Tuesday, 14 September 2021

சிந்தா -ஜீவநதியவள் -27

சிந்தா -ஜீவநதியவள் -27 

மோகினி அவதாரமெடுத்த ஹரியின் அம்சமும் சுயம்பாக நிற்கும் ஹரனின் அம்சமும் இணைந்து ஓர் சக்தியே ஹரிஹர சுதனான ஐயப்பன். அவரையே நாட்டார் வழக்கத்தில் அயனை , அய்யனார் எனப் பூரண, புஷ்கலாதேவ சமேதராகப் பல்வேறு பெயர்களைத் தாங்கிய அய்யனாராகத் தமிழகமெங்கும் காவல் தெய்வங்களாக வணங்குகின்றனர். அவர் வலம் வரும் குதிரை வாகனத்தையும், வேட்டைக்குப் போகும் போது துணை வரும் பைரவ சக்தியான நாயையும் இன்றும் கிராமங்களில் மண் உருவாரமாகச் செய்து, அதனையே காணிக்கையாகச் செலுத்தி வழிபடுகின்றனர்.

இதோ மேலப்பூங்குடி கிராமமே கூடி இரண்டு மாதங்களாய் ஆயத்தம் செய்து பத்து நாள் காப்புக் கட்டி செவ்வாய் பாட்டுப் பாடி, மூன்று நாள் திருவிழாவில் குதிரையெடுத்து ஊர் சுற்றி பொட்டலில் வைத்து இரண்டு நாள் கூத்து நாடகம் காட்டி இன்று காலையில் ஐயனிடம் சமர்ப்பித்து, இதோ விருந்து படைக்கவும் ஊர் மக்கள் வந்து விட்டனர்.

அய்யனாரோடு இருபத்தியோரு பந்தி பரிவார தேவதைகளும் அறுபத்துநான்கு குதிரை சேனையும் உண்டு. ஒவ்வொரு வீட்டிலிருந்து கறி சமைத்துப் படைக்க எடுத்து வந்து விட்டார்கள். இன்னும் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

முதல் பூஜையாகப் பெரிய வீட்டுக்காரர்களின் தேங்காயை உடைத்து அய்யனுக்குப் படைத்து, முதல் பூஜை உரிமையை அவர்களுக்குத் தந்தனர்.

சற்றுமுன் சிவநேசன், அப்பா அம்மாவை காரில் அழைத்து வந்திருந்தான். பானையை இறக்கி வைத்திருந்த சிந்தா, தங்கையை அழைத்துக் கொண்டு வந்து ராஜியம்மாள் காலில் விழவும், அவர் ஓர் அர்த்த புன்னகையோடு இவர்களையும் கணவரையும் பார்த்தவர்.

" தொங்கத் தொங்கத் தாலியைக் கட்டிக்கிட்டு நல்லா இருங்கடி" என வாழ்த்திவிட்டுச் சென்றார்.

கங்காவுக்காக வேண்டுதல் பொம்மையை மகேஷ் வாங்கி வர, கேசவனும் கங்காவுமாக அதனை அய்யனார் கோவிலின் பின்புறம் இருந்த மரத்தடியில் வைக்கச் சென்றனர். அங்குச் செல்லும் போதே கங்காவுக்கு வலி எடுக்க, மகேஷ் தான் அக்காவைத் தாங்கி அங்கு வரை அழைத்துச் சென்று காணிக்கையையும் செலுத்த வைத்தாள். வேதாவுக்கும், ராஜியம்மாளுக்கும் மனம் நிறைந்தது.

வரிசையாகப் பூஜைக்கு ஆட்கள் நிற்க, சிந்தா குடும்பமும் அதில் நின்றனர். வேலுவை காணாமல் சிந்தா தேடிக் கொண்டிருக்க, முத்துவின் கண்கள் குமரனைத் தேடிக் கொண்டிருந்தன. சுப்பு வந்து அவர்கள் மானாமதுரை வரை சென்றிருக்கும் தகவலைச் சொன்னான்.

" சாமி கும்பிட்டுட்டு போறதுக்கு என்ன. அதை விட முக்கியமான சோலியாக்கும்" எனச் சிந்தா கணவனைக் குறைபட்டுக் கொண்டாள்.

