Tuesday, 14 September 2021

சிந்தா -ஜீவநதியவள் -28 முடிவுரை

சிந்தா -ஜீவநதியவள் -28 முடிவுரை  

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மேலப்பூங்குடி கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. அது அய்யனாருக்கோ, அழகிமீனாளுக்கோ எடுக்கப்படும் திருவிழா அல்ல. ஊர்கூடிக் கொண்டாடினாலும் அது பொங்கல் பண்டிகையும் அல்ல.

இந்த ஊரின் தலையெழுத்தையே மாற்றிய , சீமைக்கருவையை அந்த ஊரின் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எரிந்த ஓர் சாதனையாளனின் திருமணம். அதுவும் சாதி வித்தியாசம் பார்க்காது, தங்கள் நிலத்தில் வேலை செய்யும், பண்ணைக்காரரின் மகளைத் தன் மனையாளாகக் காத்திருந்து கரம் பிடிக்கும் குமரனின் திருமணம்.

ஊர் பொதுவில் விழா நடக்கும் அரங்கத்தையே மேடையாக்கி, பொட்டலில் பந்தல் போட்டு, முன்பு கூத்து நடந்த அதை இடத்தில் இன்று இவர்களது திருமணம். குமரன் தங்கள் இனத்துப் பெண்ணை மணப்பதால் , கிராமத்துக்கே அவன் மருமகன் ஆகியிருந்தான். பெரும்பாலோனோரின் விவசாய நிலங்களைச் சீரமைத்துத் தந்ததில் அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகியிருந்தான்.

திறந்தவெளி கொட்டகையில் ஆயிரக்கணக்கான சேர்கள் போடப்பட்டு, மக்கள் நிறைந்திருந்தனர். உள்ளூர் கிழவிகளுக்கெல்லாம் குமரன் புதுச் சேலை எடுத்துக் கொடுத்து, தன் திருமணத்துக்குத் தெம்மாங்கு பாடல்களைப் பாடவேண்டும் என அழைத்திருக்க, ஆண்டிச்சி கிழவி, இருளி, மூக்கம்மாள், ராக்கு எனப் பலரும் கேலிக் கிண்டலோடு இட்டுக்கட்டி முத்து- குமரன் காதல் கதைகளைப் பாடினார்கள்.

வேர்கள் அமைப்பினர் படக்கருவிகளோடு ஓடியாடி தங்கள் நண்பனின் சந்தோசமான தருணங்களைப் படம்பிடித்துக் கொண்டிருந்தனர். சிவநேசன், மீனாள் வந்தவர்களைக் கவனிக்க, மேடையில் சடங்கு சம்பிரதாயங்களை நடத்த எனத் தங்கள் ஒன்றை வயது மகனை மாற்றி, மாற்றித் தூக்கிக் கொண்டு திரிந்தனர்.

மூன்று வயது சத்தியாவும், சிந்துஜாவும் , ஒரே போல் பாவாடைச் சட்டை ஆடை ஆபரணங்கள் அணிந்து கொண்டு அம்மா, சிட்டுமா எனச் சிந்தாவின் முந்தியையே பற்றிக் கொண்டு அலைந்தன. சத்தியமூர்த்திப் பொறுப்பான அண்ணனாக இரண்டு தங்கைகளையும் பார்த்துக் கொண்டான். குமரனின் கட்டாயத்தில் இப்போது அவன் ஆங்கில வழிக் கல்வியில் பயில்கிறான். அதனால் உள்ளூர் சண்டியராகத் திரிந்தவன் சற்றே மாறியிருக்கிறான்.

மணப்பெண் தோழியாகவும், நாத்தனார் முறையாகவும் வந்த மகேஷ் தனது ஒரு வயது மகள் கங்கைப்பிரியாவை ,தன் அம்மாவிடம் கொடுத்துவிட்டு, ஐந்து மாதம் மேடிட்ட வயிரோடு முத்துவோடு திரிந்தாள். அவளைப் பார்க்கும் போதே சிந்தாவுக்குக் கங்காவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. தான் பெறாவிட்டாலும் தன் குடும்பத்து வாரிசு வரும் என்றாளே. அதுவும் அவளைப் போல இரண்டு பிள்ளைகள் ,அவள் வாக்கு மெய்யானதில் சிந்தாவுக்கும் மகிழ்ச்சி தான். விண்ணுலகத்திலாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும்.

