ஹாசினி சந்திரா-23
" புட்டிமா, எப்படிடா இருக்க" என்ற எஸ்ஆர்சியின் பாசமான விளிப்பில் உணர்ச்சிவசப்பட்டுப் போனாள் ஹாசினி சந்திரதேவ். "அப்பா"என அதற்கு மேல் அவளுக்கு வார்த்தை வரவில்லை.
" புட்டிமா, தைரியமா இருக்கனும்டா. யாரு மகள் நீயி, நீயே அழலாமா. நீ உடம்பை தேற்றிக்கோ. அதே பேபி திரும்ப உன்கிட்ட வரும். எனக்கு ஒரு தேவதை மகளா வரலையா. சிம்ம தேவ் குடும்பத்துக்கு ,என் தேவதை அளவுக்கு அழகான தேவதை வர்றது கொஞ்சம் கஷ்டம் தான், இருந்தாலும் நிறம் கம்மியாவாது வந்திடும்" என அருகிலிருந்த பானுமதி மற்றும் அவர்களது வம்சத்தையும் நிறம் குறைவு எனக் கேலி செய்து மகளைத் தேற்றினார் எஸ்ஆர்சி.
" ஆகா போதுமே இந்தப் பெருமை. மது , மேனகாவைக் கொண்டு பிறந்திருக்கா. உங்களை மாதிரி இல்லை. " எனப் பானுமதி கணவனின் காலை வாரிக் கொண்டிருந்தார்.
" மதுமா நீயே சொல்லு, நீ அப்பா மாதிரி தானே இருக்க. மேனு நீ சொல்லு" என மகளையும், அருகிலிருந்த மனைவியையும் சேர்த்துக் கேட்டார்.
" போதும், போதும் நீங்க சூப்பர் ஹீரோ தான், அது இல்லாமலா கன்னடத்தைக் கட்டி ஆண்டிங்க " என்ற மேனகா, அவர் அந்தப் பக்கம் பானுமதியிடம் பெருமையாகக் கேட்டுக்கோ எனச் சொல்லவும், " ராம்ஜி, நீங்க சொல்லிக் கொடுத்த மாதிரியே சொல்லிட்டேன் . போதும் தானே" எனத் தன பங்குக்குக் காலை வாரினார் மேனகா. அம்மாக்களோடு சேர்ந்து மகளும் சிரித்தாள்.
" மதுமா , உங்க அம்மா இரண்டு பேரையும் பாருடா" என அவர் மகளிடம் முறையிடவும், சிரிப்பை மாற்றி, முகம் கூம்பி
" அப்பா, நீங்க எப்பவுமே சூப்பர் ஹீரோ தான். ஆனால் நான் உங்களை மாதிரி ஸ்ட்ராங் இல்லை பா. ரொம்ப மோசம். அழுமூஞ்சியா போயிட்டேன்" என வருந்தினாள்.
" புட்டிமா, அழுகறதால மனசில் இருக்கப் பாரம் குறையும். ஆனால் அதுவே பிரச்சனைக்குத் தீர்வு இல்லைடா. நம்ம வாழ்க்கையில் அடுத்து என்னன்னு யோசிக்கனும். போனதைப் பத்தி யோசிக்கக் கூடாது. இந்தப் பேபி இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு உன்கிட்டையே திரும்பி வரும். அதுக்கு ரெடியாகு. நீ அழுமூஞ்சியா இருந்தா மாப்பிள்ளையும் அழுவான்" என்றார்.
" ம், யெஸ் சந்திரா ரொம்ப அழுதான்" என அவள் தன் கணவனைச் சொல்லவும்,
"சந்திரா அழமாட்டானே. தைரியமான ஆம்பளை. இதோ பார் இரண்டு பொண்டாட்டியை வச்சுச் சமாளிக்கிறான்" என்றார். மகள் இவர் ஞாபக மறதியில் பேசுகிறாரா அல்லது கேலி செய்கிறாரா எனப் புரியாமல்,
" இரண்டா, அப்பா. என் சந்திரா உங்களை மாதிரி இல்லை. நான் எவ்வளவு கொடுமைப் படுத்தினாலும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டான்" என அப்பாவையே குற்றம் சுமத்தி கணவனைத் தாங்கிப் பேசினாள் ஹாசினி.
"நல்லாச் சொல்லு உங்கப்பாவுக்கு அப்பவாவது புரியட்டும்" எனப் பானுமதியும், " அடியே என் புருஷனைச் சொன்னேனா பிச்சுடுவேன் " என மேனகாவும் ஒரே நேரம் எஸ்ஆர்சியை எதிர்த்தும், வக்காலத்து வாங்கியும் பேசவும். " புட்டிமா, அப்பாவை எதுக்குப் பெத்தம்மா திட்டுறா" என அடுத்தக் கேள்வியில் எஸ்ஆர்சி மூவரையுமே அதிர விட்டார்.
பானுமதி," மதுமா, உங்கப்பாவுக்கு ஞாபக மறதி எல்லாம் இல்லைடா. சும்மா நடிக்கிறார். அது தான் பெரிய நடிகனாச்சே " எனக் கோபப்படவும் , எஸ்ஆர்சி சிரித்துக் கொண்டே, "புட்டிமா, இன்னைக்குத் தான் உங்க பெத்தம்மா, என்னை நல்ல ஆக்டர்னு ஒத்துட்டு இருக்கா. எப்பவுமே சொல்லவே மாட்டா. அதுவும் சூட்டிங் போயிட்டு வந்தா, எல்லாரையும் தொட்டு நடிச்சிட்டு வருவேனாம், புண்ணியா ஜனம் பண்ணித் தான் உள்ளே விடுவா" எனச் சொல்லிக் குலுங்கிச் சிரித்தார்.