வள்ளி திருமணம் நடந்த அன்று , சிந்தாவின் வீட்டு மாட்டுக் கொட்டகைக்குத் தீ வைத்தவர்கள், அதோடு மட்டும் நிறுத்தாமல் சிந்தாவின் சேலை கொடியில் காய்ந்து கொண்டிருந்ததையும் எடுத்துச் சென்றிருந்தனர். அதனை இரண்டு நாட்களாக ஒரு காளை மாட்டை முகர வைத்து, அவளை நேராகப் பார்க்கும் போது அதன் கொம்புகளால் தாக்கவும் திட்டமிட்டிருந்தனர். அந்தத் திட்டத்தின் படி, அவர்கள் பழக்கிய காளை மாட்டையும் மஞ்சு விரட்டு காளைகளோடு சேர்த்து நிறுத்தியிருந்தனர். அந்த மாட்டுக்காரன் சிந்தா தனியாக வரும் நேரத்தைக் கவனித்துக் கொண்டேயிருந்தான்.

கங்கா அந்த மரத்தடியிலேயே வலி தாங்காமல் அமர்ந்து விடவும், மகேஷ் வந்து சிந்தவைத் தான் அழைத்துச் சென்றாள். இவர்கள் பூசைக்கு நேரம் அதிகமிருந்தது. பதினொரு குதிரைகளுக்குச் சொந்தமானவர்கள் பூசை முடித்துத் தான் இவர்களது தேங்காயை உடைப்பார்கள்.

சிந்தாவுக்கும் கங்காவோடு தனியாகப் பேச வேண்டியது இருந்ததால் மகேஷை அங்கேயே நிறுத்தி விட்டுத் தான் மட்டும் அங்கே சென்றாள். கங்கா, கேசவனைத் தன்னால் நடக்க இயலவில்லை என வீட்டுக்குப் போக இரண்டு சக்கர வாகனத்தை எடுத்து வரச் சொல்லி அனுப்பியிருந்தாள். காணிக்கை செலுத்துபவர்கள் மட்டும் அவ்வப்போது வந்து சென்றனர். எனவே இப்போது கங்காவும், சிந்தாவும் மட்டுமே அங்கே சந்தித்துக் கொண்டனர்.

கங்காவின் அருகில் வந்து அவள் கையைப் பற்றிய சிந்தா, " அந்த டாக்டரம்மா சொன்ன மாத்திரை எல்லாம் நீ எடுத்துக்கவே இல்லையா" என அதிரடியாகக் கேட்கவும், அதிர்ந்த கங்கா, " என்னடி உளற, நீ உன் சோலியை மட்டும் பாரு. என்னை நாட்டாமை பண்ற வேலையெல்லாம் வச்சுக்காத. நீ சாதிக்க முடியாததை, உன் தங்கச்சியை வச்சு சாதிச்சிட்டேல்ல. பண்ணக்காரன் மகளை, பெரிய வீட்டு மருமகளாக்கிட்டங்கிற திமிரா " என அந்த வலியிலும் ஆங்காரமாகத் திட்டவும்.

" நான் அன்னைக்குச் சொன்னது தான், எனக்கு உங்க வீட்டுக்கு மருமகளா வரனுமுன்னு ஒரு நாளும் ஆசையிருந்தது இல்லை. ஆனால் முத்துவை நான் தூண்டி விடலை. குமரன் தம்பியோட அன்புக்கு அவளோட பதில் அவ்வளவு தான்" என நிதானமாகச் சொன்னவள்,

" அதையெல்லாம் விட்டுத் தொலை, உன் உடம்பையாவது ஒழுங்கா பாத்துக்கிறதுக்கு என்ன. பெரியம்மாளுக்கு இந்த விசயம் தெரிஞ்சா எம்புட்டு வருத்தப்படுவாக" எனவும்.

" இப்பையும் உனக்கு உங்க பெரியம்மா மேலையும், அவைகளுக்கு இந்தச் சிந்தா மேலையும் தாண்டி அக்கறை. இது தாண்டி என்னை விவரம் தெரிஞ்ச நாள்லருந்து என்னைத் திங்கிது" என வெறுப்பாகப் பேசிய கங்காவை.