பெண்ணுக்குத் தந்தை அய்யனார் அலைந்தாரோ இல்லையோ, வேலு நிற்க நேரமின்றி அலைந்து திரிந்தான். பெரிய வீட்டு வழக்கப்படி திருமணம் சடங்குகள் நடந்தேற, வேலுவும் சிந்தாவும் தான் பெற்றவர் ஸ்தானத்திலிருந்து சடங்குகளைச் செய்தார்கள் .பாதபூசை, தாரைவார்ப்பது ஆகியவற்றுக்கு வேலுவை மேடையில் தக்கவைப்பதே பெரும் பாடாக இருந்தது. சத்யா,சிந்துஜா இரண்டும் மணமக்கள் அருகிலேயே கொலு பொம்மைகளாக , சித்தப்பா சித்தி கல்யாணத்தை வேடிக்கைப் பார்த்தன. முத்து குமரன் வாழ்வில் ஒன்று சேர பாதை தந்தவர்கள் இந்தக் குட்டி தேவதைகள் தானே, அவர்களோடு சேர்ந்து தான் இவர்கள் நேசமும் வளர்ந்தது. அதனால் அவர்களும் ஆசையாகவே அருகில் இருத்திக் கொண்டனர்.

முத்துமணி , இந்த நாள் அவள் எதிர்பார்த்த ஒன்று தான். இருந்தும் அவளால் அந்தப் பதட்டத்தைச் சமாளிக்க இயலவில்லை. அவளின் வியர்வையை எத்தனை முறை ஒற்றியெடுத்தாலும் மீண்டும் துளிர்த்தது. அருகில் அமர்ந்திருப்பவனின் ஆளுமையில் தன்னைத் தொலைத்திருந்தாலும் இன்றைய பதட்டத்தை, அவன் வலியக் கரங்கள் கூடக் கட்டுப்படுத்த இயலவில்லை.

" மோதி பெல், ரிலாக்ஸ். கல்யாணம் தான் பீ ஹேப்பி" என ரகசியமாகப் பலமுறை சொல்லி உள்ளங்கையால் அழுத்தியும் விட்டான். ஆனால் அவனுக்குச் சில்லிட்ட கரங்களால் அவன் அன்னையைத் தான் நினைவு படுத்தினாள். அதில் கனிவோடு தான் பார்த்திருந்தான்.

இந்தப் பதட்டம் எல்லாம் தேதி நிச்சயித்த பின்னர்த் தான். சிந்தா தங்கை அருகில் குனிந்து, " கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அவுகளோட தான்னு சொன்னேல்ல. இப்ப அந்தச் சந்தோஷமான நேரம். சந்தோஷமா அவுக கையாளத் தாலி வாங்கிக்க " என அக்காள் சொல்லவும் உணர்வு பெருக்கோடு தலையை ஆட்டினாள்.

மகாலிங்கம் ஐயா, ராஜியம்மாள் முன்னிலையில் , மணப்பெண் முத்துமணிக்கு பெற்றோர் ஸ்தானத்தில் சிந்தாவும் வேலுவும் தாரை வார்த்துக் கொடுக்க, மணமகன் பெற்றோர் சோமசுந்தரம் மரியம் பெற்றுக் கொண்டனர்.

ராஜியம்மாள் தாலியைத் தொட்டு ஆசீர்வாதம் செய்து கொடுக்க, குமரன் மங்கள வாத்தியம் முழங்க, தமிழ் முறை மந்திரங்கள் சொல்லப்படப் பசும் மஞ்சள் சரட்டில் பூட்டிய சொக்கர் மீனாட்சி தாலியைக் குமரன் முத்துமணியின் கழுத்தில் கட்டினான். அக்னி வலம் வர மச்சினன் முறைக்குச் சுப்பு அக்காள் கணவனானவன் கையை முன்னே பிடித்து அழைத்துச் செல்ல, பட்டு வேஷ்டி சட்டையில் மாலையோடு கம்பீரமாகக் குமரனும், அவன் கரம் பற்றியவாறு உலகத்தின் மகிழ்ச்சி அத்தனையும் தன் முகத்தில் நிறைத்து குமரனுக்கு ஏற்ற குமரியாய், இரண்டு வருடப் படிப்பும் பதிவிசும் சேர்ந்து அழகோவியமாய்ச் சற்றே பதட்டத்தோடு முத்துவும், அவளை அடுத்து அண்ணன் அண்ணி இருவரும் சேர்ந்தே தனது திருமணத்தை நடத்தித் தரவேண்டும் எனத் தானும் காத்திருந்து, தனக்கான மாப்பிள்ளையையும் காக்க வைத்திருக்கும் அமுதாவுமாக மணமக்களோடு அக்னி வலம் வந்தனர்.

