Friday, 25 March 2022

யார் இந்த நிலவு -41

யார் இந்த நிலவு -41 

கேஆர் மில்ஸின் சேர்மன் கைலாஷ் ராஜன், பீபீ மில்ஸின் உரிமையாளர் பைரவி பாய் கைலாஷ் ராஜ் போஸ்லேவின், இருபத்திரண்டாம் ஆண்டுத் திருமணக் கொண்டாட்டம்.என்ற அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வந்ததை , கைலாஷின் உதவியாளர் சம்பத், கைலாஷ், பைரவி,இருவருக்கும் காட்டிக் கொண்டிருந்தார்.

முன்னதாகக் கைலாஷ், ஆதிரா , அபிராம் இருவரிடமும், நேற்றைய நிகழ்வில், கோவிலுக்குச் சென்றதைத் தவறு என்று சொல்லாமல், பெரியவர்களுக்கு மறைத்து,போதிய பாதுகாப்பு இல்லாமல் சென்றது, அதன் விளைவான, கடத்தல், சரியான நேரத்தில் ஆதிரா மீட்கப் பட வில்லையெனில்,அதன் பின் விளைவு, ஆகியவற்றை உத்தேசித்து, அவர்கள் இருவரும் அதனை உணர வேண்டும் என ஒருவரை ஒருவர், மூன்று நாட்களுக்குத் தனியாகச் சந்தித்துப் பேசிக் கூடாது எனக் கட்டளையிட்டார்.

அதில் மற்ற நால்வருமே அதிர்ந்து கைலாசை பார்க்க, “என்ர முடிவு இது தான், அப்பன்,மாமன் ன்னு என்னை மதிக்கிறதா இருந்தா,முடிவுக்குக் கட்டுப்படுங்க, இல்லையினா உங்க இஷ்டம்.” என முடித்து விட, ஆதிரா , “உங்களை நான் ரொம்ப மதிக்கிறேன் பாபா, நீங்களா பெர்மிசன் தர்ற வரைக்கும் நான் அவரைத் தனியா சந்திக்க முயற்சி செய்ய மாட்டேன்” என்றவள், வீட்டுக்குச் செல்வதாகப் பொதுவாகச் சொல்லி விட்டு அங்கிருந்து சட்டென வெளியேற, சத்தியனை அழைத்த கைலாஷ், மகளை வீட்டில் கொண்டு போய் இறக்கி விடச் சொன்னார்.

அபிராம், “மாமா, இதெல்லாம் ஞாயமே இல்லைங்க, அவன் கடத்திட்டு போன பிறகு, நான் இன்னும் ஆராக்கிட்ட பேசவே இல்லைங்க” என அவன் ஆட்சேபிக்க, “உன்ர இஷ்டம்” என்றவர், “சம்பத், ஒரு பத்து நிமிஷம் கழிச்சு, இன்விடேஷன் கார்டை கொண்டு வாங்க” எனப் போனில் சொல்ல, விஜயன் மகனிடம், “அது தான் உன்ர மாமன் சொல்லிட்டானுல்ல கிளம்பு” எனவும்,

“மாமா,ஒரு தரம் பேசிக்கிறேனுங்க, அப்புறம் உங்க தண்டனையை ஏத்துக்குறேனுங்க “ என அபிராம் இறைஞ்சியும் ,கைலாஷ் கண்டு கொள்ளாமல் இருக்க, பைரவி, “பேட்டாஜீ , நீங்க போய், ராஜூம்மாட்ட பேசுங்க , உங்க மாமா ஒண்ணும் சொல்லமாட்டார் “ என அனுப்பி விட,”தாங்க்ஸ் அத்தை” என்றவன், ஆதிரா கிளம்புவதற்குள் அவளைப் பிடிக்கச் சென்றான்.

அபிராம் சத்தியனுக்குப் போன் அடித்து விட்டதால், அவள் ஏறிய பின்னும் வண்டியை ஸ்டார்ட் செய்து நிறுத்தி வைத்திருந்தான். அபிராம் வருவதைப் பார்த்தவள், " பாபா, ராமோட மூணு நாள் பார்க்கக் கூடாது, பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க சத்யா அண்ணா . நீங்களே சொல்லிடுங்க" எனத் தனது பக்க கார் கண்ணாடிகளை அவள் ஏற்றி விட, அருகில் வந்தவனுக்கு இவள் சொன்னது நன்றாகவே கேட்டது.

" சத்தியா, அவளுக்கு விருப்பமில்லைனா, நானும் பேச மாட்டேன். ஒண்ணு மட்டும் கேட்டு சொல்லு, இன்னைக்கு அவிக அப்பா பேசக்கூடாதுன்னா, பேசாத இருக்கவ, நாளைக்கு என்னைக் கல்யாணம் கட்டக் கூடாதுன்னு சொன்னாக்க, அதையும் கேட்பாலாமாம். " எனத் தீ கங்கை வீசியதைப் போல், ஒரு கேள்வியைக் கேட்க, ஆதிரா துடித்துப் போனாள்.

“அபிசார், சும்மாவே அம்மணி நொந்து கிடக்குறாங்கங்க , நீங்களும் ஏனுங்க அவிகளை நோகடிக்கிறீங்க. அப்பா சொன்னதுக்கு, மகள் என்னங்க செய்வாங்க” எனச் சமாதானம் பேச, ஆதிரா, அவனுக்குக் கண்ணீரைக் காட்டக் கூடாது என வைராக்கியமாக எங்கோ வெறித்தபடி அமர்ந்திருக்க, அதைப் பொறுக்க மாட்டாதவனாக , தானே சத்தியனைக் கண்ணசைத்து வண்டியை எடுக்கச் சொன்னான், ஆதிரா அதோடு தன் அறைக்குள் சென்று முடங்க, அபிராம் தனது காரை சீறிக் கொண்டு கிளம்பி, கே ஆர் மில்லை விட்டு வெளியேறினான்.

அபிராமும், கிளம்பிச் செல்லவும், “நீ எதுக்குக் குறுக்காலா பேசுற” எனக் கைலாஷ் மனைவியை முறைக்க, " பசங்க இரண்டுக்கும் முகமே வாடிப் போச்சு, ஏன் ராஜ் இப்படிச் சொன்னீங்க" என்றார் பைரவி. விஜயனுக்கும் அதே கேள்வி தான், ஆனால் நண்பன் ஏதாவது இடக்காகப் பதில் சொல்வார் என வாயை மூடிக் கொண்டு இருந்தார்.

" பிரிவுங்கிறது, எத்தனை கொடுமையான விசயம்னு தெரிஞ்சுக்கட்டும் அம்மணி. நேத்திக்கு, எதாவது விபரீதமா நடந்திருந்தா, அதைத் தாங்கிற சக்தி அவிகள்ட கிடையாது. அவிக என்ன கைலாஷும், பாருவுமா. முந்தியுமே, இதைச் சொல்லித் தான், நான் அபியை எச்சரிச்சேன். அது தெரிஞ்சு தான் ரஜ்ஜும்மா வீட்டை விட்டு போறேன்னு வந்து நின்னா" என வேதனையோடு சொன்னவர், நண்பரை நோக்கி,

" விஜயா, உனக்கு இருக்கிறது கருவப்பிள்ளை கொத்தாட்டமா ஒத்த பையன். என்ர மகளைச் சுத்தி இத்தனை ஆபத்து இருக்குது. நேத்திக்கு ,ஒரு சந்தர்ப்பத்தில் உன்ர மகன் கைல, நான் துப்பாக்கியைக் கொடுத்துப் போட்டேன்.ஒரு மாமன் தொழில் சொல்லிக் கொடுக்கலாம், தப்புச் செய்யச் சொல்லிக் கொடுக்கக் கூடாதுல்ல, மாமனே குடுக்குறாரு, இனி நாம செஞ்சா தப்பில்லைன்னு நினைச்சு போட்டானா, அதுவே எனக்கு மனசு கிடந்தது அடிச்சுக்கிது. நீ மறுக்கா யோசிச்சிக்க, சின்ன வயசு, அபி அப்படித் தான் இருப்பான். ஆனால் நீங்க இரண்டு பேருமா உட்கார்ந்து பேசினா, அவனை வழிக்குக் கொண்டு வந்திடலாம்" என எச்சரிக்கை செய்ய, பைரவியே இவர் என்ன சொல்ல வருகிறார் என யோசித்தார்.

" ராஜா, நீ என்ன எதிர்பார்க்கிற, அபிக்கு, ஆதிரா வேண்டாம்னு முடிவெடுக்கச் சொல்றியா. அடப் போடா கிறுக்கா. உன்னளவு அந்தஸ்து இல்லைனாலும், என்ர மருமகளை, நான் நல்லாவே பார்த்துக்குவேன். சொத்துக்காகத் தானடா நம்மூட்டு பொண்ணு பின்னாடி அலையிறாங்க, சொத்தே வேண்டாம். என்ர மருமகளை மட்டும் அனுப்பி வை. என்ர குடும்பமே சேர்ந்து ராணியாட்டமா பார்த்துக்குவோம்" என அன்று கைலாஷ் பாருவிடம் சொன்ன அதே வரிகளை, இன்று அபி சார்பாக விஜயன் சொல்ல, பைரவி, கணவரை ஒரு பார்வை பார்த்து விட்டு ,

“எங்க மகள் தான் உங்க வீட்டு மருமகள் பாய்ஸாப் , இதை யாரலையும் மாத்த முடியாது. எனக்கு வயசு காலத்தில் கிடைக்காத பாக்கியம் அவளுக்காவது கிடைக்கட்டும். அதுக்கு என்ன செய்யனுமோ. நாங்க செய்வோம்" என வாக்குத் தந்தார் .

கைலாஷ், " என்ர மகளுக்கு, உன்ர மகனே மாப்பிள்ளையா வந்தானாக்கும் , என்னை விடச் சந்தோஷ படுறவன் யாருடா. ஒன்னு என்ர ரத்தம்னா, இன்னொன்னு என்ர வளர்ப்பு. அதையும் மீறி இந்த வார்த்தையைச் சொல்லனும்னா, எனக்கு எவ்வளவு வேதனை இருக்கும்” என வருத்தப் பட்டார்.

“எனக்கும் புரியாது ராஜா, உன்னை விட உன்ர மருமகன், ஆதிராவை தான் கட்டுவேன்னு பத்து பங்கு தீவிரமா இருக்கான், நீ வேண்டாம்னா, போஸ்லே செஞ்ச வேலையை அவன் செய்வான், அப்புறம் நீயாச்சு,, உன்ர மருமகனாச்சு “ என விஜன் பதிலளிக்கவும்,

“ஏது, நீயே பிளான் போட்டு தருவியாட்டத்துக்கு “ என்றவர்,” அப்பனும் மகனுமே , கொஞ்சம் பொறுங்க, அவிக வாழ்க்கையைப் பிரச்சினை இல்லாதா செட்டில் பண்ண வேண்டியது என்ர பொறுப்பு” என மேலும் சில விசயங்களைக் கலந்து ஆலோசித்து விட்டு, " உன்ர மகனைப் போய்ப் பாரு, மாமனாட்டமே எதாவது கிறுக்குத்தனம் பண்ணுவான்" என ராஜன், தன்னைப் போலவே அபி எனக் கிண்டல் செய்ய, " தெரிஞ்சா சரி தான்" என்று விட்டுச் சென்றார் விஜயன்.

பைரவி மஹந்தை பற்றிக் கேட்டார். கைலாஷ் புன்னகையே பதிலாகத் தர, " ராஜ் சொல்லுங்க." என வற்புறுத்தியவரை, " உங்க பொறந்த வூட்டு வாரிசுக்கு என்ன மரியாதை செய்யணுமோ, செஞ்சு தான் வச்சுருக்கேனுங்க அம்மணி, ரொம்ப உருகாதீங்க” என வினயமாகப் பேசியவரிடம், “ராஜ், புதுசா பிரச்சனையை இழுத்துக்க வேணாமேன்னு தான் கேக்குறேன், இப்ப தான பாயிஸாப் கிட்ட, பிரச்சினையை முடிச்சு, மகளைத் தரோம்னு வாக்கு கொடுத்திருக்கோம்” எனப் பைரவி வாதாடினார்.

“ வாக்கு நீ தான் அம்மணி கொடுத்த நானில்லை” என்ற கைலாசை , பாரு முறைக்க, “இந்த லுக் நல்லா இல்லை அம்மணி, நேத்து என்ர மகள் சொல்லிப் போட்டுப் போனாலே, அப்படி ரொமான்டிக்கா பார், வெட்டிங் கார்ட் செலக்ட் பண்ணனுமுல்ல “ என அவர் பேச்சை மாற்றவும்,

“போயா , கிழவா. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லல, நீயே செலக்ட் பண்ணிக்கோ” எனப் பாரு முகம் திருப்பவும், அதிர்ச்சியாய் பார்த்த ராஜன், “ஏனுங்க அம்மணி, ஒரு ராஜ வம்சத்து வாரிசு, ராஜகுமாரி பேசுற பேச்சா இது, நல்ல வேளை , சம்பத் கதவை தட்டிட்டு தான் வருவாப்ல, என்ர இமேஜ் டேமேஜ் பண்ற, எந்த ஆங்கில் ல, நான் கிழவனாட்டமா தெரியுறேன் சொல்லு “ என மனைவி அமர்ந்திருந்த சுழல் நாற்காலியைத் தன்னை நோக்கித் திருப்பிக் கொண்டு , அவர் பொங்கவும்.

பைரவி, புன்சிரிப்போடு, “ ஒரு வார்த்தை கிழவன்னு சொன்னதுக்கு, இவ்வளவு பொங்குறீங்கனா அது தான் அர்த்தம். மறுபடி ஷாதி நடக்கப் போகுது, பருவைச் சந்தோசமா வச்சுக்க முடியுமோ, இல்லயோன்னு உங்களுக்குச் சந்தேகம் “ எனக் கண்கள் நகைக்கச் சொன்ன மனைவியைப் பார்த்து ராஜன் டென்ஷனாகி விட்டார்.

“வேண்டாம் அம்மணி, சிங்கத்தைச் சீண்டாத, நீயே ஹார்ட் பேஷண்ட் , மீதி இருக்கிற காலத்திலையாவது பொண்டாட்டி கூட , ஜாலியா பேசியதாவது பொழுதை போக்கலாம்னு, என்ர மகனும், பேரனும் ஒரே கிளாஸ்ல படிக்கக் கூடாதேன்னு மனசை , கண்ட்ரோல வச்சு கிட்டு இருக்கேன் அம்மணி, சிங்கத்தைச் சீண்டாதே “ எனத் தீவிரமாகப் பதில் சொல்ல, 

குலுங்கிச் சிரித்த பைரவி, “ அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்” என்றவர், அடுத்த வார்த்தைக்குச் சட்டெனச் சிரிப்பை நிறுத்தி, 

“அதுக்குச் சான்ஸே இல்லை , பிள்ளைகள் பிறந்தது மட்டுமில்லை, என் கர்ப்பப்பை எடுத்ததும் எனக்கு நினைவே இல்லை. அப்பவே எடுத்திட்டாங்க ராஜ். அதுனால தான் ஆயி, இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்ற அவ்வளவு மெனக்கெட்டு இருந்திருக்காங்க “ என்றவரை, எழுந்து நின்று நெஞ்சோடு அனைத்துக் கொண்டார் கைலாஷ்.

“ பாரு, எத்தனை துன்பம் தான் அனுபவிச்சிருக்க” என்றவரின் விழிகள் கலங்கியிருக்க, “விடுங்க பாபா, அது தான் மில்கா, முல்கின்னு ஆயி பவானி கொடுத்திருக்காளே, அதுகளை நல்லபடியா காப்பாற்றினா போதும்” என்றவர்,

கணவரை விலக்கி நிறுத்தி, “இப்படி வந்து கட்டிக்க வேண்டியது, அப்புறம் குங்குமம் கறை ஓட்டிடுச்சுன்னு புலம்ப வேண்டியது “ எனப் பாரு நொடிகவும், “ஓ எஸ்” எனத் தன்னை ஆராய்ந்தவர், சேர்மன் கெத்தா இருக்கனுமில்லை அம்மணி” என்றவர், மற்றொரு புதுச் சட்டையை மாற்றி விட்டே அமர்ந்தார்.

“ மஹந்த் போஸ்லேயை மரியாதையா தான் சிறை வச்சிருக்கேன், உன்ர மகனும், ஆயியும் வரட்டும், அப்புறம் முடிவெடுத்துக்குவோம்" என்று விட்டு, சம்பத்தை உள் வரச்சொல்லி அனுமதி தர, அதற்குள் பைரவி, அவர் இருக்கையில் அவரை அமர்த்தி விட்டு, தான் எதிர்புறம் வந்தமர்ந்தார்.

உதவியாளர் சம்பத் காட்டிய அழைப்பிதழ்களில் இரண்டு தேர்ந்தெடுத்தவர், " இதில் யார் யாருக்குன்னு, லிஸ்ட் எடுத்து இன்னைக்கே அனுப்பிடுங்க. நேரா கொடுக்க வேண்டியவிகளுக்கு, நம்ம கம்பெனி ஸ்டாப்பை அனுப்பி விடுங்க. நான் போன்ல பேசிக்கிறேன்" என்றார்.

