சிந்தா-ஜீவ நதியவள்-4
ஓடையை ஒட்டிய சிந்தாவின் வீடு, வெயில் காலமாதலால் அது வறண்டு கிடந்தது. மழைக்காலத்தில் மட்டுமே கண்மாயில் நீர் நிறைந்து மடை திறக்கும் போது இதில் தண்ணீர் ஓடும். மற்றபடி பெரும்பாலும் காய்ந்து தான் கிடக்கும். இவர்கள் வீட்டுக்குத் தெருக் குழாயிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொள்வார்கள். பெரிய சிமெண்ட் தொட்டிகளில் அந்த நீரை நிறைத்து வைத்து அதனைத் தான் புழங்குவார்கள், வேலு போர் போடலாம் என்றதுக்கும் கூடக் குடும்பமே. "வீதி குழாயில் வர்ற தண்ணியே நம்மளுக்குப் போக விவசாயமே பண்ணலாம். எதுக்கு வீணா போர் போட்டுக்கிட்டு" என மறுத்தனர். ஆனால் இவர் தான் தண்ணீர் எடுக்க வேண்டும் என்பது இல்லாமல் ஆண்களும் கௌரவம் பார்க்காது நீரை நிறைத்து விடுவார்கள். அதனால் பெண்களுக்குச் சுலபமாக இருந்தது. நகரத்தைப் போல் குழாயைத் திறந்தால் தண்ணீர் கொட்டும் வாழ்க்கைக்கு இவர்கள் இன்னும் பழக்கப்படவில்லை.
மதிய உணவுக்குப் பிறகு வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த அய்யனார், மகளையும், மருமகனையும் அழைத்துப் பெரிய வீட்டுக்குச் சென்று வந்த விசயத்தைச் சொன்னார். முத்துவும், சுப்புவும் அங்குத் தான் இருந்தனர்.
" இன்னைக்குப் பெரிய வீட்டுக்கு போயிட்டு வந்தேன்" என ஆரம்பிக்கவும்.
" நிசமாவா அப்பா, எங்களை அந்தப் பக்கட்டு விளாடா கூடப் போகக்கூடாதும்ப, நீ மட்டும் போகலாமாக்கும்" என சுப்பு ஆட்சேபம் தெரிவித்தான்.
" ஏலேய், விசயத்தைச் சொல்ல வர்றதுக்குள்ள விவகாரம் பேசறவன். பெரிய அய்யாவே ஆள் விட்டு கூப்பிட்டாரு , மாட்டேன்னா சொல்லமுடியும், மருவாதையா இருக்காதில்ல" எனச் சொல்லும் போதே அய்யனார் மூத்த மகளின் முகத்தைப் பார்த்தார், அவள் முகத்தில் எதையும் காட்டாது அமர்ந்திருக்க, அவரே தொடர்ந்தார்.
" சின்னய்யா, இந்தச் சீமைக் கருவ மண்டிக் கிடக்கிற வயலை சுத்தம் பண்ணித் தரச் சொல்றாக. கருவேலத்தையும் நம்மளையே எடுத்துக்கச் சொல்றாக, அது போக ஜேசிபி வண்டிச் செலவு முழுசும் ஆள் கூலியும் பாதித் தாறோம்கிறாரு. இதில ஏதோ மூலிகைச் செடி வளர்க்கப் போறாகலாம். " எனச் சிவநேசன் பேசிய விசயத்தைத் தன் குடும்பத்துக்குச் சொன்னார்.
" கருவை மரம் கிடச்சாலே நாம மூட்டம் போட்டு கரியாக்கி அதைக் காசாக்கிக்கலாம். மத்தச் செலவுக்கும் தர்றம்னாகன்னா, இது நல்ல விசயம் தானே மாமா, சரின்னு சொல்லுங்க" என்றான் வேலு.
