சிந்தா- ஜீவநதியவள் -7
மேலப் பூங்குடி கிராமத்தில் சூரியன் சுள்ளெனக் கிளம்பும் முன்னே புறப்பட்ட தண்டோராக்காரன் தனக்கு அளிக்கப்பட்ட வேலையான கிராமசபைக் கூட்டம் கூடும் செய்தியை ஊர் முழுவதும் கூவிக் கூவி செய்தி சொல்லும் வேலையைச் செவ்வனே செய்தான்.
" இதனால , எல்லாருக்கும் தெரிவிக்கிறது என்னானன்னா, நம்ம அய்யன் கோயில் திருவிழா பத்தியும் , குதிரை எடுக்கிறது சம்பந்தமா பேச நாளைக்குக் காலையில கிராம சபை நம்ம மந்தையில் கூடுது. வீட்டுக்கு ஒரு ஆள் தவறாம, கட்டாயம் வரனுமுன்னு, ஊர் தலைவரு, தலையாரியும், பிரசிடென்டும் கேட்டுக்குறாக. " என அந்தத் தெரு முக்கில் நின்று கட்டியம் கூறி விட்டு, தண்டோரா காரர் அடுத்த முக்குக்குச் செல்ல ஊர் பையனும் பிள்ளைகளும் பின்னாடியே சென்றன.
" தண்டோராகாரவுக என்ன சொல்லிட்டு போறாக" என அவசரமாகப் புழக்கடைப் பக்கமிருந்து வந்து, ஆண்டிச்சி கிழவி கேட்கவும்,
"உனக்குத் தான் ஊர் மத்தியில சிலை வைக்கப் போறாகலாம், அதுக்குத் தான் கூட்டம் போடுறாக " என அவர் வயதே ஒத்த இருளி வக்கணை பேசவும்,
" இந்தக் குசும்பு தானே வேணாங்குறது, எனக்குக் கஞ்சி ஊத்தவே ஆளக் காணோம் , இதில் சிலை வக்கிறாகலாம். சேதி என்னன்னு சொல்லுடி" என ஆண்டிச்சி ஆவலாகக் கேட்கவும்.
" நீ தான் கொமரி கணக்கா, நடந்துக்கிட்டு இருப்பியே, பின்னாடியே போய்க் கேக்க வேண்டியதானே" என இருளி விஷயத்தைச் சொல்லாமல் இழுத்தடிக்கவும் ,
" உன் பேரன் பாயில பேழ்றதையே ஒன்றரை நாளைக்கு நீட்டி முழுங்கிச் சொல்லுவ, உன்னைய போய் விவரம் கேட்டேன் பாரு" எனச் சலித்துக் கொண்டு, எதிரே வந்த இளவட்டம் ஒருவனிடம் வாயைப் பிடுங்கி விசயத்தைக் கறந்த ஆண்டிச்சி, " அய்யன் கோயில் குதிரை எடுக்கப் போறாகலா , நல்ல விசயம் தான், எப்படியாச்சும் காஞ்சுகிடக்குற வறண்டபய ஊருக்கு மழை வரட்டும் . கொசவ வீட்டு ஆளுகளுக்கு வரும்படி தான்" என அதிலும் ஒரு பொறாமைப் பேச்சோடு வள்ளி வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினார்.
" இந்தக் கிழவிக்குக் குசும்பைப் பாத்தியா பெருமாயி , நான் ஒன்றரை நாளைக்குப் பேசுவேனாம். " என டீக்கடை பெருமாயிடம் வந்து புலம்பிய இருளி, " ஏத்தா, நேத்து இரவைக்கு உன் மவன் சோமுவா வந்துட்டு போச்சு, அப்பப்ப வரப் போகத் தான் இருக்குதாக்கும்" என நைசாக விசாரித்தார்.