" அக்கா, அப்படியா. அப்ப ராம்ஜி என் கூட நடிச்சிட்டு வந்தப்பவும் இதே தான் செஞ்சிங்களா " என மேனகா ஆட்சேபமாகக் கேட்கவும்,
" மேனுமா, அப்ப அடுத்த லெவல் அக்னி பிரவேசம் செய்யச் சொல்லுவா" என வம்பிழுத்தார் எஸ்ஆர்சி.
பானுமதி " மதுமா, இத்தனை பேசுறார் பார். அவருக்கு ஞாபகம் எல்லாம் நல்லாதான் இருக்கு. " என்றவர் மகளைப் பார்த்துக் கொண்டு இருந்ததில், தன் அம்மாவுடனான அப்பாவின் உறவு அவளுக்கு விகற்பமாகத் தெரியக் கூடாது என்ற பெருந்தன்மையோடு,
" உங்கப்பாவை கட்டி வைக்க என்னால முடியலைனு தான், உங்கம்மாட்ட கொடுத்துட்டு வந்தேன். ஆனால் அதுனால தான், தங்க விக்ரகம் மாதிரி நீ கிடைச்சிருக்க. உடம்பையும் மனசையும் நல்லா பார்த்துக்கடா தங்கம். நீதான் எங்களுக்கு ஒரே மகள். உனக்கு ஒண்ணுனா தாங்கமுடியாது. ஏற்கனவே பட்ட கஷ்டம் போதும்" எனக் கண் கலங்கவும், "பெத்தம்மா ஐ யம் ஃபைன். நீங்க கவலை படாதீங்க" என அவருக்கு ஆறுதல் சொன்னாள்.
அதற்குள் அவர்கள் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரியாக அடுத்த விசயத்துக்கு வாக்குவாதம் செய்ய இவள் புன்னகையோடு போனை வைத்தாள். இவர்கள் பேசுவதை நடுவில் கலைக்க மனம் வராமல் மனைவியின் சிரிப்பை அறையின் வாசலிலிருந்தே கவனித்த சந்திரதேவ் உள்ளே வந்தான்.
“அம்மா, அப்பாவும் பெத்தம்மாவும் எப்பவுமே இப்படித்தான் சண்டை போட்டுக்குவாங்களா “ என மேனகாவை வினவினாள்.
“அவுங்க , சிறிசிலிருந்து ஒண்ணா வளர்ந்தவங்க, உங்க அப்பாவுக்குப் பெத்தம்மாவை பார்த்தவுடனே, அந்த நாள் ஞாபகத்துக்குப் போயிடுவார், அதனால் அதே மாதிரி வம்பிழுக்கிறார். இரெண்டு சின்னப் பசங்களை வச்சுட்டுச் சமாளிக்கிறேன்” என மேனகா அவர்கள் பஞ்சாயத்துக்களைச் சொல்லிச் சிரித்தார்.மக்களும் அப்பாவின் சேட்டைகளில் மனம் லயித்து இருந்தாள்.
“உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை அத்தை, பானு அத்தை எல்லாச் சந்தோஷத்தையும் இழந்துட்டாங்கன்னு நினைச்சோம், ஆனால் எல்லாக் கஷ்டம், சவால்களை நீங்க தாங்கிகிட்டு , இப்ப சந்தோசத்தை அத்தைக்குத் திருப்பித் தந்திருக்கீங்க” என உணர்ச்சி வயப் பட்டான் தேவ்.
“அது என்னோட கடமை தம்பி , எந்தப் பொம்பளையும், தான் புருஷனை இந்தான்னு தூக்கி கொடுத்துட்டு வரமாட்டாள், ஆனால் அக்கா என்னை நம்பி நான் சமாளிப்பேன்னு கொடுத்துட்டு வந்தாங்க. எல்லாம் அனுபவிச்சாச்சு . இந்த மகாராணி நல்ல இருந்தான்னா போதும். நாங்க தான் உங்களுக்குச் சிரமம் தர்றோம்’ என மேனகா சொல்லவும்,
“அம்மா, அப்ப என்னையும் உன்னோட கூட்டிட்டு போ. நானும் பெத்தம்மா மாதிரி வந்துடுறேன், சந்திராவுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கலாம், நிறையப் பேர் பொண்ணு தர ரெடியா இருக்காங்க “ என ஹாசினி மூக்கை உறிஞ்சினாள். தேவ் அவளை முறைத்தான்.
“நீ தானே , உன் புருஷனை விட்டுட்டு ரொம்ப வருவ, போடி வேலையத்தவளே. உடம்பை சீக்கிரம் தேத்திக்கிற வழியைப் பாரு. நான் என் புருஷனைப் பார்க்க போகணும்” என மேனகா மகளைத் திட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். சந்திரதேவ் எதுவும் பேசாமல் தன வேலைகளைத் தொடரவும், அவளுக்கு மனம் பொறுக்காமல், ‘சந்திரா “ என அழைத்தாள் .
“ஏதாவது வேணுமா” என வந்தவனை, கையைப் பிடித்து அருகே அமர்த்திக் கொண்டாள். “ஏதாவது பேசு , சைலண்டா இருந்தேனா எனக்குக் கஷ்டமா இருக்கு” என்றாள்.
“நீ தான் பெரிய மனுசியாட்டம், பெரிய பேச்செல்லாம் பேசுற, அப்புறம் எதுக்கு நான் பேசணும்” என்றான். “அம்மாட்ட சொன்னதுக்குக் கோபமா, ஆனால் நீயும் உன் பொண்டாட்டியோட வெளியே பார்ட்டி, பங்க்சனுக்கு எல்லாம் போகணுமே, எத்தனை வருசத்துக்கு இப்படியே இருப்ப “ எனக் கேள்வி எழுப்பினாள் .
