Monday, 31 January 2022

யார் இந்த நிலவு-17


யார் இந்த நிலவு-17 

 சோலாப்பூர் போஸ்லே மாளிகை, நாளை நடக்கவிருக்கும், போர்ட் மீட்டிங்குக்காக ஜெயந்த் கெய்க்வாட் தலைமையில் அவரது குடும்பம் கூடியிருந்தது.

பவானி இன்றும், வெளிப் பார்வைக்கு அதே பணிவோடு இருந்த போதும் உள்ளே நிமிர்வோடு இருந்தார். வாழ்க்கை, சாதாரணக் குடும்பப் பெண்களுக்கே, மாமியார், நாத்தனார் என உறவுகளிடம், அவர்கள் போக்குக்கு இணங்க வாழ கற்றுக் கொடுக்கும் போது, மாளிகையில் பல சூழ்ச்சிகளைக் கண்ட பவானி பாய் போஸ்லேயையும், திரை மறைவு வேலையைச் செய்யுமளவாவது மாற்றியிருந்தது. மாற்றான் தாய் மகளென்றாளும் தங்கை பைரவி பாய் மீது அவருக்கு அலாதியான பாசம் உண்டு. இன்று வரை அவர்களது பந்தம் தொடர்ந்து வருகிறது.

தனது கணவன், குயுக்தியாகத் தங்கையை மணக்கத் திட்டமிடுவதை, சமயத்தில் சிறிய தாயாரிடம் சொல்லி, கைலாஷ் , பாரு திருமணத்தை நடத்தியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.

பைரவி கைலாஷோடு ஓடிவிட்டாள், என ஜெயந்த் கட்டுக்கதை கட்டி விட்ட போதும், மாளிகைக்குள் ரமா பாய்க்குப் பயந்து வம்பு வளர்க்காமலிருந்தனர். ஆனால் ரமாபாய் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. மகளை , மருமகனோடு பிபி மில்லின் உரிமையாளராக்கவும், அதில் சிக்கல் வந்தால் தனது சொத்துக்களைக் காசாக்கியாவது மகளைப் பாதுகாக்க, தன் தாய் வீட்டு உறவுகளுடன் கை கோர்த்தார்.

ஏனெனில், அவர் கணவர் உயில் படி, அவரது மகளுக்கு நேரடியாகச் சொத்து சென்று சேராது. அனுபவ பாத்தியதை மட்டுமே. பேரக் குழந்தைகளுக்குத் தான் சொத்து சேரும். எனவே ஜெயந்த் நினைத்தாலும் அதை விற்க இயலாது.

ஆனால், ஜெயந்த், பைரவியைத் தனது வழியிலிருந்து அகற்ற, வேறு முயற்சிகளிலும் ஈடுபடுவான் என யூகித்தவர், பணபலத்தால் மட்டுமே அவனை எதிர்க்க முடியும் என , தனது சொந்த சொத்துக்களைப் பணமாக்கி,மற்ற நாடுகளில் உள்ள தன் உறவினர்களின் தொழில்களில் ரகசியமாக முதலீடு செய்து, அதன் வருவாய் மகளுக்கும், தனக்கும் வரும்படி ஏற்பாடு செய்தார். இந்த வேலைகளை எல்லாம், பைரவி, கைலாஷ், சந்தன் கட்டில் இருந்த சமயத்தில் செய்து முடித்தார்.

கைலாஷ் ஊருக்குச் சென்ற பிறகு, ரமாபாய் பயந்ததைப் போலவே, பைரவியைக் கண்டுபிடித்த ஜெயந்த், ரகசியமாக நடந்த திருமணத்தை மறைத்து, மறுமணம் செய்ய முயன்றான். அதுவும், அபலையாக ஏமாந்து நிற்கும் கொழுந்தியாளுக்கு, வாழ்க்கை கொடுப்பதாகச் சொல்லி, மற்றவரை நம்ப வைத்து, ஏற்பாடுகளைச் செய்ய, ஶ்ரீபத்ராய் மகன்கள், ஆனந்த், முகுந்த் இருவரும், குடும்ப மானம் காப்பற்ற படட்டும் என ஒத்துக் கொண்டனர்.

ரமாபாய், பைரவி பாய் இருவரும் எதிர்த்து நின்ற போதும், அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. ஜெயந்த், சூழ்ச்சியாகக் கைலாஷ் ராஜன் வீட்டிற்குத் தொடர்பு கொண்டு, அவருக்குத் திருமணம் நிச்சயித்து இருப்பதைச் சாட்சிகளோடு நிரூபிக்க, பைரவி ஓய்ந்து போனார்.

அதற்காக, ஜெயந்தை மணக்க இயலாது என முடிவுக்கு வந்தவர், தான் எங்குச் சந்தோஷமாக வாழ்ந்தேனோ, அதே சந்தன் கட்டில் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக எழுதி வைத்து விட்டு, மாளிகையை விட்டு, பிறர் அறியாமல் வெளியேற, ரமாபாய் மகளைக் கண்டும் காணாதது போல் அவரைப் பின் தொடர்ந்து, மகளைக் காப்பாற்றப் போன தாயும் மடிந்தார் என்ற செய்தியைப் பரவவிட்டார்.

இந்தச் செய்தியைத் தான், விஜயன் அறிந்து கைலாஷிடம் சொன்னது. கைலாஷும் மீண்டும் சோலாப்பூர் வந்தவர், எதிரிகளின் கையில் அடிப்பட்டு , அரை உயிராகவே திரிந்தார். ஆனால் , எவ்வளவு உறுதி படைத்த பெண்மணியாக இருந்தாலும்,கொண்டவன், அடுத்தப் பெண்ணை மணக்க இருக்கிறான் என்ற செய்தி, அவரிருந்த நிலையில் நம்ப வைத்தது. கைலாஷ் கிளம்பிய பின்பே ,தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தவர், கணவனின் அண்மைக்காக ஏங்கினார். 

அது நிராசையாகி , தான் ஏமாற்றப்பட்டோமே என்ற எண்ணமே என உயிரை மாய்க்கத் தூண்டுதலாக இருக்க, சந்தன் கட் செல்லவும், இனிமையான நினைவுகள் அவரைச் சூழ்ந்ததில் , தற்கொலை எண்ணத்தைக் கை விட்டார். தன அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறிய பைரவி, அவரது ஆயிக்குமே புதிதாகத் தோன்ற, அவரைத் தேற்றும் முன் படாத பாடு பட்டார்.

ரமாபாய், பைரவிக்கு மும்பையில் மறைத்து வைத்துப் பிரசவம் பார்த்தவர், மனமொடிந்து இருந்த மகளை அவரது வாரிசைக் காட்டித் தேற்றினார்.

சில வருடங்களுக்குப் பிறகு, பைரவி , ரமா பாய் உயிரோடு இருப்பது தெரிந்து விட, மீண்டும் ஆபத்துக்கள் தேடி வந்தது. ஆனால் அதையே தனக்குச் சாதகமாக்கி, தாங்கள் உயிரோடு இருப்பதையும், பைரவிக்கு வாரிசு இருப்பதையும், தக்க சமயத்தில் தாங்கள் வந்து அதனை ஏற்றுக் கொள்வோம் என்றும் வக்கீல் நோட்டிஸ் அனுப்பி வைத்தார். 

ஜெயந்த், பைரவியைத் தேடுவதை மட்டும் விடவே இல்லை. துப்பறிந்து, அவர்களை ஓரிடத்தில் தங்க விடாமல் துரத்திக் கொண்டே தான் இருந்தான். இதன் நடுவே கைலாஷ் ராஜன், தமிழகத்தில் பெரிய மில் ஓனராக அசுர வளர்ச்சி அடைய, பைரவி விசயம் அவர் காது வரை சென்றடையாமல் பார்த்துக் கொண்டனர்.

ரமாபாயின் வாரிசு என , கம்பெனியை நிர்வகிக்கும் உரிமை கோரி, பவர் ஆஃப் அட்டார்னியோடு, அது சம்பந்தப்பட்ட காகிதங்களைத் தாக்கல் செய்தவன், உரிமையாக வந்து பிபி மில்லை ஆக்கிரமிக்க, மற்றவர்கள் குழம்பித் தான் போனார்கள். ஏனெனில் எப்போதும் பலத்த பாதுகாப்போடு வலம் வரும் இளவரசன் போலிருந்தான். இருபத்தியோரு வயது நிரம்பாத அந்த வாலிபன் ஆதர்ஷ் ராஜே போஸ்லே , உலக அளவில் அத்தனை கம்பெனிகளில் பங்கு தாரராக, பல கோடி சொத்துக்குச் சொந்தக்காரனாக, பிறந்தது முதல் இதற்காகவே பழக்கப்பட்டவன் போலிருந்தான்.

அவன் எங்கிருந்து வருகிறான், போகிறான் என்பது கூட ரகசியம், ஏனெனில் கறுப்புச் சீருடை பாதுகாவலர்கள் சூழ, பிபி மில் வளாகத்திலேயே ஹெலிகாப்டரில் தான் வந்து இறங்குவான்.

இந்த ஒரு மாதத்தில், அவனோடு வந்த ஆடிட்டர்கள், கம்பெனியின் நிலவரத்தை அக்கு வேறு, ஆணி வேறாக ஆராய்ந்து, நிறையத் தில்லு முள்ளுகளைக் கண்டு பிடித்திருந்தனர். ஜெயந்தின் திருவிளையாடல்களை, விரல் நுணியில் வைத்திருந்தவன், ஜெயந்த் வாயைத் திறக்கும் போதெல்லாம், அஸ்திரமாகப் பயன்படுத்தி , அவரை வாயடைக்க வைத்தது தான்.

நாளை ஒரு போர்ட் மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அதைப் பற்றிய பேச்சே , போஸ்லே மாளிகையில், ஜெயந் தலைமையில் இப்போது ஓடிக் கொண்டிருந்தது. இதில் முக்கியமான விசயம், அதில் இருபது ஆண்டுகளுக்குப் பின் ரமாபாய் பங்கெடுக்க வருகிறார்.

ஜெயந்தின் மருமகன்களான ஶ்ரீபத்ராய் பேரன் போஸ்லேக்கள், மாளிகையில் கூடியிருக்க, அதில் திருமணமாகாத இளைய மருமகன் மஹந்த்ராய் போஸ்லேவும் இருந்தான், அவன் கையிலிருந்த மொபைலில் ஆதிராவின் போட்டோ இருந்தது. அவளை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜெயந்த், " தாமாத்ஜீ, இன்ஸ்டெண்ட் வாரிசா வந்து நிற்கிற , இந்தப் பொடியன் ஆதர்ஸை எல்லாம் ஒத்துக்க முடியாது, வந்து ஒரு மாசத்தில், கண்ணில் விரலை விட்டு ஆட்டுறானே. " எனச் சலித்துக் கொள்ள,

" மாமாஜி, மடியில் கனம் இல்லைனா எதுக்குப் பயப்படனும், நீங்க நேர்மையா மில்லை நடத்தியிருக்கீங்க, கவலைப் பட என்ன அவசியம்" என மூத்த மருமகன் வினையமாகவே கேள்வி எழுப்பவும்,

" அதெல்லாம் ஒரு குற்றம் கண்டு பிடிக்க முடியாது தாமாத்ஜி. உங்கள் தாத்தா சொத்தை, என் வேர்வை சிந்தி , நிலை நிறுத்தியிருக்கனாக்கும்" எனப் பெருமைப் பட்டுக் கொள்ள, " அது தான் தெரியிதே" என இளக்காரமாகப் பதில் தந்தான் இளையவன்.

" க்யா ஜி" என அவர் சந்தேகமாகக் கேட்க, " இல்லை, இல்லை, நீங்க எவ்வளவு கஷ்டப் படுறீங்கன்னு தெரியுதுன்னு சொல்றேன்" என மழுப்பியவன், " நாளைக்கு, அந்தச் சோட்டூ, என்ன தான் ப்ரூஃ பண்றான்னு பார்ப்போம். நாங்க உங்க பக்கம் தான்" என உறுதி தர, "ஹாங், ஹாங், தாமாத், சசூரை சப்போர்ட் செய்து தானே ஆகனும். அதுக்குத் தான என் முல்கியை கட்டிக் கொடுத்திருக்கு" என அவர் சமாதானமாகச் சொல்லிக் கொள்ள, மருமகன்கள் இரகசிய புன்னகை புரிந்தனர்.

அலை பேசியையே பார்த்திருந்த, மஹந்தின் தலையில் தட்டிய, சகோதரர்கள், " மொபைலை திண்ணுடாத" எனக் கேலி செய்ய, அசடு வழிந்தவன், " முல்கி தோ படியா ஹை பாயி. தூக்குங்க. எனக்கும் டபுள் ஷேர் வேணும்" எனக் கண்ணடிக்க, " அது தான , பக்கா பிஸ்னெஸ் மேன், ப்யார்ல விழுந்துட்டானோன்னு பார்த்தேன்" எனப் பேசிக் கொண்டே சென்றனர்.

சொத்து வெளியே போகக் கூடாது, என்பதற்காகவே பவானி புவாவின் மகள்களைக் கல்யாணம் செய்தவர்களுக்கு, ஜெயந்த் மீது எப்போதுமே நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. அதுவும் கிளை குடும்பத்தை மெயின்டைன் செய்யும் மாமனாரை எந்த மருமகன் மதிப்பான். இவர் கொள்ளையடிக்கும் பணம், அங்குத் தான் விழலாகப் போகிறது, என அறிந்தவர்கள், அதைத் தடுக்க வழி தேடிய போது, ஆதர்ஷ் வந்து சேர, முதலில் ஜெயந்த் மாட்டட்டும், பின்னர்,ஆதர்ஸையும் பிடித்துப் போடுவோம், எனச் சுலபமான , மற்றும் கௌரவமான வழியையே தேடினர்.

இருபது வருடத்தில், தன் மகள்களில் ஒருத்தியை, ஆனந்த் மகனுக்கும், மற்றொரு பெண்ணை முகுந்த் மகனுக்கும் மணமுடித்து, சொத்து வெளியே போகாமல் பார்த்துக் கொண்டனர்.

இதில் ஆனந்தராய் போஸ்லேக்கு மற்றொரு மகன் இருக்க, பைரவி மகளைக் கடத்தி , அவனுக்காவது மணமுடித்து வைத்து விட வேண்டும் என அவர்கள் முயற்சி செய்ய, ஜெயந் தன் மகள்களுக்குப் போட்டியாகப் பைரவி வாரிசு வரக் கூடாது, என, அவளைத் தீர்த்துக் கட்டவே முயன்றான். இவர்கள் ஆளுக்கு ஒரு காரணத்தோடு பைரவியின் பெண் குழந்தையைத் தேட, அவர்களுக்குப் புதுத் தலைவலியாகச் சொத்துக்கு வாரிசு என ஒருவன் வந்து நின்றான்.

சத்தாரா, சோலாப்பூரிலிருந்து இருநூற்றைம்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர். முன்னொரு காலத்தில் மராத்தியர்களின் தலை நகராக இருந்த ஊர். சிப்பாய்களின் நகரம், ஏழு கோட்டைகளின் நகரம், என இயற்கை எழில் கொஞ்சும், மலைகள், கோட்டைகள்,நீர்வீழ்ச்சி, சிவ்சாகர் லேக், காஸ் பீடபூமி என நிறைந்த நகரம்.

அதில் இயற்கை அரண் சூழ்ந்த இடத்தில் பாம்தோலி கிராமத்துக்கு அருகில், பல ஏக்கர் பரப்பளவில், கோட்டை போல் மதில் சுற்றிவர, போல்லே மாளிகை போல் ஆடம்பரமாக இல்லாமல், ஆனால் சகலவித பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, ஹெலிபேட் முதற்கொண்டு அமைக்கப்பட்ட ஒரு மாளிகை இருந்தது.

மெயின் ரோட்டிலிருந்து, சில கிலோ மீட்டர் தொலைவிலிருந்த அந்த மாளிகை யார் கண்ணிலும் அவ்வளவு எளிதாகப் படாதவாறு கட்டப்பட்டிருந்தது. கறுப்பு உடையணிந்த பாதுகாவலர்கள், மாளிகையில் வேலை பார்க்கும் அனைவருமே, பாதுகாப்பு ஏற்பாட்டைக் கடந்து, பிங்கர் ப்ரிண்ட் வைத்தே வர வேண்டும். 

ஏனெனில் இந்த மாளிகையின் சொந்தக்காரரே, பல முக்கியப் புள்ளிகளுக்கு, பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்யும் ஏஜென்சி வைத்திருப்பவர் தான். அது மட்டுமின்றிச் சில முக்கியமான விழாக்களும் கூட இவர்கள் கட்டுப்பாட்டில் வரும். ஈ, எறும்பும் இவர்கள் காவலைத் தாண்டி வர இயலாது என்ற நம்பிக்கையைப் பெற்றவர்கள்.

ஹாலில் நடுவே போடப்பட்டிருந்த, ஷோபாவில் நடுநாயகமாகப் போடப்பட்டிருந்த, ஷோபாவில் சோட்டி ராணி என்று அழைக்கப்பட்ட, ரமா பாய் பழுத்தப் பழமாக அமர்ந்திருக்க, அவருக்கு அருகிலேயே ஐம்பதுகளின் ஆரம்பத்திலிருந்த ஒரு ஆணும், அவர் மனைவியும் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.

" படி ஆயி, நாளைக்கு நீங்க சோலாப்பூர் போயே ஆகனுமா, இன்னும் ஆறு மாசம் அவகாசம் இருக்கே, தீதியும் வரட்டும்,அப்புறம் போகக் கூடாதா" எனக் கவலை படிந்த முகத்தோடு, ரமாபாயின் தங்கை மகள், ராதா பாயி வினவ, அவர் கணவரான பாலாஜி ராவ், " ஷேர் மாதிரி ஒரு பேரனை வச்சுக்கிட்டு, மாமி இன்னும் மறைஞ்சு வாழனும்னு என்ன அவசியம். போஸ்லே மாளிகையையே கை பற்றலாம்" என அவர் யோசனை தெரிவித்தார்.

" அதுக்கான நேரம் இன்னும் வரலை தாமாத்ஜி. எதுக்கா இருந்தாலும் இவள் தீதி ஒத்து வரனுமே. பைரவி எங்க என் பேச்சை கேட்கிறா. தாமாத்ஜியை பிரிந்து இருந்த சில வருஷம் கேட்டவள் தான். " என ரமா பாயி நொந்து கொள்ள,

" ஜீஜாஜி பத்தி உண்மை தெரிஞ்ச பிறகாவது, அவர்கிட்ட போயிருக்கலாம்ல ஆயி , தீதிக்கு அதுக்கும் பயம் தான்" என மூவருக்குமாகச் சமோசாக்களைக் கொண்டு வந்து கொடுத்தார் கௌரி.

" கௌரி, இந்த வேலை செய்ய, ஆள் இருக்காங்க. நீ எதுக்கு இதெல்லாம் செய்யிற" என ரமாபாய் கோவிக்க,

" எனக்கும் பொழுது போக வேண்டாமா ஆயி. ஆதிரா முல்கி கூடவே, அவளைக் கவனிக்கிறதே வேலையா, ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் பத்தாமல் இருந்தது. அந்த வேலைக்கும் ஓய்வு கொடுத்துட்டிங்க" எனக் கௌரி குறைபடவும்.

" நான் எங்க பறிச்சேன், விதி அவளை அவங்க பாபாகிட்ட சேர்த்திடுச்சு. இந்தப் பைருவைப் பாரு, சரி இத்தனை நாள் புருஷனைத் தேடிப் போகலை. மகள் அங்கே இருக்காலே, இப்பவாவது உன் தீதி அங்க போகலாம்ல, மாட்டாளே. தலையைச் சுத்தி மூக்கை தொடுறா" என ரமாபாயும் தன் பங்குக்குப் பைரவியைப் பற்றி அங்கலாய்த்தார்.

" படி ஆயி, தீதிக்கு உண்மையான நேசம் கிடைச்சும், அதை அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை பாருங்களேன். அவங்க இரண்டு பேரும் சேர்ந்து இருந்தா, நமக்கெல்லாம் இப்போ வேலையே இல்லை" என ராதா அக்கா குடும்பத்துக்காக வருந்தவும்,

" எல்லாம் லிபி, என்ன செய்ய. தாமாத்ஜியோட தைரியத்தைப் பார்த்துத் தான் பைரவியை அவருக்குக் கொடுக்கனுமுன்னு முடிவு பண்ணேன். சியா, ராம் மாதிரி பிரிஞ்சே இருக்காங்களே. எப்ப அவங்களுக்கு நல்ல காலம் வருமோ" என ரமாபாய் பெருமூச்சு விட்ட நேரம்,

" நாநிமா, சுப கடி ஆகய்" என இரண்டே எட்டில் துள்ளிக் குதித்து ஓடி வந்தான் ஆதர்ஷ் ராஜே போஸ்லே, ஜெயந்த் முதல், எல்லாப் போஸ்லேக்கள் கண்களிலும் விரல் விட்டு ஆட்டும் இருபது வயதே நிரம்பிய, பயமறியாத ராஜா வீட்டு கன்றுக்குட்டி, கைலாஷ் ராஜின் பார்வையில், பால்வடியும் முகத்துக்குச் சொந்தக்காரன், ஆனால் அவ அறியாத ஒன்று, இந்த இளம் சிங்கத்தின் பாய்ச்சல், அவரையும் விடப் பன் மடங்கு வேகமானது,

ஆதர்ஷ், நாநிமா கால்களில் பணிந்து எழுந்து, தன் மாம், டாட் கால்களையும் தொட, " ஜீத்தே ரஹோ, நாநாஜி " என ஆசீர்வதித்தனர். அவர்களுக்கு நடுவில் அமர்ந்தவன்,

" இன்னைக்குக் காலையில் , யார் கூப்பிட்டாங்கன்னு சொல்லுங்க" எனப் புதிர் போட்டவன், " உங்க தாமாத்ஜி, தி கிரேட் பிஸ்னஸ் ஐகான், கே. ஆர் .மில்ஸ், கைலாஷ் ராஜ் , பிஸ்னஸ் டீல் வச்சுக்கலாம்னு கூப்பிட்டார்" எனவுமே, ரமாபாய் ஆச்சரியமாகப் பார்க்க, ராதாபாய் முகம் வாடியது, பாலாஜி அவர் தோளில் தட்டியவர், மகனிடம், " தமிழ்நாட்டுக்கு, எப்ப போற பேட்டா" என நேராக விசயத்துக்கு வந்தார்.

" அது தான் டாட் யோசனையா இருக்கு, போஸ்லே மாளிகைக்குள்ள ஸ்டெப் இன் செஞ்சா, உங்களைத் தனியா விட்டுட்டு, நான் அங்க போக முடியாது. மஹந்த் கையில் ஆதிரா போட்டோ கிடைச்சிருக்கு. அவளைத் தூக்க ப்ளான் பண்றான். அவனுக்கு முன்ன, நான் அவளைத் தூக்கனும்" என அவன் சீரியஸாக யோசிக்கவும்,

" நீங்க ஆதிராவை கடத்துறதுக்கு என்ன அவசியம் சோட்டே சாப்" என ஆட்சேபித்தார் கௌரி. ஆனால் ரமாவாய், முகத்தில் ஓர் புன்னகை அரும்பியது, " தூக்கிட்டு வா நாநாஜி, அப்போ தான் நிறைய விசயம் முடிவுக்கு வரும்" என அர்த்தமாகச் சொல்லவும்,

" நாநிமா, யூ ஆர் அல்டிமேட். அது இல்லாமலா, ட்வண்டி இயர்ஸா, போஸ்லேக்களைச் சமாளிக்கிறீங்க" எனப் புகழ்ந்து அவரைக் கட்டிக் கொள்ளவும்.

" நாநாஜி, இப்ப இருக்கவுங்களுக்கே, நான் இராஜ மாதா அதை மறந்திடக் கூடாது" என்றார் ரமாபாய்.

கௌரி மனதில், ' நல்ல குடும்பம், நல்ல வாரிசுங்க. ஆயி துல்ஜா பவானி, எல்லாரையும் காப்பாற்று' என வேண்டிக் கொள்ள,

" கௌரி மாஸி, நீங்களும் என் கூட வர்றீங்க. நீங்க தான் என் ட்ரம்ப் கார்ட்" என அடுத்தக் குண்டை வீசினான் ஆதர்ஷ்.

" நானா" என அதிர்ந்து நின்றார் கௌரி.

ஆதர்ஷ், ராமாபாயின் வாரிசானது எப்படி, ஆதர்ஸின் கோவை பயணம், என்ன விளைவுகளை ஏற்படுத்தும். பாப்போம்.

நிலவு வளரும்.