" அவனே ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா, வாரான். உனக்கு அது பொறுக்கலையா" எனப் பெருமாயி கோபமாகக் கேட்கவும்
" இதுக்கு எதுக்குக் கோவிக்கிறவ, ஏதோ லோடு ஏத்திட்டு வடக்கப் போகும்பாகலே வந்திருகான்னு கேட்டேன். " எனவும், " அது தான் தெரியாது, தெரியாதுன்னு வாய்பரப்பாவே அம்புட்டையும் அறிஞ்சு வச்சிருக்கிகல்ல, நீங்க இரண்டு கிழவியும் போதும், நம்மூருக்கு ரேடியோ போட்டியே தேவையில்லை , நீங்க அறியாமல் ஊருக்குள்ள ஒரு விசயம் நடந்திருமா " எனத் திட்டி விட்டு, தன் வேலையில் கவனமானார் பெருமாயி.
இவரது மகன் சோமன் தான், சிந்தாவிடம் முறை தவறியது, அதன் பிறகு அதிகம் ஊரில் நடமாட்டம் இல்லை. மேலப்பூங்குடியிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் ஒரு வடக்கத்திக்கார சேட்டின் கரி மூட்டம் போடும் பெரிய கம்பெனி இருந்தது. சுற்று வட்டாரத்திலிருந்து சீமைக்கருவை மரங்களை வெட்டி லோடு லோடாக அங்குத் தான் கொண்டு வருவார்கள். விறகுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, புகை வெளியேறாத மூட்டம் போட்டு கரியாக்கி அதனைப் பொடியாக்கி அதனை வடக்கே அனுப்புவார்கள். புகை மூட்டம் போடுவதற்காக அவர்களிடம் மட்டுமே நிரந்தரமான கலன்கள் உண்டு. மற்றபடி வேறு வரும்படி இல்லாத விவசாயிகள், தாங்களாகச் சிறிய அளவில் கரி மூட்டம் போட்டு, ஹோட்டல்களுக்கு அதனை விற்றுக் காசாக்கி பிழைப்பை ஓட்டுவார்கள்.
ஆனால் வடக்கத்திக்காரன் தங்கள் தொழிலுக்காகவே ஒவ்வொரு ஊரிலும் முக்கியமான ஆட்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு சீமை கருவை மரத்தை வேரோடு வெட்டாமல் வளர வளர அதை வெட்டி அதன் மூலம் ஆதாயம் காண்கிறான். இதில் கிராமத்தின் கன்மாய்கரைகளில் வளரும் மரங்களைக் குத்தகைக்கு எடுப்பவன் விறகு வெட்டுபவன், கம்பெனி, கிராமத்துக்கும் வருமானம் என எல்லாருக்குமே ஆதாயம் இருப்பதால் அதனை ஊக்குவித்து அதையே ஒரு சார்பு தொழிலாகச் செய்கின்றனர்.
தண்டோரா செய்தியைக் கேட்ட குமரன் குதிரை எடுப்பு பற்றிய அதன் விவரத்தை, பெரியப்பாவிடம் கேட்டான்.
" இந்தக் கிராமத்தில் மழை பொய்த்துப் போய்ப் பயிர் விளையலை, பஞ்சம், பட்டினி ,நோய் ,நல்லது கெட்டது அம்புட்டுக்கும் அய்யனார் தான் தீர்வு. அவருக்கு மண் குதிரை செஞ்சு வச்சா, கோவம் குறை இருந்தாலும் பொறுத்துக்கிட்டு அய்யனார் காத்துக் கொடுப்பார்னு நம்பிக்கை" என்றார் மகாலட்சுமி.
" இந்த ஊர்ல இருக்கச் சீமைக்கருவை மரத்தை அழிச்சாளே, நிலத்தடி நீர் உயரும், காற்றில் ஈரப்பதம் இருக்கும், பயிர் பச்சை விளையும், ஊரு நல்லா இருக்கும், அதைச் செய்ய மாட்டேங்கிறாங்க . அதை விட்டுட்டு குதிரை எடுக்கிறேன், தேர் இழுக்குறேன்னு, இதெல்லாம் சொல்லமாட்டிங்களா பெரியப்பா" எனக் குமரன் ஆதங்கப்படவும்.