அய்யனார் யோசனையாக, " அதில்லை மாப்பிள்ளை, அவுக வீட்டுப் பண்ணையத்தை விட்டு வந்து ஐஞ்சு வருஷம் ஆச்சு. திரும்ப எதுக்குப் போய் உழப்பனுமுன்னு யோசனை " எனத் தயக்கமாகச் சொன்னார்.
"அவுக வீட்டுக்குள்ள நமக்கென்ன வேலை, இந்த இடத்தை இத்தனை நாளைக்குள்ள சுத்தப்படுத்தித் தந்திடுறோம், இவ்வளவு தந்திடுங்கன்னு பேசிக்குவோம். அவுக தான் இந்தப் பக்கம் வரனும். நாம அங்க போக வேண்டியது இல்லை" என்ற வேலுவின் வார்த்தைக்கு அய்யனார் பெரிய மகளிடம் அபிப்ராயம் கேட்டார்.
" அது மச்சானே சொல்லிடுச்சில்ல, இது பெரிய வேலையா இருந்தா, நாலு காசு பணம் மொத்தமா சேரும். முத்துவுக்கு நகை நட்டு வாங்கிச் சேர்க்கலாம் பா." எனத் தாய் ஸ்தானத்திலிருந்து யோசனை சொன்னாள்.
" காசு என்னத்தா, வரும் போகும், இதே காசுக்காகத் தரமிறங்கி போயிட்டமின்னு நாளைக்கு ஒரு பய பேசிறக் கூடாது. அது தான் எனக்குப் பயம்" என அவர் மானம் மரியாதை பற்றி யோசித்தார்.
" மாமோய், பேசிறவன் பேசிக்கே தான் இருப்பான். நீரு இப்படி மானம் மருவாதின்னு ரொம்ப யோசிச்சதில தான் உம்ம மவ ,அஞ்சு வருசத்துக்கு முன்ன ஒரு விஷயம் நடந்ததும், அன்னைக்குத் தப்பான முடிவெடுத்தா" எனச் சிந்தா ரயிலில் விழப் போனதை எண்ணிச் சொல்ல, அதை அறியாத அவளது தங்கை முத்து வாய் துடுக்காக மாமனைக் கிண்டல் செய்யும் விதமாக,
" மாமா, உமக்கு இருந்தாலும் இம்புட்டு பெரிய மனசு ஆகாது. எங்க அக்கா உன்னைக் கட்டிக்கிட்டதைத் தப்பான முடிவுன்னு ஒத்துகிறீக பார்த்தீங்களா. அங்க தான் மாமா உசந்து நிக்கிறீக " என அவள் வஞ்சப் புகழ்ச்சியாகப் பேசவும், சுப்பு, முத்துவின் கையில் அடித்து ஹை பை கொடுத்தான். அவர்களுக்கு அக்கா எந்த ராணிக்கும் குறைந்தவள் இல்லை என்ற நினைப்பு. சிந்தா மென்னகையோடு கணவனைக் கண்கள் பளபளக்கப் பார்க்க,
அய்யனார், " ஏ புள்ளை அக்கா புருஷன்டு மருவாதை வேணாம், என்ன வாய் நீளுது" எனச் சிறிய மகளைக் கடிந்தார்.
" ஏய் விடு மாமோய், என்னையப் பேசாமல் யாரைப் பேசுங்க. உரிமை இருக்கப் போய்த் தானே மாமன்னு கேலி பேசுதுங்க. ஆனாலும் அதுவும் நிசந்தான், சிந்தாமணி குணத்துக்கும் அறிவுக்கும் நான் மட்டுத் தான்" என அவன் மனதில் எப்போதும் உள்ள குறையை ஒத்துக் கொண்டான் வேலு.
" இந்தா , நான் சிவகங்கை சீமை ராணி, இவரு கூலிக்காரன். சும்மா போவியா. நானும் பண்ணைக்கரர் மவ தானே, உனக்குச் சரியான ஜோடி தான்." எனக் கணவனுக்குச் சமாதானம் பேசவும் வேலுவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. தலை முடியை கோதிவிட்டு ,புன்னகைத்தான். உண்மையில் வேலு சிந்தாவை விடப் புது நிறத்தில் அம்சமாகவே இருப்பான்.
