Tuesday, 26 October 2021

யார் இந்த நிலவு -8

யார் இந்த நிலவு -8

பவானி சற்றுத் தாமதமாக எழுந்தவர் மணியைப் பார்த்ததும் விழுந்தடித்து எழுந்து குளித்து உடுத்திக் கொண்டு கீழே ஓடினார்.

" அம்மா, சாரிமா லேட்டாயிடுச்சு, சாரி, சாரி" எனப் பூஜையறையிலிருந்த அபரஞ்சியிடம் இறைஞ்சி விட்டு, கிச்சனுக்கு ஓடினார். அந்தந்த நேரம் தேநீர், மால்ட் எல்லாம் பெரியவர்களுக்குச் சென்று சேர்ந்துவிட்டதா என விசாரித்துக் கொண்டவர், தனக்கான சாயோடு வராண்டாவில் வந்து அமர, அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் சாரதாவும், சௌந்தரியுமாக ஆளுக்கொரு ஸ்பீக்கரில் கைலாஷ் வீட்டு வேலைக்காரர்களிடம் காசிப் கேட்டுக் கொண்டிருந்தனர். தூண்டி துருவும் வேலையைச் சௌந்தரி செய்ய, சராதா சுவாரஸ்யமாகக் கதையை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென வேலைக்காரர்கள் பேச்சை முடித்துக் கொண்டு போனை வைத்து விட, " அடக் கருமம் புடிச்சவளே, சஸ்பென்ஸோட போனை கட் பண்ணிட்டா. சத்தியனுக்குப் போன் போடுவோம்" எனச் சௌந்தரி , சத்தியனுக்கு அழைக்க,

" ஆத்தா, அப்பா வர்றாருங்க. நீங்க போனை வைங்க. நானே அப்புறம் கூப்பிடுறேனுங்க" என அவனும் போனை வைத்தான். கைலாஷ் அங்குக் காதை தீட்டிக் கேட்டுக் கொண்டிருக்க, பவானி இங்குச் சுவாரஸ்யமாக இரண்டு மாமிகளையும் வேடிக்கை பார்த்தார்.

சௌந்தரி ,"இவனொருத்தேன்" என நொடித்துக் கொண்டவரை, "மகனுக்கே போனைப் போடு சௌந்தி" என்ற சாரதாவின் யோசனையில் அடுத்து டயல் செய்யும் முன், கைலாஷே அம்மாவுக்குப் போன் அடித்து விட்டார்.

"ராஜா, பெங்களூருக்கு போயிட்டு இரண்டு நாள் இருந்துட்டு வருவேன்னு பார்த்தேன். உடனே வந்துட்ட" என வியந்தார்.

" போன வேலை முடிச்சது வந்துட்டேன்" எனத் தான் ரணங்களைப் பெற்று வந்ததை நினைத்துச் சொல்லவும், " புரியுது, புரியுது. பெங்களூர்லருந்து அம்மா கேட்டேன்னு பேத்தியை கூட்டிட்டு வந்துட்ட, மருமகளை எப்பக் கூட்டிட்டு வருவ" எனக் கேட்கவும், சத்தமாகச் சிரித்தவர்,

" அதுக்குள்ள உளவுத்துறை ரிபோர்ட் வந்திருச்சா. ஆனாலும் நீங்க ரொம்பப் பாஃஸ்ட் தான்" என்றவர்,

"ரொம்பக் கற்பனையை வளர்த்துக்காதீங்க. அது வேலைக்கு வந்த பொண்ணு. ஒரு ஆபத்து நேரம் உதவியிருக்கேன், அவ்வளவு தான்" எனச் சொல்லவும்.

"இல்லைனாலும் பரவாயில்லை, ஏதாவது இருக்கிற மாதிரி சொல்லு, கற்பனையிழையாவது சந்தோஷமா இருந்துக்குறேன் " என்றவர், "எனக்கும் வயசாகுது , உன்னை ஒத்தையா விட்டுட்டு போயிடுவேனோன்னு மனசு பதறுது.

" ராசா, நீ மனசில நினைச்சப் பொண்ணு யாருன்னு சொல்லேன். அந்தப் பொண்ணு கைல, கால்ல விழுந்தாவது நான் உன்கூடச் சேர்த்து வைக்கிறேன்" என வழக்கமான கேள்வியையே மறுபடியும் கேட்கவும். சிரிப்பு மாறி, அமைதியானவர், அம்மா விடாபுடியாகக் கேட்கவும், " அவள் உயிரோட இருந்திருந்தா நானே கூட்டிட்டு வந்திருக்க மாட்டேனாம்மா. நான் தான் அவளைத் தேடிப் போகனும். அவள் வரமுடியாத இடத்துக்குப் போயிட்டாமா " எனக் குரல் கம்மியவரை,

" அந்த வார்த்தையைச் சொல்லாத ராசா, அம்மாவைத் தூக்கிப் போட்டுட்டு, அவளைத் தேடிக்கலாம்" எனச் சௌந்தரியும் உடைந்து பேச, " அத்தை" எனப் பவானி முறைத்தார்.

" இல்லமா சொல்லலை." எனப் பவானிக்குப் பதில் தந்தவர், " இங்க பாரு, மருமகள் உன்கிட்ட இப்படிப் பேசறதுக்குத் திட்டுது" என இயல்புக்குத் திரும்பியவர், அவர் அழைத்து வந்த பெண்ணைப் பற்றிக் கேட்கவும், " நீங்களே வந்து பார்த்துக்குங்கம்மா" என அம்மாவை தன்னிடத்தில் வரவழைக்கும் ஆர்வத்தைத் தூண்டினார் கைலாஷ். "வர்றேன், வர்றேன், நேத்து கிளம்புறேன்னு சொன்னதுக்கே உங்கப்பாவுக்குக் கோபம், சமாதானம் பண்ணிட்டு வர்றேன் " என்றவர் அபிராம் க்குப் பார்த்திருக்கும் பெண்ணைப் பற்றியும் துப்பறிஞ்சு விட்டுப் போனை வைத்தார் சௌந்தரி.

கைலாஷ்க்கு அதன் பிறகு தான் மருமகன் நினைவு வர அவனுக்குப் போன் போட்டார், ஆனால் போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அவன் தாத்தாக்களோடு பேசிய பிறகு போனை சார்ஜில் போட்டிருந்தான்.

கைலாஷ் ராஜன் , தன் அம்மாவிடம் போனில் பேசும் போதே, அங்கிருந்த வேலைக்காரப் பெண் அடுப்படிக்கு ஓடியிருந்தாள். அம்மாவிடம் பேசிவிட்டு வைத்த பின் " இன்னைக்கு எந்த கருப்பு ஆடு" என்பார். ஏனெனில்  மகன் வீட்டை குன்னூரிலிருந்தே ஆட்டிப் படைப்பார் சௌந்தரி. கோவையிலிருந்த இரண்டு வீடுகளுமே அவருடைய ராஜாங்கத்துக்கு உட்பட்டது தான். அவர்களை அதிகாரம் செய்வதில் தான் அவருடைய பொழுதும் போனது. அதனால் கைலாஷ் வேலையாட்களை எதுவும் சொல்ல மாட்டார், ஆனால் அவர்கள் யாரென தனக்குத் தெரியும் என்று மட்டும் தெரியப் படுத்தி விடுவார். 

 

அம்மா கேட்கவும் தான், அபிராம் , ஆதிராவைத் தேடிக் கொண்டிருப்பது நினைவில் வர, அவனுக்கு போன் செய்தார். ஆனால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. யோசனையோடு அமர்ந்திருந்தவர் அருகில், " குட்மார்னிங் பாபாசாப்" என்றபடி வந்தாள் ஆதிரா. அந்தக் குரலில் நிமிர்ந்து பார்த்தவர், மாற்று உடையாக அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த நீளமான நைட் ட்ரெசில் பார்க்கவும், " குட்மார்னிங் டா மா" எனச் சிரித்தவர், "அழகான தேவதைக்குப் பாதிரியார் அங்கியை குடுத்துட்டாங்களே " என குறைபட்டவர், " என் கூட வா. வேணுங்கிற ட்ரெஸ்ஸை எடுத்துக்கோ" எனப் பங்களாவுக்குப் பக்கவாட்டிலிருந்த மற்றொரு கட்டிடத்திற்குக் கூட்டிச் சென்றார்.

 

" புது இடம் தூக்கம் வரலையாக்கும் " என விசாரித்தவரிடம், " ஏற்கனவே, சேர்மன் சாரை சொன்ன நேரத்துக்கு பார்க்கவரலைனு ப்ளாக் மார்க் இருக்கு. இப்பவும் தூங்கினேன். இது தேறாத கேஸ்னு, அவரும்  வெளிய விரட்டி விட்டுட்டா மே க்யா கரூங். " என்றாள். அவர் சிரித்துக் கொண்டவர், " உங்க மாஸி வந்து கூட்டிட்டுப் போற வரைக்கும் நீ என்னுடைய பொறுப்பு " என்றார். 

 

" மஸ்து ஹை, படியா மஸ்து " என்றவள், " ஆனால் ஒரு கண்டிசன், ஆயி எந்த அட்வான்டேஜும் எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. என்னையும் ஹாஸ்டலுக்கு மாத்தி விட்டுடுங்க." எனவும் அவருக்கு வருத்தமானது, ஒன்றும் பேசாமல் அந்த அறைக்குள் ஆதிராவை அழைத்துச் சென்றார்.


அங்கிருந்த துணிகளைப் பார்த்தவள், "யே, சப் க்யா ஹை" என விழி விரித்தாள். " இதெல்லாம் சாம்பில் பீஸ். ஒரு பக்கம் நெசவு துணி, பனியன் துணி, ரெடிமேடுன்னு எல்லாமே உண்டு கண்ணு, இதுல வேணுங்கிறதை எடுத்துக்க" என்றவர், அவள் மலைத்து நின்றவளைப் பார்த்துத் தானே அவளுக்கு அளவாக எடுத்துக் கொடுத்தார். 

 

" ஜ்யாதா நஹி சாஹியே, நாலு செட் போதும். ஆயி என் திங்க்ஸ் அனுப்பி விட்டுருவாங்க. இதோட பில் அனுப்பிட்டா, அதுவும் பே பண்ணிடுவாங்க " என்றாள் ஆதிரா. 

 

அவளை, ஆட்சேபனையாகப் பார்த்தவர், " அப்ப நீ பாபா ன்னு கூப்பிட்டது, வேலை கிடைக்கனும்கிறதுக்காகத் தான். இவன் பாபான்னு சொன்னா, மயங்கி வேலை கொடுத்துவான்னு சொல்லியிருக்க" என கைலாஷ் குற்றம் சுமத்தவுமே , ஆதிராவின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டது. 

 

" உங்களுக்கு நான் ஃபேக்கா தெரியிறேனா, அப்படின்னா எனக்கு எதுவுமே வேணாம். காம் பீ நஹி சாஹியே ,நான் என் ஆயிக்கிட்டையே போறேன். " என அவள் அந்த அறையை விட்டுக் கிளம்பவும். கைலாஷ்க்கு மனம் பொறுக்கவில்லை. அவள் அழுகை அவருக்கு பாருவை நினைவுறுத்த, "ரஜ்ஜும்மா நில்லுடா. நீ மட்டும் பாபாவுக்குக் காசு தர்றேன்னு சொல்லலாமா" என அவளைப் பிடித்து நிறுத்தியும் அவளது கேவல் அடங்கவில்லை. 

 

" நான் அப்படிப் பட்ட பொண்ணு இல்லை. என் ஆயி யார்க்கிட்டையும் நிறைய உரிமை எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. மோர் ஓவர், நான் என் காலில் நிற்க விரும்புறேன். இதுவரைக்கும் நான் யாரையும், மாஸி தவிர வேற யாரையும் ரிலேசன் சொல்லிக் கூப்பிட்டதும் இல்லை. உங்களை பாபான்னு சொன்னதும் வேலைக்காக மட்டும் இல்லை" என்றவளை, அணைத்துக் கொண்டவர், கண்களும் கசிந்து இருந்தது. 