" தம்பி நீ பாட்டுக்கு நாத்திகனாட்டம் பேசாத. இந்த ஊர்காரவுகளே ஐஞ்சாறு வருசத்துக்கு ஒருக்கா தான், புத்தி வந்து சாமி கும்புடுங்க. நீ அதையும் கெடுக்காத" என ராஜேஸ்வரி கொழுந்தன் மகனைக் கண்டித்தார்.
" உங்க பெரியம்மாளுக்கு, நீ பேசுறதே கூடத் தெய்வகுத்தம் ஆயிடுமோன்னு பயம்" என்ற மகாலிங்கம், " சரி நீ சீக்கிரம் சாப்பிட்டுக் கிளம்பு, மகேஷ் ரெடியாகிடுச்சா. இந்தப் பரிட்சை எழுதி வேலைக் கிடச்சா அவுங்க அப்பா வேலைக்கு அனுப்புவானா என்ன, அதுக்குள்ள மாப்பிள்ளை தேடிட்டு திரியிறானே" எனக் கேள்வி எழுப்பினார் பெரியவர். மகேஷும், முத்துவுமாக, டிஎன் பி எஸ் சி பரிட்ச்சை எழுத இன்று மதுரைக்குச் செல்கிறார்கள்.
மதுரைக்குக் கிளம்ப ரெடியாக வந்த மகேஷ்வரி, " அதெல்லாம் கட்டாயம் வேலைக்குப் போவேன்னு சொல்லியிருக்கேன் பெரியப்பா. கவர்மெண்ட் வேலை கிடைக்கும்னா போகலாமாம். அப்ப மாப்பிள்ளை தேடி வருமாம். நகை குறைச்சுப் போட்டுக்கலாமாம், அதுக்காக , தெரியாத படத்தைக் குமரன் அண்ணன்கிட்ட கேட்டு படிச்சுக்கன்னு நேத்தே அனுப்பி விட்டாக" என அவளும் தனக்கு அனுமதி கிடைத்த விவரத்தை, தனது அப்பாவைக் கேலி செய்து கொண்டே விஷயத்தைச் சொல்லி முடித்தாள்.
" உங்கப்பன், பெரிய ப்ளானாத் தான் போடுறான் போ" என்றவர், " குமரா, சட்டுனு கிளம்பு. சிவகாமி எந்திருச்சிடுச்சா. நீயும் இல்லைனா அதைச் சமாளிக்கச் சிரமம் தான் தூக்கிட்டுப் போயிட்டு வா. அப்பத்தான் அந்திசாயும் முன்ன உங்க அண்ணனையும், அண்ணியும் கூட்டிட்டு வரலாம்" என அறிவுறுத்தினார் பெரியவர். "இதோ சாப்புட்டு கிளம்ப வேண்டியது தான்" என அவனும் உள்ளே சென்றான்.
சிவகாமியைக் குளிப்பாட்டித் தூக்கி வந்து ஹாலில் அமர்ந்த ராஜேஸ்வரி, " மகேஷ், உனக்கும் அண்ணனுக்கும் டிபன் எடுத்து வச்சிருக்கு சாப்பிடுங்க, சமையக்காரக்காட்ட பாப்பாவுக்குப் பால் கலக்கச் சொல்லு" என்றவர் காலை நீட்டி வாசலுக்கு நேராக உள்ளே உட்கார்ந்திருக்க வாசலில் அய்யனார் முத்துவோடு நின்றார். பரீட்சைக்குச் செல்ல முத்துவை அய்யனார் அழைத்து வந்தார், அவர் தான் முதலில் மதுரைக்கும் அழைத்துச் செல்வதாக இருந்தார், குமரன் மகேஷோடு அவளையும் அழைத்துச் செல்வதாகச் சொல்லவும், முதலில் தயங்கினார்கள், மகாலிங்கமும் , ராஜேஸ்வரியும் பேத்தியையும் அழைத்துச் செல்லவேண்டும் எனவும் ,முத்துவை சிவகாமி பழகி இருப்பதால் தகராறு செய்யாமல் வரும் என வலியுறுத்திச் சொல்லவும், சரி என்று விட்டார். தயங்கியபடியே வெளியே நின்றவர்களை, ராஜி உள்ளே அழைத்தார். அய்யனார் மகளை உள்ளே அனுப்பி விட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டார்.