கைலாஷ், இந்த விழாவிற்கு, இந்தியாவின் மில் ஓனர்கள் , முக்கியப் புள்ளிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தங்கள் மில்ஸில் வேலை செய்யும் தொழிலாளர்கள், உறவினர்கள் என எல்லாருக்கும் அழைப்பு விடுத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஆனந்த் , முகுந்த் போஸ்லேகளுக்கும் , பவானி பாய்க்கும் கைலாஷ் , பைரவி இருவருமாகப் போனில் அழைத்து, பேசினர். நிர்வாகிகள் மூலமாக அழைப்பிதழை அனுப்பி வைத்தார்.

ஜெயந்துக்கு, சோலாப்பூர் மாளிகைக்கு அழைத்துக் கைலாஷ்- பாரு இருவருமாகப் பேச, பவானி, தங்கைக்கு வாழ்த்துக்களைச் சொல்லி, தன கணவர் ஒரு விபத்தின் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு இருப்பதால், வர இயலாது எனத் தெரிவித்தார்.

ஜெயந்த் கெய்க்வாட் போஸ்லே , ஆக்சிடெணட் ஆகி சில காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்க, வலி தாங்காமல் கத்திக் கொண்டிருந்தவருக்கு உடல் முழுவதும் , ஏதோ ஒரு ஆயிண்மெண்ட் தடவியதில் , அது உபத்திரவமாகி, உடை கூட உடுக்க இயலாமல் ஐசியூவில் , அரையாடையாகக் கிடந்தார்.

அதையறிந்த பைரவி 'அவன் செஞ்ச கொடுமைக்கு, இந்தத் தண்டனை சரிதான்.' என நினைத்தவர், கணவரின் மர்மப் புன்னகையில் இது அவரது கைங்கரியம் எனப் புரிந்து கொண்டு வினையமாகப் பார்த்து, " இது உங்க வேலை தான" என வினவ, " இல்லைமா, துல்ஜா பவானி கொடுத்த தண்டனை" என்றார். பைரவி, ஜெயந்த் செய்த கொடுமையை ராஜ் அறிவாரோ, எப்படி' எனக் குழம்பிப் போனார்.

ஆனந்த், முகுந்த் போஸ்லேக்களிடம், மஹந்த் இங்கு வந்ததாகவே காண்பிக்காமல் பேசி முடிக்க, அவர்களும் தங்கள் மகனைப் பற்றி விசாரித்தார்கள் இல்லை. தங்கை திரும்பி வந்ததில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்கள், கட்டாயம் விழாவிற்கு வருவதாக ஒப்புக் கொண்டனர்.

நேற்றிலிருந்து மஹந்த்தின் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவனும் , தன இஷ்டப்படி வேலை செய்பவன் ஆதலால் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை, இதுவரை பைரவி மகளை எதுவும் செய்யவில்லை,இல்லையெனில் அவர்கள் விழாவுக்கு அழைக்க மாட்டார்களே என நினைத்தனர்.

ரமாபாய் தடபுடலாகக் கிளம்பிக் கொண்டிருப்பதை அறிந்தவர்கள், தாங்களும் அழைக்கப் பட்ட விழாவுக்குச் சென்று, பீபீ மில்ஸ் விவகாரத்தில் ரமாபாயின் தலையீட்டை , பைரவி-கைலாஷ் உடன் பேசி முடிவுக்குக் கொண்டு வர நினைத்தனர், 

அதிகப் பட்சம்,இவர்களுடைய டிமாண்ட் ஜெயந்தாகத் தான் இருக்கும்,தற்போது அவர் இருக்கும் நிலையில் படுக்கையை விட்டு எழுவதே சிரமம், அதனால் அவரை ஓரம் கட்டி, சிறிய தங்கையோடு கரம் கோர்க்கலாம் என நினைத்தனர். 

ஏனெனில் ஜெயந்தின் மகள்கள் பெயரில் இருக்கும் பங்குகள், இவர்கள் வீட்டு வாரிசுக்குகளுக்கு என ஏற்பாடு செய்திருந்தனர். போஸ்லேக்களுக்கு, மகன் நிலை தெரிய வரும் போது , அவர்களுடைய எதிர்வினை எப்படி இருக்குமென்று தெரியாது, தற்போது வரை இவர்கள் உறவு பைரவியோடு சுமூகமாகவே இருந்தது.

கைலாஷ், பாரு இருவருமாக , அழைக்க வேண்டியவர்களுக்கு அழைத்துப் பேசிவிட்டு, மதிய உணவுக்கு வீட்டுக்கு வர, அங்கே பெரியவர்கள் இவர்களை வைத்து ஒரு பஞ்சாயம் கூட்டி, அபிராம், ஆதிராவுக்காக ஞாயம் கேட்டனர்.

காலையில் கைலாஷ், பெரியவர்களிடம் சுருக்கமாக ஆதிரா கடத்தப் பட்டு மீட்கப் பட்டத்தைச் சொல்லியிருந்தார். பைரவியோடு, ஆதிரா அலுவலகம் சென்றதையே சௌந்தரி, நாயகம் கேள்வி எழுப்ப, உங்க மகன் தான் வரச்சொன்னார் என அழைத்துச் சென்றிருந்தார் பைரவி.

பேத்தி மட்டும் திரும்ப வந்து , அறைக்குள் அடையவும், கௌரியை விட்டு அழைத்து வரச் சொன்னவர்கள் , இப்பொழுது தான், பேசி, பேசி கரைத்து, தங்களோடு அமர்த்தி அவள் கவனத்தைத் திசை திருப்பி இருந்தனர்.

ஆதிரா குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்க, " நான் என் முடிவைச் சொல்லிட்டேன். கேட்கிறதும், கேட்காததும் அவிக இஷ்டம்" என்றுவிட, பாலநாயகம் மகனை கடிந்தார்.

" ஏன் கண்ணு, வீட்டில விசேசத்தை வச்சுக்கிட்டு உன்ர மகள் இப்படி முகத்தைத் தூக்கி வச்சிட்டு இருந்தா, நல்லவா இருக்கும்" எனச் சௌந்தரி வக்காலத்து வாங்கவும்,

மகளை ஏறிட்டுப் பார்த்தவர், " என்ர மகளுக்குச் சந்தோஷமில்லையினா, எங்களுக்குக் கல்யாணமும் வேண்டாம். மீட்டிங் போட்டு, அனோன்ஸ்மெண்ட் மட்டும் செஞ்சுக்குறோம்" எனப் பிடிவாதம் பிடிக்க,

" ஆத்தா, மூணு நாள் தான பாபா சொல்லியிருக்காங்க, என் ஆயி,பாபா அனுபவிச்சதை பார்க்கையில், இது ஒண்ணுமே இல்லை. பாபா, நான் செஞ்ச தப்பை நான் ரியலைஸ் பண்ணத் தான் இதைச் சொல்லிருக்காங்க. பெத்தவங்க சொன்ன,பசங்க கேட்டுக்கணும், நான் முழு மனசோட ஒத்துக்கிறேன்." என்றவள், ஆயியையம்,கௌரியும் பார்த்து ,ஓர் நமட்டுச்சிரிப்பையும் உதிர்க்க அதற்கான அர்த்தம் ரமாபாய் வந்த பிறகு தான் புரிந்தது. பைரவி மட்டும், "உன் பாபா அதெல்லாம் ஒத்துக்க மாட்டார் " என்று மட்டும் சொல்லி வைத்தார்.

அன்று மாலையில் , விஜயன் வீட்டிலிருந்து அபிராமை தவிர, மற்ற எல்லாருமே அபியின் சார்பில் வந்து, ராஜனோடு மல்லு கட்டினர்.

“ஏனுங்க மாப்பிள்ளை ,என்ர பேரன் சினிமா ஹீரோ கணக்கா, சண்டையெல்லாம் போட்டு, உங்க மகளைக் காப்பாத்தியிருக்கான் , அவனைப் பாராட்டத்தை வுட்டுப் போட்டு, மூணு நாள் மகளோட பேசாதேன்னு தண்டிக்கிறது , எந்த விதத்தில ஞாயமுங்க”என ராமசாமியே கேட்கவும்,

“நான் , என்ற மகனை ஏதாவது சொன்ன, என்னைப் பேசிவிங்கல்ல , இவன் இப்படித்தான் எதையாவது செய்வான், நீயே கேளு” என்றார் பாலா.

“ஏனுங்க மாமா, உங்க பேரன், என்ர மகளை மலைக்குக் கூட்டிட்டு போகலையின்னா , கடத்தல் நடந்துருக்காதில்லீங்க “ என ராஜன் பதில் பேச, பேச்சு அப்படியே வளர்ந்தது.

ஆதிராவை , உட்கார வைத்து,மகளிரணி தனித் தர்பார் நடத்திக் கொண்டிருக்க, ரஞ்சனி, அண்ணன் , அண்ணிக்கு நடுவில் ,கைலாஷ் தண்டனைக்குப் பங்கம் வராமல் பேச வைக்க முயல,ஆதிரா ஒரேதாக மறுத்து விட்டாள். 

கஸ்தூரி, மருமகளிடம் நடந்ததைக் கேட்டவர், “ஏன் , என்ர வார்த்தை மேல நம்பிக்கை வச்சு தான் மலைக்குப் போனியா, இவ்வளவு ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, நானே உன்ர மாமாவை கூட்டிட்டு போயி, உன்ர வேண்டுதலை நிறைவேத்தி இருப்பனில்ல கண்ணு ” என உருகினார்.

அன்று ஒருநாள் , ஆதரஷ் ஐம்பது கார்களோடு அதிரடியாய் வந்து , ஒற்றை ஆளாய் இறங்கியது போல், இன்று அதில் பாதி எண்ணிக்கை உள்ள கார்கள் , அதே போல் கேஆர் மில்லின் வாசலை முற்றுகையிட, காவலர்கள் அலறிக் கொண்டு கைலாஷுக்கு போன் அடித்தனர்.

பரபரப்பாக இரண்டு ஆட்கள் நேரில் சொல்ல, இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து, மூச்சு வாங்கச் செய்தி சொல்ல வந்தனர்.

செனாய் வாசித்து, டோல் அடித்து, நடனமாடியபடி வாசலில் ஒரு கூட்டம் வந்து இறங்கி உள்ளதாகத் தகவல்கள் வந்த வண்ணம் இருக்க, “அது யாரு கண்ணு, இத்தனை அலும்பல வர்றது “ என எல்லோருமே ஓர் எதிர்பார்ப்போடு காத்திருக்க,

பைரவி போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதை மாமியாரிடம் அவர் சொல்ல, சௌந்தரி, “மாப்பிள்ளை வீடுகாரவிக வருவாங்க. பொண்ணு வீட்டுகாரவிக்க வரவேற்கோணும், இங்க எல்லாமே தலைகீழ் தான் “ என வீம்பு பேசியவர், வீட்டு வேலையாட்களை வேலை ஏவி, எதிர் சேவைக்குத் தயாரானார்.

வரும் போதே, சம்மந்தியம்மாளிடம் வம்பிழுத்துக் கொண்டே ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்தார் ராஜமாதா ரமாபாய் போஸ்லே.

கைலாஷ்-பாரு திருமணக் கொண்டாட்டம் ஆரம்பம்.

Wednesday, 23 March 2022

யார் இந்த நிலவு- 40

யார் இந்த நிலவு- 40  

கே ஆர் மில்ஸின் சேர்மன் அறை , கைலாஷ் ராஜன் தனது சேரில் முகத்தைக் கடும் கோபமாக வைத்துக் கொண்டு, பொறுமையை இழுத்து பிடித்து அமர்ந்திருக்க, எதிரே மேஜைக்கு மறு புறம் அமர்ந்திருந்த விஜயன், இருவருக்கும் நடுவில் மேஜையின் பக்கவாட்டில் , கையைக் கட்டி,நெற்றியில் ஒரு பிளாஸ்டரோடு, முகம் அதைத்தது போலிருக்கத் தலை குனிந்து நின்ற அபிராமை , கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார்.

“ஏன்ரா , உனக்கு அறிவு இருக்குதா இல்லையா, நேத்திக்கு நீ செஞ்ச காரியத்துக்கு, உன்னையெல்லாம் என்னத்தைச் சொல்றது. தொழில் நடத்திட்டா போதுமா, அதில உன்ர மாமன் கை தூக்கி விட்டான், ஜெயிச்சுகிட்டே வந்துட்ட, உடனே நாம எடுக்கிற முடிவெல்லாம் சரின்னு, தலைக்கனம் வந்திரிச்சாக்கும். “ என என ஆரம்பித்த விஜயன் மகனுக்குப் பதில் சொல்லவும் வாய்ப்புத் தராமல் ஆந்திராவை கூட்டிச் சென்று ஆபத்தில் சிக்க வைத்ததுக்காகப் பேசிக் கொண்டே போக.

“அது தான், எதுவும் ஆகலைலிங்க , ஆரா சேஃப் தானுங்களே “ என அவன் ஒரு வார்த்தை சொல்லவும், மேலும் கோபமானவர், “என்ரா சேஃப் சரியான நேரத்துக்குப் போகலையினா, அவன் தாலியைக் கட்டியிருப்பான். அப்பறம் என்ன செஞ்சிருப்ப” எனக் கோபத்தில் உறுமினார் விஜயன்.

“அப்பா, இதுக்கு முன்னே மூணு தரம், இதேமாதிரி கூட்டிட்டு போயிட்டு தான் வந்திருக்கேனுங்க, நான் கட்டிக்கப் போற பொண்ணு, முதல்முதல்ல ஒன்னு என்ரகிட்ட கேட்டு, நாணு எப்படிங்க மாட்டேன்னு சொல்றது.

அதுவும் அத்தை ஐசியூல இருக்கையிலே, நம்ம அம்மா தான் மருத மலை முருகனை வேண்டிக்கச் சொன்னாங்கலாமாம், இவளும் வேண்டிகிட்டாலாமுங்க, அதே நேரம் மில்லுல வேலை பார்க்கிற பொண்ணுங்க, மலைக்குப் போயிட்டு வந்து விபூதி குடுத்துச்சுங்கலாம் , அதைப் பூசிவிடங்காட்டி தான் அத்தை பிழைச்சாங்கன்னு ஆரா நம்புறாளுங்க.

ஆயிக்காக வேண்டிகிட்டேன், என்னை முருகன் கோவிலுக்குக் கூட்டிட்டு போன்னு, கேட்குறா, நான் எப்படி மறுக்க முடியுங்க.” என்றவன்

”ஏனுங்க மாமா, அத்தை உங்க கிட்ட, இதுமாதிரி கேட்டிருந்தாங்கன்னா மாட்டேன்னு சொல்லிப் போடுவீங்களாக்கும். மலையவே தூக்கிட்டு வந்து இருக்கமாட்டிங்க . நீங்க செஞ்சா அது ஹீரோயிசம், நான் செஞ்சா சின்னப் புள்ளை தனமாகும்” என அப்பாவிடம் ஆரம்பித்து, மாமனிடம் அபிராம் பேச்சை முடிக்க, அப்போதும் இருவரும் கோபம் குறையாமல் தான் இருந்தனர்.

வழக்கமாக, விஜயன் தான் மகனைக் கண்டிப்பார், ராஜன் அப்போதும் மருமகனைத் தான் சப்போர்ட் செய்வார். இன்று இருவரும் அவனை ரவுண்டு கட்ட காரணம் நேற்றைய சம்பவம் தான்.

ராஜன் கௌரியிடம், வீட்டில் பைரவியும், பெரியவர்களும் தூங்கி விட்டார்களா என உறுதிப் படுத்திக் கொண்டவர், சத்தம் செய்யாமல் மகளை அவளது அறையில் கொண்டு வந்து படுக்க வைத்தார். மணப்பெண் கோலத்திலிருந்த மகளைக் காணவும், இதே போல் சிங்காரிக்கப் பட்டிருந்த பைரவியின் நினைவு தான் வந்தது. வாஞ்சையாக அவளது தலையைத் தடவியவர் , கண்கள் கலங்க , “மாஸிமா , ரஜ்ஜும்மா ட்ரெஸசை மாத்தி விட்டுடுங்க, நான் வந்துடுறேன்” எனப் போனை எடுத்து அபிராமையும், பாதுகாவலர்களையும் அழைத்துக் கட்டளைகள் இட்டார்.

அங்கங்கே காயங்களுடனிருந்த அபிராமையும் வீட்டுக்கு அனுப்பாமல்,தனது கெஸ்ட் ஹஸுக்கே அழைத்துக் கொண்டவர், மருத்துவரை வைத்து அவனையும் பரிசோதித்து, " பேசாத படுத்து தூங்கு" என அவர் கிளம்ப

, " சாரிங்க மாமா, ஆரா " என ஆரம்பித்தான். " தூங்கிட்டு இருக்கா, எதுவா இருந்தாலும், காலையில பேசிக்கலாம். படுத்துத் தூங்கு" என வீட்டுக்கு வந்தவர், மகளின் அறையை எட்டிப் பார்க்க, கௌரி அவளை உடை மாற்றி இரவு உடையோடு படுக்க வைத்திருந்தார்.