" இப்ப எதுக்குத் தேவையில்லாததைப் பேசுற, உன் வியாதியைப் பத்தி வீட்டில இருக்கவுககிட்டச் சொல்லு, இல்லை நான் சொல்றேன். உன்னை உலகத்தில எந்த மூலைக்கும் கூட்டிட்டு வைத்தியம் பார்ப்பாக. உன்னையவே நீ தண்டிச்சிக்கிற" எனச் சிந்தா எடுத்துச் சொல்லவும்.

" உனக்கு அது தான வேணும், இந்தா அனுபவிக்கிறேன். அதைப் பார்த்து சந்தோஷப் பட்டுக்கிட்டே கிளம்பு. இந்த ஆளை இன்னும் வரக் காணோம்" எனக் கணவனைக் கண்களால் தேடினாள்

" கங்கா, நீ கஷ்டபடனுமுன்னு நான் ஒரு நாளும் நினைச்சது இல்லை. நான் உனக்கு எப்பவுமே ஈடு கிடையாது. நீயா அப்படிக் கற்பனை பண்ணிக்கிட்ட. கொஞ்சம் மஞ்சள் தண்ணீர் கலந்து தரவா, வலிக்கு இதமா இருக்கும். உன் கூட வந்து கசாயமாவது வச்சுத் தர்றேன்" என நயமாகவே கேட்டவளை , எரித்து விடுவது போல் பார்த்த கங்கா,

" போடி ரோசமில்லாதவளே, மானங்கெட்ட கழுதை, உன்னால தாண்டி நான் இந்த நிலைமைக்கு வந்தேன். யாரைப் பார்த்தாலும், சிந்தா, சிந்தானுஉன்னை தூக்கி வச்சிட்டு ஆடவும் தான், நாமளும் யாரையாவது வசப்படுத்தனுமுன்னு தான் சோமன் பயலை அடிமையாக்கி வச்சிருந்தேன். செய்யக் கூடாததெல்லாம் செஞ்சு தான் இந்த நிலைமை" என ஆரம்பித்தவள் ஆங்காரமாகத் தன் பிழைக்கெல்லாம் சிந்தாவையே காரணமாக்கிப் பேச, சிந்தா அப்போதும் பொறுமையாகவே அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

மாட்டுக்காரன் இது தான் சரியான நேரமெனச் சிந்தாவின் சேலையைக் கொடுத்து, காளையை அவளை நோக்கி ஏவி விட்டான்.

குமரனும், வேலுவும் மாற்றி மாற்றிச் சிவநேசன், அய்யனார், வேலு, முத்து என ஒவ்வொருவருக்கும் போன் அடித்துக் கொண்டே ஊருக்குப் பறந்து வர, ஸ்பீக்கர் அலறியதில் போன் அடித்தது கேட்கவில்லை. குமரன் சமயோசிதமாகக் கேசவனுக்குப் போன் அடிக்க, அவன் வண்டியை எடுக்கச் சற்று தள்ளிச் சென்று இருந்ததால் அவன் தான் போனை எடுத்தான். குமரன் எனவும் கோபமாகப் பேச ஆரம்பித்தவன், இவனது பதட்டத்தில் விசயத்தைக் கேட்டுவிட்டு, " அப்படி ஒண்ணும் அசம்பாவிதம் நடக்கலை, இரு நான் பார்க்கிறேன்" என வண்டியைக் கோவில் பின்புறம் வரை கொண்டு வந்தவன் சிந்தாவையும் கண்ணால் தேடியபடி வந்தான்.

