Tuesday, 31 August 2021

சிந்தா- ஜீவநதியவள் -19

 சிந்தா- ஜீவநதியவள் -19 

மூங்கி மரத்தடியில மொருமொருண்டு சொல்லி 

ஆத்தி மரத்தில ஆயி அவுக போனாக!

இந்திரன் தங்கச்சி ராசக்குமரி ரப்பழுக்கப் போட்டாக!


இல்லத்தான் பொன்னே, என் சொல்லத்தான் கேளு !

காத்தும் மழையும் கவரிமான் சோலையிலே 

கமறி அடிக்கையிலே தங்கிட்டேன் பொண்ணே!


காசுக்கு நூறு கரும்பை வாங்கி!

பூங்குடி கம்மா , கரையெல்லாம் நட்டு, பயிராக்கி !

கரும்போட வாய்க்கா, நம்ம முனியாண்டி  களக்காக்கும்னு சொல்லி!

காலாங்கரை மடைத் திறந்து பாலாப் பெருக வேணும்!


ஆணை முனியோ, குதிரை முனியோ !

அடிப்பட்டு வருது பார்த்து வாறியா!


ஆணை முனி தானுமில்லை! 

குதிரை முனி தானுமில்லை !

நம்ம அய்யனாரு வேட்டையாடி வாராரு வீரமணிச் சந்தையிலே! 


அரசங்குச்சி தொட்டிக் கட்டி !அடியளந்த குடம் கட்டி!

தஞ்சாக்கூரில் தானியத்தைப் போட்டு!

முள்ளுக் குடியில மொதக் கருவை நாட்டி !

இடையப் பட்டியில கடையை நிறுத்தி !

பார்த்திபனூரில பல்லாக்கு சாத்தி !

மருதை தலை வாசலிலே சிறு வானத்தை விட்டு எறிஞ்சு!

அய்யன் குதிரைக் கொண்டு வாராரு!

மதனூரு பொண்டுகளா மறிச்சு உள்ள விடுங்க!!


எனச் செவ்வாய் பாட்டை மூன்று கிழவிகளும் மாற்றி, மாற்றிப் பாட, அய்யனார் கோவிலின்  எதிரே இரண்டு பெரிய குதிரை சிலைகளில் ஒன்றில் சிவந்த மேனியாய் அய்யனாரும், மற்றொன்றில் கரிய திருமேனியாய் கருப்பனும் வீற்றிருக்க, அதன் நடுவே, குழி தோண்டி, மூங்கில் கம்பில், காவி, வெள்ளை பட்டைகளை மாற்றி, மாற்றி அடித்து அதற்கும் ஓர் தெய்வீக கலையைக் கொடுத்து, அதன் உச்சியில் மாவிலை, வேப்பிலைக் கட்டி, மஞ்சள் தூணியில் காணிக்கை காசும் விறலி மஞ்சளும் கட்டி , குழியில் நவதானியங்கள், போட்டு, கம்பை நட்டு, பால் ஊற்றி, மஞ்சள் , சந்தன குங்குமம் தொட்டு வைத்து, தீபாராதனை காட்டி, பூரணா தேவி, புஷ்கலாதேவி உடனுறை ஐயனுக்கும் காப்புக் கட்டினர்.