" மாஸிமா, ரஜ்ஜும்மாவுக்குத் துணைக்கு, இங்கையே படுத்துக்குங்க" என்று சொன்னவரின் முகம் தெளிவடையாமல் இருப்பதைப் பார்த்த கௌரி,

" இந்தச் சோட்டே போஸ்லே சாப் கூட அவ்வளவு டேஞ்சரில்லைங்க சாப். ஜெயந்த் மஹராஜ் தான், தீதியையும் ஆதிரா முலேவையும் தீர்த்துக் கட்டவே முயற்சி பண்ணுவார். அவரைத் தான் ஓரங்கட்டிடிங்களே இனிமே ஒண்ணும் பிரச்சனை இருக்காது" என ஆறுதல் சொல்ல,

தலையை ஆட்டியவர், " இத்தனை வருஷம், இந்த டென்சலையே பாருவுக்கு முடியாத போயிடிச்சாட்டத்துக்கு” என வருந்தவும், “ இவ்வளவு பெரிய விஷயம் நடந்தும் ,இன்றைக்குத் தீதி நிம்மதியா தூங்குகிறதுக்கு நீங்க தான் காரணம்” என்றார் கௌரி .

கைலாஷ், தன் அறைக்கு வந்து மனைவியின் உறக்கத்தைக் கலைக்காமல், வெகு நேரம் பார்த்திருந்தவருக்கு, ஏதேதோ எண்ணங்கள் வலம் வந்தது. “பாரு என்ற கிட்ட வந்திருந்தாலும், நான் அவளைக் காப்பாத்தியிருப்பேனா” என மீண்டும்,மீண்டும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டவருக்கு, இன்று ஆதிராவை , மஹந் தூக்கியது தாங்க இயலாத துக்கத்தைத் தான் தந்தது. மண்டை சூடேறுவது போலிருக்கவும், குளியலறை சென்றவர், வெகு நேரம் ஷவருக்கு அடியில் நின்றார். மீண்டும், ஆதிராவும்,பாருவும், மாற்றி,மாற்றிக் கண் முன் வந்து செல்ல, தேவையில்லாத பல விஷயங்களைப் பற்றி மனம் யோசித்தது.

உறக்கம் கலைந்த பைரவி, அறைக்குள் கணவர் வந்த சுவடுகள், அவருடைய மொபில்,வாட்ச், வாலட் ஆகியவை உணர்த்த,குளியலறை சென்றிருப்பார்

படுத்தே இருந்தார், இப்போது எழுந்தாலும்,அவரிடம் யார் வாங்கிக்கட்டுவது, அவர் வந்து படுத்த பிறகு, அவர் மார்பில் தலை சாய்த்துக் கொள்ளலாம், அதில் தான் எத்தனை சுகம் என எண்ணியவர், சுயம் தெளிந்தவுடன் கணவரைத் தேடி வராததை எண்ணி , தான் இழந்த சுகத்துக்காக ஏங்கினார்.

“எவ்வளவு தான் சோதனை வரட்டுமே,கொண்டவன் துணையும், சாய்ந்து கொள்ளத் தோள்களும் ,கண்ணீர் விடும் போது துடைக்கின்ற கரமிருந்தால் போதும் என , ராஜனுக்கு எதிர்ப்பதமாக யோசித்தார். அவர் யோசனையிலேயே அரை மணி கழிந்திருக்க, திடுக்கிட்டு மணியைப் பார்த்தவருக்கு, “ராஜ்க்கு முடியலையோ , அப்பவே என் மனசு சரியில்லாமல் இருந்ததே, ஆயி பவானி, எந்தச் சோதனையையும் கொடுத்திடாதே” எனக் கணவரின் நலத்தை வேண்டியபடி, குளியலறை கதவைத் தட்டி, “ராஜ் “எனப் பதட்டமாக அழைத்தார்.

கதவு தட்டும் ஓசையில் நடப்புக்கு வந்தவர், “இதோ வரேன்மா” எனக் குரல் கொடுத்தபடி, “ரெஸ்ட் ரூம் போகணுமோ என்னமோ” எனத் துண்டை அவசரமாக இடையில் கட்டிக் கொண்டு, உடலிலும்,தலையிலும் நீர் வழியக் கதவைத் திறந்தவர், " ஸாரி, ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா பாரு, நீ போயிட்டு வா" என இவர் வெளியே வர, இடுப்பில் ஒரு துவாலையைக் கட்டிக் கொண்டு, சொட்டச் சொட்ட நனைந்த தலைமுடியோடு வெளியே வந்த அவரது கோலம் ஒரு நிமிடம் பைரவிக்கு மூச்சடைத்து வெட்கத்தைத் தர, அவர் பேசியதில் இயல்புக்கு திரும்பி,

கணவரை முறைத்தவர் " நடுராத்திரியில் எதுக்கு இப்படித் தலையில ஊத்தியிருக்கீங்க" எனக் கடிந்தவர் அவர் கையிலிருந்த துவாலையை வாங்கி, அவரை நடத்திக் கொண்டு வந்து ஷோபாவில் அமர்த்தி, அவர் தலையைத் துவட்டியபடி, கேள்விகளாய் எழுப்ப, மனைவி தனக்கு முன்னிருந்த துவட்டுவதும் கருத்தில் படியாமல் பார்வை எங்கோ நிலைக் குத்தியிருந்தது.

அந்தத் தூவாலை ஈரமாகி விட்டதால், அவர் முதுகில் துளிர்த்திருந்த நீர் திவலைகளைத் தன் சேலை தலைப்பால் துடைத்து விட்டவர், இத்தனை கேள்விக்கும், தான் இவ்வளவு நெருங்கி நின்றும் , கமெண்ட் எதுவும் அடிக்காமல் அமைதியாக இருக்கும் கணவரின் செயலில் வித்தியாசத்தை உணர்ந்து, "ராஜ், என்ன ஆச்சு உங்களுக்கு. " என அவர் முகத்தைத் தன்னை நோக்கி உயர்த்த ,

பாருவின் முகத்தையே பார்த்திருந்தவர், " எப்படிப் பாரு, அத்தனையும் ஒத்தையில சமாளிச்ச" என்றவரின் கேள்வியில், கலவரமான பைரவி, " என்னாச்சு ராஜ், டின்னருக்குத் தான போனீங்க, ரஜ்ஜும்மா, ரஜ்ஜும்மாவுக்கு ஒண்ணும் இல்லையே. எங்க அவள்" என அவர் கண்களில் ஊடுருவி கேள்வி கனையைத் தொடுக்கவும்.

" ஒண்ணும் இல்லை. நான் சரியான நேரத்துக்குப் போயிட்டேன். அவள் ரூம்பில படுத்திருக்கா" எனப் பதில் தந்தவர், பாருவை இரு கைகளாலும் வளைத்து , தன் முகத்தை அவர் வயிற்றில் பதித்து அவர் முகத்தையே நோக்கியிருந்தவர் " உன்னைப் பார்த்த, அதே நிலமையில என்ர மகளையும் பார்த்திட்டேன்மா. நாசமா போற சொத்துக்காக,உங்க ஆளுங்க என்ன வேணாலும் செய்வாங்களா" என அவர் புலம்பவும்,

" ரஜ்ஜும்மாவையா , கட்டாயக் கல்யாணமா, யாரு" எனப் புரியாமல் வினவ, மஹந்தைப் பற்றிச் சொன்னார். பெரு மூச்செறிந்த பாரு, "ஒருத்தன் பல்லை பிடிங்கியாச்சேன்னு நிம்மதியா இருந்தேன், இது ஒரு புதுத் தொல்லையா." எனச் சலிப்பாகக் கேட்டவர்,

" அதுக்கு, ரஜ்ஜும்மாவோட பாபா வந்து, இப்படி ஷவர்ல நின்னா சரியா போயிடுமா. நீங்க அவளை விடக் குழந்தை தான்" என்றவர், அவர் முகத்தையும் தன் சேலை தலைப்பால் துடைத்து விட்டு," நடுராத்திரி, ஏசி 16 ஓடுது. தண்ணியை ஊத்திட்டு வந்து வெறும் உடம்போட உட்கார்ந்து இருக்கீங்க. இன்னும் இளமை திரும்புதோ" எனக் கடிந்து கொண்டவர், அவரை விடுத்து, வார்டு ரோபிலிருந்து, ஒரு வேஷ்டி, டீ சர்டை கொண்டு வந்து, " இதை மாத்துங்க, அப்புறம் ஃபீல் பண்ணலாம்" என அதட்டவும்,

" ஏனுங்க அம்மணி , நான் எவ்வளவு சீரியஸா ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். நீ என்னமோ, இது ரொம்பச் சாதாரண விசயமாட்டம் பேசுற" எனச் சினந்தார்.

“எனக்குப் பழகிடுச்சு ராஜ்,உங்களுக்கு இது தான முதல் தடவை,அது தான் இவ்வளவு எமோஷனல் ஆகிறீங்க. ஷவருக்குக் கீழ நின்னா மட்டும் போதாது, என்ர மனுஷனும் கூலாக்கோணும் “ என அவர் பாஷையில் சொல்லிக் காட்ட, “ஏனுங்க அம்மணி,ஏத்தமா” எனக் கோபப்பட , “என்ர புருஷன்கிட்ட இருந்து கொஞ்சமே ட்ரென்சர் ஆகிடுச்சு” எனச் சிரித்தவர் , வலுக்கட்டாயமாக டி சர்டை , அவர் தலையில் மாட்டி, ஒரு கையைப் பைரவி இழுக்கப் பார்க்க, அதில் கடுப்பானவர்,

" உன்ர தலை, இப்படியா, போடுவாங்க" எனக் கழட்டியவர், கைகளை முதலில் திணித்து, தலையில் மாட்டி அணிந்து காட்டியவர்,

" உன்ர தாத்தா சட்டையில தான், ஃபுல் ஓப்பனும், பொத்தான் துளையும் இருக்கும். அந்த ராஜ குடும்பத்துச் சட்டையையும், தங்கப் பொத்தானை திருடிட்டானுங்கனு முள்ளை வச்சு, போட்டு விட்டவ தான நீ" எனக் கோபபட்படவர், சட்டென எழு, வேஷ்டி கட்டும் முன்பே, தூவலை அவிழ, பைரவி, சட்டெனத் திரும்பிக் கொண்டவர், " என் குடும்பத்தை அப்புறம் திட்டலாம். முதல்ல தோதியை கட்டுங்க" என முகம் சிவக்கத் திரும்பி நின்று கண்ணை மூடிக் கொள்ள, ராஜனும் சற்றே இலக்குவனார்.

" ஏனுங்க அம்மணி, நீங்க, என்னை இப்படிப் பார்த்ததே இல்லையாக்கும். ரொம்பத் தான் சீன் போடுற. மருவாதையா திரும்பு, இல்லையான வேட்டியையும் கட்ட மாட்டேன்" என அவர் வம்பு பேசியபடி, மனைவியைப் பின்னிருந்து அணைக்க,

" ராஜ், ரொம்பப் பண்ணாதீங்க. முஜே ஷரம் ஆதி ஹை" என்றவரை, அவரே திருப்பி, இறுக்கக் கட்டிக் கொண்டு, " கண்ணைத் திற அம்மணி" எனக் கட்டளை இட, வெளிர் சிவப்பிலிருந்து, அடர் சிவப்பு வரை அத்தனை வண்ணங்களிலும் விதவிதமாய் வெட்கத்தைக் காட்ட, கைலாஷ் மனைவியில் லயித்திருந்தவர், அவர் அன்று சொன்ன பிறை நுதல் முதல், கழுத்து வரையிலேயே நூற்றுக் கணக்கில் முத்தங்களைப் பரிசாய் தர, அதை ஆழ்ந்து அனுபவித்த ,அகம் மகிழ்ந்திருந்த, பைரவி அவர் மார்பில் முகம் புதைத்து அவரை ஆலிங்கனம் செய்தபடி, சில பொழுதுகளைக் கடத்தி, "இப்பச் சொல்லுங்க ராஜ். என்ன ஆச்சு" என விசாரித்தார்.

மணியைப் பார்த்தவர், அவர் செய்கைக்கான காரணம் புரிய “வா’ வென மனைவியைக் கட்டிலுக்கு அழைத்துச் சென்று, " உனக்குத் தூக்கம் வரலையா அம்மணி " என வினவ, " அது தான் மாத்திரை கொடுத்துத் தூங்க வைக்க ஏற்பாடு செஞ்சிட்டு தான போனீங்க, தூங்கி எந்திரிச்சிட்டேன்' என்றவர், தான் சாய்ந்து உட்கார்ந்து, தன் மடியில் அவரைச் சாய்த்துக் கொள்ள, " உனக்கு ஒண்ணும் சிரமமில்லையே அம்மணி" என உறுதி செய்து கொண்டே அவர் வயிற்றில் தலை வைத்தார்.

இன்னும் ஈரப்பதம் இருந்த அவரின் சிகையில் விரலால் கோதி, லேசான அழுத்தத்தையும் கொடுக்க, சுகமாக அனுபவித்தவர், " இங்க பார், பாரு, இரண்டே நாள்ல நான் உன் அடிமையாகிட்டேன். ஏம்மா இத்தனை வருஷம் காக்க வச்ச, என்ர கூட இருந்திருந்தையினா, கண்டவனுக்கும் என்ர மகளைத் தூக்ககிற எண்ணம் வந்திருக்குமா" என அவர் கோபப்படவும்.

" அப்பவே உங்க மனைவி மேல தான் ராஜ், அந்த அரக்கன் கை வைக்க நினைச்சான். அவனுங்க யாரை இருந்தாலும்,மூர்க்கமா முயற்சி பண்ணத் தான் செய்வாங்க. எனக்காக, உங்களை மட்டும் இல்லாமல் உங்க குடும்பத்து மேலயும் கை வச்சிருவாங்களோன்னு எனக்குப் பயம். " என்ற மனைவியின் மற்றொரு கையை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டவர்

" அப்ப என்னைக் கையாலாகாதவன்னு நினைச்சியாமா" என்றவரின் கண்களில் வழிந்த நீரைக் கண்டவர், " ராஜ்" எனப் பதறி அவர் சிகையில் தன் முகம் புதைத்தவர் கண்களிலும் கண்ணீர் " நான் உங்களை அப்படி நினைப்பேனா ராஜ் . எதா இருந்தாலும் நேரடியா அடிக்கனும்னு சொல்வீங்களே, எனக்காக எதாவது செய்யப் போய், உங்களை இழந்திடுவேணோன்னு ஒரு பக்கம் பயம். உங்களை நம்பி, உங்கள் குடும்பமும், தங்கச்சிகளும் இருந்தாங்களே" எனச் சமாதானம் சொல்ல,

" அவிகளுக்கு, செய்யறதுக்கு மட்டும் தான் எனக்கு உரிமை. உனக்குச் செயறதில இல்லையாக்கும். எப்படியோ என்னைத் தள்ளி நிறுத்திட்ட “ எனக் குறை பட்டவரை, “அந்தப் பயம் தப்புனு இப்ப புரியிது ராஜ், என்ன கஷ்டமா இருந்தாலும் இரண்டு பேருமா ,மனசு விட்டு பேசிக்கிட்டாலே, அதுலையே ஒரு ஆறுதல் கிடைக்கிது” என்றவரிடம்

“இன்னைக்கு என் மகளைப் பார்க்க முன்ன நான் தவிச்ச தவிப்பு, நீ ஒவ்வொரு நாளுமே அதைய தான அனுபவிச்சிருப்ப. அந்த நினைப்பே என் மனசை அறுக்குது" என்றார்.

" இனிமே, எனக்கு உங்களைக் கவனிச்சுக்கிறது மட்டும் தான் வேலை, இனி மீதி இருக்க நாளுக்கு , உங்கள் மகனும், மகளும் உங்க பொறுப்பு தான். டீல் ஓகேயா" என்றவர், கணவரின் முறைப்பை எல்லாம் பொருட்படுத்தாமல், அவரை நேராகப் படுக்க வைத்து, தான் அவர் மார்பில் தலை வைத்து ஒருகழித்துப் படுத்துக் கொண்டவர், கணவனின் மேனியெங்கும் தன் கரங்களால் வருடி " படே அச்சே லக்தே ஹைன்" என.மெல்லிய குரலெடுத்துப் பாட, மனதின் பாரம் சற்றே குறைந்து தூங்க ஆரம்பித்தார்.

இத்தனை நாள், அவர் மிதமிஞ்சிய போதையில் இருக்கும் போது தான், அலைப் பேசி வழியே ஆறுதல் தருவார் பாரு. அதுவும் புலம்பல் பாரு, பாரு என்று மட்டுமே இருக்கும். இன்று மகளுக்காகவும், தன்னால் குடும்பத்தைக் காக்க இயலவில்லையோ என்ற கவலையும் அவரை ஆட்டிப் படைத்தது. எதுவுமே, அவரவர் அனுபவிக்கும் போது தான் அதன் வீரியத்தை முழுதாக உணரமுடியும்.

ஆனால் இத்தனை வருடம் பிரிந்து இருந்த போதும், பைரவி, கைலாஷ் உணர்ச்சி வயப்பட்டு மன வேதனையைச் சுமந்த நேரம், நிலைமையைச் சரியாகவே ,அவர் மனதுக்கு இதம் தரும் விதம் இதமாகவே கையாண்டவர், தான் செய்த பிழையையும் உணர்ந்தார்.

அவர் சுவாசம் சீராகித் தூங்குவதை உறுதிப் படுத்திக் கொண்டவர். "உங்கள் மேல, என் நம்பிக்கை தகர்ந்து, என் புத்தியே பேதலிக்க வச்ச அந்த விசயம் மட்டும், உங்களுக்குத் தெரியவே வேணாம் ராஜ். உறவுகள் மேல நீங்க வச்சிருக்க நம்பிக்கையும் குறைய வேண்டாம். நீங்க என்னை இப்படியே ஏத்துக்கிட்டிங்களே, அதுவே போதும் " எனப் புலம்பியவர், எழுந்து சென்று மகளையும் பார்த்தார்.

