ஹாசினி சந்திரா - முடிவுரை
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பெங்களூரு சந்திர பவனத்தில் ப்ரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனைக் கன்னட ஊடகங்கள் மட்டுமின்றி இந்திய அளவிலும் ஏன் சர்வதேச ஊடகங்கள் கூட மிகுந்த ஆவலோடு எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.
நீண்ட இடை வேளைக்குப் பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், கர்நாடக ஜனாதா பார்ட்டியின் தலைவரும் , முன்னாள் துணை முதல்வருமான ஶ்ரீசுரேந்திர ராமச்சந்திரா என்ற எஸ்ஆர்சி ஊடகத்தைச் சந்திக்க இருக்கிறார். அவர்கள் மாளிகை இருக்கும் அந்தப் பகுதி முழுவதும் தங்கள் தலைவரை வரவேற்கும் சுவரொட்டிகளும், கட்சித் தோரணங்களும் , கட்டவுட்களுமாகக் களை கட்டியது. கட்சியின் மூத்த தலைவர்கள், இந்நாளில் கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு புறம் கூடியிருந்தனர்.
அந்த மாளிகையின் உள்ளும் புறமும் உச்ச பட்ச போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. ஊடகங்கள் தங்கள் ஊகங்களைச் செய்தியாக வாரி வழங்கிக் கொண்டிருந்தன. எஸ்ஆர்சி யின் பிறப்பு வளர்ப்பு குடும்ப வாழ்க்கை, இரண்டு குடும்பங்கள்,திரைத்துறை வாழ்க்கை, அரசியல் பிரவேசம், கட்சி ஆரம்பித்தது, துணை முதல்வரானது. ஹாசினி சந்திரா படுகொலை, நஞ்சப்பாக்கள் கைது, விசாரணை, தண்டனை என அத்தனையைப் பற்றியும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் எஸ்ஆர்சி பழைய கம்பீரத்துடன் தனது மனைவிமார் இருவருடன் மேடை ஏறினார். இரத்தின தேவ் எல்லாருக்கும் ஓர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, சிறு அறிமுக உரை. எஸ்ஆர்சி நான்கு ஆண்டுக்கால வனவாசத்தைப் பற்றி அறிவித்து, ஹாசினி படுகொலை மற்றும் அதனைத் தொடர்ந்த துக்கம் துயரம் எனச் சென்டிமென்டாகப் பேசி, தங்கள் குடும்பத்துக்காகப் பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துத் தலைவரிடம் மேடையைத் தந்தார்.
எஸ்ஆர்சி மேடையில் அமர்ந்தபடி முன்னால் போடப்பட்டிருந்த மேஜை மீது கையை வைத்துக் கொண்டு, அவரது வழக்கமான ஸ்டைலில் "ஜெய் கர்நாடகா, ஜெய் கன்னடிகா . எனது அன்பு உடன்பிறப்புகளே" என்றார் வெளியே வைக்கப்பட்டிருந்த திரையில் தலைவரைப் பார்த்த தொண்டர்கள் " ஹோ " என ஒலி எழுப்பினர். கையை உயர்த்தித் தலைவணங்கி ஏற்றவர், " எனது அன்பு உடன்பிறப்புகளாகிய கேஜேபி தொண்டர்களுக்கும் , கர்நாடக மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் இந்த ஊடகங்கள் மூலமாகச் சொல்லிக்கிறேன். எனது உடல்நிலைக்காகப் பிரார்த்தனை செய்த அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்களைக் காணாத இந்த வருடங்கள் நிச்சயமாக எனது வாழ்வின் அஞ்ஞாதவாசம் தான். எனது மனைவிமார்கள் இருவரின் கவனிப்பிலும், மருத்துவர்களின் சிகிச்சை , உறவுகளின் ஆதரவு, எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் பிரார்த்தனைகளால் இதோ நான் மீண்டும் உங்கள் முன்.