" யக்கோய், மாமனைப் பாரு, நீ உனக்கு ஏத்த ஜோடின்டு சொல்லவும் மகி(ழ்)ந்து போச்சு. " எனச் சுப்பு அக்காள் கணவனை ஓட்டினான்.
" என் வாயாலைச் சொல்ல வைக்கனும்முன்னு தானே உன் மாமன், மட்டு கிட்டுன்னு டயலாக் அடிக்குது. எனக்கு இது சூழ்ச்சி தெரியாதாக்கும் . காசா பணமா, வாயில இருக்கு வார்த்தை சொல்லி வைப்போம்" எனச் சிந்தா சொல்லவும்.
" வாயில இருக்க வார்த்தை தான் சிட்டு, அது தான நம்மளை உசிரோட கொன்டுச்சி. நமக்கு அது மாதிரி வார்த்தையே வேணாம். நல்லதையே சொல்லுவோம். " என அய்யனார் தனது பெருந்தன்மையைக் காட்டினார்.
" அப்புறம் என்ன கருவையை வேரோட எடுத்துச் சுத்தம் பண்ணித் தாறோம்னு ஒத்துக்க மாமா. நான் பார்த்துக்குறேன். " என வேலு தைரியம் கொடுத்தான். அய்யனாருக்கு வேலு மரு- மகன் என்ற வார்த்தைக்குச் சரியான அர்த்தத்தில் தோள் கொடுத்து நிற்பவன், அவனைக் கணவனாக அடைந்தது சிந்தாவின் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே அவர் நினைத்தார்.
மாலையில் வெயில் தாழ ஐந்து மணி போல், தனது ஆறு மாதக் குழந்தையையும் தூக்கிக் கொண்டு, சிவநேசன், குமரனோடு வண்டியில் வந்து இறங்கினான். குமரன் சிவநேசனை இறக்கி விட்டு, பெரியப்பாவை அழைக்கச் சென்றான். கால் நடையாகவே வரலாம் எனவே காரை எடுக்காமல் பைக்கில் வந்தனர்.
சிந்தாவின் வீட்டுக்கு அடுத்து வேறு வீடுகள் கிடையாது, அதனால் ஓடை அருகிலேயே தென்வயலை பார்வையிட்டுக் கொண்டும், அய்யனார் வருகிறாரா என இவர்கள் வீட்டுப் பக்கமும் பார்த்துக் கொண்டே நின்றான். சட்டெனச் சிந்தா வீட்டுக்குச் செல்ல தயக்கம். ஏனெனில் அப்படி எல்லாம் அவர்கள் பண்ணைக்காரர் வீட்டுக்குச் சென்றதே இல்லை.
சிந்தா, வீட்டுக்குள் வேலையை முடித்து வெளியே வந்தவள், சிவநேசன் வீட்டுக்கு வெளியே நிற்பதைப் பார்த்தாள். ஐந்து வருடத்திற்கான அந்தச் சம்பவத்துக்குப் பிறகு அவள் சிவநேசனை நேருக்கு நேர் சந்திக்கவே இல்லை. நேற்று அவள் ஆற்றின் சறுக்கில் ஏறும் போது, அவளைக் கீழே விழாமல் பிடித்த போது பார்த்தது தான்.
சட்டெனச் சிவநேசனை நோக்கி ஓரடி வைத்தவள், அந்தா நாளின் பேச்சுக்கள் நினைவில் வரத் தயங்கி நின்று விட்டாள். " அக்கா, பாப்பா எந்திரிச்சிடுச்சு" எனச் சத்யாவைத் தூக்கி வந்து முத்து அவளிடம் தந்தாள். ஆதரவு கிடைத்தார் போல் மகளை வாங்கிக் கொண்டு, " அந்த அய்யா நிற்கிறாரு பாரு, அப்பாட்ட சொல்லு" என உள்ளே சென்றாள். ஏனெனில் இவர்களை ஆராய ஆண்டிச்சி கிழவி வந்து கொண்டிருந்தது.