" ரஜ்ஜும்மா, இது எந்த ஜென்ம பந்தம்னு தெரியலை. உன்னைப் பார்த்து அரை நாள் கூட ஆகலை, ஆனால் நீ அழுதா, அப்பாக்கு இங்க துடிக்குது பார்" என தன் நெஞ்சைத் தொட்டுச் சொன்னவர், அவளைக் கொஞ்சி, கெஞ்சி இனி சந்ததி எனச் சொல்லிக் கொள்ள யாருமற்ற தனக்கு , அவளுடைய தாய் அழைத்துச் செல்ல வரும் வரையாவது மகளாக தன்னோடே இருக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். இருவரும் சமாதானம் ஆகி, துணிகளை அள்ளிக் கொண்டு வந்தவர்கள், காலை உணவைச் சாப்பிட்டு உடை மாற்றிக் கொண்டு மில் அலுவலகத்துக்குச் சென்றார்கள். 

 

கைலாஷ் ராஜன், சங்கீதா என்ற பெண்ணை அழைத்து, ஆதிராவுக்கு தொழிற்சாலையைச் சுற்றிக் காண்பிக்கச் சொன்னார். 

" ஆதிரா  பேக்டரி முழுசும் ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டா சுத்திட்டு வா. அதுக்குப் பிறகு,  பேசுவோம்" என்றவர் , அவரது உதவியாளர் சம்பத் கொண்டு வந்த கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தார். 

 

பெங்களூருவில், கௌரி தனது உடைமைகளை மட்டும், ஒரு ஹோல்டால் பேகில் எடுத்துக் கொண்டவர், தான் இருந்த இடத்தை விட்டு கிளம்பி பைரவி சொன்ன இடத்துக்கு செல்லத் தயாராகி, விடியும் முன்னரே மெஜஸ்டிக் பஸ் ஸ்டாண்டை அடைந்தார். 

 

முன்னதாக, நேற்றே தாங்கள் தங்கியிருந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தவர், தன்னை ஆட்கள் பின் தொடர்வதை உணர்ந்து, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, தலைமறைவாகியிருந்தார். 

 

ஆதிரா , பாதுகாப்பாக இருப்பதை அறிந்து, இனி தனக்கு இங்கே வேலையில்லை என பைரவி சொன்ன இடத்துக்கு கிளம்பினார். ஆனால் சரியான நேரத்தில் அவர் முன் வந்து நின்ற ஓர் வெளி நாட்டு வாகனம், பெரிதாக மிரட்டவெல்லாம் இல்லாமல், மந்திர வார்த்தையையும், ஒரு மோதிரத்தையும் காட்டவுமே, கௌரி வாயைப் பொத்திக் கொண்டு, பவ்யமாக ஏறினார். உள்ளிருந்தவர் தன் கையை நீட்ட, கௌரி தனது மொபைலை நீட்ட, அதிலிருந்து ஒரு குறுஞ்செய்தியை பைரவிக்கு அனுப்பி விட்டு, " மாஸி, போஸ்லே குடும்பத்துக்கு உங்கள் சேவை போதுமானது. இனி நீங்க எனது விருந்தினர்" என மர்மப் புன்னகையை சிந்திய அந்த வாலிபன், " அம்மாவும், மகளும் எந்தக் கோட்டைக் குள்ள இருந்தாலும், வந்து தூக்குவேன்" என முணு , முணுத்துக் கொண்டான் ஆதர்ஷ். 

 

அபிராம்க்கு இரவு, செய்தி தெரிந்ததிலிருந்தே பெங்களூரில் இருப்புக் கொள்ளவில்லை. கைலாஷ் சேலத்தில் இருக்கும் போதே , கிளம்பும் போது மனம் சரியில்லாமலிருந்த மாமன் என்ன செய்கிறார் என விசாரிப்பதற்காக  சத்தியனுக்கு போன் போட, அவன் ஆதிராவைப் பற்றிச் சொன்னான்.  கைலாஷ் கோடிட்டுக் காட்டியிருந்ததால் சத்தியன் அபிராமிடம் உண்மைச் சொல்லி விட, அடுத்த ஒருமணி நேரத்தில் கிளம்பி விட்டான். காலையில் கைலாஷ் போன் செய்த போது, சார்ஜ் இல்லாமல் செத்துக் கிடந்ததை உயிர்ப்பிக்க, ப்ளக்கில் சொருகியிருந்தான். 


அதிகாலையில் வந்த மகன், இரண்டு மணி நேரக் கோழித் தூக்கத்தை முடித்துக் கொண்டு, வழக்கம் போல் பணிக்குச் செல்லக் கிளம்பி  வந்ததைக்  கண்டு  கஸ்தூரிக்கு, மனம் பொறுக்கவில்லை. 


" அபிக்கண்ணு , காலையில தான வந்த, இன்னும் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கலாமில்லை கண்ணு. அவதி, அவதியா போகாட்டி என்ன. அப்படி ஒன்னும் உடம்பை கெடுத்துக்கிட்டு நீ சம்பாதிக்க வேணாம்" என வருத்தப்படவும் , அபிராம் மனதில், ' எதுக்கு இந்த அவதின்னு தெரிஞ்சுது. அம்மா டின்னு கட்டிப் போடும், அபிக் கண்ணு எஸ்கேப்டா' என மனதில் புலம்பியவன், “வேலை இருக்குமா’ என அம்மா சுவையாகச் செய்திருந்த இட்லியையும், பூரியையும் உள்ளேத் தள்ளிக் கொண்டு, அதிகம் பேச்சுக் கொடுத்து மாட்டாமலே ஓடிச் சென்றான். 


விஜய ரங்கன் சாப்பிட வந்தவர், அவசரமாகச் செல்லும் மகனை விநோதமாகப் பார்த்தார். மனைவியிடம், " நேத்து அந்த பொண்ணை பார்ட்டியில பார்த்தானாம். அவனுக்கு புடிச்சிருக்கா, எதாவது கேட்டியா" என வினவினார். 


" எங்கிங்க கேக்கிறது, விடியகாலைல தான் வந்தான், சரி லேட்டாத் தான போவான்னு பார்த்திட்டு இருக்கிறதுகுள்ளாற திடுதிடுன்னு இறங்கி வந்தான், இரண்டு பூரியைப் பிச்சுப் போட்டு ஓடிப் போயிட்டான்" எனப் பெற்றவர்கள் மகனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே அதே போல் மின்னல் வேகத்தில் வந்தவன், மாடியேறி  தனது அறைக்குச் சென்று விட்டு, திரும்ப வரும் போது மொபைலும் கையுமாக வந்தவன்,


" மொபைல் எடுக்க வந்தேன், வர்றேன் மா பை" என அப்பாவைப் பார்க்கக் கூட இல்லாமல் கிளம்பி ஓடினான். இவ்வளவு பரபரப்பாகவும் ,ஆர்வமாகவும், அலைபேசியை மறக்குமளவு பதட்டமாகவும் செல்கிறானெனில்  மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என உணர்ந்து கொண்டார் தந்தை. தனக்கு அப்படியான அனுபவம் வாய்க்கா விட்டாலும், நண்பனின் உணர்வுகளை அருகிருந்து பார்த்தவர் ஆயிற்றே. 


கே ஆர் மில்ஸ் வளாகத்தில் அபிராம் கார் உள்ளே நுழையும் போதே கைலாஷ் சிசிடிவியில் பார்த்து விட்டார். அவன் வேகத்தையும் அவசரத்தையும் பார்த்தவர் தனக்குள் சிரித்துக் கொண்டார். அவரும் ஒருகாலத்தில் இப்படி ஓடியவர் தான். நேராக தன்னிடம் வரட்டும் என இருந்தவர், சிந்தையில் தன்னை ஒப்பிட்டே மருமகனுக்காகக் கவலையும் குடி  கொண்டது. 


ஆதிராவை கூட்டிச் சென்ற சங்கீதா விலவரியாக ஒவ்வொரு இடத்தையும் விவரிக்காமல் விட மாட்டாள் என்பதும், ஓரிடத்தில் நிற்க மாட்டார்கள் என்பதும் அவர் அறிந்ததே, எனவே இப்போதைக்கு அபியின் கண்களில் ஆதிரா படமாட்டாள் , அதற்குள் அவனை உரசிப் பார்க்க எண்ணம்  கொண்டார். ஒரே நாளில் ஆதிரா அவரது மனதில் நெருங்கியிருந்தால் எனில் , தன்  வளர்ப்பு மகனின் வாழ்க்கை பற்றிய அக்கறையும் இருந்தது. 


மெயின் பில்டிங் முன் வண்டியை நிறுத்தியவன், அங்கிருந்த காவலாளியிடம் சாவியைத் தூக்கிப் போட்டு காரை பார்க் பண்ணச் சொல்லி விட்டு ஓடி வந்தான். 


கே ஆரை சந்திப்பதற்கு , அபிராம் க்கு மட்டும், எந்த கட்டுப்பாடும் கிடையாது. கிட்டத்தட்ட கே ஆரின் வாரிசாகவே அங்கு வளைய வருவான். எனவே கதவைத் தட்டவும் இல்லாமல், நேராக கைலாஷின் அறைக் கதவைத் திறந்து கொண்டு, " மாமா" என  வந்தவன், அவர் தனது  உதவியாளர் சம்பத்திடம் ஏதோ முக்கியமான விசயம் பேசிக் கொண்டிருக்கவும், "சாரி" என்ற படி எதிரே அமர்ந்தான். 


கைலாஷ் நிதானமாகத் தனது உதவியாளரோடு சேர்ந்து வேலைகளைப் பார்த்தவர், அரை மணியாவது அவன் தன் ஆர்வத்தை அடக்கி அமரட்டும் என தன் வேலையைப் தொடர்ந்தார் . ஆனால் அபிராம் அலைப்பேசியைப் பார்ப்பதும், மேஜையிலிருக்கும், பேப்பர் வெயிட், பேனா பென்சில் என அத்தனையையும் எடுப்பதும், வைப்பதுமாக ஆர்வ மிகுதியிலேயே இருந்தான். 

உதவியாளர் சம்பத் கோப்புக்களோடு வெளியேறவும், அவ்வளவு நேரம் இருந்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க, "மாமா" என அழைத்தபடி ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டவன், " ஆதிரா எங்கிங்க மாமா" என்றான். 

 

" ஆதிரா யாரு" என்றார் அவர், " சும்மா விளையாடாதீங்க மாமா, உங்க கார்ல தான், பெங்களூரிலிருந்து டிக்கில மறைஞ்சு வந்தாலுன்னு  சத்தியன் சொல்லிட்டான். மறுபடியும் அதே  ஆளுங்க தான் துரத்தி  இருப்பாங்க. எங்கிங்க மாமா, வீட்டில இருக்குதுங்களா, இல்லை ஹாஸ்டல்லையா" என ஆர்வமாகக் கேட்டவனையே அவர் நிதானமாகப் பார்த்துக் கொண்டிருக்க, " என்னங்க மாமா" என்றான். 

 

" அபி, நான் சொல்றதை கவனமா கேளு. நீ போற வேகம் சரியில்லை. அந்தப் பொண்ணைப் பார்த்து உடனே என்ன செய்யப்போற, கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்கப் போறியா." என அவர் சற்றே கடுமையாகக் கேட்கவும். 

 

" என்னங்க மாமா, நீங்களே இப்படி கேக்குறீங்க " என முகம் கூம்பியவனை, "வேற எப்படிக் கேட்கச் சொல்ற, ஒரு தொழில் நடத்துறவன் மாதிரியா நடந்துக்கிற. டீன்ஏஜ் பையனாட்டமா, ஒரு பொண்ணைப் பார்க்கவும் வேலையை விட்டுட்டு நடுராத்திரில கிளம்பி ஓடி வந்திருக்க. இன்னைக்கு அங்க முடிக்க வேண்டிய வேலை எத்தனை இருக்கு. அந்தப் பொண்ணு என் பாதுகாப்புல இருக்குன்னு தெரியும், அப்புறம் என்ன" என்றவர். 