காவல் தெய்வமான கருப்பனுக்கும், 21 பரிவார தெய்வங்களான முனியன், மாடன், இருளி, காளியம்மா முதலான தெய்வங்களுக்கும் காப்புக் கட்டி, குதிரையெடுப்பு திருவிழாவை வேளாளர் மரபினர் முறைப்படி ஆரம்பித்து வைத்தனர். அய்யனுக்கு நேந்து கொண்டு, குழந்தை இல்லாதோர் குழந்தை பொம்மை, ஆடு வளர்ப்பவர்கள் ஆடு, அய்யனார் வேட்டைக்கு உதவும் பாதுகாவலான நாய் பொம்மைகள், கால் வலி, கை வலி என நோவு உள்ளவர்கள் அந்தந்த பொருட்களை மண்ணால் செய்து வைத்து அந்தக் குறை தீர நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். அவர்களும், புரவியெடுப்பவர்களுமாக விரலிமஞ்சள் வைத்து, மஞ்சள் துணியில் மணிக்கட்டில் காப்புக் கட்டிக் கொள்வார்கள். இதனைப் பத்தாம் நாள், காணிக்கை செலுத்திய பின்னரே அவிழ்ப்பார்கள்.
ஊர் தலையாரி, " இன்னைக்குக் காப்பு கட்டிட்டோம், பத்து நாளைக்குச் சுத்தபத்தமா, அசைவம் பொழங்காம, தண்ணீ சாப்பிடாம இருந்துக்குங்க. அதே போலச் சாய்ந்திரம் ஐஞ்சு மணிக்கு, நம்ம ஊரு பெரிய கிழவிகள் எல்லாம் செவ்வாய் பாட்டு பாடுவாக. ஊர் பொண்டுக எல்லாம் அதுலையும் கலந்துக்கிட்டு, அய்யன் சாமி மனசைக் குளிர வைக்கனுமின்னு ஊர் சார்பா கேட்டுக்குறோம். " என அறிவித்து, அய்யனாருக்குச் சூடம், தீபாராதனை காட்டினர். ஊர் கூடி நின்று, அய்யன் கோவில் காப்புக் கட்டும் விழா நடக்க, அப்போது தான் கங்காவும், அவள் கணவனும் வந்து சேர்ந்தனர். தன் அம்மா, அப்பா நின்ற இடத்துக்கு வந்த மாப்பிள்ளையைச் சிவநேசன், குமரனும் வரவேற்றனர். பட்டுச் சேலைக் கட்டி, பெரிய வீட்டு மருமகளாகத் தன் தங்கை மீனாள் நின்றதில் அவள் அண்ணன் கேசவனும் பெருமையாகவே பார்த்தான். "ஏண்டி உன்னை மதியமே வரச் சொன்னேன்ல்ல " என ராஜியம்மாள் மகளைக் கடிந்து கொள்ளவும், அது தான் காப்பு கட்டுறதுக்கு வந்துட்டேன்ல. இனி பத்து நாளும் இந்தக் கிராமத்தில தான் மோட்டு வளையத்தைப் பார்த்திட்டே உட்கார்ந்து இருக்கனும்" எனச் சலித்துக் கொள்ளவும். " வேண்டுதலுக்காக வரச் சொன்னோம். இப்படிச் சலிச்சுக்காம, மனசார அய்யனார் சாமியை வேண்டிக்க" எனவும், கங்கா கையை மட்டும் குவித்தாள். மற்றொரு புறம், சிந்தாவும் அவள் தங்கை முத்துவுமாக,பாட்டர் வைத்த சேலை உடுத்தி, பூச்சூடி, மலர்ந்த புன்னகையோடு நின்றதில் அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அதிலும் இன்று புதிதாகச் சேலையில் பார்த்த சின்னவளை, அவள் தோற்றமே சற்று அமரிக்கையாய் மாறி இருப்பதைக் காணவும், காதில் புகை வராத குறை தான். " அக்கா, உனக்குத் தீஞ்ச வாசம் வருதா" என வேடிக்கையாகக் கேட்ட தங்கையை, " என்னடி சொல்ற" என வினவிய சிந்தாவிடம் கங்காவை ஜாடைக் காட்டவும். " உனக்கு ரொம்பத் தாண்டி குளிர் விட்டுருச்சு. இது யாரு குடுக்குற தகிரியமின்னு தெரியுது. அவள் கண்ணு முன்னாடியே போகாத, ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்" எனத் தங்கையை எச்சரித்தாள். காலையில் வேர்கள் அமைப்பினர் தென்வயலில் மூலிகை நாற்றுகளை நட்ட பிறகு, பெரிய வீட்டில் வைத்து அமிர்தாவுக்கு வளைகாப்பு நடந்தது.
பெரிய ஹாலில் சேரில் அமிர்தாவை அமர்த்தி, முன்னே ஜமக்காளம் விரித்து, அதில் சீர் தட்டுகள் பரப்பப்பட்டன. தாம்பூலம், கண்ணாடி வளையல்கள், பழங்கள், இனிப்புகள் எனக் குமரனும், சிவநேசனுமாக வாங்கிக் குவித்து ஹாலை நிறைத்தனர். அதே போல் அவர்கள் நண்பர்களைத் தவிர, ராஜியம்மாள் அவர் மருமகள், அங்கு இருக்கும் அவர்களது சொந்தக்கார பெண்கள், சிந்தா, முத்து வள்ளி பாட்டுப் பாடிய கிழவிகள் என ஒரு கூட்டமே கூடிவிட்டது. ராஜியம்மாளும், ஐயாவுமாக ஆசீர்வாதம் செய்து, முதலில் வளையலைப் பூட்ட வரிசையாக எல்லாரும் வளையல் பூட்டினர். சிந்தா தான் தேடி எடுத்த நினைவுப் பரிசைக் கொடுத்து வாழ்த்தி வளையல் போடவும் உணர்ச்சி வயப்பட்டுக் கண் கலங்கிய அமிர்தா. " சிந்தாக்கா, முத்து மாதிரி நானும் உங்களுக்கு ஒரு தங்கச்சி தான், என் டெலிவரி டயத்துக்குக் கரெக்டா வந்திடனும்" எனவும் ,"குடும்பத்தோட வந்து இறங்கி உனக்குப் பிரசவம் பார்த்துட்டு வந்துடுறோம். உங்க அம்மா வந்து பார்கலையின்னு குறை இருக்கக்கூடாது. " என இருவருமே கண் கலங்கினர். அமிர்தாவிடமிருந்து, வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய் வளையல் என