யார் இந்த நிலவு - 16

யார் இந்த நிலவு - 16 

குன்னூரில் வசந்த மாளிகையில் , முதல் நாளே, பலகாரங்கள் மட்டுமின்றி, அந்த எஸ்டேட்டில் விளைந்த, காய், கனி வகைகளையும், பேக்கிங் செய்து தயாராக இருந்தார் சௌந்தரி. இரவில் மணிக்கு ஒருமுறை நேரமாகிவிட்டதோ எனக் கடிகாரத்தைப் பார்க்கவும் தவறவில்லை. பாலநாயகம் கூட, " புதுசா கட்டிக்கொடுத்த புள்ளையைப் பார்க்கப் போற மாதிரி , எதுக்கு முழிச்சு, முழிச்சு பார்க்கிற. மகன் வூட்டுக்குத் தானே போறோம், லேட்டாப் போனாலும், ஒன்னும் பிரச்சனை இல்லை தூங்கு" எனக் கடிந்து கொண்டார்.

" நான் என்ன வேணும்னா முழிச்சுக்கிட்டுக் கிடக்கிறேன், தூக்கம் வரலை, என்ன செய்யச் சொல்றீங்க" எனச் சலித்துக் கொண்டவர், எழுந்து, பாத்ரூம் சென்று வருகையில், நிசப்தமான அந்த வேளையில் மெல்லிய குரலில் யாரோ பாடுவது கேட்டது.

'இந்த மகராசிக்கு எப்ப விடியப்போகுதோ' என மனதில் நினைத்தவர் மீதி தூக்கத்தை, விழிப்பும் முழிப்புமாகக் கடந்தார்.

பாலநாயகம், நண்பர்களோடு வழக்கமான நடைப்பயிற்சி , கேலி கிண்டல் என அரட்டையடித்துக் கொண்டு சாவகாசமாக வர, சௌந்தரி, குளித்துக் கிளம்பி உட்கார்ந்திருந்தவருக்குக் கணவனைக் கண்டு எரிச்சல் மண்டியது.

" ஏனுங்க அண்ணி, அது என்னத்துக்குங்க , எங்க அண்ணனை முறைச்சுக்கிட்டே கோர்ந்துருக்கீங்க, எப்படினாலும் டிபன் முடிச்சு தான கிளம்புவீங்க. அதுங்காட்டியும் , ஞாயம் பேசிப்போட்டு வந்து கிளம்பிடுவாங்கங்க " என அபரஞ்சி கேள்வியும், சமாதானமுமாகச் சொல்ல,

" உங்க அண்ணன், நான் முறைச்சவுடனே, அவரு அப்படியே பயந்திருவாராக்கும், வேணும்மின்னே கூடக் கொஞ்சம் நேரமாக்குவார்" எனச் சௌந்தரி குறைபட்டார்.

" அது தான் தெரிஞ்ச கதையாச்சுங்களே, அப்படினாலும் நீங்க மாமாவை முறைக்கிற மாதிரியே , சைட் அடிக்கிறதை மட்டும் விடமாட்டீங்கிறிங்க . அவிகளும் உங்களை ரவுசு பண்றதை விடமாட்டாங்க, இரண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடிதானுங்க அக்கா " எனச் சாரதாவும் பேச்சில் கேலியோடு இணைந்தார்.

" ம்க்கூம், உங்க மாமனை, சைட் அடிச்சிட்டாலும், நீ தான், அவரை மெச்சிக்கோனும். தான் புடிச்ச முசலுக்கு மூணே காலுனு சாதிக்கிற மனுசன். என் மகன் சரியாத்தான் ஹிட்லர் னு பேர் வச்சிருக்கான்" எனச் சௌந்தரி கணவனின் குணாதிசயத்தைச் சொன்னவர்,

"இவிக பின்னாடி ஓடியே என் காலம் போயிடுச்சு. என் கவலையெல்லாம், ராஜாவைப் பத்தி தான். காசு பணம் சேர்த்து வச்சு என்ன செய்ய, நானும் போய்ச் சேர்ந்துட்டேனாக்கும், என் மகனை நேரத்துக்குச் சாப்பிட்டியான்னு கேட்க கூட நாதியில்லாத போயிடும்" என முந்தானையில் முகத்தைத் துடைத்தார்.

"மனசை விடாதீங்க அண்ணி, மருத மலை ஆண்டவன் அதுக்கும் ஏதாவது வழியைக் காட்டுவான்" என அபரஞ்சி, சௌந்தரியைத் தேற்ற, பூஜைத் தட்டோடு வந்த பவானி, " சரியா சொன்னீங்கம்மா. கவலைபடாதீங்க அத்தை, நல்லதே நடக்கும். அடுத்துக் கிரகங்கள் மாறும் போது, பிரிஞ்சவங்க எல்லாம் ஒன்னு கூடுவாங்களாம். " என ஆரத்தி தட்டை அவர்களிடம் நீட்டினார்.

" உன் ஆயி பவானி உத்தரவு கொடுத்துட்டாலாக்கும். " எனச் சாரதா, கேள்வி எழுப்ப, பவானி ஆம் எனத் தலையாட்டினார்.

" உன் வாக்கு , அப்படியே பலிக்கட்டும். நீயம் உன் புருஷனோட சேர்ந்து, தீர்க்க சுமங்கலியா வாழனும். " என, சௌந்தரி பவானிக்கும் குங்குமம் வைத்து விட்டு , தானும் வைத்துக்கொள்ள, மற்றவர்களும் அதே போல் செய்தவர்கள், "உன் புண்ணியத்துல நாங்களும், பூஜை பலனை அனுபவிச்சுகிறோம்."எனச் சாரதா சொல்லவும், "உங்க வாழ்த்து தான் அத்தை, என்னையும் என் புருசனோட சேர்த்து வைக்கும்" என்றார் பவானி.

" என்ன ஒன்னு, அதுக்கப்புறம் எங்களுக்கு, காலை, மாலை பஜனை பாட்டு, இராத்திரியில் பாடுற தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்காது" எனக் கேலி பேசினார் சௌந்தரி.

" பஜனை பாடுறது தெரியும். இது வேறயா" என மற்ற இருவரும் பவானியைக் கேலி செய்ய , குங்குமச் சிவப்பாகச் சிவந்த முகத்தோடு, அதெல்லாம் இல்லை எனப் பவானி மழுப்பவும், "தூரத்தில் இருக்கப் புருஷனுக்கு, இது கூடச் செய்யலைனா எப்படி" என மூத்த தலைமுறையினர் மூவரும் பேசியே, பவானியை உள்ளே ஓடவிட்டனர்.

காலை உணவு முடித்து, இவர்கள் கிளம்ப ஆயத்தம் செய்யும் நேரத்தில் ராமு , " பாலா மதியம் சாப்பிட்டு வெயில் தாழ கிளம்பலாமுல்ல" எனப் பேச்சை ஆரம்பித்தார்.

" நீ தான் ஊருக்கு போ, போன்ன. இப்ப என்ன. ஏன் மருமகன், எங்கையும் போறேன்னு. உனக்குப் போன் போட்டானாக்கும்" எனப் பாலநாயகம் குதர்க்கமாகக் கேள்வி எழுப்ப , சௌந்தரி ஆட்சேபிக்க , பன்னீரும், சுப்புவும் சமாதானம் பேச எனப் பேச்சு வளர்ந்தது.

வழக்கமாக இவர்கள் பேச்சுக் குரல் உயரவுமே அங்கே ஆஜராகி விடும் பவானி, வெகு நேரமாகக் காணவில்லை. " இவிக சண்டையை நம்மாள தீர்க்க முடியாது. அவிக மருமகளைக் கூப்புடுங்க. " எனச் சாரதா சொல்லவும்,

" சத்தம் கேட்கவுமே வந்திருமே, இன்னைக்கு என்ன ஆளைக் காணோம்" எனச் சுப்பிரமணியும், தேட ஆரம்பிக்க மற்றவர் கவனமும் பவானி எங்கே என்பதில் சென்றது.

" அம்மா பவானி" என ராமு குரல் கொடுக்க, முகத்தைத் துடைத்தபடி, வருவிக்கப்பட்ட புன்னகையுடன், "சாரிப்பா, பொண்ணு போன் பண்ணா" எனக் காரணத்தைச் சொல்லிக் கொண்டு வந்து, ஹாலில் மூத்தவர்களைப் பார்க்க எதிரும், புதிருமாக உட்கார்ந்திருந்தனர். ஆளாளுக்கு அவரிடம் புகார் பட்டியல் வாசிக்க,

" இப்ப கிளம்பி வராத, அப்புறம் வான்னா என்ன அர்த்தம், இவ மகனுக்கு, நான் அங்க வர்றது பிடிக்கலையின்னு தானே அர்த்தம்" எனப் பாலநாயகம் முறுக்கவும் ,

" நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க. அவனுக்கு என்ன வேலையோ, நீங்கள் வர்ற நேரம், ராஜா முன்னாடி வந்து வா ன்னு கேட்கோனும்பிங்க. அதுக்காகத் தான் அப்படிச் சொல்லியிருப்பான்" எனச் சௌந்தரி மகனுக்கு வக்காலத்து வாங்கினார். மீண்டும் போர் முரசு கொட்டி சண்டை சூடு பிடித்தது.

" மாமா, அது உங்க மகன் வீடு, உங்களுக்கு இல்லாத உரிமையா. நீங்களே சொல்றீங்க இவ்வளவு வேலையை இழுத்துப் போட்டுகிறார்னு. அப்புறம் அங்க போறதுக்கு எதுக்கு இவ்வளவு யோசிக்கிறீங்க" எனப் பாவானியும் கேட்கவும்.

" உனக்கு அவனைத் தெரியாதும்மா, உன்னால தான், நான் தனியா இருக்கேன் பாருன்னு, வேணும்னே காட்டுவான். அவன் நல்லா வாழனும்னு நான் நினைக்கலையா" எனப் பழைய பல்லவியை ஆரம்பிக்க,

" இதையே மறுக்கா, மறுக்காச் சொல்லாதடா, மாப்பிள்ளையே மறந்தாலும், நீ இந்தப் பேச்சை மறக்க மாட்ட. நான் உன்கூட இருக்கிறதால தான , இந்தப் பேச்சை பேசுற, நான் என் மகன்கிட்ட போறேன். நீயும் உன் மகன்கிட்டப் போ" எனப் பன்னீர் கோபமாகச் சொல்லவும்.

" அப்பா, நீங்க அமைதியா உட்காருங்க. மாமாட்ட நான் பேசிக்கிறேன்" என்ற பவானி,

" ஒரு சூழ்நிலையில பெத்தவங்க எடுக்கிற முடிவால, அவங்க வாரிசுகள் ரொம்பப் பாதிக்கப் படுறாங்க. அந்தக் கோபத்தை நம்மட்ட காட்டும் போது, பொறுத்துக்கத் தான் வேணும் மாமா" எனப் பவானி உருண்ட கண்ணீரைச் சுண்டி விட,

" உன்னை யாரு என்ன சொன்னாங்க" என வெகுண்டார் பாலா. அதில் சிரித்த பவானி, " உங்களுக்கு ஒரு மகன் இருந்தா, அதே மாதிரி எனக்கு ஒரு மகள் இருக்க மாட்டாளா. என் குடும்பம் பிரிஞ்சு இருக்க நான் தான் காரணம்னு திட்டுறா" என்றவர்,

" இதை விடுங்க மாமா, நான் போட்ட முடிச்சு, நானே அவிழ்த்துக்குறேன். நீங்க உங்க மகன் வீட்டில் போய்த் தங்குங்க , உங்களுக்காகவே அவரும் வீட்டுக்குச் சீக்கிரம் வருவார். அவர் மனசில ஆற்றிக்க முடியாத ரணம் இருக்கு, பேசி வெளியே கொண்டு வாங்க. அவர் இப்படி இருக்கிறதுக்கு என்ன காரணம்னாவது தெரிஞ்சுக்குங்க" என முகத்தில் வேதனையோடு பவானிச் சொல்லவும்,

" நான் கேட்காமல் இருப்பேன்னு நினைச்சியாமா" என்றார் பாலா.

" கேட்டுருப்பீங்க, ஆனால் உங்க மகன், உங்களை மாதிரி தான இருப்பார். கல்லைக் கரைக்கிறது அவ்வளவு சுலபமா என்ன. இருபது வருஷமா, தன் வாழ்க்கையை விட்டுக் கொடுக்கிற அளவுக்கு, அவர் மனசில இருக்கிறவ யாருன்னாவது தெரிஞ்சுக்கிட்டு வாங்க." எனப் பாலநாயகம் தம்பதி மகன் வீட்டுக்குச் செல்ல வேண்டிய மற்றொரு காரணத்தையும் பவானி எடுத்துக் கொடுத்தார்.

" நல்லாச் சொல்லு, நானும் இதையே தான், இவருக்குப் புரிய வைக்கிறதுக்குள்ள ஓய்ஞ்சு போறேன்" என்ற சௌந்தரி, தனது அலைப்பேசியை எடுத்து,

" இப்பவே ராஜாவுக்குப் போன் போடுறேன். இவனூட்டுக்கு, நாங்க என்ன கஞ்சிக்கு இல்லாமலா போறோம்" எனப் போன் அடிக்க, ராமு பதறினார்.

" சௌந்தரி, மாப்பிள்ளை மீட்டிங்கில இருப்பாரும்மா" என அவசரமாகத் தடுக்க,

" அவன் எங்க வேணுமின்னாலும் இருக்கட்டும் அண்ணேன். அரை மயக்கத்தில இருந்தாலும் பெத்தவளுக்குப் பதில் சொல்லித் தான் ஆவோனும். நானும் கேக்கலையின்னா, வேற யாரு தான் கேட்பாங்க. " எனக் கணவருக்கும் ஓர் அம்பை விட்டு விட்டு போன் அடிக்க, நான்கைந்து முறை அடித்து, கடைசி நொடியில் போனை எடுத்த கைலாஷ், " அம்மா, வந்துட்டீங்ஙளா, கிளம்பிட்டிங்களா " எனவும்.

" எங்களை இப்ப வராதேன்னு சொன்னியாமாம். ஏன் மதிய சோத்துக்கு வந்தோம்னா, உன் ஆஸ்தி குறைஞ்சிடுமோ" எனச் சிடுசிடுக்கவும், மயக்கத்திலேயே சிரித்தவர், " தாய் மாதா, நீங்க தான் அன்னபூரணி ஆச்சே, வந்து உங்க கையால அள்ளிக் கொடுத்தீங்கன்னா, என் கம்பெனிக்கே வயிறு நிறையும் வாங்க மா. " என்றவர், "இப்ப தான் உங்க பேத்தி ஊட்டி விட்டுச்சு. மதியத்துக்கு நீங்க வந்து ஊட்டி விடுங்க" என ராஜன் உளறினார்.

அவரின் குழறிய பேச்சில் " ராஜா, ஏன் ஒரு மாதிரி பேசுற, உடம்புக்கு முடியலையா என்ன" எனப் பதறினார் சௌந்தரி.

" ஹேய் தாய் மாதா, பதறாதீங்க. மாத்திரை போட்டது, இல்லை தூக்கம் கெட்டது. அதை விடுங்க. அப்பா வர்றார்ல, இரண்டு பேருமா வந்து இங்கயே இருங்க. உன் கையால சாப்பிடனும் வாங்கமா" என அரை மயக்கத்திலிருந்தவர், அம்மாவிற்கு அழைப்பு விடுக்க, "இந்தா கிளம்பிட்டேன் கண்ணு, இரண்டு மணி நேரத்தில வந்துடுவேன்" எனக் கண்ணீர் வழியப் பேசிய சௌந்தரி," போதுமா உங்களுக்கு, என் மகன் உங்களைக் கூப்பிட்டான்" என்றவர், கண்ணைத் துடைத்துக் கொண்டு அடுத்து சத்தியனுக்குப் போன் அடித்தார்.

" டேய் சத்தியா, என்னடா நடக்குது அங்க. அப்பா, ஏன் ஒரு மாதிரி பேசுறான்" என மிரட்டவும், " ஒண்ணுமில்லைங்களே" எனச் சத்தியன் சமாளித்து விட,

" அவன்கிட்ட விசயத்தைக் கரக்க முடியாதுங்கக்கா , நீங்க செல்லிக்கு போடுங்க, அவள் தான் ஓட்ட வாயிற் சொல்லிப்vபோடுவா " என யோசனை தந்தார் சாரதா.

அடுத்து செல்லிக்கு போன் போட்ட சௌந்தரி " ஏண்டி செல்லி, உனக்கு நேரத்துக்கு டிபன் செஞ்சு போட முடியாதாக்கும், என் மகன் லேட்டாகுதுன்னு சாப்பிடாம போயிட்டானாமாம் " எனப் படபடக்க,

" ஏனுங்க ஆத்தா, ஐயா ரூம்பில தானுங்க இருக்காரு, அவர் எங்கிங்க வெளிய போனாரு, நான் நேரமே டிபன் செஞ்சு போட்டு, காத்துக் கெடக்க ஐயா தான் காபிக்கே கதவையே திறக்கலைங்க, ஆதிரா பொண்ணு இல்லைங்க ஆத்தா, அது தான் " எனப் பதில் தந்தவள், தன் மேல் குற்றமில்லை என நிரூபிக்கும் விதமாகச் சௌந்தரிக்குத் தேவையான விசயத்தை அவள் அறிந்தவரைத் தந்து விட, சுற்றியிருந்த ஆண்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

" அண்ணி, விஜயன் தான் போன் அடிச்சது. ராஜா பேசறதும் சரியில்லை, நீங்க கிளம்புங்க. இவிகளுக்குப் பெரிய தங்கமலை ரகசியத்தை, மறைக்கிறதா நினைப்பு" எனத் தன் கணவர் ராமுவையும் காலை வாரி விட்டு, நடந்ததை யூகித்த அபரஞ்சி, சௌந்தரியைக் கிளப்பினார்.

பவானிக்குப் பேசவும் இடம் தராமல் சாதுரியமாக விசயத்தைக் கறந்த இந்தப் பெரியவர்களிடமிருந்து எந்த விசயத்தையும் மறைப்பது கடினம் என உணர்ந்தவர், தன் குட்டு எப்போது உடையுமோ, அதன் பின் விளைவுகள் என்ன ஆகுமோ என யேசித்தார்.

" அப்ப, ராஜாவுக்கு முடியலைங்கிறியா" எனப் பாலா, முகத்தில் கவலையோடு கேட்க,

"ஆமாண்டா, இல்லையினா உன்னைய எதுக்கு விசாரிக்கப் போறான், ஹிட்லருன்னுல சொல்லுவான், நீ கிளம்பு." எனச் சுப்புவும், 

"முடியாம கிடக்கையில், மாப்பிள்ளை அப்பன் , உன்னைய  தேடுறாப்பலைல , அது தான்  பாசம், சும்மா முறுக்கமா, கம்முனு  கிளம்பு, பயப்படுற அளவு ஒன்னுமிருக்காது " எனப் பன்னீரும், பாலாவை தேற்றினர்.

ராமு நண்பனை அழைத்துச் சென்று ரகசியமாக "வயசு கோளாறு, வயசான பிறகும் விடுதில்லை. புரிஞ்சுக்கிட்டியா. திரும்பப் போய், உன் ஹிட்லர் வேலையைக் காட்டு, இல்லை அவனுக்குக் கம்பெனி கொடுத்து, அவன் மனசில இருக்கிறதை வாங்கு. அது தான் உனக்கு டாஸ்க்" எனச் சொல்லவும், அவரை முறைத்தவர்,

 " போடா இவனே, நல்லா வாயில வந்திடும்" என்று விட்டு, தயாராக இருந்த காரில் கிளம்பினர் பால நாயகம் தம்பதியினர்.

அவர்கள் செல்வதையே பார்த்து நின்ற பவானியிடம், " ஒரு வழியா தேரை நகர்த்திட்ட. நம்ம எப்பமா மலை இறங்குகிறது" என்றார் ராமு. " அப்பா" என அதிர்ந்தார் பவானி.

கைலாஷ் ராஜனின் போனிலிருந்து, அதற்குள் இரண்டு முறை பால நாயகத்துக்குப் போன் அடித்து விட்டாள் ஆதிரா. முதல் முறை " பாபா, அஜோபா, ஐ மீன், தாத்தா நம்பர் கொடுங்க" என அலுவலக அறையில் வந்து நின்றவளிடம்,

 " புது நம்பரா இருந்தா, ட்ராவல்ல எடுக்க மாட்டார் கண்ணு " என்றவர், தனது அலைப்பேசியிலிருந்தே டயல் செய்து ஆதிரா கையில் கொடுக்க, 'ஹிட்லர்' எனச் சேவ் பண்ணியிருந்த பெயரைப் பார்த்து, பாபாவைச் செல்லமாக முறைத்தாள் ஆதிரா.

அதற்குள் அழைப்பை ஏற்றிருந்த, பாலா குரலை செருமிக் கொண்டு, " ஹலோ" எனவும்,

" அஜோபா, தாத்தா, நமஸ்தே. நான் ஆதிரா, பாபா போன்லிருந்து பேசுறேன். நீங்கள் கிளம்பிட்டிங்களா. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும். உங்களைப் பார்க்க ஈகர்லி வெயிட்டிங்" என அவள் படபடவெனப் பேசவும், பால நாயகத்துக்குப் பதிலே வரவில்லை.

" ஹலோ, நீ யாரும்மா. " எனக் குழப்பமாகவே கேள்வி எழுப்பினார். " நான் உங்க போதி, ஐ மீன் பாபா சாப் வீட்டில் இருக்கேன். நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு சொன்னாங்க, ஆபா ஐமீன் ஆத்தா பக்கத்தில் இருந்தா போனை கொடுங்க" என அவள் வழவழக்கவும்.

" போன் ஸ்பீக்கர்ல தான் மா இருக்கு, வண்டி சத்ததில கிழவிக்குக் காதில விழுகாது" எனச் சௌந்தரியை வம்பிழுத்தபடி பாலாச் சொல்ல, ஆதிரா சிரித்தாள்.

"ஆரைப் பார்த்து, கிழவி, காது கேட்காதுன்னு சொன்னீங்க. உங்களுக்குத் தான், போனை எடுக்கிறதுகுள்ள கை நடுங்குது" எனக் கணவரிடம் வம்பு பேசியவர்,

" ஆதிரா கண்ணு, நல்லா இருக்கியாடா " என விசாரிக்கவும், " நமஸ்தே ஆபா " என்றவள் பேச்சு, சரியாக விழாத போதும், செல்லி சொன்னது நினைவில் வந்து, " கண்ணு, இன்னைக்கு நீ தான் என் மகனுக்கு இட்லி ஊட்டி விட்டியாம்ல. என் மகனைக் கவனிக்க, எனக்கப்புறம், நீ ஒருத்தி இருக்கேன்னு எனக்குச் சந்தோஷம்டா" என முதல் பேச்சிலேயே, பேத்திக்கு, ஆத்தா நன்றியைச் சொல்ல, ஆதிராவின் கண்களில் கண்ணீர்.

" பாபாக்கு, பொண்ணு செய்யாமல் யார் செய்வா" என்றவள், கைலாஷ் தன்னையே பார்ப்பதை உணர்ந்து,

"நான் மட்டும் இல்லை, ஆபா, இந்தக் கம்பெனியே, பாபாக்கு பார்க்கும். அத்தனை பேருக்கு அவர் அப்பா. என் ஒருத்திக்குத் தான், அவருக்குத் திரும்பிச் செய்யச் சான்ஸ் கிடைச்சிருக்கு, அவ்வளவு தான்" என ஆனந்தக் கண்ணீரோடு சொல்ல,

" ரஜ்ஜும்மா, என்னடா இது" என ஆட்சேபித்தவர், " அம்மா, நீங்க என் மகளை அழ வைக்கிறீங்க. நேரா வாங்க பேசிக்கலாம்" எனப் போனை அணைத்தார். இவர்கள் பேச்சில், பெரியவர்கள் இருவருக்குமே ஆதிராவை பார்க்கும் ஆவல் வர, சௌந்தரி கணவரிடம், ஆதிரா பற்றித் தான் திரட்டி வைத்திருந்த தகவல்களைச் சொன்னார்.

கைலாஷ், ஆதிராவைப் பார்த்து, " இன்னும் ஒரு மணி நேரம் வந்துடுவாங்க. " என்றவர், " ஓ, நோ, " என அதிர்ந்து, " உன் ஆத்தா, சொன்னதைக் கேட்டியா. ஏதோ கருப்பு ஆடு போட்டுக் கொடுத்திருச்சுடா. ஆத்தா ஸ்மெல் பண்ணிடுச்சு டோய், இந்நேரம் எல்லாத்தையும் விசாரிச்சு இருப்பாங்க. போச்சு" எனப் பதறவும்.

" இவ்வளவு பயம் இருக்கவங்க, எதுக்கு அப்படிச் செய்யணும். நைட் நல்லாத் தான பேசிட்டு இருந்தீங்க" எனக் குறைபட்டாள்.