சத்தம் கேட்டு கௌரி முழித்து, " தீதி" என அழைக்க, " நான் தான் கௌரி, ராஜ் எல்லாத்தையும் சொல்லிட்டார். இவளும் என்ன மாதிரியே கஷ்டப்படுறா பார்" என வருந்தியவர், மகளை வருடி முத்தமிட்டு தனது அறைக்குத் திரும்பினார்.

காலையில் கண் விழித்த ஆதிரா, நேற்றைய நினைவுகள் நினைவில் வர, ஆயி, பாபாவைச் சந்திக்கவே தயங்கினாள். ஆனால் காலையிலேயே, எழுந்து வந்த பைரவி மகளை முறைத்து நிற்க, "ஸாரி ஆயி. உங்களுக்காகத் தான் வேண்டுதல். அதுக்காகத் தான் போனேன்" எனச் செல்லம் கொஞ்ச,

" எனக்குத் தெரியாது. உன் பாபா தான் பயங்கர அப்சட், அவரைப் போய்ச் சமாதானம் பண்ணு" எனவும், பயந்து கொண்டே பாபாவின் அறைக்குச் சென்றாள்.

" பாபா" எனத் தனக்கே கேட்காத, வெளியே எழும்பாத குரவில் அழைத்தவள், அவர் அசையாமல் ஷோபாவில் அமர்ந்து செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருக்க, " ஸாரி பாபா. ஸாரி, ஸாரி. உங்களுக்குத் தெரியாம போனது தப்பு தான்.” என இரண்டு காதுகளையும் கையால் பிடித்துக் கொண்டு வந்து மன்னிப்பு கேட்டவள் ,

“ நான் எதுக்கு மருத மலைக்குப் போனேன்னு சொன்னா, நீங்களே சரின்னு சொல்லிடுவீங்க" என அவள் ஐஸ் வைக்க, கைலாஷ் உருகாமல் பாறையாய் அமர்ந்திருந்தார். “பாபா பேசமாட்டிங்களா, நீங்க வந்து காப்பாத்திடுவீங்கன்னு நம்பிக்கை தான் பாபா “ எனச் சமாதானம் பேசியவள் ,

" ஓகே, ஐயம் சாரி, நீங்க என்னை மன்னிச்சு, என் கூடப் பேசுற வரைக்கும், நான் தோப்புக்கரணம் போடுறேன்" என அவளே முடிவெடுத்து , “ஏக்,தோ,தீன்… எனத் தஸ் வரை சரியாகப் போட்டவள் அதற்கு அடுத்து இக்கீஸ் " என எண்ணிக்கையை 21லிருந்து ஆரம்பிக்க,

" ஏன்கண்ணு , பத்துக்கு அப்புறம் பதினொன்னு தான வரும் , நீ படிச்ச பள்ளிக் கூடத்தில மாத்தி சொல்லிக் கொடுத்தாங்களாக்கும். அப்படி எந்தப் பள்ளிக்கூடத்தில , உன்ர ஆயி உன்னைப் படிக்க வச்சா" எனக் கேட்டு இருவரையும் அவர் பேச, ஆதிரா முதல் உக்கிப் போடும் போதே உள்ளே நுழைந்திருந்த, பைரவி அமைதியாகப் பார்க்க, பாபா தன்னிடம் பேசியதிலேயே மகிழ்ந்து போன ஆதிரா ,

" அது தான பாபா, நீங்களே ஆயியை கேளுங்க. உங்ககிட்ட வளர்ந்திருந்தாலும் நீங்க படிச்ச ஸ்கூல்லையே படிச்சிருப்பேன். ஒன், டூ, த்ரீ படிக்கிறதுக்குள்ள ஒன்பது ஸ்கூல் ஐஞ்சு லேக்வேஜ் மாறிச்சு. மே க்யா கரூ " எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்கவும்,

" நான் தமிழ்ல எண்ணுறேன், நீ உக்கி போடு" என்றார் பைரவி.

" பாபா, ஆயி சரியா கவுண்ட் பண்றாங்களான்னு நீங்க பார்த்துக்குங்க" என்று விட்டு மேலும் இரண்டு போட, ராஜன் சிரிப்பை அடக்கமாட்டாமல் " வாடா கண்ணு" எனக் கை நீட்டவும்,

" ரஜ்ஜும்மா, 50 உக்கியாவது போடு, அப்பத் தான் உனக்குப் புத்தி வரும். ராஜ் நீங்க பேசாம இருங்க " எனக் கணவரையும் அடக்கிவிட, அதற்குள் பாபாவிடம் அடைக்கலமாகியிருந்தவள், " ஆயிக்காக மலை ஏறினதே கால் வலிக்கிது பாபா . மயக்க மருந்து இன்னும் தலை சுத்துது,நான் நாளைக்கு வேணா உக்கி போடுறேன் " என அவர் தோளில் சாய, மகள் பேச்சுச் சாதுர்யத்தில் , தன்னைப் போல் இருப்பதாக நினைத்த ராஜன்,

" டாக்டரை வரச் சொல்லுவோமாடா ரஜ்ஜும்மா" என மகளைக் கொஞ்சினார் . பைரவி , " இப்படிச் செல்லம் கொடுங்காதீங்க ராஜ். நேத்து அவன் தாலிக் கட்டியிருந்தா என்னடி பண்ணியிருப்ப' என அவர் கோபமாய் வினவ,

" அத்துப் போட்டிருப்பேன். போங்க ஆயி, அந்த மராட்டா லங்கூர் தான், பழைய காலத்தில இருக்குனா, நீங்களுமா" என அவள் கோபிக்க, " அப்படிச் சொல்லு கண்ணு" என்றவர், " ஆனாலும், நீ செஞ்சதுக்குத் தண்டனை உண்டு கண்ணு . நான் போன் போடும் போது ஆயியோட ஆபீஸ்க்கு வா" என அலுவலகத்துக்குக் கிளம்பினார்.

இதோ, விஜயன், மகனைத் திட்டி முடித்த சமயம், பைரவியோடு, ஆதிராவும் சேர்மன் அறைக்குள் நுழைய, ராஜனே எழுந்து மனைவியை வரவேற்றார். விஜயனையும், அபிராமையும் அங்கே பார்த்த பைரவி, " ஸாரி பாய்ஸாப், எங்களால அபிக்கும் தேவையில்லாத தொல்லை " என்றவர், அபிராமிடம் சென்று, " அடி பட்டதா பேட்டாஜி' என முகத்தையும், கை காலையும் ஆராய்ந்தார்.

விஜயன், ஆதிராவை விசாரித்துக் கொண்டிருக்க, பதில் எதிர் இருந்தவருக்குச் சொன்னாலும், அபிராம் ,ஆதிரா ஒருவரை ஒருவர் ரகசியமாய்ப் பார்த்துக் கண்ணால் பேசிக் கொண்டனர்.

மனைவியைத் தனது இருக்கையில் அமர்த்திய கைலாஷ், அவர் அருகில் மற்றொரு சேரை போட்டு அமர்ந்து, "விஜயா, இவங்க இரண்டு பேருக்கும் என்ன தண்டனை கொடுக்கலாம். " எனப் பெரியவர்கள் கூடிப் பேச, பைரவி, அபிராமிற்கும், விஜயன் ஆதிராவுக்கும் பரிந்து பேச ராஜன், இருவரும், தண்டனை என ஒரு தீர்ப்புச் சொல்ல, அபி வெகுவாக ஆட்சேபிக்க ,ஆதிரா தலை குனிந்தபடி வெளியேறி விட்டாள்.

என்ன தண்டனை கொடுத்தார் ராஜன், பொறுத்திருந்து பார்ப்போம்.

நிலவு வளரும்.




யார் இந்த நிலவு-39

யார் இந்த நிலவு-39 

அபிராம் சொன்னது போல், ஆதிராவை மருதமலைக்குச் சென்ற மூன்று முறையும் கூட, மில்லில் வேலை செய்யும் பெண்களோடு சேர்த்துத் தான் அழைத்துச் சென்றான். அதுவும் முதல் முறை சென்ற போது, கைலாஷ் மட்டும் இன்றி ஆதர்ஷ் கண்களிலும் மண்ணைத் தூவி அழைத்துச் சென்று, தனது வேண்டுதலை நிறைவேற்றப் படி வழியாகவே அழைத்துச் சென்றான்.

மில்லிலிருந்து மற்றொரு யூனிட்டுக்கு இப்படிப் பெண்கள் வேலைக்குச் சென்று வருவது பழக்கம் ஆதலால், யாரும் கண்டு பிடிக்க வில்லை, ஆனால் இவர்களோடு கடைசி முறை வந்த பெண்கள் சுய தம்பட்டமாக, ஆதிரா அபிராமோடு கோவிலுக்குச் சென்றதைப் பெருமை பேச, சேர்மன் காதுகளுக்குச் சென்றதோ இல்லையோ சேரவேண்டியவர்கள் காதுக்குச் சென்று சேர்ந்தது. அதன் பிறகு, பெண்கள் வேனில் சென்றாலே கண்காணித்துக் கொண்டு தான் இருந்தனர். இந்த முறை வசமாகச் சிக்கினாள் ஆதிரா.

ஆதிராவை கடத்துகின்றனர் எனப் புரியவுமே, அவளுக்கு மயக்க மருந்து கொடுக்க முயன்றவனைச் சங்கீதா தன்னால் இயன்ற வரை அடித்து, குத்தி, கிள்ளி தன் எதிர்ப்பை காட்ட, அவளையும் மயக்க மருந்தை நுகரச் செய்து கைகால்களைச் சேர்த்து கட்டிப் போட்டனர். ஏற்கனவே ஓட்டுனரை கடைசிச் சீட்டில் கைகால்களைக் கட்டி படுக்கப் போட்டிருந்தனர்.

மருத மலை அடிவாரம் தாண்டும் வரை, ஆதிராவை கே ஆர் மில்ஸ் கம்பெனி வேனிலேயே கடத்தியவர்கள். மற்றொரு கேரவேனில், வந்த மஹந்த் ராய் போஸ்லேயிடம் , அவளை ஒப்படைத்தனர். ஆதிராவின் போன், இவர்கள் வேனிலேயே கிடந்தது.

மஹந்த், மயங்கிய நிலையிலிருந்த ஆதிராவை, பூ போல் வாங்கிக் கொண்டான். " சோட்டி ராணியை, ரொம்பக் கஷ்டபடுத்தலையே" என மராத்தியில் கேள்வி வேறு கேட்டுக் கொண்டான். ஆதிரா மயக்க மருந்தைப் பார்க்கவுமே மூச்சை அடக்கியவள், அதிக நேரம் அடக்க மாட்டாமல், கொஞ்சமாகச் சுவாசித்து விட்டாள்.

ஆனால் மயங்கியது போல் நடித்தவள், எப்போதும், தனது டாலர் செயினில் மறைந்திருக்கும் லொகேஷன் ட்ராகிங் பட்டனை ஆன் செய்ய, அது கைலாஷ்க்கும், ஆதர்ஷ்க்கும் அலார்ட் கொடுத்தது. முன்பு இந்தச் செயலி, பைரவியிடம் இருந்தது. அவருக்கு உடம்பு முடியாமல் போகவுமே, அப்பாவும், மகனுமாக, ஆதிராவின் பாதுகாப்பை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.

கைலாஷ் ,மக்களின் சமயோசிதமாகச் செயலை மெச்சிக்கொண்டவர்,' ரஜ்ஜும்மா , பாபா வரேண்டா, அது வரைக்கும் தைரியமா சமாளி' என மனதில் பேச அது மகளுக்கும் டெலிபதி மூலம் டெலிவரி ஆனது.

கைலாஷ் அடுத்து அபிராமுக்கு போன் அடித்து, ஒரு மில்லின் பழைய குடோன் பெயரைச் சொல்லி, " அங்க வா மாப்பிள்ளை. உன்ர பங்காளி, அங்க தான் இருக்கான்" என்றார்.

" கன்பார்மா தெரியுங்களா மாமா" என அபிராம் சந்தேகம் கேட்டான், ஏனெனில் அவன் விசாரித்து அறிந்ததிலொரு கேரவேன் ,இரண்டு ட்ரக்குகள், மற்றும் ஒரு கார் பாதுகாவலர்களைக் கடந்து இருந்தது.

" என்ர மகளை யாருன்னு நினைச்ச, அதெல்லாம் சிக்னல் கொடுத்திருச்சு, நீ இருக்கிற இடத்திலிருந்து பக்கம் தான். நீ முன்னாடி போ, நானும் பின்னாடியே வந்திடுவேன்" என்றவர் " உன்ர ஹீரோயிசத்தை அவிக கிட்டக் காட்டாத. பாதுகாப்பு டீம் சொல்ற மாதிரி நடந்துக்க" எனக் கடுமையாக அறிவுரை வழங்கியவர், அடுத்து அந்த டீமுக்கும் இருப்பிடத்தை ஷேர் செய்து கட்டளைகளைப் பிறப்பித்தார்.

அபிராம்க்கு ,ஆதிராவை கடத்தியவன் மஹந்தாக இருக்கும் என்ற அனுமானம் இருந்தது, அதே நேரம் ஆதர்ஷிடமிருந்து வந்த போன் காலும் அதனை உறுதி செய்தது.அபிராம் காரை சத்தியன் ஒட்டி வர, இவன் பரபரப்பாகவே இருந்தவன், ஆதரிஷிடமும், தன்னால் தான் இப்படி ஆனது என்ற சுயபட்சாதாபத்தைக் கொட்டிவிட, “மச்சி, எது எதிர்பார்த்தது தான், நீ ஆதியை காப்பாத்துற வழியைப் பார், அப்புறமா புலம்புவ, உன் கோபத்தையெல்லாம் சேர்த்து வச்சு, என் சார்பாவும் அவன் மூஞ்சில இரெண்டு குத்து விடு” என ஆதர்ஷ் , அபிராமின் கோபத்தைத் தூண்டி விட,அதே ஆத்திரத்தோடு சென்றான்.

மஹந் தன்னைத் தொடுவதை விரும்பாத ஆதிரா, அரை மயக்கத்தில் விலகி அமர, " ஓ, ராணி சாயிபா, முழுசா மயங்கலையா. நான் ஒரு முட்டாள், புதுசா கேட்கிறேன். பிறந்ததிலிருந்து வந்த பழக்கம், மூச்சை அடக்கியிருப்பீங்க. ஆனால் நானே கொஞ்சமா தான் உபயோகிக்கச் சொன்னேன். ஷாதி நடக்கும் போது, நினைவு இருக்கனுமே" என அவன் பேசிக் கொண்டே போக, ஒரு இகழ்ச்சியான முறுவலைத் தந்தாள் ஆதிரா.

" என்ன சாயிபா, என்னால முடியாதுங்கிரீங்களா" என்றவன், ஷாதி மண்டபமும், துல்ஹாவும், ஒரு மாசமா உங்களுக்காகச் சிங்காரிச்சு ரெடியா தான் இருக்கோம். போன உடனே முகூர்த்தம் ஆரம்பிச்சிடும். உன் ஆயி, பாபா மேரஜோட சேர்த்து, நம்மதையும் அனோன்ஸ் பண்ணட்டும்" என நிறையத் திட்டங்களை வகுக்க,

" ஷாதி " என அரை மயக்கத்தில் சிரித்தவள், " இப்ப தான் ராம் எனக்கு மாலை போட்டார். ஸோ, நான் அவர் மனைவி. முடிஞ்சா தப்பிச்சுக்கோ. இல்லைனா ரொம்பக் கஷ்டப்படுவ. " என அவள் அவர்கள் மொழியிலேயே எச்சரித்தாள்.

" அதையும், பார்த்திருவோம் ராணி சாய்பா." என அவன் சவால் விட, " நீ, கை வச்சிருக்கிறது, கைலாஷ் ராஜன் மகள் மேல, இது அவருடைய கோட்டை. தேவையில்லாத வேலை செய்யற, மராட்டா லங்கூர். " எனக் கண்கள் சொருகப் பேசியவள், அப்படியே மயங்கிச் சரிய,

" மராட்டா லங்கூர், ஆஹா செல்ல பெயரெல்லாம் வச்சிருக்கியா, ராணி சாய்பா, படியா, பகூத் படியா. " என அவளை ரசனையோடு பார்த்திருந்தவன்,

" கைலாஷ் பாபா, வரட்டும். தாமாத்தை ஆசீர்வாதம் பண்ண வந்து தான ஆகனும். என் அண்ணன்களுக்கு, இரண்டு பங்கு ஷேர் வந்தா, எனக்கு அவங்களை விட, கே ஆர் மில்ஸ் ஷேரும் சேர்ந்து வருமில்லை. நான் வச்சது தான் சட்டம்" என்றவன் போனில் " எல்லாம் ரெடியா" எனக் கேட்டு, தானே ஆதிராவை, அந்த மில்லுக்குள் தூக்கிச் சென்றான்.

