Saturday, 30 April 2022

யார் இந்த நிலவு -51

யார் இந்த நிலவு -51  

"தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

சிந்தை இனித்திட உறவுகள் மேவி

பிள்ளைகள் பேணி வளர்ந்ததுதிங்கே

மண்ணில் இதைவிடச் சொர்க்கம் எங்கே"

தன் குடும்பம், மகன், மகள்கள் அவரது துணைகள், பேரன் பேத்திகள் என ஒன்று சேர்ந்து வாழும் கற்பனையைத் தான், பல வருடங்கள் முன், பாலநாயகம், சௌந்தரியும் கண்டார்கள்

வீட்டுக்கு வரும் மருமகள், தம் குடும்பத்தின் மீது பாசம், பற்றோடு இருந்தால், நாடோடியாகத் திரியும் மகனையும் கட்டுக்குள் கொண்டு வந்து, மனை சிறக்க வாழலாம், என்றே ராஜனை நேசித்த நண்பனின் மகளை, மணமுடிக்க ஏற்பாடுகளைச் செய்தனர். எல்லாம் பகல் கனவாகச் சென்று விட, மகள்கள் திருமண வாழ்வாவது நன்றாக உள்ளதே என மனம் தேறினர்.

இன்று, கே ஆர் மில்ஸ் எனும் சாம்ராஜ்யத்தில், அதன் ராஜானனான கைலாஷ், மனைவி, மக்களுடன், இரண்டு பக்க சொந்தங்களுக்கும் நடுவில் தன் குடும்பம் என, அதே அரங்கத்தில் , தற்காலிகமாக அமைக்கப்பட்ட அறைக்குள் தங்கினார். அவரது விரலசைவில் விரைந்து நடந்த வேலைகள்.

கைலாஷ்- பைரவி திருமணம், கௌரி பூஜை, மணமகளைப் பார்க்கக் கூடாது, என்ற சகலத்தையும் உடைத்து, தனிப் பாணியில் அவர்கள் மணவிழா அரங்கேறிக் கொண்டிருந்தது.

இரவில், ஒரே அறையிலிருந்த போதும், கௌரி விரதம் எனப் பைரவி கணவரை, நான்கடி தள்ளியே நிறுத்த, " இதெல்லாம் ஞாயமே இல்லை அம்மணி. இருபத்திரெண்டு வருஷம், தவமிருந்திட்டேன், இன்னும் என்ன வேணுங்கிற" என அவர் ஆட்சேபிக்க, நான்கு ஒற்றைக் கட்டில்களை, வரிசையாகச் சேர்த்துப் போட்டு, ஆதர்ஷ் அதற்கொரு முடிவு கண்டான்.ஆயி, பாபாவுக்கு நடுவில் படுப்பது,தனது அண்ணனோடு சேர்ந்து குடும்பமாக இருப்பது ஆதிராவுக்குத் தான் கொண்டாட்டம். அவரவர் தமது, இயல்பான உடையில், இன்று இயல்பான ஓர் குடும்பமாக உணர்ந்தார்கள்.

ஒரு ஓரம், ஆதர்ஷ், மறு ஓரம் கைலாஷ் , நடுவில் பைரவியும், ஆதிராவும், என முடிவாக, அதிலும் மகளைத் தங்கள் இருவருக்கு மிடையில் இருத்திக் கொண்டார் பைரவி. கைலாஷ் புன்னகைத்துக் கொண்டவர், ஆளுக்கொரு, போர்வையைத் தந்து விட்டு, மகளுக்கு ஸ்பெஷலாக ஒரு பாஸ்மினா ஷாலையும் கழுத்தில் போட்டு விட்டவர், " நைட் நெம்பக் குளிரும் கண்ணு" என, அதிரடியாய் ஏற்பாடு செய்திருந்த குளிரூட்டி களை காரணம் காட்டி , மகளுக்கு ஸ்பெசலாகத் தர, “உங்க மக்களுக்கு மட்டும் தான் குளுருமாக்கும்” எனப் பைரவி அதற்கும் ஓர் முறைப்படி தந்தார்.

“அம்மாவும், மகனும் இதை விடக் குளிர் பிரதேசத்தில் இருந்தவிக தானே, உங்களுக்கு, பழகியிருக்கும், என்ர மகள் அப்படியா ” என அதற்கு ஓர் காரணத்தைச் சொல்லி மகளைக் கொஞ்சி, தனது இடத்தில் வந்து அமர, “ஐ லவ் யூ பாபா “ என அவர் மீது சாய்ந்து கொண்டே அவர் கையைப் பற்றியவள் " கை, வீங்கியிருக்கு பாபா" எனப் பதறவும், " ஒண்ணுமில்லை கண்ணு" என அவர் சமாதானம் சொல்ல, இது வரை ஓவர் கொஞ்சலா இருக்கு என வேடிக்கை பார்த்த அம்மாவும் மகனுமே, அவர் அருகில் வந்து, கையைப் பிடித்துப் பார்த்தனர்.

" இது எப்படி ராஜ், எங்கிட்ட சொல்லவே இல்லை" எனப் பைரவி, அவர் கையைத் தடவி விட, " இப்போ மட்டும் கௌரி விரதம் இல்லையாங்க அம்மணி" என இவர் நகைக்க, அவர் முறைத்து விட்டு, “யாரையாவது வெந்நீர் கொண்டு வர சொல்லு பாபா” என மகனிடம் வேலை ஏவினார்.

பத்து நிமிடத்தில் அவன் கேட்ட அத்தனையும் வந்து சேர, அதற்குள்,கைலாஷ் காய் வீக்கத்துக்குக் காரணம் கேட்டு, பதில் வாங்கி அதற்கு ஆட்சேபனையும் தெரிவித்திருந்தார் பைரவி. மகனும்,மகளும் ,இத்தனை வருடம் பிரிந்திருந்த போதும், உரிமையாகத் திட்டும் ஆயியையும், அதைக் கேலி, கிண்டலோடு ஏற்றுக்கொள்ளும் பாபாவையும் பார்த்து வியந்தனர்.

ஆதர்ஷ், வெளியே சென்று திரும்பியவன் , வெந்நீர் பய், பாத்திரம் மற்றும் சகல இத்யாதிகளோடு வர, ஆதிரா அதை வாங்கித் தன் பாபாவின் கைகளை, அதில் வைக்கச் சொல்லி, கை வீக்கத்துக்கு மருத்துவம் பார்க்க, " ஷ்… ஆ. ரஜ்ஜும்மா, நெம்பச் சுடுது கண்ணு" எனக் கைலாஷ், ஒரு ஆட்டம் காட்ட,

பைரவி, " ரஜ்ஜும்மாவே , சூட்டை பொறுத்துக்கிறா. நீங்க ஓவரா பண்ணாதீங்க ராஜ்" எனக் கடிய, ஆதர்ஷ் சிரித்துக் கொண்டான்.

ஆதிரா, தன் பாபாவின் கைகளுக்கு, ஆயி சொல்லச் சொல்ல சிகிச்சை செய்தாள், ஆதர்ஷ் அவர் கால்களுக்கு, சுடுநீர் பேகால் ஒத்தடம் கொடுத்தான்.

" விடு கண்ணு, அட வேண்டாம் கண்ணு, எனக்கு ஒண்ணுமில்லை. ஆயியை பாருங்க, அவளுக்குத் தான் நெத்தியில் காயமிருக்குது" என மறுத்தார் கைலாஷ்.

" ஆயிக்கும் செய்வோம் பாபா, முதல்ல உங்களுக்குச் செய்ய விடுங்க. சின்ன வயசிலே உங்க கையைப் பிடிச்சு நடந்ததில்லை, உங்க கூட இருந்ததில்லை, அபியும், ரஞ்சியும் சொல்லும் போது, எவ்வளவு பொறாமையா இருந்தது இந்தச் சாக்கை வச்சாவது பிடிச்சுக்கிறோம்" என ஆளுக்கொரு சேவகம் செய்ய, கைலாஷ், மகளையும் இரண்டு புறமும் அணைத்துக் கொண்டவர்,

" ஓஞ்சு, உட்கார வயசில, ஒத்தையா போயிடுவேன்னு நினைக்கிற நேரம், வந்து சேர்ந்திட்டிங்களே கண்ணு , உங்களுக்குத் தேவையான நேரத்தில் தான், பாபா இல்லாத போயிட்டேன்" எனக் குறை படவும், "எல்லா வயசிலையும், பாபா தேவை தான் ராஜ். நீங்க, உங்க அப்பா கூடச் சண்டை போட்டு நின்னாலும் , அவங்க உங்களுக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியும். நம்ம பசங்களும், தன வாழ்க்கையை நிர்ணயிக்கிற முக்கியமான காலக் கட்டத்துல இருக்காங்க, இப்போ தான் உங்க அரவணைப்பு அவங்களுக்கு வேணும். நீங்க என்னை விடச் சிறந்த பாபாவா இருப்பிங்க ராஜ்" என்ற பைரவி முக வாட்டத்தைக் காட்டவும்,

"உங்க ரெண்டு பேர் மேலையும், எங்களுக்குக் குற்றம், குறை எதுவும் இல்லை ஆயி" என ஆதர்சம், "நம்மளை சேர்த்து வச்சு பார்க்காத துல்ஜா பவனி மேல தன கோபம்" என ஆதிராவும் சொல்லவும்,

" இனிமே, போனதைப் பத்தி பேச வேண்டாம் கண்ணுங்களா. ஒவ்வொரு நிமிசமும், சந்தோஷமா வாழ்க்கையை அனுபவிப்போம். எனக்குச் சேவை தான செய்யோணும், இந்தச் செய்ங்க. உங்க ஆயி தான் விரதம், நம்பளுக்கு என்ன" என ராஜாவாகவே திண்டில் சாய்ந்து கொள்ள, அவர்களும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே மசாஜ் செய்தனர். பைரவி கண்குளிர பார்த்துக் கொண்டார், ,அவள் வார்த்தையை , மனசில எடுத்துக்காம இருந்திருந்தேன்னா, என் குடும்பம் இத்தை வருட பிரிவை சந்தித்து இருக்காதே' என நினைத்துக் கொண்டார்.

சற்று நேரத்திலேயே, " போதும் கண்ணுங்களா, உங்க ஆயி பொறாமையா பார்க்கிறா, அவளுக்குச் செய்ங்க" என இருவர் கைகளையும் பற்றிக் கொஞ்சினார். அதற்கும் ஆதர்ஷ், " பாபாக்கு, கை பரபரங்குது. நீங்க தான் ஆயி விடமாட்டேங்ககறீங்க" எனக் கேலி பேசியபடி எழுந்த மகனை, பைரவி முறைக்க, கைலாஷ் எதுக்குக் கண்ணு" என ஒன்றும் புரியாதது போல் வினவியவர், இருவரும் அர்த்தமாகச் சிரிக்கவும்,

" என்ர பொண்டாட்டியை, கொஞ்சறதுக்கா, அட நீங்க இருந்தா என்ன" என்றவர் பைரவி யோசிக்கும் முன், எட்டி அவரது தோளை அணைத்து, நெற்றி காயத்திற்கு மேல், இதழ் பதித்து விட்டு, " இந்தக் காயம் சீக்கிரம் ஆறட்டும் அம்மணி " என வாழ்த்தவும், பைரவி செங்கொழுந்து ஆனார். அதற்கும் மகனும் மகளும், " மஸ்து பாபா, படியா மஸ்து" எனக் கேலி பேசினர்.

பைரவியும், சாய்ந்து அமர்ந்தவர் ,தன் அருகில் வந்து அமர்ந்து, அவர் காயத்தைப் பரிசோதித்த மகனை, “எனக்கு ஒன்னும் இல்லை பாபா “ என்றவர், மகன் தாய்மடி வேண்டும், என்றதை நினைத்து கால் நீட்டி, மகனை அழைத்து,அவன் உங்களுக்கு ஏன் சிரமம் என்றதையும் பொருட்படுத்தாமல், பிடிவாதமாக மகனின் தலையைத் தன் மடியில் வைத்து படுக்க வைத்துக் கொண்டார். மறு புறம், தனகை , கால்களை அமுக்கிய மகளின் கைகளை முத்தமிட்டு, “என்ர தங்கப் பிள்ளை , பொண்ணு மயிலு கை படவுமே , வலியெல்லாம் பறந்து போச்சுடா” என அவள் விரல்களுக்குச் சொடக்கு எடுத்தார் கைலாஷ்’.

மகனின் தலையை வருடியபடி, "அன்னைக்குத் தான், என்னை முதல் முதல்ல பார்த்தியா பாபா" எனக் குன்னூருக்கு வந்து ஹார்ட் அட்டாக் வந்த தன்னைத் தூக்கி வந்ததைப் பற்றிக் கேட்கவும், அப்பாவும், மகளும் கூட ஆவலோடு அதற்கான பதிலை எதிர்பார்த்தனர்.

" உங்களை, பாபாவை, ஆதுவை எல்லாரையுமே, தூரத்திலிருந்து பார்த்திருக்கேன் ஆயி. சத்தாரால மாளிகை கட்டவுமே, நானிமா, அப்பப்போ கூட்டிட்டு வந்தாங்க. ஆதுவை , ஒரு ஸ்கூல்ல வச்சு பார்த்தேன்.உங்க கல்யாண நாளைக்கு, இரண்டு பேருமே சந்தன்கட் வருவீங்கன்னு, நானிமா கூட்டிட்டு வந்தாங்க. தனித் தனியா பார்த்திருக்கேன். உங்கள் எல்லாரையும் காட்டி, ஆபத்துகளைச் சொல்லி, நம்ம குடும்பம் ஒன்னு சேரணும்னு , மோட்டிவேட் பண்ணியே , என்னைத் தயாராகினாங்கன்னு தான் சொல்லணும் “ என அவன் சொல்லவும், பைரவியின் கண்களில் கண்ணீர். ஒரு சேர மூவருமே கண்ணீரைக் கண்டித்தனர்.

“சந்தோசமா இருக்கணுமுன்னு சொன்னேன்ல அம்மணி, நல்லதை மட்டுமே நினைச்சுக்கோ” என அவர் சொல்லவும், ஆதிரா தான் அடுத்தப் பேச்சை ஆரம்பித்து விட்டாள்,

திண்டில் ஒருக்களித்துச் சாய்ந்து படுத்திருந்த தன் பாபாவை ஒட்டி அமர்ந்து கொண்டவள், "பாவு, நீங்க பாபாக்கிட்ட, அவங்க லவ் ஸ்டோரியைக் கேட்டதில்லையே, செம ஃபீல். நம்ம ஆயி தான், அந்தப் பொண்ணுன்னு தெரியாமல், எனக்கே அவங்க மேல அவ்வளவு பொறாமை வந்தது. பாபா, ஆயியை முதல்ல பார்த்தது, மில்லில் பார்த்தது எல்லாம் சொல்லுங்க பாபா." என அவள் கதை கேட்க, ராஜன் ஹாஹாவென மனைவியைப் பார்த்தவாறே குலுங்கிச் சிரிக்க, அதில் பைரவியின் கன்னங்கள் செம்மை பூத்தது.

" ரஜ்ஜும்மா, சுப்கர், ஷரம் நஹி ஆயி. ஆயி, பாபாட்ட என்ன பேச்சை பேசுற" என வருவிக்கப் பட்ட கோபத்தில் பைரவி கண்டிக்க, ஆதர்ஷ் தன் அன்னையைக் கண்டு கொண்டவன்,

" நிஜமாவா ஆயி, பாபா அவ்வளவு ரொமான்டிக்கா, நீங்க சொல்லுங்க" என எழுந்தமர்ந்து, அவரைத் தோளோடு அணைத்துக் கொண்டு கேட்க, எதிரே திண்டில் சாய்ந்த படி இருந்தவர், அந்த நாளின் நினைவில், முதலில் பார்த்ததை வர்ணிக்க, பைரவி தான் நினைத்ததையும் சொன்னார்.

“உங்க ஆயி, ராஜ பரம்பரை, செம கெத்து.நான் சாதாரண ஆளு தான கண்ணு ” என அவர் சொல்ல, “ ஆஹா, சாதாரண ஆளு நீங்க, ஆதர்ஷ் பாபா, உன் பாபா சொல்றதை நம்பாதே. இப்பவே நினைச்சதை சாதிக்கிறார், அப்போ எப்படி இருந்திருப்பார். “ எனப் பைரவியும் விடாமல் கேட்டார்.

“ஏன் கண்ணு, இப்போ காசு பணம் வரவும், கொஞ்சமே பவர் வந்திருக்கு , இவிகளாட்டமா , பரம்பரையா பவரோட பிறந்தோம்” என மனைவி கூற்றுக்கு மறுப்பு சொல்லவும், “ பாபா, ஆயி சொல்றது ரைட், அவங்ககிட்ட, பைசா பவர் இருந்திருக்கலாம், ஆனால் உங்க கெத்தில் தானே , சோட்டி குமாரியே விழுந்திருக்காங்க, இல்லை ஆயில்” என ஆதிரா, ஏற்கனவே கதைக் கேட்ட அனுபவத்தில் சொல்ல, கைலாஷ் நகைப்போடும், பைரவி வெட்கம் கலந்த மென்னைகையோடும் அதை ஒத்துக் கொண்டனர்.