சிந்தா மனைவியோடு நிற்கிறாள் என இவன் வண்டியை நிறுத்திவிட்டு விரைய, காளையும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்துவிட்ட கேசவனுக்கு, குமரனின் வார்த்தைகளும் காதில் எதிரொலிக்க,

" கங்கா, மாடு" எனக் கத்தியபடி அவன் ஓடிவர, பெண்கள் இருவரும் அதைத் திரும்பிப் பார்க்க, கேசவன் பெண்களை மறைத்தபடி முன்னே வர, சிந்தா, அங்கு வைத்திருந்த மஞ்சள் நீரை மாட்டின் மேல் ஊற்றுவதற்காக எடுத்தாள். கேசவன் மாட்டுக்கு முன் செல்வதைப் பார்த்த கங்கா, கணவனைக் காப்பாற்றும் உத்தேசத்தோடு ," அத்தான் இங்குட்டு வாங்க" எனக் கத்திக் கொண்டே அவனுக்கு முன் தான் பாய்ந்து சென்றாள். சிந்தா மஞ்சள் நீரை வேகமாகக் காளையின் மீது ஊற்ற, அதற்குள் தன் கொம்பால், கங்காவின் வயிற்றில் குத்தி கீறியிருந்தது.

காளை மாடு மஞ்சள் நீரில் நனைந்தது சற்றே குணம் மாற, சிந்தா மாட்டுக்குப் புரிந்த பாஷையில் கட்டளையிட அது பொட்டலை நோக்கி ஓடியது. மாட்டுக்காரன் அசம்பாவிதம் ஆனதை ஒட்டி மற்றவர்கள் கத்தியதில் மாட்டின் பின்னால் ஓடினான். அதற்குள் சிவநேசனும் போனை எடுத்துப் பார்த்து அழைக்க, விசய மறிந்து சிந்தாவைத் தேடி வந்தவன், கங்கா இரத்த வெள்ளத்திலிருந்ததைத் தான் பார்த்தான். " கங்கா" எனக் கதறிக் கொண்டு வர, கேசவனின் மீது சாய்ந்திருந்த கங்காவுக்கு

சிந்தா, தனது சேலையைக் கிழித்து வயிற்றில் இறுக்கி கட்டியவள், " சின்னையா, காரை எடுங்க. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகனும், நீங்க கங்காவைத் தூக்குங்க" எனக் கேசவனுக்குக் கட்டளையிட்டு, தானும் அவளது தலையைப் பிடித்துக் கொண்டே, பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தாள்.

வேலு ஓட்டி வந்த கார், தொலைவிலேயே இவர்களைப் பார்த்து விட்டு, நேராக அவர்கள் அருகே வர, அதே காரில் கங்கா, சிந்தா, கேசவனை அள்ளிப் போட்டுக் கொண்டு வேலு சைரன் சத்தத்தைப் போட்டு விட்டு அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த ஊர் மருத்துவமனையில் அவசர உதவி சிகிச்சையை எடுத்துக் கொண்டு, அடுத்த அரை மணியில் மதுரைக்குக் கொண்டு சேர்த்தனர்.

கங்காவுக்கு மாடு குத்தியதை விடவும் பெரிய விசயம் அவளது மூன்றாம் நிலைப் புற்றுநோய் என மருத்துவர்கள் அதிர்ச்சியான விசயத்தைச் சொன்னவர்கள், ஒருவாரம் மருத்துவமனையில் வைத்திருந்தனர்.

கங்கா தான் பிழைக்கமாட்டோம் என்பது உறுதியாகவும், மேலப்பூங்குடியில் அம்மாவின் அருகில் பிறந்த வீட்டில் தான் உயிரை விடவேண்டும் என ஆசைப்பட்டாள்.

மருத்துவர்கள், இந்தப் புற்றுநோய் வகை ஓரிரு வாரத்தில் வேகமாக வளர்ந்து ஆளைக் கொல்லவல்லது என அதன் வகையைச் சொல்ல, மீதி நாட்களை அவள் வலி இல்லாமலாவது நாளை கடத்துட்டும் என மருந்துகளைத் தந்தனர்.

பெரிய வீட்டினர், தங்கள் திருப்திக்கு பரமக்குடி வைத்தியரையும் கூட்டி வந்து காட்ட, அவரும் வேதனையைக் குறைக்க மட்டுமே மருந்து தந்து சென்றார்.

சிந்தா பயந்தது போல், ராஜியம்மாள் மகளின் நோயை அறிந்து நிலைக் குழைந்து போனார். மகளுக்குப் பார்க்கவும் இயலாமல் தானும் வேதனையை அனுபவிக்க, கங்கா எவ்வளவு திட்டிய போதும் அத்தனையும் பொறுத்துக் கொண்டு சிந்தா, அவளுக்குப் பணிவிடை செய்தாள்.