" முத்து நல்ல நேரத்தில வந்த, சீக்கிரம் வாத்தா, இந்தப் பாப்பாவைக் கிளப்பி விடு, பரீட்சைக்குப் போற புள்ளைகளுக்கு , இவுகளால லேட் ஆக வேணாம் " எனப் பெரியவீட்டம்மா உதவிக்கு அழைக்கவும், வேகமாகப் படியேறி வந்தாள் முத்து. சிவகாமி முத்துவைப் பார்க்கவும் சிவகாமி, சிரித்து மகிழ்ந்தது.
" ஆத்தி, சிட்டுக் குட்டி குளிச்சிட்டீகளா " எனக் கொஞ்சிக் கொண்டே, கீழே அமர்ந்து, சிவகாமியை மடியில் போட்டு உடம்பைத் துடைத்து, பவுடர் அடித்து மையிட்டு என அதற்க்கு அலங்காரம் செய்தாள்.
"முத்து, கிளம்பி வந்திருக்க, மடியில டவளைப் போட்டுக்கோ" என்றவர், " குமரா ஒரு டவள் எடுத்துக் குடுய்யா" என அழைக்கவும், பேண்ட் அணிந்திருந்தவன், சட்டையை ஒரு கையில் எடுத்துக் கொண்டு முத்து இருப்பதை அறியாமல் இயல்பாக வந்து பெரியம்மாவிடம் தரவும், பனியனோடு அவை பார்த்த முத்துவுக்குத் தான் மூச்சடைத்தது. தலையைக் குனிந்து கொண்டாள்.
அடுத்தடுத்து, சிவகாமிக்குத் தேவையானதை அவனையே எடுத்துக் கொடுக்கச் சொல்லி விட்டு, பேத்திக்கு பால் கொண்டுவரச் சென்றார்.
" பெரியம்மா , ஒரு சட்டையைப் போட விடுறீங்களா" எனக் குறைபட்டுக் கொண்டே வந்து முத்துவிடம், ப்ராக், நேபி என ஒவ்வொன்றாய் நீட்டினான். அப்போதும் நிமிராதவள், கீழே வைக்கச் சொல்லிக் கை காட்டினாள். " வாயைத் திறந்து சொன்னா, முத்து உதுந்துடுமோ, நான் மாலை கட்டிப் போட்டுக்குவேன்னு பயம்" என அவன் சீண்டவும் , சுற்றி முற்றிப் பார்த்தவளுக்கு, இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. ஆனால் கை வேகமாகச் சிவகாமியைத் தயார் செய்தது. ராஜேஸ்வரி ,பேத்திக்கு பால் எடுக்கச் சென்றிருந்தார்.
அவளது பதட்டத்தை ரசித்தவன், அண்ணன் மகளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே அங்கேயே நின்றே சட்டையை அணிந்து கொள்ள, சிவகாமிக்குத் தலை சீவி குடுமி போட்டு விட்டவள், " உங்க சித்தப்பாவுக்கு விவஸ்தையே இல்லாமப் போச்சு, வெளி ஆள் உட்கார்ந்திருக்கேனேன்னு கொஞ்சமாவது இருக்காப் பாரு" என முணுமுணுத்தாள்.
