத்தில் இணைந்தனர்.

       " அதியண்ணா, நாங்க இரண்டு பேரும் ஆறுமாசமா மேடம் கூடத் தான் இருக்கோம்" என ப்ரீத்தி சந்திரதேவ் ஹாசினியை பாதுகாகக்கவே தங்களைப் பணித்ததைச் சொன்னாள். நர்ஸ் வந்து மேனகா முழித்து விட்டதாகவும், மகளை அழைப்பதாகவும் சொல்லவும், ஹாசினி அழைத்துக் கொண்டு சந்திர தேவ் மட்டும் உள்ளே சென்றான்.

      "மது" எனக் கண்ணீர் மல்கியவரிடம் சந்திரதேவ் , "அத்தை, என்னை மீறித் தான் யாரா இருந்தாலும் உங்க மகளை நெருங்க முடியும். நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா, பெரிய அரசியல்வாதிங்க பில்டப் குடுத்த அப்பாவும் மகளும் சின்னப் பிள்ளையாட்டம் அழறாங்க" எனக் கேலியோடு மேலும் இரண்டு வார்த்தை பேசியவன்.

       ஹாசினியிடம், " உணர்ச்சி வசப்படாம உங்க அம்மாட்ட செல்லம் கொஞ்சிக்கோ. ஆனால் அத்தையைப் பேச வைக்கக் கூடாது" என அவளுக்கும் உரிமையாகக் கட்டளையிட்டுச் சென்றான். அறைக் கதவைச் சாத்திவிட்டே ஹாலுக்கு வந்தான். சந்திரதேவ் இப்போது சுதந்திரமாக வீட்டினரின் கேள்விகளுக்கு விடையளிக்கத் தயாரானான்.

      " சந்துண்ணா, யூ எஸ் போனீங்களே , அந்தக் கதையைக் கன்டினியு பண்ணுங்க " என்றாள் மயூரா " ஏண்டி எங்க மகன் என்ன படமா ஓட்டுறான். கதை கேட்கிற' என நிரஞ்சனா அக்காள் மகளைத் திட்டவும்.

       " அவன் தான்,ட்ராஜிட்டியா ஒரு சஸ்பென்ஸ் நாடகத்தை நடத்திட்டு இருக்கான. இதில பாதிக்கபட்டவங்களுக்கு, நீ என்ன நியாயம் செய்யப் போற சந்து " எனச் சரியான பாயிண்டை பிடித்தான் பிரதிபன்.

    " என் மேல நம்பிக்கை இல்லையா அத்தான், நான் எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவேன். ட்ரெஸ்ட் மீ" என்றான் சந்திரதேவ்.

       " சந்து இத்தனை நாள் நீ ரிஸ்க் எடுத்து ஆடினது எல்லாம் பிஸ்னஸ்ல. அதுல லாபமோ நட்ஷடம்னாலும் பணம் தான் . இப்ப நீ என்ன செஞ்ச காரியத்தில் என்ன என்ன இழக்கப் போறமோ. " என ப்ரதிபன் கோபத்தோடு சொல்லவும்

        " அத்தான், ஆறு மாசமா ஹாசினி சந்திராவை காப்பாத்துற வேலையைத் தான் பார்த்தோம். கடைசி நாள் அன் எக்ஸ்பெக்டட். யுவராஜ் மூணு தடவை அவளைக் கொல்ல ட்ரை பண்ணான். ஒவ்வொரு தடவையும் மயிரிழையில் உயிர் தப்பிச்சா. அதனால தான், அதிரடியா மதுவோட சேஃப்டி ஆஸ்பெக்ட் யோசிச்சு, என் கஷ்டடியில் எடுத்துக்கிட்டேன். வேற யாரை நம்பியும் அவளை அங்க விட்டு வைக்க முடியலை. அந்த நேரம் அவளோட உயிரை விட எதுவுமே எனக்குப் பெரிசா தெரியலை. எது வந்தாலும் நான் ஹேண்டில் பண்ணிக்கிறேன். இனி அவள் என்னோட பொறுப்பு " என்றான் சந்திரதேவ். அதன் பின்னர் மேத்யு வில்லியம்சன் பற்றி, ஹாசினியின் நண்பன், சந்திராவுக்கும் குடும்ப நண்பர் எனச் சொன்னவன், தான் சந்தேகப்பட்டதை மறைத்து விட்டான்.