“உன் உடம்பு கொஞ்சம் சரியாகட்டும், வா போயிட்டு வருவோம்.” என்றான். அவள் ஆட்சேபனையாகப் பார்க்கவும், “நான் தான் மேனேஜ் பண்ணிக்குவான்னு சொல்றேன்ல, அது கூட முடியாமலா , இதைப் பிளான் பண்ணியிருப்பேன்” என அவன் கடித்துக் கொள்ளவும். “கோவப படாத சந்திரா, கொஞ்ச நாள் ஆகட்டும், நானே சுஹாசினியா பழகணும் “ என்றாள் .
“நீ ஹாசினியாவே இரு, அப்பாவும் நான் சமாளிப்பேன்” என்றான். “அது எப்படி “ என அவள் கேள்வி எழுப்பவும்.
“அதுக்கு ஒரு கதை சொல்லுவோம், யாரோ உன்னைக் கடத்திட்டு வந்து நம்ம தீவுகிட்ட போட்டுட்டாங்க, நான் உன்னைக் காப்பாற்றினேன், உனக்கு அம்னீஷியானு சொல்லுவோம்” என அவன் ஒரு பதில் தரவும்.
“ரொம்பத் தான், உங்க எல்லாக் கட்டுக் கதையையும் இந்திய போலீஸும், தங்க பாண்டியன் IPS ம் , கேட்டு நம்பிக் கிட்டு இருப்பாங்க “ எனவும்,
“அப்ப உனக்கு அந்த ஆபீசரை பார்த்துத் தான் பயமா “ என்றான், அவள் “நோ கமெண்ட்ஸ் “ எனத் திரும்பிக் கொண்டாள் .
மேனகா கூடவே இருந்ததால் ஹாசினியின் உடல்நிலையும், மனநிலையும் சற்றே தேறியது. வீட்டில் உள்ள பெண்கள் அனைவருமே நல்ல விதமாக அவரவர் அனுபவத்திலிருந்து சீக்கிரம் அடுத்தக் குழந்தை பிறக்கும் எனச் சொன்னதால், தனது கருக் கலைந்த சோகத்திலிருந்து சற்றே மீண்டாள்.
சந்திரதேவ், வீட்டினர் மற்றும் மேத்யுவுடன், ஹாசினி தூங்கும் நேரத்தில் அவளது மனநிலை பற்றி ஆலோசனை நடத்தினான்.
" மதுவுடைய பயமே, அவள் உயிரோட இருப்பது தெரிஞ்சா எனக்கு ஆபத்து வரும்னு நினைக்கிறது தான். இந்தப் பயத்திலிருந்து அவள் வெளியே வரனும்னா, அந்தச் சிசுவேஷனை பேஸ் பண்ணனும். சுஹாசினி சந்திர தேவா அவளை இந்தியாவுக்குக் கூட்டிட்டுப் போவோம்" என அதிரடியாக அவன் சொல்லவும், அனைவருமே அதனை எதிர்த்தனர்.
" ஒரே மாதிரி தப்பை மறுபடியும் பண்ணாத " என மச்சினன்கள், பிரதியும், அதியும் கோபித்தனர். " நோ சந்து, உன்னை ரிஸ்க் எடுக்க விடமாட்டேன்" என அனுசுயா உறுதியாக நின்றார். இரத்தின தேவ் அண்ணியின் பக்கம் நின்றார். அண்ணன் சொல்லை மீறாத நிருபனே அதை எதிர்த்தான்.
" என்னால அவளுடைய சித்திரவதையைப் பார்க்க முடியலை. இலட்சக் கணக்கான மக்களை இவளோட முகத்தைக் காட்டி, அதை ஓட்டாக மாற்ற முடியும்னு நஞ்சப்பா கணக்குப் போட்டான், அது தான் அவளுக்குப் பெரிய கஷ்டம் தண்டனைனு நினைச்சேன், ஆனால் அவள் முகத்தை யாருக்குமே காட்ட முடியாத தண்டனையை நான் தான் அவளுக்குக் கொடுத்துட்டேன். " என வருந்தியவன்,
"அது அவ மனசை ரொம்பப் பாதிச்சிருக்கு. இல்லைனா நான் சரண்டராகி, அவளுக்கு அவளுடைய அடையாளத்தையே தர வேண்டியது தான் இதற்குச் சரியான பிராயச்சித்தம்" எனச் சந்திரா சொல்லும் போதே, " நோ" என ஹாசினியின் பெரிய சத்தம் கேட்டது. பேச்சு மும்மரத்தில் அவள் வந்ததை யாரும் கவனிக்கவில்லை.
வேகமாகச் சந்திரதேவிடம் வந்தவள்,அவனைக் கட்டிக் கொண்டு, " நான் உன்னைச் சரண்டராக விட மாட்டேன். நான் ஹாசினி இல்லை, சுஹாசினி தான். நான் இனிமே பயப்பட மாட்டேன். நீ வேற முடிவு எடுக்காத" என அவள் பதட்டப்படவும். வீட்டினர் செய்வதறியாமல் திகைத்தனர்.
ஆனால் மேத்யு, " ஹாசினி, தேவ் சரண்டராக வேண்டாம். ஆனால் நீயும் இப்படியே இருக்கக் கூடாது. யூ ஹெவ் டு கம் அவுட்" எனக் கண்டிசன் போட்டான்.
" நான் என்ன செய்யனும் சொல்லு, சந்திராவுக்காக நான் எதுவேனாலும் செய்வேன்" என அவள் சொல்லவும், தனக்காக உருகும் மனைவியைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சந்திர தேவ்.