கிழவி நேரா சிவநேசனிடமே சென்று, " சின்னையா, என்ன இங்க நிக்கிறிக. இது உங்க மகளா, அம்சமா பெரிய ஆயியைக் கொண்டு பிறந்திருக்காக. இவுக அம்மா வரலையா, பால்குடி மறக்காத புள்ளையை நீங்க மட்டுமா தூக்கியாந்தீக , இங்கனை எங்க வந்தீக, சிந்தாவை பார்க்கவா, நான் வேணா கூப்பிடவா" என வரிசையாகத் தனது சந்தேகத்தை எல்லாம் கேட்டு, தனது குசும்பையும் காட்டியது. சிவநேசன் என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் முழிக்கும் போதே, வேலு பைக்கில் மகனோடு வந்து சேர்ந்தான்.
" ஏய் அப்பத்தா, இங்க நின்னு கதையளந்துகிட்டு கிடக்க, உன் மருமவ சூடான கலி கிண்டி வச்சுகிட்டு உன்னைக் காணாமுன்டு தேடிக்கிட்டு இருந்துச்சு" எனச் சும்மா அடித்து விட்டான். நேசன் ஆசுவாசமாக உணர்ந்தான். வேலுவைப் பார்த்துப் புன்னகைத்தான். அவனும் நேசனை ஒரு ஒற்றைக்கை சலாமோடு வரவேற்றான். இருவரும், ஒருவரை ஒருவர் பார்வையால் இதைப் போட்டுக் கொண்டிருந்தனர்.
வண்டியிலிருந்து இறங்கிய சத்திய மூர்த்தி, சிவநேசன் அருகில் சென்று, சிந்துஜாவைக் கொஞ்சி விளையாட்டுக் காட்டினான், அதுவும் இவனைக் கண்டு சிரித்து வைத்தது. சத்தி நிமிடத்தில் " பிடிச்சா" எனச் சிவனேசனைச் சுத்தி, சுத்தி ஒழிந்து மறைந்து விளையாட , அது பொக்கை வாய் தெரியச் சிரித்தது.
" நிசமாவா சொல்ற, சூடான கலியை என் கண்ணுல காட்டா மாட்டாளுகளே, சரி எதுக்கும் போய்ப் பார்க்குறேன். சின்னைய்யா அப்புறம் வந்து உங்களை விசாரிக்கிறேன், இங்க தானே இருப்பீக " எனக் கேள்வியோடு கிளம்பவும், விட்டது தொல்லை என அவனும் தலை ஆடி வைத்தான்.
' சார், என்ன இங்கனையே நிக்கிறீக, உள்ள வாங்க. " என வேலு சிவநேசனை அழைக்க, அய்யனார் புழக்கடை பக்கமிருந்து, கையைத் துண்டில் துடைத்தபடி ஓடிவந்தார்.
" வாங்கையா, பெரியய்யா வாராகலா, அந்தி சாயும் முன்ன நிலத்தைப் பார்த்திட்டு வந்திடலாம். " எனத் தனது சம்மதத்தைச் சூசகமாக அறிவித்தார் அய்யனார்.
" இருக்கட்டும் பரவாயில்லை, தம்பி அப்பாவைக் கூப்பிட போயிருக்காப்ள, இப்ப வந்திருவாங்க." எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மகாலிங்கம் ஐயா குமரனோடு வந்தார். அரியனும் அவர்கள் பின்னாடியே வந்து சேர்ந்தான்.
" கும்புடுறேன்ங்கய்யா" என மகாலிங்கத்தைப் பார்க்கவும் அய்யனார் கையெடுத்துக் கும்பிட்டு, துண்டு கக்கத்துக்குப் போனது. வேலு தலையை அசைத்து ஒரு கையால் வணக்கம் போட்டான்.