அய்யனார் மேடையின் ஓரத்திலிருந்து கண்ணீர் மல்கப் பார்த்திருந்தார். சிந்தாவும் உணர்வு பெருக்கில் முந்தானையில் தன் கண்ணைத் துடைக்க, ராஜியம்மாள் அவளை அணைத்துக் கொண்டார். குடும்பம் குடும்பமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்ட போதும் கூட, அய்யனார் , பெரிய அய்யாவுக்குச் சமமாகச் சேரில் அமர முடியாது என மறுத்து விட்டார். மகாலிங்கமே அழைத்த போதும் மறுத்து ஓர் ஓரமாக நின்று தான் போஸ் கொடுத்தார்.

ஆனால் சிந்தாவின் குடும்பப் படம் எடுக்கும் பொழுது , அவர் மறுப்பை , மறுத்துக் குடும்பத் தலைவராக அவரை நடுவில் அமர்த்தி வேலு சிந்தா, ராக்காயியை சேரில் அமரவைத்து மணமக்களும், சுப்புவும் பின்னால் நிற்க, சத்திய மூர்த்தி, சத்யாவோடு, சிவநேசன் மகள் சிந்துஜாவும் அவர்கள் குடும்பப் புகைப்படத்தில் நின்று கொண்டது.

மதிய விருந்து தடபுடலாக நடக்க, நல்ல நேரம் பார்த்து, பெரிய வீட்டுக்குள் ஆலம் சுற்றி குமரனோடு பண்ணைக்காரனின் மகளான முத்து, முன்வாசல் வழியே முறையான மருமகளாய் வலது கால் எடுத்து வைத்தாள்.

மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது. இதோ சாதீய கோட்பாடுகளில் ஊறிக்கிடந்த ஓர் கிராமத்தில் நல்ல ஆரோக்கியமான மாற்றமாக, ஏற்றத் தாழ்வைக் கலைந்து, தனக்கானவளை தன் இனமும் ஒத்துக் கொள்ளும் நிலை உயர்த்திக் கரம் பிடித்துள்ளான் குமரன்.

அடுத்து, சிந்தாவின் வீட்டுக்கு அருகிலேயே அவர்கள் முன்னொரு நாள் பேசியது போல் பெருகும் தங்கள் குடும்பத்தின் வசதிக்காகவும், குமரன் முத்துவுக்காகவும் கீழும், மேலுமாகத் தோட்டம் துறவோடு கூடிய இரட்டை வீடுகளைக் கட்டியிருந்தனர். அங்கே ஆலம் கரைத்து அழைக்கப் பெரிய வீட்டு ஐயா மகன், குடியானவரின் மருமகனாய் முழு மகிழ்வோடே வந்தான். குமரனும் கங்காவிடம் , " அவுங்களை என் உசரத்துக்கு உசத்திக்குவேன் " எனச் சொன்ன வார்த்தைகளை நினைவில் கொண்டு வந்தான்.

குமரன் முத்துவுக்காக மாடியில் குளிரூட்டப்பட்ட அறையை அவர்கள் தோட்டத்து மலர்கள் வைத்தே வேலுவின் மேற்பார்வையில் குமரன் யோசனைப்படியே ரசனையாக அலங்கரித்தனர். அதற்கு அடுத்த அறையில் குமரன் தயாராகிக் கொண்டிருக்க, சிவநேசனும் வேலுவுமாக அவனைக் கேலி செய்து கொண்டிருந்தனர். முத்துவை அவன் மணக்கக் கேட்டபோது இந்த இருவரும் கேட்ட ஜோடிப் பொருத்தம், தகுதி என அத்தனையும் அடிபட்டு அவனுக்கு ஏற்ற மனையாளாக அவள் மிளிர்ந்தாள்.

" வேலு, அன்னைக்குக் கேட்டியே, பாரு என் தம்பி அவனுக்குப் பொருத்தமா எப்படி உன் கொழுந்தியாளைத் தேற்றி வச்சிருக்கான் பார்" எனச் சிவநேசன் வினையமாகவே சொல்லவும்.