" நைட் பாருவை பத்தி பேசினமா கண்ணு, அதிலையே அங்க போயிட்டேன். சாரிடா" எனக் காதை இழுத்து அவர் மன்னிப்பு கேட்க,

" பாரு உங்களை ஏமாத்திட்டாங்களா பாபா. அவங்களும் உங்க கூட இல்லை. நீங்களும் வேற கல்யாணம் பண்ணிக்கலையே" என அவள் தூண்டில் போடவும்,

" பாரு, என் மனசில தாண்டா இருக்கா " எனப் பெருமூச்சு விட்டவர், " அது ஒரு பெரிய கதை டா. பாரு ஒருத்தி தான், இந்த ஜென்மத்தில் என் மனைவின்னு வாக்குக் கொடுத்திருக்கும் போது, அவளே இல்லைனாலும், அவளுக்குக் கொடுத்த வாக்கு இருக்கே, நான் எப்படி மறுகல்யாணம் பண்ணிப்பேன். " என அவர் எதிர் கேள்வி கேட்டார்.

அவள் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு, " அவங்க தான் இல்லைனு சொன்னீங்களே, அப்புறம் என்ன " என்றாள்.

" அது தான் சொன்னேனே வாக்கு கொடுத்திருக்கேன்னு, அது நான் அவளுக்குக் கொடுத்தது மட்டும் இல்லை. எனக்கு நானே கொடுத்தது. நான் இப்படி இருக்கிறது மட்டும் தான், எங்க காதலுக்கான சாட்சி" என அவர் சொல்லவும், அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவர் கன்னத்தில் முத்தமிட்டவள், " மஸ்து, படியா மஸ்து ஹை பாபா. உங்க லவ் தான் வேல்ட்'ஸ் பெஸ்ட். ஆனால் அந்தப் பாருவுக்குத் தான் கொடுத்து வைக்கலை" என உணர்ச்சி வயப்படவும்,

" ரஜ்ஜும்மா, இந்த டாப்பிக்கை இப்படியே விட்டுருவோமே" எனக் கெஞ்சலாகக் கேட்டார்.

" கடைசியா ஒரு கேள்வி, அதுக்கப்புறம் உங்கள்ட்ட எதுவுமே கேட்க மாட்டேன் " என்றவள், " ஒரு வேளை பாரு உயிரோட இருந்து உங்களைத் தேடி வந்தாங்கன்னா, ஏத்துக்குவீங்களா" எனக் கேட்கவும், விரிந்த கண்களோடு அவளைப் பார்த்தவர்,

" பாரு, உயிரோட இருந்திருந்தா, ஏன் என்கிட்ட வராமல் போகனும். அப்படி இருந்தா, அவள் என்னை நம்பலைனு தானே அர்த்தம். வேண்டாம், அப்படி ஒரு நாளை நான் பார்க்கவே வேண்டாம்" என நெற்றியில் கை வைத்து அழுத்திக் கொண்டவர்,

அவஸ்தையாக மூச்சு விடச் சிரமப்படுவது போல், செய்யவும், " பாபா, பாபா" எனப் பதறியவள், தண்ணீர் எடுத்துக் கொடுத்து, துளிர்த்த வியர்வைகளை, தன் துப்பட்டாவால் துடைத்து, " டாக்டரை கூப்பிடவா பாபா, நான் ஒருத்தி, இந்தப் பேச்சே எடுத்திருக்கக் கூடாது" எனக் கலங்கினாள்.

" ஒண்ணுமில்லைடா. ஐயம் ஓகே. " என எழுந்து நின்றவர், " பாரு இல்லைனாலும், அவளை நினைவு படுத்துற மாதிரி, நீ வந்திருக்கியே, அதுவே போதும். சீரியஸா, உங்க ஆயிட்ட பர்மிஷன் வாங்கு, நான் உன்னை அடாப்ட் பண்ணிக்கிறேன்" என அவள் தோள் மீது கைபோட்ட படிச் சொல்லவும்,

" அவுங்க என்ன பர்மிசன் கொடுக்கிறது, எனக்கு உங்களை விட்டு போறதா ஐடியாவே இல்லை. " எனக் கொஞ்சிப் பேசியபடி ஹாலுக்கு வந்தனர்.

" ஹிட்லர், வரும் போது, கார் வரைக்கும் போய் வாங்கன்னு கும்பிடு போட்டு கூப்பிடனும், இல்லையினாக்கும், அவரை மதிக்கலையின்னு பேசிப் போட்டு, ஆத்தாவையும் கூட்டிக்கிட்டு , அவர் வீட்டுக்கு போயிடுவார்" என அவளோடு பேசிக் கொண்டிருக்க, வாசலில் கார் வந்து நின்றது.

" சத்தியா" எனக் கைலாஷ் குரல் கொடுக்க, " வெளியே தானுங்க நிக்கிறேன்" என அவன் குரல் கொடுக்க,

" பாபா, இப்பச் சொன்னீங்களே, சலியே ,அவுங்களை ரிசீவ் பண்ணுவோம்" எனவும், " போலாம் வா" என இருவரும் வாசலுக்கு விரைந்தனர். சத்தியன் , பெரியவர்களுக்கு ஓர் வணக்கத்தோடு டிக்கியிலிருந்து லக்கேஜை இறக்க, மற்ற வேலைக்காரர்களும், பெரியவர்களை வணங்கி விட்டு வேலையைத் தொடர்ந்தனர்.

கைலாஷ் அம்மாவுக்கு, அவர் பக்க கார் கதவைத் திறந்து கைகொடுத்து இறங்க உதவி செய்ய, ஆதிரா, பாலநாயகம் பக்கம் சென்றாள்.

" வாங்கமா, பார்த்து இறங்குங்க" எனக் கை கொடுக்க, " ராஜா, உனக்கு ஒண்ணுமில்லையே" என மகனின் கையை, மார்பை, முகத்தைத் தொட்டுப் பார்த்து, கண் கலங்கினார்.

" அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க மா, சும்மா வாங்க" என்ற மகனிடம் அப்பாவைக் கண் காட்டி அழைக்கச் சொல்ல, அந்தப் பக்கம் இறங்கிய பால நாயகம், ஆதிராவை ஆச்சரியமாகப் பார்த்து நின்றார்.

" நமஸ்தே, அஜோபா" என அவர் கால்களில் பணிந்து எழு, " நல்லா இரும்மா" எனத் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்தவர், ஆதிராவின் கைகளை உறுதியாக பற்றிக் கொண்டு,

" சௌந்தி, இந்தப் பொண்ணைப் பாரு, சாயல் நம்ம பவானி மாதிரியே இல்லை" என உரக்கச் சொல்லவும்,

ஆதிராவை சரியாகக் கவனிக்காத சௌந்தரி, " உங்களுக்கு உங்க மருமகள் தான் கண்ணுக்குள்ளேயே நிற்கும். யாரைப் பார்த்தாலும் அதே மாதிரி தான் தெரியும்" எனச் சலித்துக் கொண்டவர் முன், பேத்தியை அழைத்துக் கொண்டு வந்து, நின்றார் பாலா .

" வாங்கப்பா" என்றார் ராஜன். ஆனால் அவரைப் பொருட்படுத்தாமல், " நான் ஒன்னும் பொய் சொல்லலை, இங்க பாரு" என நிறுத்த, ஏற்கனவே ஆதிராவை காணும் ஆவலிலிருந்த சௌந்தரி, " என் கண்ணு" என அவள் கண்ணத்தை வழித்துக் கொஞ்சியவர், " ஆமாங்க, நீங்க சொல்றதும் சரி தான். ஆனால் ஒரு சாயலுக்குப் பவானி மாதிரி இருந்தாலும், இன்னொரு பக்கம் நம்ம சங்கீதாளு மாதிரியும் தெரியுது" என ஆதிராவை ஆராய்ச்சி பார்வை பார்க்க, அவரின் காலிலும் விழுந்து எழுந்த ஆதிரா,

" ஆபா, உங்களுக்கு எப்படித் தோணுதோ, அப்படி வச்சுக்குங்க. நீங்க எனக்கு ஆபா , அஜோபா தான்" என முறைக் கொண்டாட, அவள் கையைப் பற்றிக் கொண்டே உள்ளே நடந்தவர்கள் " அதென்ன கண்ணு , ஆப்பா, அஜப்பான்னு சொல்ற" எனச் சௌந்தரி சந்தேகம் கேட்கவும்,

" அம்மா, ஆத்தா , தாத்தான்னு மராத்தியில் முறை சொல்லுது " என விளக்கம் தந்தபடி அழைத்துச் சென்றார் கைலாஷ்.

" நீ தமிழ்லையே கூப்பிடு கண்ணு. அப்பத் தான் மனசு நிறையும்" என ஷோபாவில் அமர்ந்தவர்கள், நடுவில் ஆதிராவை அமர்த்திக் கொண்டு கதைத்ததில் மகனையும் மறந்தார்கள்.

கைலாஷ், " சாப்பிட்டுப் போட்டு, வந்து உட்கார்ந்து பேசுங்க" என அழைக்கவும்,

" ஏன் கடமையை முடிச்சு, கை கழுவி கிளம்பனுமாக்கும். நீ போறதுன்னா போ. " எனப் பாலநாயகம், இதுவரை மகனிடம் காட்ட மறந்த தோரணையைக் காட்ட, கைலாஷ் அம்மாவைப் பார்த்தார். சௌந்தரி கண்களால் நயந்து அமைதியாக இருக்கும்படி கெஞ்ச

" தாத்தா, பாபா நீங்க வர்றீங்கன்னு, அவங்க ஷெட்யுலை மாத்திக்கிட்டாங்க. இது சாப்பிடுற டைம், சரியான நேரத்துக்குச் சாப்பிடனும். அதுக்குத் தான் சொல்றாங்க. வாங்கச் சேர்ந்து சாப்பிடுவோம். நான் இப்படி ஃபேமலியா உட்கார்ந்து சாப்பிட்டதே இல்லை" என ஆதிரா சலுகையாகக் கேட்கவும்,

" வா கண்ணு, சாப்பிடுவோம்" எனச் சௌந்தரி டைனிங்கை நோக்கி நடந்தவர், " செல்லி, இன்னைக்கு என்ன சமையல்" என அதிகாரம் செய்தபடி சமைத்த பதார்த்தங்களைப் பார்வையிட்டார்.

" ஏன், கிளம்பும் முன்ன போன் போட்டிங்களே, அப்ப மெனு என்னன்னு சொல்லலையாக்கும், உங்களுக்குத் தெரியாத இந்த வீட்டில் எதுவும் நடந்துரும்" எனக் கைலாஷ் கேள்வி எழுப்பவும், செல்லி விழுந்து அடித்துக் கொண்டு உள்ளே ஓடி, பரிமாற மற்றொருத்தியை அனுப்பினாள்.

" அந்தப் பேச்சை அப்புறம் வச்சுக்குவோம், இப்ப கம்முனு வந்து சாப்பிடு" என மகனை அடக்கிவிட்டு, சௌந்தரி மேஜையைக் கவனிக்க, ஆதிரா தாத்தாவோடு ப்ரண்ட் ஆகியிருந்தாள்.

இவர்கள் டைனிங்கில் அமர்ந்த நேரம், " அப்புச்சி, அம்மாயி, புதுசா பேத்தியைப் பார்க்கவும், என்னை மறந்திட்டீங்க பார்த்துங்களா" என உள்ளே நுழைந்தான் அபிராம்.

" அபு கண்ணு, ஓடியா, ஓடியா. அது எப்படி உன்னை மறப்போம். " என மூத்த ஜோடியினர் அவனையும் உணவு மேஜைக்கு அழைக்க, பேச்சுப் பெரியவர்களிடமிருந்தாலும், கவனம் ஆதிராவிடம் இருந்ததைக் கண்டு கொண்டனர்.

நிலவு வளரும்.


Tuesday, 25 January 2022

யார் இந்த நிலவு-15

 யார் இந்த நிலவு-15

ஆதிரா அவளது அறையில் உணர்வு குவியலாக அமர்ந்திருக்க, விஜய ரங்கன் அவளுக்கு அருகிலமர்ந்து அவளைத் தேற்றிக் கொண்டிருந்தார். அபிராம் அதே அறையின் வாசலில் நின்று, கையைக் கட்டிக் கொண்டு வெளியே ஒரு பார்வையும், தன் ஆராவுடன் பாசமாகப் பேசிக்கொண்டிருக்கும் அப்பாவை அனல் பார்வையுமாகப் பார்த்து, உள்ளே பொசுங்கிக் கொண்டிருந்தான்.

' இரண்டு பெரிசுகளும் சேர்ந்து, என் ஆராக்கிட்ட என்னை நெருங்கவே விடமாட்டிங்கிறாங்களே. இவிக தான் சண்டைக்காரங்களாச்சே, அப்படியே இருக்க வேண்டியது, ஓவர் செண்டிமெண்டால்ல இருக்கு. ' எனப் பொருமியவன்,

' அதுவும் எவ்வளவு ஹேப்பியா இருக்க வேண்டிய மூமெண்ட். இனி ஆராவோட சேர, எந்தத் தடையும் இருக்காதுன்னு சந்தோஷப்பட்டா, மாமாவுக்குப் பதிலா, அப்பா வந்து ப்ளேடு போடுறாரு' என மனதில் புலம்பிக் கொண்டிருந்தான்.

ஆதிரா சற்று முன்னர், காலை உணவை அவசரமாக முடித்துக் கொண்டு, தனது அலைப்பேசியைத் தேடியவள், பாபாசாப் அறையிலேயே விட்டுவிட்டு வந்தது நினைவில் வர, அதனை எடுக்கச் சென்றாள். அந்த நேரம் தான், கைலாஷும், விஜயரங்கனுமாக, போல்ஸே எனப் பேசிக் கொண்டிருக்க, ஊன்றி கவனித்தவளுக்கு,

 கைலாஷின் "பாரு" வேறு யாருமில்லை ,பைரவி பாய் போஸ்லே தான் என்பதும், தனது ஆயியின் நெற்றிக் குங்குமத்துக்குச் சொந்தக்காரர் கைலாஷ் ராஜன் தான் என்பதும், தன்னுடைய பெயரிலிருக்கும், கே என்பது கைலாஷை குறிப்பதும் , யாரை பாபாசாப் என அழைத்து, தான் அடைக்கலமாக வந்தாளோ, அவரே தன் தகப்பன் தான் என்பதும் புரிந்தது.

" பாபா. மேரே பாபா. என் அப்பா" என மெல்லச் சொல்லிக் கொண்டவளுக்கு மகிழ்ச்சியும், அழுகையும் போட்டிப் போட்டுக் கொண்டு வர, அடுத்து எப்படி எதிர்வினையாற்றுவது எனபது புரியாமல், வாயைப் பொத்தி வாசலிலேயே நின்று அழவும், அவள் பின்னாடியே வந்த அபிராம், " ஆரா, என்னடா" எனப் பதறினான். அவள் ஒன்றுமில்லை எனத் தலையை மறுப்பாக ஆட்டவும், " மாமாவுக்கு ஒன்னும் ஆகாது பயப்படாத" என அவன் தேற்றவும், தன் உணர்வு நிலையைத் தாங்க இயலாதவளாக, திரும்பி தனது அறைக்குள் ஓடிவிட்டாள்.

" ஆயி, பாபாசாப் தான், என் பாபாவா" என வாய்விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது, ஆனால் சத்தம் வெளியே வரவில்லை. ஆனந்தக் கண்ணீர் என்றும் வரையறுக்க இயலாத, உணர்வு நிலையில் அவளிருக்க, பின்னோடு வந்த அபிராம், " ஆரா" என அவள் கையைப் பற்றவும், குலுங்கி அழுதவள், தன் உணர்வு நிலை தாங்க இயலாமல் தவிப்பதைப் பார்த்து, அபிராம் அவளை அணைத்துக் கொள்ள, அவளுக்கும் தன்நிலையைப் பகிர்ந்து கொள்ளத் தேவைப்பட்ட நண்பனின் அணைப்பாய், அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

அவள் அழுகையிலேயே, மாமாவின் உடல்நிலைக்காக மட்டும் அவள் அப்படி அழ வில்லை என உணர்ந்தவன், அவள் முதுகைத் தடவிக் கொடுத்தும் , தன் தாடையை அவள் சிகையின் மீதி வைத்தும்,

" ஆரா பேபி, காம் டவுன். சில்டா . எதுவா இருந்தாலும், ஐயம் வித் யு" என அவளைத் தேற்ற, எவ்வளவு நேரம் அப்படி இருந்தார்களோ, மெல்ல தன்னிலையடைந்தவள், அவனை நிமிர்ந்து பார்த்து, " ராம், ராம் சார், பாபாசாப், பாபாசாப் தான்.." எனத் திக்கித் திணற, " ம் சொல்லு" என அவள் முகத்தில் விழுந்த கத்தை முடியை விலக்கியவாறே அவன் ஊக்குவிக்க, விஜயரங்கன் நாசூக்காகத் திறந்திருந்த கதவைத் தட்டினார்.

சட்டென இருவரும் விலக, " அப்பா, உள்ளே என்ன பேசுனீங்க. மொபைல் எடுக்க வந்தவ, வெளியே நின்னு அழகுறா " என அவரையே குற்றம் சுமத்தி அபிராம் கேட்கவும் , விஜயன் விசயத்தை யூகித்தவர் , ஆதிராவை நோக்கி, கண்களால் சிரித்து " உண்மை தெரிஞ்சிடுச்சா. அதுக்குப் போய் அழுவாங்களா. ஆயி பேசனுமாம். பேசிட்டு வா " எனபோனை நீட்டவும், தலையை மட்டும் அசைத்து அதை வாங்கியவள், தனது ஆயியிடம் படபடவெனப் பேசலானாள்.

மராத்தியில் "ஆயி, இவ்வளவு பெரிய உண்மையை மறைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது. அதுவும் நான் பாபாக்கிட்ட தான் இருக்கேன்னு தெரிஞ்சும், ஏன் மறைச்சீங்க. பாபாசாப் மாதிரி என் பாபா இருக்க மாட்டாங்களான்னு எவ்வளவு ஏங்கியிருப்பேன் மாஸி சொல்ற மாதிரி உங்களுக்குப் பத்தர் தில் தான். ஊரில் இருக்கவங்க எல்லாம் என் பாபாவை, உரிமையா அப்பான்னு கூப்பிடுறாங்க. நீங்கள் அதுலை கூட ஒரு கண்டிசன் போட்டிங்க. அப்படி உயிரைக் காப்பாற்றி, என்ன ஆயி பண்ணப் போறோம். ஒரு நாள்னாலும், என் பாபாவோட உரிமையோட வாழ்ந்துட்டு போகலாமே. உங்கள் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்காங்க. அதைக் கூட அனுபவிக்காமல் இருக்கீங்களே ஆயி. இப்பவும் எனக்கு அதே கட்டு தானா. பாபாட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லப் போறீங்களா" என அவள் பொரிந்து தள்ளிவிட்டுத் தேம்பி அழவும் ,மறுபுறம், பைரவி பேச்சற்றுப் போனார். விஜய ரங்கனுக்கு விசயம் புரிந்தது. அபிராமுக்கு, அவள் தனது அம்மாவிடம் பேசுகிறாள் என்பது வரை மட்டுமே புரிந்தது.

ஆதிரா, வெடித்து அழவும், விஜயரங்கன் உள்ளே வந்தவர், அவள் கையிலிருந்து போனை வாங்கியவர், " தங்கச்சிம்மா, சின்னப் பொண்ணு பேசறதை பெரிசா எடுத்துக்காதீங்க. அது இடத்திலிருந்தா, நாமளும் இப்படித் தான் இருப்போம்" எனச் சமாதானம் பேசவும்,

" இல்லை பாய்சாப், என் பொண்ணு பேசறதில எனக்குக் கோபமே வரலை. எங்களுடைய துரதிர்ஷ்டமான விதியை நினைத்துத் தான் நொந்துக்குறேன். இனி ரஜ்ஜும்மாவை தடுக்கப் போறதில்லை. அவளே முடிவெடுக்கட்டும்.. இன்னைக்கு எனக்குப் பேச்சுக் கேட்கிற நாள். முதல்ல ராஜ் இப்ப அவர் மகள். இன்னும் என்னன்ன பார்க்கப் போறனோ.நான் அப்புறம் பேசுறேன். அவளைக் கொஞ்சம் பார்த்துக்குங்க. ராஜ் மாதிரியே பயங்கர எமோசனல். இனி நீங்க தான் சமாளிக்கனும் " எனப் பொறுப்பை விஜயனிடம் தந்துவிட்டுப் போனை வைத்து விட, விஜயன் ஆதிராவை ஒரு ஷோபாவில் அமர வைத்து, மகனை அவளுக்குத் தண்ணீர் தரச் சொன்னார்.

அவள் சிகையை வாஞ்சையாகத் தடவியவர், " பொண்ணு மயிலு, அப்படியே, என் ராஜன் போகாமல் வந்திருக்கடா" என்றார். அபிராம் வற்புறுத்தலில் இரண்டு மடக்கு தண்ணீரைக் குடித்தவள், "பாபாசாப் என்ன பண்றாங்க. உங்களுக்கு நான் யாருன்னு முதவே தெரியுமா" என வினவினாள். ஆம் எனத் தலையை ஆட்டியவர்,

" உன் அப்பா, ஒரு ஆட்டம் காட்டிட்டு இப்பத் தான் தூங்குறான். அடுத்து மகள். எல்லாரும் சேர்ந்து என் தங்கச்சிமாவை இப்படிப் படுத்துறீங்களேடா" எனச் சிரித்தார். மூக்கை உறிஞ்சியவள், " போங்க அங்கிள் ஆயி தான் எங்களைப் பிரிச்சு வச்சு டார்ச்சர் பண்றாங்க" எனக் குற்றம் சுமத்தியவள்

" நீங்களே சொல்லுங்க அங்கிள். நான் என் பாபாவுக்காக எவ்வளவு ஏங்கியிருப்பேன், அவர் கூடவே இருந்தும் அவர் தான் என் அப்பான்னு எனக்குத் தெரியாததை விட என்ன கொடுமை இருக்கும். இன்னும் பாபா சாப் ரொம்பப் பாவம்,இப்படியொரு முல்கி இருக்கிறதே அவ்ருக்குத் தெரியாது, இதுக்கெல்லாம் காரணம் ஆயி தானே " என ஞாயம் கேட்கவும்,

" நீ சொல்றதிலையும் ஞாயம் இருக்கு. நான் இல்லைனு சொல்லலைக் கண்ணு. ஆனால் உங்க ஆயி நிலைமையிலிருந்தும் யோசிக்கனுமா இல்லையா. உன் பாபா மேல வச்ச காதலுக்காக, வாழ்க்கை பூரா போராடிட்டுத் திரியிறாங்களே" என எடுத்துச் சொல்லவும், ஆதிரா தலையைக் குனிந்து மௌனமாக, அபிராம் பொறுமை இழந்தான்.

" டாட், ஆரா நம்மகிட்ட அழுகுறா, அவங்க அம்மாட்ட கோவப்படுறா, நீங்க சமாதானம் செய்யறீங்க. என்னனாவது வெளிப்படையா சொல்லுங்க. எனக்குத் தலையும் புரியலை, காலும் புரியலைங்க" என அபிராம் புலம்பவும்,

" இவனுக்குச் சொல்லிடுவோமா. பாவம் பொழைச்சு போகட்டும். ஆனால் கொஞ்சம் அட்வாண்டேஜ் எடுத்துக்குவான். நீ சமாளிச்சுக்குவேன்னா, நான் சொல்றேன் " என விஜயன் கேலி பேச, ஆதிராவின் அழுத முகத்தில் புன்னகை அரும்பியது.

" மாமனும், மருமகனும் இவ்வளவு க்ளோசா இருக்கீங்களே, உன் மாமன், என்னைக்காவது தனக்குக் கல்யாணமான விசயத்தைச் சொல்லியிருக்கானா?" என மகனைச் சவாலாகவே கேட்டார் விஜயன்.

அபி, " கல்யாணத்தைப் பத்திச் சொன்னதில்லை, ஆனால் அவர் மனசிலிருக்கவிகளைப் பத்தி சொல்லியிருக்கார், பாரு ஆன்டி " எனவும்,

" அவிக தான், உன் மாமன் மனசிலருக்கவிகளைத் தான் கல்யாணம் கட்டிக்கிட்டார். உன்ற மாமன் மகள் தான் ஆதிரா. " எனக் காதில் தேன் வந்து பாய்வது போல் ஒரு விசயத்தைச் சொல்லவும், " என்னது" எனக் கண்களை அகற்றி ஆச்சரியமாகக் கேட்டவன், தன்னை மறந்து, இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்து விட்டு, துள்ளிக் குதித்தான்.