அன்று கைலாஷின் காதலை உணர்ந்த, ஆதிரா தன் ஆயி மேல் பொறாமை கொண்டால் எனில், இன்று ஆதர்ஷ், “ஆயி, கண் முன்னாடி, அந்த நாள் கைலாஷ் ராஜ் வந்துட்டாரா, இவ்வளவு ப்யார் “ என அன்னையின் கன்னத்தில் முத்தமிட, “சோடோ பாபா” எனப் பைரவி கண்ணை மூடிக் கொள்ள, “இதெல்லாம் நியாயமே இல்லை கண்ணு” என ஏக்கமாகச் சொல்லவும், “பாபா, உங்க கோட்டா முடிஞ்சது, மீதியை கண்டின்யு பண்ணுங்க” என மக்களும், மகனும் பெற்றவர் காதல், கதையைக் கேட்டிருந்தனர்.

தங்கள் , திருமணம், இரண்டு மாத இல்லறத்தில் இனிமையான பொழுதுகளைப் பேச, இருவரிடமும் இருந்த அன்யோன்யம் அவர்கள் பிள்ளைகளுக்கும் புரிந்தது.

“ ஆயி, பாபா ,நீங்க உடலால் பிரிச்சிருந்தாலும்,மனசால ஒண்ணா தான் வாழ்ந்திருக்கிங்க. உங்க பிள்ளைகள்னு சொல்றது, எங்களுக்குப் பெருமை தான் “ என ஆதர்ஷும் , “அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா, உங்களுக்கே பிள்ளைகளா தான் பிறக்கணும்” என ஆதிராவும் சொல்லவும் பெற்றவர்கள் உருகித் தான் போனார்கள். இனி எந்தப் பிரச்சனை வந்தாலும் , இந்தக் குடும்ப அமைப்பு கலையக் கூடாது என அவரவர் மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டனர்.

அடுத்த நாள், காலை மிகவும் இனிமையாகவே விடிந்தது. விடியலில் சீக்கிரம் முழிப்பு வரவும், பைரவி பிள்ளைகளையும், கணவரையும் பார்த்தவர், ஆயி பவானியிடம், தன் குடும்பத்தை இதே போல் என்றும் சேர்த்து வைத்திருக்க விண்ணப்பித்துக் கொண்டார்.

ஆயி துல்ஜா பவானி, செவி மடுப்பாளா....

(இரண்டு நாளாக வேறொரு வானொலி நிகழ்ச்சி கவிதைகள் தொகுக்கும் பணியில் இருந்ததால், இந்தச் சிறு பதிவு. கைலாஷின் இனிமையான குடும்பம்.)


Wednesday, 27 April 2022

யார் இந்த நிலவு -50

 யார் இந்த நிலவு -50 

விந்தையாய் பிறந்து ,தாய்மடி விடுத்து

வேறிடம் புகுந்து,அவர் தம் பிள்ளையாய் வளர்ந்து

பதின்ம வயதில் ராஜரீகம் பயின்று

தாய்வழி பகையை வேரறுத்து

தாயையும் தகப்பனும் சேர்த்து வைக்கப்

போராடும் இளங்குருத்து .

"அப்பாவென அவரை அணைத்துக் கொள்ள ஆசை தான்.

பாபாவெனப் பாய்ந்து தழுவி கொள்ள ஆசைதான்

ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்க்கும் எந்தை

என் ஒரு சொல் அழைப்பிற்காய் ஏங்கி நிற்கும் தந்தை!" 

"ஓர் முறை என்ன ஓராயிரம் முறை பாபா என அழைக்கிறேன், ஹே ஆயி பவானி, நீண்ட காலம் கழித்துக் கண்ணில் காட்டிய என் பாபாவைப் பறித்துக் கொள்ளாதே ‘ என மனதின் வேண்டுதலோடு ,விபத்து நடந்த இடத்துக்குச் சென்ற ஆதர்ஷ், கார் இருந்த நிலையைப் பார்த்துக் கதறி விட்டான்.

அபிராம் ஓடி வந்து ஆதர்ஷை அணைத்துத் தேற்றியவனுக்கும் கலக்கம் தான், அவனுக்கு அப்பாவும், மாமாவும் இருவரும் இதில் வந்தனரே, என நொடியில் பயணித்த நினைவு, ஏதேதோ கற்பனையைக் கொண்டு வர, இல்லை எனத் தன்னையே உலுக்கிக் கொண்டவன், ப்ளாக் கேட்ஸை விவரம் கேட்க, அவர்கள் கண்டைனர் வேனை கை காட்டினர்.

வேகமாக அங்கே விரைய, கண்டைனர் ட்ரக்கில், பின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த விஜயனையும், அவர் பின்னே, நொண்டியபடியே இறங்கிய கைலாஷையும் பார்க்கவும் , உயிர்த்து வந்தவரைப் பார்ப்பது போல், ஆதர்ஷ் வேகமாக ஓடிச் சென்று, " பாபா" எனக் கைலாஷைக் கட்டிக் கொண்டான்.

மகனின் கதறலிலும், தழுவலையும் அதன் காணத்தையும் ஒரு நொடியில் அறிந்து கொண்ட கைலாஷ், அதே அணைப்பை அவனுக்கும் தந்து, உச்சி முகர்ந்து கண்களிலிருந்து கண்ணீர் வடிய நின்றார். அன்று மகள் பாபாவென அழைத்ததில் பரவசம் இருந்தது எனில் இன்று மகன், பாபாவென அழைத்ததில்,அதே பரவசம் உச்சம் தொட்டு ஓர் நிறைவு தந்தது.

ஆதர்ஷின் பாபா என்ற அழைப்பு, ஆனந்த யாழை மீட்டுவதையும் தாண்டி, அவரின் உயிர் வரை தொட்டது. அவன் அவரின் அம்சம், அவன் பிறந்ததை, வளர்ந்ததை அவர் அறியார், ஆனால் பார்த்த கணத்தில் , எங்களுக்கு ஓர் மகனிருந்தால் என்ற ஏக்கத்தை அவர் மனதில் விதைத்தவன். அதுவே நிஜமென அறிந்த போது மகிழ்ந்தாலும், அருகே நெருங்காமல் எட்ட நின்றவன். வளர்ப்பு முறையில் வித்தியாசம் இருந்த போதும், அவர் தந்த உயிர். அவரின் மனையாள் உயிரோடு இருக்கக் காரணமான உயிர்.

தாயின் வயிற்றில் பிள்ளைகள் இருக்கையில், அவரின் சிந்தையில் நிறைந்ததே, குழந்தையின் சிந்தையிலும் பதியும் என்பது உண்மையானால், அன்றைய பாருவில் நிறைந்தது, இந்த ராஜ் மட்டும் தானே, அது தான், எங்கெங்கோ வளர்ந்த போதும், தகப்பனிடம் வந்து சேர்ந்தது. ஆனால் பாபாவென அழைக்க அழிச்சாட்டியம் செய்தவன், இதோ இன்று கண்ணீர் பீறிட அழைக்கிறான்.

போனமுறை வந்த போது தகப்பனையே கதற விட்டவன், இன்று அவரைக் கட்டிக் கொண்டு சிறு பிள்ளையாய் கதறி நின்றான். " பாபா, பாபா" என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் வரவில்லை. அவர் நலமாயிருப்பதே போதும். தான் யாருக்கும், எந்தப் பதிலும் சொல்லத் தேவையில்லை, என மனம் தேர்ந்தவனை, சோதிக்க விரும்பியவராய் , " என்ன கண்ணு, அப்பன் கைலாசத்துக்கே போயிட்டேன்னு பயந்துட்டியா" எனக் கைலாஷ் ராஜன் வினவவும்,

" அதைச் சொல்லாதீஙக பாபா. எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா. " என அவர் தோளில் சாய்ந்து இறுக்கிக் கொண்டான்.

அபிராம், வேகமாக விஜயனை நெருங்கியவன், " அப்பா, உங்க இரண்டு பேருக்கும் அடி ஒண்ணும் இல்லைங்களே" எனக் கண்களாலே அவரை ஸ்கேனிங் செய்ய, " ஒண்ணுமில்லை கண்ணு. உன்ர மாமனுக்குத் தான் காலில் காயம், அப்படியும், அவனுங்களை விட மாட்டேங்கிறான் பார்" என்றவர், ஆதர்ஷ் கதறி அழுவதைப் பார்க்கவும்,

" நீங்க எப்படிக் கண்ணு வந்தீங்க. மாப்பிள்ளை எதுக்கு அழுவுறாப்ல , யார் தகவல் தந்தது" என விஜயன் ஒன்றும் விளங்காமல் கேள்வி எழுப்ப, அபிராம் விவரம் சொன்னான்.

" கார் ஆக்ஸிடென்ட்டா" என வியந்தவர், " அடக் கிரகம் புடிச்சவனே, உன்ர மாமனுக்கு மூளை குறுக்காலை தான் வேலை செய்யும். " என்ற விஜயன் "அதுக்காக, கோடி ரூபாய் காரையா நொறுக்கிறது" எனக் காரை திரும்பிப் பார்த்து அங்கலாய்க்கவும், மாமனின் தகிடுதத்தம் ஏதோ இருக்கிறது எனப் புரிந்து கொண்ட அபிராம், அந்த அப்பா மகன் ஜோடியைப் பார்க்க, ஆதர்ஷ் பத்து வயது சிறுவனாகத் தன் பாபாவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தான். கைலாஷ் புன்னகை முகமாக ஆனந்தக் கூத்தாட நின்றார்.

இவர்கள் பார்க்கவும், " டேய் மாப்பிள்ளை, என்ர மகன் பாபான்னு கூப்பிட்டான் பார்" எனப் பெருமையடிக்க, " அதுக்காக , ஆக்சிடெண்ட்டுன்னு பொய் சொல்லணுமாக்கும் ,நாங்க எப்படிப் பதறியடிச்சு ஓடி வர்றோடம் ,இதெல்லாம் டூ மச்ங்க மாமா" எனத் தன் ஆத்திரத்தைக் கோபமாகக் காட்ட,

“அட மாப்பிள்ளை, நெசமாலுமே ,என்ர கார் ஆக்சிடென்டாகித் தான் நிக்கிது , அங்க பார் கண்ணு, “ என்றவரை, “உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சுன்னு பயந்து வர்றோம், ஏனுங்க மாமா “ எனச் சலித்தவனை

" அப்புறம் என்ர, ஆளாளுக்கு என்ரகிட்ட, அவிக லோலாயத்தைக் காட்டுறானுங்க. அதுக்குத் தான், எல்லாருக்கும் வச்சேன் ஆப்பு" எனவும் ஆதர்ஷ் முழித்தபடி, தன் பாபாவையும், தகவல் தந்த ப்ளாக் கேட்ஸையும் பார்க்க, " உங்க பாபாவோட, ஆர்டர் ஸார்" எனத் திரும்பிக் கொண்டனர்.

" பாபா, அப்ப என்னதான் நடந்தது. சத்தியன் எங்கே" என ஆதர்ஷ் வினவவும், அவன் ஆஜராகி, கைலாஷ் மொபைலை " இந்தாங்கப்பா, எல்லாமே புடிச்சிட்டேனுங்க. ஃப்ளாஷ் போட்டு எடுத்திருக்கேனுங்க" எனக் கொடுக்கவும், அதை வாங்கித் திருப்தியாகப் பார்த்துக் கொண்டார் ராஜன்.

விஜயன் ," ராஜா, என்ரா நடக்குது இங்க , நான் உன் கூடவே தான இருக்கேன். எனக்கே விளங்கலை" எனவும், " சின்னவர், அப்பான்னு கூப்பிடுறதை வீடியோ எடுக்கச் சொன்னாருங்க" எனச் சத்தியன் உண்மையைப் போட்டு உடைத்தான்.

" ஐயோ சாமி, எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்ப எல்லாமே ஃபேக்கா, ஏனுங்க மாமா, இதென்ன சின்னப் புள்ளைத் தனமா விளையாடிட்டு இருக்றீங்க. அங்க அத்தை உங்களுக்காக விரதமிருந்து பூஜையெல்லாம் செய்யறாங்க. நீங்க இங்க , உங்க மகனை வச்சு நாடகமாடுறீங்கலாக்கும் " என எரிச்சலாக மொழிய,

" டேய், ராஸ்கோலு, ஆக்சிடெணட் நிஜம் தாண்டா, ஆனால் நாங்க அந்தக் கார்ல வரலை, ஒரு பங்காளி மகன் பார்த்த வேலை, இன்னொருத்தன் சிக்கிட்டான் " எனப் புதிர் போட, ஆதர்ஷ் " யார் பாபா, மஹந்த் வேலையா. " எனப் பாலாஜி வார்த்தைகளையே திருப்பிப் படிக்க,

" டேய் மச்சி, அவன் எனக்குத் தான் பங்காளி, உனக்கில்லை. இது வேற யாரையோ சொல்றாரு" என அபிராமும், " அவன் ஆக்சிடெணட் பண்ணப்பவும் கார் இத்தனை டேமேஜ் ஆகலையே" என விஜயனே குழம்ப,

" அது இன்ஸ்யூரன்ஸ்காரனுக்கு ஆப்பு வைக்கிறதுக்காகச் செஞ்சது" என்றார் ராஜன்.

" பாபா, இதென்ன விசயம் எதுவுமே புரியல, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க" எனவும்,

" உன்ர பங்குக்கு, அவனை நாலு வெளுத்திட்டுவா, நான் விவரம் சொல்றேன்" எனக் கண்டைனரைக் காட்டி கைலாஷ் கண்டிசன் போட, அபிராமும், ஆதர்ஷும், புதிரை அவிழ்க்கும் சுவாரஸ்யத்துடன் ஏறிப் பார்க்க, உள்ளே, கை கால்கள் கட்டப்பட்டு, ஆங்காங்கே இரத்தக் காயங்களுடன் பத்து பேர் இருக்க, மிகவும் சேதாரமானவனாக நடுவில் பீமன் கிடந்தான்.

அபிராம், “இவனுங்க யாரு புதுசா, அடேய் மச்சி, உன்ர குடும்பத்துக்கு எத்தனை பகையாளி, புதுசு, புதுசா வர்ரானுங்களே” என வியப்பாகக் கேட்கவும், பீமனைப் பார்க்கவுமே, ஆதர்ஷுக்கு அடையாளம் தெரிந்தது. அபிராமுக்கு விவரம் சொல்லவும், “ அப்ப , மாம்ஸ் கைகர்யமா தான் இருக்கும்” எனக் கதவைப் பார்க்க, அங்கே ராஜன் பீமனை முறைத்தபடி நின்றார்.

ஆதர்ஷ் மராத்தியில் திட்டியபடி, அவன் தலை முடியைக் கொத்தாகப் பிடிக்க, "எங்களை விட்டுருங்க, இந்தப் பக்கமே வரமாட்டோம்" என ஆதர்ஷ் காலில் விழுந்தான் பீமன்.

" சோலாப்பூர்ல இருக்கவனுக்கு இங்க என்னடா வேலை" என நையப் புடைத்தவன், அதே நேரம் போஸ்லே மாளிகையிலிருந்து போன் வர, அதை எடுத்தபடி , தன பாபாவிடம் காட்ட, பேசு எனக் கண் காட்டினார்.

" நமஸ்காரம் ஜெயந்த் மகராஜ், நீங்க அடி வாங்கினது பத்தாதுன்னு , உங்க மகனையும் அனுப்பி விட்டுறிக்கீங்களா. கை கால் உடைச்சாச்சு, இப்படியே அனுப்பவா, இல்லை பொட்டலமா அனுப்பவா" என ஆதர்ஷ் மராத்தியில் கேட்க, அந்தப் பக்கம் ஸ்பீக்கர்ல போட்டுக் கேட்டுக் கொண்டிருந்த, ஜெயந்த்,

“எனக்கு ஏதுடா மகன், அவன் என் அடியாள். உங்க ஊர்ல வச்சு தான அடிச்சிருக்கீங்க, சோலாப்பூர் வா பார்த்துக்கலாம்” எனச் சவால் விட, பீமன் தந்தையின் பேச்சில் கடுப்பானான்.