மகாலிங்கம், இறங்கி கவனமாக நடந்தவர், " அய்யனார், இன்னும் எதுக்கு, இப்படி வளைஞ்சு கும்புடு போடற. அதெல்லாம் வேண்டாம், மரியாதை மனசில இருந்தா போதுமுன்னு சொல்லியிருக்கேன்ல. " எனக் கடிந்தார். அதில் வேலுக்குப் பெரியவர் மேல் சட்டென மதிப்பு உயர்ந்தது.
" இருக்கட்டும்ங்கயா, அது இரத்தியையே ஊறினது, கட்டை சாயற வரைக்கும் போகாது " என்றவர் வயல் பக்கம் செல்லக் கிளம்பினர்.
சிந்தா உள்ளேயிருந்து கணவனுக்குக் குரல் கொடுத்தாள், " நீங்க முன்ன நடங்க நான் வாரென்" எனச் சொல்லவும்.
" மச்சான், பட்சி பறக்கிற நேரம் வயக்காட்டுக்குள்ள அவுக பாப்பாவைத் தூக்கிட்டுப் போக வேணாம். இங்கனையே விட்டுட்டுப் போகச் சொல்லு, நான் பார்த்துக்கறேன் " எனச் சற்று சத்தமாகவே சிவநேசனுக்கும் கேட்கும்படி சொன்னாள்.
சிந்தாவின் வார்த்தை மகாலிங்கமும் கேட்டார், " தம்பி நானே சொல்லனும்னு நினைச்சேன். பாப்பாவை சிந்தாகிட்ட விட்டுட்டு வயலைப் பார்க்கப் போங்கன்னு உங்க அம்மா சொல்லி விட்டுச்சு. " என்றார்.
ஆனால் சத்தியாவை, வேலு, சுப்பு , முத்து என ஒவ்வொருவராக அழைக்க வர மறுத்தது. சத்திய மூர்த்தியைப் பார்த்து மட்டும் சிரித்தது. வேறு வழியின்றி, தன் மகளைத் தங்கையிடம் கொடுத்து விட்டு, சிந்தா வந்து கொஞ்சி " வாங்கத் தங்கம்" என அழைக்கவும் ஒரு முறை பிகு செய்தது. " சரி சத்தி, நீ வாடாப் போகலாம்" எனத் தன் மகனைக் கைபிடித்து அழைத்துச் சொல்லவும், சிந்துஜா ஒரு சத்தம் போட்டது. "அப்ப நீ வா" என அழைத்தாள், அதற்குள் சுப்புப் பனை ஓலை கிளுகிளுப்பைக் காட்டி சத்தம் எழுப்பவும் சிந்தாவிடம் சென்றது. சிவநேசன் அவளைக் கனிவாகப் பார்த்தபடி, "சுப்பு பாப்பா அழுதா என்னை வந்து கூப்பிடு" என்றுவிட்டு வயலுக்குச் சென்றவர்களைப் பின் தொடர்ந்தான்.
சிந்தாவின் கையில் மற்றொரு பிள்ளையைக் காணவும், சத்தியா துள்ளியது. இரு சிறு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு உடன்பிறப்புகள் மூவரும் சத்தியமூர்த்தியுமாகச் சிரித்துப் பேசி விளையாடினர். சிந்தா சிறிது நல்லெண்ணெய் தொட்டு சிந்துஜாவின் உச்சந் தலையில் வைத்து, ஒரு சிட்டிகை சீனியை வாயில் வைத்து விட்டாள். இது எதுக்குமா எனக் கேட்ட மகனிடம்.
" இந்தப் பாப்பா முதல் முதல்ல நம்ம வீட்டுக்கு வந்திருக்குல்ல , உறவு வளரனும்னு வைப்பாக" என விளக்கம் தந்தாள் சிந்தா.