'வாவ், சூப்பர், மருதமலை முருகன், இவ்வளவு சீக்கிரம் வேலையைக் காட்டுவான்னு நினைக்கலையே. ' என அகம் மகிந்தவன்,

" சூப்பரு, அதுதானுங்களா, மாமா வர்ணிச்ச மாதிரியே ஒரு பொண்ணைப் பார்க்கவும் ஷாக்காயிட்டேன். ஆரா , மாமா சொன்ன மாதிரி பொண்ணுன்னு நினைச்சேன். மாமா மகளேவா. சூப்பர், சூப்பர். " என அவளருகில், வந்து மீண்டும், மீண்டும் அவளைப் பார்த்தவன், கட்டியணைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்க முடியாமல் விஜயன் நிற்பதை அவஸ்தையாகப் பார்க்க, ஆதிராவுக்குச் சிரிப்பு வந்தது.

அவள் கைகளை மட்டும் பற்றி, " ஐ யம் ஸோ ஹேப்பி, இது குறைச்சலான வார்த்தை. எப்படிச் சொல்றது" என அவளைத் தோளோடு அணைத்து "ஹேப்பி டியர் " எனப் பரபரத்தவன், மேலும் அவளை நெருங்க,

" அபி " என்றார் விஜயன். " ஓகே பா. மாமா வந்திடப் போறார். போய்ப் பாருங்க " என அவரை அங்கிருந்து அகற்றும் வழியை அவன் தேடவும்,

" அப்படியெல்லாம் வரமாட்டான். அவன் தூங்குறான்" என்றவர் முன்னெச்சரிக்கையாக," ஆனால் நம்பவும் முடியாது, பூனையாட்டமா வந்து நிற்பான்" என அறை வாசல்வரை சென்று வராண்டாவில் எட்டிப் பார்க்க, அந்தக் கேப்பிலேயே,

"ஐயம் ஸோ ஹேப்பிடா என் ரசகுல்லா, ப்யூட்டி ப்யூலா " என்ற அபிராம் சட்டென அவள் கன்னத்தில் அவசரமான இதழொற்றலையும் தந்தவன்,

" இனி எப்படி என் மாமா குறுக்க நிற்கிறாருன்னு பார்க்கிறேன். இனி ரைட் ராயலா உன்னை லவ் பண்ணுவேன்" என அவள் காதில் கிசுகிசுக்க, ஆதிரா கன்னங்கள் சிவந்து, மயிர்க்கூச்செறிய அவன் அதிரடியில் அதிர்ந்து நின்றாள்.

" அபி, நீ இந்தப்பக்கம் வந்து நில்லு, மாமா வர்றானான்னு பார்த்துக்க, நான் ஆதிராக்கிட்ட முக்கியமான விசயம் பேசணும் " என விஜயன் அழைக்கவும், தகப்பனை முறைத்துக் கொண்டே, " அவர் போகவுட்டி உன்கிட்ட நிறையப் பேசனும்" என்று விட்டு, அறை வாசலுக்குச் சென்று நிற்க, இத்தனை நாள் ஜென்டில்மேன் வேசம் போட்டவன், இன்று இப்படி ஒரேதாக உருகுவதிலேயே, கண்ட நாள் முதலாய் அவன் மனதில் தானிருப்பதை உணர்ந்துக் கொண்டாள் ஆதிரா.

விஜயன் ஆதிராவின் அருகில் வந்து அமர்ந்தவர், " நான் சொல்றதை , பொறுமையா கேட்டுட்டு முடிவெடுடா கண்ணு" என்ற பீடிகையோடு ஆரம்பித்தார்.

கைலாஷ், பாருவை நேசித்தது, அவரே பைரவி பாய் எனப் பின்னர் அறிந்தது. அவருக்காகச் செல்வாக்கான பெரிய குடும்பத்தை எதிர்த்து நின்றது. ஜெயந்துடனான பைரவியின் திருமணத்தைத் தடுத்து, சாகசமாகக் கைலாஷ், பாருவை மணமுடித்தது. அவர்களுடைய சந்தன் கட்டில் இரண்டு மாத கால வாழ்க்கை , பின்னர்க் கைலாஷ் பிரிந்து சென்றது, பைரவிக்கு நேர்ந்தது , ராஜியுடனான திருமண ஏற்பாடு, கைலாஷ் மறுத்தது இங்கு நடந்தது என விஜய ரங்கன் அவர்கள் இருவரும் அறிய வேண்டிய விசயங்களை மட்டும் சொன்னவர்.

" உன் ஆயி, உண்மையை மறைச்சு வாழறதுக்கு, அவுங்க குடும்பப் பின்னணியும், காரணமும் இருக்கு. அதில நம்ம தலையிட முடியாது. ஆனால் ராஜாக்கிட்ட இப்ப நீதான் அவன் பொண்ணுன்னு சொல்றது, திடீர் அதிர்ச்சி தரும். அவனுடைய ஹெல்த்துக்கு நல்லதில்ல. அவனுக்கும் சந்தேகம் வந்திடுச்சு, இனி சும்மா இருக்க மாட்டான். இப்பவே ஏதோ வேலையை ஆரம்பிச்சுட்டான். போற போக்குலையே போகட்டும் கண்ணு. தெரியும் போது தெரியட்டும். விளைவுகளைச் சமாளிச்சுக்குவோம்" என அவர் அறிவுரை வழங்கவும்

" சரிங்க அங்கிள்" என அவள் அரைகுறையாகத் தலையை ஆட்ட, அபிராம் மாமனின் கதையைக் கேட்பதில் மெய்மறந்து நிற்க, டிப் டாப்பாகத் தயாராகி வந்த ராஜனைக் கவனிக்கவில்லை.

" ஏனுங்க மாப்பிள்ளை, என் மகள் ரூம்பு வாசல்ல உங்களுக்கு என்னங்க வேலை" எனத் திரும்பி நின்ற அபிராம் முதுகில் ஓங்கித் தட்ட, அதை எதிர்பாராதவன், " ம்ப்ச்" எனக் கோபமாகத் திரும்பியவன் , மாமனைப் பார்க்கவும் அசடு வழிந்து நிற்க, உள்ளே விஜயனையும் பார்க்கவும், " என்னங்கடா" என அபியைத் தாண்டிக் கொண்டு உள்ளே வந்தார் ராஜன்.

ஆதிரா அவரைப் பார்க்கவுமே, இத்தனை நேரம் விஜயன் ஓதிய அறிவுரை எல்லாம் காற்றில் பறக்க, " பாபா" என அழுகையோடு ஓடி வந்து அவரைக் கட்டிக் கொண்டாள். இத்தனை நாள் இல்லாமல் ஆதிராவின் அழைப்பிலும், அணைப்பிலும் வித்தியாசத்தை உணர்ந்தவர், தனது உடல்நிலை குறித்துத் தான் அவள் கலங்கியிருக்கிறாள் என நினைத்தவராக, " என்னடா ரஜ்ஜும்மா, அப்பா நல்லா இருக்கேன். எனக்கு ஒன்னுமில்லை. " எனக் கட்டியணைத்துக் கொள்ள, அவர்களைப் பார்த்து நின்ற அப்பா, மகன் ஜோடிக்குத் தான், ஆதிரா அதிரடியாக உண்மையைச் சொல்லிவிடுவாளோ என டென்ஷன்.

ஆதிரா உதிர்த்த கண்ணீர்த் துளிகள், அவர் சட்டையை நனைக்க, " என்னடா, ஒன்னுமில்லை கண்ணு . அழக்கூடாது" எனக் கைலாஷ் அவளைத் தேற்ற முயல,

" போங்க, நான் பாபான்னு கூப்புடுறதால தான் உங்களுக்கு முடியாமல் போச்சு. நான் அன் லக்கி கேர்ள். நான் என் ஆயிக்கிட்டையே போறேன்" எனக் குலுங்கி அழவும். பதறிப்போன கைலாஷ்,

" ரஜ்ஜும்மா, இல்லைடா, இல்லைடா. நீ பாபாக்கு ராசியான பொண்ணு தான். நீ வரவும் தான், இத்தனை வருஷம் என் வூட்டில வந்து தங்காத, என் அப்பாவே வந்து தங்குறேன்னு வர்றாரு. நீ அவரையும் அமுக்கிப் போடு. அப்பத் தான் ஆத்தாளை கூட்டிட்டு எங்கையும் போக மாட்டார். என் வைரமில்ல, பாபாவை விட்டுட்டுப் போகாதடா" என மகளை நயந்து பேசவும்.

ஆதிராவை முந்திக் கொண்டு பதில் சொன்ன விஜய ரங்கன், " ஹேங், மகள் வூட்டை விட்டுப் போகக் கூடாதுன்னு நினைச்சியாக்கும், கண்ட கருமத்தைக் குடிக்கிறதை நிறுத்து. அத்தையும், மாமாவும் வர்றாங்க. உன் வாலை சுருட்டிக் கிட்டு, ஒழுக்கமான பையனா நடந்துக்க" எனவும், அபிராம் கக்கவெனச் சிரிக்க, ராஜ் அவனை முறைத்தவர்,

" ஏன்டா, அப்பனுக்கும், மவனுக்கும் பொழைப்பு, தழைப்பு ஒன்னும் இல்லையாக்கும். இங்க உட்கார்ந்து பஞ்சாயம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இந்தச் சந்தில சிந்து பாடுற வேலையெல்லாம் வேணாம். ஆமாம் சொல்லிப் போட்டேன். ரஜ்ஜும்மா , நீ இவிக பேச்சைக் கேட்காத கண்ணு." எனவும்

" உன் மாமனுக்கு லொள்ளைப் பார்த்தியா. இனிமே நீயோ, சத்தியனோ, இவன் எங்கையாவது மயங்கி கிடக்குறான்னு போன் போட்டிங்க. பிச்சுப் போடுவேன்" என்றார் விஜயன்.

" இப்படித் தான் ஒவ்வொருவாட்டியும் சொல்லிட்டுப் போற. அப்புறமும் நீ தான் வந்து நிற்கிற. போடா போ" என நண்பனைத் திட்டிய கைலாஷ், ஆதிராவிடம், " பாபா எப்பவும் ஒழுக்கமாத் தான்டா கண்ணு இருப்பேன். இவிக தான் சும்மா பில்டப் விடுறாங்க . ஆனால் என்னை விட மதியத்துக்கு உன் தாத்தன் தான், வருவார் பார், ம்ம்… சரியான ஹிட்லர். நம்ம ஆத்தா தங்கமான மனுசி. உனக்கு நல்லா பொழுது போகும்" என மகளைக் கை வளைவில் அழைத்துக் கொண்டே வெளியே நடக்க, அப்பா மகன் ஜோடியும் பின் தொடர்ந்தனர்.

" ஏனுங்க மாமா, அப்பா, நீங்க தூங்குறீங்கன்னு சொன்னாரு, அதெப்படி அரை மணி நேரத்தில் ரெடியாகி வந்துட்டிங்க." என அபி வினவவும்.

" எங்கிருந்து தூங்கிறது. இங்கிட்டு இவன் வரவுமே,என் தாய் மாதா போன் அடிச்சிடுச்சு. அதென்ன மதியத்துக்கு மேல வரச்சொன்னியாமாம். ஏன் மதியத்துக்குச் சோறு போட மாட்டியான்னு, ஒரே பேச்சு. அவிக பேச்சிலையே என் ம.. " எனச் சொல்ல வந்தவர், ஆதிராவை ஓரப் பார்வை பார்த்து விட்டு, மப்புவை முழுங்கி விட்டு, " எல்லாம் இறங்கிடுச்சு" என்று மட்டும் சொன்னார்.

விஜயனுக்கு , கைலாஷின் இந்த மாற்றமே திருப்தியைத் தர, " கிளம்புறேன்டா" என்றார்.

" அங்கிள் , சாப்பிட்டுப் போகலாம்" என ஆதிரா உரிமையாக அழைக்க, " இருக்கட்டும் கண்ணு, இன்னும் நேரமிருக்குது. சாய்ந்திரம், அத்தையையும், ரஞ்சியையும் கூட்டிட்டு வர்றேன். " என்றவரை, ஜூஸாவது குடித்துச் செல்ல வேண்டும் என வற்புறுத்தி, செல்லியிடம் சொல்லி, எல்லாருக்குமாக ஆப்பிள் ஜுஸைக் கொண்டு வந்தாள்.

வயிறும், மனமும் குளிர்ந்து, நண்பன் வாழ்வு இனிமேலாவது சீராகட்டும் என விஜய ரங்கன் கிளம்ப, அபிராம், ஆதிராவிடம் கண்ணாலே விடை பெற்று தனது வேலையைப் பார்க்கச் சென்றான்.

கைலாஷ் கிளம்பியவரை, " அஜோபா ,ஆபா வரும்போது, நம்ம இங்க தான் இருக்கனும். நீங்க அவுங்களுக்குப் போன் போடுங்க. பக்கத்தில் வந்திட்டாங்கன்னா, சேர்ந்து சாப்பிட்ட பிறகு ஆபீஸ் போகலாம்" என ஆதிரா கட்டளைப் பிறப்பித்து விட, " ஓகே, ப்ரின்ஸஸ் கட்டளைக்கு ராஜா அடி பணிகிறார்" என வீட்டோடு இருந்த ஆபீஸ் அறைக்குக் கோப்புகளைக் கொண்டு வரச் சொல்லி பார்த்துக் கொண்டிருந்தார் கைலாஷ்.

ஆதிரா, தனது தந்தை வழி தாத்தா, ஆத்தாவைப் பார்க்க ஆவலோடு காத்திருந்தாள்.

நிலவு வளரும்.

யார் இந்த நிலவு -13

 யார் இந்த நிலவு -13

" ஆயி துல்ஜா பவானி, என்னை எங்கக் கொண்டு வந்து நிறுத்தியிருக்க. எனக்குச் சோதனை வர்றது சரி. என்னை நினைத்த பாவத்துக்கு இவருக்கும் சோதனையைக் கொடுக்காத. அப்பா, அம்மா, தங்கைகள்னு சின்னக் கூட்டில் வசிக்கிறவர். இந்த வம்சத்து வாள் அவர்கள் மேல் பட வேண்டாம்" என மனதில் வேண்டியபடியே, பாதையைக் கூறியவர், வழக்கமாகச் சோலாப்பூரிலிருந்து வெளியேறும் வழியில் இல்லாமல், வேறு வழியாக , இன்று பெல்காம் செல்லும் லோடு வண்டியில் , இவர்களை ஊரை விட்டு வெளியேற்றும் யோசனையில் , பைரவி இருக்க,

" பாரு, இவ்வளவு டென்ஷனாக எதுவுமே இல்லை. அமைதியா வா" எனக் கைலாஷ், ஒரு கையால் காரை ஓட்டியபடி இடது கையால், பாருவின் வலது கரத்தை அழுத்தி தைரியம் தர, மற்றொரு கையால் அவர் கையைப் பற்றிக் கொண்டவர், " பாபா இருக்கும் போதே உங்களைத் துல்ஜா பவானி காட்டியிருந்தால் நல்லா இருந்திருக்கும் ராஜ் " என வருந்தியவர் கண் மூடி கைலாஷின் அருகாமையைத் தன்னுள் பதிய வைத்துக் கொள்ள முயன்றார்.

ஒரு கையாலேயே லாவகமாகக் காரை செலுத்திய கைலாஷ், பாரு கண் அயர்ந்து மோன நிலையிலிருந்த நேரத்தை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, வண்டியை விரட்டிச் சென்று ஒரு மாளிகையின் முன் நிறுத்தினார்.

கண் திறந்த பைரவி, போஸ்லே மாளிகைக்குள் தங்கள் கார் இருப்பதைப் பார்த்து, பதட்டமாக, "இங்க எதுக்கு வந்தீங்க" எனவும், " விஜயா, கீழ இறங்கு" என நண்பனைக் கட்டளையிட, அவரும் இவர்களுக்குத் தனிமை கொடுத்து கீழே இறங்க, அடுத்தக் கணம்,

பாருவை தோளோடு சேர்த்து அணைத்த கைலாஷ். அவர் பக்கம் நன்றாகத் திரும்பி அமர்ந்து கொண்டு, அவர் முகத்தைக் கைகளில் ஏந்தியவர், பதட்டம் நிறைந்து, அலைபாயும் கண்களோடு இருந்தவரை, நேராகப் பார்த்து, தன உறுதியை, தன இணையிடமும் நிறைப்பவர் போல், " இந்தக் கண்ணில், கண்ணீரையோ ,பதட்டத்தையோ பார்க்க எனக்கு விருப்பமில்லை. எப்பவுமே அது வாளின் கூர்மையோடு ,என் நெஞ்சைகிழிச்சு, தன காதலை மட்டும் தான் சொல்லணும்" என அவர் நெற்றியில் இதழொற்றினார்.

பாரு, இது இன்னும் எத்தனை நேரத்துக்கோ, என் தன கண்களை மூடி, கைலாஷை உணர்ந்து கொண்டிருக்க , மூடிய விழிகளின் இமைகளிலும், சாவகாசமாய் இதழ்களை நகர்த்தி, தனது காதலை உணர்த்த, பாருவும் ,அவரை இறுக்கமாகத் தழுவியவர், "நீங்க குடியிருக்க , என் மனசில வேற யாருக்கும் இடமில்லை ராஜ். ஐ லவ் யு. ஆனால் அதுவே உங்களுக்கு ஆபத்தா அமையக்கூடாது, இங்கிருந்து கிளம்புங்க.நான் சமாளிச்சுக்குவேன்" என அவர் மேல் காதல் வழிய , அக்கறையாகச் சொல்லவும்,

நேராகப் பாருவின் கவனத்தைத் தன மேல்குவித்துக் கொண்ட ராஜன் "வாழ்வோ, சாவோ உன்னோட தான். நீயும் அதே உறுதியோட இரு. " என்றவர், தன் கழுத்திலிருந்த, KR என்ற ஆங்கில எழுத்து அடங்கிய தங்கச் சங்கிலியைக் கழட்டி பாருவுக்கு அணிவித்து விட்டவர், வா எனக் கையோடு கை கோர்த்தே இறங்கினார்.

இவர்களுக்கு முன்பே, ஜெயந்த் வீட்டில் வந்து ஒரு ஆட்டம் ஆடியிருக்க, பைரவியின் தாய் ரமாபாய், வாசலையே பார்த்தவாறு, இரண்டாம் கூடத்தில் உலாவி கொண்டிருந்தார்.

போஸ்லே மாளிகை நன்கு நெடிந்துயர்ந்து பல ஏக்கர் பரப்பளவில் கோட்டை போல் கம்பீரமாக நின்றது. முன் வரண்டாவே ஏழு விசாலமான படிகளை ஏறி கடந்து செல்ல வேண்டியிருந்தது. ராஜவம்சம் என்று தங்களை நிரூபித்துக் கொள்வதற்காகவே , அரண்மனை போல் மாளிகையைக் கட்டியிருந்தனர்.

பொதுவாக, கோலாப்பூரில் தான் இவர்களது ஆகி வந்த மாளிகை இருந்தது. சோலாப்பூரில் மில் கட்டும் போதே, இந்த மாளிகையையும் கட்டியிருந்தனர். ஸ்ரீபத்ராய் குடும்பம் இன்னமும் கோலாப்பூரிலிருக்க, கனபத்ராய் குடும்பம் தான் இங்கே வசித்தது. கனபத்ராயின் இரண்டு மனைவிகள், இரண்டு மகள்கள், சகோதரி குடும்பம் எனப் பெண்கள் கூட்டம் தான் அதிகம். ஆனால் மாளிகையை நிர்வகிக்கவே தனியாகக் காரியதரிசி, சமையல்காரர்கள், வேலையாட்கள், தூரத்து உறவினர்கள் என மாளிகை நிறைந்தே இருக்கும்.

கனபத்ராயின் மூத்த மனைவி பிரபா பாய் மராட்டியத்தைச் சேர்ந்தவரெனில், இளையவர் ரமா பாய் தஞ்சையைப் பூர்வீகமாகக் கொண்ட மராத்தியர். அதனால் தான் பைரவியும் நன்கு தமிழ் பேசுவார். பிரபாபாய்க்கு, முதல் பெண்மகள் பவானி பிறந்தவுடன் கர்ப்பப்பை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அதனை அகற்றி விட, ஆண் வாரிசு வேண்டும் என அவரது தூரத்து உறவினரான ரமாபாயை இரண்டாவதாக மணம் முடித்தனர். ஆனால் ரமாபாய்க்கும் ஒரு பெண்குழந்தை மட்டுமே பிறக்க, கனபத்ராய் ஆண்குழந்தை கனவை கை விட்டு, இளைய மகளுக்கே தொழில் கற்றுக் கொடுத்து, தனது மில்லை நடத்தப் பயிற்சி கொடுத்தார்.

மூத்த பெண் பவானியை , வேறு வழியின்றி , சொந்தம் விட்டுப் போகக் கூடாது என அக்காள் மகன் ஜெயந்துக்கே மணமுடித்துக் கொடுத்தார். ஜெயந்த் இளமையில் பணத்தோடும், பகட்டோடும் திரிந்த ஆசாமி. எல்லா விதமான பழக்கங்களும் உண்டு. பவானி , ஜெயந்துக்கு அடங்கிப் போய், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயாகி விட, மாமனின் பாடத்தை மருமகனும் திரும்பப் படித்தான்.ஆண் வாரிசு வேண்டும் எனப் பைரவியை மணமுடிக்கத் துடித்தான்.

ஜெயந்தின் அடாவடித்தனங்களைப் பார்த்த, பைரவிக்கு எப்போதுமே அவனைப் பிடிக்காது. அக்காவுக்காக ரே மாளிகையில் சகித்துக் கொண்டார். தங்கள் மாளிகையிலிருந்தால் தான் அவருக்கான கொடுமைகளாவது கட்டுக்குள் இருக்கும் எனப் பெரிய மகளைக் கனபத்ராய் அங்கேயே வைத்துக் கொள்ள, அக்காள் குடும்பமே வந்து டேரா போட்டது.

இவர்கள் அடாவடித்தனங்களில் மனம் நொந்துபோய், கனபத்ராய் சிக்கலான ஓர் உயிலை எழுதி வைத்து விட்டு, பேரன் பேத்திகள் வரை சொத்தை கொண்டு சேர்க்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டே கண்ணை மூடினார். அதனை அறிந்ததிலிருந்து ஜெயந்த், பைரவியை மணமுடிக்கத் துடித்துக் கொண்டிருந்தான். தந்தை இறந்து ஒரு வருடம் ஆகாமல் மகளுக்குத் திருமணம் முடிக்கக் கூடாது என்ற சம்பிரதாயத்துக்குக் கட்டுப் பட்டுக் காத்திருந்தான்.

ஆனாலும் , ஶ்ரீபத்ராயின் புதல்வர்கள், ஆனந்த், முகுந்த் என இருவரும் ஜெயந்த் எடுக்கும் முடிவுகளுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்க, பைரவி அவர்களை ஆதரித்தார். அதில் ஜெயந்தின் பொறுமை எல்லை மீற, பைரவியை வழக்கம் போல மிரட்டவே வந்தான். பைரவி நிமிர்வாக முறைத்து நிற்க, கையைப் பிடித்து இழுத்து அராஜகத்தை அரங்கேற்ற முயன்றான். அந்த நேரம் கைலாஷின் கண்களில் இந்தக் காட்சி பட்டு விட விசயம் வேறு விதமாகத் திசை திரும்பி விட்டது.

கோபத்தோடு மாளிகைக்குச் சென்ற ஜெயந்த், தான் பைரவியிடம் முறை தவறி நடந்ததை மறைத்து, ஒரு தொழிலாளியைக் காதலிக்கிறாள் என மட்டும் பற்ற வைத்து, ஸ்டேட்டஸ் பிரச்சனையைக் கிளப்பி விட்டிருந்தான்.

ரமாபாய்க்கு மூத்த மருமகனின் லீலைகள் அத்தனையும் தெரியும். மகளை இவனிடமிருந்து, எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றே சமயம் பார்த்திருந்தார். தன்னைப் போல் மகளும், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப் படுவதை அவர் விரும்பவில்லை. அதுவும் கனபத்ராயாவது நல்ல மனிதர். ஜெயந்த் எல்லா விதத்திலும் மோசமானவனாக இருக்க, மகளுக்கு ஆதரவாக நின்றார்.

மாளிகை வாசலில் காரை நிறுத்தி விட்டு, தன் மகளைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு, தொழிலாளி சீருடையில் வந்த இளைஞனைப் பார்த்து, ரமாபாய்க்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தார். நெடுநெடுவென உயர்ந்து அளவான தேகக் கட்டோடு இருக்கும் இவனெங்கே, ராட்சதன் போல் உடலையும் சேர்த்து வளர்த்து நிற்கும் ஜெயந்த் எங்கே. ஒத்தைக்கு ஒத்தை நின்றாலும் ஓரடி தாங்க மாட்டான். இவ்வளவு படை பலத்துக்கிடையில் என்ன செய்ய இயலும். பைரவி தான் சிக்கியது இல்லாமல் இந்த இளைஞனையும் சிக்க வைத்து விட்டாளே என்ற கோபமே வந்தது. ஆனால் வந்தவன், தான் தனி ரகம் எனக் காண்பித்தான்.