தொண்டையைக் கனைத்தவன்," வெளியாள் யாரு இருக்காங்க. என் கண்ணுக்குத் தெரியலை" என்றான். அவனைச் சட்டென நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள், நேசம், ஆசை. காதல், பயம் என அத்தனையையும் காட்டியது. குமரன் ஓர் சிரிப்புச் சிரிக்கவும், மீண்டும் தலையைக் குனிந்துக் கொண்டவள், "நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்கும்மாம் . இன்னைக்குப் பரீட்சை, அதுல பாஸானாதான் வேலைக்குப் போக முடியும், உன் சித்தப்பாட்டை என் பொழப்பை கெடுக்காம இருக்கச் சொல்லுடா சிட்டுமா " எனக் கொஞ்சி சொல்லவும்,
அதனைக் கொஞ்சுவதாகப் பொக்கை வாய் தெரிய அது சிரித்தது. முத்து சிவகாமிக்கு நேப்பியை மாட்ட சிரமப்படவும், அவளருகில் வந்து குனிந்து அண்ணன் மகளைத் தூக்கி நிறுத்திய குமரன், "டி என் பி எஸ் சி ,எழுதுனா , சிங்கப்பூர்ல எப்படி வேலை கிடைக்கும், அதெல்லாம் சும்மா பார்மாலிட்டிக்கு எழுத்த சொல்லுடா தங்கம்" என அவனும் சிவகாமியிடமே பேசவும். அவனை முறைத்தவள், "எங்களுக்கு எதுக்குச் சிங்கப்பூர் வேலை, சென்ட் அடிச்சிட்டு சுத்தவா, நம்ம, நம்ம ஊர்லயே இருந்துக்குவோம்" எனச் சிவகாமியை முழுவதுமாகத் தயார் செய்து, அவனிடம் தந்து விட்டு தானும் எழுந்தாள் .
அவனும் ஓர் புன்னகையோடு 'பார்ப்போம்" என்றான்,
" அண்ணேன் , என்னத்தைப் பார்க்க, பாஸ் பண்ணுவோமான்னு சேலஞ் பன்றிங்களா, நானாவது கோட்டை விடுவேன், முத்துப் பாஸ் பண்ணிடுவா, அதுவும் சவால் விட்டீங்க சுத்தம் , அவள் தான் கட்டாயம் ஜெயிப்பா " என்றவள் "நாமப் போகலாம் ரெடி ." என்றபடி பேக்கை எடுத்துக் கொண்டாள்.
" அடியே மகேஷ், பாப்பா இன்னும் பால் குடிக்கலை" என ராஜேஸ்வரி ஒரு பையோடு வந்தார்.
" இரண்டு பாட்டில்ல குடுத்துடுங்க பெரியம்மா, சிவகாமி முத்துக்கிட்டையே சமத்தா குடிச்சிக்கும் " என்ற குமரன் ,சிவகாமியை முத்துவிடம் கொடுத்து விட்டு காரை எடுக்கச் சென்றான். சிவகாமி ஒரே உற்சாகமாக,அங்கு வைத்த தாத்தா, அப்பத்தாவுக்கு டாட்டா காட்டி சென்றது. " கார்ல போறாகளாம் ,எம்புட்டு உற்சாகம் பாருங்க" என்ற ராஜேஸ்வரி, மகாலிங்கத்திடம் முத்துவும் மகேஷும் தலையசைப்போடு கிளம்பினர்.
இவர்கள் ஏறும் போதே ஊரிலிருக்கும் சில கண்கள் அதைப் பார்த்தன. அய்யனார் கேட்டை திறந்து விட்டுப் பெண்கள் இருவரும் பின்னாள் ஏறிக் கொள்ளவும், ராஜேஸ்வரியிடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்குச் செல்ல, வழி நெடுக விசாரித்தவர்களிடம் பதில் தந்தபடி வீட்டுக்குச் சென்றார்.
சிந்தா, முத்து கிளம்புவதற்காகப் பரபரவெனத் திரிந்தவள், அப்போது தான் ஓய்வாக அமர்ந்தாள். அய்யனார் யோசனையாகவே வந்தார். " என்னப்பா, எந்தக் கோட்டையைப் பிடிக்கப் போற, இம்புட்டு யோசனை" என்றாள்.