 

" உனக்கு எப்ப என்னச் செய்யனுமுன்னு எனக்குத் தெரியும். வேலையைப் பார்க்கக் கிளம்பு. அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துற வேலையெல்லாம் வச்சுக்கக் கூடாது" எனக் கண்டிப்பான மாமனாக திடீர் அவதாரம் எடுக்கவும் அபிராம் அதிர்ந்து போனான். 

 

" ஏன் மாமா, நீங்க தானுங்க, மனசுக்கு புடிச்சப் பொண்ணை சொல்லு, உலகமே எதிர்த்தாலும் கட்டி வைக்கிறேன்னு சொன்னீங்க." என அவன் வார்த்தைகளை முழுங்கவும், 

 

" அந்தப் பொண்ணு பிரச்சனை பெரிசாத் தெரியுது. நீ இதிலிருந்து தள்ளியே இரு. நான் யாரு என்னன்னு விசாரிச்சுக்கிட்டு, எனக்கு சரின்னு பட்டுச்சுனா, கவனமாக் கேளு எனக்கு சரின்னு பட்டுச்சுனா தான் , உங்க அப்பாட்ட பேசுவேன்" எனவும், ஒளி இழந்த மின்விளக்கு  போல் அவன் முகமும் இருண்டதில், அவருக்கும் மனம் சுணங்கியது, ஆனால் செய்து தான் ஆகவேண்டும்.

 

" உங்கக் கிட்டயிருந்து, இதை நான் எதிர்பார்க்கலை மாமா" என்றவனை முறைத்தவர், " இதுக்கப்புறம் உன் இஷ்டம். ஆனால் அந்தப் பொண்ணுக்கு முன்னாடி நான் நிற்பேன்," எனக் கறாராகச் சொல்லவும், 

 

" உங்களை மீறி எதுவும் செய்யமாட்டேன் மாமா. ஆனால் என் காதலுக்கு வலிமையிருக்கு, அது அவளை என்கிட்டே  கொண்டு வந்து சேர்க்கும். நீங்களே அதை நடத்தியும் வைப்பீங்க " என்றவன், வந்ததை விட வேகமாக வெளியேறினான். 

 

கைலாஷ் வேதனையோடு தலையைப் பிடித்துக் கொண்டு, 'இந்தப் பொண்ணு ‘பாரு’ மாதிரி இருக்கலாம். ஆனால் நீ இன்னொரு கைலாஷ் ராஜனா மாற வேண்டாம் மாப்பிள்ளை' என மனதில் புலம்பிக் கொண்டவர், தனது அலைபேசியை எடுத்து ,

 

 தனது வாழ்க்கையையே புரட்டிப்போடும் உண்மைகள் வெளிவரப் போகிறது என்பதை அறியாமல் , தன்  தொழிலுக்கு உதவும் டிடெக்ட்டிவ் ஏஜெண்டை தொடர்பு கொண்டவர், ரஞ்சன், எனக்கு உங்களால் ஒரு வேலையாகணும், இது கொஞ்சம் பெர்சனலும் கூட “ என்றவர், ஆதிராவை பற்றியும், மீண்டும் தன்னோடு மோதத்  துடிக்கும்  சோலாப்பூர்காரர்கள் பற்றியும் விசாரிக்கச் சொன்னார். 

 

அபிராம் மீண்டும் ஒரு கைலாஷாக மாற வேண்டாம் என அவர்கள் சந்திப்பை தவிர்க்க நினைக்க, விதி மருமகன் மூலமாகவே,மாமனுக்கும் வம்பை விலைக்கு கொண்டு வந்தது. 


Sunday, 24 October 2021

யார் இந்த நிலவு- 7

யார் இந்த நிலவு-7

கைலாஷ் ராஜனுக்கு, இன்றைய தினம் ஆரம்பித்ததிலிருந்து அதிர்ச்சிக்குக் குறைவில்லாமல் இருந்தது. முதலில் அம்மாவின் பாசமான அழைப்பு, உடன்பிறவா தங்கையின் வேண்டுகோள், மருமகனின் சந்தோஷம் என ஆரம்பித்த நாள், ஆதிரா பிகே வின் மதி முகம் கண்டதிலேயே அதிர்ந்து உணர்ச்சிவயப் பட்டிருந்தவர், அவளே தன் வளர்ப்பும், மருமகனுமான அபிராமின் மனம் கவர்ந்தவள் என அறிந்ததில் மனம் நிறைந்தார். அடுத்து தன் பாருவின் நினைவைப் புதுப்பிக்க வந்த ராஜா வீட்டுக் குட்டிச் சிங்கம் ஆதர்ஷ் சவாலோடு அவரை அனுப்பி வைக்க, அன்றைய தினத்தின் உச்சமாக, காருக்குள் நிலவும், அதன் மாஸி எனப் பேசியவரும் அவருக்கு மேலும் குழப்பமான யோசனையில் ஆழ்த்தியிருக்க, கடைசியாக மதிமுகத்தவள், நினைவு திரும்பி அவரை "பாபா" எனத் திருவாய் மலர்ந்ததில் நெகிழ்ந்து போனார்.

தானாய்ப் பெற்றது எதுவும் இல்லையெனினும், ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் அவரை 'அப்பா' வென அழைத்த போதும், இவளுடைய பாபா என்ற அழைப்பு அவர் உயிர் வரை தொட்டது.

அவள் அருகிலேயே அமர்ந்தவர், வாஞ்சையாகத் தலையைத் தடவி, " இந்தப் பாபா வை எப்படித் தெரியும்" எனக் கேட்டார். அவர் கையைப் பிடித்துக் கொண்டே எழுந்தமர்ந்தவள், 

" நான் உங்களை, இது தான் பஹலி பார் நேரில் பார்க்கிறேன். பட் ரொம்ப நாளாத் தெரியும். உங்களை, உங்க கம்பெனி வீடியோ, உங்க இன்டர்வ்யூ பார்த்திருக்கேன். உங்களை உங்க கம்பெனில வேலை செய்யறவங்க, "அப்பா" னு தானக் கூப்பிடுவாங்க. அது தான் நானும் எங்க லேங்க்வேஜ்ல உங்களைப் பாபான்னு கூப்பிட்டேன். இனிமே நீங்க எனக்கு வேலை இல்லைனு சொல்ல முடியாது, கைஸா ஹை, மஸ்து ஹை னா " என உரிமையாக அவள் மராத்தி, ஹிந்தி, தமிழ் எல்லாம் கலந்து புன்னகைத்துக் கேட்கவும் , 

புன்னகையோடு கண்ணீர் பளபளக்க, " மஸ்து. படியா மஸ்து. முல்கிக்கு பாபா வேலை கொடுக்கிறது என்ன, கம்பெனியே கொடுப்பார்" என்றார் ராஜ்.

" ஓ, நோ கம்பெனி எல்லாம் வேண்டாம். வேலை மட்டும் கொடுங்கோ. சொத்து, ஜாயிதாத், நாம் சப்குச் படா ஆஃபத்(அபாயம்) தான். ஐ மீன் ப்ராப்ளம். ஐ வான்ட் பீஸ்ஃபுல் லைப்" என்றாள்.

" எல்லா லேங்க்வேஜையும் கலந்து கட்டிப் பேசுறியே" என வியந்தார். "அத்தனை ஊர் தண்ணீர் குடிச்சிருக்கேன்" என்றவள், " ஓ நோ, மாஸி கவலைபடுவாங்க. என் போன் எங்கே" எனக் கேட்டாள்.

" உன் மாஸி, என்கிட்ட பேசிட்டாங்க. நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டேன். போகலாம்ல" எனக் கைலாஷ் கேட்கவும், " லட்டு சாப்பிட யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா. ஆனால் மாஸிட்ட பேசிடுறேன்" எனப் போனை எடுத்தவள், கௌரியை அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்தார். பேசி முடித்து, ஆயிரம் பத்திரம் சொல்லி, "ஆயி கிட்டையும் பேசிடு முலே. அவங்க தான் எனக்குத் தகவல் சொன்னாங்க" என்றார் கௌரி.

அடுத்து பைரவிக்கும் போன் போட்டவள் ஹலோ எனும் முன், " ரஜ்ஜும்மா நீ நல்லா இருக்கேல்ல. மயக்கம்னு சொன்னாங்களே என்ன ஆச்சு "எனக் கேட்கவும் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னவள், " ஆயி, இந்தப் பாபா'கூடப் போகட்டா " என ஆதிரா கேட்கவும், " க்யா, க்யா கஹி" என்றார் பைரவி.

" எனக்குத் தெரியும் ஆயி, யாரையுமே நீங்க பேச்சுக்குக் கூடப் பாபா ன்னு சொல்ல விட மாட்டிங்க. ஆனால் இந்தக் கே ஆர் சாப் வீடியோ, அனுப்பி விடுறேன் பாருங்களேன். நீங்களே பாபா ன்னு கூப்பிட பர்மிஷன் தருவீங்க" என்றாள். 

பைரவி மெல்லப் புன்னகைத்தவர், " ஆல்ரெடி பார்த்துட்டேன். பர்மிஷன் கிராண்டட், ஆனால் லிமிட்ல இருந்துக்கோ. நீ இருக்க இடத்துக்கு உன் திங்க்ஸ் எல்லாம் நான் அனுப்புறேன். கௌரி வேண்டாம். இப்பவும் அதே கட்டுப்பாடு தான் வெளியில் சுத்தக் கூடாது. அந்தக் கம்பெனி விட்டு வெளியே வரக்கூடாது. யார்கிட்டையும், அந்த " பாபா சாப்" கிட்ட கூட நீ யாருங்கிறதைச் சொல்ல வேண்டாம். உன் நன்மைக்காகத் தான் சொல்றேன் " என வரிசையாகக் கண்டிசன் போடவும் சரி, சரி என நல்ல பொண்ணாக " ஓகே ஆயி" எனப் பேசி முடித்து வந்தாள்.

கைலாஷிடம், " பாபாசாப் போகலாம்" எனச் சிரித்தாள் , " அதென்ன ஒரு சாப் சேர்ந்திருக்கு" என்றார் கைலாஷ்.

" ஆயி, இந்தளவு, " பாபாசாப்" சொல்றதுக்குப் பர்மிஷன் குடுத்ததே பெரிய விஷயம். அவுங்களுக்கும் உங்களைப் பற்றித் தெரிஞ்சிருக்கு. மஸ்து, மஸ்து ஹைனா" என அவள் ஆச்சரியமாகச் சிரிக்கவும், அவள் சிரிக்கையில் கன்னக் குமடுகள் உயர்ந்து அகன்ற கண்களும் சிரிக்க, மெய் மறந்து நின்றவர்," மஸ்து ஹை, வா போகலாம் " என அழைத்து வந்தார்.

காரில் வரும் போது , " மதியமே வரேன்னு சொன்னவள் ஏன் வரலை. சொன்ன நேரத்துக்குச் சேர்மனைப் பார்க்க வேணாமா. அப்புறம் எப்படி வேலைக் கிடைக்கும். ஒரு ப்ரபொசனலிசம் வேண்டாமா" என அவர் கேட்கவும், " சாரி" எனக் குனிந்து கொண்டவள், " குறிப்பிட்ட நேரத்துக்கு உங்களை மீட் பண்ண முடியாத சூழ்நிலை. நான் வந்த போது நீங்க அங்கிருந்து கிளம்பிட்டீங்க. ஆனால் இவினிங்கிலிருந்து, ஹோட்டல் ல உங்களுக்காகத் தான் வெயிட்டிங்க்" என்றாள்.

" என்னை மீட் பண்றதுக்காகத் தான் இந்த டிக்கில ஏறுனியா" என அவர் குறுஞ்சிரிப்போடு கேட்கவும், 

" நாஹி தோ, உங்க காடின்னே தெரியாது. தலையில இடிச்சுக்கிட்டேன். மயக்கம் வர்ற மாதிரி இருந்தது, மயங்கி இதில் விழுந்துட்டேன்" என அவள் சமாளிக்கவும். அவளையே கண்ணெடுக்காமல் பார்த்தவர்

"மயங்கி கீழே விழுவாங்க. யாரும் கார் டிக்கில விழமாட்டாங்க" என்றார்.