'ஷாதி மட்டும் செஞ்சா, தமிழ்நாட்டு பொண்ணு, அதை அத்து எறிஞ்சிட்டு போவ, அந்தக் காதல் மன்னனும் ஏத்துக்குவான்னு தெரியும், ராணி சாய்பா. இங்கிருந்து போகும் போது, போஸ்லே வம்ச வாரிசை வயித்தில சுமந்திட்டு தான் போவ. எல்லா விதமாவும் உன்னை லாக் பண்ணுவேன். நீயே, நான் மஹந்தோட போறேன்னு, உன் பாபாகிட்ட அடம் பிடிச்சு வருவ. அவன் இரண்டு மாச பழக்கம் தான, ராணி சாய்பா. நான் அவனை மறக்கடிச்சு காட்டுறேன்' எனத் தனக்குள் பேசிக் கொண்டு சென்றவன்,

இரண்டு மராத்திய பெண்களிடம் ஒப்படைத்து, " ராணி மாதிரி சிங்காரிச்சு கூட்டிட்டு வாங்க. எதிர்காலப் பீபீ மில்ஸ்க்கு ஒரே ராணி அவள் தான்" எனக் குடும்ப நகைகளையும் கொடுத்துச் சென்றான்.

பண்டிதர், திருமணச் சடங்குகளை நடத்திக் கொண்டிருக்க, பாதுகாப்புக்கு ஆட்களை ஏற்பாடு செய்து விட்டு, மாப்பிள்ளை சடங்குகளுக்காகப் பாரம்பரிய வெளிர் சந்தன வண்ணத்தில் , ராஜ கம்பீரத்தோடு மணவறையில் அமர்ந்தான் மஹந்த் ராய் போஸ்லே.

ஆதர்ஷ், கைலாஷுக்கு மீண்டும் அழைத்து இடத்தை நெருங்கி விட்டீர்களா என விசாரிக்க. " இடத்தைச் சுத்தி வளைச்சிட்டோம் கண்ணு, என்ட்ரி அடிக்கிறது தான் பாக்கி, ஆமாம் அந்த மருமகனுக்கு என்ன பரிசு கொடுக்கிறது" என இவர் மகனைக் கேலியாகக் கேட்க,

" உங்க கல்யாணத்துக்கு, போஸ்லே குடும்பம் சீர் செய்வாங்கல்ல, ஒருவாரம் வச்சிருந்து, அவனையே ரிடர்ன் கிப்ஃடா குடுங்க" என ஆதர்ஷ் எரிச்சலாகப் பதில் சொல்ல,

" சூப்பர் கண்ணு, அப்படியே செஞ்சிட்டா போச்சு" என்றவர், அந்த மில் வளாகத்தில் இறங்க. அபிராமும், அவரது பாதுகாப்புப் படையும், ஏற்கனவே அவர்களைச் சுற்றி வளைத்து இருந்தனர்.

ஆதிராவுக்கு அலங்காரம் செய்து, அரை மயக்கத்திலேயே மணவறை நோக்கி அழைத்து வர, " சோடோ முஜே. " என உடன் வந்தவர்களை எதிர்க முற்பட்டாலும் , அதற்குண்டான பலம் அவளிடம் இல்லை. வலுக்கட்டாயமாக, மேடையில் கொண்டு வந்து உட்கார வைக்க, மயங்கியிருந்தவள், " நீ தாலி கட்டினாலும், மே தோட்கர் ஜாவூங்கி, ராம் கூட என் ஷாதி நடந்திருச்சு, ரிஜிஸ்டர் " என அவள் புலம்பியபடி, அவள் மயங்க, " க்யா, பொய் சொல்ற" என்றவன் மற்ற இரண்டு பெண்களை அழைத்து, அவளை நிமிர்த்தி உட்கார வைக்கச் சொன்னான். பண்டிட் மந்திரம் படிக்க ,மஹந்த் ஆதிராவின் கழுத்தில் தாலி கட்ட தயாரானான்.

கைலாஷ், சொன்ன பழைய மில்லின் கோடோன் இருக்கும் பகுதிக்குப் படையோடு விரைந்த அபிராம், அதிரடியாக உள்ள போகத் துடிக்க, பாதுகாவலர்கள் தான், சற்று நிதானித்து , தொழில் முறையாகக் கையாள, அபிராம், அவர்களையும் மீறி உள்ளே நுழைந்து விட்டான். பதுங்கி, பாய்ந்து சென்றவனை மஹந்தின் ஆட்கள் தாக்க வர, சமயோசிதமாகத் தன்னைத் தற்காத்துத் தப்பிக்க, தாக்க வந்தவர்களைப் பாதுகாவலர் படையினர் பார்த்துக் கொண்டனர்.

மஹந் தாலி கட்ட முயன்ற நேரம், அபிராம் சரியாக உள்ளே நுழைந்தவன் பாய்ந்து சென்று, மங்கள் சூத்திரத்தைப் பறித்து, “ஆரா பேபி,நான் வந்துட்டேண்டா “ என அவள் கன்னத்தைத் தட்டி எழுப்பி அனைத்துக் கொள்ள, “ராம், ஐ லவ் யு “ என அவளும் கட்டிக்கொண்டாள்.

அபிராமை பார்க்கவும் அதிர்ந்த மஹந்த் , தன ஆட்களைப் பெயர் சொல்லி அழைத்து,”இவனைப் பிடிங்க,இவன் கண்ணு முன்னாடியே நான் ராணி சாய்பாவுக்குத் தாலி கட்றேன்”என் மராத்தியில் சொன்ன போதும்,ஆதிராவை அந்தக் கோலத்தில் பார்த்ததிலேயே அபிராமுக்குக் கோபம் கொதி நிலைக்குப் போக, ஆதிராவை ஒரு கையில் தாங்கியபடி, மஹந்த் மூக்கு,புருவ மத்தியில் ஓங்கி ஒரு குத்து விட்டான் அபிராம் , மகத்துக்குப் பொறிக் கலங்கியது, ஆனால் முதலாளியைத் தாக்கவும் அவன் ஆட்கள் அபிராமை சூழ்ந்து கொள்ள, ஆதிராவை அந்தப் பெண்கள் வந்து பற்றிக்கொண்டனர்.

அபிராமை ,சூழ்ந்த ஆட்களை, அவனே தான் கற்ற கலையெல்லாம் பயன்படுத்தித் துவம்சம் செய்து கொண்டிருக்க, சத்தியனும்,பாது காவல் படையினும் களத்தில் குதித்தனர்.

இந்தக் களேபரத்தில்,மஹந்த், ஆதிராவை கைப்பற்றி, அந்த இடத்தை விட்டு, அகல முயன்ற நேரம், கைலாஷ் சரியாக உள்ளே நுழைந்தார், மஹந்த்தின் ஆட்களில் ஒருவன் மறைந்திருந்து அபிராம் மேல் கத்தி எறிய, குறி பார்த்துக் கொண்டு இருக்க, உள்ளே நுழைந்த ராஜன், அதைக் கவனித்துப் பின்னிருந்து அவன் தோள் பட்டையில் தாக்கியவர், அந்தக் கத்தி கீழே சென்று விழ, மேலும் இரண்டு அடிகளில் அவனை மயக்கமடையச் செய்து விட்டு வேகமாக மஹந்த் பிடியிலிருந்த மகளிடம் சென்றார்.

கைலாஷை தொடர்ந்து, அவரது ஆட்களும் அடுத்தடுத்து கோடோனுக்குள் நுழைந்து மஹாந்த்தின் ஆட்களைச் சுற்றி வளைத்தனர்.

மஹந்த் ,கைலாஷை பார்க்கவும் சிலையாகி ஆதிரவை விட, கைலாஷ், அவசரமா ஓடி,மகளைத் தாங்கிக் கொண்டார். அபிராம் ,மஹந்த்தை நெருங்கியவன்,தன கோபத்தையெல்லாம் அவன் மீது காட்டி அடிக்க, அவனும் பதிலுக்குத் தாக்கினான் , இருவருக்கும் துவந்த யுத்தம் நடந்தது. அதே நேரம் , மஹந்த் ஆட்களுக்கும், கைலாஷ் ஆட்களுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது, இருபக்கமும் ஆயுதங்களும் இருந்தது. சண்டை தீவிரமாக நடந்தது.

ஆதிராவை தாங்கிக் கொண்டிருந்த பெண்கள், அவரிடம் விட்டுவிட்டு பின்னடைந்தனர். மகளைத் தூக்கி, “ரஜ்ஜும்மா , பாபா வந்துட்டேண்டா”எனத் தன் மேல் சாய்த்துக் கொள்ள,”பாபா, ஆப் ஆகை “ என இவ்வளவு நேரம் சிரமப் பட்டு விழித்திருந்த கண்களை நிம்மதியாக மூடி,அவரின் தோள்களில் சாய்ந்து கொண்டாள் .

ராஜன் தற்காப்புக்கு என உரிமத்தோடு வைத்திருந்த துப்பாக்கியை மேல்நோக்கி சுட்டு, “ சாமானையெல்லாம் கீழப் போடுங்க, இல்லையினா போஸ்லே சாப் மண்டை தான் முதல்ல தெறிக்கும்” எனக் கர்ஜிக்க, சண்டையிட்டுக் கொண்டிருந்த மஹந்த்தின் ஆட்கள் சிலையாய் நிற்க, ராஜனின் ஆட்கள் அவர்களின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து கயிறுகள் கொண்டு கட்டிப் போட்டனர்.

மஹந்த் மட்டும், அபிராம் பிடியிலிருந்தும் விடுவித்துக் கொண்டு,ராஜனை முறைத்துக் கொண்டு நிற்க, ராஜன்,

“ நீ செஞ்சிருக்கிறது முறையில்லை மஹந்த் ராய் போஸ்லே, உன்ர அத்தை புருஷனையும் ஜெயந்தை காட்டியும், கேவலமான வேலை செஞ்சிருக்க “ என அவர் வன்மையாகக் கண்டிக்கவும்,

“ராஜ வம்சத்தில், பெண்ணைத் தூக்கிட்டுப் போய்க் கல்யாணம் பண்றது, நடைமுறையில் இருக்கிறது, பெருமையான விஷயம் தான்.”எனத் திமிராகப் பதில் சொல்ல

“அதுக்கு நீ ,இந்தக் கைலாஷ் ராஜன் மகளை , அதுவும் என்ர பாதுகாப்பில் என்ர மகள் இருக்கும் போது, அவர் கோட்டைகுள்றையே வந்து தூக்கணும்னு ஆசைப் பட்டிருக்கக் கூடாது” என்றவர்,

“ஏன்ரா மாப்பிள்ளை, நம்மூர்ல பொண்ணுங்களை , அவிக சம்மதமில்லாமல் தூக்குறவனுங்களுக்கு என்ன தண்டனை கொடுப்போம்” என அபிராமை பார்த்துக் கேட்கவும்,

“என்ர ஆராவை பார்த்த கண்ணைத் தோண்டி , தொட்ட கையையும் முறிக்கோனுங்க மாமா “என ஆத்திரமாக அபிராம் பதில் தரவும்,

“ஆதிரா எனக்குப் புவாஜி கி முல்கி , எனக்குத்தான் அவளை ஷாதி பண்ணிக்க முதல் உரிமை இருக்கு”என அவன் ரூல்ஸ் பேசவும்,

“அதுக்கு,நீ முறையா ,உங்கப்பன் ஆத்தாளோட வந்து என்ர கிட்ட கேட்டிருக்கோணும், என்ர மகள் மாட்டேன்னு சொல்லுவான்னு தெரிஞ்சு தானே, கேவலமா திட்டம் போட்டு வந்திருக்க, உங்கப்பாரை வரச் சொல்லி பஞ்சாயத்து வச்சுக்குவோம், அது வரைக்கும்,எங்க கெஸ்ட்டா இருங்க” என்றவர்,

“யார்றா அங்க, போஸ்லே ஷாப்பையும் அவர் ஆட்களையும், முறையா கொண்டு போய், நம்ம இடத்தில் வச்சு பார்த்துக்கோங்க” என அவர் கண் காட்ட, “ மாமாஜி , இது சரியில்லை “ என எச்சரித்தவன், நொடியில் அவர்மேல் பாய்ந்து ஆதிராவின் கழுத்தில் கத்தியை வைத்து, “கன்னை கீழ போடுங்க” என மிரட்ட,

“என்ர மகளை ஒன்னும் செஞ்சிடாதா ,துப்பாக்கி தானே கீழ போடுறேன் ” எனவும், அபிராம் பதட்டமாகி மஹந்த்தை தாக்க வந்தான், “ மஹந்த் ஆதிராவின் கழுத்தில் கத்தியை அழுத்தம் கொடுக்க முனைய , “வேண்டாம் மாப்பிள்ளை, என்ர மகள் முக்கியம்” என்ற ராஜன், மகளை ஒரு கையால்

அணைத்தபடி , துப்பாக்கியைக் கீழே வைப்பது போல் நடித்து, அபிராம் கையில் தூக்கிப்போட, அதைப் பிடித்தவன், யோசிக்காமல் மஹந்த்தின் கையில் சுட்டு விட்டான்.

மஹந்த் இடது கையைப் பிடித்துக் கொண்டு விழுந்த நேரம் , ராஜனும் மகளைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டவர், அபிராம் மஹந்த் மீது பாய்ந்து அவனைப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்க, “முடிச்சிட்டு வா மாப்பிள்ளை “ எனக் கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு,சத்தியனைக் காரை எடுக்கச் சொன்னவர், குடும்ப மருத்துவரிடம் மகளை அழைத்துச் செல்ல, அனஸ்தீசியா தான்,தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்,கவலை படாதீங்க” என அவர் திருப்திக்கு ஒரு மாற்று ஊசியையும் போட்டு அனுப்பி வைத்தார்,

விஜயன்,கைலாஷுக்கு போன் அடித்து விவரம் கேட்டார். விவரம் சொன்னவர், “ இருபது வருஷம் முன்னை பருவைப் பார்த்த மாதிரியே , இன்னைக்கு என்ர மக்களையும் பார்த்தேண்டா , மனசுக்கு வேதனையா இருக்கு, பொண்ணு மயிலு மயங்கி கிடக்குதுடா “ என வேதனை பட,

“அவிக தலையெழுத்து அப்படி, ஆதிராவுக்கு, அவள் பாபாவோட சப்போர்ட்டும் இருகுல்ல, அது தான் பத்திரமா மீட்டுடியில்ல , அதையே நினைச்சு கவலைப் படாதே” எனத் தேற்றியவர், “உன்ர வளர்ப்பு, உன்னாட்டமே ,பெரிய ஹீரோயிசமெல்லாம் பண்றான் பார், வரட்டும் அவனுக்கு இருக்குது” என் விஜயன் மகனைத் திட்டவும்.

“உனக்கு லவ்வை பத்தி என்னடா தெரியும்,என்ர தங்கச்சி உனக்காக உருகி, உருகி எல்லாம் செய்யறதுனால , உனக்கு அந்த அருமை தெரியலை “ என மருமகனை சப்போர்ட் செய்தவர், “ஆனால், அவன்கிட்ட சொல்லிப் போடாதே, நான் டெரரா லுக் விட்டுட்டு தான் வந்திருக்கேன், பய பம்மிக்கிட்டு தான் இருப்பான்.இன்னைக்கு ராத்திரி,நம்ம கெஸ்டவுஸ்ல தங்கிக்கட்டும்,கஸ்தூரிகிட்ட எதையாவது சொல்லிச் சமாளி “ எனவும்,

“ஏண்ரா,அடி பலமா “ என மகனை விசாரிக்க, ”இனி வந்தான்னா தான் பார்க்கோணும் “ எனப் போனை வைத்தவர், மீண்டும் அபிராம் க்கு அழைத்தவர், மஹந்தை பாதுகாவலரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு வரச் சொன்னார்.

இன்று தன் மாளிகைக்கு, மகளை மணப்பெண் கோலத்தில்,மயங்கிய நிலையில் அழைத்து வந்தவருக்கு, “என்ன பெரிய பிஸ்னஸ் டைக்கூன், கொம்பு முளைச்ச கைலாஷ் ராஜன்,இவ்வளவு செல்வாக்கு இருக்கும் போதே மகளைக் காக்க முடியலை,உன்ர மனைவி,இருபது வருஷம் முன்ன வந்திருந்தா,என்னத்தைக் கிழிச்சிருப்ப’ எனக் குத்திக்காட்ட தன மீதே கோபம் வந்தது.

மனைவியும்,பெற்றவர்களும் உறங்குவதை உறுதி படுத்திக் கொண்டே மாளிகைக்குள் மகளை அழைத்து வந்தார். பாருவுக்கு விஷயம் தெரிய வருமா, எப்படிச் சமாளிப்பார் ராஜன்.

பொறுத்திருந்து பார்ப்போம்

நிலவு வளரும்.


Sunday, 20 March 2022

யார் இந்த நிலவு-38

 யார் இந்த நிலவு-38 

மதியம், சாப்பிட்ட பிறகு, ஆயி, பாபா ஓய்வெடுக்க, அந்தச் சமயம்  அலுவல் விசயமாகக் கேட்டுக் கொண்டு, ஆயிக்கு  பாபாவோடு ரொமான்டிக் ஆகப் பேசிக் கொண்டிருக்க, யோசனை சொல்லி , பைரவி எதுவும் சொல்லும் முன் ஆதிரா ஓடிவிட, கைலாஷ் ராஜன் மகள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவர், “அருமையான பிள்ளைகளைப் பெத்துக் கொடுத்திருக்க அம்மணி , இதுக்கே, இருபது வருஷ பிரிவையும் மன்னிச்சிடலாம் “ என மனைவியைக் கொஞ்சவும், அவருக்கு இழைந்து கொடுத்தவர்,

“இப்ப, இப்படித்தான் சொல்லுவீங்க, அதுக்கப்புறம் முகத்தைத் தூக்கி வச்சுக்குவீங்க, நீங்க முகத்தை லேசா சுழிச்சாலும், இனிமே என்னால தாங்க முடியாது ராஜ்” எனப் பைரவி சொல்லவும், “அது தான் ஒரு டெமோ காண்பிச்சிட்டியே அம்மணி , இனிமே அம்புட்டு தகிரியமா நான் முகம் திருப்பிடுவேனாக்கும்” என அவர் வாயை விட, “க்யா ஜி “என்றார் .