"இல்லை சிட்டு, நீ சொன்னைனு சின்னவளை, அந்த வெளிநாட்டுக்கார ஐயாவோட அனுப்பி விட்டேன், அவுக போறவுகளைப் பார்த்துக் கேள்விக் கேக்கிற சனத்துக்குப் பதில் சொல்லமுடியலை. நானே கூட்டிட்டு போயிருக்கலாமோன்னு தோனுது" என்றார்.
" அப்பா, இவுக நினைப்பாக, அவுக நினைப்பாகன்னு காலத்தை ஓட்டினதெல்லாம் போதும்பா. அவளாவது படிச்சு, நல்ல உத்தியோகத்துக்குப் போயி, இந்தச் சாதியெல்லாம், இல்லாத இடத்தில் இருக்கட்டும்" என எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவளைப் பார்த்த அய்யனார்.
" சின்னக் குட்டியை விட , நீ இன்னும் வெடிப்பான ஆளு, இந்தப் பண்ணக்காரன் மவளா இல்லாமல், வேற வீட்டில் பிறந்திருந்தா, அரசாண்டுருப்ப. ம்ம் எம்மவளா பிறந்து, எங்களுக்குச் சேவகம் பண்ணியே ஓஞ்சுப் போன" என வருத்தப்பட்டவரிடம்
" என்னப்பா திடீர்னு உனக்கு இப்படி ஒரு கவலை, இப்ப என்ன எனக்குக் குறையா போச்சு. கல்யாணம் பண்ணியும் பொறந்த வீட்டில ராஜிய்யம் பண்ண எத்தனை பேருக்கு கொடுத்து வைக்கும். அதுவும் கண் நிறைஞ்ச புருஷன், புள்ளைகள், தம்பி தங்கச்சியோட உன்கூடவே இருக்கேன். அடுப்படியிலிருந்து, கஜானா வரைக்கும் அம்புட்டுக்கும் நான் தான் ராணி. ஏன்னு இடிச்சு கேக்க, மாமியா, நாத்தனார் இல்லை. நான் இது வேணும்னு கேக்கும் முன்ன வாங்கியாந்து கொடுக்கிற புருஷன். இதை விட வேற என்ன வேணும்" எனச் சிந்தா வரிசையாகக் கேட்கவுமே,
" அதுக்கில்லை சிட்டு, இந்தா இந்தச் சின்னக்குட்டி, நம்ம ஊட்டு புள்ளைத் தான், எம்புட்டுப் பதவிசா துணி போட்டுகிட்டு கார்ல ஏறி போகுது. நாளைக்குப் படிச்சு வேலை பார்த்தா, அதுவே கூடக் கார் வாங்கும். ஆளுங்கள் பழக்க, வழக்கத்துக்குச் சொன்னேன். நம்மூருக்குள்ள சாதி பார்க்குறாக, இதே டவுனுக்குள்ள யாரு பார்க்கிறா. அதைச் சொல்ல வந்தேன்" என்றார் அய்யனார்.
" போப்பா நீ ஒண்ணு விவரமில்லாமல் பேசுற, அதெல்லாம் எல்லா இடத்திலையும் இலைமற காயா சாதியும் இருக்கத் தான் செய்யுது. என்ன இங்கனை பேசற மாதிரி வெளிப்படையா பேச மாட்டாக. இக்கரைக்கு அக்கரைப் பச்சை. ஆளுக பழக்கம், வழக்கம்னா, நம்மூருல இருக்கவுக மனுஷ மக்கள் இல்லையா." எனச் சிந்தா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நான்கு வயது சத்தி, உள்ளிருந்து வந்து மீதித் தூக்கத்தை அம்மாவின் மடியில் வந்து விழுந்து படுத்துத் தொடர்ந்தான். அவளும் அவன் விழுந்த அதிர்வில் முகம் சுணங்கியவள், வாஞ்சையாகவே மகனின் சிகையை வருடிக் கொடுத்தபடி அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தாள்
" நான் அதவே சொல்லலத்தா, உனக்கு இருக்க அறிவுக்கும், திறமைக்கும் ஆபீஸரா வந்து, அதிகாரம் செஞ்சிருப்பன்னு சொல்றேன். ஏதோ சின்னைய்யா புண்ணியத்தில பத்தாவதாவது முடிச்ச. உங்க ஆத்தா இருந்திருந்தா நிச்சயமா உன்னைக் காலேஜ் படிக்க வச்சிருப்பேன். அதுக்குள்ள புள்ளைக் குட்டினு, எம்புட்டுப் படுத்துறான் பாரு " என மீண்டும் அதிலேயே உழன்று, பேரனையும் மகள் மீது விழுந்ததற்காகச் செல்லமாக ஓர் அடி வைத்தார்.