எனது உடல்நிலை சரியில்லாத போது, என் இடத்தை நிரப்ப எனது மகள் ஹாசினி சந்திரா உங்கள் மத்தியில் வந்தாள். சில சதிகாரர்கள், உள்ளிருந்தே பதம் பார்த்த துரோகிகளால் எனது அன்பு மகளை நான் பலி கொடுத்தேன். " என நிறுத்தியவரின் குரல் கம்மி இருந்தது, கண்கள் கலங்கி ஒரு நீர் திவலை உருண்டு கீழே விழாமல் தேங்கி நின்று கேமராவுக்குப் போஸ் தந்தது, தேர்ந்த நடிகரான எஸ்ஆர்சி அதனைச் சுண்டி விட்டு, குரலைச் சீர் செய்து கொண்டு மீண்டும் தனது உரையைத் தொடர்ந்தார்.
" இன்னொரு ஹாசினி சந்திரா நமது கட்சிக்குக் கிடைக்கமாட்டாள். ஆனால் இறைவன் கொடை வள்ளல், அவன் எப்போதும் எனக்கு எல்லாவற்றையும் இரட்டிப்பாகவே அளித்து வந்திருக்கிறான். " எனச் சிரித்தவர் " இதோ அதற்கான சாட்சி எனது மனைவி மார், எனது வாழ்க்கையையும் சரி பாதியாகப் பங்கிட்டுக் கொண்டவர்கள். எனது மகன்கள் பிரதிபன் சந்திரா, அதிபன் சந்திரா " என அவர்களது குடும்பத்தையும் அறிமுகம் செய்தவர் , " கடவுள் எனக்கு எல்லாவற்றையும் இரட்டிப்பாகத் தந்ததாகச் சொன்னேன். ஆம் எனக்குப் பிறந்தது இரட்டை மகள்கள். மேனகாவுக்குப் பிரசவத்தில் இரட்டை மகள் பிறக்க ஒரு மகவு அதன் தாயிடமும் மற்றொன்றை அதன் பெத்தம்மா பானுமதியிடமாக வளர்ந்தது. இங்கு வளர்ந்தவள் ஹாசினி சந்திரா, அங்கு வளர்ந்தவள் சுஹாசினி சந்திரா. இருவருக்கும் சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள வித்தியாசம்" என வரிசையாக வர்ணித்துத் தனது மகளைக் கணவன் சந்திரதேவ் மற்றும் மூன்று வயது பெண் குழந்தை மிருதுபாஷினியோடு சேர்த்து அறிமுகம் செய்தார்.
சுஹாசினி சந்திரதேவ், ஹாசினியின் எதிர் பதமாகச் சாதாரணக் குடும்பப் பெண்ணாக அலங்காரமின்றிக் கணவனோடு ஒட்டிக் கொண்டு வந்தாள். பார்த்தவர்கள் வியந்தனர். அடுத்தடுத்துக் கேள்விகள் ராக்கெட் வேகத்தில் வந்து விழ, சீனியர் ஜூனியர் சந்திராக்கள் அதனைச் சமாளித்தனர். வெற்றிகரமாக ஹாசினியை, சுஹாசினியாக இவ்வுலகில் அறிமுகம் செய்தனர். ஒருவாரம் ஊடகங்கள் இதைப் பற்றித் துப்பு துலக்கி, அலசி ஆராய்ந்தன. ஹாசினி சுஹாசினி குறைந்த பட்ச ஆறு வித்தியாசத்தைக் கண்டு பிடித்து ஓய்ந்தன.
எஸ்ஆர்சியைப் பார்க்க முதலமைச்சரே வந்தார். குடும்பத்தாரோடான கலந்துரையாடலுக்குப் பிறகு, தனது அலுவலக அறையில் இருவரும் சந்தித்தனர், சந்திரதேவ் உடனிருந்தான்.
" உங்களுடைய ஒத்துழைப்பு இல்லைனா, மாமாவையோ, கட்சியையோ, ஹாசினியவோ நான் மீட்டிருக்க முடியாது. நன்றி சார்" எனச் சந்திரதேவ் முதலமைச்சருக்கு நன்றி சொன்னான். எஸ்ஆர்சி பார்வையாளராக இருக்க, " எல்லாத்தையும் தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும் உங்க மாமனாருடைய உத்தி தான்" எனச் சந்திரதேவையும் அதிர விட்ட முதலமைச்சர். தனது அறுவைசிகிச்சைக்கு முன்பு சந்திர தேவை கூப்பிட்டுப் பேசிய போதே தம்மிடமும் பேசியதைச் சொன்னார். இதில் அவர்கள் எதிர் பார்த்ததும், எதிர் பாராதது இரண்டுமே நஞ்சப்பாக்களின் நயவஞ்சகம் தான்.