“ஒண்ணுமில்லை அம்மணி, எந்தப் புருசனும், பொண்டாட்டிகிட்ட ரொம்பக் காலத்துக்கு முகத்தைக் காட்டிட்டு நிம்மதியா இருந்துடுவானாக்கும் , அதையே தான் சொன்னேன்” எனப் பேச்சை மாற்றியவர், அவரது கூந்தலை தொட்டு காட்டி ,

“ பாரு, அப்போ மில்லுக்கு வரும் போதெல்லாம், தளர பின்னல் போட்டு,முடி இடுப்பு வரைக்கும், இப்ப அதெல்லாம் காணோம், விஜயன் கல்யாண நாளுக்குத்தான் ஜடையாவது போட்டிருந்த, மத்தபடி, இந்த மடிச்சு கட்டின கொண்டை தானாக்கும் “எனக் குறை பட்டவரைப் பார்த்துச் சிரித்த பாரு, “ராஜ் இதெல்லாமா கவனிக்கிறீங்க” எனவும்

“இரண்டு மாசம் , உன்னோட வாழ்ந்த வாழ்க்கை, நீ என்ர மனசில நிறைஞ்சது தான் பாரு, இருபத்திரண்டு வருசமா என்னை வாழ வச்சது. கூபாகர், மட்டுமில்லை உன்னோடபாசம்,காதல், சிரிப்பு, கோபம், சிடுசிடுப்பு, கவலை, சந்தோசம், இந்த வெட்கம் எல்லாமே எனக்குள்ள இருக்கு அம்மணி” என்றவரின் மார்பில் சாய்ந்திருந்த பாருவின் கண்ணில் நீர் பெருக ,”இப்படி உணர்ச்சி வசப்பட்டு அழுதினாக்கும் , வேற எதையுமே சொல்லமாட்டேன் ” என அவர் மிரட்டவும்,

“இல்லை ராஜ் சொல்லுங்க, நான் எமோஷனல் ஆகலை, என்னை எவ்வளவு மிஸ் பண்ணினீங்கங்கிறதை கேட்டாவது மனசை தேத்திக்கிறேன்” எனவும் , அதன் பிறகு தான் செய்த லீலைகளையும், விஜயனும், சத்தியனையும் படுத்தி வைத்ததையெல்லாம் சொல்லி , அதற்கு எதிர்வினையாக மனைவியின் நவரசங்களையும் ரசித்திருந்தார்.

மகள் மில்லுக்குள் தான், இருக்கிறாள், அபிராம் உடன் இருக்கிறான், என மனைவியோடு மதியப் பொழுதைக் கழித்தவர், பத்து நாட்கள் பராமுகமாக இருந்ததுக்கெல்லாம், சேர்த்து வைத்து , தன் வழக்கமான பாணியில் பேசிக் கொண்டிருக்க, பைரவியும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வப்போது சிறு மறுமொழிகளோடு சிரித்த மனைவியின் அழகில் மதி மயங்கி , நேரம் போனது தெரியாமல் கதைத்தவர், சௌந்தரி இன்டர்காமில் அழைக்கவும் தான் இறங்கி வந்தார்.

"ஏன் கண்ணு, இன்னைக்குப் பூஜையெல்லாம் செய்யலையாக்கும்" என மருமகளைக் கேள்வி எழுப்பவும், " இதோ அத்தை, உங்க மகன் பேசிட்டே இருந்தாங்களா, நேரம் போனது தெரியலை" எனப் பூஜை அறைக்குச் செல்ல, கைலாஷ் பின்னாடியே சென்றார்.

" சௌந்தி, நீதான் அவிக பூஜைக்கு நடுவில கரடியாகிட்டியாட்டத்துக்கு, உன்ர மகன், உன்னை அப்படித் தான் முறைச்சிட்டுப் போறான்" என நாயகம் மனைவியைக் கேலி செய்ய,

" நீங்க தான், என்ர மகன் மனசுக்குள்ற போய்ப் பார்த்திட்டு வந்திங்களாக்கும். அப்பாவும் மகனும், இன்னும் சரியா மூஞ்சி கொடுத்துங் கூடப் பேசறதில்லை. இந்த லொள்ளு பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை" எனச் சண்டை கட்ட,

பன்னீர் ," இது உனக்குத் தேவையா, என்னத்துக்கு, வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிற" என நாயகத்தை வம்பிழுத்து பேசிக் கொண்டிருக்க, கைலாஷ் பூஜையறையிலிருந்து திரும்பி வந்தவர் மற்றவர்களைக் கேட்டார்.

" ராமு குடும்பம், வீட்டுக்கு கிளம்பிட்டாங்க " என விவரம் சொல்ல, " இன்னும் ரஜ்ஜும்மாவை காணமே" எனப் பைரவி யோசனையாக வாசலைப் பார்க்க, "அட நம்ம மில்லுக்குள்ற தான இருக்குது , இன்விடேசன் கார்ட் செலக்ட் பண்ணி வைக்கிறேன்னு சொல்லுச்சு, அதைய செய்யுமா இருக்கும்" எனக் காரணம் சொன்னவர், நிதானமாகக் காபி டிபனை முடித்துக் கொண்டு, மகளுக்கும் எடுத்துக் கொண்டு, அலுவலகத்தை நோக்கிச் சென்றார்.

தனது அறையிலும், அவளுக்காக உருவாக்கப்பட்ட கேபின், அபிராம் அறை எங்குமே காணவில்லை என விசாரிக்க, சம்பத் , " மூணு மணிக்கு அபி சாரோட வந்தாங்க. அப்புறம் பார்க்கலைங்களே" எனவும் , சங்கீதா, சத்தியனும் அங்கு இல்லை, என விசாரித்து வந்து சொன்னவர், " ஒரு வேன் நிறைய வேலைப் பார்க்கிற பொண்ணுங்களும் , எங்கையோ கிளம்பி போனாங்களாம் சார்" உபரி தகவலையும் சொன்னார். கைலாஷ் மகளுக்குப் போன் அடிக்க, அழைப்பு சென்று கொண்டே இருந்தது, எடுக்கப்பட வில்லை.

மாலை மூன்று மணிக்கெல்லாம், மில்லுக்குச் சொந்தமான டெம்போ ட்ராவலரில் சங்கீதா உட்படப் பத்து பெண்களும், அவர்களோடு, ஆதிரா, அபிராம், சத்தியன் மேலும் இரண்டு ஆண்கள் என, ஆதிரா பயணிப்பதையே மறைத்து, அவளது வழக்கமான உடையின்றி, சாதாரணச் சுடிதாரில் தான் கிளம்பியிருந்தனர். வேலை செய்பவர்கள், இது போல் மற்றொரு யூனிட்டுக்கு செல்வது வழக்கம் ஆதலால் அது பெரிதாகக் கவனிக்கப்பட வில்லை.

வேனிலும், ஜன்னல் பக்கம் ஆதிராவை உட்கார வைக்காமல், கதவு ஜன்னல்களை அடைத்து, ஏசிப் போட்டபடி தான் பயணித்தார்கள். ஆதிரா ஒரு சீட்டிலும், எதிர் வரிசையில் அபி ஒரு சீட்டிலும் அமர்ந்து வர, பெண்கள் இருவரையும் சேர்த்து கேலி செய்து வந்தனர்.

" ஏனுங்க, அபி சார், நாங்க இருக்கிற பக்கமெல்லாம், திரும்பிக் கூடப் பார்க்க மாட்டிங்க, மிஷினோட நிற்கிற பொம்மையினு நினைப்பாராட்டத்துக்குன்னு நாங்களே பேசிக்குவோமுங்க, இன்னைக்குச் சின்ன அம்மணிக்காக எங்களோடவே வேன்ல வர்றீங்க" என ஆளாளுக்கு, கேலி பேச, ஆதிராவுக்குப் பெருமை தான்.

" அதுக்கென்ன செய்யறது, எனக்குன்னு, என்ர மாமன் பொண்ணைப் பெத்து வச்சிருக்கையில, வேற பொண்ணு என்ர வாழ்க்கையில வந்திட முடியுங்களா" என அவனும் சரிக்குச் சரி பதில் தந்தவன், " சத்தியா, இன்னைக்குப் படி ஏற வேண்டாம். வண்டியை மலைமேல் விடு" எனச் சொல்ல, ஆதிரா படி ஏறலாம் என்றாள்.

" மாமாவுக்குத் தெரியாத வந்திருக்கோம் பேபி, அவர் ஆபீஸ்க்கு வர்றதுக்குள்ற நாம திரும்பனுமாக்கும்" எனச் சாலை மார்க்கமாகவே மலை ஏறியவர்கள், நாலரை மணி நடை திறக்கும் போது, அங்கிருந்தனர். மீதமிருக்கும் கடைசி நிலைப் படிகளை மட்டும் ஏறியவர்கள், தேங்காய் பழத் தட்டு, பெரிய மாலை எனக் கே ஆர் மில்ஸ் சார்பாகவும், கைலாஷ், பைரவி பெயருக்கு அர்ச்சனை செய்தனர். இவர்கள் உடன் வந்த பெண்கள், அபிராம், ஆதிரா பெயருக்கும் அர்ச்சனை செய்தவர்கள், மாலை மாற்றி அபிராம் கையால் ஆதிராவுக்குப் பூவையும் வைத்து விடச் சொல்லலாம் எனத் திட்டமிட . அபிராம், பெரியவிக நிச்சயம் பண்ணாத எப்படி எனத் தயங்கினான்.

" அபிசார், அம்மணி கிடைக்கோணும்னு, மருத மலை முருகனைத் தான வேண்டுனீங்க, அவர் முன்னாடி மாலை மாத்திகிறதுக்கு என்னங்க தயக்கம். உங்களுக்கு அவிக தான்னு எழுதியிருக்கையில, யாரால மாற்ற முடியுங்க. அம்மணிக்கு ஆட்சேபனை இல்லையினா,மாலையைப் போட வேண்டியது தானுங்களே" என ஏற்றி விட்டனர்.

ஆதிரா, தன்னைச் சூழ்ந்த ஆபத்துக்கள், இன்னும் விலகியபாடே இல்லையே என முதலில் யோசித்தவள், குருக்கள் ஒரு மாலையைக் கொண்டு வந்து, அபிராம் கழுத்தில் போட்டு விட்டு, மந்திரம் சொல்லி அவன் கையில் கொடுத்து, ஆத்துக்காரி கழுத்தில் போடுங்கோ, எனச் சொல்லவும், அவன் அவளை ஏறிட்டுப் பார்க்க, அதுவே தெய்வ சங்கல்பம் எனத் தனது ஆயி, பாபாவை ஏற்றது போல், முருகன் சன்னதியில் அபிராமை, தன் கணவனாக மனதார ஏற்றுக் கொண்டு, கழுத்தை நீட்டினாள். அபிராம் சந்தோஷமாகவே மாலை போட்டவன், பூவையும் குங்குமத்தையும், தான் வைத்து விடாமல், அவளுக்குக் கையில் தான் கொடுத்தான்.

மற்றவர்கள், " ஏனுங்க அபிசார்" என வினவ, " மாலை போட்டது, ஆரா பேபியை, என்ர வாழ்க்கைத் துணையா ஏத்துக்கிட்டேன்னு அவளுக்கு உறுதி தர்றதுக்கு, தாலி, குங்குமம் எல்லாம், பெரியவிக ஆசீர்வாதத்தோட தான் நடக்கோணோம். " என்று விட, ஆதிராவுக்கு ,அபிராமின் இந்த எண்ணமும் மிகவும் பிடித்தது.

இவர்கள் சாமி தரிசனம் செய்து, சித்தர் கோவிலுக்குப் பக்கவாட்டில் இறங்கிச் செல்ல, இவர்கள் வேன் நிறுத்திய இடத்துக்கு அருகில், நிறைய வாகனங்களில், பக்கத்தில் ஆசிரமத்துக்கு வந்தவர்கள் இங்கும் வந்தனர்.

இவர்கள் கூட வந்த பெண்கள், அங்கிருந்த கடைகளில், கிராமத்துத் தின்பண்டங்கள், இலந்தவடை, புளிப்பாக்கெட், பொடி, ஜவ்வு மிட்டாய், பொரி உருண்டை ஆகியவற்றைப் பார்த்து விட்டு அங்கேயே நிற்க, ஆதிரா, அதைப் பார்த்து," ராம், இதெல்லாம் சாப்பிட்டதே இல்லை. எனக்கும் வாங்கிக் கொடுங்க" எனக் கேட்கவும், " உனக்கு இல்லாததா பேபி" எனக் கடையவே வேண்டும் விலை பேசியவன், கத்தை நோட்டை அவள் கையில் கொடுத்து, " அங்க இருக்கிறவங்களுக்கு எல்லாம் போடு பேபி. நான் வாங்கிட்டு வரேன்" எனச் சத்தியன், சங்கீதாவை அவர்களோடு அனுப்பினான்.

ஆதிரா, மகிழ்ச்சியோடு, இயலாதவர்களுக்கு, ஐநூறு ரூபாய் நோட்டைப் போடவும், " தாயி, அம்மணி " எனச் சூழ்ந்து கொண்டனர். " எல்லாருக்கும் கொடுப்பாங்க இருங்க" எனச் சத்தியன் அவர்களை ஒழுங்கு படுத்த, அதற்குள், மற்றொரு கூட்டம் படி ஏறியது.

 அபிராம் அவசரமாக ஆதிராவிடம் வந்தவன், அவள் கையிலிருந்த பண நோட்டுகளை வாங்கிக் கொண்டு, " நீ வேன்ல போய் உட்கார் பேபி. நான் கொடுத்துட்டு வர்றேன்" எனச் சத்தியனோடு அனுப்பி விட, அவர்களது டெம்போ வேன் கிளம்பத் தயாராக நின்றது, சத்தியன், சங்கீதாவையும், ஆதிராவையும் ஏற்றி விட்டு, அவனும் ஏற வர, அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு, வேன் கதவை அடைத்துக் கொண்டு, மலைப் பாதையில் வேகமாக இறங்கியது.

சத்தியன், " டேய்" எனக் கத்தியவன், வேன் பின்னாடியே ஓட முயன்று விட்டு, சுதாரித்து," அபிசார்" எனக் கத்தி விசயத்தைச் சொல்ல, " ஷிட் " எனக் கத்தி, படியில் மற்றவர்களை இறங்கச் சொல்லிவிட்டு , வேறு ஒரு வண்டியை அவசர உதவியாகப் பெற்று, கம்பெனி வண்டியைப் பிடிக்க முயல, வண்டி அடிவாரம் தாண்டி, ரோட்டில் நின்றது. 

தாங் காட் என உள்ளே சென்று பார்க்க, சங்கீதாவையும், அவர்கள் ட்ரைவரையும் கட்டிப் போட்டு, ஆதிராவை கடத்தியிருந்தனர்.

அபிராம், " ஓ காட், நிஜமாவே கடத்திட்டான். மாமாவுக்கு என்ன பதில் சொல்லுவேன். ஆரா பேபி" எனத் துடித்தவன், கீழே இறங்கி விசாரிக்க அங்கு எவருக்கும் தெரியவில்லை.

அபிராம், கே ஆரின் பாதுகாப்புப் படைக்குப் போன் அடிக்க "நீங்க சொன்ன மாதிரி, கம்பெனி வண்டிக்காகத் தான் சார் வெயிட்டிங்" என அபிராம் நின்ற இடத்திலிருந்து, அரைக் கிலோமீட்டர் தொலைவில் நின்றவர்களிடம், அவசரமாக விசயத்தைப் பகிர்ந்து, வேற ஏதாவது வண்டி கிராஸ் ஆனதா என விசாரித்தான்.

கைலாஷ் மகளுக்குப் போன் அடித்து, எடுக்க வில்லை எனவுமே அபிராம்க்கு போன் அடித்து விட்டார். அந்த நேரம் தான் உச்சபட்ச டென்ஷனோடு அவன் ஆதிராவை தேடிக் கொண்டிருக்க, கைலாஷ் நம்பரைப் பார்க்கவுமே, வேறு வழியில்லாமல் எடுத்து அவசரமாக விசயத்தைச் சொல்லி விட்டான்.

மகள் கடத்தப் பட்ட விசயம் அறியவுமே, உடல் இறுகியவர், " இப்ப எங்கிருக்கிற " என விசாரித்தவர், வை நான் வாரென்" என்றவர், தன் போனில் மகளின் இருப்பிடம் அறிய, சில செயலிகளை இயக்கினார்.

கைலாஷ், "என்ர பொண்டாட்டியும் புள்ளைகளும் சொல்லும் போது கூட, அவிக எக்ஸாகிரெட் பண்றாங்கன்னு நினைச்சேனேடா, கடைசியில உங்க புத்தியை காட்டிட்டீங்க, என்ர மகளை என்ர இடத்தில வச்சேவா தூக்குனீங்க, வரேண்டா என்ர ஆட்டத்தைப் பார்க்க ரெடியா இருங்க" எனப் பொறுமியவர், வரிசையாகப் போன் போட, கோவையின் நான்கு புறங்களிலும் தேடுதல் வேட்டைத் தொடங்கியது.