" எல்லாரையும் தான் அவர் இஷ்டத்துக்கு ஆட்டி படைக்கிறாரு. இந்த ஊருல இரண்டு பேரு ஆட்டி வைக்கிறபடி தான் நாம எல்லாரும் ஆடுறோம்" என வேலு குறைபடவும்.

" இன்னொரு ஆள் யாரு ப்ரோ" என்றான் குமரன்.

" வேற யாரு, என் பொண்டாட்டி தான். அவள் நில்லுனா நிக்கனும், உட்காருன்னா உட்காரனும். வண்டி எடுன்னா எடுக்கனும். " என அடுக்கிக் கொண்டே போகவும். அண்ணனும் தம்பியுமாக வேலுவிடம் சிந்தாவுக்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்க, அதே நேரம் " மச்சான் இங்க வா" எனக் கீழிருந்து குரல் கொடுத்தாள் சிந்தா , மற்ற இருவரும் சிரிக்க " என்னா புள்ளை" என வீராப்பாகக் கேட்டபடியே இறங்கிச் சென்றவன், ஹாஹாவெனச் சிரித்தபடியே மேலே ஏறி வந்தான்.

" யோவ், சின்னக்குட்டியை என்னய்யா சொல்லிப் பயமுறுத்தி வச்சிருக்க. அது வரமாட்டேன்னு முரண்டு பிடிக்குதாம்" எனச் சொல்லிச் சிரிக்கவும், சிவநேசன் குலுங்கிச் சிரிக்க, குமரன் அதிர்ந்து பார்த்தான்.

" என்னாது, இரண்டு வருஷமா அரும்பாடுபட்டுப் பட்டு காதலை வளர்த்து வச்சிருக்கேன், வரமாட்டாளா , இருங்க நானே வைத்துத் தூக்கிக்கிறேன் " என வேட்டியை மடக்கிக் கொண்டு எழுந்தவனை, சிவநேசன் அமைதிப் படுத்தினான்

" டேய் இதுலையும் அதிரடியா இறங்காத. முத்துக்குக் கொஞ்சம் ஸ்பேஸ் குடு" என்ற அண்ணனை முறைத்த குமரன்,

" அண்ணன் இதெல்லாம் உனக்கே நியாமா இருக்கா. நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க. என் பிரச்சனையை நான் பார்த்துக்குறேன்" என வலுக்கட்டாயமாக அவர்களை அனுப்பியவன், வேட்டியை மடித்துக் கொண்டு கீழே வர, முத்து சிந்தாவின் பின்னே மறைந்து நின்று கொண்டாள்.

கொடை ராட்டினத்தில் முதல் நாள் பார்த்தது போல் மேக்கப்பைத் தாண்டி வியர்த்துக் கொட்ட நின்றவளைப் பார்த்த மாத்திரத்தில் நிச்சயம் கைகால் சில்லிட்டு நிற்கிறாள் என அறிந்து கொண்டான். இதழில் துளிர்த்த முறுவலை அடக்கி குறைத்தே நின்றான்.

" அக்கா, அக்கா ப்ளீஸ், ப்ளீஸ் நாளைக்கு வச்சுக்கலாம்னு அவுகள்ட்ட சொல்லு " என அவள் காதில் ரகசியம் பேசியவளை, " அடச்சீ பேசாம இருடி " எனக் கடிந்தாள் சிந்தா.

" சிந்தாக்கா, வேலு ப்ரோ உங்களுக்காக வெயிட்டிங் போங்க" என்றான். சிந்தா சங்கடமாகக் குமரனைப் பார்த்தவள், " நான் கூட்டிட்டு வர்றேன் தம்பி. நீங்க மேல போங்க" என்றாள். குமரன் வேலுவை ரகசியமாக அழைத்துச் சைகை காட்டினான்.

" அக்கா போகாத, போகாத" எனக் கண்ணை மூடிக் அக்காவைப் பற்றிக் கொண்டு நின்றவளின் காதில், "அக்கா , உங்க தங்கச்சி ரொம்பத் தான் பண்றா. இவள் ஒண்ணும் வரவே வேண்டாம்" என்ற கோபமான குரலும் அவன் காலடி சத்தமும் மட்டுமே கேட்க, அழுகையோடு உடல் நடுங்க நின்றவளை, அக்காவுக்குப் பதில் அவன் கரங்களே, அவளைத் தழுவ அவளுக்கு உடல் நடுங்கியது. அதையும் பொருட்படுத்தாமல் அவளை அள்ளித் தூக்கியவன் தங்கள் அறைக்கு அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் இறக்கி விட்டு விட்டு, கைக் கட்டி அமைதியாக நின்றான். கண்ணைத் திறந்து பார்த்தவள் , மருண்ட விழிகளோட அவனைப் பார்க்க, கோபமாக இருந்தவன் தன்னையும் மீறிச் சிரித்து விட்டான்.