" கிருஷ்ணாஜி, நஞ்சப்பாட்ட இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டிங்கல்ல " எனப் பூடகமாகக் கேட்டார் எஸ்ஆர்சி.
அவரும் சிரித்துக் கொண்டே, " உங்களை வச்சிருந்த மருத்துவமனையில் அவனை வச்சு, அதே ட்ரீட்மெண்ட் நடக்குது. மகனை சிறையில் கவனிச்சாச்சு. " என்றவர். " ஆனால் நீங்களும், சிக்கம்மாவும் ரொம்பச் சிரமபட்டுட்டீங்க " என வருந்தினார்.
" இருக்கட்டும் எல்லாம் ஒரு காலம் தான். ஆனால் சரியான நேரத்துக்கு நீங்க மாப்பிள்ளையை வரவழைத்ததும், தங்கப்பாண்டியனை இன்வஸ்டிகேசனுக்கு அப்பாயிண்ட் பண்ணதும் சரியான மூவ்" எனப் பாராட்டியவர், இனி தான் கட்சியை மட்டும் கவனிப்பதாகவும், ஆட்சிப் பொறுப்புகளில் அவரது உடன்பிறப்புகள் இருப்பார்கள் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பு, எஸ்ஆர்சியின் பொது வாழ்விலும் குடும்ப வாழ்விலும் அவருக்குப் பெரிய மரியாதையை வாங்கித் தந்தது.
சந்திர பவனத்தில் இரண்டு மனைவிகளுடன் எஸ்ஆர்சி வாழ ஆரம்பித்தார். அதிபன் சந்திரா மயூரா தம்பதி அவர்களோடு இருந்து தொழிலையும் அப்பா அம்மாக்களையும் பார்த்துக் கொண்டார்கள். ப்ரதிபன் சந்திரா குடும்பத்தை மஸ்கட்டில் வைத்து அவன் உலகம் முழுவதும் பறந்தான்.
சிம்மதேவ் குடும்பம் அண்ணன் ,தம்பி இரண்டு தேவும் மஸ்கட்டில் தங்கள் தொழிலைப் பார்த்தனர். சந்திரதேவ் தனது மனைவி சுஹாசினி சந்திரதேவுக்குத் தனி அடையாளம் ஏற்படுத்தித் தரும் நோக்கில் அவளுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்கச் சொன்னான். எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில் ஹாசினி பேசன் டிசைனிங்கை ஆரம்பித்தாள். தனக்கே மற்றவர் உடை தேர்ந்தெடுக்கும் நிலையிலிருந்தவள், தனது முழுக் கவனத்தையும் அதில் செலுத்தி பெரிய இடத்துப் பெண்களுக்கான பிரத்தியேக ஆடை வடிவமைப்பு செய்யும் தொழிலை ஆரம்பித்திருந்தாள். ஹாசினி சந்திரா என்ற அடையாளத்தில் உச்சாணிக் கொம்பிலிருந்தவள், சுஹாசினி சந்திரதேவாக அனைவரோடும் பழகினாள். அரபுநாடுகளின் உயர்மட்ட பெண்களின் உடை ஆலோசகரானாள் சுஹாசினி சந்திரதேவ்.
சந்திரா மற்றும் தேவ் குடும்பத்தினர், உல்லாச படகிலும், ஹெலிகாப்டரிலுமாகப் பயணித்துச் சுஹானா தீவை வந்தடைந்தனர். மேத்யு வில்லியம்சன் மற்றும் சந்திரதேவ் ஜோடிகள் அனைவரையும் வரவேற்றனர். பரிதி பவன் முன்னதாக வந்து மலரும் நினைவுகளோடு ஏற்பாட்டைக் கவனித்தனர். அன்றைய தினம் சுஹானா தீவின் " ஹாசினி சந்திரா " ஹாலிடே ரிசார்ட் எஸ்ஆர்சியின் கைகளால் திறந்து வைக்கப்பட்டது.
நான்கு வருடங்களில் சுஹானா தீவு சொர்க்கபுரியாக மாறியிருந்தது. ஆங்காங்கே காட்டேஜ் , நடைபாதைகள், கார்டன், ஏனைய வசதிகள் பெற்று அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்திச் செய்யும் ஆடம்பர விடுதியானது. சந்திரதேவின் கனவுத் திட்டம் ஹாசினிக்காக மேத்யுவின் நிதியுதவியுடன் நிறைவேறியது.