அவர் மேலும் விசாரிக்கவும், " நீங்க வேலைக் கொடுக்கிற சேர்மன். நான் எல்லாத்தையும் ப்ராங்கா உங்கள்ட்ட சொல்லனும். ஆனால் நான் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவ. என் முழு அடையாளம் உங்களுக்குச் சொல்ல முடியாது. பட் நான் தப்பான காரியம் எல்லாம் செய்ய மாட்டேன். யூ கேன் ட்ரஸ்ட் மீ. இதுக்கும் மேலையும் உங்களுக்கு விருப்பமிருந்தா, நீங்க வேலைக் கொடுக்கலாம். நீங்க வேலை இல்லைனு சொன்னாலும், நான் ஏத்துகிறேன். நான் இப்பவே கீழே இறங்கிக்கிறேன்" எனும் போதே அவள் முகம் கூம்பிப் போகவும்,

அவள் தலையை வாஞ்சையாகத் தடவியவர், " இவ்வளவு வெளிப்படையா பேசுறு முலே எங்கக் கிடைக்கும். அதுக்கும் மேல, இந்த நடுராத்திரியில் எந்த அப்பாவும், மகளைத் தனியா விடமாட்டான்" என்றவர்.

" உன் சத்தியம் தகர்ந்து போற ஒரு நாள், நீ யாருன்னு சொல்லு தெரிஞ்சுக்குறேன். ஆனால் யாருக்கோ பயந்து ஓடி ஒளியிறியே அதுவும் வேண்டாம். நம்ம கம்பெனிக்குள்ள எனக்குத் தெரியாமல் யாரும் உள்ள வரமுடியாது. அதுவரைக்கும் இந்த ரஜ்ஜும்மாவை எதுவுமே கேட்கவும் மாட்டேன்" என்றார்.

ஆதிரா அதிர்ந்தவளாக, " உங்களுக்கு எப்படி என் செல்லப் பெயர் தெரியும். " எனக் கேட்டாள்.

" உன் கௌரி மாஸி அப்படித் தான் கூப்பிட்டாங்க" என்றார்.

" மாஸியாச் சொன்னாங்க, என் ஆயி மட்டும் தான் இப்படிக் கூப்பிடுவாங்க நீங்க என் ஆயிட்ட பேசுனீங்களா, மாஸிகிட்டையா" எனக் குழம்பிக் கொண்டு போனை பார்த்தாள்.

கார் கோவையில் பல ஏக்கர் பரபரப்பில் அமைந்திருக்கும் கே ஆர் மில்ஸ் வளாகத்தில் உள்ளே உள்ள அவரது ப்ரத்யேக பங்களாவிற்குச் சென்றது. இதைத் தவிர ஆர் எஸ் புறம் பகுதியில் பாலநாயகத்தின் வீடும் உள்ளது. மகன் அப்பாவின் வீட்டில் தங்க மாட்டார்.அப்பா மகனின் வீட்டில் தங்க மாட்டார். அதற்காகவே சௌந்தரி தான் மட்டுமே மகனோடு தங்க வருவார்.

ஆதிரா விழிகள் விரித்து அவரது வீட்டைப் பார்த்து வந்தாள். வீட்டின் ஒவ்வொரு அங்கத்திலும் அதன் செல்வ வளம் இருந்தது. இதுவும் யாருக்கோ காட்ட கட்டியது போல் தான் வீம்புக்குக் கட்டினார்.

அந்த நேரத்திலும் வேலைக்காரர்கள் அவர் பணிவிடைக்குத் தயாராக இருக்க, ஆதிராவை மாடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றவர், பக்கத்து அறையையைக் காட்டி, "இது என்னோட ரூம், எனி டைம் யூ கேன் கால் மீ " என்றவர். " நைட் எதாவது சாப்பிட்டியா" எனக் கேட்டார்.

" ஓ, ஓபராய் ஹோட்டல் டின்னர். " என்றவளோடே அறைக்குள் சென்றவர், பணியாளைப் பால் கொண்டு வரச் சொன்னார். " பாபாசாப், தூத் நஹி, தூத் நஹி. ஒரு கட்டா சாய்" என்றாள். அவளையே பார்த்திருந்தவர், இரண்டு கட்டா சாய்க் கொண்டு வரச் சொன்னார். அதோடு அவளுக்கு மாற்றுடையும் வந்தது. இருவருமாகக் கட்டாசாயை ருசித்தனர். ஆதிரா "மஸ்து, மஸ்து " என வரடீயையும் சிலாகிக்க, " இதிலென்ன பெரிய மஸ்து இருக்கு" என்றார் வேண்டுமென்றே கேட்டார்.

" கட்டாசாய், அளவா தூள் போடனும்" என ஆரம்பித்தவள் அது போடும் முறையை விவரித்ததில் , தனக்கும் இதே போல் விவரித்தவரை நினைத்துக் கொண்டவர், " இது யார் சொல்லிக் கொடுத்தா" எனக் கேட்டார். " மாஸி போடும் போது பார்த்திருக்கேன். " என்றவள், "உங்களுக்கு முல்கி இருக்கா, என் சைஸ் ட்ரெஸ் வச்சிருக்கீங்களே, உங்க வீட்டு ஆண்டியை இன்ட்ரடியூஸ் பண்ணலை, தூங்குறாங்களோ. காலையில பார்த்துக்குவோம். என்னைக் கூட்டிட்டு வந்ததுக்குத் திட்ட மாட்டாங்கல்ல, என்னை ஹாஸ்டலுக்கு ஷிப்ட் பண்ணிடுங்க. நான் அங்கேயே தங்கிக்குவேன்" எனக் கேள்வியும் கேட்டு, பதிலும் அவளே சொல்லிக் கொள்ள , அவள் தலையை மீண்டும் வாஞ்சையாகத் தடவினார்.

அவளது மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டவர், தனது பர்சனல் நம்பரை அவளுக்குப் பதிந்து கொடுத்து விட்டு , " நல்லா தூங்கி எந்திரி. அப்புறம் பேசுவோம்" எனத் தனது அறைக்குக் கிளம்ப, " பாபாசாப்" என அழைத்தவளை நோக்கி அவர் திரும்பவும், உணர்ச்சி வயப்பட்டு நின்றவள், கேட்கத் தயங்கி நிற்கவும், "என்னடா முலே" என்றார். " உங்களைப் பார்த்ததிலிருந்து, கண்ணில தண்ணியா வருது. ஏன்" எனக் கேட்டு நின்றாள். அவருக்கும் அப்படித் தான் வருகிறது என்று எப்படிச் சொல்வார்,

இரு கைகளையும் விரித்து " வா" என்றார். பசு மடித் தேடும் கன்றாக ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்டவள், " என் பாபா ரொம்ப நல்லவங்களாம். ஆனால் நான் பிறந்ததிலிருந்து பார்த்ததே இல்லை. அவுங்களும் உங்களை மாதிரி இருந்தா நல்லா இருக்குமில்ல" எனக் கண்ணீர் விடவும், அவளை வாரியணைத்துக் கொண்டவரும் உணர்ச்சிப் பெருக்கில் தத்தளித்தார். வாஞ்சையான தலை வருடலுக்கே உணர்ச்சி வசப்பட்டவளுக்கு, இந்த அரவணைப்பு ஓர் பாசத்தையும் பாதுகாப்பையும் தந்தது. இதுவரை தன் ஆயியோடு இருக்கும் போது மட்டுமே எச்சரிக்கை உணர்வையெல்லாம் விடுத்து இயல்பாக இருப்பாள். இன்று இந்தக் கைலாஷ் ராஜனிடமும் அதே உணர்வை உணர்ந்தாள் ஆதிரா ராஜ் போஸ்லே. இதில் போஸ்லே குடும்பப் பெயர் எனில், ராஜ் யாரைக் குறிக்கும். அதையும் விடுத்து அவள் ஆதிரா பிகே வில் பி யார், கே யார். ஆதிராவின் ஆயியும், காலமுமே பதில் தரவேண்டும்.

குன்னூர் வசந்த விலாசம், காலை பனியில் நண்பர்கள் காலாற நடக்க வாக்கிங் ஸ்டிக்கோடு கிளம்பி விட்டனர். அவர்களுக்கு முன்னே எழுந்து பவானி ஒரு நடை சென்ற வந்து விடுவார். இவர்கள் கிளம்பும் நேரம் குளிருக்குச் சூடான தேநீர் தயாராக இருக்கும். இன்று தேநீர் மட்டும் வந்தது, பவானியைக் காணவில்லை.

பாலநாயகம், வேலையாளிடம் கேட்டார். " சின்னம்மா இன்னும் எந்திரிக்கலைங்கய்யா. " எனத் தகவல் சொல்லிச் செல்ல, " எதுவும் முடியலையோ" எனப் பாலா பதறினார்.

ராமு தான், " அதெல்லாம் ஒண்ணுமில்லை, நைட் டைம் தான, அது புருஷன், பொண்ணுக்கிட்ட பேச முடியும். நேத்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்துச்சு. காலையில் தூங்கியிருக்கும் . வா" என அழைத்துச் சென்றார். ஆனாலும் பாலா சமாதானம் ஆகாமல் பேசிக் கொண்டே வர,

" நீ வாக்கிங் போக டிமிக்கிக் குடுக்கலாம்னு பார்க்காத " என்றார் பன்னீர்.

" டேய், யாரைப் பார்த்து, டிமிக்கிக் குடுக்குறேன்னு சொல்ற, வாங்கடா போட்டி வச்சுக்குவோம்" எனப் பாலா வீரமாக அழைக்க

" ரொம்ப உணர்ச்சி வசப்படாதடா, கீழ விழுந்து அடிபட்டைனாக்கும், உன் மகன் குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போயி, மில்லு பங்களால சிறை வச்சிடுவாப்ல" எனச் சுப்பு எச்சரித்தார்.

" ரொம்பச் செய்வானுல்ல, அவன் தூக்கிட்டுப் போக நான் விட்டுருவேனாக்கும். அவனுக்கு அவ்வளவு தைரியம் இருக்காக்கும், எத்தனை வருசமா இங்கே இருக்கோம், இடத்தை வாங்கின புதுசுல ஒரு தரம் அவுங்க அம்மாவுக்காக வந்ததோட சரி, கல்லு மனசுக் காரன், அவன் கூடவெல்லாம் போயி என்னால இருக்க முடியாது, அவன் பகுமானத்தைக் காட்ட கட்டி வச்சிருக்கப் பங்களாவுக்கு நான் போகமாட்டேன்" என வீம்பு பேசினார் பாலா.

" இது தான் உன் வீம்பு, அவனவன் மகன் சம்பாதிக்கிறதுக்கு , சாதிக்கிறதுக்குப் பெருமை படுவாங்க. நீயும் தான் இருக்கியே" எனச் சுப்புச் சத்தம் போட்டார்.

" அவன், அத்தனை சம்பாதிக்கிறது, எதுக்குன்னு கேக்கிறேன். ராஜியைத் தான் கடிக்க மாட்டேன்னு சொல்லிட்டான் , ஏதேதோ நடந்து போச்சு. அத்தனைக்கும் பிறகு பன்னீர் அவன்கிட்ட போய், உனக்கு மனசுக்கு பிடிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டு, நீயாவது சந்தோஷமா இருன்னு, சொன்னானா இல்லையா கேளு. அந்த மனசெல்லாம் என் நண்பனைத் தவிர வேற யாருக்குடா வரும். அவன் தான் திமிரெடுத்தவன் பதிலே சொல்லாமல் எந்திரிச்சுப் போனான்" எனப் பாலா கோபப் படவும்,

" விடுறா, ராஜா மனசில் என்ன இருந்ததோ, அதைத் தான சௌந்தரியும் சொல்லுது" என ராமு நண்பனைச் சமாதானம் செய்தார்.பன்னீர் தான் பாலாவின் வீம்பான போக்கைக் கடிந்து கொண்டே வந்தார். "இன்னும் எத்தனை காலத்துக்குடா வாழப் போறோம். இந்தத் தரம் சௌந்தரி போகும் போது, நீயும் கூடப் போற, ராஜாவோட இருக்க மனஸ்தாபத்தை விட்டுட்டு வா. இழந்தவனுக்குத் தான்டா வலி தெரியும். ராஜாவோட சமாதானமா போ. உனக்காக இல்லைனாலும், எனக்காக இதைச் செய். நீங்க அப்பா, மகன் பேசாமல் இருக்கிறதுக்கு , என் குடும்பம் காரணமாயிடிச்சேன்னு எனக்கு மனசில குத்திக்கிட்டே இருக்கு" என அவர் சொல்லவும், பாலாவும் உள்ளே உருகித் தான் போனார்.