மடி மாற்றி, வள்ளிக்கும் சீக்கிரம் பிள்ளை வரம் அருளட்டும் என அனைவரும் வாழ்த்தினர். கங்காவுக்கு இந்தச் சடங்கைச் செய்ய ஆசைப்பட்டே, ராஜியம்மாள் மதியம் வரச் சொல்லியிருந்தார். ஆனால் அமிர்தாவையுமே கங்காவுக்குப் பிடிக்காமல் போக, தனக்குப் பிள்ளை வரம் கனவு தான் என்பதை அறிந்தவள், அந்த நிகழ்வைத் தவிர்த்தாள். மதியம் ஏழுவகைக் கட்டுச் சாதம் அதற்குத் தோதான வெஞ்சனம் வைத்து மதிய வளைகாப்புச் சாப்பாட்டைப் போட்டவர்கள், நல்ல நேரம் பார்த்து அமிர்தாவை வழி அனுப்பினர். கிளம்பும் போது, ராஜியம்மாள் கையைப் பிடித்துக் கொண்ட அமிர்தா. " எங்க இரண்டு பேர் வீட்டுலையும், எங்களைக் கலப்பு மணம் பண்ணிக்கிட்டோம்னு ஒத்துக்கலைமா. எங்களை மாதிரி உள்ள ஜோடிகளுக்கு, நண்பர்கள் உறவா கிடைச்சிடுவாங்க. ஆனால் அம்மா, அப்பா கிடைக்கமாட்டாங்க. நாங்க கொடுத்து வச்சவங்க, எங்களுக்கு அம்மா, அப்பாவும் கிடைச்சிருக்கீங்க" என உணர்ச்சி வயப்பட்டுச் சொன்ன அமிர்தாவை அணைத்துக் கொண்டவர். " எங்க அன்பும், ஆசீர்வாதமும் என்னைக்கும் உங்களுக்கு உண்டு. ஊருக்கெல்லாம் நல்லது செய்றீகளே, உங்களைப் புரிஞ்சுக்கிட்டு, உங்க பெத்தவுகளும் உங்களை ஏத்துக்குவாக. நல்லபடி பேரனை பெத்து தூக்கிட்டு வா. உன் புள்ளை வளர்ற மாதிரி, இந்த மூலிகை பண்ணையும் வளர்ந்து உங்களும் ஜெயம் உண்டாகும்" என ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர். . அய்யன் கோவில், காப்புக் கட்டும் நிகழ்ச்சி முடிந்து, அரை மூடித் தேங்காய், நாலு வாழைப்பழம் விபூதி பிரசாத அர்ச்சனைத் தட்டோடு முத்து வரவும், ராஜியம்மாள் அவளைக் கூப்பிட்டார். " அடியே வளைகாப்பு சோறும், வெஞ்சனமும் நிறையக் கிடக்கு. வீட்டுக்கு வா, எடுத்துட்டு போய் இராத்திரி சாப்பிடுவீக" எனவும் " சரிமா" என்றாள். " ஆமாம்மாம் , மிச்ச மீதியை பண்ணைக்காரவுகளுக்குக் குடுத்து விடு, இராத்திரிக்கு எங்களுக்குச் சூடா டிபன் தான் வேணும்" எனக் கங்கா பேச்சோடு முத்துவை தரமிறக்கவும், கண்டனத்தை இரண்டு முறையும் அழுதபடி ஓடியவள் இன்று "வளைகாப்பு சோறு , சாமந்தியம்மா கைப் பக்குவத்தில சாப்பிடவும் குடுத்து வச்சிருக்கனுமே. நான் வந்து எடுத்துக்குறேன்மா" என அசராமல் ,ஆர்ப்பாட்டம் இல்லாமல் பதில் அளிக்கவும், கங்காவுக்கு எரிச்சல் ஆனது. குமரன், " மோதி பெல் , இது தான் சாக்குன்னு அத்தனையும் தூக்கிட்டுப் போயிடாத. எனக்கு அம்மிக் கல்லு வளைகாப்பு சாப்பாடு வேணும். " என்றான். 'செல்ல பெரு வச்சு கூப்புடுற அளவுக்கு வந்துட்டான்னா ' எனக் கங்கா மனதில் வியந்தாள் . " அதெல்லாம் இல்லை, அம்மா சொல்லிட்டாக, நான் மொத்தத்தையும் எடுத்துட்டு போயிடுவேன், நீங்களும் உங்க அக்காவும் , பெரியவீட்டுக்காரவுக சூடான டிபன் சாப்புடுங்க " என அவள் குமரனை வம்பிழுக்கவும். " எனக்கு என் பிரெண்டோட வளைகாப்பு சாப்பாடு தான் வேணும், நீ எல்லாத்தையும் எடுத்துட்டு போறதுனா ,எடுத்துட்டு போ, நான் சாப்பிட உங்க வீட்டுக்கு வந்துடுறேன். ப்ராப்ளம் சால்வ்டு" எனக் குமரன் தோளைக் குலுக்கவும். " குமரா" என அதட்டி கங்கா ஏதோ, சொல்ல வருவதற்குள். " இந்த வாழைப்பழம் கூட, உங்க வீட்டுது சீக்கிரம் பழுத்திருக்கு, எங்களுது அப்படியே இருக்கே. உங்க வீட்டில மேஜிக் வச்சிருக்கீங்களா" என அவள் தட்டிலிருந்து, ஒன்றைத் தோலுரித்துச் சாப்பிடவும், " விவசாயப் படிச்ச உங்களுக்கு நாங்க வாழைப்பழம் எப்படிப் பழுக்கும்னு சொல்லனுமாக்கும், வேணும்னா எடுத்துக்குங்க, அதுக்காகச் சும்மா கதை விடக் கூடாது" என முத்து, குமரனை உரிமையாகப் பேசியதை கங்கா மனதில் ,இவர்களை ஒருவழி ஆக்குவது கங்கணம் கட்டிக் கொண்டாள். இளங்கன்று பயமறியாது என்பது போல் சிந்தாவின் எச்சரிக்கை முத்துவுக்குப் புத்தியில் எட்டாமல் போனது, குமரன் இருக்கும் தைரியத்தில் கங்காவையே புறக்கணித்து வம்பு பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். " நீ இப்படிச் சொன்னதுக்கு அப்புறம் விடுறதா இல்லை" என மற்றொரு பழத்தையும் அவள் தட்டிலிருந்தே எடுத்துச் சாப்பிடவும், " அடேய், சின்னப் பிள்ளைகளுக்குச் சாப்பிட குடுக்குங்க. அதைத் தூக்கிட்ட" என மகனைக் கடிந்தபடி, தங்களது பூஜை தட்டிலிருந்து, இரண்டு பழத்தை முத்துவிடம் நீட்டவும் , அவரை முறைத்த முத்து, " அப்படின்னா, உங்க சாப்பாடும் வேணாம் போங்க" எனக் கோவிக்கவும், " அடியே, சரி தரலை. நான் முன்னாடி போறேன். நீ மறந்திடாம வந்துட்டு போ " எனக் கங்காவோடு காரில் ஏறிச் சென்றார்.