மேத்யூ, நிருபனை, தங்களது திட்டத்தைச் சொல்லச் சொன்னான். அதன் படி நிருபன் விளக்கினான். " பேபி டால் வேலை இல்லாமல் இருக்கிறதால தான் வெட்டியா யோசிக்குது" என அவன் சொல்லவும் ஹாசினி அவனை முறைத்தாள்.
" ஹலோ, உண்மை அது தான். " என்றவன் மேத்யு சுஹானா தீவில் உல்லாச விடுதி கட்டும் திட்டத்துக்கு ஸ்பான்ஸர் செய்வதாகவும், அதனை வடிவமைக்கும் பணியை இரண்டு நம்பிக்கையான பெண்கள் செய்ய வருவார்கள் என்றும், அவர்களோடு சேர்ந்து, சுஹானா தீவை நன்கு அறிந்த ஹாசினி உதவி செய்ய வேண்டும். இவர்கள் சந்திதேவ், நிருபன் தேவ் மேற்பார்வையில் செய்வார்கள் என மேலும் இருவரை ஹாசினியோடு உடன் இருப்பதற்கு நியமித்தனர். சந்திரதேவ் சரண்டர் ஆகாமல் இருப்பதற்காக ஹாசினி இதனை ஒத்துக் கொண்டாள்.
அதன் படி, வீட்டிலேயே வெளி ஆட்கள் கண்ணில் படாமல் ஒரு அலுவலக அறையை ஏற்படுத்தித் தந்தார்கள். வேலைக்கு வந்த பெண்களில் ஒருத்தி கட்டிடக்கலை படித்தவள், மற்றொருத்தி மனநல மருத்துவம் முடித்த பெண். அவர்கள் ஹாசினியின் மனநிலையைப் பார்த்துக் கொண்டு, அவளுக்குப் பிடித்தமான சுஹானா தீவு வேலையையும் பார்த்தனர். ஹாசினி அவர்கள் வீட்டுப் பெண்கள் அத்தனை பேரையுமே அதற்குள் இழுத்துக் கொண்டாள். அவர்களது இயல்பு வாழ்க்கைத் தொடங்கவும், மேத்யுவோட மேனகா அமெரிக்கா பறத்தார்.
ஹாசினியின் பொழுது நல்லபடியாகக் கழிந்தது. அவளும் மாமியார் சொல்லாமலே வெளியாட்களைப் பார்ப்பதைத் தவிர்த்து மற்ற இரண்டு பெண்களோடு பழகி பொழுதைப் பயனுள்ளதாகக் கழித்தாள். அவளுக்கும் தாம் உபயோகமாக இருப்பதாக எண்ணம் தோன்றியது.
சுஹானா தீவைப் பற்றிய ப்ராஜெக்ட் மற்றொரு நன்மையாகச் சந்திராவோடு கழித்த பொழுதுகளை நினைவு படுத்தவும், கணவன், மனைவி அன்னிநியோன்யமும் அதிகமானது. அதற்கான விளைவும் வெளிப்பட்டது . ஹாசினி மீண்டும் கருவுற்றாள். வீட்டினர் மகிழ்ந்தனர், எனில் சந்திரதேவ் பதட்டமானான்.
ஹாசினி மற்ற விசயங்களில் எத்தனை மாறியிருந்தாலும் மருத்துவமனைக்குப் பரிசோதிக்க வருவதற்கு மட்டும் மறுத்தாள். அதனால் இரண்டு பெண்களில் ஒருத்தியான மனநலம் பயின்ற மருத்துவரே, மகப்பேறு மருத்துவரை கலந்து கொண்டு, அந்த வேலையையும் சேர்த்துச் செய்தாள். அதனால் சென்ற முறை போல மசக்கையின் அவஸ்தை இல்லை. ஏழாவது மாதம் நடந்து கொண்டிருந்தது. ஹாசினிக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என எஸ்.ஆர்.சி மனைவிகளுடன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தார்.
மேடிட்ட வயிற்றோடு , தாய்மை பூரிப்பில் கன்னங்கள் மிளிர சதைப்பிடிப்போடு இருந்த மகளைப் பெற்றவர்களே கண் வைக்கும்படி இருந்தாள். " அப்பா" எனக் கட்டிக் கொண்ட மகளை அணைத்து உச்சி முகர்ந்தார் எஸ்ஆர்சி. மகன்கள், மருமகள்கள், சம்பந்திகள் என இரண்டு குடும்பமும் ஒன்று கூடியது. பானுமதி பேரன் பேத்தியை ஆசை தீரக் கொஞ்சி மகிழ்ந்தார். மேனகா, அனுசுயா, நிரஞ்சனாவிடம் தனது மகளைப் பார்த்துக் கொண்டதற்கு நன்றி தெரிவித்தற்கு இருவருமே உரிமையாகக் கோபித்துக் கொண்டனர். மேனகா அனுசுயா இடையே கசப்பு மாறி தங்கள் பிள்ளைகளின் நன்மைக்காக ஒரே போல் சிந்திக்க ஆரம்பித்து இருந்தனர்.
இன்னும் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதிக்காததைப் பற்றி மூத்த பெண்கள் பேசிக் கொண்டனர். சந்திரதேவ்வுடன் அதைப் பற்றி விவாதித்தனர், "பொண்டாட்டிக்காக ஸ்கேன் மிஷன் வாங்குனியே , லேபர் வார்டும் செட் பண்ணுவியா" என அனுசுயா மகனைக் கேட்கவும்,
" அம்மா, அவ இந்தளவு பாதிக்கப்பட்ட காரணமே நீங்க தான். அவள் பேசாமல் தான் இருந்தா. நீங்க தான் அவளை யாராவது பார்த்தால் எனக்கு ஆபத்துன்னு அவள் மனசில் பதிய வச்சிங்க" எனக் குற்றம் சொன்னான்.