ராமசாமி நடந்து கொண்டிருக்கும் போதே, பேரன் அபிராமிடமிருந்து போன் வந்தது. "ஹலோ ஓல்ட் மேன் ஹவ் ஆர் யூ" என்றான்.

" ஆரைப் பார்த்துடா ஓல்ட் மேன்னு சொன்ன. இந்தா ஓட்டப் பந்தயம் வச்சிக்கிட்டு இருக்கமாக்கும். ஒத்தைக்கு ஒத்தை போட்டிக்கு வாரியா" எனச் சவால் விட்டார் ராமு. அபிராம் ஹாஹாவெனச் சிரித்தவன், " ஓகே யங் மேன், உங்க பையன் பார்த்து வச்சிருக்கப் பொண்ணை வேணும்னா கல்யாணம் கட்டிக்குங்க. " என்றான்.

" இந்த லொள்ளு லோலாயம்தான வேணாங்கிறது, என்கிட்ட இப்படி ஆசை காட்டிப் போட்டு, உங்க ஆத்தாள்ட்ட போயி, இந்த வயசில எனக்குக் கல்யாணத்துக்குப் பொண்ணு கேக்குதுன்னு போட்டு விடுவ. வேணாம் சாமி" என்றார்.

போனை ஸ்பீக்கரில் போட்ட பாலா, " பேராண்டி நீ போட்டுக் குடுத்துடுவேன்னு தான் வேணாங்குறான். இல்லைனா பொண்ணு கட்ட ,உன் தாத்தன் ரெடியாத் தான் இருக்கான்" என வம்பிழுத்து விட்டார்.

" தாத்தூஸ், நீங்க எல்லாருமே யங் மென் தான், ஆளுக்கு ஒரு பொண்ணு பார்க்கவா" என அபிராம் கேட்கவும், " எங்களுக்குப் பொண்ணு பார்க்கிறது இருக்கட்டும், கூடவே திரியிறியே, உன் மாமனுக்கு ஒரு அத்தையைப் பாரு" என்றார் பாலா.

" அது ரொம்பக் கஷ்டமான ஜாப், எங்க மாமா ரேஞ்சுக்கெல்லாம், உலகத்தில பொண்ணே கிடையாது. அதுனால தான் மாம்ஸ் பேச்சிலராவே இருக்கார்" என்றவனிடம் ,

" உன் மாமனுக்குக் கொடி புடிச்சது போதும், நேத்து ஒரு பொண்ணைப் பார்க்கப் போனியே பார்த்தியா" எனக் கேட்டார் சுப்பு.

"அதுக்குள்ள அங்க வந்திருச்சா நியுஸ். அந்தப் பொண்ணு போட்டோவை அனுப்புறேன், ஆத்தா, அம்மத்தால்லாம் சரின்னு சொல்லட்டும் , அப்புறம் பார்ப்போம்" என ஏற்ற இறக்கமாகச் சொல்லவும்,

" ஏதோ வில்லங்கம் இருக்குமாட்டத்துக்கு, அனுப்பு பார்ப்போம்" என ராமசாமி பேசி முடித்துப் போனை வைத்தார்.

" இவன் ஒருத்தன் தான்டா, நம்ம எல்லாருக்கும் பக்கத்தில இருக்கப் பேரன். அவனுக்குக் கல்யாணம் பண்ணும் போது, நாலு தரம் விசாரிச்சு ,அவன் மனசுக்கு புடிச்சப் பொண்ணா பார்த்துத் தான் செய்யணும்" எனத் தீவிரமாகச் சொன்னார் பன்னீர். ஆம் என ஆமோதித்தனர் மற்றவர்.

Tuesday, 19 October 2021

யார் இந்த நிலவு-6

யார் அந்த நிலவு -6

கைலாஷ்  ராஜின் வாகனம் பெங்களூர் மாநகரை விட்டு வெளியேறியது, அவர் மோனநிலையில் அமர்ந்திருக்க, ஓட்டுநர் சத்தியன் அவர் உணர்வு புரிந்து காரை ஒரு குலுக்கல் , அதிர்வு இல்லாமல் செலுத்தினான். அதுவே டிக்கியில் படுத்திருந்த ஆதிராவுக்கும் வசதியாகப் போனது.

"ஏய் மேரே, ஹம்ஸபர் , ஏக் ஜரா இன்தஜார். ஸுன் ஸதாயேங், தே ரஹி ஹைம். மன்ஜில் ப்யார் கி."

என்ற பாடலின் வரிகள் அல்லாத இன்ஸ்ட்ருமென்ட் இசை ஒலிக்க, தன் மனதில் தான் " பாரு" வை நினைத்த மாத்திரத்தில் இசைக்கிறது எனக் கைலாஷ் நினைத்திருக்க, ஓட்டுநர் சத்தியனுக்கும் அது கேட்டது. அவன் முதலாளியின் மோன நிலையைக் கலைக்க விரும்பாதவனாகக் காரை செலுத்திக் கொண்டு வந்தவன், தருமபுரி தாண்டவுமே வெளிச்சமான ஒதுக்குப்புறத்தில் காரை நிறுத்தினான். அதில் மோன நிலை கலைந்த கைலாஷ் ," என்ன சத்யா. டீ குடுக்கலாமா. ஆனால் நடுவில் நிறுத்தியிருக்க" என வேறு தேவையோ எனச் சிரித்தார்.

" இல்லிங்க அப்பா, ஏதோ மொபைல் அடிக்கிற சத்தம் , ஹிந்தி பாட்டுங்கப்பா, விடாத கேட்டுட்டு இருக்குதுங்க. அது தான் என்னான்னு பார்க்காலமுன்னு " என அவன் சொல்லவும்,

" டேய் அது உனக்கும் கேட்டுச்சா. நான் எனக்கு மட்டும் ட்ரீம்ல கேட்டதுன்னு நினைச்சேன்" என அதிசயித்தவர் தானும் குனிந்து பார்க்க, ஓட்டுநரும் குனிந்து தேடினான். மீண்டும் ஹம்சபர் பாடல் ஒலிக்க, இருவருமே கூர்ந்து கவனித்தனர். " டிக்கியிலிருந்து" என ஒரு சேர கத்தியவர்கள் கீழே இறங்க.

" அப்பா, நீங்க இங்கேயே இருங்க. எவனாவது திருடனா இருக்கப் போறானுங்க" எனச் சத்தியன் அவரை நிறுத்தவும்.

" நீ பெரிய வீரன், நான் தான் முதல்ல திருடனைப் பார்ப்பனாக்கும். ஆனால் திருடன் ஹிந்திக்காரன் போல " என்றபடி இருவருமாக இறங்கி வந்து, கைலாஷை தள்ளியே நிற்க வைத்து சத்தியன் கவனமாக டிக்கியைத் திறக்க, உள்ளே அவரது ரஜாயில் சுகமாக ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான்.

" இவனுக்குத் திமிரப் பாருங்கப்பா, உங்க படுக்கையில் தூங்குறான்" என அலைப்பேசியை எடுத்து டார்ச் அடிக்க, பேண்ட் சர்ட்டுக்குள் இருப்பது பெண் எனத் தெரிந்தது.


" அப்பா, திருடன் இல்ல திருடி" எனக் கூவினான் சத்தியன். " நீ சின்னப் பய நவுந்துக்க, நான் பார்க்கிறேன்" என்ற கைலாஷ், முழங் கையால் முகத்தை மறைத்திருந்தவள் கையை விலக்கிப் பார்க்கவும், அதிர்ந்து போனார். அலைப்பேசியும் அடித்து ஓய்ந்திருந்தது.

யாருக்காகக் காலையிலிருந்து காத்திருந்தாரோ, ஆயி பாவானியை அழைத்த ஆதிரா பிகே. அவரது முகம் கனிந்து போனது. தானே குனிந்து அவளைக் குழந்தையாய் அள்ளித் தூக்கினார்.

" அப்பா, நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க. நான் தூக்குறேன்" என்றான் சத்தியன்.

" இல்லடா, இது என் மகள்" எனக் கைலாஷ் ஆதிரா கைகளில் உணர்ச்சி வயப்பட்டே தூக்கியிருந்தார், " அப்பா" என அவன் ஆச்சரியமாகக் கேட்க, " அபி இந்தப் பொண்ணைத் தான் தேடிக்கிட்டு இருக்கான்" என்றவர், கார் கதவைத் திறக்கச் சொல்லி ஆதிராவை அமர்த்தி, தானும் பக்கத்திலமர்ந்து, அவள் மயக்கத்தைத் தெளிய வைக்க முயன்றார். 

அதற்குள் அவளது போன் மீண்டும் ஒலிக்க, சத்தியன் வேகமாக எடுத்துப் பேசியவன், " இந்த ஐயாட்டக் குடுக்குறேன் மா" என்றவனை அவர் ஆச்சரியமாக விழி உயர்த்திக் கேட்கவும், " அந்தப் பொண்ணோட அம்மா தமிழ்காரவுங்க தான் போல" என நீட்டினான்.

ஆதிராவை தன் மேல் சாய்த்துக் கொண்டே குரலைச் செருமிக் கொண்டே , " வணக்கம்மா, நான் கே ஆர் மில்ஸ் சேர்மன் கைலாஷ் ராஜ். உங்க பொண்ணை இப்ப தான் எங்க கார்ல பார்த்தோம்.மயக்கத்தல இருக்கு. " எனும் போதே அந்தப் பக்கம் " ஆயி பவானி" என்ற சத்தம் பதட்டமாகக் கேட்கவும்,

"நீங்க ஒண்ணும் பயப்படாதீங்க. நான் பக்கத்தில் இருக்கிற ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன். உங்க மகள் என்கிட்ட பாதுகாப்பா இருப்பா. காலையில நம்ம கம்பெனிக்கு தான் இன்டர்வ்யு க்கு வந்தது. என்ன ஏதுன்னு தெரியலை. அதுக்கு முழிப்பு வரவும் பேசச் சொல்றேன்" எனவும் , சிறிது நேரம் மௌனம், லேசாக விசும்பும் சத்தமோ,அல்லது அந்தப் பெண்மணி  தன் உணர்வை அடக்கிய தருணமோ , எதிர்முனை குரல் பேச வரமால் தடைப் பட்டது.

“ அம்மா, லைனில் இருக்கீங்களா, பதட்டப்படாதீங்க ,பயப்பட ஒண்ணுமில்லை “ என ஆறுதல் சொல்லவும், எதற்குமே கலங்காத பைரவி , அன்று மிகவும்  உணர்ச்சி வசப்பட்டவராக ,குரல் கம்ம , " ஆயி துல்ஜா பவானி தான் , ரஜ்ஜும்மாவை உங்க கிட்டச் சேர்த்திருக்கா. உங்க பொண்ணா நினைச்சு உங்களோட கூட்டிட்டுப் போங்க. நானே வந்து அவளை அழைச்சுக்குறேன். தன்யவாத் ஜி  " என்றவரின் குரலில் சிலையாகப் போன கைலாஷ்," சாப்" என மூன்றாம் முறையாக  அழைத்த ,அதே  குரலில் மீண்டவர்.

" நீங்கச் சொல்லவே வேண்டாம்மா, ஆதிரா இனிமே என் மகள். நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா" எனக் கேட்டார் கைலாஷ். " ஆதிராவோட மாஸி, கௌரி. மயக்கமா இருந்தாலே நீங்க, அவளைப் பாருங்க. மறுபடியும் கூப்புடுறேன்" எனக் கைலாஷ்க்கு ஆதிராவின் சிகிச்சையை நினைவூட்ட, சத்தியன் வண்டியைக் கிளப்பியிருந்தான். 