    ஹாசினி இந்தியா சென்றது. இவன் பின் தொடர்ந்தது எல்லாம் சொன்னவன், " பாம் ப்ளாஸ்ட் ஆன அன்னைக்கு மேத்யு ,மதுவை தன்கிட்ட ஒப்படைக்கனும்னும், அவள் அப்பா அம்மாவையும் அமெரிக்க வரவழைச்சு தான் பார்த்துகிறதா சொன்னான். எனக்கும் இவள் ஏன் அரசியலுக்குப் போனா, நஞ்சப்பா எதை வச்சு மிரட்டுறான்னு தெரியலை. சந்திரா மாமாவை இந்தியாவிலிருந்து வெளியேற்ற, நஞ்சப்பாவுக்குக் குழி தோண்டனும்னு முடிவு பண்ணித் தான் மதுவை மாறுவேடத்தில் கிட்னாப் பண்ணேன்" என்றவன்.

       " சுஹானா தீவில் ஏதேச்சியா , அரை மயக்கத்தில் என் பெயரைத் தான் சொன்னா. அதுவும் , என்கிட்ட வராதா சந்திரா, நீயாவது நல்லா இருன்னு புலம்பினா. அப்போ தான், என்னை மாதிரியே அவளும் என்னை நினைக்கிறான்னு தெரிஞ்சது. அதுக்கப்புறம் மேத்யூகிட்ட ஒப்படைக்கிற யோசனையை மாத்திக்கிட்டேன்" என்றான்.

      " இந்திய போலீஸ், அவ்வளவு ஏமாளி இல்லை. தங்கப்பாண்டியனை நேரில் பார்த்ததை வச்சு சொல்றேன். அவர் உன்னைத் தேடி வருவார் " என்றான் அதிபன்.

      " பாஸ் , அதெல்லாம் வந்துட்டார். நம்ம பாஸ் கண்ணுளையே விரலை விட்டு ஆட்டிட்டு தான் போனார்" என்ற பவன், அந்த விவரத்தையும் சொன்னான்.

" எல்லாம் சரி. இப்ப மதுவோட ஐடென்டிடி " என அதிபன் கேள்வி எழுப்பினான்.

    " யாரோட சம்மதம் இருந்தாலும், இல்லைனாலும். மதுரஹாசினி சந்திரா இனிமே திருமதி சுஹாசினி சந்திர சிம்ம தேவா என்கூடத் தான் இருப்பா. சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் அவள் என் மனைவியாகிட்டா. உங்க எல்லாருக்காகவும் வேணும்னா வீட்டில சிம்பிளா மேரேஜ் அரேஞ்ச் பண்ணுங்க. எல்லார் முன்னாடியும் அவள் கழுத்தில் தாலி கட்டுறேன்" எனப் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான் சந்திரதேவ்.

         " அண்ணா, ஆனா அம்மா சம்மதிக்கனுமே" என ஆராதனா கேள்வி எழுப்பவும், " அவங்க மறுத்தால், அவங்க மகன் ஜெயில்ல கலி திங்கனும் .அவங்களுக்கு எது சம்மதமோ, அது எனக்கும் சம்மதம் " என்றான்.

         " சந்து உன் அட்டகாசம் தாங்கலைடா . நீ எப்போ தான் மாறப் போற. நீ செஞ்ச எல்லாத்திலும் பெரிய விசயம் , ஹாசினியோட படுகொலை ட்ராமா. " என ரத்தின சிம்மன் புலம்பவும்.