ஆதர்ஷ் வேறு அதில் என்னை வார்ப்பது போல், “பீமா, நீ அப்படியே ஜெயந்த் மகராஜை உரிச்சு வச்சிருக்க, அப்படியும், அவர் மகன் இல்லைங்கிறார். இவருக்காகவா அடி வாங்குற “எனக் கோர்த்து விட,

"டேய், அவனை எனக்கு எதிரா திருப்பலாம்னு பார்க்காதே, அந்தக் கிழவியும், நீயும் சேர்ந்து, அங்க உட்கார்ந்துகிட்டு ஆட்டம் காட்டுறீங்களா. எவனை வேணாலும் கூட்டிட்டு வா சோலாப்பூர்ல நான் வச்சது தான் சட்டம்" என அடிபட்ட வேதனையோடு கர்ஜிக்க,

“படே பாபா, ஒரு திருத்தம், இந்த ஆட்டம் என்னது இல்லை என்னைப் பெத்தவர், என் பாபாவோடது. பைரவி பாய் போஸ்லேவின் கணவர் கைலாஷ் ராஜனிது “எனச் சிரிக்க, “ஒண்ணு கூடிட்டிங்களாக்கும், அங்கயே இருந்துக்குங்க, இங்க வந்தா திருப்பி என் ஆட்டத்தைக் காட்டுவேன்,.உன் ஆயியையும்,பாபாவையம் அன்னைக்கே ஓடவிட்டவன் தான் நான் “ எனவும் ஆதர்ஸக்குக் கோபம் பலியாக வந்தது, “அதுக்கும் சேர்த்து வச்சு தான் உனக்குத் தண்டனை , அனுபவிக்க ரெடியா இருந்துக்கோ” எனக் கர்ஜிக்க,

உள்ளே எட்டிப் பார்த்த கைலாஷ், " ஏன் கண்ணு, பங்காளிக்குப் பட்டதெல்லாம் பத்தாதாமாம். போஸ்லே மாளிகையையும், பீபீ மில்ஸையும் நான் பார்த்துக்கிறேன். சின்ன வூட்டுல போய் ரெஸ்ட் எடுக்கச் சொல்லு" எனக் கைலாஷ் எகத்தாளமாகப் பேச, ஆதர்ஷ் புன்னகையோடு மொழி பெயர்த்தான்.

" நீங்க என்னை வெளியேத்துவீங்களா. மஹந்த் போஸ்லேவை தேடி அவங்க அப்பன் வர்றான். அவனுக்குப் பதில் சொல்லுங்கடா" என ஜெயந்த் எகிற,

"எத்தனை பேர் வந்தாலும், நான் சமாளிச்சுக்குவேன் பங்காளி. நீ பொட்டியை கட்டிட்டு ரெடியா இரு. என்ர பொண்டாட்டியை என்கிட்டிருந்து பிரிச்சயில்ல, உன்னைக் குடும்பத்தை விட்டே ஒதுக்க ஏற்பாடு பண்றேன்" எனச் சிரிக்கவும், குப்பை போல் கிடந்த பீமனே அதிரத்தான் செய்தான்.

ஏனெனில் சில மணி நேரங்களுக்கு முன்பான கைலாஷின் ஆட்டம், அவ்வளவு கடுமையாக இருந்தது. அதுவும் பீமன், ஜெயந்தின் சாயலாக, இருக்கவும், இருபத்தியிரண்டு வருட ஆத்திரம், கோபம் அத்தனையும் அவன் மீது காட்டியிருந்தார்.

முன் மாலைப் பொழுதில், சொத்துக்களைப் பிரித்து, சரிபார்த்துக் கையொப்பமிட்ட கைலாஷ், தனது டிடெக்டிவ் ஏஜென்ட் ரஞ்சனிடமிருந்து போன் வரவும் நண்பனோடு மேட்டுப்பாளையம் ரோட்டில் அவுட்டர் பகுதியிலிருந்து ஒரு தொழிற்சாலையை நோக்கிக் கிளம்பினார், ஏற்கனவே ,கைலாஷின் ஆட்கள் அங்கே பதுங்கியிருந்தனர்.

காலையில் இவர்களைப் பின்தொடர்ந்த வாகனத்தை, அவரின் மற்றொரு க்ரூப் ஃபாலோ செய்து சுற்றி வளைத்தனர். அவர்கள் மூலமே கைலாஷ் கடத்தப்பட்டது போல் நாடகமாடினர்.

பீமன் ஆட்கள்,கைலாஷின் காரை கடத்தி வந்து விட்டதாகத் தங்கள் தலைவனுக்கு அழைக்க, பிறர் கவனம் கவராமல், அவரை உள்ளே அழைத்து வரச் சொன்னான். பீமன் திட்டப்படியே நடப்பதாக அவனை நம்ப வைத்த கைலாஷ்,விஜயன், சத்தியன் மூவரும் கடத்தப் பட்டவர்கள் போல், வந்தனர்.

தன் ஆட்களின் துப்பாக்கி முணையில், கைலாஷை பார்க்கவும் பீமன் நம்பினான். ஆனால் அவனறியாதது, அவன் ஆட்களை மிரட்டி, டம்மி துப்பாக்கியைத் தான் கையில் கொடுத்திருந்தனர். இவர்களை இயக்கியது, கைலாஷின் துப்பறியும் ஏஜெண்டான ரஞ்சன்.

பீமன், கைலாஷை எதிர் கொண்டு அழைத்து வசனமெல்லாம் பேச, ஜெயந்தின் பெயரைக் கேட்கவும், கைலாஷ் வெகுண்டு விட்டார். முதல் அடியே அவன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டி விட்டு, வாயைச் சேர்த்து ஒரு அடி விட்டார். அடி வாங்கி நிலை குலைந்தவன், சுதாரித்து, தன் ஆட்களுக்குக் கட்டளை இடுவதற்குள், கைலாஷ் கையில் கிடைத்த கட்டையைக் கொண்டே அடித்தார்.

ரஞ்சன் தலைமையில் வந்த பயிற்சி பெற்றவர்கள், ஆதர்ஷின் பூனை படை ஆகியோர் சுற்றி வளைத்து, அடியாட்களிடம் ஆயுதங்களைக் கைப்பற்ற, கைலாஷ் பீமன் மீது தனது ருத்திர தாண்டவத்தைக் காட்டினார். விஜயன் , மற்றவர் பார்த்துக் கொள்ளட்டும் எனக் குரல் கொடுத்ததைக் கேட்கும் நிலையில் இல்லை. அரை மணிக்கும் மேலாக ஆட்டம் தொடர்ந்தது.

நண்பனின் கோபமாவது தணியட்டும் எனத் தங்கள் பங்குக்கு விஜயனும், சத்தியனும் இருவரைத் தாக்க, ஏற்கனவே இவர்களிடம் தப்பி, பிடிபட்டவன், அது தான் சமயமெனத் தப்பித்து, கைலாஷ் காரை எடுத்துக் கொண்டு செல்ல, பீமனின் ப்ளான் பி படி , அந்த ட்ரெக்கை வைத்து, இந்தக் காரை மற்றொருவன் ஆக்சிடெணட் செய்தான்.

சத்தியன் தான், தங்கள் கார் கிளம்பும் ஓசையில் சுதாரித்து வெளியே சென்று பார்க்க, கண்ணுக்கெட்டிய தூரத்தில் கார் ஆக்சிடெணட் ஆகி நின்றது. அவன் பதறி துடித்து வந்து சொல்ல, கைலாஷ், " என்ர காரை வேற டார்கெட் வச்சிருந்திங்களா, இருங்கடா வர்றேன்" என்றவர் ரஞ்சனிடம் கண் காட்டி, தன்னுடைய ப்ளான் படி, மகனை வரவழைக்கவும் நாடகமாடினார்.

பீமன் முதற்கொண்டு அடிப்பட்டவர்களை, கை கால்களைக் கட்டி, கைலாஷின் ஆட்கள் ட்ரக்கில் போட்டனர். ஆதர்ஷ், அபிராம்க்கு போன் பறந்தது. வெளியே நின்றால், தன் திட்டம் சொதப்பி விடும் என விஜயனையும் அழைத்துக் கொண்டு, கண்டைனரில் ஏறியவர், சோலாப்பூர்காரனிடம் விஜயனை வைத்தே விசாரிக்க விட்டு வேடிக்கை பார்த்திருந்தார்.

இதற்கு நடுவில் காரை இரண்டாம் முறை மோத விட்டு, முழுமையான செட்டப்போடு மற்றவர்கள் மறைந்து நின்றபோது தான், கைலாஷ் தங்கைகளின் கார் நின்று பார்த்து விட்டு, கடந்து சென்றிருந்தது.

இவை யாவையும், சத்தியன் தான் விலகினான். கைலாஷின் திருவிளையாடல் தெரியவும், ஆதர்ஷ் நிம்மதியடைந்தவன், மீண்டும் பாபாவைக் கட்டிக் கொண்டு, பெருமையாகவே பார்த்து நிற்க, " டேய், மச்சி, நீ பாபா ன்னு கூப்பிடறதுக்கு, கோடி ரூபா செலவாக்கும்" என மாமனை நேராகத் திட்டமுடியாமல், மச்சினனைக் கேட்க,

" உனக்கு என்ரா பொறாமை" என வம்பிழுத்து பேசியவர், ரஞ்சன் தலைமையிலானவர்களிடம் , பீமன் குழுவை ஒப்படைத்துக் கிளம்பினார்,

இவர்கள் வருவதற்குள் கைலாஷின் தங்கைகள், அந்த இடத்தையே கலவரமாக்கி இருந்தனர். இந்தக் கலகமும் கைலாஷ் க்கு நன்மையாக அமைந்தது. மனைவியின் முகத் தரிசனத்துக்கு ஏங்கியவர், இப்போது தன் கைகளில் தாங்கியிருந்தார்.

ஆதர்ஷும், விஜயனும் நடந்ததை விவரிக்க, பாலாநாயகம் மகனை முறைத்தார். இத்தனை விவரம் தெரியாத போதே கடிந்தவர், இப்போது விடுவாரா, " இதெல்லாம் நல்லா இல்லை தெரிஞ்சிக்க, என்ர மருமகள் கண் முழிக்கட்டும், அதை வச்சு தான் ஒரு முடிவு எடுக்கோணும், இல்லையினா நீயெல்லாம் யாருக்கும் அடங்க மாட்ட" எனத் திட்டவும், சௌந்தரி வழக்கம் போல் மகனுக்குச் சப்போர்ட்டுக்கு வந்தார்.

" ஏனுங்க, இப்ப எல்லாம் நல்ல விதமா தானுங்களே முடிஞ்சிருக்கு. இந்தா பேரன், ஆசையா, ராஜாவைப் பாபா பாபான்னு கூப்பிடுதிலிங்க, " என மகனை மெச்சி பேரனைக் கொஞ்சவும்,

“ஏனுங்க அத்தை அதுக்குன்னு ஒரு வரை முறை இல்லைங்களா, கூடவே இருந்தவனுக்குத் தெரியாத செய்யறானுங்க” எனக் குறைப்பட்ட விஜயன், “மாமா சொன்ன மாதிரி, தங்கச்சிமா எந்திரிகட்டுங்க, அவிகளை வச்சு தான் இவன் வேலைத்தனத்துக்கு எல்லாம் ஒரு முடிவு காட்டோணும்” எனச் சேர்த்துச் சொல்ல,

ரமாபாய் , “பேட்டாஜீ , நீங்க தான் உங்க தங்கச்சியை மெச்சிக்கணும், அவள் ,அவருக்கும் மேல, தாமாத்ஜி மாதிரி அதிரடியான ஆள் தான் அவளைச் சமாளிக்கச் சரி”என மாமியார் புகழவும், ராஜன் உச்சி குளிர்ந்து போனார்.

“இருந்தாலும் , காரை சேதப்படுத்தியிருக்க வேண்டாம், ஆதர்ஷுக்கு என்னைக்குமே பாபா நீங்க தான். நான் வளர்ப்புத் தந்தை தான், அவன் மனசிலையும் அப்படித் தான் பதிஞ்சு இருக்கு, எனப் பாலாஜி ராவ் விளக்கம் சொன்னார்.

" உனக்கு எப்பலிருந்து கண்ணு, ராஜா தான் உன்ர அப்பான்னு தெரியும்" எனப் பாலநாயகம் ஆதர்ஷ் பார்த்துக் கேட்க, அவன் ரமாபாய், பாலாஜி ராவ், ராதா ஆகியோரை பார்த்து விட்டு, " எனக்கு விவரம் தெரிஞ்சதிலிருந்தே, ராதிமாம், பாலாஜி டேட் னு தான் கூப்பிடுறேன், அவங்களைத் தான் பெத்தவங்கன்னு நிச்சிருந்தேன்.. லண்டன்ல இருந்ததால அது எனக்குப் பெரிசா தெரியலை.

ஆனால் நானிமா வந்த பிறகு, ஆயி, பாபா, ஆதிரா போட்டோ காட்டி, உறவையும் சொல்லிக் கொடுத்தாங்க. ஆனால் ராதி மாம் முகம் வாடினதையும், நானிமாக்கிட்ட, இப்ப எதுக்குச் சொல்லித் தர்றீங்க. ஆராதனாவுக்கும், அவனுக்கும் வித்தியாசம் வரக்கூடாதுன்னும், நான் அவங்ககிட்ட இருந்து பிரிஞ்சிருவேன்னு பயந்தாங்க. ராதி மாம் அழறதே என்னால தாங்க முடியலை" என்றவன், ராதாபாய் அருகில் சென்று, அவர் பக்கத்தில் அமர்ந்து கையைப் பற்றிக் கொள்ளவும், அவனைக் கட்டிக் கொண்ட ராதா,

" என் தர்ஷு, அப்பவே வந்து, நீங்க தான், என் மாம், டாட். நான் அவுங்க வந்து கூப்பிட்டாலும் போக மாட்டேன்னு கட்டிட்டு அழுதான். ஆயி சொல்றதையும் விட்டுட்டாங்க. அப்புறம் என் மகனா தான் வளர்ந்தான்னு, நான் நினைச்சேன். ஆனால் அவன் டாட், உங்களைச் சொல்லியே தான் வளர்த்தார். அந்த மனுஷனுக்கு(கைலாஷ்) தனக்கு ஒரு மகன் இருக்கிறதே தெரியாத கொடுமை போதும்னு. நம்ம தர்ஷுக்கு சொல்லிக் கொடுத்தே வளர்ப்போம்னு வளர்த்திருக்கார்" என ராதாபாய் பெருமூச்சு விடவும்,

கைலாஷ், பாலாஜி ராவின் கைகளைப் பற்றிக் கொண்டு, " உங்க பெருந்தன்மை யாருக்குமே வராது, உங்களுக்கும் அவன் தான் மகன், அந்த உரிமையை என்னைக்குமே பறிக்க மாட்டேனுங்க" என உணர்ச்சி வயப்பட,

" அதுக்கும் நீங்க தான் காரணம். இவ்வளவு பேர் தொழிலாளர்களே உங்களை அப்பான்னு சொல்லும் போது, உங்க வாரிசு சொல்லாமல் எப்படி. உங்களைப்பத்தினை எல்லா விஷயங்களையும், சொல்லியே தான் வளர்த்தேன்” என ராவ் வினவவும்.

" அப்புறம் ஏனுங்க தம்பி, என்ர பேரன் அப்பான்னு கூப்பிடாதையே இருந்தான்" எனச் சௌந்தரி கேள்வி எழுப்ப,

" முதல்ல, போஸ்லேக்களைக் குழப்பனும்னு ,அதுவரை ஆதர்ஷுக்கும், கைலாஷுக்கும் இருக்க உறவு வெளியே தெரிய வேண்டாம்னு, நினைச்சோம் . " என விவரிக்க, வழக்கத்துக்கு மாறாக, சற்று சீக்கிரமே, பைரவிக்கு நினைவு திரும்ப, ஆதர்ஷ் பேச ஆரம்பத்திலிருந்து கேட்டிருந்தார்

" அப்ப எப்ப தான், தன் அப்பாவை, பாபான்னு கூப்பிடுவான். மத்தவங்க சொல்ற மாதிரி, ராஜ், அவர் சொத்தை எழுதி வச்சா தான் கூப்பிட விடுவீங்களோ. இதை விட என்னை அசிங்கப்படுத்த, யாராலையும் முடியாது. இப்பவே ராஜோட காசுக்காகத் தான் நாங்க வந்திருக்கோம்னு பேசுறாங்க. நீங்களும் அதை நிரூபிக்கிறீங்க. அப்படிச் சொத்தை எழுதிக் கொடுத்தா தான், அவன் உங்களை அப்பான்னு கூப்பிடுவான்னா , நீங்க அவனுக்குச் சொத்தே எழுதி வைக்காதிங்க ராஜ். அவன் நானியம்மா வாரிசாவே இருந்திட்டுப் போறான்" எனத் திடீரென, பாலாஜி ராவிடம் ஆரம்பித்து, கணவரிடம் பேசிய பைரவி கண்ணீர் வடிக்க,

" பாரு, என்ன அம்மணி இதெல்லாம். நீயா எதையாவது கற்பனை பண்ணாதம்மா " என மனைவியைத் தோளோடு அணைத்துத் தாங்க, ஆதிரா, " ஆயி, பாவு.." என ஆரம்பிக்க,

" நீ ஒண்ணும் சமாதானம் சொல்ல வேண்டாம் ரஜ்ஜும்மா, அன்னைக்கு ஆத்தா எப்படிக் கேட்டாங்க. ஆயி பவானி, இன்னும் என்னவெல்லாம், நான் அனுபவிக்கனும்னு எழுதி வச்சிருக்காளோ" எனத் தலையில் கை வைத்தபடி, அவர் அமர்ந்து விட, பைரவி அடுத்து என்ன செய்வாரோ, என எல்லாருமே பயந்து தான் இருந்தனர்.