குமரன்," பாப்பாவைத் தூக்கிட்டு, நான் நடந்து வர்றேன். வேடிக்கை பார்த்துட்டே வரட்டும், நீ , அத்தாச்சியோட கிளம்பு அண்ணேன்" எனச் சிவநேசன், மீனாளை வண்டியில் அனுப்பினான். சிந்தா, "சுப்பு, உன் வண்டியைக் காணமே" " வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சனுமின்னு, அப்பா காப்புக் கட்டின மறுநிமிசம் கிளம்பிடுச்சு. நீ கிளம்புக்கா. நாங்க நடந்து வந்துடுறோம்" என்ற தம்பியிடம் , முத்துவைக் காட்டி, " அவளைத் தனியா விட்டுட்டு வந்திடாத, இல்லை மாமனை அனுப்புவா" எனக் கருத்துக் கேட்கவும் , " ஏய், நீ வா புள்ளை. அதுங்க என்ன பச்சை புள்ளையா, தொலைஞ்சு போறதுக்கு." என வேலு கடிந்து கொள்ளலும். " என்ன மச்சான், வயசுக்கு வந்த புள்ளையை அப்படி விட்டுட்டு போக முடியுமா. ஊரு கண்ணு பூரா அவ மேல தான்" எனச் சிந்தா தங்கையைப் பார்த்து கவலைப் படவும், குமரனோடு வந்தவளைப் பார்த்த வேலு, " அதெல்லாம் அந்தப் புள்ளையைப் பார்த்துக்க ஆள் இருக்கு, என் சின்னாத்தா, வீட்டை பேத்துக் கொண்டு போறதுக்குள்ள போகனும் வா" எனவும் தம்பியிடம் நான்குமுறை சொல்லிவிட்டு மகன் மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினாள் சிந்தா. சுப்புவும், முத்துவுமாகக் குமரனோடு நடக்க, சுப்பு, அக்காள் குடும்பம் காலையில் செய்த சாகசத்தைச் சொல்லிச் சிரிக்க, " அப்ப ராசியாயிட்டாகளா, அது தான் அக்கா முகத்தில டாலடிக்குதாக்கும்" என்றபடி வர, பக்கத்தில் இவர்கள் வீட்டில் குடியிருக்கும் பஞ்சவர்ணம், இவர்கள் பேச்சைக் கேட்டுவிட்டு, " சிந்தா முகம், புருஷன் ராசியானதுக்கு டாலடிக்குது சரி உன் முகம் எதுக்கு டாலடிக்குது. என்னா விசயம்" எனக் கேட்கவும், முத்துவின் கன்னங்கள் சூடானது. குமரனின் நகைப்பும் சேரவும் மேலும் சிவக்க, ' எங்கே தானே காட்டிக் கொடுத்து விடுவோமோ என்ற பயமும் வந்தது. அதற்குள் சுப்பு, " பஞ்சுக்கா, முத்துப் படிக்கப் போற காலேஜைப் பார்த்தேனா, நீ இந்தக் கேள்வி கேக்கமாட்ட " எனக் கொங்கு தேசத்து மக்களைப் பற்றி வியந்து பேசி வந்தவன், " அவுகளுக்கு ஈடா இருக்கனுமுன்னு, அமிர்தாக்கா தான், முத்துவை இப்படி மாத்திவிட்டாக" எனப் பேச்சை முடிக்கவும், பெரிய வீடு வரவும் சரியாக இருந்தது. " அதென்னமோ, ஊர் வாயில விழுகாம, நல்லா படிச்சு கரை ஏறுனா சரி தான். " என்றாள் பஞ்சவர்ணம். ஆட்கள் முன்னும் பின்னும் நடந்ததால் இவர்கள் சேர்ந்து வந்ததும் யாருக்கும் விகற்பமாகப் படவில்லை. ஆனால் கங்காவுக்கும் அவளைப் போன்ற சிலருக்கும் கண்ணை உருத்தியது. முத்துச் சுவாதீனமாக இயல்பு போலே, முன் வாசல் வழியே, குமரனோடு வந்தவள், சிந்துஜா அவனது சட்டையை ஈரம், " போங்க, மணக்க மணக்க ஆசீர்வாதம் தான்" என அனுப்பியவள், சிந்துஜா ஈர உடையைக் கழட்டிவிட்டு, " மீனாக்கா, இந்தக் கூடையிலிருக்கத் துணியை மாத்தி விடவா" எனக் கேட்கவும், " போட்டுவிடு முத்து. நீ போட்டு விட்ட, எந்த ட்ரெஸ்ஸா இருந்தாலும் அழுகாமல் போடுது" என மீனாள் பவுடர் வகையறாக்களைத் தரவும். " ஆத்தி, அடுத்த அலங்காரத்துக்கு ரெடியாயிட்டீகளா" எனக் கொஞ்சியவள், " அது ஒண்ணும் பெரிய வித்தையில்லைக்கா, இவுகளைக் கொஞ்சிக்கிட்டே ட்ரெஸ்ஸை போட்டீகன்னா போட விட்டுருவாக" எனவும். " இரண்டு புள்ளைப் பெத்தமாதிரி இதெல்லாம் எப்படிச் செய்யிற" என மீனாள் அதிசயமாகக் கேட்கவும். " நாங்க அக்கா தங்கச்சி இரண்டு பேர் தானே,எங்களுக்குப் பார்க்க எங்க ஆத்தாளா உயிரோட இருக்கு. ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்குவோம். எங்க அக்கா இரண்டு புள்ளைகளைப் பெத்துச்சே. ஊர்ல இருக்கக் கிழவிங்க எல்லாம் வந்து பக்குவம் சொல்லிட்டு போகுங்க. அதை வச்சு, அக்காவுக்கு இரண்டு பிரசவத்துக்கும், பத்திய சமையலே செஞ்சு போட்டுருக்கேன்" என முத்துச் சொல்லவும்.
" இதுலையும் சிந்தா கெட்டிக்காரி. தன்னை மாதிரியே தங்கச்சியையும் பழக்கி விட்டுருக்கா பாரு" என ராஜியம்மாள் தனது வளர்ப்பைச் சிலாகிக்கவும்.