" ஏண்டி இப்படிப் பண்ற, சாகும் போது கூட நீ என்னை நிம்மதியா சாகவிடமாட்டாயா" என்ற கங்காவை "அதெப்படி விடுவேன். சின்னதுலருந்து என்னோட போட்டி போட்டையில, இப்பவும் வாழனுமின்னு போட்டிப் போடு" எனச் சவால் விடவும்.

" அது தான் இல்லாமல் பேச்சே. " என்றவள், " ஆனால் பாரு நீ இரண்டு புள்ளை பெத்துக்கிட்டேல்ல, என் வயித்தில இல்லைனாலும். என் குடும்பத்துக்கு வாரிசு வரும். நான் குழந்தை பொம்மை அய்யனாருக்குக் காணிக்கை வச்சிருக்கேன்ல. அதுக்குக் கிடைக்கும்" என்றவள், வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்துக் கேசவனுக்கு, தான் இருக்கும் போதே இரண்டாம் திருமணம் நடத்தச் சொன்னாள். " திடீரெனப் பொண்ணுக்கு எங்கடி போறது" என்ற ராஜியம்மாளிடம் மகேசை கை காட்டினாள்.

தன் சித்தி, சித்தப்பாவை அழைத்தவள், " அத்தானுக்கும் எனக்கும் தான் சரி வயசு, மகேஷுக்கு ஆறு வயசு தான் மூத்து இருப்பாக. ஜோடிப் பொருத்தம் சரியா இருக்கும்' என மகேஷையும் பேசியே கரைத்தவள், கணவனிடம் கடைசி ஆசை எனச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தாள்.

அருகே இருந்த சிந்தாவிடம், " என்னடி பார்க்கிற, நீ மட்டும் தான் ரொம்ப நல்லவளோ, நானும் போற வழிக்குக் கொஞ்சம் புண்ணியத்தைச் சேர்த்துக்கிறேன்" எனவும் சிந்தாவுக்கு அடக்கமாட்டாமல் கண்ணீர் வந்தது.

அண்ணன், அத்தாச்சி, தம்பி என அனைவரையும் அழைத்து ,தான் செய்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டவள், அதன் பிறகு வலி வேதனையோடு போராட ஆரம்பித்தாள். கங்காவின் ஜீவமரணப் போராட்டத்தில் சிந்தா தன் மகளை மட்டும் வைத்துக் கொண்டு பெரிய வீட்டில் அவளோடு தான் இருந்தாள்.

முதல் சிலநாட்கள் சிந்தாவிடம் வெறுப்பைக் காட்டிய கங்கா, அவள் அத்தனையும் சகித்துத் தனக்குச் சேவை செய்வதில் வலி மிகுதியில் தன் அம்மாவை அழைப்பது போலவே சிந்தாவையும் அழைத்தாள்.

"உன்னைக் கேவலப்படுத்தனுமுன்னே எல்லாம் செஞ்சேன். கொல்ல கூட ஆள் அனுப்பினேன். அத்தனையும் தெரிஞ்சும் ஏண்டி எனக்குப் பார்க்கிற" எனக் கேள்வி எழுப்பியவளிடம்.

" ஒரு நாளாவது நீ என்னையோ, நான் உன்னையோ நினைக்காமல் இருந்திருப்போமா. வஞ்சுக்கிட்டேனாலும், நீ நினைச்சுக்கிட்டே தான இருந்திருப்ப. அந்தப் பந்தம் தான்" எனச் சிந்தா சொல்லவும். கங்காவிடம் ஓர் கசந்த முறுவல், " ஆனால் நான் செஞ்சதுக்கு உன்கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன்" என்றவளை , " நீ கேக்கவும் வேணாம். " எனச் சிந்தா அவள் உடலை கைகளால் நீவி, தடவி விடும் நேரம், ரெய்கி சிகிச்சை போல் சற்று நேரம் கங்காவுக்கு இதமாக இருக்கும்.