ஆதர்ஷ் அவரருகில் வந்து, கீழே அமர்ந்தவன், அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்து, "ஆமாம் ஆயி, சொத்துக் கிடைச்சா தான் உங்க முல்கா, அவன் பாபாவை, பாபான்னு கூப்பிடுவான். எனக்கு இன்னும் என் சொத்து கிடைக்கவே இல்லை ஆயி." எனவும், அவனைக் குனிந்தபடி பார்த்திருந்த பைரவி,

" வேண்டாம் பாபா, உனக்கு ராஜோட சொத்தும் வேண்டாம். என் மடியை நீ அசிங்கப் படுத்தவும் வேண்டாம். எந்த நேரத்தில் இந்த ஆயி பவானி, அவர் கண்ணில காட்டினாளோ, அவர் நிம்மதி போச்சு. அவருக்கு ஆபத்தானவளா இருந்திருக்கேன், ராசியில்லாதவ, ஏமாற்று காரியா இருந்திருக்கேன். இந்தப் பட்டமே போதும், நீ வேற என் மடியை வித்தவங்கிற பேரை வாங்கிக் கொடுத்திடாத" எனக் கண்ணீர் வடிய அவர் பேச,

" மறுபடியும் ஆரம்பிச்சிட்டாடா. எல்லாரும் சாப்பிட்டுப் படுத்து தூங்குங்க. என்ர பொண்டாட்டியை நான் பார்த்துக்குறேன்" எனக் கைலாஷ் சபையைக் கலைக்க முயன்றார்.

" இருங்க பாபா, ஆயி மனசில இருக்கிறதெல்லாம் வெளிய வரட்டும்" என ஆதர்ஷ் சொன்ன போதும், பாபா என்று அழைத்ததையும் பைரவி காதில் வாங்காமல் பேசிக் கொண்டே போக, ரமா பாய், " அவங்க குடும்பம் பேசி தீர்த்துக்கட்டும். நாம போவோம்" மற்றவர்களைக் கிளப்பினார்.

ராதா பாய்," தீதி உங்க பையன், உங்களுக்குத் தான். சும்மா மனசைப் போட்டு குழப்பிக்காதீங்க" என்றவர், ஆதர்ஷ் தலையை வாஞ்சையாகத் தடவி விட்டு ரமாபாய் குடும்பம் கிளம்பியது

பலநாயகம், சௌந்தரிக்கும் சேர்த்து ,அபிராம், ரஞ்சி, கஸ்தூரி என இவர்களுக்கான உணவை எடுத்து வந்தனர்.

அப்போதும் ஆதர்ஷ் அப்படியே மண்டியிட்டு அமர்ந்திருக்க, பைரவி அமைதி காத்தார், கைலாஷ், " அட, கால் வலிக்கும் எந்திரி கண்ணு" எனக் கைலாஷ் மகனைத் தாங்க, அபிராமும், ரஞ்சியும் ஆதிராவை என்ன நடக்கிறது எனக் கண்ணால் வினவினர். அவள் வேடிக்கை பார்க்கும் விதத்திலேயே , நீங்களே பாருங்கள்" என மௌன மொழி பேச, கைலாஷ், பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தார். வேற வழி, சாஸும்மாவுக்கு வீராப்பா, நானே பார்த்துக்குவேன்னு வாக்கு தந்திருக்காரே.

"ஆயி,எனக்கு என்ன சொத்து வேணும்னு கேட்க மாட்டிங்களா" என மகன் கேட்கவும், "உன் நானிமா, நல்லா வளர்த்து வச்சிருக்காங்க பாபா. சொத்து, சொத்துன்னு பேசுற. அந்தச் சொத்துனால தான், நான் எனக்கான எல்லாத்தையுமே இழந்தேன். உங்களை என் வயித்தில சுமந்தது கூட நியாபகம் இல்லை, அப்புறம் எந்த உரிமையில நான் உன்கிட்ட இவரைப் பாபான்னு சொல்லித் தருவேன்" என ஆரம்பிக்க,

" ஆயி, அப்பத் தான் ஞாபகம் இல்லை, இப்ப உங்க மடியில தலையை வச்சிக்குறேன். பாபாவை பாபான்னு சொல்லிக் கொடுங்களேன். சரி தானுங்களே பாபா" என அவன் சிரிக்க, பைரவி யோசனையாகப் பார்க்க, "அது தான் பாபான்னு சொல்லிட்டானுல்ல, என்ர மகன் எவ்வளவு நேரம் மண்டி போட்டு நிற்பான், அணைச்சுக்கமா" எனக் கைலாஷ் சொல்லவும், " வா” எனக் கை நீட்டி மகனைப் பைரவி அழைக்க, ஆதர்ஷ் கண்ணீர் மல்க,தன் ஆயியின் மடியில் தலையை வைத்துக் கொண்டவன்,

" இது தான் ஆயி, நான் கேட்ட சொத்து. உங்க மடியில் பிறந்தவன், கைலாஷ் ராஜன் மகன், தப்பானவனா இருப்பனா ஆயி. ஆயிக்கு, முல்காவைத் தெரியாது, முல்காவுக்கு ஆயியைத் தெரியாது. நம்ம மூணு பேரும் இருக்கிறதே பாபாவுக்குத் தெரியாது. இந்த நிலமை , எந்தக் குடும்பத்துக்கும் வரவேண்டாம் ஆயி" என அவன், பைரவியின் மடியைக் கட்டிக் கொண்டு அழ, தாயும், தகப்பனுமாக, கண்ணீர் மல்க, அவனது சிகையில் கை வைத்திருந்தனர். ஆதிராவுக்கும் தாங்கமாட்டாமல், ஆதர்ஷ் அருகில் சென்று அமர்ந்தவள் தந்தையின் மடியில் தலை சாய்த்துக் கொள்ள, பார்த்த கண்கள் அத்தனையிலும் கண்ணீர்.

சௌந்தரி, பாலநாயகமும், அதே மேடைக்கு அருகில் வந்து, மகன் மருமகள் , பேரன் பேத்தி, தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார்கள்.

" அம்மா பைரவி, இது உன் குடும்பம். நீதான் ஆலமரம். நீதான் எங்க எல்லாரையும் பார்த்திக்கோணும். நீயே கலங்கி நின்னா, எப்படிமா. யார் எதுவேணாலும் சொல்லிப் போட்டு போறாங்க. நான் சொல்றேன், என்ர மகனை வழிக்குக் கொண்டு வர்றதுன்னா, உன் ஒருதியால தான் முடியும். பேரனை அப்பான்னு கூப்பிட வைக்க , என்ன வேலைத்தனம் செஞ்சான்னு கேளு. என்ர மருமகளா திரும்பி வா. உன்னை நம்பி நெம்பப் பேர் இருக்கோம்" என மருமகள் தலையில் கை வைத்து ஆசீர்வதிக்க, பைரவி, கணவரைத் திரும்பிப் பார்க்க, “தாய் மாதா , உங்க புருஷன் எங்க கோர்த்து விடுறார் பாருங்க” என அம்மாவிடம் குறை பட,

"சரிங்க மாமா" என்றவர், தானும் எழுந்து, மகன் மகளையும் எழுப்பி விட்டவர், நாயகத்தையும் சௌந்தரியையும் ஒன்று சேர்த்து நிற்க வைத்து, கணவர், மகன் மகள் சகிதமாக அவர்கள் காலில் விழுந்து, " இனிமே, நீங்க சொல்ற மாதிரி தான் மாமா இருப்பேன். ஆதர்ஷை மட்டும், உங்க முன்னாடியே வச்சு, உங்க மகனை பாபான்னு சொல்லச் சொல்லுங்க' எனவும்,

சௌந்தரி, பொறுமை இழந்தவராக, " என்ர பேரன், என்ர மகனை, அவன் அப்பாவை , வந்ததிலிருந்து நூறு தரம் பாபா, பாபான்னு சொல்லியிருப்பான். உன் மண்டையில் தான் ஏறலை. என்ன ராஜ வம்சமோ, இம்புட்டு மக்காவா இருபாங்க' எனச் சௌந்தரி மகனை வினவ,

" என் மகன், உங்க மகனை அப்பான்னு கூப்பிட்டான்னு, நீங்க ஒத்துக்கிட்டா சரி தான். அதுக்குத் தான் இத்தனை பாடு" எனப் பைரவி வினயமாகச் சொல்லவும்.

ரஞ்சி, " அப்ப எல்லாமே நடிப்பா. ஐயோ சாமி, அத்தை நீங்க என்ர மாமனுக்கு மேல இருக்கீங்க. நீங்க தான் அவருக்குப் பர்வெஃக்ட் மேச்" எனவும் சிரித்துக் கொண்டனர்.

கௌரி விரதம் இருப்பதால், அதே அரங்கத்துக்குப் பின்னனிருந்த ஓய்வு அறையிலேயே பைரவி தங்கிக் கொள்வதாக ஏற்பாடாகியிருந்தது. ஆதர்ஷ் , தான் ஆயியுடன் தங்கிக் கொள்வதாக முடிவெடுத்திருக்க, இப்போது கைலாஷ் எல்லா ஆட்டத்தையும் கலைத்தார்.

" என்ர பொண்டாட்டியை விட்டுப் போட்டு, நான் எங்கையும் போறதா இல்லை. ஆதர்ஷ் நீ கெஸ்ட் அவுஸ் போ கண்ணு" என அவர் உத்தரவிட்டுக் கொண்டிருக்க,

" பாபா, நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்க. உங்க ரூம்ல போய் ரெஸ்ட் எடுங்க. ஆயியை நான் பார்த்துக்கிறேன்" என வாக்குவாதம் செய்ய, “பாபா, நம்ம நாலு பேருமே இங்கயே இருந்துக்குவோம், ஏற்பாடு பண்ணுங்க” என மகள் கேட்கவும், கைலாஷிடம் மறுப்பு எது.

கைலாஷின் குடும்பம், கே ஆர் மாளிகையிலும் , பைரவியின் குடும்பம் விருந்தினர் மாளிகையில் இருக்க, ஆதிராவின் ஆசைப்படி , இனி யாரும் எங்களைப் பிரிக்க இயலாது எனச் சொல்லும் விதமாக ஆயி பவானி விக்ரகம் இருந்த அரங்கிலேயே , ஒரு பகுதியில் தங்களுக்கான தற்காலிக குடிலை அமைத்தனர். தங்கள் களைப்பையும் மீறி, கைலாஷின் சொந்தக் குடும்பம், அவர்கள் காதல் கதையை , தந்தையையே சொல்லக் சொல்லி, கைலாஷ் பெருமையோடும், பைரவி முகசிவப்போடும், பிள்ளைகள், நாள் பெற்றோருக்கு முகவாய் பிறந்தோம் என்ற மகிழ்வோடும் நள்ளிரவைத் தாண்டியும் பேசி கழித்திருந்தனர்.

நாளை கொங்கணி நாட்டு முறைப்படி மெஹந்தி, ஹல்தி, அதற்கெடுத்து கொங்கு நாட்டு முறைப்படி நீராட்டு, மாங்கல்யதானம் என நிகழ்வுகள் இருக்க, இரண்டு பக்கமும் என்ன பிரச்னையைக் கூடி வருவார்கள், அதை இந்தக் குடும்பம் எப்படிச் சமாளிப்பார்கள் என்பதைக் காண்போம்.

நிலவு வளரும்…


Sunday, 24 April 2022

யார் இந்த நிலவு - 49

 யார் இந்த நிலவு - 49 

"ஓம் சக்தி, சக்தி, சக்தி என்று சொல்லு !

கெட்ட சஞ்சலங்கள் யாவையுமே வெல்லு!...

சக்தி சில சோதனைகள் செய்தால்

அவள் தன்னருள் என்றே மனம் தேறு.!"

இந்தப் பாடலின் வரிகள் தான் , ஆயி பவானியைத் துதிக்கும் பைரவியின் தாரக மந்திரம். அவர் கைலாஷை பார்த்தது முதல் பவானியின் ஆணை என்றே முதலில் நோக்கியிருக்க, தங்கள் மில்லிலேயே அவரைத் திரும்பவும் பார்த்தார். பார்வை ஒன்றே போதுமே என மௌன மொழிகளிலேயே அவரை மனதளவில் நெருங்கியிருந்தார். தனக்கு மட்டும் தான் இந்தப் பிரமையோ என ஐயுற்றிருக்க, கைலாஷும் அவரை அதே பிரேமையோடு தான் நோக்கியிருந்தார்.

தனிமையில் சந்திக்கவோ, காதல் வசனங்கள் பேசாமலோ காதல் வளர்த்தவர், அவர் அக்காள் கணவரிடமே நேரடியாக, இவள் என் மனைவி என அவர் பிரகடனப் படுத்திய நொடியிலிருந்து, பைரவி கைலாஷுக்கு, தன்னால் ஏதாவது ஆபத்து வருமோ எனப் பயந்து கொண்டு தான் இருக்கிறார்.

அன்று ஆரம்பித்த அந்தப் பயம் , பைரவி ராஜின் மேல் கொண்ட காதலுக்குச் சாட்சி. அவர்கள் காதல் அவர்களைப் பல ஆபத்துகளுக்கு இடையே தம்பதிகளாக்கி, தாம்பத்திய இன்பத்தையும், குழந்தை செல்வத்தையும் தந்தது. இருபத்திரண்டு வருடம் கழித்து , தன்னிலை மறந்த நிலையில் தான் மீண்டும் கணவரோடு இணைந்தார்.

இனி தங்கள் வாழ்வில் துயரம் ஏதுமில்லை என மீதி காலத்தைக் கணவரோடு கழிக்க விரும்பியவரை, விதி மீண்டும் அதே போன்றதொரு சூழலில் நிறுத்தியது.

அதுவும் அவரை உற்றவர்கள், கைலாஷின் தங்கைகள், தங்கள் அண்ணனுக்கு , ஆபத்தைக் கொண்டு வருபவர் எனக் குறையச் சொல்லவும், தான் கௌரி விரதம் இருப்பதையும், ஆயி பவானியின் கருணை பார்வையில், எந்த நம்பிக்கையில் அவரைக் கைபிடித்தாரோ, அதே அம்மனின் திருவருள் இன்றும் உள்ளது என்பதை ஒரு நொடியில் உணர மறந்தார். எதன் மீது அதீத பற்று கொண்டுள்ளோமோ, அதைத் தொலைக்க விரும்ப மாட்டோம்.

அப்படிக் கணவரைக் காக்க, தான் அவரை விட்டு அகல்வது சரியென, புத்தி பேதலித்து ஓட, பெரியவர், சிறியவர் என எல்லாருமே அவரவர் வேகத்துக்கு ஏற்ப பின்னாடி, நிற்கச் சொல்லி அழைப்பு விடுத்துக் கொண்டே தான் வந்தனர்.

ரமாபாய், போனில் பேசி விட்டு, தன் வயதை ஒத்த பெரியவர்களை , " பேரன் வந்துட்டான், இருங்க அவன் கூட்டிட்டு வந்துடுவான் " என அறிவித்து, போனில் தான் அறிந்த விசயத்தையும் சௌந்தரிக்கு சொல்ல, " ஆனாலும் பவானி இப்படி ஓடுறாளே" எனக் கவலை கொண்டார்.

மூத்த பெண்களுக்கு, மனதின் வேகத்துக்கு உடல் ஒத்துழைக்கவில்லை. ஆனால் சௌந்தரி மகள்களை, " உன்ர அண்ணியைப் போய்ப் பிடிங்க" எனக் கட்டளையிட, சின்னவள் கவிதா தான் விரைந்தாள், பெரியவள் சங்கீதா அப்படியே நின்றாள்.

பைரவி, அவ்விடத்தை விட்டு, ராஜை விட்டு வெளியேற நினைத்தாரே ஒழிய, கணவருக்கு என்ன ஆனது என்பதையும் கூட யோசிக்க முயலவில்லை. ஏனெனில், கைலாஷ்க்கு எதுவும் ஆகும் என்பதைக் கூட யோசிக்க மறுத்தார். பித்துப் பிடித்து ஓடியவர், எதிரே வந்த வாகனத்தின் முன் சென்று விழுந்தார்.

சத்தியன் சரியான சமயத்தில் ப்ரேக் அடித்து விட, மிதமான வேகத்தில் வந்த மற்ற வாகனங்களும் அதே போல் நின்றது. பைரவி மீது கார் இடித்து விட்டதோ எனப் பதறினர்.

" ஆயி" என அலறியபடி ஆதர்ஷ் முன் சீட்டிலிருந்து இறங்கி ஓடி வந்தவன், மண்டியிட்டு அமர்ந்து கீழே விழுந்திருந்தவரைத் தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டான். அவர் நெற்றியில் இரத்தக்கறையைப் பார்த்து விட்டு, கார் இடித்து விட்டதோ எனப் பயந்து, " பாபா, ஆயியை வந்து பாருங்க" என ஆதர்ஷ் குரல் கொடுக்க, அதற்குள் பின் சீட்டிலிருந்து " பாரு" எனப் பதறியபடி வந்தவர், லேசாக நொண்டினார். ஆனாலும் மனைவி விழுந்து கிடந்ததில், தன் காயங்களைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் கைலாஷை பார்த்ததில் பைரவி பின்னால் ஓடி வந்த அத்தனை பேருக்கும் நிம்மதி.

ஆதிரா, " பாபா" என ஓடி வந்தவள் , ஆயியின் அருகே மண்டியிட்டு அமர்ந்திருந்தவரையும், ஆயியை மடி தாங்கியிருந்து பாவுவையும் பார்த்தவள், ஒரே சேர அணைத்துக் கொண்டு கதறினாள்.