" மேனகா, உன் மருமகனை பார்த்தியா, இவன் செஞ்ச வேலை எல்லாம் சரி. நான் பயந்தது தான் தப்பாம்" எனச் சம்பந்தியிடம் மகனைக் குறைச் சொன்னார்.
" சரி விடுங்க அ… " ஆரம்பித்து அண்ணி என அழைக்காமல் நிறுத்தவும், " சும்மா கூப்பிடு அது தான் எல்லாரும் ஒண்ணு மண்ணா ஆயாச்சே" என அமர்த்தலாகவே அனுசுயா சொல்லவும்.
" அதையும் தான் கொஞ்சம் நல்லா சிரிச்சுகிட்டுச் சொல்லுங்களேன்" என்றார் பானுமதி. " அதெல்லாம் எங்க அக்காவுக்கு வராது. இருக்கிறதை வச்சு இரண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க " எனக் கேலி செய்த நிரஞ்சனா,
" ஹாசினியை செக்கப்புக்கு கூட்டிட்டுப் போற வழியைச் சொல்லுங்க " என்றார். " அது தான் அண்ணி, இந்தப் பொண்ணு எந்த விசயத்தைச் சீரியசா எடுத்துக்குவா, எதை லேசா எடுத்துக்குவான்னு பெத்தவ எனக்கே தெரியலையே " எனப் புலம்பினார் மேனகா.
சந்திரதேவ், " பத்தாம் மாசம் வரைக்கும் இதே டென்ஷனோட அலைய முடியாது. வளைகாப்புக்கு ஏற்பாடு பண்ணுவோம். ஒரு ஸ்பெஷஸ் கெஸ்ட்டை இன்வைட் பண்றேன். அவர் வந்தா எல்லாம் சரியாகிடும்" என்றான் . ஏழாம் மாதம் முடியும் தறுவாயில், வீட்டிலேயே ஹாசினி சந்திதேவின் வளைகாப்புக்கு ஏற்பாடு செய்தனர்.
வீட்டின் கூடத்தில் இரட்டை ஷோபாவைப் போட்டு, அதில் பிங்க் நிறத்தில் தங்க ஜரிகையிட்ட பட்டுச் சேலை , கட்டும் போது உருத்தக் கூடாது என அவளுக்காகவே ஸ்பேஷலாக இந்தியாவிலிருந்து நெய்து வாங்கினான். அதனை உடுத்தி தலையில் கொண்டையிட்டு பூச்சூடி, தங்கத்தில் கழுத்தை ஒட்டிய ராணிகள் அணியும் சோக்கர் நெக்லஸ் முத்துக்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதற்கு ஏற்ற காதணிகள் அவள் தலையை ஆட்டி பேசும் போது நடனமாட. சேலையை ஒற்றையாய் விட்டு அமர்ந்திருந்தாள். அவ்வப்போது கன்னக்குழியும் விழுந்தது. அதில் சந்திரதேவ் மகிழ்ந்து தான் போனான்.
வீட்டினர் அனைவரும் கூடியிருக்க, பானுமதி ஒரு ஜோடி தங்க வளையலும் பின்னர்க் கண்ணாடி வளையலும் அணிவித்தார், மேனகா முத்து வளையும் கண்ணாடி வளையல்களும் அடுக்க, அனுசுயா, நிரஞ்சனா, ஆராதனா, மயூரா, மேகலா ப்ரீத்தி சுஹானா தீவு ப்ராஜெக்ட் செய்ய வந்த இரண்டு பெண்களும் கூட வளையலைப் பூட்டினர்.
கடைசியாகச் சந்திரதேவ் தனது பாக்கெட்டிலிருந்து ஒரு ஜோடி வைர வளையலைப் போட்டு விட்டு, அதற்குப் பொருத்தமான நெக்லஸ் தோடுகளையும் மனைவிக்குப் பரிசளித்தான். இது முதல் முறை அவன் வாங்கியது. ஆனால் இதுவரை அவள் அணிந்தது இல்லை. ஆராதனா அவள் அணிந்திருந்த நெக்லஸை கழட்டி விட்டு, அண்ணனை தன் கையால் போட்டுவிடச் சொன்னாள். அவனும் எழுந்து நெக்லஸை போட்டு விட்டு, நெற்றியில் முத்தமிட்டான். அவள் அவன் முகத்தையே பார்க்கச் சந்து நெகிழ்ந்து இருந்தது நன்றாகவே தெரிந்தது.
" சந்திரா, நல்லபடியா புள்ளையைப் பெத்துக்குவேன். பயப்படாத" என்றாள். " சரிங்க மகாராணி. நீங்க சொன்னாச் சரி தான்" என்றவனை மீண்டும் அமர்த்தி, பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்தனர்.
எஸ்ஆர்சி தம்பதி சமேதராக ஆசீர்வாதம் செய்தவர்," புட்டிமா குட்டி தேவதையைப் பெத்துக் கொடு. தாத்தா வெட்டியா இருக்கேன். வளர்த்து விடுறேன்" என்றார்.
" ஆமாம், மகன்கள், மகளை வளர்த்த மாதிரி உங்கப்பா வளர்ப்பார்" எனப் பானுமதி கேலி செய்யவும். " அதுக்குப் பதிலா பேரப்பிள்ளைகளை வளர்க்கிறேன்" என்றார். ஹாசினிக்கு அடுத்து இரத்தினதேவ், அண்ணன்கள் இருவரும் பரிசுப் பொருட்களைத் தந்தனர்.