" நான் சொன்னமாதிரி, நீ மாயக்காரி தாண்டி" எனச் சிலாகிப்பவள் கடைசியில் அரை மயக்கத்திலேயே கிடந்தாள். அன்பிற்கும் வெறுப்பிற்கும் நூல் அளவு இடைவெளி தான் என்பது போல், பிறந்தது முதலான அவளது வெறுப்பும் அன்பாக மாறி அமைதியாகவே அவள் உயிர் பிரிந்தது. 

பெற்றவர்கள் உற்றவர்கள் அவள் மரணத்துக்காகப் பட்ட வேதனையிலும் குறையாது சிந்தாவும் வேதனைப் பட்டாள் .

இதைப் பற்றி வேலு கேட்ட போது ," அவளும் நானும், ஒரே வீட்டில் வளர்ந்தோம், அவளுடைய பொறாமை ,என் மேல வெறுப்பா மாறிடுச்சு, தெரிஞ்சோ தெரியாமலோ நானும் அதுக்குக் காரணமாயிட்டேன். என்ன தான் அவள் மேல வருத்தம் இருந்தாலும், அவள் அவதிப் படும்போது என்னால பார்க்க முடியலை" எனக் கண்ணீர் சிந்தியவளை, "அது தான் என் சிந்தாமணி. என் சின்னாத்தாளையே ஊருக்கு அனுப்ப விடமாட்டேங்கிறியே" என அவன் குறை போலவே அவள் நிறையைச் சொன்னான் .

" அந்தக் கெழவி என்ன செஞ்சாலும் சரி , நம்மக் கூடவே இருக்கட்டும். அப்பத் தான்,நம்ம பொழுதும் கலக்கன்னு இருக்கும் " என்றவளை, "உனக்கு என்னை மண்டி போட வைக்கிறதுக்கு ,என் சின்னாத்தாள் வேணும் அது தானே ." என்றான். அவள் சிரித்து விட்டு, "அப்படியெல்லாம் இல்லை மச்சான், ஏன் உன் சின்னாத்தா வருமுன்ன எப்படி இருந்தியாம், அப்பயும், இப்பயும் ,நீ ஒரே மச்சான் தான் " என அவனைப் புகழ்ந்தாள்

" இதை நினைப்பில் வச்சுக்க, அடுத்தத் தடவை, அந்தக் கிழவி ஏதாவது செஞ்சுதுன்னு பஞ்சாயத்துக்கு வந்தே, அதைக் கொண்டு போயி ஊருல விட்டுட்டு வந்துடுவேன்" என மிரட்டியவனை, "எங்க என் மாமியாளை அனுப்பிடுவியா , பார்ப்போம்" எனச் சிந்தா சவால் விடவும் , அவளை முறைத்த சிங்காரவேலு, "இங்க எல்லாமே உன் ராஜ்ஜியம் தானே, எதோ ஒரு வகையில என்னை அடைக்கிப்புடுறடி" எனக் குறைப்பு பட்டவன் அவள் அன்பில், காதலில் விருப்பமாகவே தன்னை ஒப்புக் கொடுதான். சிந்தாவின் பலமே அவள் கணவன் தான், ஜீவநதியாய் அவளைப் பயணிக்க வைப்பதும் அவன் தரும் இடம் தான்.

சிந்தாவை தாக்கியதில் கரி பேக்டரி முதலாளியான வடக்கத்திக்காரனின் கை இருப்பது தெரிந்தும் அதனைச் சட்டப்படி மெய்ப்பிக்க இயலாமல் அவன் சாமர்த்தியமாகவே காரியத்தைச் செய்தான். ஆனால் நோய் நொடி என அவனே படுக்கவும், அவன் மனைவி சிந்தாவைத் தேடி வந்தாள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் குமரன், ஊரின் நன்மைக்காக, சில முடிவுகளை எடுத்தான். அதன் படி தன்னால் விளையும் சீமைக்கருவைகளை அவர்களுக்குத் தருவது என்றும், மற்ற நிலங்களில் வலுக்கட்டாயமாகப் பயிரிடத் தூண்டக் கூடாது என்றும் ஒப்பந்தம் போட்டனர்.