" அப்பா, விடுப்பா, உனக்கு உன் மவ நோகக் கூடாது, நான் என் மவனைப் பொறுத்துக்குவேன்" என மகனைத் திருப்பிக் கொண்டவள் தொடர்ந்து "சும்மா, மனசைப் போட்டு அலட்டிக்காதப்பா, நம்மளை மாதிரி அமைதியான வாழ்க்கை இல்லையேனு டவுனுக்காரவுக ஏங்குவாக. எப்பவுமே இருக்கிறதை வச்சு நிறைவா வாழனும்பா. நாளைக்கு முத்துவே கார், வீடுன்னு அந்தஸ்தா வாழ்ந்தாலும், அது எனக்குச் சந்தோஷம் தான், பெருமைப் பட்டுக்குவேன். ஆனால் அதைப் பார்த்து ஏங்க மாட்டேன்" எனத் தகப்பனுக்குப் புரிய வைத்தாள் சிந்தா.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது வேலு, பைக்கில் வந்து இறங்கியவன், "மாமன் சொல்றது சரிதான். வெளியூர்லையோ, வேற ஊர்லையோ பொறந்திருந்தின்னா ஜில்லா கலெக்டரா கூட ஆகியிருப்ப புள்ளை, யாரு கண்டா " எனச் சொல்லிச் சிரித்தான்
" இந்தா உன் மருமவன் லந்தைக் குடுக்கிறதை பார்த்தியாப்பா, நான் கலெக்டர் ஆகியிருந்த , இந்த முரட்டுக் காளையை யாரு அடக்குறதாம்" எனச் சிந்தா பதிலுக்குக் கேலியில் இறங்கவும்,
" ஏ புள்ளை, நீ வேற வுட்டில பிறந்து கலெக்டர் ஆகியிருந்தா, நான் மட்டும் ஏன் சுருட்டுக் கருப்பன் ஊட்டுல பொறக்கப் போறேன். நானும் வேற இடத்துல பொறந்தது, இன்னும் பெரிய ரவுடியா இருந்திருப்பேன்." எனக் கண் அடித்தான்.
" ஆத்தே, அப்பையும் புத்திப் போகுதா பாரு, ரவுடியா இருந்திருப்பாராம், ஏன் வேற என்னமுமே ஆகனும்னு தோனலையா, எம் எல்ஏ , மந்திரின்னு யோசிக்க வேண்டியது தானே" என்ற சிந்தாவின் பேச்சில்,
" மாமா, உன் மவளைப் போயி, சும்மா நினைச்சிட்ட. இங்க பாரு மந்திரி பொண்டாட்டி ஆகனும்கிறா." என அவன் கேலி செய்து சிரிக்கவும். அய்யனாரும் உடன் சிரித்தார்.
" மாமா, எங்க அக்காளுக்கு இருக்கத் திறமைக்கு அதுவே மந்திரியாகும். உன்னை முன்நிறுத்தனும்னு, அந்தப் பதவியை உனக்குத் தருது" என அப்போது தான் எழுந்து வந்த சுப்புப் பேச்சில் புகுந்தான், சத்யா காலையிலேயே எழுந்து ஒரு சுற்று சுற்றிவிட்டுத் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.