முக்கால் மணிநேரம் கழித்து வயலை பார்க்கச் சென்றவர்கள், பேசிக் கொண்டே திரும்பினர்.
" சரிங்கையா, இந்தச் சீமைக் கருவைய வச்சே இடத்தை அளந்து வேலி போட்டுருவோம்" என்றார் அய்யனார்.
" அய்யனார், கம்பி வேலி போட்டுக்கலாம். நீங்க அதுக்கெல்லாம் ஸ்டைன் பண்ணாதீங்க" எனக் குமரன் சொல்லவும், " என்னங்கய்யா" எனக் குமரனைக் கூர்மையாகக் கவனித்தார்.
" நீங்க கருவேலமரத்தை வச்சி கஷ்டப் பட்டு வேலி வேண்டாம். கம்பி வேலி போட்டுக்காலாம்னு சொல்றார்." எனச் சிவநேசன் விளக்கவும்,
" இதுக்கு எதுக்குங்கையா செலவு பண்ணிக்கிட்டு" என அய்யனார் செலவைக் குறைப்பதாக நினைத்துச் சொல்லவும்,
" நம்ம மூலிகை பண்ணை போட போறோம். அதுக்கு இந்த மரம் பக்கத்தில் இருக்கக் கூடாது. இது காற்றில் இருக்க ஈரத்தை உறிஞ்சிடும். மூலிகைச் செடிக்கே ஆபத்தா முடியும். அதனால வேண்டாம். என்னைக் கேட்டா இந்த ஊரில எல்லாருமே கருவேலமரத்தை அடியோடு எடுக்குறது நல்லதுன்னு சொல்லுவேன்" எனக் குமரன் மீண்டும் அய்யனாருக்குப் புரியும் படி எடுத்துச் சொன்னான்.
"அது எப்படிங்கய்யா, இங்கனை நிறையப் பேருக்குக் கஞ்சி ஊத்துறதே, இந்தக் கருவையும், கரி மூட்டமும் தான். சிலர் தன்னால மூட்டம் போட்டு கரியை காசாக்கிகுவாக, சிலர் விறகு வெட்டப் போவாக, இளவட்ட பயலுக கரிமூட்டம் போடுற கம்பனிக்கு வேலைக்குப் போராக, எங்களுக்குப் பொழப்பே இது தான் ஐயா " எனத் தங்களது வாழ்வாதாரமாகச் சீமைக்குக் கருவை உள்ளதை அவரும் விளக்கினார்.
" நீங்க பொழப்புன்னு நினைக்கிறது தான், உங்கள் பொழப்பை கெடுக்குது, அதை மாத்த தான் நாங்க முயற்சி செய்யுறோம், இது லாபமான விஷயமா, காசு வருமுன்னு நிரூபிச்சா மத்தவங்களும் கருவேலமரத்தை அளிக்க முன் வருவாங்க, ஒரு நாள் விளக்கமா சொல்றேன்" என்ற குமரன், "அண்ணன் , இங்கே ஒரு அவேர்னெஸ் ப்ரோக்ராமமுக்கு ஏற்பாடு பண்ணனும்" என்றான்.
"நம்மைச் செஞ்சு காட்டிட்டு தான், அதைப் பத்தி சொல்லணும் குமரா, அப்பத்தான் காது கொடுத்தாவது கேப்பாங்க" என்ற நேசன்,
வேலையை ஆரம்பிக்கச் சொல்லி, மாமன் மருமகன் இருவரிடமும் பொறுப்பை ஒப்படைத்தான். முன்பணமாகப் பணத்தையும் நீட்டவும் அய்யனார் யோசித்தார். " காசை வாங்கிக்க அய்யனார், அப்பத் தான் இதுக்குச் சம்மதிச்சு இருக்கன்னு அர்த்தம் " எனப் பெரியவர் சொல்லவும் அய்யனார் வாங்கிக் கொண்டார்.