மகளைத் தட்டிக் கொடுத்து, " ஆயிக்கு ஒண்ணுமில்லடா ரஜ்ஜும்மா, திடீரென என்னாச்சு கண்ணு" என எதுவும் புரியாமல் தான் கேட்டார், ஏனெனில் கார் ஆக்சிடெணட் பற்றி வேறு யாருக்கும் தெரியாமல், ஊடகத்தைக் கூட அனுமதிக்காமல் தான் இருந்தனர்.

"உங்கள் கார் ஆக்சிடெணட் னு அத்தைங்க சொன்னாங்க" எனவும் நொடியில் உணர்ந்தவர், " பாபாவுக்கு ஒண்ணும் இல்லை கண்ணு. நல்லா இருக்கேன்." என மகளைத் தோளோடு அணைத்தவர், "அதுக்குத் தான் , உன்ர ஆயி இப்படி ஓடி வந்து விழுந்து வச்சிருக்காலாக்கும்" என வினவியவர்,

" பாரு, இங்க பார், பாரு, நான் நல்லா இருக்கேன். எனக்கு ஒண்ணும் ஆகலை அம்மணி " எனக் கைலாஷ் மகனிடமிருந்து மனைவியைத் தான் கைகளில் ஏந்த முயற்சிக்க, அரைக் குறை நினைவிலிருந்த பைரவி, கணவரின் கையைத் தட்டி விட்டு, அவர் முகத்தையும் காண மறுத்து, " நான் கூட இருந்தா , உன் பாபாக்கு ஆபத்து , என்னை எங்கையாவது கூட்டிட்டு போ பாபா. நாம போயிடுவோம். இங்கிருந்து போயிடுவோம்" எனப் பிதற்ற, ஆதர்ஷ், ஆதிரா தந்த டிஸ்யுவால் அவர் நெற்றியைச் சுத்தம் செய்தபடி , சமாதானம் சொல்ல, கைலாஷ் கடுப்பானவர்.

". இனி ஒரு வார்த்தை பேசினியினா, பிச்சுப் போடுவேன் .மறுபடியும் விட்டுப் போட்டு போறத பத்தி பேசுறா பார்" என மனைவியிடம் கடுமை காட்டியவர், தான் எழுந்து, மகனின் மடியிலிருந்த மனைவியை வலுக்கட்டாயமாகத் தூக்கினார். ஆனால் அவர் கைகளில் அடங்க மறுத்த, பைரவி கண்ணீரோடு, அவர் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காமல், தலை கவிழ்ந்தபடி,

" என்னை விட்டுடுங்க ராஜ், நான்,எங்கையாவது கண் காணாமல் போறேன். என்னைப் பார்த்த நேரத்திலிருந்து உங்களுக்கு ஆபத்து தான். அப்போ என்னை விவாகம் செய்தோடனே குண்டடி பட்டுச்சு. இப்போ கணபதி பூஜையப்பவே கார் ஆக்சிடெணட் ஆகுது. வேண்டாம், நீங்க உங்களைப் பெத்தவங்களுக்கு மகனா, கூடப் பிறந்தவங்களுக்கு அண்ணனா, இந்த மில் தொழிலாளிகளுக்கு அப்பாவா இருங்க. நானும், என் பிள்ளைகளும் உங்களுக்கு என்னைக்குமே, ஆபத்து தான்" எனக் கண்ணீர் வடித்தபடிச் சொல்லவும், கைலாஷ் உடல் விரைத்தபடி, கோபத்தை அடக்கிக் கொண்டு நின்றார்.

கௌரி, ராதாபாய் எனப் பைரவி பின்னோடு வந்தவர்கள், கைலாஷையும் , ஆதரசையும் பார்க்கவுமே , தங்கள் தீதியை அவர்கள் சமாளிப்பார்கள் என நின்று விட்டனர்.

" ஆயி, என்ன பேசுறீங்க. இதே போலப் பாபாவால உங்களுக்கு ஆபத்துனா, அவங்களை விட்டுட்டு போயிடுவீங்களா. இருபது வருஷம் கழிச்சு, இந்தக் கூட்டில் ஒண்ணா கூடுறோம், கலைச்சிடாதீங்க ஆயி. ஏற்கனவே நீங்க பாபாவுக்குக் கொடுத்த தண்டனையே போதும்" என ஆதர்ஷ், வார்த்தைக்கு வார்த்தை பாபா என அழைத்ததும் கூடப் பைரவிக்கு உரைக்கவில்லை. ஆனால் ராதாபாய் நொடியில் கண்டு , முகம் மாறியது, கௌரி, சற்றே பீதியுடன் அவரை நோக்க, “ என்ன இருந்தாலும், நம்ம ,வளர்த்தவங்க, வளர்த்தவங்க தான் “ எனத் தன்னோடு கௌரியின் நிலையையும் சேர்த்துப் பேச,

“இதுங்க இரண்டு போரையும், நாம பெத்துக்கலைனாலும், அவங்க வளர்ந்ததை , பிள்ளை சுகத்தை நாம தான சோட்டி தீதி அனுபவிச்சோம். இனிமேலாவது சேர்ந்து இருக்கலாம்ல, இந்தத் தீதியை பாருங்க, அருமையான மனுஷர் , புருஷனா கிடைச்சும், அனுபவிக்காமல் விலகி ஓடுறாங்க” என எடுத்துச் சொல்லவும்,

“அளவுக்கு மிஞ்சினா, எல்லாமே விஷம் தான் கௌரி, அது சொத்தோ, காதலோ, தாய்ப் பாசமோ, அளவோட இருந்துக்கணும்”என ராதாபாய் வசனம் பேச, கௌரி ஆச்சரியமாகப் பார்த்தார். அதை உணர்ந்தவர், “ தர்ஷு டேட் தான், காலையில் ரொம்ப நேரம் பேசி புரிய வச்சார்” என்ற ராதா, “அதுனால, ஆதரஸை இனிமே கட்டி வைக்கிறதா இல்லை” என வாய் பேசினாலும், கண்கள் கலங்க, கௌரி அதை உணர்ந்து கொண்டார்.

ஆதிரா , தனது ஆயியின் பேச்சைக் கேட்டு , ஆயி, பாபா இருவர் கையையும் பற்றிக் கொண்டு நின்று அழுதவள்,  " ஆயி, பாபாவோட சேர்ந்து இருக்கிற லிபியே எங்களுக்கு இல்லையா. இத்தனை காலமும், உங்க இரண்டு போரையும் விட்டுட்டு மாஸியோட தானே இருந்தேன். உங்க இரண்டு பேரோடையும் சேர்ந்து வாழற பாக்கியத்தை கொடுங்க, பாபாவை பாருங்க,  பாபா டீக் ஹை. யாரோ எதோ சொல்லிட்டு போறாங்க, பாபா உங்களை எதாவது சொன்னாங்களா. வாங்க ஆயி" என அவர் கையை பிடித்து இழுக்கவும், தான் கைலாஷுக்கு எதோ புரிவது போல் இருந்தது. பைரவியைத் தாக்கும் சிறந்த ஆயுதம், இந்த வார்த்தைகள் தான், அதை உணர்ந்து பிரயோகித்தது யார் என யோசித்தவர், அதை விட முக்கியம், மனைவியைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே என முடிவெடுத்தவர் , 


" யாரு கண்ணு, ஆரு என்ன சொன்னாங்க, ஆத்தா எதுவும் சொல்லிப் போட்டாங்களா, அப்படியேன்னாலும்,இவளுக்கு என்ன, மாமியாளை எதுத்து நிற்க வேண்டியது தான, உலகத்து நடப்பில் இல்லாததா என்ன,” என உலக நடப்பாகச் சொன்னவரின் வார்த்தைகளில், யாரவது, ஏதாவது சொன்னால் திருப்பிக் கேள் என்ற பொருள் இருந்தது. 


பைரவி அவசரமாக, “ அத்தை எதுவும் சொல்லலை, அத்தையும், மாமாவும் என் மேல பாசமா இருக்கிறது பொறுக்காம, ஏதாவது பேச வேணாமமு சொல்லு ரஜ்ஜும்மா “ என மகள் மூலமே பைரவி பதில் அளிக்க, அவர் சந்தேகம் உறுதியானது, இருந்தாலும் தங்கைகளைக் குற்றம் சுமத்த முடியாதே, அதனால் மனைவி மேலேயே பழியைப் போட்டார். 


“காரணம் என்னன்னு கண்டு பிடிச்சுட்டேன்  கண்ணு. உன்ர ஆயிக்கு என்னை பிடிக்கலை, அதுக்கு தான் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, தப்பிச்சு ஓடப் பார்க்கிறா." என அவர் காட்டமாகச் சொல்லவும், பைரவி 

கோவித்துக் கொண்டு திரும்பியவர், “ உன் பாபா புதுசா கண்டு பிடிச்சிட்டார் ஆதி பாபா, இவருக்குத் தான் என்னைப் பிடிக்காமல் போய் , என் தாலியைக் கழட்டிக் கொடுக்கச்  சொன்னார், உண்டா , இல்லையானு கேளுஎனச் சென்ற நாட்கள் நினைவு வந்தவராகக் கேட்கவும், கைலாஷ் ‘ சதிகாரி, இதையும் ஞாபகம் வச்சிருக்க பார் “ என மனதில் புலம்ப, விஜயன் மறுபுறம் நின்று நண்பனை மாட்டி கிட்டியா என்பது போல் சிரிக்க, " ஆயி" என ஆதர்ஷ் அதற்கு மேல் அவரை நகரவிடாமல் பிடித்துக் கொண்டான். 


" அத்தை, நீங்க சொல்றது சரி தானுங்க, அவரு ஒண்ணும் அவ்வளவு நல்லவரில்லையிங்க, சமயத்தில எல்லாரையும் கதற விடுறது தானுங்க, அவருக்கு வேலையே, உங்களுக்கு வேற மாப்பிள்ளை பார்ப்போமுங்க. " என்ற படி வந்த அபிராமை, அப்பா, மகள் இருவரும் முறைக்க, பைரவி , “ இப்ப என்ன பேட்டாஜி செஞ்சாருஎனக் கணவரை அறிந்தவராகக் கவலை படிந்த முகத்தோடு கேட்டவர்,  நிற்க மாட்டாமல், ஆதர்ஷ் தோளில் சாய, சட்டென மனைவியை கைகளில் ஏந்திய கைலாஷ், கோபம் மறந்து, 


"அந்த ராஸ் கொலு ஏதாவது புளுகுவான், நீ நம்பாத பாரு. “ என்றவர், “மதியம் சாப்பிட்டியா இல்லையா, என்ன செய்யுது அம்மணி" என தன் முகத்தைக் காட்ட மறுத்தவரை, வலுக்கட்டாயமாகத் தன்னை, கண்ணோடு கண்  பார்க்க வைத்துக் கேட்க, " அபிராம் என் அப்படி சொல்லணும், என்ன செஞ்சிட்டு வர்றீங்க , எனக்குப் பயமா இருக்கு ராஜ், உங்களுக்கு எதாவது ஆயிடுச்சுனா" என அதே கண்களில் தன கலக்கத்தைக் காட்ட, அதே கண்களுக்குத் தைரியத்தைத் தருபவர் போல், தீர்க்கமாக நோக்கி, தன கைக்குட்டையால் அவர் நெற்றி காயத்தையும் துடைத்து விட்டு, 


" என்னை நம்பு அம்மணி, எனக்கு ,ஒண்ணும் ஆகாது. இங்க வந்தவனை எல்லாம் முடிச்சாச்சு. இனி நாம தான் சோலாப்பூர் போய், மீதி கதையை முடிக்கோணும். எங்கிட்டாவது ஓடுறதா இருந்தாலும், இவிககிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு , நாம இரண்டு பேருமா ஓடலாம்.  உனக்கு பிடிக்கலைனாலும், நான் தான் மாப்பிள்ளை, வேற வழியில்லை வா. இனி என்ர பார்வையை விட்டுக் கூட உன்னை நகர விடமாட்டேன்" என மனைவியைக் கைப்பிடியாகப் பிடித்து அழைக்க, பைரவி அவரது கைகளிலேயே மயங்கினார். 


" பாபா, நான் தூக்கிட்டு வர்றேன். ஏற்கனவே உங்களுக்கு அடிபட்டிருக்கு" என்ற ஆதர்ஷை.  " இப்ப வுட்டேன்னா, உன்ர ஆயி பறந்திடுவா. அவள் பேசினதைக் கேட்டியில்ல,  ரிஸ்கே வேண்டாம் கண்ணு. இனி இருபத்தி நாலு மணி நேரமும் என்ர கண்ணு முன்னாடியே வச்சுக்குறேன்" என்றவர் டாக்டரை அழைக்கச் சொல்லி விட்டு, தான் மனைவியை கைகளில் ஏந்தியபடி அரங்கை நோக்கி நடந்தார். 


முதல் காரிலிருந்து, ஆதர்ஷ், கைலாஷ் இறங்கி இருந்தார்கள் எனில் அபிராம், விஜயன், இரண்டாவது காரிலிருந்து இறங்க , பாதுகாப்புப் படையினர் என வரிசையாக இறங்கி அவர்களை அரணாகச் சுற்றி வளைத்தனர்.  


பாலாஜியே, கைலாஷ் குடும்பத்தை டிஸ்டப் செய்யாமல் விஜயனிடம் தான் விவரம் கேட்டார். அவரும் சட்டையெல்லாம் கசங்கி சற்று நலுங்கித் தெரிய, கஸ்தூரியும் ரஞ்சனியும் அவரிடம் விரைந்தனர். 

அபிராம் மாமனை வம்பிழுத்துவிட்டு, தந்தையோடு சேர்ந்து வர, ஆதிரா விஜயனையும் அவசரமாகப் பார்வையிட்டு நலம் விசாரித்தாள். " ஒண்ணுமில்லை கண்ணு நீ உன்ர ஆயி, பாபாவோட போ" என்றவர் பாலாஜியிடம் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தார். 


பாலநாயகம், நண்பர்களோடு, எதிரே வந்தவர், மயங்கிய மருமகளைச் சுமந்து ,நொண்டியபடி வரும் மகனையும், தந்தைக்கு உதவியாகத் தோள் கொடுத்து வரும் பேரனையும், அழுதபடி வரும் பேத்தியையும் பார்த்தவர், கவலை படிந்த முகமாக மகனை ஏறிடவும், 

"ஒண்ணுமில்லைங்க. நான் நல்லா தான் இருக்கேனுங்க, உங்க மருமகள் தான் அன்னைக்காட்டம் மயங்கிட்டாளுங்க " எனத் தந்தைக்கு ஆறுதல்  சொன்னபடி நடந்தார் கைலாஷ். 


எதிரே வந்த  கவிதா, " அண்ணா, உங்க கார் ஆக்ஸிடெண்ட் ஆகி கிடந்ததுங்களே. நாங்க பயந்தே போயிட்டோமுங்க" எனக் கண்ணீர் விட, " உன்ர அண்ணனை எவனாவது டச் பண்ண முடியுமா கண்ணு . எனக்கு ஒண்ணுமில்லை . நீங்க தான் கார் ஆக்சிடெணட் ஆனதை சொன்னீங்களாக்கும்"  என வினவியவரை, " உங்க காரை அப்படிப் பார்க்கவும், பயந்திட்டோமுங்கண்ணா" எனப் பேசியபடியே நடக்க, தங்கை கணவர்களும், தாங்கள் பார்த்ததையும், கேட்டதையும் சொல்லி, தங்கள் தரப்பை நியாயப்படுத்தினர். சங்கீதாவுக்கு , அண்ணன் இப்படி ,அவர் மனைவியை தூக்கி வருவதில் எரிச்சல் தான், ஆனாலும் அண்ணன் நலமாக வந்ததில் திருப்பதி.


 ரதாபாய், கௌரியிடம், " செய்கிறதையும் செஞ்சிட்டு, நடிக்கிறதைப் பார்" என மராத்தியில் புறணி பேசினார்.  ராமசாமி, சுப்பு பின்னால் வந்த விஜயன், அபிராமிடம் விவரம் கேட்டபடி வந்தார். 


சௌந்தரி, ரமாபாய் இருவருமே, அரங்கத்துக்கு, அம்மன் அருகில் வந்து சேர்ந்த தங்கள் வாரிசுகளைத் தலை முதல் பாதம் வரை பார்வையாள் ஆராய்ந்தனர்.  அதே மேடையில் கொண்டு வந்து மனைவியைக் கிடத்திய கைலாஷ், தானும் அருகில் அமர்ந்தார். 


சௌந்தரி மகன் அருகில் வந்தவர், வெள்ளை சட்டையில் பாக்கெட் அருகே இருந்த இரத்தத்தைப் பார்த்து, அவர் சட்டை பட்டனைக் கழட்டி ஆராய்ந்தர். அப்போது தான் குனிந்து பார்த்தவர், " என்ர இரத்தம் இல்லைங்கமா, உங்க மருமகளுது" என்றவர் முகத்தில் தாங்க முடியாத வேதனை. 


ரமாபாய், மகளருகே சேரில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்தவரை , " நானிமா, ஆயிக்கு ஒண்ணுமில்லை, பயப்படாதீங்க" என ஆதர்ஷ் தேற்றினான். 