முத்துமணி, குமரனுக்குப் பரிசம் போடப்பட்டு உரிமையுள்ளவளாகக் கோவையில் குமரனின் வேர்கள் வளாகத்தில் தான் தங்கிப் படித்தாள். கங்காவின் கடமைகளை முடித்த சிந்தா சொன்னது போலவே அமிர்தாவுக்குப் பிரசவம் பார்க்க, கோவை சென்று வந்தாள். அந்தப் பிரயாணம், சிந்தா, வேலு இருவருக்குமே குமரன் மீதான பிரமிப்பை அதிகப் படுத்திருந்தது.

தென்வயலில் பயிர்கள் அடுத்து வந்த பருவமழையில் செழித்து வளர்ந்தன. புதிய பல ஆராய்ச்சிகளையும் குமரன் செய்து கொண்டிருந்தான். இவர்கள் நிலத்தில் விளைச்சலையும் லாபத்தையும் பார்த்து , மற்ற நிலம் வைத்திருப்பவர்களும் தாங்களாகவே மாற்று விவசாயம் செய்ய முன் வந்தனர். 

சீமைக் கருவை குறையவும் , மண்ணில் நீர் இருப்பு அதிகரித்தது. பனை, நாட்டுக் கருவேலம் மரம், வேம்பு , புங்கை என ஊரெங்கும் மரங்களையும் நட்டு , மழை வளத்தையும் மண் வளத்தையும் காத்தான். சுற்று வட்டாரத்தில் எங்கு மழை பொழியுதோ இல்லையோ, மேலப்பூங்குடியில் மழை வந்து விடும். "வேர்கள் " அமைப்பும் குமரனும் மெல்ல ஓர் விவசாயப் புரட்சியை இந்தக் கிழக்குச் சீமைமையில் செய்து கொண்டிருந்தனர்.

ராஜியம்மாளுக்குக் கங்காவின் இழப்பு மனதளவில் பெரிய பாதிப்பைத் தந்திருந்தது. தான் அவளைச் சரியாக வளர்க்கவில்லை என நொந்து கொண்டார். சிந்தா தான் அவரைத் தேற்றினாள். ராஜியம்மாள் சோர்ந்து போகவுமே மீனாள் மாமியாரைத் தொந்தரவு செய்யாமலே வீட்டுப் பொறுப்புகளைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள்.

பரமக்குடி வைத்தியர், சிந்தாவுக்கு இன்னும் சில வைத்திய முறைகளைச் சொல்லிக் கொடுத்து, ஒரு பட்டயப்படிப்பு சான்றிதழும் பெற வைத்து தனது வைத்திய சாலையின் ஒரு கிளையையும் இங்கே ஆரம்பித்துச் சிந்தாவை அதற்குப் பொறுப்பேற்க வைத்திருந்தார். நாட்கள் சீராகச் சென்றது.

சிந்தாவால் காப்பாற்றப் பட்ட சோமன் உயிர் பிழைத்தாலும் பாம்பின் விசம் சதை வரை பாய்ந்திருந்ததால் கால் ஊனமாகப் போனது. அதோடு கங்காவின் மரணம் அவனை வெகுவாகப் பாதித்தது. சோமனின் சிகிச்சையையும் சிந்தாவிடமே அவன் செய்து கொள்ள, வரும் போதெல்லாம் அவளிடம் பாவமன்னிப்பு கேட்பான். நீ திருந்தியதே உனக்கான தண்டனை தான் என்ற சிந்தா, முடிந்தவரை ஊர் மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னாள்.

வள்ளிக்கு ஆண்குழந்தை பிறந்தது. சிந்தாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகேஷ் , கேசவனோடு மனமொத்து வாழ்ந்து ஓர் மகளைப் பெற்றெடுத்தாள். குமரன் அன்று கங்காவுக்குப் பாடம் புகட்ட எடுத்த நடவடிக்கையால் இன்று தொழில் முழுதும் கேசவனின் தனி உரிமையாக மாறியிருந்தது.

குமரன் முத்துத் திருமணம் மட்டுமே பெரியய்யா சம்மதத்துக்காக, பெரியம்மா தாலி எடுத்துக் கொடுப்பதற்காகக் காத்திருந்தது.

No comments:

Post a Comment