ராஜன் பைரவியோடு படியேறியவர், எதிரில் நிற்பவரை உன் அம்மாவா எனக் கேட்டு, அவர் ஆம் எனத் தலையாட்டவும், நேராக அவரிடம் வந்தவர், பைரவியோடு அவரது கால்களைத் தொட்டு வணங்க, "ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா " எனக் கொங்கு தமிழில் கேட்கவும், " நல்லா இருங்க" எனத் தன்னையறியாமல் தமிழில் வாழ்த்தினார் ரமாபாய்.

ஓர் புன்னகையோடு, நிமிர்ந்து நின்று, அவர் முன் கை கூப்பியவர், " உங்க பொண்ணை நான் விரும்புறேன். இந்த ஜென்மத்தில் எனக்கு மனைவி அவள் மட்டும் தான். உங்களாட்டம் நான் மாளிகையில வசிக்கலைன்னாலும், அவளுக்காக மாளிகை கட்டுவேன். உங்க மகளைச் சந்தோஷமா வச்சுக்குவேன். முறைப்படி கல்யாணம் செய்து கொடுங்க" எனக் கேட்டார். 

ரமாபாய் ஆச்சர்யமாக, அந்த இளைஞனின் பேச்சையும்,அவர் தைரியத்தையும் பார்த்தவர்,மகளை நிமிர்ந்து பார்த்து, "பவி, என்ன இது " எனக் கேட்க, " சரியா தான் கேட்கிறாங்க "எனப் பைரவி தலையைக் குனிந்து, தனக்கும் சம்மதம் என்பது போல் நிற்க , வரிசையாக மாளிகை அங்கத்தினர்கள் அங்கே கூடினர்.

" உனக்கு எவ்வளவு தைரியமிருந்தா, இங்கேயே வந்திருப்ப. எல்லாம் இவள் கொடுக்கிற தைரியம். உன்னைப் போல ஒரு தொழிலாளி ஒரு நாளும் இந்த மாளிகைக்குத் தாமாத் ஆக முடியாது" என ஜெயந்த், ரமாபாயை முந்திக் கொண்டு பேசவும்,

" அதை என் பாருவும், ஐ மீன் பைரவியும், அவ அம்மாவும் சொல்லட்டும்" என்றார் ராஜன். மூத்தவர் பிரபா பாய், இருவரும்,இது என்ன புது வம்பு என்பது போல் பார்க்க, பவானிக்கு, ஒரு ஆசுவாசம் பிறந்தது. ஜெயந்தின் தாய், தந்தை, தம்பி என அங்கே கூடிவிட, ஜெயந்த் குடும்பத்தினர் ஆளுக்கு ஒன்று பேசினர்.

போஸ்லே மில்லில் வேலை செய்யக் கூட அருகதையற்றவனுக்கு அவர்கள் குடும்பத்துப் பெண் கேட்கிறதா. எங்கள் பெருமை தெரியுமா. எங்கள் கழுத்தில் போட்டிருக்கும் ஒரு காந்தானி குடும்ப , பாரம்பரிய நகைக்கு உங்கள் ஊரை விலை பேசுவோம். என இளக்காரமாகப் பேசினர்.

பைரவியும் கைலாஷ்க்கு ஆதரவாக வார்த்தையாட, ரமாபாய் கொஞ்சம் பொறுமையாகப் பேசச் சொன்னார். ஜெயந்தின் தாயும், கனபத்ராயின் சகோதரியுமான அவரது நாத்தனார், " தஞ்சாவூரிலிருந்து ஆளை ஏற்பாடு செஞ்சு தான் கூட்டிட்டு வந்தியா" என ரமாபாயியையும் சேர்த்துக் குற்றம் சுமத்த, " இவ்வளவு நேரம் அந்த யோசனை இல்லை. நீங்க சொன்னதையே நிஜமாக்க வேண்டியது தான்" எனப் பதில் தரவும், ஜெயந் தனது மாமியாரான மூத்தவர் பிரபா பாயிடம், " இந்தக் கேவலம் நடந்தால், உங்கள் மகள் வாழாவெட்டியாவாள்" என மிரட்ட,

" எதுடா கேவலம்" என ராஜன், ஜெயந்தை எதிர்க்க, விஜயன் நண்பனை அடக்கினார். வேலையாட்கள் முன் மற்றொரு தொழிலாளி தன்னை அவமானப் படுத்தியதாக ஆடிய ஜெயந்த், ஆட்களை ஏவி, இவர்களை வெளியேற்ற முயல, சிங்கமெனக் கர்ஜித்த கைலாஷ் ராஜனும் சவால் விட்டார். நிலைமை கை மீறுவதை உணர்ந்த பிரபாபாய், ரமாபாயிடம் மன்றாட , பவானியை நினைவில் கொண்டு, "பைரவி,இது உடனடியா முடிவெடுக்குற விஷயமில்லை, தாவு, தாயியையும் கேட்கணும், இப்போ அவரை அனுப்பி விடு" எனக் கைலாஷை அனுப்பி வைக்கும்படி பைரவியிடம் சொன்னார்கள்.

பைரவி, " ராஜ்,இப்ப கிளம்புங்கள். உங்க பாதுகாப்பு முக்கியம். ப்ளீஸ், பாய்சாப் பார்த்துக்குங்க" என இறைஞ்சவும், " இந்த ஷாதி எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்" என ஜெயந்தும் சவால் விட்டான். அவன் சவாலுக்கு அஞ்சாத கைலாஷ், பாருவின் மன்றாடலுக்குச் செவி சாய்த்து அங்கிருந்து கிளம்பினார். அன்று இரவே, ஜெயந்தின் ஆட்கள் கைலாஷை தாக்க, அதை எதிர் பார்த்தவர், சாட்சி வைத்துக் கொண்டு அவர்களிடம் அடி வாங்கி, கட்டும் போட்டுக் கொண்டார்.

பாரு விசயமறிந்து ஓடி வர, மில்லில் தொழிலாளிகளுக்கு மத்தியில் பாருவை எதிர் கொண்டவர், தன் மீது முதலாளியம்மாவின் உண்மையான அன்பைத் தொழிலாளிகளுக்கும் காட்டி, ஜெயந்துக்கு எதிராகத் தொழிலாளர்களைத் திசை திருப்பினார்.

" சோட்டி குமாரிக்கு என் மேல் இஷ்டம். எங்களை ஆசீர்வதித்து ஒன்றிணைத்தது, ஆயி துல்ஜா பவானி. ஆனால், நான் ஒரு தொழிலாளி என்ற காரணத்துக்காக இவருடைய அக்காள் கணவன் எங்களைப் பிரிக்கப் பார்க்கிறான்" எனக் கைலாஷ், தன்னை அவர்களோடு கூட்டு சேர்த்துப் பேச, அடுத்து வந்த தினங்களில் தொழிலாளர்கள் கைலாஷ்க்கு ஆதரவாக நின்றனர்.

மில் ஸ்ட்ரைக் எனப் பிரச்சனை வரவும், பெரியவர் ஶ்ரீபத்ராய் குடும்பம் உள்ளே புகுந்தது. இதை ஜெயந்த், தொழிலாளர்கள் ஏன் பைரவியே கூட விரும்பவில்லை. ஆனால் ஜெயந்த் படு சாமர்த்தியமாகப் பின் வாங்க, தொழிலாளர் பிரச்சினை சுமூகமாக முடிந்தது.

ஆனால் அவர்களும் பைரவி விசயத்தில், ஒரு சாதாரணக் குடும்பத்து இளைஞனை மணப்பதை ஆட்சேபித்தனர். பைரவி மொத்தமாக எல்லாரையும் எதிர்த்து நின்றார். இந்தக் களேபரத்தில் பத்து , பதினைந்து நாட்கள் ஓடிவிட, அதற்குள் கைலாஷ், சத்தமில்லாமல் ஒரு வேலைப் பார்த்து, பாருவுடனான ரிஜிஸ்டர் மேரேஜை முடித்தார். அவரும் சந்தோஷமாகவே ஏற்றார்.

அப்பா, அம்மாவோடு வந்து முறைப்படி கல்யாணம் செய்து கொள்வதாகக் கைலாஷ் வாக்களிக்க, பைரவி அகம் மகிழ்ந்தார்.

ஆனால் நடுவில் சில நாட்கள் பதுங்கிய ஜெயந் தனது வேலையைக் காட்டத் தயாரானான். பைரவியை ரகசியமாகத் திருமணம் செய்ய ஆட்களை வைத்துக் கடத்தினான். ஆனால் பவானி, இந்த விசயத்தை ரமாபாய் மூலம், கைலாஷிடம் தெரிவிக்க, மாமியார் மருமகன் கூட்டணி அமைத்து, ஜெயந் திட்டத்துக்கு மாற்றாகத் திட்டமிட்டனர்.

ஊருக்கு ஒதுக்குப் புறத்திலிருந்த துர்கா கோவிலில் இரவு திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருக்க, தங்கள் விஷ்வாசிகளோடு, சாதுரியமாக ஜெயந்தை அடித்து, கட்டிப் போட்டு, செஹரா எனப்படும் மல்லிகை மாலைகளால் முகத்தை மறைத்தபடி, கைலாஷ் பாருவை முறைப்படி மணம் முடித்தார். ரமா பாய் மறைந்திருந்து மனமாற ஆசி வழங்கியவர், அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழவும் ஏற்பாடு செய்தார். விஜயனிடமும், தனது நம்பிக்கைக்கு உகந்த துர்கா ராமிடமும் சந்தன்கட் எனுமிடத்துக்கு இவர்களைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஒப்படைக்க, 

எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நம்பிக்கை தந்து இங்கேயே எதிர்த்து நின்று சமாளிக்கலாம் என்ற கைலாஷ் ராஜனை, " இப்போ, நிலமை சரியில்லை தாமாத்ஜி. சரியான பிறகு, நானே உங்களை அழைச்சுக்குறேன்" என அனுப்பி வைத்தார்.

ஆனால் அடிப்பட்ட புலியாகச் சினம் கொண்ட ஜெயந்த், கைலாஷை கொல்லத் துணிந்தான். நாலா பக்கமும் ஆட்களை ஏவி, பார்த்த இடத்தில் கைலாஷை சுட்டுவிட்டு, பைரவியைத் தூக்கிவரக் கட்டளையிட, அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி மணமக்களும், விஜயன், துர்கா ராம் காரில் பயணம் மேற்கொள்ள, ஓரிடத்தில் ஜெயந்தின் ஆட்களிடம் மாட்டிக் கொண்டனர்.

துப்பாக்கி பழக்கமில்லாத அடியாள், உத்தேசமாகச் சுட்டதில், குண்டு பாருவை நோக்கி வர, அவரைக் குனியவைத்து, கைலாஷ், தனது வலது தோளில் குண்டை வாங்கிக் கொண்டார். விஜயன் பதட்டமாக வண்டியை நிறுத்த பார்க்க, " காரை நிறுத்தாமல் ஓட்டு விஜயா. எனக்கு ஒன்னுமில்லை" எனச் சோலாப்பூரை கடந்தனர்.

பைரவி, சோலாப்பூர் கடக்கவுமே, பிடிவாதமாக ஒரு மருத்துவ விடுதியில் வண்டியை நிறுத்த சொன்னவர், கைலாஷ்க்கு சிகிச்சையளித்து, மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டே பயணத்தைத் தொடர்ந்தார்.

சந்த்கட் எனும் மலை மேல் அமைந்த, அணைப் பகுதியில், பெரிய ஆடம்பரம் எதுவும் இல்லாத சிறிய ஓட்டு வீட்டில், ராஜனும், ராணியும் அடைக்கலம் புகுந்தனர். ஓரிரு நாட்களில், இவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து , துர்கா ராம் பொறுப்பில் இவர்களை விட்டு விட்டு விஜயன் பெங்களூர் சென்றார். ராஜனும், பாருவும் சந்தன்கட் சென்றடைந்த தினத்தில் ஆரம்பித்த மழை, இரண்டு மாதங்களுக்கு விடாமல் கொட்டி, சந்தன்கட் வரும் வழித்தடத்தையும் துண்டித்தது.

முதல் பத்து நாள், பாருவின் கவனிப்பில், கைலாஷ் தனது குண்டடிக்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டார். உரிமையான மனைவியாகத் தன் பாரு இருப்பதே பெரும் மகிழ்வு, சொர்க்க வாழ்வு எனத் தாய், தந்தை, சொந்த பந்தம் என அத்தனையும் மறந்து ஒரு தனி உலகில் சஞ்சரித்தார்.

அதிகப்படியான மகிழ்ச்சியும், ஆனந்த வாழ்வும், அடுத்து வரும் காலங்களுக்கு அவர்களுக்கு நினைவுப் பரிசாக மட்டுமே இருந்தது. அந்த இரண்டு மாதங்களின் நிறைவிலேயே தங்கள் வாழ்வைக் கடத்தப் போகிறோம், என அவர்களும் அறிந்தார்கள் இல்லை.

இரண்டு மாதங்களுக்குப் பின், விஜயனிடமிருந்து, கைலாஷ் ராஜனின் அம்மா சௌந்தரிக்கு முடியவில்லை என்ற தகவல் வர, தானும் வீட்டினரோடு பேசி இரண்டு மாதங்களும், அவர்களைப் பிரிந்து ஐந்து மாதங்களும் ஆனதை நினைத்து, பைரவியின் வற்புறுத்தலில் தமிழ்நாட்டுக்குக் கிளம்பினார்.

ஆனால் விதி செய்த சதி, அன்று பருவைப் பிரிந்தது , நிரந்தரப் பிரிவு என்று நினைக்கவில்லை. சொந்த வீட்டில், குடும்பத்தைக் காண மகிழ்ச்சியாக வந்தவருக்கு, பன்னீர் மகள் ராஜியோடு திருமணம் என்ற செய்தி இடியாய் இறங்க, கல்யாணத்தை மறுத்தார். மற்றவர் காரணம் கேட்ட போது சொல்லாதவர், ராஜியை தனியாக அழைத்து, தனக்கும் பாருவுக்குமான திருமணத்தைப் பற்றிச் சொல்ல, அவரிடம் சரி, சரியெனத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டு வந்தவள், தான் மனதில் வடித்தவரை மணக்க இயலாமல் போனதைத் தாங்க இயலாதவராக விபரீதமான முடிவை எடுத்தார்.

கல்யாண வீடு, காரியம் செய்யும் வீடாக மாறியது. பாலநாயகம் மகனை வீட்டை விட்டு வெளியேற்றினார். பித்துப் பிடித்தவராகக் கோவையைச் சுற்றியவருக்கு, விஜயன் மேலும் ஓர் பேரிடியாகப் பைரவி மறைந்த விசயத்தைச் சொன்னார். பதறித் துடித்த ராஜன், சோலாப்பூர் விரைந்தார். பிபி மில்ஸும், போஸ்லே மாளிகையும் சோட்டி ராணி ரமாபாய் மற்றும் சோட்டி குமாரி பைரவி பாய் மறைவை அறிவித்து, துக்கம் கொண்டாடின.

கைலாஷை காணவும், அவர்களது கோபம் அவர் மேல் திரும்ப, எதிர்க்க மனமில்லாமல் அந்த அடியையும் வாங்கிக் கொண்டு மும்பையில் திரிந்தார். சௌந்தரி மகனைக்காணாமல் நிஜமாகவே நோயில் வாட, அம்மா தங்கைகளுக்காக ஊர் திரும்ப முடிவு செய்தார். மும்பையில் ராத்தோட்ஸின் , ஸ்வரனி மில்ஸ் அமரேந்தர் சிங் ராத்தோட், பெங்களூரு பார்டியில் பார்த்த, ரகுவீரின் சித்தப்பா, ராஜனுக்குப் பழக்கமானவர், கோவையில் மில் அமைக்க உதவி செய்ய, கே ஆர் மில்ஸ் உருவானது. சிறிய அளவில் ஆரம்பிக்கப் பட்ட மில்ஸ்,ராஜனின் அசுர உழைப்பால் ,மிகக் குறுகிய காலத்தில், பணம் சம்பாதிப்பதும், தொழில் சாம்ராஜ்யத்தில்,பீபீ மில்ஸ்க்குச் சமமாக வளர்வதும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இன்று பல விழுதுகளைக் கொண்ட ஆலமரமாக நிற்கிறது.

கைலாஷ், தனது அறையிலேயே அமைக்கப்பட்டிருந்த, மதுபான அறையில் மனம் வலிக்க, வலிக்கத் தன் ரணத்தை மீண்டும் கீறிப் பார்த்தவர், பாரு, பாரு என உழலலானார். மது அருந்தி தன்னிலை மறந்த நிலையில் தான், அவரின் பாரு, அவரோடு உறவாடுவதாக, உரையாடுவதாக ஒரு பிரமை. இந்த அற்ப சுகத்துக்காகவே, தான் தொழில் ஆரம்பித்து ஒரு நிலைக்கு வந்த பிறகு, தன் திருமண நாளின் போது , மதுபானத்தைக் காரில் நிறைத்துக் கொண்டு சந்தன்கட் சென்றுவிடுவார். அவர்கள் வாழ்ந்த அதே வீட்டை விலைக்கு வாங்கி, தன் பாருவுக்கான வசந்த மாளிகையாக அதை மாற்றியிருந்தார்.

இவரது இத்தனை ரகசியங்களையும் அறிந்த ஒருவன் உண்டெனில் அது விஜயரங்கன் மட்டுமே. நண்பன் தன்னை ஏமாற்றி, பாருவிடமிருந்து தன்னைப் பிரித்து அழைத்து வந்துவிட்டான் என விஜயரங்கன் மீது தாளாத கோபத்திலிருந்தார் கைலாஷ். எவ்வளவு முயன்றும், பாருவை மறக்க இயலாதது போல், நண்பனையும் மன்னிக்க இயலவில்லை. ஆனால் மதி மயங்கிய நிலையில் கை தானாக விஜயனுக்குத் தான் போன் பறக்கும். அத்தனையும் பொறுமையாகச் சகித்துக் கொள்வார் அவர். ஏனெனில் நண்பனின் காதல் மீது, அவருக்கு அவ்வளவு பெருமை.

கைலாஷ் ராஜன் இன்றும் நண்பனைக் காய்ச்சி, கிளாஸ் டம்ளர்களை விட்டெறியக் கண்ணாடி நொறுங்கும் சத்தம் விஜயனின் தூக்கத்தைக் கெடுத்தது.

" தங்கச்சிமா, ஆள் நிதானத்தில் இல்லை. அவனுக்குப் போன் போடுங்க" எனப் பதினொன்றரை மணிக்கு விஜயன் பைரவிக்குப் போன் அடிக்க, பெருமூச்சோடு, கைலாஷை அழைத்தார் பாரு.

அந்த மதி மயங்கிய நிலையிலும் , அவருக்காகவே காத்திருந்தது போல் " பாரு" என உருக, " என்ன செய்றீங்க ராஜ்" எனக் கோபமாக ஆரம்பித்து, மெல்ல, மெல்லக் கட்டளைகள் இடச் சமத்தாகக் கட்டிலில் படுத்து, " பாட்டுப் பாடு" எனக் குழறினார் கைலாஷ்.

தன் மகளையும் கூடப் பாட்டுப் பாடி தூங்க வைக்காத பைரவி, தன் நினைவில் உருகும் கணவனுக்காகச் சந்தன் கட்டை நினைவில் நிறுத்தி,

" படே அச்சே லக்தேன் ஹை ,

யே தர்த்தி , யே நதியாங் , 

யே ரெய்னா , அவுர் தும்... 

ஹிந்தி பாடலை பாட, தன்னை மறந்த நித்திரையில், சந்தன்கட் அணைக் கட்டின் அருகில், மழையில் நனைந்தபடி ,கனவுலகில் மிதந்தார் கைலாஷ் ராஜ். 

Friday, 21 January 2022

யார் இந்த நிலவு- 14

 யார் இந்த நிலவு- 14

ஒவ்வொரு புதிய விடியலும், தங்கள் வாழ்வில் எதாவது ஒரு புதுவசந்தத்தைக் கொண்டு வரும் என்று நம்பியே உலகம் விழிக்கிறது. இந்த நம்பிக்கை இல்லாவிடின் உலகின் இயக்கம் தான் ஏது.

இதோ, ஆதிரா பிகே, காலையில் குளித்துப் புதுமலராகப் பூஜையறையில் பூ போட்டு, விளக்கேற்றி தயாராக ஹாலுக்கு வந்தாள். . இன்று கைலாஷ் ராஜின் அப்பா, அம்மா வருவதால்,காலையிலேயே ஒரு மீட்டிங்கை முடித்து விட எண்ணி மாற்றி அமைத்திருந்தார். அதற்காகவே டிரைவர் சத்தியனும் நேரமே கிளம்பி வந்து விட்டான், தன் கையிலிருந்த நாளிதழைப் படிப்பதும், மாடிப் படியைப் பார்ப்பதுமாக முதலாளியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான்

ஆதிரா, ஹாலுக்கு வரவும், சமையல் வேலைச் செய்யும் செல்லி, காபியைக் கொண்டு வந்து தர, "பாபாசாப், இன்னும் எந்திரிக்கலையா" என வினவினாள்.

" இல்லைங்க , அப்பலையே காபி எடுத்துட்டு போனேன், ஐயா இன்னும் எந்திரிகலையாட்டத்துக்குங்க , கதவை தட்டினேன் பதிலே இல்லை வந்துட்டேனுங்க . அவிகளா எந்திரிச்சு வருவாங்க" எனச் செல்லி சொல்லவும், அவள் சத்தியனை நோக்க,

" இல்லைங்க சிஸ்டர் , எப்பவுமே நாம எழுப்பறதே இல்லைங்க. அவரே கரெக்டா டயத்துக்கு வந்திருவாருங்க. மீறி கூப்பிட்டமுன்னா நம்மளை ஒரு முறை, முறைப்பாருங்க. டாய்லட் ஓட வேண்டியது தானுங்க" என அவனும் பயந்தபடி மழுப்பலாகப் பதில் தரவும், மணியைப் பார்த்தாள், எட்டு எனக் காட்டியது.

" இரண்டு பேரும், ஜ்யாதா சொல்றீங்க. இன்னைக்கு அஜோபா, ஆபா வருவாங்களே, பாபாசாப்பை நான் கூட்டிட்டு வர்றேன்" என எழுப்பச் செல்ல, மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் சங்கடமாகப் பார்த்துக் கொண்டனர்.

ஒரு முடிவாக, சத்தியன் " இல்லைங்க சிஸ்டர். நீங்க இருங்க. நானே எழுப்புறேன்" என அவள் பின்னாடியே படியேற.

" நீங்க மறைஞ்சு நில்லுங்க. பாபாசாப் முஜே , தோ குச் நஹி கஹேங்கே" எனப் பெருமையாகச் சென்றவள்,

" பாபாசாப், பாபா, ஆப்கி முல்கி ஆயி. கதவை திறங்க. குட்மார்னிங் " என வரிசையாகப் பேசவும், சத்தியன் த்ரில்லிங்காகவே பார்த்து நின்றான். உள்ளிருந்து ஒரு பதிலும் இல்லை. ஆதிரா போன் செய்து பார்த்தவள், அதுவும் எடுக்கப்பட வில்லை எனவும் பயந்தவளாக, பதட்டமாகக் குரல் கொடுக்க, சத்தியன், " இது எப்பவும் நடக்கறது தானுங்க அம்மிணி . நீங்க கவலைப்படாதீங்க" என ஆறுதல் சொன்னவன், தானும் அழைக்கலானான்.

இருவர் அழைத்தும் கதவைத் திறக்கவில்லை எனவும், " பாவு, நீங்க ஸ்பேர் கீ எடுத்திட்டு வாங்க" என அவனை அனுப்பி விட்டு, " பாபா, பாபா" என நெஞ்சம் தடதடக்க, " துல்ஜா பவானி, பாபாசாப் நல்லா இருக்கனும்" என வேண்டிக் கொண்டே கதவைத் தட்ட, சத்தியன் சாவியோடு ஓடிவந்தான்.

அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்த அபிராம், கைலாஷ் அறையின் முன்னே நிற்பதைப் பார்த்து, " மாமாவுக்கு என்ன" என இரண்டு இரண்டு படிக்கட்டுகளாகத் தாண்டி ஓடிவர,

" ராம் சார், டென் மினிட்ஸா தட்டுறேன். பாபாசாப் தர்வாஜா கோல்தே நஹி. எனக்குப் பயமா இருக்கு" என அவன் கையைப் பற்றவும்.