"சிட்டிக்குள்ள வர்றது, சிடியிலிருந்து வெளிய போறது, பழைய மில்லு,கோடான் ,நமக்கு எதிரி கம்பெனி எவேன்னு பார்த்து, விசாரிங்க" எனச் சம்பத், மற்றும் அவரைப் போன்ற செக்யூரிட்டி ஆபீஸர்களுக்கும் போன் அடித்தவர்,மேலும் பல கட்டளைகளை இட்டவர்,சத்தியனிடம் போன் செய்து, கடத்தியவனைப் பற்றிய தகவல்களைக் கேட்க , அவன் தான் அறிந்தவரை சொன்னான். 

“ மற்ற புள்ளைகளையெல்லாம் பத்திரமா, மில்லுக்கு கொண்டு வந்து சேருங்க, என்ர மகளை நான் பார்த்துக்கறேன்.” என அப்போதும், தகப்பன் ஸ்தானத்திலிருந்து மில் தொழிலாளிகள் நலனை யோசித்து கட்டளையிட்டவர் , அடுத்து மனைவி, தாய், தந்தைக்கு  தெரியக் கூடாது என முடிவெடுத்தார்.

பாரு, பாருவுக்கு எதுவுமே தெரியக் கூடாது என நினைத்து பைரவிக்குப் போன் செய்தவர், " ராஜ், ரஜ்ஜும்மா, இங்க தான இருக்கா. போன் போட்டேன், ரிங் போயிட்டே இருக்கு, எனக்குப் படபடங்குது" என எடுத்தவுடன் அவசரமாகக் கேட்க, நொடியில் சமாளித்தவர்,

" அதைச் சொல்றதுக்குத் தான், பாரு போன் போட்டேன். ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ண டின்னர் மீட் இருக்கு, அபியையும், ரஜ்ஜூம்மாவையும் கூட்டிட்டு போறேன். நீ என்னை எதிர்பார்க்காத, சாப்பிட்டு மாத்திரையைப் போட்டுத் தூங்கு" என இயல்பாய் சொல்ல, 

பைரவி ஏகப்பட்ட குறுக்குக் கேள்விகளைக் கேட்கவும், " இனிமே வர்ற விசேசத்துக்கு எல்லாம் உன்னைக் கூட்டிட்டு போறேன், கைலாஷ்- பாருவா, ஜோடியா போய் இறங்குவோம். சரிங்களா அம்மணி. கல்யாணம் முடியவும், ஹனிமூன் போகோணும், எத்தனை நாள் என்னை ஏமாத்துவ. உடம்பை தேத்து" என அவர் சிரிக்க,

 " ஓ, ராஜ்" எனவும், " ஆப் கோ ஷரம் நஹி ஆயி, " எனப் பைரவியைப் போலவே சொல்லிக் காட்டிய ராஜன், " இது தானுங்களே அம்மணி சொல்லுவீங்க . எனக்கு வெக்கமெல்லாம் கிடையாது. சாப்பிட்டுத் தூங்கு. லேட் நைட் தான் வருவேன்" என மனைவிக்குச் சந்தேகம் வராதபடி சரசமாகப் பேசியவரின் கைகளில் வண்டி நூற்றுச் சொச்சத்தில் பறந்தது.

கௌரிக்கும், பைரவியைச் சாப்பிட்டு, உறங்க வைக்க உத்தரவு வர, அவர் கவலையோடு வினவவும், " கொரில்லா போரில் வேணா போஸ்லேகள் எக்ஸ்பேர்டா இருக்கலாம் மாஸிமா. ஆனால் எதிர்த்து நின்னு அடிக்கிறதில, எங்களைத் தாக்குப் பிடிக்க முடியாது. பாருவுக்கு எதுவும் தெரியக் கூடாது. தூக்க மாத்திரையைக் கொடுத்தாவது, தூங்க வச்சிருங்க. " எனக் கட்டளையிட்டார்.

கைலாஷின் கைகளில் அவரது அந்த முரட்டு வாகனம், அரேபிய குதிரையின் வேகத்தில் பயணித்தது, அக்கணமே மகளை அரவணைக்க துடித்தது. “என்ர , கோட்டைக்குள்ள வந்து, என்ர மகளையே தூக்குற சூரன் யாருடா , பார்த்துருவோம் ஒரு கை “ என அவரது மனம் உலைக்களமாக கொதிக்க, ஆதர்ஷ் அதே ஆக்ரோஷத்தோடு போன் அடித்தான். 

“உனக்கும் தகவல் வந்துடுச்சா கண்ணு , அங்க தான் போயிட்டு இருக்கேன்” என்றவரின் குரலில் பதட்டத்தை உணர்ந்தவன், “பாபா, டென்ஷன் ஆகாதீங்க , உங்க ரஜ்ஜுமாவுக்கு ஒன்னும் ஆகாது, இந்த முறை நீங்க தான் அவளை காப்பாத்துவீங்க , இந்த முறை , அவள் உங்ககிட்ட இருக்கா,ஆதிரா கைலாஷ் ராஜ், இன்னும் துணிச்சலா எதிரியைச் சமாளிப்பா “ என அவன் தந்த தைரியமான வார்த்தைகளில், தன்னை சற்றே நிதான படுத்திக் கொண்டவர், அவன் பாஸ் எனாமல், பாபா என்று அழைத்ததையும் கவனிக்க மறந்தார். 

“ஆமாங்கண்ணு  பாபா , என்ர ரஜ்ஜும்மாவை கூட்டிட்டு வந்துருவேன். ஆயிக்கு எதுவும் தெரியாது, அவகிட்ட விசாரிச்சிடாத “ என எச்சரித்தவர், அடுத்து அபிராமுக்கு போன் அடித்தார். 

ஆதிராவை கடத்தியது யார், அவளது அப்பாவும், காதலனும், அவளுக்குச் சேதாரம் எதுவும் வரும் முன்  கண்டு பிடிப்பார்களா 

பொறுத்திருந்து பார்ப்போம் .

நிலவு வளரும்.

Friday, 18 March 2022

யார் இந்த நிலவு- 37

யார் இந்த நிலவு-37 

சத்தாராவில் உள்ள ரமாபாயின் போஸ்லே மாளிகை. சற்று நேரத்துக்கு முன் தான் கோவையிலிருந்து கைலாஷ் ராஜனின் பெற்றவர்களும், விஜயனும் பேசினார்கள். பாலநாயகம் , சம்பந்தியம்மாவிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசவும், பைரவி, விஜயனை அழைப்பது போலவே, ரமாபாய் , பாலநாயகத்தை, “நமஸ்தே பாய்ஸாப், இருபத்திரண்டு வருஷம் முன்னாடி , இதே போல நான் உங்கள்ட பேசியிருந்தா, என் மகள் இவ்வளவு கஷ்டப் பட்டிருக்க மாட்டா. குன்னூர்ல உங்க கிட்ட தான இருந்தா, உங்க எல்லாரையும் பற்றிப் பெருமையா சொல்லுவா” என ஆரம்பிக்க,

ராஜகுடும்பத்துக்குரிய மிடுக்கோடு பேசுவார் என எதிர் பார்க்க, ரமாபாய் தன்மையாகப் பேசியதில், “வணக்கம்மா , அருமையான பொண்ணைப் பெத்து வளர்த்திருக்கீங்க அம்மா, எங்களுக்குத் தான், அந்த மருமகளை வச்சு சீராட்டக் கொடுத்து வைக்கலைங்க” என மருமகள் புராணம் பாடியவர், “இனி பழசைப் பேசி என்ன ஆகப்போகுதுங்க, வருங்காலத்தையாவது அவிக நிம்மதியா வாழட்டும்” என்றவர் அவர்களுக்கு மறுதிருமணம் செய்வதைப் பற்றிச் சொல்லி அழைப்பு விடுத்தார்.

“ரொம்ப நன்றி பாயிஸாப்,நான் உங்களுக்குக் கடமை பட்டிருக்கேன், ஒரு மகளுக்குச் சீரும் சிறப்புமா செய்ய முடியலைன்னு எவ்வளவு வேதனை பட்டிருக்கேன், எல்லாத்துக்கும் ஒரு விடிவு காலம் “ எனப் பேசும் முன் இருமியவர் , “நான் கட்டாயம் வர்றேன், நானாசாப் கிட்ட பேசுங்க “ என ஆதரசிடம் கொடுத்தார். அவனும், தாத்தா ,ஆத்தா எனப் பேசியவன்,மன நிறைவாய் போனை வைக்க, ராதா, பாலாஜியையும் அழைத்து, கோவை செல்வதைப் பற்றி ஆலோசனை செய்தனர்

ரமாபாய் , “ இருபது வருஷம் முன்னாடி என் மகளுக்குச் செஞ்சு பார்க்காத நல்லதையெல்லாம் ,இப்போ செஞ்சு பார்க்க போறேன், ராதா, போஸ்லே குடும்பச் செல்வாக்கு என்னனு காட்டணும், பைரவி, கணபத் ராய் வாரிசுன்னு காட்டணும்.நானாசாப், நமக்கு விசுவாசமானவங்க, உறவுகாரங்க, சீர் வரிசையை ஏற்பாடு பண்ணு , நாளைக்கே போய் இறங்குறோம்”என ஆவேசமாகப் பேச, அப்படியே நானிமா எனக் கட்டளையை நிறைவேற்ற ஆயத்தமானவன், “உலகத்திலேயே, ஆயி, பாபாவுக்குச் சீர் செஞ்சு,ஷாதி செய்து வைக்கிற முல்கா நானா தான் இருப்பேன்’ மனதில் பெருமைப் பட்டுக் கொண்டவனின் அலை பேசி அழைத்தது. அதற்குச் செவி கொடுத்தவன், “தொடர்ந்து கண்காணித்து, தகவல் கொடுங்க” என்றவன் நானிமாவிடம்

“உங்க தாமாத் கைலாஷ் ராஜன், தன் ருத்ர தாண்டவத்தை ஆரம்பிச்சுட்டார், “ என அறிவிக்க, ரமாபாய் யோசனையாகப் பார்த்தார்.

“நேற்று ஆயியை தன ரூமுக்கு தூக்கிட்டுப் போனார், இன்னைக்குக் காலையில் , ஜெயந்த் மகராஜ் உல்லாச மாளிகையிலிருந்து வரும் போது , ஆக்சிடென்ட் ஆகியிருக்கு “ என இரண்டையும் கோர்த்துச் சொல்ல, ரமாபாய் புன்னகையோடு,” உன் ஆயி தான் தூக்கத்திலேயே புலம்புவாளே ,அவருக்கு உண்மை தெரிஞ்சிருக்கும், சபாஷ். இதைத் தான் முன்னையே எதிர் பார்த்தேன். பைரவி பாய் திரும்பி வர்றனா, சோலாப்பூரும், பீபீ மில்சும் அலறணும், இந்தத் தடவை ஆர்ப்பாட்டமா போறோம் நானாசாப், தயார் கரோ ” எனக் கிழட்டுப் பெண் சிங்கமாய்க் கர்ஜித்தார் ரமாபாய்.

கேஆர் மாளிகையில், கைலாஷ் வாயைத் திறந்தாலே, மாமனாருக்கும் , மருமகளுக்கும் டென்ஷன் தான். பைரவியை, என்னைக் கல்யாணம் கட்டலேன்னா , ஜெயந்தை கட்டியிருப்பா , என எகத்தாளம் பேச காரணம், மாங்காயை தட்டியாச்சு என வந்த செய்தி தான், இவர் அதற்குமேல், உப்பு மொளகாபடி தூவி விடு “ எனப் பதில் அனுப்ப, முன்பு அவருக்குப் பீபீ மில்ஸில் வேலை பார்த்த பொழுது தோஸ்தாக இருந்த திலக்ஜி , க்யா என அதிர்ந்தார். அவர் குறிப்பிட்ட மாங்காய் ஜெயந்த் மஹராஜ் தான்.

நண்பனின் விசித்திரமான புன்னகையில், சுதாரித்த விஜயன், “என்றா , என்ன வேலைத்தனம்,எதோ வில்லங்கம்னு மட்டும்தெரியுது” என ரகசியமாய் வினவ குறுஞ் செய்தியைக் காட்டியவர், “உன்ர தங்கச்சிகிட்ட போட்டு விட்ட, பிச்சு போடுவேன், அவன் என் பாருவை நெம்ப நோகடிச்சிருக்காண்டா “ எனவும், “நல்லா வச்சு செய்யி, கதறட்டும் அந்த நாயி ” என விஜயன் டென்ஷனாகவும், "வெள்ளைக்கொடி காட்டிட்டு அலையற உன்னையவே பச்சைக் கொடி காட்ட வச்சிருக்கான் பார், பங்காளி தரமான பொருக்கி தான்" எனவும், "இது எப்ப" என்ற விஜயனிடம், "லைவ் ரிலே, கொஞ்சம் டிலே " எனப் புன்னகைக்க, பைரவி பெரியவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே இவர்களை முறைத்துக் கொண்டிருந்தார், 'தங்கச்சிமா பார்க்குது, அடக்கி வாசி" என எச்சரித்தார் விஜயன்.

முன்னதாகப் பாலநாயகம் , மருமகளை ஜெயந்தோடு சேர்த்துப் பேசியதில் கோபமானவர், “அவன் அப்படித்தான் கண்ணு பேசுவான், வாய் கொழுப்பெடுத்தவன், நீ போய் நேரத்துக்குச் சாப்பிடு” என அனுப்பி விட, "நான் இப்ப தான் மாத்திரை போட்டேன்,பத்து நிமிஷம் ஆகணும்,நீங்க வாங்க மாமா " என வசந்த விலாச வாசிகளைமுதலில் காலை உணவுக்கு உட்கார வைத்தார் பைரவி. அவர்கள் சாப்பிட்டு முடியவும், அவர்கள் வழக்கமான செக்கப்பை பற்றிப் பேசவும், சாரதா, அபரஞ்சி, "இது தான் பவானி, கரெக்ட்டா எல்லாத்தையும் நியாபகம் வச்சுக்குவா கண்ணு" எனச் சிலாகித்தனர்.

அபிராம், அவர்களை மேற்கொள் காட்டி "ஏனுங்க மாமா,நீங்க நேத்திக்குப் பேசினதெல்லாம் அத்தைக்கு நியாபகம், இருக்குதுங்களா, அவிக சிரிச்ச முகமா இருக்கிறதை பார்த்தா, அப்படித் தெரியலைங்களே" என வினயமாகக் கேட்கவும், " மாப்பிள்ளைங்க ,என்ர பொண்டாட்டியை எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும், நீங்க உங்க வேலையைப் பாருங்க" எனக் கடிய, "அங்க பாருங்க, நீங்க சாப்பிடவாறீங்கன்னு தெரிஞ்சும் , அந்தப் பக்கம் போறாங்க" என வம்பிழுக்க, அபிராம், விஜயன், ஆதிராவை சாப்பிட அனுப்பியவர், மனைவியை நோக்கி வந்தார்,

“பாபி, ரஞ்சனியை மட்டும் விட்டுட்டு வந்துடீங்களே” எனப் பைரவி குறைபட, “காலேஜ் போயிட்டாளுங்க அண்ணி “ என இருவருமாகப் பேசிக் கொண்டிருக்க,கணவரும் மகனும் சாப்பிட செல்வதைப் பார்த்த்து, "இதோ வந்திறேனுங்க அண்ணி "எனக் கஸ்தூரி வேகமாகப் பரிமாற்ற செல்ல, ,பைரவி அதே இடத்தில் கணவர் மீது கோபத்தோடு அமர்ந்திருந்தார்.

, “ஏனுங்க அம்மணி நீங்க சாப்பிடலையா .மாத்திரை போடனமில்லா வா அம்மணி” என ராஜன் அழைக்க வர, பைரவி ,"நீங்க சொன்னதில்லையே மனசு நிறைஞ்சு போயிடுச்சு, வேண்டாம் " என முறுக்கினார்.

“அடேங்கப்பா, கோபமாக்கும், உண்மையைத் தான சொன்னேன், " என மீண்டும் வம்பிழுத்தவர், " இப்ப நீ எந்திரிச்சு வரலையினாக்கும், எல்லார் முன்னாடியும் கிஸ் அடிப்பேன், உன்ர மகள் வேற இருக்கா, வசதி எப்படி” என மனைவியிடம் குனிந்து, தணிந்த குரலில் கேட்க, “உங்களை” என முறைத்தபடி உடன் வர, கைலாஷ் உல்லாசமாகச் சிரித்தபடி மனைவியைச் சாப்பிட அழைத்து வந்தவர், மருமகனை பார்த்து ஒரு லுக் விட, "உங்க லெவலே வேறயிங்க மாமா" எனச் சரண்டர் ஆனான்.

“மாம்ஸ், இன்னைக்கு என்ன ஒரே ஜாலி மூட்ல இருக்கீங்க “ என அபிராம் அடுத்தக் கேள்வி எழுப்ப, “பழைய பங்காளி ஒருத்தனுக்குப் பொறந்தநாள் கொண்டாடினேன் மாப்பிள்ளை” எனப் பூடகமாகவே பேச,விஜயன், பைரவியைப் பார்த்தபடி சிரித்ததில் அவர் யோசனையில் ஆழ்ந்தார்.