எல்லாம் முடித்து ஆராத்திச் சுற்றி அதனை வெளியே கொட்டி விட்டு நிமிர்ந்த ப்ரீத்தி, ஒரு கார் வந்து நின்று அதிலிருந்து இறங்கியவர்களைக் கண்டு விதிர் விதிர்த்து உள்ளே ஓடிவந்தாள்.
ஹாசினிடம் வந்தவள், " பாபி வாங்க உள்ளே போவோம். அந்த ஐபிஎஸ் ஆபிஸர் மனைவியோட வந்திருக்காரு" எனச் சொல்லவும், ஹாசினி விழுந்தடித்து அறைக்குள் ஓட முயன்றாள்.
கார் சத்தம் கேட்டு ப்ரதிபன், அதிபன் சந்திராக்கள் எட்டிப் பார்க்க, நிருபன் தேவ் தங்கப்பாண்டியனன் IPS மற்றும் தான்வி IAS தம்பதிகளை அழைத்து வந்தான். சந்திராக்கள் அதிர்ந்து நோக்க, ஹாசினி உள்ளே ஓட எத்தனித்தவளைக் கைப்பிடியாகப் பிடித்து அதே இடத்தில் நிறுத்தினான் சந்திர தேவ்.
" சந்திரா என்னை விடு. அந்த ஆபீஸர் என்னைப் பார்த்திடுவார்" என அவன் காதில் ரகசியம் பேசியபடி பதட்டமாக அவர்களுக்கு முகத்தை மறைத்துத் திரும்பி நின்றாள்.
அதற்குள், ஹாலுக்கு வந்த ஆபீஸர் ஜோடிகள் எஸ்ஆர்சியை வணங்கினர். மேனகா, இவர் எங்கே எனப் பதட்டமாக வந்த போதும், "வாங்கச் சார், வாங்க மேடம்" என வரவேற்று அமரச் சொன்னவர், "ராம்ஜி, இவங்க" என ஆரம்பிக்கவும்.
" ஐஏஎஸ், ஐபிஎஸ் ஜோடி. எனக்குத் தெரியாதா. மிஸ்டர். அண்ட் மிஸஸ் பாண்டியன் எப்படி இருக்கீங்க " என விசாரித்தார்.
" வீ ஆர் பைன் ஸார். ஆன் டூட்டி மஸ்கட் வரை வந்தோம். நீங்க இச்க இருக்கிறதா, உங்க மருமகன் சொன்னார். அது தான் பார்க்க வந்தோம்" எனத் தங்கப்பாண்டியன் சொல்லவும்
" வெரி ஹேப்பி டு மீட் யு ஸார். உங்களால் தான் தமிழ் நாட்டுக்கு ட்ரேன்ஸர் கிடைச்சது" என்றார் தான்வி.
" அடுத்த என்ன உன் ஹஸ்பன்ட் க்கும் ட்ரேன்ஸர் வேணுமா. நான் சிபாரிசு பண்றேன்" என்றார்.
" உங்க புண்ணியத்தில் அதுவும் ஆகிடுச்சு சார்" எனத் தான்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சந்திரதேவ் வலுக்கட்டாயமாக ஹாசினியை அழைத்து வந்தான்.
" வெல்கம் மிஸ்டர். பாண்டியன். நைஸ் டு மீட் யூ. வாங்க மேம். என் அழைப்பை ஏத்துகிட்டு வந்ததுக்கு மிக்க நன்றி" எனக் கைக் குலுக்கி ஹாசினியோடு மற்றொரு ஷோபாவில் அமர்ந்தான்.
தான்வி தான் கொண்டு வந்து ஒரு பார்சலை, " கன்கிராஸ் மிஸஸ் தேவ். இது இந்தியாவிலிருந்து உங்களுக்காக ஸ்பெஷலா வாங்கிட்டு வந்தோம்" எனவும் , ஹாசினி பதட்டமாக அவர்களைப் பார்த்திருந்தாள்.
அவளது பிபி கூடியது, வியர்வை துளிகள் அரும்ப மூக்கிலிருந்து இரத்தம் வருமோ, மயக்கம் வருமோ என அவளே பயந்திருந்த நேரம்
" வெல் மிஸ்டர். தேவ். நீங்க சொல்லும் போது கூட நாங்க நம்பலை. சுஹாசினி சந்திரதேவ் , அச்சு அசல் ஹாசினி சந்திரா தான். நீங்க அவங்க இரட்டைனு சொல்லலேனா, நானே ஹாசினின்னு கூட்டிட்டுப் போயிருப்பேன்" என்றார் தங்கப் பாண்டியன். அவர் வார்த்தைகளில் ஹாசினிக்குத் தடைப்பட்ட சுவாசம் சீரானது. ஆனால் எஸ்ஆர்சி குட்டையைக் குழப்பினார்.
" அது யாரு சுஹாசினி " என்றார். ஹாசினிக்கு மீண்டும் மயக்கம் வரும் போல இருக்க, மேனகா சமாளித்தார்.
" ராம்ஜி , நம்ம பொண்ணு தான், உங்க ப்ரெண்ட் மகனுக்குக் கல்யாணம் செய்து வச்சோமே. " என உளறிக் கொட்டி, கணவரை ஞாபக மறதி என நம்ப வைத்துப் பேச்சை மாற்றிப் பானுமதியோடு அறைக்கு அனுப்பி வைத்தார்.
" மிஸ்டர். பாண்டியன் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும். என் சுஹாவுக்குத் தான் வெளியே வந்தால், தன்னை ஹாசினின்னு நினைச்சுடுவாங்களோன்னு பயம். செக்கப் கூட வரமாட்டேங்கிறா. ஹாசினி விசாரணை அதிகாரி நீங்க சொல்லுங்க. " எனச் சந்திர தேவ் முறையிடவும்.