" பெரியம்மா ஒரு வேலை மிஸ்ஸிங்க். சிந்தாக்கா, வேலு ப்ரோக்கு சூப்பரா ஆயில் மசாஜ் பண்ணி விடுவாங்க. அது இவளுக்குத் தெரியாது. இவ தன் வுட்பீயையும் ஏமாத்துறா" எனக் குமரன் குறை சொல்லவும்.


"கண்ணு பார்த்தா, கை செய்யப் போகுது, புருஷனுக்குச் செய்யறதுக்கெல்லாமா ட்ரைனிங் எடுப்பாக. நீ ஒரு விவரங் கெட்டவனா இருக்க. இவளுக்குக் கல்யாணம் ஆனா அதெல்லாம் அக்காளை மாதிரியே, தன்னால புருஷனை நல்லா பார்த்துக்குவா, என்ன ஒண்ணு சிந்தா மாதிரி கைப்பக்குவம் வராது" என ராஜியம்மாள் சொல்லவும்,


' மீனாக்கா, பெரியம்மாளை பார்த்திகளா, நான் வேலை செஞ்சாலும் அதுக்குப் பாராட்டும் எங்க அக்காவுக்குத் தானாம், நல்லா செய்யலைனா மட்டும் பக்குவம் பத்தாதாம் " என முத்துக் குறை சொல்லவும். " அது தானே " என மீனாவும் மாமியாரை வம்பிழுக்க , "அதெல்லாம் எங்க அம்மாட்ட சிந்தாவை முந்திகிட்டு யாரும் பேர் வாங்க முடியாது, இந்தப் பஞ்சாயத்தில தான் அங்க ஒரு ஆளு இண்ணும், அம்மாவை, திட்டிக்கிட்டுத் திரியுது " எனச் சிவநேசன் காங்காவை காட்டி, சொல்லவும்.