" ஹேய், இல்லை. மாமாக்கு ஒன்னும் ஆகாது. ஹீ இஸ் வெரி ஸ்ட்ராங்" என்றவன், அவளைத் தோளோடு அணைத்து விடுத்துச் சத்தியனிடம் கண்ணால் வினவினான்.

" நேத்து வெளியே எங்கையுமே போகலைங்க. சிஸ்டர் வந்ததிலிருந்து ஒரு வாரமாவே அதெல்லாம் இல்லைங்க" என ரகசியத் தகவலும் சொல்லிக் கொண்டே கதவைச் சாவி கொண்டு திறந்தும் உள்ளே தாழ்ப்பாள் போட்டிருந்தார்.

ஆதிரா, “ ராம் ப்ளீஸ் தர்வாஜா தொடியே, கதவை உடைங்க. பாபாசாப் திட்டினாலும், அடிச்சாலும் நான் வாங்கிக்கிறேன். எனக்கு என்ன மோ பயமா இருக்கு” என அபிராமை கட்டாயப் படுத்த,

“ அவர் திட்டுக்கு யாரு பயந்தா, குளிச்சுட்டு கீது இருந்தார்னா, எம்பேரிசிங்கா போயிடும் “ என எடுத்துச் சொல்லவும்,

“ஆமாங்க அம்மணி,சிலநேரம் மணிக்கணக்கா, பாத் டாப்ல ,பழசை நினைச்சுகிட்டு படுத்துக் கிடப்பார்.” எனச் சத்தியன் சொல்லவும், அபிராமிக்கு, தான் பெங்களூரு ஹோட்டலில் பாத் டப்பில் ஆதிரா நினைவில் மிதந்து கிடந்தது நினைவில் வர, “எஸ், மாமா என்னை மாதிரியே சம் டைம்ஸ் அப்படிச் செய்வார் “ என ராம் ஒத்து உதவும்,

ஆதிரா அவனை முறைத்து விட்டு, “நீங்க ஒன்னும் செய்ய வேணாம்.நானே கூப்புட்டுக்குறேன்’ என் தன பலம் கொண்ட மட்டும், அந்தத் தேக்கு கதவைக் குத்தி தட்டி, குரலிலும் தீவிரத்தைக் காட்ட, அவளது கையை வேகமாக பற்றிக் கொண்டவன்,

“ஆரா , என்ன இது சின்னப் பிள்ளைத்தனம், பூ போல இருக்கக் கையை வச்சுக்கிட்டு உன்னால முடியுமா, நகரு அங்குட்டு “ என்றவன், மீண்டும் " மாமா" என அழைக்கப் பதில் இல்லை.

அவனுக்கும் பதட்டம் தொற்றிக் கொள்ள, " ஒருவேளை ஆரா சொல்ற மாதிரி மயங்கி கிடந்தா, ஓ கோட், சத்யா கதவை உடைப்போம்" என இருவருமாகக் கதவை மோத, வேலைக்காரர்கள் ஆங்காங்கே கூடி நின்றனர்.

கதவை உடைத்து இருவரும் உள்ளே போக, ஆதிரா அவர்களைத் தாண்டிக் கொண்டு, பாபாவைப் பார்க்க ஓடினாள் .

அபிராம், ‘அவர் எந்த நிலையில் இருக்காரே ‘ என யூகித்தவன் ,அவள் கையைப் பற்றி " நீ இரு. நான் பார்த்துட்டு வர்றேன்" என அவளைத் தடுக்க, " அவர் என் பாபா. எப்படி இருந்தாலும் நான் பார்ப்பேன்" எனக் கண்ணீர் விட்டபடி அடுத்த அறைக்குள் சென்றாள்.

அந்தப் பெரிய கட்டிலில், கைலாஷ், நினைவின்றிக் குப்புறப் படுத்துக் கிடந்தார். அறையே அலங்கோலமாக, பாட்டில் அங்குமிங்கும் உருண்டு கிடக்க, கண்ணாடி டம்ளர் உடைந்தும் கிடந்தது, சத்தியன் அவசரமாக அதைச் சுத்தப்படுத்த, அபி, ஆதிரா கைலாஷ் அருகில் சென்றனர்.

அபி கட்டிலுக்கு அருகே நின்று, " மாமா" என அழைக்க, ஆதிரா கட்டிலில் ஏறித் தவழ்ந்து அவரிடம் சென்றவள், " பாபா" என அவர் முகத்தை, தோளைத் தொட, நெருப்பாகச் சுட்டது.

" ராம் , பீவரா இருக்கு. கால் த டாக்டர்" என்றவள், "பாபா, பாபா" என மடி தாங்க, அரை மயக்கத்தில் கண் சொருகி இருந்தவருக்கு, ஆதிராவே பாருவாகத் தெரிய. " பாரு, வந்துட்டியா. முடியலைமா. என்னையும் உன்கிட்டையே கூப்பிட்டுக்க" எனப் புலம்ப,

" பாபாசாப், நோ. ஆங்கே கோலியே. நான் உங்க ரஜ்ஜும்மா" எனவும் ,

" ஹாங் ரஜ்ஜும்மா, நமக்குப் பொண்ணு பிறந்தா, அப்படிக் கூப்பிடுவேன்னு சொன்னியே பாரு. ராஜ் உடைய மகள், ரஜ்ஜும்மா" எனப் புலம்ப , அதைச் செவியில் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவள் இல்லை ." ராம், இவரைத் திருப்பிப் படுக்க வைங்க. பாவு, வெள்ளை துணியும் தண்ணியும் கொண்டு வாங்க" என மற்ற இருவரையும் வேலை ஏவியவள், டாக்டர் வரும் முன்பே தனக்குத் தெரிந்த சிகிச்சையை ஆரம்பித்து இருந்தாள்.

துணியைப் பச்சைத் தண்ணீர் நனைத்து, நெற்றியில் பட்டி போடுதல், தலையை அமுக்கி விடுதல், எனத் தொடர்ந்தவள், செல்லியிடம் சொல்லி, ஹார்லிக்ஸ் கலந்து கொண்டு வந்து தரச் சொல்லி, அபிராம் உதவியோடு தூக்கிச் சாய்ந்து அமரவைத்து , கொஞ்சம் கொஞ்சமாகப் பாலையும் புகட்டவும், அங்குப் பார்த்துக் கொண்டிருந்த, அத்தனை பேரும், ஆதிராவை கைலாஷின் மகளாகவே பார்த்தனர்.

இரண்டு மடக்கு குடித்தவர், சட்டென வாந்தி வருவது போல் எழ முயலவும், " இதிலையே எடுங்க பாபா" எனப் பவுலை நீட்டியவள், அவர் தலையை ஒரு கையால் பிடிக்க முயல, அபிராம் கட்டிலின் பின்னே வந்து நின்று கைலாஷை தாங்கிக் கொண்டான். சத்யன், அதிரா கைகளிலிருந்து பவுலை வாங்கிப் பிடித்துக் கொள்ள, முகத்தைச் சுளித்துக் கொண்டு, மூவரையும் விலகிச் சொல்லி சைகை காட்ட,

“பாபா , சும்மா இதிலையே எடுங்க, பெட்டை விட்டு கீழ இறங்கக் கூடாது “ என ஆணையிட, பாருவின் குரல் போலவே கேட்கவும், அதற்கு அடி பணிந்தார் கைலாஷ் . ஆதிரா சங்கடப் படாமல், வாயை, முகத்தைத் துடைத்து , சட்டையையும் கழட்ட, அபிராம் அவள் முகம் பார்த்தே, அவள் கட்டளைகளை ஏற்று, அவனும் மாமனுக்குச் சேவை செய்தான்.

அபிராம் , டாக்டருக்கு போன் செய்யும் போதே, விஜயனுக்குப் போன் அடித்து விட, டாக்டர் உள்ளே வர, அவரோடு பின்னே விஜயனும் நுழைந்தார்.

" ராஜா, என்னடா ஆச்சு" எனப் பதட்டமாக வந்தவர், ஆந்திராவைப் பார்க்கவும் அமைதியானார். அரை மயக்கத்திலிருந்த ராஜ், நண்பனைப் பார்க்கவும், புலம்பலை ஆரம்பிக்க, " டாக்டர் பார்க்கட்டும். அப்புற மேட்டுக்கு நாம பேசுவோம்" என விஜய ரங்கன், நண்பன் தோள்களைத் தட்டி அமைதிப் படுத்தினார்.

டாக்டர் பரிசோதித்து விட்டு, " மன உளைச்சல் தான்" என விஜயனைப் பார்த்துச் சொன்னவர், சத்தியனைத் தேட, அவனும் தலையை ஆட்டினான். அவனை ஆட்சேபனையாகப் பார்க்கவும், “ டாக்டர், சத்யன் மேல தப்பில்லை, மாமா சுயம்பு லிங்கமா பண்ண வேலை “ என ராம் சப்போர்ட் செய்ய,

“ கைலாஷ் சார், ஒரு ஊசி போடுறேன்.கொஞ்சம் உடம்பை பார்த்துக்குங்க. லிமிட்ல இருந்துக்குங்க” என்ற அறிவுரையோடு ஊசியைப் போட, ஆதிரா தன் சந்தேகங்களை எல்லாம் கேட்டு, டாக்டரை ஒரு வழி ஆக்கியிருந்தாள்.

" வாமிட்டிங் சேர்த்து இன்ஜெக்சன் போட்டிருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு, இட்லி கொடுங்க, தெளிஞ்சிடுவார்" என்றவர், விஜயனோடு அறையை விட்டுச் செல்ல, அபிராமும் பின் தொடர்ந்தான்.

ஆதிரா, கைலாஷை விட்டு அசையவே இல்லை. “பாபாசாப், இப்போ பரவாயில்லையா, புகார் நஹி ,தலை வலிகிதா “ என நெற்றிப் பொட்டை ,அழுத்திக் கொடுக்க, அவள் கையைப் பற்றி, முத்தமிட்டவர் , “வேணாம்டா ,ரஜும்மாவுக்குக் கை வலிக்கும் “ என்றார் வாஞ்சையாக.

“உங்களுக்குச் சரியான போதும். எனக்கு ஒன்னும் கை வலிக்காது “ என்றவள், இதமாகப் பிடித்து விட, அப்படியே கண் அயர்ந்தார்.

ஆதிராவின் பேசிக்கு அவள் அம்மாவின் அழைப்பு வந்தது, ஹெட் போனில் போட்டுக் கொண்டு அழைப்பை ஏற்றவள், " ஆயி" என அழுது கொண்டே பேசவும், " ரஜ்ஜும்மா, என்ன முலே" எனப் பதறினார் அவள் ஆயி . கண்ணீரைத் துடைக்கவும் இல்லாமல், " பாபாசாப்க்கே தபியத் டீக் நஹி, பீவர்" எனக் கைலாஷ்க்கு காய்ச்சல் இருப்பதை, அழுதபடிச் சொல்லவும்.

" டீக் ஹை பேட்டா, பீவர் தானே, டாக்டர் பார்த்திட்டாங்கல்ல, சரியாகிடும். " என அவளது ஆயி தைரியம் சொல்லவும்

" நஹி ஆயி. பாபாசாப் ஹோஸ் மே பீ நஹி.( சுய நினைவே இல்லை) நேத்து உங்கக்கிட்ட சொன்னேன்ல, பாரு பத்தி, இப்பவும் என்னை அவங்க பாருன்னு நினைச்சு புலம்புறாங்க. " என அவள் நடந்ததைச் சொல்லவும், அவரும் அந்தப் பக்கம் அமைதியாக இருந்தார்.

" பாருங்கள், உங்களுக்கே பேச்சு வரலை. நான் ஒரு அன்லக்கி முல்கி ஆயி. பாபாசாப் னு சொன்னதுக்கே அவுங்களுக்கு முடியலை" எனத் தனது ராசியைப் பற்றி அவள் பேசவும்

" நஹி முலே, நீ பக்கத்தில இருக்கிறதால, சரியான நேரத்தில் பார்த்திட்டியே, ஏ அச்சி பாத் ஹை. அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து அழுவாதே . அவங்களுக்குத் தேவையானதைச் செய் " என அதட்டி மிரட்டியவர், அவரைப் பார்த்துக் கொள்ளும் முறைகளைச் சொல்லித் தந்தார்.

கைலாஷ், இருமும் சத்தம் கேட்கவும், " ஆயி போனை வைக்கிறேன்" எனப் பதறி அவசரத்தில் , போனை அணைப்பதற்குப் பதில் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு, கைலாஷிடம் விரைந்தவள்,

" பாபாசாப், எதாவது வேணுமா ." என வினவ, கண் விழித்துச் சுற்றும், முற்றும் பார்த்தவர், " பாரு , இங்க உட்கார்ந்திருந்தாலே, என்னை விட்டுட்டு போயிட்டாளா. அவளைப் போகாதேன்னு சொல்லணும்" எனப் பெட்டை விட்டு இறங்கியவர் தள்ளாடி நடக்க,

" பாபா, என்ன பண்றீங்க. நீங்க ஹோஸ்ல இல்லை" என அவள் பின்னாடியே ஓடியவள், அவர் " ராம், சத்யா பாவு" என அலறினாள்.

டாக்டரை அனுப்பி விட்டு, அபிராம், விஜயரங்கன், சத்தியன் மூவருமே ஓடி வர, அபிராம் தான், மாமனைத் தாங்கிக் கொண்டான்.

" விஜயா, “ பாரு” வீட்டை விட்டு வெளில போறாடா, நீ போயி கூப்பிடு. நீ கூப்பிட்டா தான் வருவா. கூப்பிடுறா. அன்னைக்கு நீ சொன்னது பொய் தானடா. வேற யார் யாரோ, சோட்டி ராணி வாரிசுன்னு வராங்கலாம். அப்ப அவள் என்னை மறந்துட்டாலாடா. அதுனால தான் அவ செத்துட்டான்னு நீ பொய் சொன்னியா. இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா, சித்திரவதை பண்றதை விட என்னை மொத்தமா கொண்ணு புதைடா. உன் கையாலையே சாகுறேன்" என விஜயன் கையைப் பிடித்து, தன் கழுத்தில் வைத்துக் கொள்ள, அபிராம், ஆதிரா இருவரும் அதிர்ச்சியிலிருந்தனர். இருவருக்குமே கைலாஷ் ரோல் மாடல். அவரை இப்படிக் கம்பீரம் இழந்து, குழைந்து பார்த்தது இல்லை. ஆனால் இவர்கள் இருவருக்கும் மேல், ஸ்பீக்கரில் கைலாஷின் பேச்சைக் கேட்ட மற்றொரு ஜீவன், ஏன் உயிரோடு இருக்கிறோம் , என நொந்து துடித்துக் கொண்டிருந்தது.

ஆனால் சத்தியனுக்கும், விஜய ரங்கனுக்கும் இது வாடிக்கை ஆதலால், அவரைச் சமாதானப் படுத்த முயன்றவர், டாக்டர் சொன்ன விசயமும் அவரது கலக்கத்தைக் கூட்டியிருக்க, நண்பனை எப்படியாவது அமைதிப் படுத்த வேண்டும் என முயன்றவர்.

" பேசாமல், படுத்து தூங்குறியா இல்லையாடா. அடிச்சுப் போடுவேன் ராஸ்கல். அத்தையும், மாமாவும் வராங்கன்னு, வேணும்னே ஆட்டம் காட்டுறியா. உன் வீட்டில வச்சுக்கப் பிடிக்கலைன்னா சொல்லு, அவிகளை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் . " என டாப்பிக்கை மாற்றிப் பெரிய சத்தமாக, விஜயன் திட்டவும்

" டேய், வேணாம்டா. அவிகளுக்காகத் தான் இந்த உயிரையே கைல பிடிச்சிட்டு இருக்கேன். இல்லைனா எப்பவோ, என் பாருக்கிட்ட போயிருப்பேன்" என அடங்க மறுத்து, நண்பனிடம் சண்டையிட்டார் கைலாஷ்.

" பேசுறான் பாரு பேச்சு. எவ்வளவு பெரிய மில்லை கட்டி சாதனை பண்ணியிருக்க. உன்னை நம்பி எத்தனை ஆயிரம் குடும்பம் வாழுது. ஒரு வார்த்தை பேசாத. போய்ப் படு" என விஜயன் அதட்டவும்.

அபிராம், அப்பாவுக்கும், மாமாவுக்கும் இடையில் புகுந்தவன், " அப்பா, நீங்களும் பதிலுக்குப் பதில் பேசாதீங்க. மாமா ஸ்டெடியா இல்லையிங்க" எனத் தன் தகப்பனை அடக்கவும், " டேய் உன்ற மாமனைச் சொல்லு, எப்ப பார்த்தாலும், என்னை மிரட்டறதுக்கு வந்திடுவ' என இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க. இவர்களைக் கடந்து வெளியே செல்ல வேண்டும் என வழியைப் பார்த்துக் கொண்டிருந்த கைலாஷ்க்கு முன்னாள் வந்து நின்றாள் ஆதிரா.

" பாபாசாப், உங்களை இப்படிப் பார்க்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் நார்மலுக்கு வாங்க. ப்ரேவா, கெத்தா இருக்கப் பாபாசாப் தான் எனக்கு வேணும்" என அவள் அழவும். கையை நீட்டி அவளை அணைத்துக் கொண்டவர்,

" எப்பவுமே அப்பா ப்ரேவ் தாண்டா. நீ அழக் கூடாது. அவன் சொல்றதையெல்லாம் நம்பாத. உன் பாபாசாப் கூல் தான். இவனைப் பார்த்தில தான் டென்ஷன் ஆகிட்டேன்" என ஆதிராவை உச்சி முகர்ந்தவர், சற்றே தணிந்து மீண்டும் மகளை அணைத்தபடியே கட்டிலுக்குச் சென்று அமர்ந்தார்.

" சரி, நான் கண் முன்னாடி நின்னா தானே டென்ஷன். நான் போறேன் போ. நீ உன் மகளோட சந்தோஷமா இரு" என விஜயரங்கன் கோபித்துக் கிளம்பவும்,

" அங்கிள், நீங்க இங்கேயே இருங்க. பாபாசாப் திட்டினாலும், உங்களோட இருக்கும் போது தான் சந்தோஷமா இருக்காங்க. அஜோபா, பாபா சாப்பை இப்படிப் பார்த்தா டென்ஷன் ஆகிடுவாங்க. நாளைக்கு வரச் சொல்லலாமே " என அவள் யோசனைச் சொல்லவும்


" வேண்டாம்" எனக் கைலாஷ், விஜயன், அபிராம் என மூவருமே கோரஸ் பாடினர். ஆதிரா முழிக்கவும், செல்லி டிபன் தட்டோடு வரவும், சரியாக இருந்தது.

" வராதேன்னு சொன்னா, அடுத்த நிமிசமே இங்க இருப்பாங்க. நான் கேர் டேக்கர்கிட்டச் சொல்லி, மதியத்துக்கு மேல அனுப்பச் சொல்றேன். அதுக்குள்ள ஒரு லெமன் ஜூஸை ஊத்து, உன் பாபாசாப் க்கு நஷா (போதை) இறங்கிடும்" என விஜயன், கைலாஷை கோர்த்து விடவும் " டேய்" என மிரட்டினார் கைலாஷ். அவருக்கு ஒரு முறைப்பைத் தந்த ஆதிரா, கைலாஷுக்கு ஊட்டி விட்டாள். 

"நானே சாப்பிட்டுகிறேன்டா" என அவர் கேட்கவும். " நோ, நான் தான் கொடுப்பேன்" என ஆதிரா பிடிவாதமாக ஊட்டி விட்டவள், 

"பாபா சாப், கவலை இருக்கவங்க எல்லாம், ட்ரிங்க்ஸ் எடுக்கணும்ன்னு ஆரபிச்சா, நான் எல்லாம் என்ன செய்யிறது, பிறந்ததிலிருந்து பாபாவை பார்த்தது இல்லை. என் ஆயுளில் பாதி நாள் , ஆயியை பிரிஞ்சு தான் இருந்திருக்கேன். நார்மல் , செயில்டு மாதிரி, என்ஜோய்மேன்ட் தொ க்யா, நிம்மதியா கூட இருந்ததில்லை. எப்ப யாரால ஆபத்து வருமுன்னு மறைஞ்சு, திரிஞ்சு, ஊர் ஊரா, ஸ்டேட் , ஸ்டேட்ட சுத்தியிருக்கேன். அடுத்தத் தடவை ட்ரின்க் பண்ணும் போது என்னையும் கூப்பிடுங்க" என அவள் கோபமாகச் சொல்லவும், விஜயன், "அப்படிப் போடு" என் சிரிக்க, அபிராம் முழிக்கக் கைலாஷுக்கு புரை ஏறியது

" இல்லைடா ரஜூம்மா, நீ பாபா கூட இருக்க வரை ,ட்ரிங்க்ஸ் இனிமே தொடலை" எனச் சமாதான உடன்படிக்கை செய்துக்கக் கொண்டார் கைலாஷ். விஜயனுக்கு மனம் நிறைந்தது. 

"என்ன சொல்லு, பாசமான மகள் போடும் கட்டளையை மீறும் அப்பனுங்க இன்னும் புறாக்களை" எனச் சிரித்தார். "அதுல நீயும் தான் சேர்த்தி, உன் திருட்டுத்தனத்தையெல்லாம், ரஞ்சி டார்லிங்கிட்ட சொல்லித் தரேன்" என நண்பனை வாரினார் கைலாஷ்.

அபிராம் சத்தியனை டாக்டர் எழுதித் தந்த மாத்திரைகளை வாங்க அனுப்பிவிட்டு , அதே அறையில் சேரில் அமர்ந்தவன், மாமனுக்கு உதவும் மாமன் மகளைக் கண்ணில் நிறைத்துக் கொண்டே, இருவருக்குமான உதவிகளைச் செய்தான்.

விஜயன், அறைக்கு வெளியே சென்று முதலில் பவானியை அழைத்தவர், அது பிசியாக இருக்கவும், தன் தகப்பனுக்கே அழைத்து விசயத்தைச் சொன்னார்.

" மாப்பிள்ளை இப்ப சும்மா இருக்காப்லையா. இது தெரிஞ்சா, பாலா இன்னும் ஆடுவானே" என ராமு கவலைப் படவும். தனது தந்தைக்கும் வயதாவதை உணர்ந்த விஜய ரங்கன், " அத்தை வந்தாங்கன்னாலே சரியாயிடுவானில்லிங்க, நீங்க அவிகளை மதியம் சாப்பிட்ட பிறகு அனுப்பிவிடுங்க, அதுக்குள்ள சமாளிச்சிடலாம். " என்றவர் பவானியைப் பற்றியும் கேட்க, " அப்பளையே போனைப் புடிச்சிட்டு போச்சு, நான் பார்த்துச் சொல்லிப் போடுறேன்" என ராமு போனை வைத்தார்.

ஆதிரா, கைலாஷை சாப்பிட வைத்து, மாத்திரையையும் கொடுத்திருக்க, விஜயன் நீங்க இரண்டு பேரும் போயி சாப்பிடுங்க. நான் இருக்கேன்" என அனுப்பியவர், நண்பனிடம் ," உனக்கு என்னடா ஆச்சு" எனத் தனித்துக் கேட்க, தனது மொபைலை எடுத்து ரஞ்சன் அனுப்பிய டிடெக்டிவ் ரிபோர்ட்டை காட்டினார்.

" இத்தனை நாள், யாரை உருகி, உருகி காதலிச்சு, பெத்தவங்க சொல் பேச்சுக் கூடக் கேட்காத இருந்தனோ, அது அர்த்தமில்லாத போயிடும் போல" எனக் கைலாஷ் வருந்தவும்,

" பைரவி இன்னொரு கல்யாணம் செஞ்சிருக்கும்னு சந்தேகப் படுறியாடா" என உடைத்தே கேட்டு விடவும், சட்டென நிமிர்ந்து பார்த்தவர்,

" அப்படி மனசார வாழ்ந்திருந்தால்னா கூடச் சரிதான்டா. நான் அவளுக்கு லாயக்கு இல்லைனு நினைச்சு, மனசை தேற்றிக்குவேன். ஆனால் ஜெயந்த் எதாவது செஞ்சிருந்தா. எனக்கு நினைக்க, நினைக்கப் பதறுது" எனக் கண்ணீர் விட்டவரை,

" ராஜா, கண்டதையும் போட்டு மனசை அழட்டிக்காத. நீ நினைக்கிற மாதிரி, உன் பாரு சாதாரணப் பொண்ணு இல்லை. உன் கைல தாலி வாங்கிட்டு, அடுத்தவனை நெருங்க விட்டுருமா. நீ யாரைப் பத்தி கவலைபடுற. அன்னைக்கு, உன்னையும், என்னையுமே காப்பாற்ற போராடின பைரவி பாய் போஸ்லே அவங்க. அப்படி ஒரு சோட்டி ராணி வாரிசு இருந்தா, அது உன் வாரிசா தான் இருக்கனும்" என விஜயன் , கைலாஷ் ராஜனைச் சமாதானப் படுத்துவதற்காகச் சொல்லவும், அவர் மூளை இன்னும் வேகமெடுத்து வேலை செய்தது.