" உன் ஆயி எப்ப தான் இந்த பயத்தை விடுவான்னு தெரியலை, நானாசாப், நானும் இருபத்திரெண்டு வருஷமா இவளோட போராடியே களைச்சுட்டேன்" எனக் கண்ணீரைச் சுண்டி விட்டார். 


" சாஸுமா, இனிமே என்ர பாருவை பத்தின கவலை உங்களுக்கு வேண்டாம். நான் பார்த்துக்கிறேனுங்க" என கைலாஷ் மனைவியைத் தாங்கி, மாமியாருக்கு ஆறுதல் சொல்ல, 


" உங்க குடும்பத்தை, உங்ககிட்ட ஒப்படைக்கத் தான்  தாமாத்ஜி, இவ்வளவு பாடும். நீங்கப் பொறுப்பை எடுத்துக்குங்க. நான் தேசாந்திரம் 

கிளம்பிடுறேன்" என்றார் ரமாபாய்


" அது என்னாத்துக்கு, இவிகளுக்கு ஒரு நல்லதைப் பண்ணி வச்சிட்டு, நீங்களும் வாங்க, நாம குன்னூர் போவோம்" என்றார் சௌந்தரி 


கௌரியும், ஆதிராவுமாக அன்று போல் இன்றும் பைரவிக்கு சிருக்ஷை செய்தனர். டாக்டர் வந்து, பைரவிக்கு ஊசி போட்டு, நெற்றி காயத்துக்கும் கட்டுப் போட்டவர், கைலாஷ், விஜயனையும் பரிசோதித்து ப்ளாஸ்டர்களை போட்டுச் சென்றார். 


நாயகம், " வீட்டில விஷேசத்தை வச்சுகிட்டு, அப்படி என்ன வெளியே தெருவில வேலை வேண்டிக் கிடக்குது. இத்தனை நாள் உன்ர இஷ்டத்துக்கு திரிஞ்ச, இப்போ பொண்டாட்டி புள்ளைங்க வந்திருச்சில்ல, கொஞ்சம் அடங்கியிருந்தா என்ன.  உனக்கு ஒன்னுன்னு, என்ர மருமகள் எப்படி துடிக்குது பாரு. செய்யற வேலையை அடுத்த வாரத்தில செஞ்சுக்க கூடாதாக்கும். இனி மில்லைத் தாண்டி போனையினா, நல்லா இருக்காது பார்த்துக்கஎனக் கிட்டத் தட்ட அனைவர் முன்னிலையிலும் மகனை மிரட்டத் தான் செய்தார். 

சௌந்தரிக்குத் தான் சங்கடம், மகன் ஏதாவது பேசிவிடக் கூடாதே என, " ஏனுங்க, ஏதோ முக்கியமான விசயமா இருக்கப் போய்த் தானுங்களே ராஜா போயிருக்கானுஙக. கார் ஆக்சிடெண்ட்டுன்னு சொன்னாங்களே, பையன் கை கால் சொகத்தோட வந்திருக்கானேன்னு, சந்தோஷப் படுவீங்களா, அதைய விட்டுப் போட்டு, குறுக்கு விசாரணை பண்றீங்க. " எனக் குறை சொல்ல, " தாய் மாதா, அப்பா தானுங்களே, மருமகள் மேல இருக்க அக்கறையில சொல்றாரு விடுங்க. " என முதல் முறையாகக் கைலாஷ் , நாயகத்துக்கு ஆதரவாகப் பேச, " ஏன், உன்ர மேல எனக்கு அக்கறை இல்லையாக்கும். உன்ர தங்கச்சிங்க வந்து, கார் ஆக்சிடெணட் ஆகி, அப்பளமாட்டமா கிடக்கு, அதிலிருந்தவிக பொழைக்க வழியில்லைனு சொல்லவும், ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டோம். மருமக்களுக்காகச் சொல்றேனாமாம், ஏன் நீ என்ர மகன் இல்லையாகும், உன்னகாகத் துடிக்காது, தனி மரமா நிக்கிறியே, எங்களுக்குப் பொறவு உனக்குன்னு யாரு உன்ர அம்மா வாய் விட்டு புலம்புவா , நான் மனசுக்குள்ளையே புழுங்குவேன் , அது தான் வித்தியாசம்,

இதெல்லாம் உனக்கெங்க புரிய போகுது,


பவானி தான் உன்ர பொன்னசாதி, இளவட்டமா , பேரன் பேத்தி இருக்குதுன்னு தெரிஞ்ச அன்னைக்கு அத்தனை சந்தோசம், என் வம்சத்துக்கு, நீ சேர்த்து வச்சிருக்கச் சொத்துக்கும் வாரிசு கிடைச்சிடிச்சுன்னு சந்தோசப் படலை, என்ர மகன், தனி மரமில்லை தோப்பா தான் இருக்காங்கிற சந்தோசம். உன்ர மகன் உன்னை அப்பான்னு கூப்பிடலையின்னு, உன்ர அம்மலை விட, நான் நெம்ப வேதனை பட்டிருக்கேன், அதுவும் ஒரு அப்பனுக்குத் தான் புரியும், உனக்கு மகனாவும் எதுவும் புரியாது, அப்பனாவும் எதுவும் புரியாது " எனப் பேசும் போதே கலங்கியவரை, "அஜிஜு,எங்களுக்கும் தாத்தாவோட பாசம் என்னனு உங்களைப் பார்க்கவும் தான் தெரிஞ்சிக்கிட்டோம். " என ஆதர்ஷும், ஆதிராவும் வந்து அணைத்துக் கொண்டனர், கைலாஷ் உணர்ச்சி வயப்பட்டவராகத் தந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தார். பேரன் பேத்தியை உச்சி முகர்ந்தவர், " உன்ர விஷப் பரிட்சை எல்லாம் நிறுத்திப் போடு. உன்னை நம்பி, ஒரு கூட்டமே இருக்குது. எங்களுக்கும் வயசாகுது. இதையெல்லாம் தாங்கிற சக்தி இல்லை. விஜயனும் உன்ர கூட வந்திருக்கையில, நாங்க யாரைன்னு நினைக்கிறது. மனசு பதறுதில்ல, அப்படி என்ன வேலை இன்னைக்கே முடிக்க வேண்டியது " எனப் பதட்டமும், பாசமும் போட்டிப் போட, அதையுமே கோபமான பேச்சில் தான் காட்டினார் நாயகம். பன்னீர் , "ராஜனுக்குத் தெரியாததா, எதோ முக்கியமான விஷயம் இருக்கப் போயி தான போயிருக்காப்ல. " என்றும், " பெரிய பாசக்காரனாட்டமா சீன் போடுவான்" என ராமசாமியும் மருமகனுக்கு வக்காலத்து வாங்கி நிலைமையைச் சீராக்கப் பார்க்க , " மன்னிச்சுக்குங்கப்பா, விசயம் உங்க வரைக்கும் வரும்னு எதிர்ப்பார்க்கலையிங்க. அது வேற ஒரு விசயம், பொறவு சொல்றேனுங்க" எனக் கைலாஷ் சட்டென மன்னிப்பு கேட்டுப் பேச்சைக் கத்தரிக்க, சௌந்தரிக்கு ஆச்சரியம் எனில், அங்கிருந்து ஒவ்வொருவர் மனதிலும், ஒவ்வொரு வகையான ஆர்வம், திகில், பயத்தை ஏற்படுத்தியிருந்தது. ராஜன் இவ்வளவு தூரம் பேசிய பிறகு மற்றவர் அமைதி காக்க, " ஆக்சிடெணட் ஆன கார்ல, நீ போகலையில கண்ணு,.வேற யார் இருந்தாங்க" எனச் சாரதா, தன் மண்டையைக் குடைந்த கேள்வியைக் கேட்டே விட்டார். " அது தான், பொறகு சொல்றோம்னு சொல்றாப்லைல, விடுவேன்." எனச் சுப்பு மனைவியை முறைக்க, " அட ராஜா , அந்தக் கார்லை வரலையின்னா, எவனோ திருடியிருக்கோணும், அப்படி நம்ம காரை திருடுற அளவுக்கு எவனுக்குத் தகிரியம் இருக்குது. அதுக்குத் தான் கேட்டேனுங்க" எனத் தான் யோசித்ததைச் சாராதா கூறவும், மென்னகை சிந்திய, கைலாஷ், " நீங்க கேட்கிறது சரி தானுங்க சித்தி, ஒரு திருட்டுபய நம்பக் காரை எடுத்திட்டு ஓடப் பார்த்தானுங்க, அது தான் கடவுளா பார்த்துத் தண்டனை கொடுத்திட்டாருங்க" என வினையமாகச் சிரிக்கவும், " ஆமங்க அம்மத்தா கைலாச நாதர், கொடுத்த தண்டனைங்க" என அபிராம் மாமனை முறைத்தபடி பதில் தரவும், " திருட்டு பய காரை எடுக்கிற வரைக்கும் , சத்தியன் என்ன செஞ்சான்" எனச் சௌந்தரியும், "நம்மூர் அத்தனை கெட்டுப் போச்சா கண்ணு" என அபரஞ்சியும் மூத்த பெண்களே இவ்வளவு தூண்டி துருவ, ராஜமாதா மூளை படு வேகமாகக் கணக்குப் போட்டது.

" அம்மத்தா, எனக்குப் பசிக்குதுங்க. டிபனை வச்சிக்கிட்டே, கேட்டிங்கன்னாக்க, நான் பதில் சொல்லுவேணுங்க. " என அபிராம் பசி எனக் கேட்கவும், எல்லாரும் உணவு கூடத்தை நோக்கிச் செல்ல, ராஜ குடும்பமும், விஜயனும் மட்டுமே அரங்கிலிருந்தனர். ரமாபாய், ஆதர்ஷிடம், " நானாசாப், என்ன நடந்தது" என வினவவும், அவன் தான் பார்த்ததை விவரிக்க ஆரம்பித்தான்.

Wednesday, 20 April 2022

யார் இந்த நிலவு- 48

யார் இந்த நிலவு- 48

ஆதர்ஷ், அபிராம் இருவருக்கும் வந்த செய்தி ஒன்றே தான், ராஜனும், விஜயனும் சென்ற கார், மேட்டுப் பாளையம் ரோட்டில் பெரிய ஆக்சிடெணட்டை சந்தித்தது என்பதும், அநேகமாகக் கார் கிடந்த நிலை, அதிலிருந்தவர் பிழைக்கமாட்டார் என்பதும் தான். ஆதர்ஷ் விசயம் கேள்விப்படவுமே ஆடிப் போய்விட்டான்.

'தன்னை, பாபா என அழைக்கச் சொல்லி கட்டாயப் படுத்தா விட்டாலும், தன் வாயிலிருந்து அந்த ஒரு வார்த்தை வந்திடாதா, என எவ்வளவு எதிர் பார்த்தார். ' என மறுகியவனுக்குக் கே ஆர் மில்ஸே அதிரும்படி பாபாவெனக் கத்த வேண்டும் போலிருந்தது.

அடுத்து, ஆயி துல்ஜா பவானி முன்பு, அந்த ஆயியே மனித அவதாரம் எடுத்து வந்தது போல், இப்போது சிவப்புப் பட்டில், தமிழ்நாட்டு மருமகளாய் சேலை உடுத்திச் சிங்காரித்து, விளக்குப் பூஜை செய்யத் தயாராக இருந்த அன்னையைப் பார்த்தான். விசயத்தை உறுதி செய்து கொள்ளாமல், ஆயியிடம் சொல்லக் கூடாது, அவர் இதயம் துடிப்பதை நிறுத்தி விடும்.

மானாகத் துள்ளித் திரியும் ஆதிரா, இத்தனை வருடம் கழித்து, தகப்பனின் அன்பைப் பெற்றவள், அந்தப் பக்கம் தகப்பனைப் பெற்றவர்கள், இங்கிருக்கும் யாருக்கும் விசயம் தெரியக் கூடாது என நிதானித்தவன், தன் நானிமாவிடமும் சொல்லாமல் பாலாஜி ராவ், அவன் டேடை தேடிச் சென்றான். அவன் குரு அவர் தான்.

அவரைத் தனியே அழைத்துச் சென்று, அவரைக் கட்டிக் கொண்டவன், " டேட், பாபா போன கார் ஆக்சிடெணட் ஆனதா நியூஸ் வந்திருக்கு" என நடுங்கும் குரலோடு பயந்தபடிச் சொல்ல, முதலில் அதிர்ச்சியாய் பார்த்தவர், அவன் நிலை உணர்ந்து, முதுகில் தட்டி ஆறுதல் சொன்னவர், " தர்ஷு, நியுஸ் கன்பார்மா, யார் சொன்னா. அதெல்லாம் இருக்காது. கே ஆர், அவ்வளவு கேர்லெஸ்ஸான ஆள் கிடையாது" என அவனைத் தேற்ற,

" நம்ம ப்ளாக் கேட்ஸ் தான் டாட் தகவல் தந்தாங்க. எனக்குப் பயமா இருக்கு, ஆயிக்கிட்ட எப்படிச் சொல்லுவேன். " என இத்தனை நாள் பயின்ற கட்டுப்பாடு எல்லாம், காற்றில் பறக்க,முகத்தில் பால் வடியும் சிறுவனுக்கு இன்று கண்ணீர் பெருக்கெடுத்தது.

" ஒருதடவை கூட அவரைப் பாபான்னு சொன்னதில்லை டாட். என் வாயிலிருந்து, அந்த வார்த்தை வராதான்னு ஆசையா பார்ப்பார்" என அவன் பிதற்ற.

" கண்ணா, இங்க யாருகிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம் , இது நீ ஸ்ட்ராங்கா இருக்க வேண்டிய நேரம். கே ஆருக்கு ஒன்னும் ஆகியிருக்காதுன்னு நம்புவோம், அப்ப தான் சிட்டுவேஷன் ஹண்ட்ல் பண்ண முடியும். " என அவனுக்கு நம்பிக்கை தந்தவர், "அந்த மஹந்தை வெளியே விட்டுருக்கக் கூடாது, இப்ப எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கான் பார்" என எதிரிகளைப் பற்றியம் பேச, அபிராமும் ஆதர்ஷை தேடி வந்தான்.

" மச்சி" என ஆதர்ஷ் அபிராமை கட்டிக் கொண்டு அழவும், " இடியட்டா நீ. கண்ணைத் துடை. யாராவது பார்த்திடப் போறாங்க. என்ர மாமாவை, அப்படி எல்லாம் எவனும் தூக்கிட முடியாது. அப்பாவும் கூடப் போயிருக்கார், இதில வேற ஏதோ நடந்திருக்கு. எனக்கும் பாதுகாப்புக்கு போனவிக தான் கூப்பிட்டு சொன்னாங்க. நாலு பேர் போனும் எடுக்க மாட்டேங்குதே " என அவன் வேறு கோணத்தில் யோசிக்க,

பாலாஜி ராவ், " நான் இங்க பார்த்துக்குறேன். நீ ஒரு டீமோட இடத்துக்குப் போங்க" என அனுப்பி வைக்க, இருவரும் மற்றவர் கவனத்தைக் கவராமல் கிளம்பினர்.

கே ஆர் மில்ஸ் என்ற அந்தக் கோட்டைக்குள், தொழிலாளர்கள் சொந்த பந்தங்கள் எனப் போக்குவரத்து அதிகமாக இருந்த போதும், அடையாளம் இல்லாத எவரையுமே செக்யூரிட்டிகள் உள்ளே அனுமதிக்க வில்லை. சாதாரணமாக வே பாதுகாப்புப் பலமாகத் தான் இருக்கும். இப்போது ராஜகுடும்பமும் உள்ளே இருக்க, உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்திலிருந்தது.

கைலாஷ் ராஜன், தனது கோட்டையைப் பலப்படுத்தி விட்டு, வேட்டையைத் தேடிச் செல்லும் மன்னனைப் போல் நண்பனோடு தானே வெளியே கிளம்பி விட்டார்.

நேற்றிலிருந்து ஏதோ புதிய ஆட்கள் வேவு பார்ப்பதாகச் செய்தி வந்திருந்தது. ஏற்கனவே மஹந்த் ஆட்களைச் சிறை வைத்திருந்தவர், இந்தப் புதியவர்கள் யாரென அறிய,அதில் மாராத்தியர்கள் சிலரை மட்டும், தப்பித்துப் போக வழி செய்யச் சொன்னார். அதே போல் பாதுகாவலர்கள் அசட்டை காட்ட, மூன்று பேர் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தப்பித்தனர். ஆனால் அதுவே இவரது மாஸ்டர் ப்ளான் என்பதை அறியாதவர்கள், மஹந்தை விடுவிக்க முயன்றனர். முன்தினம், பாலாஜியிடம் சொன்னது போல் , கைலாஷ் மஹந்த்தை விடுதலை செய்யவும் இல்லை, சிறை வைக்கவும் இல்லை.