ஆபிஸர் ஜோடிகள் தேர்ந்த நடிகர்களாகினர், " உங்க சிஸ்டர் கேஸ் நான் தான் ஹேண்டில் பண்ணேன். யுவராஜ் பாம் வச்சதுக்கு , எல்லா ஆதாரமும் ரெட்டியோட வாக்குமூலம் இருக்கு. அதோட போஸ்ட்மார்டம் ரிபோர்டும் கிளியர்" எனச் சந்திதேவைப் பார்த்துக் கொண்டே சொன்னார், அவனும் அவளறியாமல் கண்களால் நயந்தான். " நான் கேஸை முடிச்சுட்டேன். அடுத்த மாசம் தீர்ப்பு வந்துரும். நீங்க பயப்படாதீங்க" என்றார் பாண்டியன்.
" மத்தவா சந்தேகப்படுவானுட்டு பயந்துண்டு உங்க ஹெல்த்தை கேர்லஸ்ஸா விட்டுடாதேள். யாரு கண்டா, உங்க ட்வின் சிஸ்டரே உங்க வயித்தில வந்து பிறப்பா" எனத் தான்வியும் ஒத்து ஊதினார். ஹாசினியின் கண்களில் பயம் விலகியது. ஒரு நம்பிக்கை பிறந்தது.
" என்னைப் பார்த்து யாரும் ஹாசினின்னு சொல்ல மாட்டாங்களா" எனக் கண்களில் அலைப்புறுதலோடு கேட்கவும், சிரித்துக் கொண்டு ஆபிஸர் ஜோடிகள்,
" ஹாசினி சந்திரா, அவங்க அப்பாவை மாதிரி தைரியமான அரசியல்வாதி. ஆறு மாதத்தில் கர்நாடகாவையே தன்னுடைய வசீகரத்தால் கவர்ந்தவங்க. நீங்களே நினைச்சாலும் அவங்களா ஆகமுடியாது" என்றார் பாண்டியன் .
மதிய உணவான வளைகாப்பு கட்டுச் சாதத்தைச் சந்திரா குடும்பத்தோடு சாப்பிட்டவர்கள், ஹாசினி மனதில் நம்பிக்கை விதைத்துப் பிரியாவிடைப் பெற்றுச் சென்றனர்.வீட்டினர் அதிசயமாகப் பார்க்கவும் நிருபன் தேவ் ஹாசினிக்குத் தெரியாமல் விளக்கினான்.
சந்திரதேவ், இரண்டு வாரத்துக்கு முன் வளைகாப்பு ஏற்பாட்டைச் செய்யச் சொன்னவன், ஒரே நாளில் ஹாசினி அறியாமல் இந்தியாச் சென்று திரும்பினான். அவன் சென்ற இடம் சென்னையில் உள்ள ஆபிஸரின் அடையாறு வீடு. தங்கப்பாண்டியன் அர்த்தம் பொதிந்த புன்னகையோடு மனைவியைப் பார்த்தவர், சந்திர தேவை வீட்டுக்குள் அழைத்தார்.
" வெல் மிஷ்டர். சந்திரதேவ். உங்களுக்கு என்ன உதவி வேணும். கேஸ் முடிஞ்சது. தீர்ப்பு மட்டும் தான் வரனும்" என நேராக விசயத்துக்கு வந்தார்.
" சார், நான் உங்ககிட்ட பாவமன்னிப்பு கேட்கத் தான் வந்தேன். என் மனைவி ஏழு மாசம் கர்ப்பமா இருக்கா அவளைக் காப்பாத்துங்க. அது உங்களால் மட்டும் தான் முடியும். சுஹானா தீவிலிருந்து கிளம்பும் போது சொன்னீங்களே. என் உயிரானவர்களுக்காக உங்களைத் தேடி வருவேன்னு. இதோ வந்துட்டேன். சட்டப்படி நடவடிக்கையினாலும் சரி இல்லை நீங்க கொடுக்கிற தண்டனையா இருந்தாலும் சரி, என் மனைவியைப் பாதிக்காத வகையில் நான் அதை ஏத்துக்குறேன்" எனத் தங்கப்பாண்டியன் முன் சரண்டர் ஆனான்.
" மிஸ்டர். தேவ், நீங்க என்னை ஏமாத்திட்டதா நினைச்சிட்டு இருக்கீங்களா" என ஓர் புன்சிரிப்போடு கேட்டார்.
"நோ சார், நிச்சயமா இல்லை. உங்களுக்கு ஹாசினி தான் சுஹாசினி தான்னு தெரியும். இருந்தாலும் எனக்கு எதிரான ஆதாரம் இல்லாததால் சரின்னு விட்டிங்க " என்றான். ஹாஹாவெனச் சிரித்தவர், " எவிடென்ஸ் இல்லையா. யார் சொன்னது ஆதாரம் இல்லைனு. ஆதாரம் இருக்கு. ஆனால் நான் நினைச்சா மட்டும் தான் இந்தக் கேஸை உடைக்கவும் முடியும், உருவாக்கவும் முடியும். " என்றவர் போஸ்ட் மார்டம் ரிபோர்ட், கேரவன் பதிவு, சுஹானா தீவில் ஹாசினியின் படம், அதோடு சந்திர தேவே எதிர் பார்க்காமல் ஸ்டீபனின் வாக்கு மூலத்தைக் காட்டினார் பாண்டியன். சந்திரதேவ் அதிர்ந்து பார்க்கவும்.
"பிஸ்னஸ் மேன் நீயே ஒரு கேம் விளையாண்டா, போலீஸ்காரன் நான் விளையாட மாட்டனா. இருந்தாலும் உன்னைத் தப்பிக்க விட்டேன்" என அவர் சிரிக்கவும் தான்வி முறைத்தார்.