" கண்டு பிடிக்கிறேன். எனக்கு ஆட்டம் காட்டுற அத்தனை பேருக்கும், ஆப்பு வைக்கிறேன்" என வாய் விட்டவர், தனது மொபைலை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.

" யெஸ் மிஸ்டர். போஸ்லே. நான் உங்களோட டீல் போட ரெடி. " என்றவர், அந்தப் பக்கம் என்ன சொன்னானோ, ஹாஹாவெனச் சிரித்தவர், " யெஸ், யு ஆர் ரைட். பிஸ்னஸ்மேனுக்கு உடம்பு சரியில்லைனா தான் வேகமா வேலைப் பார்க்கும். உங்களுக்காகக் காத்திருக்கேன், ஆதர்ஷ் ராஜே போஸ்லே " எனச் சவாலோடு தங்க ஊசிக் கொண்டு வரும் இளையவனுக்கும் அழைப்பு விடுத்தார் கைலாஷ்.

அறைக்கு வெளியே, தனது அலைப்பேசியை எடுக்க வந்த ஆதிரா, இவர்கள் சம்பாஷணையைக் கேட்டுத் திகைப்பூண்டை மிதித்தவள் போல், அதிர்ந்து நிற்க, அவளைத் தேடி வந்தான் அபிராம்.

ஆதிராவுக்கு உண்மை தெரிந்து விட்டதா, அடுத்து என்ன நடக்கும்...

நினவு வளரும்.

Wednesday, 19 January 2022

யார் இந்த நிலவு -12

யார் இந்த நிலவு -12 

கைலாஷ் ராஜன், பாருவைப் பற்றிப் பேச ஆரம்பித்த நேரம், சோலாப்பூர் மில்காரர்கள் மற்றும் ஆதிரா பிகே பற்றியும் துப்பறியச் சொல்லியிருந்த, டிடெக்டிவ் ரஞ்சனிடமிருந்து " ஷெல் வீ டாக் நௌ" என மெஷேஜ் வரவும். அவசரமாக எழுந்தவர், " ரஜ்ஜும்மா, முக்கியமான போன்கால். மீதிக் கதையை நாளைக்குப் பேசுவோமே" எனக் கண்களால் ஒரு எஸ்க்யூஸுடன் கேட்கவும்,

" பாபாசாப்" என லட்டைப் பறிகொடுத்த குழந்தை போல, அவள் முகம் வாடியபடி ஆட்சேபிக்க, ",இந்த அரைகிழவன் லவ் ஸ்டோரில, அப்படி ஒன்னும் பெரிசா ரொமான்ஸ் இல்லை கண்ணு. ஏன்னா என் பாரி, சரியான ஸ்ட்ரிட் ஆபீஸர். அதுக்கு நீ வெப் சீரிஸே பார்க்கலாம்" என அவர் சிரித்தபடி அவள் தலையை வாஞ்சையாகத் தடவ,

" உங்க பாருவும், என் ஆயி மாதிரி தான் சொல்லுங்க. ஆல்வேஸ் வெரி ஸ்டிரிக்ட், லேகின் ஆப் கே ஃபீலிங்க்ஸ் கோ தேக்னே மே மஸ்து ஹை பாபாசாப் " என , ஆதிராவும் அதை உணர்ந்தவளாகக் கண் மூடி, கைலாஷின் பாருவுக்கான உணர்வுகளை, உணர்ந்து சொல்ல,

" உங்க ஆயி எப்படின்னு எனக்குத் தெரியாதுபா . ஆனால் முல்கி தோ படியா மஸ்து ஹை." எனக் கண்களால் சிரித்து ," ஒரு வேளை உங்க அப்பா, ரொமான்டிக் ஆளோ, ரஜ்ஜும்மா கண்ணுளையே ரசனை தெரியுதே.இல்லை இதுக்கும் மேலஏதாவது இருக்கா.." என மகளின் உணர்வுகளைச் சிலாகித்துச் சந்தேகமாக வினவவும்.

அப்போது தான் ஆந்திராவின் மூடியிருந்த கண்களுக்கும் அபிராம் சிரித்து விட்டுச் சென்றிருக்க, அதில் சிவந்தவள், பாபா சாப்பின் கேள்வியும் அவள் நிலையைத் தெள்ளது தெளிவாக உணர்த்த , சட்டெனத் தன்னிலையடைந்தவள்,  " நஹி தோ. இது உங்க லவ் ஸ்டோரிக்கான ஃபீலிங் தான். " எனத் தன்னை மறைத்தவள், " ஓகே பாபாசாப் குட் நைட் " என அவசரமாகச் சொல்லவும்.

" அச்சா ஹை ரஜ்ஜும்மா, ஆனால் இந்தக் காதல் நம் மனசைத் தொடும் போதே, கள்ளத்தனத்தையும் சேர்த்து கூட்டிட்டு வரும். அது காதலை மறைக்க ட்ரை பண்ணும்,ஆனால் இந்த முகம், அசடு வழிந்தே ,அதைக் காட்டிக் கொடுத்திடும். அனுபவஸ்தன் சொல்றேன்." என ஒரு நகைப்போடு சொல்லிவந்தவர், கண்கள் எங்கோ நிலைக்குத்தி நின்று , பின்னர் ஓர் பெருமூச்சோடு , " நீ இதில எல்லாம் மாட்டிக்காதடா. கடவுள் உனக்குச் சந்தோஷத்தை மட்டுமே தரட்டும்" எனச் சீரியராகப் பேச்சை நிறுத்தினார்.

அவர் கைகளைப் பற்றிக் கொண்டவள், " பாபாசாப், ப்யார் ஏக் வர்தான் னு (நேசிக்கப்படுவது ஒரு வரம் ) சொன்னிங்க. துல்ஜா பவானி அந்த வரமெல்லாம் எனக்குத் தரமாட்டா. பாபா வோட ப்யார் கிடைக்கவே நான் தகுதியில்லாதவன்னு தானே,அவங்கள்ட்ட இருந்தே என்னைப் பிரிச்சு வச்சிருக்கா" என ஆதிரா கண் கலங்கவும், கைலாஷ் கண்களிலும் அதே உணர்ச்சி பெருக்கு. 

அவளைத் தன் கைவளைவுக்குள் அழைத்து , அணைத்து உச்சி முகர்ந்தவர், "இந்த அருமையான மகளோட பாசத்தை அனுபவிக்காம இருக்கும் , உன் அப்பன் தான்டா வரம் கிடைக்காதவன். உனக்கு எல்லா வரமும் கிடைக்கும். இந்தப் பாபாசாபுடைய ஆசீர்வாதம்" என உருகி கைலாஷ் ராஜும் அவள் நெற்றியில் முத்தமிட , தற்போதே கிட்டியது போல் ஆந்திராவுக்கும் ஓர் மனநிறைவு. 

அவள் பெருக்கிய கண்ணீர் அவர் சட்டையை நனைக்க, "ரஜ்ஜும்மா, அழக்கூடாது. உன் அப்பா, வரும்போது வரட்டும். இனிமே இந்தச் சாப் சொல்றதை கட் பண்ணிட்டு, பாபான்னே கூப்பிடு. உங்க ஆயிக்கு போன் போடு. இந்த மகளை, எனக்கே தத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன்" என அவர் படபடப்பக்கவும்.

அழுகை மாறி சிரித்தவள், " நீங்க சொன்னதே போதும் பாபாசாப், இன்னும் ஒரு ஆறு மாசம் என் பாபாவுக்காக நான் காத்திருக்கேன். " எனப் புன்னகைத்தவள், " நாளைக்குக் கட்டாயம் உங்க லவ் ஸ்டோரியைச் சொல்லனும்" எனக் கன்டிசன் போட, இருவரது அலைபேசிகளும் ஒலி எழுப்பியது. "ஆயி" என வாயசைத்தவள், அவர் கேளு எனச் சைகை காட்ட, ஆயி கொண்ணுடுவாங்க, என அவளும் சைகை செய்து விட்டுச் சிரித்துக் கொண்டே " குட்நைட் பாபாசாப்" எனத் தனது அறைக்கு ஓடிவிட்டாள்.

கைலாஷும் தனது அறைக்குச் சென்று  " யெஸ், மிஸ்டர் ரஞ்சன்" என அவரது அறிக்கையின் சாரத்தைக் கேட்கத் தயாராக,

" ஆதர்ஸ் ராஜே போஸ்லே, தனக்கும் பிபி மில்ஸ்ல உரிமை இருக்குன்னு, அதிரடியா உள்ளே நுழைஞ்சு இருக்கார் சார். அவருடைய டீடெய்ல்ஸை, ரொம்பக் கான்பிடென்சியலா வச்சிருக்காங்க. சொல்லப் போனால், பிபி மில்ஸ், உரிமை போராட்டத்தில் புதிசா குதிச்சிருக்கச் சிங்கக் குட்டி. லண்டன்ல தலைமறைவா வளர்த்திருக்காங்க. சோட்டி மகாராணி வாரிசுன்னு சொல்றாங்க. " என்றவர், ஆதிரா பற்றியும் மேலும் சிலவிசயங்களைச் சொல்லி, " மற்ற டீடைல்ஸ், உங்களுக்கு அனுப்புறேன் சார். " எனப் புதிரான விசயங்களில் பாதியை அவிழ்த்து விட, கைலாஷ் அதிலேயே தாக்கப்பட்டவராக, தனது அறைக்குள் நடந்தார்.

" சோட்டி மகாராணி வாரிசுன்னா? சோட்டி ஆயி ரமாபாய். ரமாபாய் வாரிசுன்னா பாரு. பாரு, தான் இல்லையே. வாரிசு எப்படிச் சாத்தியம். ஆனால் அந்த மீசைக்காரன் ஜெயந்த் , சொத்துக்காக எதுவும் செய்வான். பாருக்கிட்ட அத்துமீறியிருப்பானோ. செய்யக் கூடியவன் தான், பாரு வளையலை காண்பித்த பிறகு, அதைப் பொய்யாக்க கட்டாயக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சவனாச்சே. நானும் இல்லாத நேரம் அவளைச் சிதைச்சிட்டானோ, அதுனாலதான் பாரு உயிரை விட்டாளா. " எனப் பலவிதமாக அவர் கற்பனை தறிகெட்டு ஓட, மனம் அதற்கு மேல் பாடாய்ப் படுத்தியது. அதிலிருந்து விடுபட எண்ணியவராக, தனது அறைக் கதவைப் பூட்டிவிட்டு, மதுபான அறைக்குள் சென்றார்.

அது ஒன்றே அவருக்கு ஆறுதல், மனம் உச்சபட்சமாகக் கனக்கும் போதெல்லாம், அதுவும் குறிப்பாகப் பாருவுக்கு, குங்குமமிட்டு, முறையாகத் தன் மனைவியாக ஏற்ற நாட்களின் நினைவில், வருடத்தில் இரண்டு நாள், மகாராஷ்டிராவில் உள்ள சந்தன்கட் சென்று விடுவார். உலகை மறந்து, தன்னை மறந்து மயங்கிக் கிடக்கும் நாட்களில், தன் பாருவே வந்து, தன்னை மடி தாங்குவதாக அவருக்கு நினைப்பு.

இன்றும் அதே போல, தன்னிலை மறக்கும் வரை, மது அருந்தியவர், அதிலேயே உழல, அவரின் நினைவுகளில் பாரு சஞ்சாரிக்க ஆரம்பித்தார்.

சோலாப்பூர் பிபி மில்ஸ்ல், அலுவலகப் பகுதியில் வாட்டசாட்டமான மீசைக்காரன் ஒருவன் வரம்பு மீறி பாருவிடம் வாக்குவாதம் செய்து, கையை இழுக்கப் போக, வழக்கமாக டீ குடிப்பது போல் பாருவை பார்த்து வரச் செல்லும் கைலாஷ்க்கு அந்தக் காட்சியே இரத்தக் கொதிப்பைத் தந்தது. வேகமாக அங்கே விரைந்தவர், மீசைக்காரன் கையைத் தட்டி விட்டு, பாருவை மறைத்து நின்று கொண்டார். பாருவும் முதலில் கோபமாக முறைத்துக் கொண்டிருந்தவர், இப்போது இவருக்குப் பின்னால் பதட்டமாக, " ராஜ் நஹி" என மெல்லிய குரலில் சொல்ல, " ம்ப்ச்" என ஒரே சத்தத்தில் அவரை அடக்கியவர், ஆஜானுபாகுவாக நின்ற மீசைக்காரன் கையை வலுக் கொண்டு பற்றி, " பொண்ணுங்கட்ட பேசற முறை தெரியாதா உனக்கு. " எனக் கடுமையைக் காட்ட, அதில் வெகுண்டவன், " நீ யாருடா, அதைச் சொல்றதுக்கு. எனக்கு உரிமையானவள். நான் அவளைக் கல்யாணம் செய்யப் போறவன்" என அந்த ஆள், தன் பலத்தைக் காட்டி, ராஜனைச் சாய்த்து விட்டு, பாருவை இழுத்துச் செல்ல முயன்றான்.

" நான் அவள் புருஷன்டா பேவகூஃப். சட்டப்படி அவள் என் மனைவி" என ஒரு போடு போட்டார் கைலாஷ். மீசைக்காரன் அதிர்ந்தவனாக, பாருவிடம் மராட்டியில் கத்தி ஏதோ கேட்க… பாருவின் பதட்டமான முகம், கைலாஷின் வார்த்தைகளால் வியப்போடு மென்னகை தத்தெடுத்து. கண்களில் சவாலோடு, ராஜைப் பார்த்துக் கொண்டே,

" ஹாங், யே மேரே பதி ஹை. துல்ஜா பவானி மந்திர் மே, ஷாதி கீ. இஸ்கா சபூத்" என, அம்ம இவர் தன கணவன் என்றும் , தான் தூஜா பவனி கோவிலில் அவரை மணந்து கொண்டதாகவும், அதற்குச் சாட்சியாகத் தனது கண்ணாடி வளையல்களையும் தூக்கிக் காண்பிக்க, மீசைக்காரன் அதிர்ந்து மேலும் வசை பாடி, " சோடூங்கா நஹி. ஆஜ் இஸ்கா, ஃபல்ஸ்வரூப் தேகோகி" எனக் கர்ஜித்து விட்டு வெளியேறினான்.

கைலாஷ் அவள் புறம் திரும்பிப் பார்த்தார். " தமிழ்நாட்டு மருமகளா வர்றதுக்கு, ரெடிங்களா மகாராணி" எனக் கேலியாக வினவ,

" தமிழனுக்கு மனைவின்னா, தமிழ்நாட்டு மருமகள் தானே" எனப் பாருவும் தமிழில் பதில் தர, கைலாஷ்க்கு இன்ப அதிர்ச்சி.

" பாரு, உனக்குத் தமிழ் தெரியுமா. அய்யோ சாமி, இருந்த ஒரு கவலையும் போச்சு" என அவர் சந்தோஷப் படவும்,

" இப்போ அது தான் ரொம்ப முக்கியம், அது யாரு பாரு" என உரிமையாகக் கோபித்தார் பாரு.

" ஏன் , நீ தான். நான் உன்னை அப்படித் தான் ,என் மனசில் வச்சிருக்கேன்" எனவும், " ஹே, ஆயி பவானி, இப்படி ஒருத்தரைத் தான் நீ எனக்குன்னு அனுப்பனுமா" எனப் புலம்பியவர்.

" நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா. இப்ப யாருக்கிட்ட மோதுனீங்கன்ன உங்களுக்குத் தெரியுமா. அவர்கிட்ட மராத்தியில் என்ன சொல்றம்னு புரிஞ்சு தான் சொன்னீங்கன்னு, அடுத்து என்ன பிரச்சனை வரப் போகுதுன்னு உங்களுக்குத் தெரியுமா" என அவர் வரிசையாகக் கேள்வியை அடுக்கினார்.

" நீ யாரு, அந்த ஆள் யாருன்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் சொன்னது நிஜம். தெரிஞ்சு தான் சொன்னேன். நீ தான் மனைவி" என நகைத்த கண்களோடு, கைலாஷ் பெருமையாகச் சொன்னார். 

"ஆமாம், ஆமாம் சட்டப்படியான மனைவி , சொன்னீங்களே, ஆமாம் எந்த ஊர் சட்டப்படி என்னை மனைவியாகிக்கிடீங்க " எனப் பாரு சினந்து கேட்கவும், தைரியமாக ,பாருவை நோக்கி முன்னேறியவர், அவர் வளைக்கரங்களைப் பற்ற, பாரு முறைத்தார், கண்களாலேயே நயந்தவர், பச்சை வண்ண கண்ணாடி வளையல்கள் சலசலக்க , தன இடது மார்பில், இதயத்தில் வைத்து அழுத்திக் கொண்டு, " என் சட்டம், என் மனசாட்சி சொன்ன சட்டப்படி ,நீ மட்டும் தான் இந்த ஜென்மத்தில் என் மனைவி" என அமர்த்தலான குரலில் சொல்லவும், பாருவின் கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர். 

தன் மற்றொரு கரத்தால், பாருவின் கண்ணீரையும் துடைத்தவர், தலையை மறுப்பாக  ஆட்டி, அதுவும் கூடாதென்று  கண்ணால் பேசியபடி பாருவை மேலும் நெருங்க, ஆளுமையான பெண்ணும், அவர் காதலில் கட்டுண்டு தான் நின்றார். 

மௌனமே சம்மதமாக, கைலாஷ் ,பாருவை  அணைக்கத் துடிக்க,  மில்லின் ஷிப்ட் மாற்றும் சங்கு ஊதிய சத்தத்தில் , தன்னிலை உணர்ந்த பாரு, தங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகப் படுத்தி, கைலாஷை முறைத்து,  " இப்ப உங்க சாசுமா வீட்டிலிருந்து, மேள தாளத்தோட படையை அனுப்பி ஜமாயீக்கு மரியாதை செய்வாங்க. ரெடியாஇருங்க' எனக் கோபப்பட்டவர். இன்டர்காமில் விஜய ரங்கனையும் அழைத்தார்.

 விஜயன் வருவதற்குள், அவசர, அவசரமாக போனில் யூறுடனோ,மராத்தியில் பேசினார். கைலாஷ் கை கட்டி நின்று, பாருவின் ஒவ்வொரு அசைவையும் , ரைட் ராயலாக, தன்னுள் பதித்து, ரசித்துக் கொண்டிருந்தார்.

"ரோம் நகரமே பற்றி எரியும் போது , நீரோ மன்னன் பிடில் வாசிச்ச மாதிரி, இதென்ன சாவகாசமாக பார்வை" என பாரு, கைலாஷை கோபிக்கவும்,

" உவமானம் தப்பு, நான் நீரோ மன்னன் போல சாடிஸ்ட் இல்லை, என் பாருவை ஆராதிக்கும் தேவதாஸ் " எனும் போதே, பாரு வேகமாக வந்து அவர் வாயை பொத்தியவர், " நீங்க தேவதாசாகவும் வேண்டாம், நீரோவாகவும் வேண்டாம், எப்பவுமே என் ராஜ் ஆகா இருங்க போதும். அந்த பாருவோட நிலைமையும் எனக்கு வரவேண்டாம்.  ஆயி பவானி, தேரி கிருபா திருஷ்டி பனாயி ரக் ' என  கை கூப்பி வேண்டியவர், யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினார். 

விஜயன், வரவும் நடந்ததைச் சொல்லி  " இவரைக் கூட்டிட்டு முதல்ல ஊருக்கு கிளம்புங்க. இங்கிருந்தா, இவர் உயிருக்கு ஆபத்து" என , பரபரப்பாக ஏற்பாடுகளைச் செய்தார்.

கைலாஷ் , பாருவையே பார்த்தபடி அசால்டாக அமர்ந்திருந்தவர், " நீயும் என் கூட வர்றதுன்னா, போகலாம். உன்னை விட்டுட்டு போக முடியாது. " எனச் சாவகாசமாகச் சொல்ல, விஜயன் தான் முழித்தார்.

" உங்க இரண்டு பேருக்குமே, ஏதோ பிடிச்சிருக்குன்னு தெரியுது. மேடம், அவன் தான் அர்த்தமில்லாமல் பேசுவான், நீங்களும் ஏன் ஒத்துக்கிட்டிங்க. " என விஜயன் பாருவையும் கேள்வி கேட்க,

" நான் அப்படிச் சொன்னதினால் தான், உங்க ப்ரண்ட் இப்ப இங்க நிற்கிறார். இல்லைனா ஜெயந்த் ஜீஜு அப்பவே தன் முழுப் பலத்தையும் காட்டியிருப்பார்" எனப் பாரு பதில் தந்தார்.

" ஜெயந்த் சாரை, ஜீஜுன்னு சொன்னா, நீங்க இந்த மில்ஸோட சின்ன முதலாளியா. ஆனால் ஹெச் ஆர் மேனேஜரா இருக்கீங்களே" என விஜயன் சந்தேகமாகக் கேட்கவும்,

கைலாஷ், " ஓ, நீ அப்ப எனக்கு எப்படியா இருந்தாலும் பாஸ் தான். ஓகே, ஓகே ". என இரு பொருள்படப் பேசி நகைக்கவும், அவருக்கு ஓர் முறைப்பைத் தந்தவர், விஜயனிடம்,

" பாய்சாப், நீங்க இவரைக் கூட்டிட்டு ஊருக்கு கிளம்புங்க. இங்க இருக்க ஒவ்வொரு நிமிசமும் இவர் உயிருக்கு ஆபத்து" எனப் பாரு வலியுறுத்திச் சொன்னார். விஜய ரங்கன் இன்னும் அதிர்ச்சியே நீங்கவில்லை.

பிபி மில்ஸ் உரிமையாளர்களாகிய ஶ்ரீபத்ராய் , கனபத்ராய் போஸ்லேக்கள், கோலாப்பூர், சோலாப்பூர் மில்களைத் தங்களுக்குள் மில்களை நடத்துவதிலும், ஷேர் அடிப்படையிலும் பங்கு பிரித்துக் கொண்டனர். அதனால் பிபி மில்ஸ் என்ற பெயரிலேயே இரண்டும் தொடர்ந்து நடந்தது.

ஶ்ரீபத்ராய் போஸ்லேக்கு, ஆனந்த், முகுந்த என இரு மகன்களும், கனபத்ராய் போஸ்லேக்கு பவானி, பைரவி என இரண்டு பெண்மக்களும் உண்டு. இந்தப் பெண்வழியை எப்படியாவது கழட்டி விட்டால், தானே மில்களை ஆண்டு அனுபவிக்கலாம் என ஶ்ரீபத்ராய் குடும்பம் திட்டம் தீட்டியது.

ஆனால் கணபத்ராய்க்கு மூத்த மருமகனாக வாய்த்தவனும் சாமானியன் இல்லை. அவரது சகோதரி மகனாகிய ஜெயந்த் கெய்க்வாட் போஸ்லே, கனபத்ராய் போஸ்லேவின் மூத்த மகளை மணந்து, வீட்டோடு மருமகனானவன், மெல்ல தன் கைப்பிடிக்குள், சோலாப்பூர் மாளிகை, மில் இரண்டையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தான்.

கணபத்ராய் உடல்நிலை மோசமாகி ஆறு மாதங்களுக்கு முன் மறைந்து விட, ஜெயந்த் மனைவியின் உரிமையை வைத்து உள்ளே வந்தான். ஆனால் ஶ்ரீபத்ராய் குடும்பம், முதலிலேயே பங்கு பிரிக்கும் போது, இரண்டு மில்களையும் , ஷேர் விகிதங்களை மட்டுமே மாற்றி அமைத்து இருந்ததால், மூத்த வாரிசுகளின் அதிகாரமும் இருந்தது. பவானி கையெழுத்துப் போட சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட்டு ஒதுங்கிக் கொள்வார்.

ஆனால் அவரது மாற்றான் தாய் மகளான தங்கை பைரவி, பட்டப் படிப்பும் படித்து, எல்லா விசயங்களிலும் சூட்டிகையாக இருப்பார். அதனால் தந்தை இருக்கும் போதே, மில்லுக்குள் நுழைந்து, துறை வாரியாகத் தொழில் பயின்று வந்தார்.

அந்தப் பைரவியைத் தான், கைலாஷ் பாரு' எனப் பெயர் சூட்டி,தனக்கு மனையாளாக வர அழைப்பு விடுத்துள்ளார். அவரைப் பற்றிய முழுப் பரிச்சயம் அறிந்தும் அசராத நம் நாயகன், " நான் தான் உன் புருஷன்னு சொல்லிட்டேயில்லை. நீயும் சேர்ந்து வா. போயிட்டே இருப்போம். இவ்வளவு பெரிய மில்லும், அரண்மனையும் இல்லைனாலும், ஒரு சின்ன மில்லும், வீடும் இருக்கு. நான் உன்னை மகாராணியா வச்சுக்குறேன். " என அழைத்தார்.