     " அவள் இன்னும் உன்னை நம்புறா. உலகத்தைப் பொறுத்தவரை ஹாசினி சந்திரா இறந்திட்டாங்கிறதே அவளுக்குத் தெரியலையே.இதை எப்படிச் சமாளிப்ப " என அதிபன் கேள்வி எழுப்பினான்.

 " நானே சொல்லிக்கிறேன். வேற யாரும் சொல்ல வேண்டாம்" என்றவன், அதோடு விளக்கவுரை முடிந்தது என்பது போல், மேனகா இருந்த அறைக்குள் சென்றான்.

      ஹாசினி  அம்மாவின் கையைப் பிடித்தபடி அருகிலிருந்த சேரில் அமர்ந்து பெட்டில் தலை வைத்துத் தூங்கியிருந்தவளை, பார்த்தவன் , அங்கிருந்த நர்சிடம் அவசர தேவையெனில் இன்டர்காமில் காட்டி ஒன்றாம் எண் நம்பரில் அழைக்கச் சொன்னவன், அவளை எழுப்பித் தன்னுடன் வருமாறு அழைத்தான். 

        சைகையில் அவள் அம்மாவைக் காட்டவும், அவனும் சைகையில் பதில் தந்து அவளை வெளியே அழைத்துச் சென்றவன், எல்லாரும் பார்க்கவே தங்களது அறைக்குச் செல்லும் லிப்டை நோக்கிச் சென்றான்.

   ரத்தின சிம்மன், நிரஞ்சனாவைப் பார்க்கவும், மற்றவர் ஆட்சேபிக்கும் முன், "சந்து, மது என் கூடத் தங்கிக்கட்டும்" என்றார் நிரஞ்சனா. அவர்களை நோக்கித் திரும்பியவன்,

      " ஏன் சித்தி, இப்ப தானே சொன்னேன், சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் மது என்னோட மனைவி . அவள் என்கூடத் தான் இருப்பா" என்றான்.

     " அதுசரிப்பா, ஆனால் அக்கா இருக்காங்க, அண்ணேன் அண்ணிகள் இருக்காங்க " என அவர் இழுக்கும் போதே, ஹாசினி அவனிடமிருந்து விலக முயன்று. " நான் அம்மா ரூம்லையே இருந்துக்குறேன். எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை" என  சொல்லவும், அவளை முறைத்தவன், முகத்தை இன்னும் கடுமையாக வைத்துக் கொண்டு, மற்றவர்களை நோக்கி,

      " உங்கள் எல்லார் முன்னாடியும் நான் தாலி கட்டளைனா, இவள் என் மனைவி இல்லைனு ஆயிடுமா. நிரு அந்தச் சர்டிவிகேட் காட்டு" என்றான் தேவ். நிருபன் அதனைத் தேடி எடுக்கும் போதே, ரத்தன தேவ்,

           " போங்கடா, பெரிசா சர்டிபிகேட் காட்ட வர்றானுங்க. நீ உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு போ" என அவரே அண்ணன் மகனைப் பார்த்துச் சொன்னவர். " நல்லா சேனைத் தொட்டு வச்சாரு. அவர் போகாம வந்திருக்கான்" என மச்சினனையும் மகனையும் இரண்டு சந்திரர் பெயரில் இருக்கும் சூரிய ஆளுமைகளையும் ஒரு சேரத் திட்டிவிட்டு, மற்றவரை அவரவர் அறைக்குச் செல்லப் பணித்தார்.

 சந்திரதேவ் தனது மனைவியான சுஹாசினி சந்திரதேவை ,அவளது அண்ணன்கள் ,அண்ணிகள் ,தனது சித்தப்பா குடும்பம் தங்களையே பார்ப்பதை உணர்ந்து , வேண்டுமென்றே அவளை இடையோடு இறுக்கமாக அணைத்து தனது அறைக்கு அழைத்து சென்றான்.