பெங்களூரில் கௌரி, காலையிலிருந்தே தான் கண்காணிக்கப்படுகிறோம் என்று உணர்ந்தவர், ஆந்திராவுக்கு  அடித்தும், மெசேஜ் செய்தும் பார்த்தார், ஆனால் அதிரா எதற்குமே பதில் தராமல் மெஜெஸ்டிக் பஸ்  ஸ்டென்ட் வந்து விடுமாறு அழைப்பு விடுத்திருந்ததைப் பார்த்தவர், இனியும் தாமதித்து பயனில்லை , என்ன ஆனாலும் ஆகட்டும் என , தன்னைப் பின் தொடர்ந்த ஆட்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பஸ்  ஸ்டாண்டுக்கு வந்தார். 

அதே நேரம், பைரவியிடமிருந்து போன் வந்தது, ஆதிரா பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்றும், கௌரியைப் பழைய இடத்துக்குச் சென்று பத்திரமாக இருக்கச் சொன்னார்.

குன்னூர் , பன்னீர் இரவு நேரம் உறக்கம் வராமல், ஹாலில் நடை பயின்று கொண்டிருந்தார். எப்போதுமே இரவு சரியாகச் சேமிக்காமல் சிலஉபாதைகள் இருக்கும்,அதற்காகவே ,பவானி பார்த்து,பார்த்துப் பரிமாறுவார். இன்று கொஞ்சம் பதட்டத்திலிருந்ததால், இவரைக் கவனிக்காமல் விட,கூட ஒரு தோசையைச் சாப்பிட்டு விட்டார். 


பவானி அறையில் இன்னும் விளக்கு எரிவதைப் பார்த்து, எழுப்பலாமா, வேண்டாமா என அரைமணி  நேர ஆலோசனைக்குப் பிறகு, சொல்லாமல் விட்டதற்கும், சேர்த்து, “உங்கப் பொண்ணு ராஜியா இருந்தா எழுப்பாமல் இருப்பீர்களா, அப்போ மகள்னு சொல்றது பேச்சுக்குத் தான். என்னை ஒரு கேர் டேக்கரா மட்டும் தான் பார்க்கறீங்க “ என இந்த மகள் திட்டுவார், எனப் பயந்தே சென்று அழைத்தார். 

போனை மேஜைமீது வைத்து விட்டு, அதையே வெறித்துக் கொண்டு,  அமர்ந்திருந்தவரைப் பார்க்கவும்,”பவானி,எதுவும் பிரச்சனையா “ என்றார். 

பன்னீர் அழைத்ததில் உயிர் பெற்ற பவானி,”அதெல்லாமில்லை பா . என் மகள் போன் பண்ணுவான்னு உட்கார்ந்திருக்கேன்,உங்களுக்குத் தூக்கம் வரலையா என்ன செய்யுது “ எனச் சரியாக அனுமானித்து எழுந்து வந்தவர், அவர் கையைப் பற்றி கொண்டு கேட்கவும்,

“ஒண்ணுமில்லை, கூட ஒரு தோசை சாப்பிட்டுட்டேன்  போலாமா,நெஞ்சை கரிக்குது “என்றார். “வாங்கப்பா” என போனை  எடுத்துக் கொண்டு , அவரோடு கூடத்துக்கு நடந்தவர், டைனிங்கில் பன்னீரை அமர்த்தி விட்டு, பேச்சுக் கொடுத்துக் கொண்டே, சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, பாதியாக வற்ற வைத்து, வடிகட்டி எடுத்து வந்தார். அதனைப் பதமாக, ஆற வைத்துக் கொண்டிருக்கும்போதே, “பேத்தி,என்ன படிக்கிறா “என விசாரித்தார். “டெக்ஸ்டைல்ஸ் பத்திதான் பா படிக்கிறா “ எனவும்,

“அப்பப் படிப்பு முடிச்சுட்டு வந்தா ,நம்ம ராஜன் கம்பெனியில கூட வேலைக்குச் சேர்த்து விடு, நல்லா பழகிக்கலாம் . மருமகன் நல்லா வச்சுக்குவாப்ல “ என கைலாஷ் ராஜன் கம்பெனியையும், அவரையும் பற்றி புகழ்ச்சியாகப் பேசவும், 

“அதெப்படி அப்பா, உங்க மகள் இறப்புக்குக் காரணமானவராய் இவ்வளவு புகழ்ந்து பேசுறீங்க” என பவானி வினையமாகவே கேட்கவும்,

“யார்மா , சொன்னது ராஜி சாவுக்கு ராஜன்  காரணமுன்னு “ என கோபமாகவே கேட்கவும், “சரிப்பா, நான் எதுவும் தப்பா கேட்டுடேனா “ என பின் வாங்கினார் பவானி. 

“ தப்பா தான்மா,கேட்டுட்டே.  ஆனால் ,நீயும் காதில் , விழுந்ததை  வச்சுதான கேட்ப, எல்லாம் இந்த பாலாவால வந்தது” என்றார். அதே நேரம், ராமசாமியும் ,” ளையிட் எரியுதேன்னு பார்க்க வந்தேன் “ என அவர்களிருந்த இடத்துக்கு வந்தவர், பன்னீர் கையிலிருந்த  ஜீரக கசாயத்தைப் பார்த்து விட்டு, அவர்கள்பேச்சில்கலந்தார். அன்று நடந்ததை இருவருமாகச்  சொல்ல ஆரம்பித்தனர்.

“நாங்க நாலு பேரும் , நண்பர்களா இருந்தவுங்க, இந்த நட்பும்,பந்தமும் எப்பவும் தொடரணும்னா  அதையும் தாண்டி உறவுகாரங்களா மாறணும்னு ஆசைப் பட்டோம். அதில தான்,ஒருத்தருக்கொருத்தர் முறை சொல்லி, தான் கூப்பிடுவோம்,பிள்ளைகளும் அப்படிதான் வளர்ந்ததுங்க.” என்றார் பன்னீர் 

“பாலாவுக்கு, ஒரு பையன், ரெண்டு பொண்ணு. இவனுக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பையனுங்க, எனக்கு ஒரே பையன், சுப்பிரமணிக்கு அதுவும் இல்லை. அதுனால தான், சுப்பிரமணி அண்ணன் மகள் கஸ்தூரியை ,என் மகனுக்குக் கட்டி வச்சோம். அதே போல, பாலா மகனுக்கு, இவன் மகள் ராஜியை கல்யாணம் கட்டி வைக்கணும்ன்னு எங்களுக்குள்ள பேச்சு. அதன் படி கல்யாண  தேதியும் நிச்சயம் பண்ணிட்டோம், திடிர்னு ராஜன், வடக்க போயி தொழில்  பழகிட்டு வர்றேன்னு கிளம்பிட்டான் . சௌந்தரி, ராசியைக் கல்யாணம் கூட கூட்டிட்டு போன்னு சொல்ல, எனக்கு அப்படி நினைப்பே இல்லை, ராஜிக்கு  வேற இடம் பாருங்கன்னு சொல்லிட்டு கிளம்பியிருக்கான்.ஆனால்  சௌந்தரி,மகன் தொழில் தொடங்கிற ஆர்வத்தில், அதுக்கு தடை வந்திருமோன்னு கோபத்தில் தான் இப்படி சொல்றன்னு நினைச்க்கிடுச்சு. பாலாவும் அப்படித் தான் நினைச்சு இருந்திருக்கான். ஆறு மாசம் ஆளையே காணோம், விஜயனையும் அனுப்பி வச்சோம்.  திரும்ப இரண்டு மாசத்தில் விஜயன் மட்டும் வந்தான்.ஏதோ பிரச்சனை, ராஜன் வர லேட்டாகும், ராஜிக்கு வேற இடம் பார்க்கலாம்னு அவனும் சொல்லவும், எல்லாருக்கும் ஒரே கோபம். 

 

பாலா, அதிரடியா முடிவெடுத்து, அடுத்து ராஜன்,எப்ப போன் பேசினாலும், உடனே வரச்  சொல்லணும்னு திட்டம் போட்டு, அவன் வர்ற அன்னைக்கு ராஜிக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும், அப்பத் தான் வேற எங்கையும் போக மாட்டான்னு முடிவெடுத்தான்.அதே போல, ராஜன் மூணு மாசம் கழிச்சு போன் பண்ணும்போது, சௌந்தரிக்கு முடியலைன்னு வரவழைச்சோம்.

ராஜன் வரவும், இரண்டு நாளில் கல்யாணம்னு  சொல்லவுமே அவனுக்குக் கோபம், முறிச்சுக்கிட்டு கிளம்பப் போனான். அந்த நேரம்,ராஜி  அங்கப் போனவளை , ராஜன் தனியா கூப்பிட்டு  பேசியிருக்கான்.  அவன் கிட்டச் சரி, சரின்னு தலையை ஆட்டிட்டு வந்தவ, தன ஆசை நிறைவேறாத துக்கத்தில் , தப்பான முடிவு எடுத்துட்டா. பாலா,ராஜனை வீட்டை விட்டு வெளியேத்திட்டான். அதிலிருந்து அப்பாவும் மகனும் ஒட்டவே இல்லை. நட்புக்குள்ள திருமண பந்தம் குறுக்க வர வேண்டாம்னு, மற்ற பிள்ளைகளுக்கு வெளிய செஞ்சிட்டாங்க. மகளை பறிகொடுத்த தூக்கத்திலே, இவன் வீட்டுக்காரம்மா, உடம்பை கவனிக்காமல் விட்டு, சீக்கிரமே போயி சேர்ந்துடுச்சு , இவன் தனி ஆளா ஆகவும், இங்க வந்துட்டோம் “என இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையில்,பவானிக்கு போன் வந்தது

“சரிம்மா,நீ  பேசிட்டு படு “ எனப் பவானியை அனுப்பியவர்கள், தங்களுக்குள் மீதிக்கதையை பேசிக்கொண்டனர். “ நண்பனுக்காக, மகனையே தள்ளி வச்சான் பாலா. ஆனால் ராஜனுக்கு எல்லாருமா அநியாயம் தான்டா செஞ்சிருக்கோம். ராஜி இல்லைங்கிறதை  தவிர, என் மகனுங்களோ, பாலா மகளுங்க, எல்லாரும் அவரவர் வாழ்க்கையை வாழுறாங்க. ராஜன் மட்டும்தான் தனி மரமா நிக்கிறான் “ எனக் கவலைப்பட்டார் பன்னீர் . 

“சரி,விடு,எல்லாம் அவரவர் தலை விதிப் படி தான் நடக்கும் “ எனச் சமாதானம் சொல்லிக் கொண்டே, அவரவர் அறைக்குச் சென்றனர்.பன்னீர் படுத்தவருக்கு தான், தன்  மனைவி, சந்திரிகாவின் வயிற்றெரிச்சல், சாபம் தான் ராஜனைத் துரத்துகிறதோ என நினைத்தவர், மானசீகமாக,மனைவியின் ஆத்மாவிடம், ராஜனை மன்னிக்கச் சொல்லி வேண்டுகோளும் விடுத்தார்.

கைலாஷ் ராஜ், சேலத்தில் ஓர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஆதிராவைச் சேர்த்தவர், அவள் நினைவு திரும்பும் வரை, மருத்துவமனை லாபியில் இருப்புக்கு கொள்ளாமல் நடந்தார். ஆதிரா பிறந்த சமயத்தில்கூட, அவளது தந்தை இப்படி மருத்துவ மனை வராண்டாவில் அலைந்து இருந்திருக்க மாட்டார். அவளைப் பரிசோதித்த மருத்துவர், " அந்தப் பொண்ணு கண் முழிச்சிடுச்சு" எனக் கைலாஷை அழைத்தார்.

கைலாஷ்க்கு என்னவென்றே புரியாத நிலையில்,மனம்  படபடப்பாக, ஆதிரா இருந்த அறைக்குள் நுழைந்தார். " பாபா, உங்க கார்ல தான் மயங்கி விழுந்தனா" எனப் புன்னகைக்க, அவளருகில் சென்று தலையை வாஞ்சையாகத் தடவியவர், " என்னை யாருன்னு தெரியுமாம்மா" எனக் கேட்டார் ஆம் எனத் தலையாட்டியவள், " பாபா(அப்பா) " என்றாள்.