பெரியவர்களுக்குச் சமதளமான இவர் முன்பு தங்கியிருந்த காட்டேஜில் வசதிகளை மேம்படுத்தித் தங்கும் அறை ஒதுக்கிய தேவ், மற்ற ஜோடிகளுக்கு ஆங்காங்கே இருந்த அறைகளை ஒதுக்கினான்.
இரவு நேரம் அருவியை ஒட்டிய காட்டேஜை தங்களுக்கு எடுத்துக் கொண்ட சந்திரதேவ் ஜோடி , மூன்று வயது மகளைத் தூங்க வைத்து விட்டு, அருவி விழும் சத்தத்தையும், ஓடையின் சலசலப்பையும் ரசித்தபடி தங்கள் பழைய நினைவுகளில் மூழ்கி ஒரே ஷோபாவில் அவன் மடியில் அவள் குறுக்காக அவன் கழுத்தை ஒரு கையால் கட்டிக்கொண்டு மறுகையால் அவன் கைகளில் பிணைத்துக் கொண்டு, அவன் அணைப்பில் அமர்ந்து சாளரத்தின் வழியே வானத்துச் சந்திரனை ரசித்துக் கொண்டிருந்தாள். அவன் அவளை ரசித்துக் கொண்டே " ஹசி, நீ ஹேப்பியா" என்றான். “ம்ம்” என்றாள்.
“வாயைத் திறந்து பேசு” என்றான்.
" ம் ஸோ ஹேப்பி, எனக்குப் பிடிச்சது போல எனக்கான அடையாளத்தை நீ கொடுத்திட்டியே, இரண்டு நாள் என் ப்ரெண்ட்ஸ் அண்ட் கஸ்டமர்ஸ் கிட்ட இருந்து பர்மிசன் வாங்கிட்டு வர்ற அளவு , அவ்வளவு அன்புத் தொல்லைகள். ஸோ ஹேப்பி " என்றாள் . அவளை முறைத்தவன், "அதனால தான் ஹேப்பி. என் கூட வாழறதில இல்லையா" எனவும்,குலுங்கிச் சிரித்தவள் அவன் நெற்றியில் முட்டி, " அரக்கன் ஸாருக்குக் கோபம் வருதோ, அப்புறம் என்ன." எனச் சிணுங்கியவள்,
" நானே, உன்னை அடையாளம் தெரிஞ்ச நாளை நினைச்சு அந்த ட்ரீம்ல இருந்தேன்" என்றாள்.
" போடி,போய்ச் சொல்லாத, என் அடையாளம் தெரிஞ்சு, நீ அழுத " என்றான்
" போயா முட்டாள் கூஸ், குழியிலிருந்து தூக்கும் போது கையை விடாமல் பிடிச்சுக்கோடி மது ன்னு சொன்னியே, எப்படி இருந்துச்சுத் தெரியுமா. " எனக் கண்கள் பளபளக்க அவள் விவரித்த விதத்தில் சந்திரதேவ் மயங்கித் தான் போனான். அவர்கள் ஒருவரில் ஒருவர் லயித்து இருந்த போது கதவு தட்டும் ஓசை கேட்டது. சந்திரா எரிச்சலாகச் சென்று கதவைத் திறக்க நிருபன் தேவ் நின்றான்.
"அண்ணா, ஒரு பொண்ணைக் கடத்திட்டு வந்துட்டேன். ஹெல்ப் மீ" என்றான். நிருபன் தேவ் கடைசியாகத் துபாய் மன்னரின் உறவினருக்காக ஒரு மாளிகையைக் கட்டிக் கொண்டிருந்தான். அதை நினைவு கூர்ந்து கலவரமாகி " யார்டா" என்றான்.
“ஸாஹிரா உமர் ரஷித் “ என்றான் நிருபன். சந்திரதேவ் 'மறுபடியும் முதல்ல இருந்தா " என அதிர்ந்தான். "திருந்தவே மாட்டீங்க "என் ஹாசினி சகோதரர்களை முறைத்து நின்றாள்
No comments:
Post a Comment