“பாபா,அதெப்படி ஆயிக்கு ஷாதி நடக்குதுன்னு தெரிஞ்சு போனீங்க” என ஆதிரா விவரம் கேட்க,”உன்ர நானிமாவும் எனக்குச் சப்போர்ட்டு ரஜ்ஜுமா , அவிக துப்பறிஞ்சு ஏற்பாடு செஞ்சு வச்சிருந்தாங்க” என அவர் விவரம் சொல்லப் பெரியவர்களும், ஆதிரா அபிராமும், அவர்கள் கதையைக் கேட்டிருந்தனர். விஜயனும் விளக்கினார்.அந்த நாளைய நினைவில் பைரவியின் கண்களில் எல்லாம் கலந்த ஓர் உணர்வு தெரிந்தது.

ஆதிரா கட்டாயக் கல்யாணத்தைப் பற்றிக் கேட்கவும், கைலாஷ், " உன்ர ஆயிக்கு சில நம்பிக்கை உண்டு, அதை மீற மாட்டா. இதைச் சாதகமா வச்சு தான், உன்ர பெரியம்மா வூட்டுக்காரன், உன்ர ஆயியை இரண்டாம் தாரமா கல்யாணம் கட்ட ஏற்பாடு செஞ்சான்" என அன்றைய நிகழ்வுகளைச் சொல்ல,

ஆதிரா, " ஆயி, அப்ப யாராவது வலுக்கட்டாயமா தாலி கட்டினாலும் ஒத்துக்கிறதா. இது என்ன நியாயம்" என அவள் ஆட்சேபிக்க, சௌந்தரி முதலான மூத்த தலைமுறை, " அந்தக் காலத்தில் அப்படித் தான கண்ணு இருந்துச்சு" எனப் பேச்சு ஓடியது.

" அதெல்லாம், அந்தக் காலம், அது உன் ஆயி ஊர்ல உள்ள பழக்கம். நம்மூர்ல அதெல்லாம் செல்லுபடியாகாது கண்ணு. ஒரு பொண்ணு மனசார ஏத்துக்கிட்டா தான், கட்டினவனே புருஷனாக முடியும் " என ராஜன் தமிழ் மண்ணுக்கே உரியப் புரட்சி கருத்தைச் சொல்ல, பைரவி முறைப்பையும் பொருட்படுத்தாது ஆதிரா பாபாவைச் சிலாகித்தாள்.

சோலாப்பூரில், போஸ்லேக்கள், பவானியின் இதே நம்பிக்கையைப் பயன்படுத்தி, ஆதிராவை மஹந்த் , கட்டாயத் திருமணம் செய்து விட்டால், சொத்து வரும், அதன் பின் விளைவுகளைச் சமாளித்துக் கொள்ளலாம் எனத் திட்டம் போட்டனர்.

மஹந் தனது அடுத்தத் திட்டத்தைச் செயல்படுத்த , கோவையை சுற்றியபடி தயாராக இருந்தான். ஏற்கனவே இரண்டு முறை, ஆதிராவை கடத்த முயன்று தோற்றிருந்தவன், இந்த முறை மில்லை விட்டு அவளை வெளியே வரவழைத்தோ, அல்லது மில்லிருந்தே தூக்கவோ, துணிந்து முயல்வதாக இருந்தான்.

ஜெயந்தின் , ஆக்சிடென்ட் செய்தியைக் கேட்ட மச்சினங்களும், மருமகன்களும்  , “அப்படியாவது வீட்டில் அடங்கிக் கிடக்கட்டும் “ ,சம்பிரதாயத்துக்கு மருத்துவ மனைக்குச் சென்று பார்த்தனர்.விபத்து என்றே பார்த்தனரே ஒழிய இதில் கைலாஷின் கை இருக்கும் எனக் கனவிலும் என்ன வில்லை.அப்படிப் பயந்திருந்தால், மஹந்த்தின் விபரீதமான திட்டத்தைக் கை விட்டிருப்பார்கள். விதி யாரை விட்டது.

பைரவி, கணவரிடம், " என்னோட நம்பிக்கையைக் குறைச்சு சொல்லாதீங்க ராஜ் . ஆயி பவானி, ஆசி இல்லாமல், நம்ம இத்தனை வருஷம் கழிச்சு சேர முடியுமா" என வாதாட,

" அதையே முன்னுதாரணமா காட்டாத. இந்தக் காலத்தில் அதெல்லாம் ஒத்து வராது. இந்த மில்லில் , எத்தனை பொம்பளை பிள்ளைகள் இருக்கு, கண்ணும் கருத்துமா பார்க்கையிலேயே, பத்தில ஒண்ணு ஏமாந்து வருதுங்க, இல்லைனா பாலியல் வன்முறை" என ராஜன் ஆட்சேபிக்க, விஜயனும், அபிராமூமே அதை ஆதரித்தனர்.

" சரி, இந்தப் பேச்சு போதும் விடுங்க. கல்யாண வேலையை ஆரம்பிக்கோணும். " எனச் சௌந்தரி அதைப் பற்றி விவாதிக்க, அதிலும் ராஜன், " ரொம்பவெல்லாம், யாரும் அலைய வேண்டாம். ஆளுகளை வரச் சொல்லுவோம்" என முடித்து விட,

பாலா “எல்லாம் இவன் வச்ச சட்டம் தான் “ என மகனை நொடிக்க , ராமசாமி, “விடு மச்சி, ராஜன் பவானி “கல்யாணம் நடந்தா சரி தான் எனச் சொல்ல, “மாமா, பவானி இல்லை பைரவி, இல்லையினா பார்வதின்னு சொல்லுங்க” எனத் திருத்த, "சரிங்க மாப்பிள்ளைங்க "என ராமு பவ்யமாகச் சொல்லவும் ,மற்றவர்கள் சிரிக்க,பாலா மகனை முறைத்தார்.

ராஜனே ,"மாமா, பவானிங்கிறது அவிக அக்கா பெயர், அவிக அக்கா புருஷன் அந்தாளு தான் பொம்பளை பொறுக்கி, உங்க மருமகன் இந்த விஷயத்தில் ராமனில்லைங்கலா , அதுக்குத் தான் சொன்னேனுங்க, குடும்பத்தில குழப்பம் வந்தி கூடாது பாருங்க" என மனைவியைப் பார்த்துக் கொண்டே அவர் கமெண்ட் அடிக்க, "இப்படி வேற உங்களுக்கு நினைப்பு இருக்கா" என்றார் பைரவி.

" அம்மா, எங்க மாப்பிள்ளை சொன்னாலும் சொல்லலைனாலும் ராமன் தான். அவர் பேரை வேணா, நாமளும் கைலாஷ் ராம் னு மாத்திடுவோம்" என்றார் பன்னீர்.

"ஏற்கனவே இரண்டு ராம் இருக்கோம்,போதும், அவர் ராஜானாவே இருக்கட்டும் " என்றார் ராமசாமி.

"இன்னொரு ராம் யாருடா" எனப் பலநாயகம் புரியாமல் கேட்கவும், "அட என்ர பேரன் தான், உன்ர பேத்தி அப்படித் தானே கூப்பிடுது, அது ஒவ்வொரு தரமும்,ராம், னு கூப்பிடையில் நம்மளாதான் கூப்பிடுதாக்கும்னு ஏமாந்து போறேன்" என அவர் சோகமாகச் சொல்ல,

" உன்னை யாருடா ராம் னு கூப்பிட்றது,நீ ராமுப்பய தானே " என்றார் பாலா.

"ஏனுங்க மாமா,தனியா இருக்கையிலே அத்தை கூப்புடுவாங்களா இருக்கும், அது தான் , என்ர மகள் கூப்பிட்டாலும் திரும்பி பார்க்கிறிங்க "எனக் கைலாஷ் கேலி பேச,

"யாரு , உங்க அத்தை , அவ கூப்பிட்டாலும், அப்படிக் கூப்பிட்டிருந்தா தான் இன்னும் இரண்டு புள்ளை பெத்திருப்பேனுங்களே மாப்பிள்ளை, உங்களுக்காவது, இன்னும் இரண்டு சாய்ஸ் கிடைச்சிருக்கும் " என ராமசாமி மனைவியைச் சேர்த்து வம்பிழுக்க,

"மாமா, ஆளை விடுங்க, என்ர உசிர வாங்க , உங்க மகன் ஓருத்தனே போதும்" என ராஜனும், "தங்கச்சிமா , உன்ர புருஷன் பேசறதை கேட்டியா" எனப் பாலா கோர்த்துவிட,

"உங்க பிரண்டை, திரும்பி என்னைப் பார்த்துச் சொல்லச் சொல்லுங்க அண்ணா , பதில் சொல்றேன் " என்றார் ரஞ்சி. பைரவி,"நானே கேட்கணும்னு நினைச்சேன்மா " என விவரம் கேட்க,

"பொண்டாட்டி சிரமப் படக்கூடாதுன்னு, அவன் போய் ஆபரேஷன் பண்ணிக்கிட்டான் மா" எனச் சுப்பிரமணி விளக்கம் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரா, ஆச்சர்யமடைந்து, "ஸ்வீட் ராம் தாத்தா" என ராமசாமியைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட, மற்றொரு ராம் முறைத்தான். அதையும் கேலி செய்தது சிரித்து மகிழ்ந்தனர்.

நகை, துணிமணி, பலகாரம் , விருந்து எனக் கே ஆர் மில்லே தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தேற, எட்டு நாள் கழித்து முகூர்த்தம் குறித்து இருந்தனர். அதற்கு அடுத்த நாள்,ராஜன் தனது குடும்பத்தை அறிமுகப்படுத்தி, சில முக்கிய முடிவுகளை அறிவிக்க இருந்தார்.

அன்று பகலில்,கல்யாண ஏற்பாடுகள் பற்றிப் பேசி மும்மரமாக இருந்தவர்களை , மதியம் ரெஸ்ட் எடுக்க, எனக் கட்டாயமாகச் சங்கத்தைக் கலைத்து , பெரியவர்களை ஓய்வெடுக்க அனுப்பி விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு தனது அறைக்கு வந்து விட்டார் கைலாஷ்.

“அப்ப , அப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கப் பாரு, எதுக்கு எல்லா வேலையும் இழுத்து போட்டுக்குற, நீ ஓடி, ஓடி சேவகம் பண்ணதெல்லாம் போதும், இனிமேலாவது எனக்காக வாழப் பழகு”என் கடிந்தவர்,மனைவியைப் பெட்டில் உட்கார வைத்து, மாத்திரை,தண்ணீரையும் கொடுத்துப் போட சொன்னார்.

அவரையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்த பாரு,”ராஜ்” என அழைத்து அருகில் அமர்த்தி அவர் தோளில் சாய்ந்து கண்மூடிக் கொண்டார்.

“என்னவாம் அம்மணிக்கு, நல்லாதான் படுத்துத் தூங்கிறது” என்றவர், தலையணை இருக்குமிடம் தள்ளிச் சாய்ந்து உட்கார்ந்து, மனைவியை வசதியாகச் சாய்த்துக் கொள்ள, “நான் உங்களை ரொம்பத் தவிக்க விட்டுட்டேன், எனக்காவது ரஜூம்மா இருந்தா, நீங்க எந்தப் பிடிமானமும் இல்லாமல் எப்படி இருந்தீங்க” என வருந்தவும்,

“யார் சொன்னது பிடிமானம் இல்லைனு, பீபீ மில்ஸ்ல நீ செய்ய நினைச்ச மாற்றத்தையெல்லாம் கொண்டு வரேன்னு, உன் கனவு வார்த்தை ஒவ்வொன்னையும் நிறைவேத்தனும், அப்பா,அம்மா காலத்துக்குப் பிறகு, உன்கிட்ட வந்தரனும்ன்னு நினைச்சிருந்தேன், கடவுள் ,எம்பட மேல கொஞ்சமா கருணை வச்சு இப்பவாவது அனுப்பிவிட்டானே , அதை நினைச்சு சந்தோச பட்டுக்குறேன் “ என மனைவியின் நெற்றியில் முத்தமிட, "ம்" என அவர் மார்பில் வசதியாகச் சாய்ந்திருந்தார், இப்படி இருப்பதில் தான் எத்தனை நிம்மதி,சுகம். தனக்கு நல்லது,கேட்டதை யோசித்து அதைச் செய்ய ஒருவர், இன்று தான் முழுமையாக ராஜனின் ராணியாக உணர்ந்தார். மோனா நிலையிலேயே இருவரும் லயித்து இருக்க,

“பாபா, ஆயி “ என வெளியிருந்து கதவைத் தட்டினாள் ஆதிரா, “உள்ள வாடாமா “ என அவர் குரல்கொடுக்க, பைரவி அவசரமாகக் கணவரிடமிருந்து விலகப் போனார், “அட நம்ம மகள் தானே வருது, சும்மா இரு” என மனைவியைக் கைவளைவிலேயே வைத்துக் கொண்டவர், புன்னகையோடு உள்ளே நுழைந்த மகளை, “வாடாம்மா “ என மறுகை நீட்டி அழைக்கவும், முதலில் அவர்கள் தனிமையில் குறுக்கிடத் தயங்கிய மகள் , “சும்மா வாடாமா, பேசிட்டு தான் இருக்கோம்” என அவர் கைநீட்ட, ஓடி வந்து அவர் கையைப் பற்றிக் கொண்டவள், பாபாவின் கன்னத்தில் மித்தமிட்டு விட்டு, அவர் தோளில் தலை சாய்த்திருந்த ஆயிக்கும் முத்தம் கொடுத்து, தன மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.

" ஆயி, ஐயம் ஸோ ஹேப்பி, பாபாவோட உங்களைச் சேர்த்துப் பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா. நீங்க இரண்டு பேரும் பர்பெக்ட் மேட்ச். சீரியஸ்லீ எனக்கு யாரு மேலையாவது, பொறாமை வந்துதுன்னா, அது பாபாவோட பாரு மேல தான். அப்ப அது நீங்க தான்னு தெரியாது. நீங்களும் பாபாவை எவ்வளவு உயர்வா சொல்லுவீங்க. இரண்டு பேருமே, ஒருத்தர் மேல, ஒருத்தர் எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்க. இரண்டு மாசம் குடும்பம் நடத்தினவங்க, அதை மனசில வச்சுக்கிட்டே இருபத்திரண்டு வருஷமா காத்திட்டு இருக்கீங்களே, ரியலி ஐ ப்ரவுட் ஆஃப் மை பேரண்ட்ஸ்" என உணர்ச்சி வயப் பட்டுப் பேசிக் கொண்டே போக, பாருவின் கண்களில் கண்ணீர்.

" ரஜ்ஜும்மா, என்னடா, என்ர பொண்டாட்டியை அழ வச்சிட்ட" என அவர் மனைவியின் கண்ணீரைத் துடைத்தபடி, மகளை வலது கையில் அணைத்துக்கொள்ள," ட்ரூ லவ், எவ்வளவு நாள் ஆனாலும் மாறாமல் இருக்கும். அதுக்கு நீங்க தான் சாட்சி" என மகள் பேசப் பேச, உணர்ச்சி வயப்பட்ட பைரவி,

" இல்லைடா ரஜ்ஜும்மா, உன் பாபா தான் , என்னை விட க்ரேட். ஒரு நிமிஷம், இவரைச் சந்தேகப்பட்டதுக்குத் தான், நான் இருபது வருஷம், வனவாசம் அனுபவிச்சேன். ஒரு வார்த்தை கேட்காமல் என்னை ஏத்துக்கிட்டார் பார்" என அழவும்,

“விடுங்க ஆயி,பாபாவே உங்களை ஏத்துக்கிட்டாங்கன்னா, பழசை எதுக்குப் பேசுறீங்க” எனக் கடிந்தவள், “வந்த விஷயத்தையே மறந்துட்டேன்” என்றவள், அலுவல் சம்பந்தமாக , சில சந்தேகங்களைக் கேட்டு, இதைச் செய்கிறேன் என அறிவித்து, 

"வரேன் பாபா, ஆயி சும்மா மனசை போட்டு குழப்பிக்காம, பாபாவோட ரொமேன்டிக் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க "எனக் கண் சிமிட்டியவள், ஆயி எதுவும் சொல்வதற்குள் கதவை அடைத்து பறந்து சென்றாள்

 "என்னமா ரெடியா, ரஜ்ஜூம்மா சொன்னது போலச் செய்யலாமா" என்ற கணவரின் குறும்பு பேச்சிலும், பார்வையிலும் வெட்கிய பைரவி, "உங்களை மாதிரியே, ரஜ்ஜூம்மாவையும் ,ஷரம் இல்லாமல் பழக்கி வச்சிருக்கீங்க, எப்படிப் பேசுறா பாருங்க" எனப் பாரு பொரிந்து தள்ள,ராஜனின் சிரிப்புச் சத்தம் அறையை நிறைத்தது.

ஆதிராவின் பிடிவாதம்,ஆயி போலவே அவளது நம்பிக்கை, ஆதர்ஷை கட்டாயப்படுத்தி முன் மாலை பொழுதில் மருதமலை சென்றாள். மஹந்தால் ஆபத்து வருமா,கைலாஷுக்கு தெரிந்தால் என்ன ஆகும் பொறுத்திருந்து பார்ப்போம்.

நிலவு வளரும்.