" மாமானுக்கு இம்புட்டு மருவாதி குடுக்கிறீங்களே சந்தோஷம் தாண்டா" என்றவன், " ஏபுள்ளை , மந்திரி பொண்டாட்டி ,நாளைக்குக் கூட்டம் போட்டுருக்காகளே, எத்தனை குதிரைன்னு கணக்கெடுப்பாக, நமக்கு எதுவும் வேண்டுதல் இருக்கா" என வினவினான் .
"வேண்டுதல் இருக்கோ இல்லையோ, எல்லாரும் நல்லா இருக்கனுமுன்னு அய்யனை வேண்டிக்கிட்டே குடுத்துடுவோம் மச்சான். ஒரு குதிரைக்கும், அடுக்கு பானைக்கும் கூட்டத்தில் கணக்கு எடுக்கையிலையை ஆர்டர் சொல்லிடு. நான் வள்ளிக்கிட்ட பேசிக்கிறேன்" என யோசனை சொன்னாள்.
" சிட்டு, ஐஞ்சு பானை அடுக்குக்கே சொல்லு, அது போதும். நிறையவெல்லாம் உன்னால சுமக்க முடியாது" என அய்யனாரும் யோசனைச் சொன்னார்.
" ஏப்பா, நான் என்ன அதைக் கூடத் தூக்கமுடியாம குறுக்கு செத்தவளாவா இருக்கேன்" எனவும்
அய்யனார் பதில் சொல்லும் முன், " ஏ புள்ளை, மகள் கஷ்டப்படக் கூடாதேன்னு, பெரிசு கவலைப் படுது ஒத்துக்குவேன்" என வேலுச் சொல்லவும், வாயைக் கோனை வழித்துத் திரும்பிக் கொண்டாள் சிந்தா.
அந்தி சாய்ந்து இருள் கவ்வும் நேரத்தில் வந்து சேர்ந்த முத்துவின் முகத்தில் பலவித உணர்வுகள் கலந்து கட்டியிருந்தது. வேக வேகமாக அந்தப் பாதையில் நடந்து வந்தவள் , சிந்தாவின் கேள்விக்குச் சுருக்கமாகப் பதில் தந்து விட்டு, " கசகசன்னு வேர்த்து கிடக்குக்கா, குளிச்சிட்டு வந்துடறேன்" எனப் பேகை வைத்துவிட்டு, ஒரு நைட்டியோடு புழக்கடை பக்கம் சென்றாள். பத்து நிமிடத்தில் குமரன் தின்பண்டங்கள் நிறைந்த பையைக் கொண்டு வந்து சிந்தாவிடம் தந்தவன், " முத்து, சக்திக்காக வாங்குச்சு. கார்லையே வச்சிட்டு வந்துடுச்சு" என நீட்டினான்.
" இப்பவே அவசரமா கொண்டு வரனும்னு என்னங்கையா, நாளைக்கு வரும் போது கொண்டு வரலாம்ல" என்றபடி வாங்கிக் கொண்ட சிந்தா, சிவநேசன், மீனாவைப் பற்றியும் கேட்டாள்.
" வந்துட்டாங்க. பெரியம்மாவுக்கு நிம்மதி. அண்ணனுமே இப்ப தெளிவா தெரியுது" என்று மற்றவரை ஆராய்ந்து சொன்னவனின் கண்களில் இன்று ஒரு தவிப்புத் தெரிந்தது. அதை மறைத்தவன், " நாளைக்குக் கிராம சபை கூடுதில்ல, அதில சீமைக் கருவைப் பத்தியும் எடுத்துச் சொல்லலாம்னு இருக்கோம்" என முத்துவையே எதிர்பார்த்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். சிந்தாவுக்கும் ஏதோ சரியில்லை எனப் பட்டது. மதுரை சென்று வருவதற்குள் இவர்களிடையே நடந்தது என்ன, மீனாவின் வருகை, கிராம சபைக்குக் கூட்டம், சிந்தா மீது சிவகாமியின் ஓட்டுதல் என்ன கலகத்தை உருவாக்கும் , பொறுத்திருந்து பார்ப்போம்.