கைலாஷ் பேச்சைக் கேட்கவுமே, உருகிப் போன பாரு என்ற பைரவி பாய் போஸ்லே, " துல்ஜா பவானி, எனக்காகச் சரியான வரனைத் தான் அனுப்பியிருக்கா. ஆனால் இப்போ உங்களைக் காக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்கு. என் கூட வாங்க" என, கைலாஷை, கைப்பிடியாக இழுத்தவர், " பாய்சாப், நீங்களும் வாங்க" என விஜயனையும் அழைத்தபடி தனது காரை ஓட்டப் போக, பாருவை நகர்த்திவிட்டுக் கைலாஷ் காரை எடுக்க, வேறு வழியில்லாத விஜயனும் பின்னோடு ஏறிக் கொண்டார்.

நிலவு வளரும்.


Thursday, 13 January 2022

யார் இந்த நிலவு-11

 

 யார் இந்த நிலவு-11

கைலாஷ், இத்தனை வருடங்களாக யோசிக்கவும் நேரமின்றி வேலை வேலையெனப் பறந்தவர், ஆதிராவை வீட்டிற்கு அழைத்து வரவும் தனது வழக்கமான நடைமுறைகளை மாற்றியமைத்திருந்தார்.

காலை முதல் மாலை வரை பேக்டரி, ஆபீஸ் எனச் சுற்றியலைபவர், தொழில் சார்ந்த கூட்டம், பார்ட்டி என இரவு நேரங்களைப் பொழுது போக்குபவர், எதுவுமே இல்லையெனில் இவரைப் போன்றே இருக்கும் எலைட் க்ரூப் மக்களோடு, தனது கவலையை மறக்க, மதுவும் அருந்தி விட்டு வருவார். சத்தியன் கூடவே இருப்பதால், அவருக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த லிமிட் தாண்டும் முன் ஏதாவது ஒரு வழி தேடி அவரை அழைத்து வந்து விடுவான். இந்த ஊரில் அவரது மறுபக்கமாக மற்றொரு கடந்த கால வரலாறு ஒன்றிருப்பது யாருக்காவது தெரியுமெனில் அது சத்தியனுக்கும், விஜய ரங்கனுக்கும் மட்டும் தான். எதுவுமே முடியாமல் அவர் எழு மறுத்தால், சத்தியன் விஜயனுக்குத் தான் போன் அடிப்பான். 

அவர் அடுத்த அரைமணியில் வந்து சேர, விஜயனைப் பார்த்த நொடியிலிருந்து அவரைத் திட்ட ஆரம்பிப்பார் கைலாஷ். " சரி வா, கார்ல போயிக்கிட்டே, என்னைப் பேசலாம்" என்றபடி அவரது பங்களாவுக்கு அழைத்து வருபவர், நண்பன் ஆழ்ந்த நித்திரைக்குப் போகும் வரை கிளம்ப மாட்டார். மற்ற நேரத்தில் இருவருக்குமான பேச்சு வார்த்தை கூட இருக்காது, அதிலும் முகத்தைத் திருப்பிச் செல்பவர் கைலாஷ் தான்.

இந்த ஒருவாரத்தில் அதையெல்லாம் ஒத்தி வைத்து , ஆதிராவுடன் நேரம் செலவழித்தார். மாலை நேரங்களில், அலுவல் முடிந்து வரவும், மாலைச் சிற்றுண்டியோடு, அன்று அவள் அபிராமிடம் கற்ற விசயங்களைப் பற்றி அவரோடு பகிர்ந்து கொண்டு சந்தேகங்களைக் கேட்பாள். அவரும் அதற்கான விளக்கங்களைச் சொல்ல, அவர்களது பொழுது சுவாரஸ்யமாகவே கழிந்தது. அந்த நேரத்தில் அபிராம் பற்றியும் பேச்சுக் கொடுத்து , அவள் வாயிலாகவே அவனைப் பற்றிய கருத்தையும் அறிந்து கொண்டார்.

ஒரு நாள் தயங்கி, தயங்கி கௌரி மாஸியிடமும் சொல்லாத உண்மையை , இரண்டு ஆட்கள் தன்னைத் துரத்தியதையும், தான் அபிராம் வண்டி முன் விழுந்ததையும் ஆனால் அவனுக்குத் தன்னை அடையாளம் தெரியவில்லை போலும் என்ற தனது அனுமானத்தையும் ஒளிவு மறைவின்றி அவரிடம் ஒப்பித்தவள்,

 " நான் அவருக்கு நன்றி சொல்லனும், ஆனால் வாலண்டைரா போய் அவரே மறந்ததை ஞாபகப் படுத்தவும், அன் ஈசியா இருக்கு, க்யா கரூங்" என அவரையே யோசனைக் கேட்கவும்,' அவனுக்கா ஞாபகமில்லை, மாமனை மாதிரியே திருடனா இருக்கான்' என மனதில் சிரித்தவர்,

"அவனே மறந்ததை நீ எதுக்கு ஞாபகப்படுத்துற, அப்புறம் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டான்னா, அப்படி எல்லாம் யாரையும் உடனே நம்பக் கூடாது" என அவர் அறிவுரை வழங்கினார்.

" ஆனால், ராம் சாப் பார்த்தா அப்படித் தெரியலை பாபாசாப்" என அவன் சார்பாகப் பேசியவள்," இவ்வளவு சொல்றீங்க, நீங்க எப்படி என்னை உடனே நம்புனீங்க" என எதிர்க்கேள்வி கேட்கவும், சிரித்தவர், 

"என் வயசுக்கான அனுபவம் இல்லையா, மனுசங்களை எடை போட தெரியாமலா, இவ்வளவு பெரிய பிஸ்னஸ் நடத்துவேன்" எனச் சிரித்தவர், " அதை விட, இப்படி ஒரு தங்கப் பொண்ணைத் தனியா போராட விட்டுட்டு உன் அப்பா என்ன பண்றான். " எனக் கடுமையான வார்த்தைகளால் அவள் தந்தையைச் சாடவும்,

" ஒரு வேளை அவருக்கு, இப்படி ஒரு மகள் இருக்கிறதே தெரியாமல் இருக்கும். " எனக் கண் கலங்கியவளை, " என்னடா சொல்ற, அப்படி எப்படி ஒரு அப்பன் இருப்பான். என்னால இதை ஒத்துக்கவே முடியாது" என்றார்.

சோகமாகப் பார்த்தவள், " அப்படித் தான் பாபாசாப் இருக்கனும், என் ஆயி, பாபாவைக் குறை சொன்னதே இல்லை. எங்க லிபி ன்னு தான் சொல்லுவாங்க "என நெற்றியைக் கோடிட்டுக் காட்டியவள்,

" சரி விடுங்க, ஔர் சே மஹினே, பாபா கிட்ட கூட்டிட்டு போறேன்னு சொல்லியிருக்காங்க. அது வரைக்கும் பாபாசா ப்யார்ல நனைஞ்சுக்குறேன் " என்றவளை, வாஞ்சையாக அணைத்துக் கொண்டார்.

நான்கு நாட்களிலேயே ஒரு பெண் பிள்ளை வீட்டிலிருப்பதற்கான தாக்கத்தை ஆதிரா, கைலாஷிடம் ஏற்படுத்தியிருந்தாள். எங்கெங்கு காணினும் சக்தியடா, என்பது போல் வீட்டில் வளைய வந்தவள், அந்த வீட்டின் ஒவ்வொரு விசயத்தையும் ரசித்தாள். 

பித்தளை குவளையில் கடனுக்கு நிரப்பப்பட்ட மலர்கள் கலையழகோடு அடுக்கப்பட்டன. உணவில் உப்புக் காரம் ருசியைத் திருத்தியவள், அவருக்கும் அது பிடித்திருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டாள். பூஜையறையில் விளக்கேற்றி காலை மாலை துல்ஜா பவானி துதி பாடப்பட்ட போது, கைலாஷ் பழைய நினைவில் உணர்ச்சி வயப்பட்டுப் போனார்.

இரவு உணவுக்குப் போனில் பேசிக் கொண்டு, கணினியில் மும்மரமாக இருந்தாரெனில் அவருக்காகச் சாப்பிடாமல் காத்திருப்பாள். அவர் சாப்பிடச் சொல்லி சைகை காட்டினாலும் மறுத்து விடுவாள். அதனால் அவசரமாகப் பேச்சை முடித்துக் கொண்டு வந்து, இருவருமாகப் பேசியபடி சாப்பிட, இருவருமே நன்றாகச் சாப்பிட்டார்கள்.

அன்று சாப்பிட்ட பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், "பாபாசாப் நான் ஒன்னு கேட்கட்டா" என்றாள், அலுவலகச் சம்பந்தப்பட்டதோ என , "என்னடா" என்றவரிடம், " நீங்க ஏன் ஸாதி செஞ்சுக்கலை. இப்பவே இவ்வளவு ஹேண்ட்சம்மா இருக்கீங்க. அப்ப இன்னும் சார்மிங்கா இருந்திருப்பீங்களே, உங்களை யாரும் லவ் பண்ணலையா" எனவும் சட்டெனச் சிரித்தவர்,

" தாங்க்யூ ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட் ரஜ்ஜும்மா. நேசிப்பதும், நேசிக்கப்படுவதும் வரமே! அந்த இரண்டு வரமும் எனக்குக் கிடைச்சது " என்றவர்,

 " நீ கேட்டியே, உன்னை எப்படி நம்பினேன்னு, ஏன்னா முதல் முறை நீ இன்டர்வ்யு தரும் போது, துல்ஜா பவானி துதி சொன்னதிலிருந்து, ஒவ்வொரு அசைவிலையும் நீ என் பாருவை ஞாபகப்படுத்துற. பாரு என் உயிரில் கலந்தவள், அந்த முகத்தை நம்பாமல் எப்படி இருக்க முடியும். பாருவை தான் தொலைச்சிட்டேன். அவள் ஜாடையிலிருக்க உன்னை என் பக்கத்தில் வச்சக்கனும்னு ஆசை வந்தது. நேரில் பார்க்கத் தான், ஆபீஸ்க்கு வரச் சொன்னேன். அப்பவே உனக்கான அப்பாயிண்மெண்ட் ஆர்டர் ரெடி " என்றவர், தானாக யாரிடமும் சொல்லாத தன் வாழ்க்கை புத்தகத்தின் பழைய பக்கங்களைப் புரட்டி, பாருவின் அம்சமாகப் பார்க்கும் ஆதிராவிடம் பகிர ஆரம்பித்தார்.

ஆதிராவும் ஷோபாவில் அவர் பக்கம் திரும்பி அமர்ந்து, குசனை மடியில் வைத்து , அவர் கையைப் பற்றியவாறு, அவர் முகத்தை ரசனையோடு பார்க்க, " என்னடா படம் பார்க்கிறமாதிரி உட்கார்ந்து இருக்க" என ஓர் சிரிப்பை உதிர்த்தார். , " பாபாசாப், கஹியே னா, பாரு' ன்னு சொல்லவுமே, யூ லுக் ஸோ ரொமாண்டிக் " என மகள் சொல்லவும், இந்த வயதிலும் , இத்தனை வருடங்கள் கழித்தும் ஒருவர் தன் இணையை நினைக்கவும் இவ்வளவு உருக முடியுமா என ஆதிராவுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அதிலும் அவர் தான் பாருவின் சாயல் என்ற பொழுது, இவருடைய இந்தக் காதலைப் பெற, அந்த ' பாரு' எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும், என்றும் ஒரு பெண்ணாக லேசான பொறாமையும், தன்னையும் இப்படி யாராவது உருகிக் காதலிப்பார்களா என்ற ஏக்கமும், அப்படி நினைத்தவுடன் " என் வைஃபை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன் " என அந்த ஆட்களை மிரட்டிய ராமின் முகமும் நினைவில் வந்தது. ஒரு நிமிடத்தில் தறி கெட்டு ஓடிய நினைவை கைலாஷின் வார்த்தைகள் வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.

" ஆயி துல்ஜா பவானி, நீ வணங்குற அம்மன், அந்த ஆயி தான் என் பாருவையும் என்கிட்ட கொண்டு வந்து சேர்த்தது" என்றவர், அன்னையின் சன்னதியில் பாருவைப் பார்த்ததை வர்ணித்தார். 

"பூரண நிலவை ஒத்த பிரகாசமான அந்த முகத்தில் பிறை நுதல் னு எங்க மொழியில் நெற்றியை சொல்லுவாங்க, அந்தப் பிறைநுதலில் , அரைச் சந்திரனைத் திலகமாக வச்சிருந்தா. கூர்நாசி, அதிலே ஒரு மூக்குத்தி- நத் . அழுத்தமான அதரங்களில் அவளது முத்துப் புன்னகையை மறைச்சு வச்சிருந்தா,அவளது கண்கள், ஆயி பவானியின் வாளின் கூர்மை, அந்த வீச்சுலையே இந்த இதயத்தைக் கொள்ளையடிச்சிட்டா. " எனப் பாருவின் நினைவில் தன்னை மறந்து இருந்தவர், 

" முதல் பார்வையிலையே ஓர் பிரம்மிப்பு , எனக்காக இறங்கி வந்த ராஜகுமாரியோன்னு ஆச்சரியம். இத்தனைக்கும் அந்த நாளில் அவள் வேதனையைச் சுமந்து ஒரு கோரிக்கையோடு தான் அங்க இருந்திருக்கா. அதற்கான தீர்வு நான் தான்னு, ஆயி பவானி காட்டினாளாம்" என முதல் சந்திப்பிலேயே அவர் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

" இரண்டாவது முறை எங்க சந்திச்சிங்க பாபாசாப்" என அவள் தூண்டவும்,

" அது தான்டா ஆச்சரியம். நானும், என் ப்ரெண்டும், அப்ப சோலாப்பூர்ல ஒரு மில்ஸ் ல புதுவகைப் பவர் லூமை பற்றித் தெரிஞ்சுக்கிறதுக்காக வேலைக்குச் சேர்ந்து இருந்தோம். அங்க தான் அவளை அடுத்த முறை பார்த்தேன்" என மலரும் நினைவுகளுக்குச் சென்றார்

கைலாஷ் தனது தந்தையுடன் தொழிலைப் பார்த்து வந்தவருக்கு, படிப்பின் ஆர்வத்தால் , புதிய டெக்னாலஜிகளைப் பயன்படுத்தி இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற பேராவல் இருந்தது. அவரது தேடலும் அதைத் தொடர்ந்தே இருக்க, அதனைப் பற்றி அறியப் பணமோ, காலமோ, உழைப்போ போட தயங்க மாட்டார். அதன் படி இருபத்தியோரு வருடங்களுக்கு முன், அபிராமின் தந்தை விஜய ரங்கனோடு சோலாப்பூர் சென்றார்

அப்போதே நாற்பதாண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிரசித்திப் பெற்றது பிபி மில்ஸ். இப்போது போல் அல்லாமல் இந்தியாவில் டெக்னாலஜி முதலில் வந்து அறிமுகமாவதும், உபயோகிப்பதும் பாம்பே காரர்களாகவே இருக்க, அதனருகில் உள்ள மில்களே அசுர வளர்ச்சியும் கண்டு நின்றது. அப்படி நின்ற மில்களில் ஒன்று தான் "பிபி மில்ஸ் "

பிபி மில்லில் வளாகத்தில் தான், கைலாஷ் தான் கோவிலில் சந்தித்த பாருவை இரண்டாம் முறையாகப் பார்த்தார். அதுவும் தனக்கு மேலதிகாரியாக, தொழிலாளர் நலன் காக்கும் ஹெச், ஆர் மேனஜராகப் பார்க்கவும், தானாகப் போய்ப் பேசக் கிளம்பிய ஆர்வத்தை, விஜயன் அருகிருக்கவும் குறைத்துக் கொண்டார். ஆனால் பாருவின் பார்வையில் ஓர் ஆச்சரியம். ஆனாலும் அவளும் வேறு எதுவும் பேசாமல் தன் வேலையைப் பார்க்கச் சென்று விட அடுத்தச் சந்திப்புக்கான காரணத்தைத் தேடினார் கைலாஷ். அதுவும் அடுத்தத் தினமே நடந்தேறியது.

" கோவில்ல பார்த்தப் பொண்ணுன்னு ,இங்கையான்னு எனக்கு ஒரே ஆச்சரியம். அதுலையும் அன்னைக்குப் பார்த்ததை விட இன்னைக்கு இன்னும் மிடுக்கா, ராணி மாதிரி இருந்தா. வொர்க்கர்ஸ்க்கு ஏதாவது குறை இருக்கான்னு விசாரிக்க வந்தாலாம். கண்ணில் ஒரு ஆளுமையோட, சிநேகமும் இருந்தது. வரிசையா ஒவ்வொருத்தர்கிட்டையா பேசிட்டே வந்த அம்மணி , நானும் என் ப்ரெண்டும் இருந்த இடத்துக்கும் வந்துச்சு. சரி நம்மளை எங்க ஞாபகம் இருக்கப் போகுதுன்னு, நான் கட்டுப்படுத்திக்கிட்டு நின்னேன்." என்றவர் கண்களில் ஓர் ரசனையோடு அதே காட்சியைக் காண்பது போல், பாவனை.

" பாருவோட அந்தப் பார்வை, நேரா ஹார்ட் டச்சிங் தான். ரொம்ப நாள் பழகினது போல, நீ இங்க தான் இருக்கியாங்கிற மாதிரி, என்னோட பேசினது. அதுக்கப்புறம் என்னை ஆராயும் பார்வை. அம்மணியும் ஆர்வமா பார்க்குதேன்னு எனக்கு மனசுக்குள்ள ஒரே பரபரப்பு தான். யூனிபார்ம் ல இருக்கமே, ட்ரெஸ் கசங்கி இருக்கோ, தலை கலைஞ்சு இருக்கோன்னு , இன்னைக்கு ஷேவ் பண்ணலையே தாடி இருக்குமோ, நம்ம அவ கண்ணுக்கு எப்படித் தெரியுறமோன்னு ஒரே பரபரப்பு. " என டீன் ஏஜ் பையன் போல் அவர் சொல்லவும் , ஆதிரா சிரித்து விட்டாள்.

 " ஜெண்ட்ஸும் இப்படி எல்லாம் யோசிப்பீங்களா " என ஆச்சர்யமாகக் கேட்டவள் ,'அபிராமும் இதே போலச் செய்வானோ " என இரண்டாம் முறையாக அவரோடு ஓப்பிட்டது, பாபாசாப் பார்வை தன்னைத் துளைப்பதை கண்டு,

" சும்மா கேட்டேன், உங்களுக்கென்ன பாபாசாப், அவுங்க ராஜகுமாரின்னா, நீங்க ப்ரின்ஸ் மாதிரி சார்மிங்கா தான் இருந்திருப்பிங்க" என்றாள் . அவர் ஹாஹாவெனச் சிரித்தவர், 

" பாருவுக்கு நான் அப்படி எல்லாம் தெரிஞ்சனோ இல்லையோ, அவளுக்குச் சில நம்பிக்கைகள் உண்டு. அதைப் பிடிச்சிக்கிட்டு தான் என்னை ஏத்துக்கிட்டா. " என்றவர் மனதில்

 ' அவளோட அந்த நம்பிக்கை ஏன் அவளைக் காப்பாற்றலை. ஆயி துல்ஜா பவானி உன்னைத் தானே நம்பினாள். இன்னைக்கும் அவள் இருந்திருந்தா, இந்த ரஜ்ஜும்மா மாதிரி நமக்கும் ஒரு பொண்ணு இருந்திருக்குமே. உரிமையா என்னை அப்பான்னு கூப்பிட்டு இருக்குமே ' எனப் பவானி அம்மனை கேள்வியால் துளைத்துக் கொண்டுருக்க, இரண்டு மூன்று முறை பாபாசாப் என அழைத்தும் அவர் நினைவுகளில் தொலைந்திருக்க ,

 " அப்பா, உங்க ரஜ்ஜும்மா எதிர்த்தார் போல உட்கார்ந்து இருக்கேன்" எனக் கைலாஷை உலுக்கினாள். அவர் வார்த்தைகளில் மீண்டவர், அவளை வாஞ்சையாகப் பார்க்கவும்,

" பாருவை சொல்லிட்டு இருந்தீங்க. அவுங்களோடவே காயப் ஹோ கயி(காணாமல் போயிட்டிங்க). அவங்களைப் பற்றிப் பேசும் போது, உங்க கண்ணில் கித்னா ப்யார் , ஷீ இஸ் கிப்ட்டட். " என்றவள், " உங்களைப் பார்த்து என்ன சொன்னாங்க" என ஒரு காதல் கதை பார்ப்பது போல் அவள் ஆர்வமாகக் கேட்டாள்.

நகைத்த கண்களோடு ,கன்னங்கள் பளபளக்க கைலாஷ் , " அவள் எங்க என்கிட்ட பேசினா, பக்கத்திலிருந்த விஜயனைத் தான் விசாரிச்சா. எனக்கு ஒன்லி லுக் தான்" எனவும், " போங்க பாபாசாப், அதுக்கே நீங்க இவ்வளவு பில்டப் குடுக்குறீங்க" என அவள் ஏமாற்றமாகச் சொல்லவும்,

" அப்படி இல்லடா ரஜ்ஜும்மா, இரண்டு பேர் மனசால நெருங்கி இருக்கும் போது, நீ முன்னப் பின்ன பேசலைனாலும், ஒரு பீல் இருக்கும். அங்க பேச்சுக்கே அவசியமில்லைடா." என விளக்கவும்,

" மஸ்து, படியா மஸ்து, நீங்களாவது பேசுனீங்களா" எனக் கேட்டாள் ஆதிரா.

" இப்ப தான் நீயே சொன்னியேடா, அப்பா ப்ரின்ஸ் சார்மிங்க்னு, அதே கெத்தோட தான் நின்னனாக்கும். " என அவர் தற்பெருமை பேசவும், அடுத்து என்பது போல் அவள் பார்க்க, " வெளியில தான் கெத்துக் காட்டினேன். உள்ளுக்குள்ள ஒரு பயம் தான். அம்மணி வேற மிடுக்கான ஆளு. பார்த்தாளே பெரிய இடம்னு தெரிஞ்சது. அப்படியே மெயின்டைன் பண்ணிட்டேன். " என்றவர் .

" பேசலை, பழகலை ஒன்னும் பண்ணலை. இப்படியே ஒரு மாசம் ஓடிச்சு. தினமும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்குவோம். போகும் போது இலேசா தலையைத் திருப்பி ஒரு ஸ்மைல், அதுலையே அப்பா அவுட்டாகிட்டேன் " என அவர் இதயத்தைத் தொட்டுக் காட்டவும், ஆதிராவும் அவரது காதலை உணர்ந்தாள்.

"ஆனால் என் பாருவை , ஒருத்தன் மிரட்டினதைப் பார்க்கவும் வந்துச்சுக் கோபம், போய் அவன் சட்டை பிடிச்சுட்டேன். " எனவும் " ஓ காட், யாரது " என விவரம் கேட்டாள் ஆதிரா.

" அங்க தான் பிரச்சனையும் ஆரம்பிச்சது. ஏன்னா நான் சட்டையைப் பிடிச்சது, பாருவோட அக்கா புருஷனை. நீ யாருடா அதைக் கேட்கிறதுக்குன்னு அவன் மராட்டியில் கத்தினான். திரும்பி நானும் கத்தினேன், எல்லாரும் ஸ்டன் ஆயிட்டாங்க. " என்றார் கைலாஷ்.

" அப்படி என்ன பாபா சொன்னீங்க" என ஆதிரா ஆவலாகக் கேட்டாள்.

" நான் அவள் புருஷன், துல்ஜா பவானி கோவில்ல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு சொன்னேன்" எனச் சாவகாசமாகச் சொன்னார்.

" பாரு , என்ன சொன்னாங்க." எனவும் " அமைதியா தலையைக் குனிந்து நின்னவ, கையை நீட்டி கண்ணாடி வளையலை காண்பிச்சா. அது அன்னைக்கு என் பூஜை தட்டிலிருந்து, அவளோட பூஜை தட்டில விழுந்தது. அந்த ஆள் ஏதோ கத்திட்டுப் போயிட்டான். பாரு என்னைப் பார்த்தவ, வாங்கன்னு கூட்டிட்டுப் போனா. அவள் கூடப் போன பிறகு தான் தெரிஞ்சது. நான் சூடான தோசை கல்லுல நட்ட நடுவில் கை விட்டுருக்கேன்னு. " என்றார்.

கைலாஷ்க்கே அதிர்ச்சி தந்த இந்தப் பாரு யார்.

நிலவு வளரும்.