போஸ்லேகளுடன் இன்றும் நல்ல உறவையே விரும்பியவர் , மனைவி சொல்லுக்காகா, அவனுக்குத் தனி ஏற்பாட்டைச் செய்து வைத்திருந்தார்.அதனால் தான் அவன் அடியாட்டகளுக்கும் அவன் இருக்குமிடம் தெரிய வில்லை. மஹந்தை மீட்காமல் போனால் போஸ்லேக்கள் கையில் உயிர் போவது உறுதி என நினைத்தவர்கள், தங்கள் தலைவனுக்குச் சோலாப்பூருக்கு போன் அடிக்க, தான் இங்குத் தான் இருப்பதாகவும், பீமராஜாவோட வந்திருப்பதாகச் சொன்னவன், ஏற்கனவே கே ஆர் மில்லை நோட்டம் பார்த்து வைத்திருந்த இவர்களைச் சேர்த்துக் கொண்டான்.

இந்த மூவரையும் தொடர்ந்த கைலாஷின் ஆட்கள், அவர்கள் இருப்பிடத்தைக் கண்டு பிடித்தனர். தான் வெளியே வந்து அவர்களைத் தாக்காவிட்டால், அவர்கள் மில்லுக்குள் புகுந்து விடுவார்கள் என யூகித்த கைலாஷ், தன் நண்பனோடு சேர்ந்து அடுத்து நடக்க வேண்டியதைத் திட்டமிட்டார். ஏனெனில், அடுத்தடுத்து வீட்டில் விசேஷத்தை வைத்துக் கொண்டு , நிம்மதியாய் குடும்பத்தினருடன் தந்து பொழுதை செலவழிக்க விரும்பியவர், பகையை முடித்தே ஆசுவாசமடய வேண்டும் என முடிவெடுத்தார்.

நேற்று தங்கள் வீட்டில் தங்கைகள் பைரவி குடும்பத்தைப் பற்றியும், அதிலும் ஆதர்ஷை, பாசமில்லாதவனாக, பணத்துக்காகவே வளர்த்து வைத்திருக்கிறார்கள். இந்தக் காசு பணம் இல்லையினா அண்ணனை தேடுவாங்களா' எனப் பேசியதையும் கேட்டவர், 

தனக்குப் பின் கே ஆர் மில்லை ஆதர்ஷ் பார்க்க வேண்டிய சூழல் வந்தால், அவரின் சொந்தங்களிடமும், தொழிலாளர்களிடமும், அவனைப் பற்றிய நல்ல விதமான அபிப்ராயம் இருக்க வேண்டும் , அப்போது தான், அவனுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என நினைத்தவர், மகன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை மற்றவர் முன் காட்ட வேண்டும். அவனுக்கு இருக்கும் உணர்வு பூர்வமான கட்டை உடைக்க வேண்டும் எனவும் நினைத்தார். அதற்காகவும் கைலாஷின் மூலையில் விபரீதமான எண்ணம் ஓடியது.

ராமாபாய்ச் சொன்னது போல், சொத்துக்களைச் சரியாகப் பிரிக்கவும், ஆடிட்டர், வக்கீல்களோடு கலந்து ஆலோசிக்க வேண்டியது இருந்தது. அதனால் இந்த வேலைகளை மில்லில் அமர்ந்து பார்க்க முடியாது என, கே ஆர் மில்லின் மற்றொரு யூனிட் இருக்குமிடத்துக்குச் சென்றார்.

கே ஆர் கார்களின் அணிவகுப்பு வெளியேறவுமே, சொல்லி வைத்தார் போல் மற்றொரு கார் அவர்களைத் தொடர்ந்தது. கைலாஷ் ரிவர்வ்யூ கண்ணாடியில் பார்த்து விட்டு, " என்ர மாமனார் வீட்டு ஆளுஙங்களுங்கும், என்ர மேல இருக்கப் பிரியத்தைப் பார்த்தியா , பாதுகாப்புக்கு வர்றானுவ" என ஓர் சிரிப்பை உதிர்க்க.

" சின்னவருக்கு உங்க மேல, நெம்பப் பிரியமுங்கப்பா, பின்னாடியே பூனைப் படையை அனுப்பி விட்டுருக்காருங்க" எனச் சத்தியன் ஆதர்ஷை பெருமையாகச் சொல்ல,

" க்கூம், நீ தான உன்ர சின்னவரை மெச்சிக்கோணும், அப்பான்னு கூப்பிட மாட்டானாமாம், பூனை படை, யானைபடைனு அனுப்பி வைக்கிறானாக்கும். என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியாதாக்கும் " எனக் கைலாஷ் நொடித்துக் கொள்ள,

" அட மாப்பிள்ளை, உன்ர மேல அக்கறையோட இருக்காப்லையினா, சரின்னு தான் ஒத்துக் கோவேன். நீ ஒரு எக்தாளம் புடிச்சவன்" என விஜயன் நண்பனைத் திட்ட, சம்பத் சொல்லவும் சிரிக்கவும் மாட்டாமல் உட்கார்ந்து இருந்தார்.


" எனக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது இருக்கட்டும், நம்ம காருங்களுக்குப் பின்னாடி, இன்னொரு வண்டி வருது பார், அதைய என்ன செய்யறது. என்ர மச்சினன்களுக்கு அத்தனை தில் கிடையாது, பங்காளி அனுப்பியிருப்பானோ. வால் வருதான்னு பார்க்கனுமே" எனப் பூடகமாகவே பேசியவர், சோலாப்பூர் நண்பன் திலக்கு போன் போட்டுப் பேசிவிட்டு,

 "போட்டோ அனுப்பி விடு, பங்காளி மவன் எப்படி இருப்பான்னு பார்க்கனுமில்லை, அடையாளம் தெரியாத, வேற அப்பாவியைப் போட்டு தள்ளிடக் கூடாதில்ல, எதைய செஞ்சாலும் ஒரு நியாயம் இருக்கோணும்" என அவர் சிரிக்க, விஜயன் அலைபேசி உரையாடலைக் கேட்டு நண்பனை முறைத்தார். அதைப் பொருட்படுத்தாத கைலாஷ், " அதுசரி, என்ர கல்யாணத்துக்கு வர்றது. சோட்டி ராணியையும் பார்த்த மாதிரி இருக்குமுல்ல" என்றவர் ,அந்தப் பக்கம் சொன்ன பதிலில் சிரித்து விட்டு, " அச்சா, அச்சா" எனப் போனை வைத்தார்.

விஜயன் தலையும், புரியாமல் காலும் புரியாமல் அவரை முறைக்க, மொபைலில் லோடான படத்தைக் காட்டி, " இவனை அடையாளம் பார்த்துக்க. இவனோட தான் சாய்ந்திரமா சண்டை போடோணும். ஜங்க், லடாயீ, பங்காளி மவன், பீமராஜா" என ஜெயந்தின் மகன் என்ற விவரங்களைச் சொன்னவர், தனது திட்டத்தையும் முன் சீட்டில் அமர்ந்திருப்பவருக்கும் கூடக் கேட்காமல், நண்பனிடம் கோர்ட் வார்த்தையிலேயே சொல்ல, " இது கொஞ்சம் ரிஸ்கா தெரியுதுடா" என்றார் விஜயன்.

" வேற வழியில்லை, நம்ப இடத்துக்கு வரும் முன்ன, நாம அவனைத் தூக்கியே ஆகோணும்" என்ற ராஜன் ,மகனிடமிருந்து வந்த ஃபோன் காலை அட்டன்ட் செய்து, உருட்டி, மிரட்டி மனைவியைச் சாப்பிட வைத்தது, மகன், மகள், மருமகன், மருமகள் என இளையவர்களோடு சரிக்கு சரி வார்த்தையாட, விஜயனுக்குச் சற்று முன் மாஸ்டர் பிளான் சொன்ன கே ஆர் இவர் தான் என வியந்தே பார்த்தார். ஐம்பது வருடங்களுக்கு மேலான நட்பு, ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் நண்பன் மற்றொரு புது ஆளாகத் தான் அவருக்குத் தெரிவார். விஜயன் மட்டும் பெண்ணாகப் பிறந்திருந்தால், ராஜி, பைரவி யாருக்குமே, கேஆர் வாழ்வில் இடமில்லாமல் போயிருக்கும்.

முன் மாலைப் பொழுது வரை, தன் சொத்துக்களை, ஒழுங்கு படுத்தி, ஆராய்வதிலேயே மும்மரம் காட்டினார். மதிய உணவுக்குப் பிறகு, வேலைத் தொடர்ந்தது. முன் மாலைப் பொழுதில் ஆடிட்டர், வக்கீல்கள் சரிபார்த்த ஃபைலை விஜயனையும் பார்க்கச் சொல்லி விட்டு, தான் கையெழுத்திட்டார். சம்பத்தை அவர்களோடு மற்ற ஏற்பாடுகளைக் கவனித்து, வக்கீலோடு அனுப்பி வைத்தார்.

" ராஜா, உன்ர பரந்த மனசு யாருக்கும் வராதுடா. ஆனால் இதை, உன்ர உடன் பிறந்தவிக, கூட இருக்கவிக புரிஞ்சுக்குவாங்களா" என நண்பனைப் பாராட்டி விட்டு, விஜயன் ஒரு க் வைத்து கேள்வியும் கேட்க, ஓர் புன்னகை உதிர்த்த ராஜன், உடன் பிறந்தவிக என்ற தங்கைகளைப் பற்றிய பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மனைவி மக்களைப் பற்றியே பேசினார்.

" போகையில என்னத்தடா கொண்டு போகப் போறோம், பாரு என் வாழாக்கையில இல்லையினு நினைச்சு, ஏற்கனவே முடிவு பண்ணி வச்சிருந்தது தான். நிர்வாகம் மட்டும் மாறும். எனக்குத் தெரிஞ்சு, என்ர பொண்டாட்டி பிள்ளைகளுக்கு இத்தனை நாள் , நானே தேவை இல்லாதவனா தானடா இருந்திருக்கேன். என்ர சொத்தும் அவிகளுக்குத் தேவையில்லை தான். இருந்தாலும் ராணியம்மா கண்டிசனுக்காக இந்த ஏற்பாடு. " என நொந்தவரிடம்.

" அப்படிச் சொல்லாதடா ராஜா, தங்கச்சிமாவும் புள்ளைங்களும் உன்ர மேல எவ்வளவு பிரியமா இருக்கிறாங்க. அவிக சொல்ற மாதிரி இது விதி தான் " என நண்பனைத் தேற்ற,

" அடப் போடா, இன்னைய வரைக்கும், உன்ர தங்கச்சி என்னை விட்டு ஏன் பிரிஞ்சான்னு, காரணத்தை ,அவள் வாய்மொழியா சொல்லவே இல்லை.அவ அக்கா புருஷன், அந்தத் தடியன் சொன்னாக்க போதுமா, அவனை எப்பவுமே ஆகாது, எப்போத்திலிருந்து அவனை நம்ப ஆரம்பிச்சா.இவிக, ஆயி மகனெல்லாம் ஒரே கூட்டம், என்ர மகள் மட்டும் தான் என்னாட்டம் வெள்ளந்தி." எனவும்.

" தங்கச்சிம்மா, காரணத்தைச் சொல்லாத இருக்கிறதுக்குப் பின்னாடியும், ஏதாவது காரணம் இருக்கும்டா. உன்னைய, அப்பவே உன்ர குடும்பத்துக்காகத் தான கட்டாயப்படுத்தி அனுப்பி வச்சாங்க. " என விஜயன் பூடகமாகச் சொல்ல, அடுத்துக் கேள்வி கேட்க வந்த ராஜன் ஒரு போன்கால் வரவும், " அங்கயே இருங்க, இதோ வந்திடுறேன்" எனப் போனில் கட்டளையைத் தந்தவர். விஜயனிடம், " பங்காளி வீட்டு இரை சிக்கிடுச்சு. வர்றியா. இல்லையினா, சத்தியனோட கிளம்பு. "என்றவரை,

" பிறந்ததிலிருந்து, உன்ர கூடத் தான் சுத்துறேன். உன்ர ஹீரோயிஸத்தில எல்லாம், எனக்கும் பங்கிருக்குது தெரிஞ்சுக்க, நானில்லாத போயிடுவியாக்கும். பிச்சு போடுவேன், வா " என்றவர், நண்பனோடே கிளம்ப, சத்தியன் பிடிவாதம் பிடித்து அவரோடே கிளம்பினான்.

கே ஆரின் கார், பாதுகாப்புக்கு வந்த ப்ளே கேட்ஸ், பின் தொடர, மேட்டுப்பாளையம் ரோட்டில் பயணித்தது.

ஆதர்ஷும், அபிராமும் ப்ளே கேட்ஸ் சொன்ன இடத்துக்கு, வண்டியை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தனர். கார், கட்டுப்பாட்டை இழந்தது போல் நிறைய அடி வாங்கி, நசுங்கிக் கிடந்தது.

அபிராம் காரை செலுத்தி வந்தான், இருள் படர ஆரம்பித்திருந்தது. ஓரிடத்தில் கார்களின் முகப்பு ஒளி பாய்ச்சியபடி இருந்த இடத்தில் கார் நிற்கவும் ஆதர்ஷ் முதலில் இறங்கி ஓடி வந்தான். கார் கண்ணாடிகள் சிதறி கவிழ்ந்து கிடக்க, இரத்தம் சொட்டிக் கிடந்தது. போலீஸ் வரும் முன் இவர்கள் அங்குச் சென்றிருக்க, ஆதர்ஷ் பதட்டத்தோடு, " பாபா" எனக் கதறியபடியே ஓடி வந்தான். இவன் ப்ளாக் கேட்ஸ் வண்டியும், ஒரு ட்ரெக் , வேன் ,நின்றது. அபிராமும் இறங்கி ஓடி வர, அவர்களோடு வந்த ஆட்கள், இடத்தைச் சுற்றி வளைத்தனர்.

அபிராம், ஆதர்ஷ், இருவரும் நாலாப்பக்கமும் கண்களைச் சுழற்ற, " பாபா எங்க" என ஆதர்ஷ் கேட்க, அங்கே நின்ற வேனை காட்டினர். நெஞ்சம் பதைபதைக்க இருவரும், அதை நோக்கிச் சென்றனர்.

கே ஆர் மில்ஸ், பைரவி கௌரி விரதம் மேற்கொண்டிருந்தவர், அதன் நியம நிஷ்டிகளைக் கடைப்பிடித்து, மாலையில் மீண்டும் குளித்துத் தயாராகி, தமிழ்நாட்டு மருமகளாய் சிவப்பு பட்டுச்சீலை, நகைகள் தரித்து, நெற்றியில் வட்டப் பொட்டும், வகிட்டில் குங்குமம், நீண்ட முடியை பின்னலிட்டு, மல்லிகை சரங்களைச் சூட்டி, வைரக் கம்மல் , மூக்குத்தி என ஒளி பொருந்திய முகத்தை மேலும் தேஜஸாக்கிக் கொண்டிருந்தது.

ரமாபாயே இன்று மகளுக்கு, திருஷ்டி கழித்து, காலா நீக்கா வைத்துத் தான் மகளை மேடையேற்றினார். கௌரியும், கஸ்தூரியுமாகத் தான் பைரவியைத் தயார் செய்தனர், "அண்ணியை இப்படிச் சிங்காரிச்சு இன்னைக்கு அண்ணா பார்த்தாருன்னா, அவ்வளவு தானுங்க " எனக் கேலி பேச, " அவர் வரும் போது, முக்காடு போட்டு விட்டுருவாங்க. படி ஆயி பார்க்க விடமாட்டாங்க" என்றார் கௌரி.

" அதெல்லாம் எங்க அண்ணாக்கிட்ட செல்லுபடியாகுதுங்க. காலையில பார்க்கலைங்களா, இப்பவும் அதே மாதிரி எதாவது செஞ்சிருவாங்க" எனப் பெருமை பேச, முன்பொரு நாள், ஜடைப் போட சொன்ன கணவர் நினைவில் வர, பைரவி அமைதியாகச் சிரித்துக் கொண்டார்.

ஆதிரா, ஆரா, ரஞ்சி, ஶ்ரீ சகோதரிகள் என ஐவருக்கும், இந்த நேரத்துக்குப் பொருத்தமாய் மற்றொரு பாவாடை தாவணியில் வலம் வந்தனர். கே ஆர் மில் வளாகத்திலேயே பார்லர் உண்டு. அங்குள்ள பெண்களில் சிலரும் இந்தக் கலையைக் கற்றவர்கள் இருந்தனர், அதனால் இந்தப் பெண்களின் அலங்காரங்களை அவர்களே பொறுப்பேற்றனர்.

மில்லில் வேலை பார்க்கும் சங்கீதா, விளக்குப் பூஜை ஏற்பாடுகளைச் செய்து விட்டு, பைரவியை அழைக்க, ஆதிரா முதலான இளம் பெண்கள் வந்து, பைரவியைப் புடை சூழ அழைத்துச் சென்றனர். தினமும், மாலை நேரத்தில் குங்குமம் ழைத்து ஆசீர்வதிக்கும் வசந்த விலாச மூத்த பெண்மணிகள் மூவரும், இன்று பவானி அம்சமாகவே வந்த மருமகளை வழக்கம் போல் வாழ்த்தி, அம்மனுக்குக் கீழே போடப்பட்டிருந்த மேடையில் அமர வைக்க, திருவிளக்கு பூஜைக்கு வந்த பெண்கள், துல்ஜா பவானியிடமும், தங்கள் சேர்மன் அப்பாவின் மனைவியான அம்மாவிடமும் ஆசி வாங்கி, பூஜையில் அமர்ந்தனர்.