கங்காவுக்கு வாய் வரை முத்துவையம், சிந்தாவையும் தரமிறக்க வந்த வார்த்தைகள் யாவும், உள்ளுக்குள்ளேயே முடங்கின. போன முறை சிந்தா கொடுத்த சூடு இன்னும் வேலை செய்தது. தனது மணவாழ்க்கை ஏற்கனவே சற்று கசந்து இருக்க, மொத்தமாக முறித்துக் கொள்ளக் கூடாது என நினைத்தாள்.

ஆனால் குமரன், முத்துவின் பார்வை பரிமாற்றங்கள் கங்காவுக்குப் புரிந்து போகவும் , ஏற்கனவே சீமைக்கருவை விவகாரத்தில் பக்கத்தில் கம்பெனி வைத்திருக்கும் வடநாட்டுக்காரனின் பகையைப் பற்றிச் சோமன் மூலம் அறிந்திருந்ததில், தன் பெயர் இதில் சந்தேகமாகக் கூட வராத அளவு ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினாள்.

சிந்தாவைப் புகழும் அம்மாவுக்கும், அவள் மீது அபிமானம் வைத்திருக்கும் சிவநேசனையும், புதிய முயற்சிகளுக்குத் துணை நிற்கும் அய்யனார் குடும்பத்தையும் அடக்கி நிறுத்த, ' எரிவதை பிடுங்கினால், கொதிப்பது நிற்கும்" என்ற சொலவடைக்கு ஏற்ப சிந்தாவை குறி வைத்தாள்.

முத்து விசயத்தில், சிந்தாவுக்குச் செய்தது போல், பொய்யாய் இல்லாமல், இவர்கள் உண்மையையே ஊருக்குச் சொன்னாலுமே, அதன் விளைவு, தங்கள் குடும்பத்துக்குத் தான் பாதகமாக அமையும். சிவநேசனைப் போல் இல்லாமல் குமரன், முத்துவை பெரிய வீட்டு மருமகளாகவே ஆக்கிவிடுவான் எனக் கணக்கு செய்தவள், குமரனுக்கும் பாடம் புகட்டுவது போல், சிந்தாவை குறி வைத்தாள். அவளுக்கு ஏதாவது நேர்ந்தால், ஊர் வளமைப் படி, அக்காள் பிள்ளைகளுக்காக, முத்து அவள் மாமனையே இரண்டாம் தாரமாகக் கூட மணந்து கொள்வாள். பெரிய வீட்டு வழக்கத்தை மாற்ற நினைக்கும் குமரனுக்கும் சரியான அடியாக இருக்கும் என நினைத்தாள்.

சோமனும் அவன் கூட்டமும் , சிவநேசன் , குமரன் கூட்டத்தைக் குறி வைத்தாலும், ஆண்கள் எச்சரிக்கையாகவே செயல்படுவதைப் பார்த்தவன், புரவியெடுப்புச் சமயத்தில் ஏதாவது கலகத்தை ஏற்படுத்திப் புது முயற்சியை முறியடிக்க நினைத்தான். இவர்கள் நடவடிக்கையை ஆராய அவர்களுக்குள்ளேயே ஓர் கையால் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தே, அவனும் கங்காவை திருவிழாவுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தான். அலைபேசியில் அவனோடான தொடர்பில் இருப்பவள், ஒரு திட்டத்தோடே மேலப்பூங்குடிக்கு வந்தாள்.