ஆதிரா, அவரைப் பாபாவென அழைக்கக் காரணம் என்ன இவர்கள் உண்மையில் அப்பா, மகளா, அதை ஆதிரா அறிவாளா. பொறுத்திருந்து பார்ப்போம்.


யார் இந்த நிலவு-5

 யார் இந்த நிலவு-5

பெங்களூரில் கௌரி இதோடு குறுஞ்செய்திகளாக, ஒலிப்பதிவாக , அழைப்புகளாக எனக் கால் மணிக்கு ஒரு முறை ஆதிராவுக்கு அத்தனை செய்திகள் அனுப்பியிருப்பார். ஆனால் ஆதிரா தான் சொல்ல வந்ததை மட்டுமே சொன்னாலே ஒழிய, இவரது செய்திகளை நின்று நிதானமாகக் கேட்கவும் நேரமின்றி ஒளிந்து மறைந்து அலைந்தாள்.

கௌரி பதட்டமாகப் பைரவிக்கும் போன் செய்து விட்டார். " நீ பயப்படாத கௌரி, என் மகளாகப் பிறந்தவளுக்கு இந்தத் தைரியமாவது கட்டாயம் வேணும். அவள் சமாளிச்சுக்குவா. அந்தக் கம்பெனியைப் பற்றி விசாரிச்சிட்டேன், பாதுகாப்பானது தான். நீ இங்கேயே இரு. அப்படியே ராஜும்மாவை பிடிச்சாலும் அக்கா, தாயி, மாஸீ யாராவது தகவல் தந்திருவாங்க. நானும் சண்டைக்குத் தயாராகத் தான் இருக்கேன். " என்று விட்டு வைக்கவும் , கௌரிக்குத் தான் மனம் ஆறவில்லை.

' நல்ல வீரப் பரம்பரை. பெத்த மகளுக்கு ஆபத்து வந்தாலும் , அவள் சமாளிச்சுக்குவான்னு எனக்கு ஆறுதல் சொல்றாங்க. எனக்குத் தான் பதருது. நல்ல ஆயி, நல்ல முல்கி. அம்மா தாயி துல்ஜா பவானி, நீதான் அவங்களுக்குத் துணை இருக்கனும்" என வேண்டிக் கொண்டவர் மீண்டும் தன் முயற்சியைத் தொடர்ந்தார்.

ஆதிரா ஓபுராய் ஹோட்டலின் உணவகத்தில் காத்திருந்த பொழுதே, இனியும் பார்ட்டிக்குச் செல்லாமல் இருக்க முடியாது என அபிராம், ஹோட்டலுக்கு வந்துவிட்டான். அவன் பத்தே நிமிடத்தில் தயாராகி, பார்ட்டி ஹாலுக்குச் செல்ல, அங்கே கைலாஷ் ராஜ், அவர்கள் அம்மா சொன்ன குடும்பத்தோடு தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்ணின் நவநாகரீகமான ஆடையைப் பார்க்கவுமே, இது கஸ்தூரியின் மருமகளாக ஆகமுடியாது என முடிவுக்கு வந்தவர், அதை வெளிக்காட்டாமலே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

ஒரு பக்கம் அபிராம் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், மறுபுறம் கைலாஷின் புலன்கள் யாவும், சோலாப்பூர் மில்ஸ்காரன் வரவுக்காகவே காத்திருந்தது, தங்கள் வாழ்வைக் கெடுத்தவன், அவனைப் பார்க்கும் போதெல்லாம் தன் மனதின் ரணத்தைக் கீறிக் கொள்வார். அதிலேயே சோகத்தில் மூழ்கிப் போய், அதிலேயே தன் பாருவின் நினைவுகளில் சஞ்சாரித்து இருப்பதும் ஒருவகையான போதையாக இருந்தது அவருக்கு.

தன்னோடு பேசிக் கொண்டிருந்த குடும்பத்தில் அந்தப் பெண்ணின் பார்வை அலை பாய்ந்ததை வைத்தே, அபிராம் வந்து விட்டதை அறிந்து கொண்டார் கைலாஷ். இது ஒரு அபிசியல் பார்ட்டியாக இல்லாமல், செமி அபிசியலாக இருந்தது. தென்னிந்திய மற்றும் மும்பை சார்ந்த மில் ஓனர்கள் சந்தித்துக் கொண்டு நட்பை வளர்க்கும் விதமாகவே இருந்தது.

அதனால், ஜீன்ஸ் பேண்ட், ரவுண்ட் காலர் டீசர்ட், ஸ்டைலிஷ் ஓவர் கோர்ட், இதழில் வசீகரப் புன்னகை எனச் சாக்லேட் பாயாகவே வந்தவனை அந்தப் பெண்ணின் பார்வை மேய்ந்தது. அதைக் கண்ட கைலாஷ், 'மாப்பிள்ளை மாட்டினான்' என மனதில் நினைத்தவர், அபிராமை அழைத்து அறிமுகம் செய்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரத்திலேயே , மாமனைத் தனியாக ஓரம் கட்டிய அபிராம் , அந்த ஐடி அட்டையைக் காட்டி , " இந்தப் பொண்ணு தானுங்க மாமா " என மகிழ்ச்சியைத் தெரிவித்தான். அதைக் கவனமாகப் பார்த்தவர், " ஹேய், நம்ம கம்பெனி இன்டர்வ்யூவுக்கு வந்த பொண்ணு" என்றார்.

" செலக்ட் பண்ணிட்டிங்களா" என ஆர்வமாகக் கேட்டவனை, வம்பிழுக்கவும் ஆசை வர, " எங்கே, ஒரு கேள்விக்குக் கூட உருப்படியா பதில் சொல்லலை" என்றார்.

" மாமா, பதில் சொல்றது ரொம்ப முக்கியங்களா, பொண்ணைப் பார்த்தவுடனே தெரிய வேணாம்" எனக் கோபித்தவனைப் பார்த்துச் சிரித்தவர், " மாப்பிள்ளை, நான் இன்டர்வ்யு நடத்தினேன், என் மருமகனுக்குப் பொண்ணு பார்க்கலை. அதுவும் நீ இப்ப தானே கண்ணு, புள்ளை போட்டோவைக் காட்டுற" என்றார்.

"ம்ப்ச்" எனச் சோகமானவன், "இன்னைக்கு மதியத்திலிருந்து தேடி அலையிறேன். மிஸ்ஸாகிட்டா மாமா" என இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் இவர்கள் பேச்சின் நாயகி அதற்கு அடுத்த அறையில் தான் இருந்தாள்.

கஸ்தூரி சொன்ன பெண்வீட்டுக் குடும்பம் இவர்களையே பார்த்துக் கொண்டு இருக்க, கைலாஷ் கை தேர்ந்த நடிகராக ஒரு இன்ஸ்டன்ட் புன்னகையை வீசியவர், அபிராமையும் அதே போல் இருக்கச் சொல்லி அழைத்து வந்தார்.

பார்ட்டி நடந்து கொண்டிருக்க, மீண்டும் ஓர் சலசலப்பு " போஸ்லே சாப், போஸ்லே சாப்" எனப் பேச்சு ஓடவும் கைலாஷ் உள்ளே விரைத்தார். வெளியே அதே நடிப்புத் தொடர்ந்தது.

ஆனால் அவர் எதிர்பார்த்த அவர் வயதை ஒத்த முரட்டு மீசைக்குப் பதில் இருபதின் தொடக்கத்திலிருந்த வசீகரமான இளைஞன் அவர்கள் குழுமத்தின் சார்பாக வந்தான். ஆறடி உயரம், கட்டான உடல், நீண்ட முகமென மின்னல் ஒளி பார்வை இருந்த போதும், அவன் வம்சத்துக்குச் சம்பந்தமில்லாத கண்கள் ஸ்நேகமாக யாரோடாவது பேசும் போது சிரித்தது. பாரின் ரிடர்ன், மிடுக்காக அவன் வந்த போதும் கைலாஷ்க்கு அவனைப் பார்க்கையில் ஃபீடிங் பாட்டிலை பிடுங்கி விட்டு அனுப்பினார்களோ என்ற நகைப்பே உதிர்ந்தது. 

ஆனால் மாமன் மருமகன் கண்ணில் விரல் விட்டு ஆட்ட வந்த தங்க ஊசி அவன் என அறிந்தார்கள் இல்லை. ஆனால் அவனோடே வந்த காரியதரிசியைப் பார்க்கவுமே, கைலாஷ்க்கு தான் வந்த வேலை முடிந்ததாகவே தோன்றியது. தன் ரணத்தைக் கீறிக் கொண்டார். இனி அவர் அம்மா வரும் வரை, இந்த ரணத்தை நோண்டிப் பார்த்துக் கொண்டே பொழுதை ஓட்டி விடுவார்.

" மாமா, யார் போஸ்லேன்னு பேர் , மராட்டிய ராஜ வம்சமா" என அபிராம் ஆச்சரியமாக வினவ, " ஆமாம் வர்றவன், போறவனெல்லாம், ஐ மீன், மகன், மகள் வம்சம்னு , பத்தாம் தலைமுறை , பதினஞ்சாம் தலைமுறை ஆட்கள், சொந்தக்காரனா இருந்தாலும், மிரட்டுறதுக்காகவே, இந்தச் சர்நேமை சேர்த்துக்கிறாங்க. இது எந்த வம்சமோ. ஆனால் பய சூப்பரா இருக்கான்ல" என மருமகனிடம் கேட்டார்.

" மாம்ஸ், உடம்பு தான் வச்சிருக்கான். ஆனால் ஸ்கூல்லிருந்து நேரா வந்துட்டானோ. என்ன வேணா இருந்திட்டுப் போகட்டும், அவன் யாரா வேணாலும் இருக்கட்டும்.நமக்கென்னங்க மாமா " எனப் பேசிக்கொண்டிருந்தவர்களை நெருங்கியிருந்தான் அந்தப் புதியவன்.

" இப்ப தான் என் செகரெட்டரி சொன்னார். நீங்களும் எங்களுக்கு நெருங்கின சொந்தமாம்ல." என ஓர் நமட்டுச்சிரிப்போடு தூய ஆங்கிலத்தில் கேட்டுக் கை நீட்டவும், அவனது நகைக்கும் கண்களால் கவரப்பட்டவர் கையை இயல்பாகக் கொடுத்தாலும், அருகிலிருந்தவனைப் பார்த்த கோபத்தில், " ஆனால் எனக்கு உங்களை மாதிரி வறட்டுக் கௌரவம் பிடிச்ச மக்களைச் சொந்தம்னு சொல்றதில் விருப்பமில்லை" என இகழ்ச்சியைக் காட்டியவர், அடுத்த நொடியே, " பை த பை யுவர் குட் நேம்" என்றார்.

" மீ" என ஏதோ ஹாசியத்தைக் கேட்டது போல் சிரித்தவன், "விதியோட விளையாட்டு, என்னை நானே உங்கள்ட்ட , ஐ மீன் இவ்வளவு நெருக்கமான உறவினர்கிட்ட , யாரோ மாதிரி அறிமுகப்படுத்திக்கிறேன். " என்றவன், 

"ஆதர்ஸ், ஆதர்ஸ் ராஜே போஸ்லே , இட் இஸ் இனஃப் நௌ. போகப் போகத் தெரிஞ்சுக்குவீங்க" எனக் குடும்பப் பெயரை மட்டுமே சொன்னவன் இன்னார் மகன் என விவரத்தைச் சொல்லாமலே, அபிராமைப் பார்க்க, கைலாஷ் அவனை அறிமுகம் செய்து வைத்தார்.பார்ட்டியில் ராத்தோட்'ஸ் , ஜான்சன்'ஸ் ,கபூர்ஸ், ரேம்'ஸ் என மும்பை மில் ஓனர்களும்,ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, தமிழ்நாடு மில் ஓனர்களும் அறிமுகமாகிக் கொண்டனர்.