சிந்துஜா, சிந்தாவின் வீட்டில் நன்றாக ஒட்டி விளையாடிக் கொண்டிருந்தது. சிவநேசன் மகளை உணர்ச்சி வயப்பட்டுப் பார்த்திருந்தான். சிவநேசன் போகலாம் என அழைத்த போது சிந்தாவிடமிருந்து வர மறுத்தது.
அதற்குள், அவர்கள் வீட்டுப் பண்ணைக்காரன் கருப்பன், " அய்யா, சின்னம்மாவும் மாப்பிள்ளையும், மருதையிலிருந்து வந்திக்காக. ஆயி உங்களை வரச் சொன்னாக" எனக் கங்கா வந்ததை அறிவித்தான். சிவநேசனுக்கு உடல் விறைத்தது. அதிலேயே சிந்தாவுக்கு அவனுடைய கோபம் புரிந்தது. அவனுக்கு ஆதரவான பார்வையைக் காட்டினாள். அதைப் புரிந்து கொண்டவன், ஒரு பெருமூச்சோடு,
" அப்பா, நீங்க குமரனோட முன்னப் போங்க. நான் பின்னாடியே நடந்து வாரென்" என அனுப்பி விட்டு, மகளை அழைத்தான். அப்பாவின் மொழி அதுக்குப் புரிந்ததோ என்னவோ, இந்த முறை அடம் பிடிக்காமல் சென்றது. அவன் பொதுவாகச் சொல்லித் தலையாட்டி விட்டு நடையைக் கட்ட, வேலு, " சார் வாங்க, நான் கொண்டு போய் விடுறேன்" என அவன் மறுத்தும் கேட்காமல் வண்டியில் ஏற்றி கொண்டு விட்டு வந்தான்.
சிவநேசனை வாசலில் இறக்கி விடும் போதே உள்ளே கங்காவின் பெரிய சத்தம் கேட்டது. சிவநேசன் வேலுவிடம் சொல்லிக் கொள்ளவும் மறந்து உள்ளே சென்றான். வேலு பணமிருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் பத்தாது. சொந்த பந்தம், மனைவி மக்கள் அனுசரணையாக அமைய வேண்டும் என மனதில் நினைத்தவன், தனக்கு மனைவியாகச் சிந்தா வாய்த்ததை எண்ணி மகிழ்ந்தான். வண்டி தன் போக்கில் வீடு வந்து சேர, யோசனையோடு இருந்த கணவனை என்னவென்று விசாரித்தாள் சிந்தா.
"பெரிய வீட்டுல, பெரியவர் சின்ன மகள் தான் பிரச்சினைக்கு எல்லாம் காரணமோ" என எதார்த்தமாகக் கேட்டான் வேலு. சிந்தா ,"என் மச்சான்,பெரிய வீட்டில எதுவும் ரசாபாசமா ஆயிடுச்சா" என அதிர்ச்சியாகக் கேட்டால் சிந்தா. "இல்லை புள்ளை , அந்தம்மா சத்தம் வீதி வரைக்குக் கேட்டுச்சு" என்றான்.
"பெரிய ஐயா, தங்கச்சி மகனுக்குத் தான், இந்தக் கங்காவ கட்டிக் கொடுத்தாக, அது நாத்தனாரைத் தான் சின்னையா கட்டியிருக்காரு. பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துருக்காக, சின்னவர் புள்ளையைத் தூக்கிட்டு வந்துட்டாருல்ல அது தான் விஷயமா இருக்கும்" என அப்போதைக்கு விஷயத்தை முடித்தாலும்,
கங்காவைப் பற்றி நினைக்கையிலேயே பழைய நினைவுகள் அவள் கழுத்தைப் பிடித்தது. தூக்கத்தில் அரண்டு எழுந்தவளை வேலு தேற்றினான். அவனின் ஆதரவான செயலில் திருமணம் முடிந்து ஐந்து வருடம் கழித்துத் தன் கணவனிடம் மனம் திறந்தாள் சிந்தா.
No comments:
Post a Comment