அவன் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்க்கவும், " நேர்மையான ஐஏஎஸ், என்கூடப் பயங்கரச் சண்டை. உன்னால என் பொண்டாட்டி என்கூட ஆறு மாசம் பேசலை. அது எனக்குத் தண்டனையாம் " என்றவர்,
" அதை விடு, நீ ஹாசினிக்கு நல்லதுன்னு ஒரு கிறுக்குத்தனம் பண்ண. நாங்க அதை அரசியல் தீவிரவாதியான நஞ்சப்பாவை ஒழிக்க ஒரு ஆயுதமா உபயோகிச்சோம். நீ காதல் கிறுக்கன் தான். அவனுங்க நாட்டுக்கே ஆபத்தான அரசியல்வாதிங்க . இரண்டுத்துல ஒன்று. உனக்கு உன் பொண்டாட்டியே தண்டனை தருவான்னு விட்டுட்டேன். நஞ்சப்பாக்கள் சட்டத்தின் பிடியில் இருக்காங்க " என்றார்.
" தாங்க்யு சார், நிஜமாவே என் மேல கேஸ் போட்டிருந்தால் கூட எதாவது குறுக்கு வழி கண்டுபிடித்துத் தப்பிச்சிருப்பேன். ஆனால் இது தப்பவே முடியாத தண்டனை. என் கர்வமெல்லாம் தவிடு பொடியானது அவகிட்ட தான். அதுவும் என்னைக் காப்பத்தனும்னு நெருப்புக் கோழி மாதிரி அவள் தன் முகத்தை மறைச்சுக்கும் போது, என் நெஞ்சையே அறுக்கிற மாதிரி இருக்கும்" எனக் கண்ணீர் விட்டவன், போன முறை கருக் கலைந்தது முதல் இன்றைய நிலை வரை சொன்னான்.
" அவளுக்கு டெலிவரி பார்க்கனும். ஸ்கேன்ல சின்னக் காம்பிளிகேஷன் தெரியுது. சிசேரியன் பண்ற நிலைமை கூட வரும். அவ ஹாஸ்பிடலுக்கே வரமாட்டேங்குறா. நீங்க வந்து அவளைச் சுஹாசினின்னு சொன்னா தான் நம்புவா. நீங்க வந்து என்னை அரெஸ்ட் பண்ணுவீங்கிறது தான் அவளுக்குப் பயமே" என்றான்.
" எங்க ஊர்ல என்னை மீசை வச்ச பாசக்காரன்னு சொல்லுவாய்ங்க. நீ என்னைப் பூச்சாண்டி ஆக்கிட்ட. எஸ்ஆர்சிக்காக வர்றேன்." என்றவர் " உனக்குத் தண்டனை கேட்டியே, இரு என் பொண்டாட்டி உனக்கு அட்வைஸ் பண்ணுவா" என ரகசியம் பேசிவிட்டு வராத போனை பிடித்துக் கொண்டு அவர் நகரவும், தான்வி சந்திர தேவை ஆயுசுக்குமான அறிவுரை வழங்கி லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.
வீட்டில் அடங்காத காளை ஊரில் அடங்கும் என்பார்கள். அப்பா, அம்மா, சித்தப்பா, அத்தான்கள் சொல்லி,அதையெல்லாம் அசட்டை செய்த சந்திரதேவ் தான்வியிடம் மனைவிக்காகத் தலை குனிந்து வசவுகளையும், அறிவுரையும் பெற்றுக் கொண்டான்.
நிருபன் விளக்கிய விதத்தில் சந்திரதேவ் குடும்பமே நிம்மதியாகச் சிரித்தது.
தங்களது அறையில் பட்டுச் சேலையை மாற்றி நைட்டியில் இருந்த ஹாசினியை பெட்டில் சாய்த்து உட்கார வைத்து, கால்களை அமுக்கிக் கொண்டிருந்தான் சந்திரதேவ்.
" சந்திரா, அவுங்க நிஜமாவே என்னைச் சுஹாசினின்னு ஒத்துக்கிட்டாங்களா" எனக் கேட்டாள்.
" நான் வேணும்னா போய் என் ஹாசினியை எப்படிச் சுஹாசினின்னு சொல்லப் போச்சுன்னு சண்டை போட்டு வரவா" என்றான்.
" சீ போடா. நான் எவ்வளவு ஹேப்பியா இருக்கேன் தெரியுமா" என அவள் கன்னக்குழி விழச் சிரித்தாள்.
" தெரியுதுடி மேரி ப்யூட்டி" என அவள் அருகில் நெருங்கியவன் கன்னக்குழியில் இதழ் பதித்து. " இதுவே சொல்லிடுச்சு" என்றான். அதே நேரம் அவள் வயிற்றில் குட்டி ஹாசினியும் துள்ளியது.
" ஹசி, பேபியும் ஹேப்பிடி" என அவள் வயிற்றிலும் சந்திர தேவ் முத்தமிட்டான். அது அவன் கன்னத்தில் ஓர் உதை விட்டது.
" ஹசி உதைகிதுடி. " என்றான். அவள் சிரித்துவிட்டு.
" அரக்கன் ஸார், நாளைக்கு ஹாஸ்பிடலில செக்கப்புக்கு அப்பாயின்மென்ட் வாங்கு " என்றாள். அவன் கண்கள் கலங்கியது,
" சரிங்க ப்யுட்டி குயின்"அவளை அணைத்து சந்தோசமாக மீண்டும் முத்தமிட்டான்.
( அடுத்து ஒரு முடிவுரை மட்டும் வரும்)
No comments:
Post a Comment