கங்கா இயல்பிலேயே பொறாமை குணம் உடையவளாக இருந்ததும், பதின்ம வயதில் வயசு கோளாறு காரணமாகச் செய்த பிழையால் அவள் கருப்பை அதன் திறனை இழக்க, குழந்தை பெற இயலாது என்ற போதும், அதை மறைத்து அத்தை மகனை மணந்து கொண்டாள். தன் குறை வெளியே தெரியாமலிருக்க, மீனாளை பலிகடாவாக்கியவள், அவள் அண்ணன் சுதாரித்து அவளை அழைத்து வரவும், இப்போது மாமியாரின் கவனமும் இவள் புறம் திரும்ப, குழந்தைக்காக மருத்துவரை பார்க்கச் சொன்னார்கள். இதுவே நாளடைவில் தனது இல்வாழ்க்கைக்கும் பிரச்சனை ஆகுமோ என எண்ணிப் பயந்திருந்தவளுக்கு, ஊரில் நடப்பவற்றைச் சோமன் ஒன்றுக்கு இரண்டாக வத்தி வைக்க, பிறந்த வீட்டுச் சந்தோஷத்தையும் பறிக்கக் கிளம்பி விட்டாள்.

தான் சிரமப்பட்டாலும் உற்றவர் வாழட்டும் என வாழும் சிந்தாக்கள் இருக்கும் ஊரில் தான், பண்பான குடும்பத்தில் பிறந்தும், தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது எனக் குயுக்தி கொண்ட கங்காக்களும் உள்ளனர். இங்குச் சோமன் அவளது குணத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறான். அடுத்து என்ன நடக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Saturday, 28 August 2021

சிந்தா- ஜீவநதியவள் -18

 சிந்தா- ஜீவநதியவள் -18

ஊருக்கு மேற்கே காணி நிலமாம். 

நண்டா உழுது, நரியா வடம் பிடிச்சு

கொக்கா நட்டு, திரியா கருதறுத்து 

எடுத்து எழுத முடியாமல் 

நம்ம பிள்ளையாருக்கும் பெருமாளுக்கும் 

ஏலம் பத்தி விட்டுட்டாக

என மூக்கம்மாள் பிள்ளையார் துதி பாட, தென்வயலில் ஊர் சனமே நின்று வேடிக்கை பார்க்க,  பெரிய வீட்டு ராஜியம்மா, அவரது மருமகள் மீனாள், வேர்கள் அமைப்பின் அமிர்தா, அவளோடு உடன் வந்த இரண்டு பெண்கள் மற்றும் சிந்தா, முத்து என இவர்களுக்கும் சேர்த்து ஒரே போல் அமிர்தா எடுத்திருந்த ஜரிகை வைத்த பச்சை பருத்திச்  சீலை உடுத்தி தென்வயலில் நின்றார்கள். 


ஆண்கள் வெள்ளை வேட்டியும், வேர்கள் அமைப்பின் லோகோ பொறித்த பச்சை சட்டையுமாக, சிவநேசன், குமரன், நீரஜ் அவர்கள் நண்பர்கள், மகாலிங்கம் ஐயா, முதல் அய்யனார், வேலு சுப்பிரமணி சத்தியமூர்த்தி வரை ஒரே போல் உடையணிந்து வேர்கள் அமைப்பின் சார்பாகச் சமத்துவமாக நின்றார்கள். 


மகாலிங்கம் அய்யாவும், ராஜேஸ்வரி அம்மாளுமாக தங்கள் குலதெய்வத்தை வேண்டி, பிள்ளையார், பெருமாள், அழகிமீனாள், அய்யனார், கருப்பன் என ஊர் தெய்வங்களை மனதில் நினைத்து, வானம் பார்த்த பூமியாம் இந்த கிழக்குச் சீமை மண்ணில் சீமை கருவையை அகற்றி, மூலிகை வனமாய், சிறு தானிய வயலாய், பூக்கள் குலுங்கும் தோட்டமாக மாற வேண்டும், எனப் பூமித் தாய்க்கும், அவள் மகவு ஜீவநதியாய் தாகம் தீர்க்கும் நீருக்கும், பயிர் காக்கும் சூரியனுக்கும், உயிர் கொடுக்கும் வாயு தேவனுக்கும் வான் மழை வளாது பெய்ய வருணனையும் தங்கள் வயலில் வந்தருள, தேங்காய் உடைத்து, வாழைப்பழம் படைத்து, வெற்றிலை பாக்கு வைத்து , சூட தீபாராதனை, வெங்கள மணி முழங்கத் தீப தூபத்தோடு விண்ணவரை, மண்ணை நோக்கி வர நீரை வார்த்து அழைத்தார்கள். 


 இருளி கிழவி அழகிமீனள் அம்மனுக்கு , வழிபாட்டுப் பாடல் ,  

செங்கல் எடுப்பாகலாம், 

சிறுவீடு கட்டுவாக!

சேவிக்கும் மக்களை 

நம்ம அழகி மீனா  

உள்ள நிறுத்துவாக!


வெத்தலை பெட்டியை 

வெளியே எடுப்பாக! 