விநாயகர் துதியில் ஆரம்பித்து, மில்லில் வேலை செய்யும் பெண்களில், நன்றாகப் பாடக்கூடியவர்களைத் தேற்றி, மைக் செட்டெல்லாம் வைத்து, தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தனர். கே ஆர் மில்ஸ் வளாகம் ஆங்காங்கே கட்டிடங்கள் சீரியல் லைட்களாலும், மற்ற இடங்களில் மாநாட்டு ஏற்பாடு போல் வழி நெடுக வளைவுகளும், குழல் விளக்குகளுமாகக் கே ஆர் மில்லே மிளிர்ந்தது.

பாலநாயகம் ஏற்பாடுகளைப் பார்வையிட்டவருக்குப் பரம திருப்தி. தன் மகனுக்கு இளமைக் காலத்தில் செய்து பார்க்காத திருமணத்தை, தற்போது நடத்திப் பார்ப்பதில் பெருமை, ஓர் நிறைவு. தங்கள் முறைப்படி தான் திருமணம் நடக்க வேண்டும் எனச் சௌந்தரி பிடித்துவிட்டதால், கொங்கு முறைப்படி செய்ய, அருமை காரர்களை ஏற்கனவே சென்று அழைத்து வந்துவிட்டார். ஆனால் அவர்களுக்கு, இந்தத் திருமணத்தைப் பற்றி விளக்கும் முன் தான் ஒரு வழி ஆனார். ஆனால் நால்வரணி சென்றதால், நாயகத்தின் பதற்றத்தைக் குறைக்கும் வேலையையும், சாங்கியம் செய்து வைப்பவர்களுக்கு விளக்கும் வேலையையும் அவர்கள் பார்த்துக் கொண்டனர்.

பெரியவர்களும், விளக்குகளின் அணிவகுப்புக்கு மறு புறம் சேர்களில் அமர்ந்து கொண்டு திருப்தியாகப் பார்வையிட்டனர்.சௌந்தரி தான், தன் மகள்கள் இருவரும் இன்னும் வந்து சேரவில்லையே எனப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

பெரியவர்கள், ஆதிராவை அழைத்து அபிராம், ஆதர்ஷை பற்றிக் கேட்க, " நாங்க மேக்கப் பண்ணிட்டு இருந்தங்களா, தெரியலை. " எனப் பதில் தர, பாலாஜி ராவ் தான், தான், ஒரு முக்கியமான வேலையாக அனுப்பியிருப்பதாகச் சமாளித்தார். அரங்கையே சுற்றிக் கொண்டு, வெளியாட்கள் உள்ளார்களா, எனப் பார்த்துக் கொண்டிருந்தார்

பாலாஜி ராவ், பதட்டமாக இருப்பதாக உணர்ந்த ரமாபாய், மருமகனை வினவ, அவர் ஒன்றுமில்லை எனச் சமாளித்துச் சென்றார். ஆனால், பூஜைக்கு வரும் மற்ற பெண்களுக்கு, தாம்பூலம் வைத்துக் கொடுக்கும் வேலையில் ராதாபாய், கஸ்தூரி, ஆதிரா முதலான பெண்களை வைத்து நிறைவாக நடத்திக் கொண்டிருந்தார்.

பெண்கள் 108 போற்றிச் சொல்லி, விளக்குப் பூஜை செய்ய, பைரவி ஆயி துல்ஜா பவானிக்கு அர்ச்சனை செய்தார். நூற்றுக் கணக்கான பெண்கள் சேர்ந்து கௌரி பூஜை, கன்னி பூஜை செய்ய, ஆயி பவானியின் பாதத்தில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, அவளுக்கு மிகவும் பிடித்தமான கண்ணாடி வளையல்கள், பூக்கள் என மங்களமான பொருட்களால் நிறைந்திருந்தது. ஆயி பவானி புன்சிரிப்போடு தன் லீலையை அரங்கேற்றத் தயாரானாள்.

விளக்குப் பூஜை முடிந்து, பண்டிதர் தேவி பவானிக்கு நைவேத்தியம் படைத்து, மந்திரம் சொல்லி, அராத்திக் காட்டினார். பயபக்தியோடு, அதில் கலந்து கொண்ட அத்தனை பேரும், வணங்க, மில் தொழிலாளிகள், தங்கள் சேர்மன் சார், அப்பாவின் வாழ்வில் வசந்தமாக வந்த அந்தப் பெண்மணியை ஆச்சரியமாகவே பார்த்தனர். ஏனெனில் அவர்களது காதல்கதை, அப்பா இத்தனை காலமும் மணம் முடிக்காமல் காத்திருந்த கதை, அவர்களிடத்தில் பிரசித்தியாகி இருந்தது. பைரவி கையால் குங்குமம் வாங்கவே பெண்கள் போட்டிப் போட்டு வந்தனர்.

கே ஆர் மாளிகையில் வேலை செய்யும் செல்லி முதலான பெண்கள், கூட்டம் பைரவியைச் சுற்றாமல் பார்த்துக் கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து, பாலாஜி ராவ் கூட்டத்தை அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார். அந்தப் பெண்களுக்கு ஏற்பாடு செய்த உணவையும், அவர்கள் ஹாஸ்டலுக்கே கொடுத்து விட்டார்.

ஆதர்ஷ் , தன் பாபாவைத் தேடிச் சென்றவனும், இன்னும் விவரம் சொல்லாததில் பதட்டமாக இருந்தார். பெரியவர்களைச் சாப்பிட அழைத்துக் கொண்டிருக்கும் போதே, கம்பெனி கார் ஒன்று வேகமாக வந்து நிற்க, அதிலிருந்து கைலாஷின் தங்கைகள் ஓட்டமும் நடையுமாக வந்தனர். அவர்களின், அதிர்ந்து அழுது வடிந்த முகம், எதற்கும் அஞ்சாத பாலாஜி ராவ் க்கே பீதியைத் தந்தது.
மகள்களைக் காணவும், சௌந்தரி, " கொஞ்சம் முன்னாடியே, வர்றதுக்கு என்ன கண்ணு, எப்படிப் பூஜை தெரியுமா. அண்ணிகிட்ட போய், தாம்பூலம் வாங்கிக்கிங்க. அதுவே தேவி ஸ்வரூபமா உர்கார்ந்திருக்கு" எனச் சொல்லவும், சங்கீதாவுக்கு ஆத்திரம் வந்தது. பைரவியின் முன் சென்று நின்றவள், பீடத்தில் வீற்றிருக்கும் அன்னையையும், அவளின் தாசியாய் மேடையில் வீற்றிருக்கும் அண்ணியையும் ஒருங்கே பார்த்து,

"உங்க பூஜை பொய் ,நீங்களும் ராசியில்லாதவங்க, நீங்க மறுபடியும் எங்க அண்ணன் வாழ்க்கையில் வந்ததே, அவருக்கு வினையா முடிஞ்சிருச்சு, அண்ணன் போன கார், மேட்டுப் பாளையம் ரோட்டுல , அப்பளமா நொறுங்கி கிடக்கு. அதில இருந்தவிக பொழைக்கலைன்னு பேசிக்கிறாங்க, எல்லாம் உங்களால தான், உங்க ராசி தான். இப்படி உட்கார்ந்து போஸ் கொடுத்து பூஜை பண்ணிட்ட, எல்லாம் சரியா போயிடுமா " எனச் சங்கீதாவும், கவிதாவும் மாற்றி, மாற்றிக் கண்ணீரோடு ஆங்காரமாகப் பைரவியை நோக்கி ஆங்காரமாகப் பேச, " என்னடி சொல்றீங்க. என்ர மகனுக்கு என்னாச்சு" எனச் சௌந்தரி மகள்கள் மேல் பாய்ந்தார். அவர்கள் சொன்னதில், "ஆத்தா தாயி, என்ர மருமகள், ஒரு விரதம் விடாத , வாயில பச்சை தண்ணிக்கு கூடப் படாத விரதம் இருக்குமே, அதுக்கு நீ கொடுக்குற பரிசா" என அப்போதும் மருமகளை வீட்டுக் கொடுக்காமல் பெருமையாகவே சொல்லி பெருங்குரலெடுத்து அழுதார்.

பைரவி மலங்க, மலங்க முழித்தவர், " என்னமா சொல்ற, திருப்பிச் சொல்லு யாருக்கு என்ன ஆச்சு" எனத் தன் நெஞ்சை நீவியபடியே, பைரவி கேட்க, ரமாபாய், ஆதிரா, ராதாபாய், அவர்களைச் சூழ்ந்திருந்தனர்.

சங்கீதா, கவிதாவின் கணவர்களிடம் பாலாஜி ராவ் குறுக்கு விசாரணை செய்தார். அவர்கள், தாங்கள் வரும் வழியில் கைலாஷின் காரைப் பார்த்ததாகவும், அது விபத்துக்குள்ளாகிக் கிடக்க, போலீஸ் வாகனம் நின்றதாகவும், அங்கு விவரம் கேட்டதில் தான், கைலாஷின் கார் எனத் தெரிந்தது என விவரம் சொல்ல, " அப்ப நீங்க கே ஆரை பார்க்கலை" எனத் தெளிவு படுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் நாயகம், மனைவி மகள்கள் அழுவதைப் பார்த்து ஓடி வர, அதற்குள் பைரவியிடம் சங்கீதா சொல் கங்குகளைக் கொட்டியிருந்தாள்.

" நீங்க, எங்க அண்ணன் வாழ்க்கையில் வரும் போதெல்லாம் பிரச்சனை தான். அவிக உசிரோட இருக்கிறதே உங்களுக்குப் பிடிக்காதா. உங்களுக்கும் அவிகளுக்கும் பொறுத்தமில்லைனு தெரியிதில்லை, ஒதுங்கி போறதை விட்டு எதுக்கு வந்திங்க" எனச் சங்கீதாவும்.

" அண்ணனைப் பொறுத்தவரை, நீங்க செத்தவுக, செத்தவிகலாவே இருக்க வேண்டியது தானுங்களே. ராஜ குடும்பத்தோட, பகைமையும் கொண்டு வந்து எங்க அண்ணனை சாச்சுப் புட்டிங்களே" எனச் சின்னவளும் ஒப்பாரி வைக்க, அவர்களையே பார்த்திருந்த பைரவிக்குப் புத்தி பேதலிக்க ஆரம்பித்தது. "முழு விவரம் தெரியாம, ஏதாவது பேசாதீங்க" என ரமாபாய் , மக்களின் நாத்திகளைக் கண்டித்தார்.

ஒரு மாதிரி முழித்து, " ஆயி, இவங்க என்ன சொல்றாங்க. ராஜுக்கு என்ன. நான் ராசி இல்லாதவள் தான். ஆனால் என்ன ஆச்சு" என மெல்லப் புலம்ப ஆரம்பிக்க, " பையு, மறுபடியும் மனசை விட்டுறாதடி. உன் புருஷனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. ஆயி பவானி, உன் மாங்கல்யத்தைக் காப்பாத்துவா" என ரமாபாய் மகளை முகத்தில் தட்டி இயல்புக்குக் கொண்டு வர முயன்றார்.

சௌந்தரி, " இத்தனை வருசம் கழிச்சு, என் மகனுக்கு ஒரு நல்லது செய்யனும்னு நினைச்சேனே. சுமங்கலி பூஜை எல்லாம் வச்சும் இந்தக் கதியா. ஐயா, என்ர கண்ணு" என அவர் அழவும், ஆதிரா பெருகிய கண்ணீரோடு, " ஆத்தா, பாபாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது" என அழுதபடி தேற்ற, அபரஞ்சி, சாரதா, கஸ்தூரி என ராஜன் குடும்பப் பெண்களை அழுத கண்ணோடு ஆறுதல் படுத்தினர்.

பாலநாயகம், அடியோடு தழன்று உட்கார, பன்னீரும், சுப்புவும் அவருக்குத் தைரியம் சொல்ல, ராமசாமி சற்றே தெளிந்தவராக, மகனுக்குப் போன் அடித்தார். காலையில, விஜயனும் தான கூடப் போனான், அவனுக்கு என்ன ஆச்சு " என அபரஞ்சி சந்தேகத்தைக் கிளப்ப, கஸ்தூரி ஆடிப் போனார். ரஞ்சி ,"சும்மா இருங்க ஆத்தா, எல்லாரும் நல்ல தான் இருப்பாங்க " எனத் தன தந்தைக்குப் போன் அடித்தாள்.

பைரவி, ஒருபுறம் மகளும், மறு புறம், தன் ஆயியும் பற்றி இருந்த போதும், அவர்கள் கையை உதறி விட்டுத் துல்ஜா பவானி சிலை முன் செல்ல, அவரைச் சார்ந்தவர்கள் பதறினர்.

பெரும் குரலெடுத்து," ஹேய் ஆயி, துல்ஜா பவானி, உன் சந்நதியில நீ கொடுத்த ஆணையின் பேரில் தான் நான், ராஜை என் கணவரா வரிச்சேன். ஆனாலும் அவரைத் தேடி நான் போகலை. உன் சன்னதியில் காட்டினவரையே, எங்க மில்லுலையும் நீ தான் அனுப்பி வைச்ச." என ஆரம்பித்தவர் , தன் வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் அவளே காரணம் எனத் தன்னை மறந்த நிலையில் சொல்ல, சில உண்மைகள் வெளி வந்ததில் கைலாஷின் தங்கைகள் பீதியடைந்தனர். ஆனால் தொடர்ந்து தன் கதையை அவள் முன் ஒப்பித்த பைரவி, 

" இத்தனையும் மீறி, என் புருஷனோட சேர்றது, உனக்குப் பிடிக்கலைனா, அவரைத் திருப்பிக் கொடு, என்னை எடுத்துக்கோ" எனக் கர்ஜித்தவர், அவள் பாதத்தின் முன் முட்டி போட்டு அமர்ந்து, தன் நெற்றியை முட்ட, அங்கிருந்த, மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்கள் உடைந்து அவர் நெற்றியைப் பதம் பார்க்க, எல்லாரும் அதிர்ந்திருந்த இரண்டே நிமிடத்தில், குங்குமத்தால், நிறைக்கும் நெற்றியை, தன் குருதியாலும் நிறைத்திருந்தார்.

பைரவி, என ரமாபாய் மகளை வலுக்கட்டாயமாக அவரை இழுக்கவும், " நான் போயிட்டா, ராஜ் திரும்ப வந்திடுவார். நான் தான் ராசியில்லாதவ" என ஏதேதோ புலம்பிய பைரவி, திரும்பி சௌந்தரி, நாயகத்திடம் வந்தவர், அவர்கள் கையைப் பற்றி, " என்னை மன்னிச்சிடுங்க. உங்க மகன் வாழ்க்கையைப் பாழாக்கின பாவி நான். நான் போறேன். அவர் உங்களுக்கு மகனாவாவது இருக்கட்டும்" எனப் பிதற்ற. " அம்மா, பவானி, ராஜாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது" எனப் பெரியவர்கள் பவானியைத் தேற்ற, கொஞ்சம் நிதானித்தவர்கள் போனை கையில் பிடித்து, மற்றவர்களைத் தொடர்பு கொள்ள முயன்றனர்.

கௌரி, தன் தீதியை அடைகாப்பது போல் பின்னாடியே வர, ராதாபாய், தன் தீதியின் நிலை கண்டு கதறினார். ஆதிரா மறுபுறம், " ஆயி, பாபா வந்திடுவாங்க. பாவுவும், ராமும் போயிருக்காங்க. அவங்க கூட்டிட்டு வந்துடுவாங்க" என ,அவர் முகத்தைப் பற்றி ஆறுதல் சொல்லி கண்களை, நெற்றியை தன தாவணியால் துடைத்து விட,

" இல்லைடா ரஜ்ஜும்மா, உங்க அத்தை சொல்றது சரி தான். பாபா வந்தாலும், நான் இருக்கக் கூடாது. நான் போறேன்" என இருவரிடமிருந்தும் கையை உருவியவர், அன்றொரு நாள் கேஆர் மாளிகையிலிருந்து, ஓட முயன்றது போல், இலக்கில்லாமல் பாதையில் வேகமாக ஓடினார். அம்மா, ஆயி, பையு, பவானி" எனக் குரல்கள் ஒலிக்க, அவர் காதில் எதுவும் விழாமல் வாசலை நோக்கி ஓடினார்.

ரமாபாய், ராமசாமி இருவரும், போனில் பேசிவிட்டு, பைரவியிடம் செய்தி சொல்லவர அவர் காத தூரம் ஓடியிருந்தார். ஆதிரா, ரஞ்சி, கௌரி எனப் பெண்களும், பாலாஜி ராவும் பைரவியைப் பிடிக்க விரைய, எதிரே வரிசையாக வந்த வாகனங்களில் முதல் வாகனத்தின் முன் வேகமாக ஓட, இவர் வருவதைப் பார்த்து, சத்தியன் சடன் ப்ரேக் போட, அதற்குள் வண்டியின் சமீபம் சென்றிருந்த பைரவி அப்படியே மயங்கிச் சரிய, " ஆயி" என ஆதர்ஷ் ஓடி வந்தான்.

நிலவு வளரும்.