" அடியே பொண்டாட்டி, நான் ஹீரோடி. என்னை வில்லன் ரேஞ்சுக்குப் பார்க்காத. பேசாம தூங்கு போ. வெளியில இருந்து என் மானத்தை வாங்காத. சும்மாவே என்னை உன் மாமனும், என் அண்ணனும் கேலிப் பண்றாங்க. நீயா வர்ற வரைக்கும் நான் தொடமாட்டேன். நிம்மதியா தூங்கு" என்றவன், " நான் இந்த ரூம்ல இருக்கலாமா, இல்லை வெளியே போகவா" எனவும் அவளுக்குக் கண்ணில் நீர் பெருகியது. அதில் பதட்டமான குமரன் " என்னடி" என அவன் முகத்தைக் கையில் ஏந்த, " எனக்குப் பதட்டமா இருக்குன்னா. நான் என்ன செய்வேன்." என அழவும்.

" அடியே அறிவு கெட்டவளே, பயம் என்னான்னு சொன்னா தானே தெளிய வைக்க முடியும். உன்கிட்ட படிச்சவகிட்ட இருக்கப் பக்குவமும் இல்லை. கிராமத்துப் புள்ளைக்கிட்ட இருக்கத் தைரியமும் இல்லை. சுத்த வேஸ்ட். என் தங்கச்சியைப் பாரு, இரண்டாவது ப்ரக்னெட்டா இருக்கா. சரி விடு, நீ சொன்ன மாதிரி தாலி கட்டியும் நான் குமரன் தான்" எனப் பல மாடுலேசன்களில் பேசியவன் தரையில் பெட்சீட்டை விரித்துப் படுத்துக் கண்ணை மூடிக் கொள்ள, சற்று நேரத்தில் முத்து அவனை ஒண்டிக் கொண்டு வந்து படுத்தாள்.

" இரண்டு வருசமா நீங்க சீண்டிக்கிட்டே இருந்ததாலத் தான் எனக்குப் பயமா இருக்கு" என மூக்கை உறிஞ்சியவள், "சரி வாங்க" என்றாள்.

" எங்க வர்றது. போடி " எனத் திரும்பிக் கொண்டவனை, ஒரு மணி நேரம் போராடி முத்து சரி கட்டினாள். அதன் பின்னர் அவன் பயமெல்லாம் தெளிய வைத்து முழுமையாக முத்துவை ஆட்கொண்டான் குமரன்.

குமரனின் கண் அசைவில் வேலு ஏற்கனவே சிந்தாவை கடத்திருந்தான். அங்கே சிந்தா வேலுவோடு, " சின்னக்குட்டி எப்படிப் பயப்புடுறா. நீ பாட்டுக்கு என்னைத் தூக்கிட்டு வந்துட்ட, அவ பயந்து மயக்கம் போட்டுற போறா" எனச் சிந்தா பதறவும்.

" அடச்சீ இருடி, குமரன் பார்த்துகுவான். நீ இங்கே இரு" என்றான்.

" மச்சான் என்ன தான் குமரனைக் கட்டிக்கிட்டாலும், ஒரு தயக்கம் இருக்கு. அதுனால தான் பயப்படறா" எனச் சிந்தா தங்கையின் மனதைச் சொல்லவும்.

" சிந்தாமணி, புருஷன் பொண்டாட்டிக்குள்ள மட்டும் பேசுறதுக்கோ, பழகறதுக்கோ, இல்லை எதுக்கா இருந்தாலும் பயமெல்லாம் இருக்கக் கூடாதுடி. மனசில இருக்கிறதைப் புருஷன், பொன் சாதி தயக்கமில்லாமல் பேசிக்கனும். அதை விடப் பெரிய வரமோ, சந்தோசமோ இல்லை. குமரன் , சின்னக்குட்டிக்கு அதைப் புரிய வச்சிடுவாப்ல, அதுக்குள்ள நீ போகாத. அது அவுக இரண்டு பேருக்குள்ள இருக்க இடம், அம்மாவா இருந்தாலும், அக்காளா இருந்தாலும் அந்த இடத்தில நின்னுடனும். அவுக படுக்கையறைக்குள்ள நம்ம மூக்க நுழைக்கக் கூடாது" என இயல்பாகப் பெரிய விசயத்தைச் சொன்ன கணவனைச் சிந்தா வியந்தே பார்த்தாள். சரியான சமயத்தில் அவள் குழம்பிய மனநிலையில் இருக்கும் போதெல்லாம் அவளுக்கு ஆசானாய் வழி காட்டுபவனும் அவன் தானே.