எல்லாருக்குமே , கேஆர் மில்ஸின் கைலாஷ் ராஜ் பெண் தொழிலாளர்களைப் படிக்க வைப்பதை பெரிதாகவே பாராட்டினர். அதுவும் ஸ்வர்னி மில்ஸ் சேர்மேன் ரகுவீர் சிங் ராதோட் பர்சனலாக வந்து பாராட்டைத் தெரிவிக்க, தன்னை விட வயதில் இளையவரான தமிழ்நாட்டு மருமகனான அவரிடம், "உங்க சக்தி பவுண்டேஷனும் , உங்கள் சக்தி ஜானகிராத்தோடும் , பெண்களுக்குச் செய்யறதை விடவா "எனக் கைலாஷ் பதிலுக்குப் புகழவும், 

அதைத் தலை வணங்கி ஏற்ற ராஜஸ்தானி பிஸ்னஸ் மென், "உங்களுக்கு எந்த உதவி, எப்போது வேணும்னாலும் தயங்காமல் கேளுங்க " என்றவர், மற்றவர்களோடு பேச்சில் கலந்தார்.

கைலாஷ்க்கு, ஆதர்ஷை பார்த்ததில் ஓர் ஈர்ப்பு இருந்த போதும், அவனோடு வந்த காரியதரிசி, ஆதர்ஷ், இவரோடு பேசிக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டுமிருப்பதைச் சகிக்க இயலவில்லை. இதற்கு மேல் அங்கிருக்க முடியுமெனத் தோன்ற வில்லை. "அபி, நீ முடிச்சிட்டு வா. நாளைக்கு அந்தப் பொண்ணு கட்டாயம் நம்ம ஆபீஸ்க்கு வரும். இருந்து மீட் பண்ணிட்டு, அப்பாயிண்மெண்ட் ஆர்டர் சைன் பண்ணி வச்சிருக்கேன் , குடுத்துட்டு வா. நான் கிளம்பறேன்" என்றார் .

" மாமா, ஒரு மாதிரி இருக்கீங்களே, நான் கூட வரவா. ரூமுக்கா, ஊருக்கா" என வினவினான்.

" நான் கோவைக்குப் போறேன் மாப்பிள்ளை. " என்றவரை, " நீங்க ட்ரைவ் பண்ணக் கூடாது" எனக் கட்டளையிட்டான். " இல்லை, இல்லை, இன்னைக்கு எல்லாம் ட்ரைவ் பண்ண முடியாது. சத்தியன் வந்துட்டான். " எனத் தனது வழக்கமான ஓட்டுநரைச் சொன்னவர், கிளம்பி வெளியேற முனைய, ஆதர்ஷ் நடுவில் வந்தான்.

" என்ன சார் கிளம்பிட்டீங்க. நான் உங்களோட ஒரு டீல் பேச வந்தேன். " என்றான்.

" உங்களோடது  பெரிய கம்பெனி, எங்களோட டீல் வச்சுக்க என்ன இருக்கு" என்ற  கைலாஷின் வார்த்தைகள் பவ்யமாக இருந்தாலும், பேச்சு தொணி ஒரு தெனாவெட்டாகவே வந்தது.   

" நீங்க பர்சனலை, ப்ரபசனல்ல கலக்க மாட்டீங்கன்னு நினைச்சேன். ஐ வாண்ட் எ ஃபேவர் ஃப்ரம் யூ" என்றான். அவன் கேட்ட விதம் அவரை ஈர்க்க, " யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம். கம் டூ கோவை " என்றார்.

" உங்களோட பிஸ்னஸ் ரைவல், பர்சனல் எதிரி. இருந்தும் வரச் சொல்றீங்களே" என ஆச்சரியமாகக் கேட்டான். ஓர் கசந்த முறுவலைத் தந்தவர், "யாருக்காகவும், மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எதையும் இழக்கிற பயமும் இல்லை. ஜஸ்ட் ஐ யம் வொர்கிங் ஃபார் மை வொர்க்கர்ஸ்" என்றார் ராஜன்.

" அப்படி எல்லாம் உங்கள் வாழ்க்கையைச் சுவாரஸ்யம் இல்லாமல் விட மாட்டேன். யூ ஹேவ் டு ஃபேஸ் த காம்படீசன்" என்றான் இளையவன், தன் மாமனிடம், எதிர்ப்பைக் கூட மிகவும் நெருக்கமாக காட்டும் இளையவன் மேல் அபிராமுக்கு எரிச்சலும், ஏன் பொறாமையும் கூட வந்தது. 

" ஓகே, வெல்கம். விளையாடி ரொம்பக் காலம் ஆச்சு. பார்ப்போம். பட் இட்ஸ் மை பாரு'ஸ் டைம். ஹேவ் டூ லீவ்" என அதற்கு மேல் யாருக்காகவும் அங்கே நிற்க இயலாது என்பது போல் அவசரமாக நடந்தவர் வழியில் இருந்த ஸ்லோப்பில் கவனமின்றி, ஷூக்கள் வழுக்கவும், பிடிமானத்துக்காக கையை விரித்து தடுமாற, " மாமா" என பதறியபடி அபிராமும், " பா" என அழைப்பை பாதியில் நிறுத்தி, கைலாஷிக்கு தோள் கொடுத்து, அவர் பின் முதுகையும் பற்றிக் கொண்டான் ஆதர்ஷ். 

இரண்டு புறமும், இளம் சிங்கங்களென இளைஞர்கள் பற்றி நின்று, பதட்டமாக அவரை விசாரிக்கவும், தலை சுற்றியதோ, ஒரு நொடி நிதனித்தவர், 

" நத்திங்" என அபிராம் பற்றியிருந்த கைகளை அழுத்தி அவனிடம் ஒன்றுமில்லை என்றவர், இடது பக்கம் தோள் கொடுத்து நிற்கும் ஆதர்ஷ் " பா….  ஸ்" என்றவன் முகத்தை அருகில் பார்த்தவர் மனதில் மேலும் மின்னல். 'இன்றைய நாள் இவ்வளவு கொடுமையா , என் நினைவுகளை  மலர வைக்க வேண்டாம் என நினைத்தவர்' 

" நீங்க யாரோட மகன், இப்ப இருக்க வம்சத்துக்கு, பின்னாடி இருந்து குத்த தான் தெரியுமே தவிர, இப்படி தாங்கத் தெரியாதே " என ஆவலாக அவன் பதிலை எதிர்பார்க்க, 

" அதை நீங்க தெரிஞ்சுக்கிற நேரம், இன்னும் வரலை. பை த பை, பீ கேர்ஃபுல், உங்க ரைவல் எப்பவுமே இப்படி தாங்க மாட்டான், ஹீ மஸ்ட் பீ வெரி டேஞ்சரஸ்" என கண்களால் மிரட்டி ஆதர்ஷ், சிறு நகையோடு அவரிடம் சொல்லவும், அதில் கவர பட்டவராக பெரிதாக ஹாஹாவென சிரித்தவர், 

" ஆல் ரெடி டோல்ட் யூ, நத்திங்க் டூ லூஸ். போஸ்லேஸ் தான் கேர்ஃபுல்லா இருக்கனும்.  பிகாஸ் ஐ ஹேவ் ரைட்ஸ் டு, டேக் ஓவர் யுவர் மில்ஸ்.பட்  ஐ யம் நாட் இன்ட்ரெஸ்டட்" என தோளை குலுக்கியவர், 

 "ஆனால் , அப்படி ஒரு சந்தர்பம் வந்தா, ஜ வோண்ட் லீவ் " என,கண்களில் தீவிரத்தோடு எச்சரித்து விட்டு, ஆதர்ஷ்,தன முகத்தையே கூர்ந்து பார்ப்பதை உணர்ந்தவர்,இலகுவாக  அவன் முதுகில் தட்டி விட்டு, மீண்டும் அதே மிடுக்கோடு நடந்தார். அவனும் மர்மப் புன்னகையோடு விடைத் தந்தான். 

அபிராம் இவர்கள் பேச்சின் போதும் கூடவே இருந்தான், ஆனால் அவர்கள் பேச்சு ஒரு பக்கம் புரியவில்லை, எனில் மறுபக்கம் பிடிக்கவும் இல்லை.   அபிராம், ஆதர்ஷ் இருவருமாகத் தான் கைலாஷை பார்ட்டி ஹால் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்

" தென் மிஸ்டர் அபிராம். " என ஆதர்ஷ் அவனோடு பேச ஆரம்பிக்க, இருவரும் சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டே உள்ளே நடந்தனர்.

அபிராமுக்கு அறிமுகமான அந்தக் குடும்பத்துப் பெண் ஆதர்ஸோடும் பேச மும்மரம் காட்ட, தப்பித்தோம் பிழைத்தோமென இளையவனிடம் அவளைத் தள்ளி விட்டு அபிராம் நகர்ந்தான். ஆனால் அங்கேயே ஆதர்ஷ் கைலாஷ் சொன்ன வறட்டுக் கௌரவத்தை ஆயுதமாகக் கையில் எடுத்த ஆதர்ஷ், தன் பார்வையாலேயே தள்ளி நிறுத்தினான். அந்தப் பெண் அபிராமைத் தேடிச் சென்றாள். அபிராம் அவசரமாக அவ்விடத்தை விட்டுச் சென்றதில் அங்கே கிடந்த ஆதிராவின் அடையாள அட்டை, ஆதர்ஷின் கண்ணில் பட்டது. 

அதை எடுத்துப் பார்த்தவன், " நீ என் கண்ணிலிருந்து தப்பிக்க முடியாது முலே" என அதனைப் பத்திரப்படுத்திக் கொண்டான்.

கைலாஷ் ராஜ், பாருவுக்கான நேரம் என அவரை நினைவுகளால் தழுவ காரில் ஏறி ,கண்களில் கருப்பு சில்க் மாஸ்க் அணிந்து ,இருக்கையில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டார்.

ஆதிரா பயந்தது போல், ஓபுராய் ஹோட்டலில் நின்ற மராட்டியர்கள், அவளது தாய் வழி உறவான ஆதர்ஷ்க்கு காவலாகத் தான் வந்திருந்தனர். கைலாஷ் சொன்னது போல், மகன் வழி உறவுகள் எப்படிக் குடும்பப் பெயர்களை வைத்துக் கொள்கிறார்களோ, அதே போல் மகள் வழி வந்தவர்களும் இரண்டு குடும்பப் பெயர்களையுமே வைத்துக் கொண்டாளும், குடும்ப அடையாளமாக பிரபலமான  போஸ்லே வையே உபயோகித்தார்கள்.

ஆதிரா மிகையான எச்சரிக்கை உணர்வில் கைலாஷின் காரில் டிக்கியில் பயணித்தாள் . ஏறும் போதே பேணட் நெற்றியில் இடித்ததில் மயக்கம் வர, அதே காரில் டிக்கியில் மயக்கமும், உறக்கமுமான நிலையில் கிடந்தாள்.

பார்ட்டியிலிருந்த ஆதர்ஷ்க்கு போன் வந்தது, பார்ட்டியிலிருந்து விடை பெற்று, தனக்கான அறையில் ,தனது  பாதுகாப்பு காவலர்களோடு, மேலும் இருவரைச் சந்தித்தவன், " போலோ" என ஃ எதிரே நின்றவன் பதட்டமான குரலில், சோட்டே மகராஜ், தீ முல்கி , பிஜ்லி ஜய்சி காயப் சலி “ என தாங்கள் பின் தொடர்ந்து வந்த பெண்ணைப் பற்றி அவர்கள் சொல்ல, 

“டீ புரஸே அஹே ,” அதோட நிறுத்து, என்றவன்,  ”என்ன செய்வீங்களோ தெரியாது, தீ முல்கி (பொண்ணு} என் கைக்கு வரணும். “ என மொழிந்தவன் வார்த்தையில் கோபமும்  , “இது வேற யாருக்கும் தெரியக் கூடாது “ என்றவன் கண்கள் நெருப்பை உமிழ்ந்து , அதில் ஒரு எச்சரிக்கையும், மீறினால் என்ன ஆகும் என்ற மிரட்டலையும் தந்தது

மனதில், " முல்கி, கே. ஆர் மில்ஸ் வேலைக்கு  ட்ரை பண்றாளா. அப்ப நமக்கும் அங்க தான் வேலை. வெகு சீக்கிரம் வர்றேன், கே ஆர் சாப்" எனச் சிரித்துக் கொண்டான்.