" மச்சான், நீயும் அறிவாளி தான்" எனக் கொஞ்சினாள். " ஐயே, அரிய கண்டுபிடிப்பு. படுத்து தூங்குடி. காலையிலிருந்து அலைச்சல் உடம்பெல்லாம் நோவுது" எனப் படுத்தவனுக்குச் சிந்தா கைகால் அமுக்கி விட, " உனக்கும் தானே வேலை , பேசாத தூங்கு" என்றான்.

அவள் படுக்கப் போன நேரம் அதே ஊரில் பாம்பு கடித்தது என ஒரு போன் வரத் தூக்கத்தையும், அலுப்பையும் புறந்தள்ளி , தூங்கத் தயாரான கணவனையும் எழுப்பி மூலிகை பையைத் தூக்கிக் கொண்டு ராக்காயியிடம் சொல்லி விட்டு வேலுவோடு பறந்தாள் சிந்தா.

தனி மனித வாழ்வில் திருப்தியுற்ற மனிதர்களால் , பொது வாழ்விலும், சமுதாயத்துக்கும் சிறந்த பல சேவைகளை ஆற்ற முடியும். ஆணோ, பெண்ணோ அவரின் வாழ்க்கைத் துணை, அனுசரணையாக அமைந்து விட்டால் அதனிலும் பெரிய வரம் வாழ்வில் வேறு இல்லை. இங்கு சிந்தாவுக்கு வேலுவும், குமரனுக்கு முத்துவும் சரியான துணையாக இருந்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை பல செய்வார்கள் . இவர்களைப் போன்ற தம்பதிகள் மூலம் நல்லதொரு சமுதாயம் உருவாகட்டும். வாழ்க்கையில் மகிழ்ச்சி ஜீவநதியாய் பெருகட்டும்.

கடவுள் சில ஆத்மாக்களை உலகிற்கு அனுப்பும் போதே தன்னலமற்ற சேவைக்காக , இறை தூதுவனாகவே அனுப்புவான்.

இந்தியாவெங்கும் சக்தி பீடங்களை நிறுவிய ஈசன் அதனைக் காக்கத் தனது அம்சத்தைப் பல்வேறு வீரபத்திரர், பைரவ அம்சங்களாக நியமித்தார்.

அது போல் காக்கும் பணியைச் செய்யும் இந்தச் சிந்தாமணிக்கும், அவளையே காக்கும் கருப்பணசாமியாக அவளுக்குக் கணவன் வடிவில் உறுதுணையாக இருந்தான் வேலு. சிந்தா தன்னால் ஆன உதவிகளைக் காலநேரம் பார்காகாமல் செய்யும் தாயுள்ளம் கொண்டவள். வேலு அவளுக்குத் துணையாய் நிற்கும் தகப்பன் சாமி. இந்த ஜோடி சுற்றுவட்டார மக்களுக்குப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்தனர்.

ஜீவநதிகள் உற்பத்தியாகுமிடம் குறுகலானதாக இருக்கும் ஆனால் அவை வாழ்விக்கும் ஜீவன்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. அது போல் சிந்தாவின் பிறப்பிடம் ஒரு குடியானவரின் மகளாக இருந்தாலும் ஜீவநதி போல் எண்ணிலடங்கா ஜீவன்களைக் காக்கும் பணியைத் தனதாகக் கொண்டே பயணித்தாள். அவளிடம் காக்கும் உயிருக்குத் தான் மதிப்பு. அந்த உயிர் தாங்கிய உடல் யார் என்பதில் அக்கறை கிடையாது. அனைவரும் சமமே.

சிந்தா எனும் ஜீவநதி என்றும் பாய்ந்து தன்னாலான நன்மைகளைச் செய்து கொண்டு தானிருப்பாள். தொடரட்டும் அவளின் பயணம்.


No comments:

Post a Comment