வேணுங்கிற பேருக்கு 

நம்ம காளியாத்தா 

தானங்கள் செய்வாக!


வெத்தலை இல்லையிண்டு 

நம்ம காளியாத்தா 

மேலோகம் போகையிலே !

மேகங்கள் ஓடி 

பொழுதை மறைக்குதில்ல

காசுக்கு நூறு கரும்பை வாங்கி!

பூங்குடி கண்மாய் கரையெல்லாம்

நட்டு, பயிராக்கி !

கரும்போட வாய்க்கா, 

நம்ம அழகிமீனாள்  

களக்காக்கும்னு சொல்லி!  

காலாங்கரை மடைத் திறந்து 

பாலாப் பெருக வேணும்

என அந்த ஊரின் பெண் தெய்வமான அழகிமீனாளை பாடி  முடியவும், 

" அம்மையே, அப்பனே ஒப்பிலா மணியே" என மாகாலிங்கம் ஐயா வேண்டி தேங்காயை உடைக்க, அதில் பூ இருந்தது. ராஜேஸ்வரி அம்மாள் ஆனந்த பெருக்கோடு அம்மாவுக்கு நன்றி சொன்னார். வரிசையாகத் தீபாராதனை காட்டி, முதல் குழியை அய்யனார் தோண்ட, சிந்துஜா கைகளால், தம்பதி சமேதராய், சிவநேசனும் மீனாளும் மூலிகை நாற்றை நட்டார்கள். 

நாடு செழிக்க வேணும் 

நம்மளுக்கு ஒரு நல்ல மழை 

பெய்ய வேணும்


ஊரு செழிக்க வேணும் 

நம்மளுக்கு ஒரு உத்தமழை 

பெய்ய வேணும்


நாத்து விலை முடிய 

நம்ம அம்மா நாத்து பயிர் 

ஏற்ற வேணும்

எடுத்த வேலை முடிய 

நம்ம அம்மா எங்கும் பயிர் 

ஆக்க வேணும்


வெள்ளியனை பாணையில 

விதைநெல்லை ஊறப்போட்டு , 

தட்டிக் கொட்டி, பொட்டியில போட்டு


அள்ளி இறைச்சாக

அடி நாத்து பட்டுச்சாம்!

புடிச்சு எறிஞ்சாக ,

புலி நாத்து பட்டுச்சாம்1


நான் மாட்டேன் என்றாக!

நானூறு வண்டியில

நாத்து வந்திருக்கு!


முடியாது என்றாக!

முந்நூறு வண்டியில 

முடிகள் வந்திருக்கு !


மச்சை திறக்கும்

நம்ம அழகிமீனா 

கண்ணை திறந்திட்டா!

சேத்தில இறங்கி

செல்வம் பொழியுதுங்க. ! 

என மழைப் பாடலையும், நாற்று நாடும் பாடலையும் ஆண்டிச்சி கிழவி பாடியது.

ராஜேஸ்வரிக்குக் குனிய இயலாததால் அவர் தொட்டு முத்துவின் கையில் கொடுத்து நடச்சொன்னார். அவள் நானா எனத் தயங்கவும், " கன்னிப் பொண்ணு கை பட்ட வேகமா வளரும் பாக வையி " எனவும், அய்யனாரிடம் மண் வெட்டியை வாங்கிக் குமரன் குழியைத் தோண்டினான். " ஐயா, இதெல்லாம் செய்வீகளா" என அய்யனார் ஆச்சரியமாகக் கேட்கவும், அவன் சிரிக்க, " இந்தப் படிப்பைத் தான் இவுங்க ஐஞ்சு பேரும், ஐஞ்சு வருஷமா படிச்சாங்க " என்றார் நீரஜ். " பயிர் குழி தோண்டக் கூடவா படிப்பிருக்கு" என ஆண்டிச்சி இடக்கு பேசவும், "ஆமாம், இந்தச் செடிக்கு இம்புட்டு அகலம் வேணும்னு ,இவ்வளவு ஆழம் வேணும், இத்தனை நாளுல முளைக்கும், வளரும் அப்படின்னு, நெல்லுல புது ரகம் வருதில்ல, அது எல்லாம் இவுகளை மாதிரி படிச்சவுக ஆராய்ச்சி பண்ணிக் கண்டு பிடிச்சது தான் " எனச் சிவநேசன் அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க, குமரன் தோண்டிய குழியில், முத்துமணி செடியை நட, குமரன் அதற்கு அழகாகப் பாத்தி கட்டினான். அதுவும் முத்துவை வேலை வாங்கி அவன் பதமாகச் செடியை நட்ட பாங்கில், அய்யனாரே அசந்து தான் போனார். " ஆத்தி, ஐயா அவுகளை என்னமோன்டு நினைச்சேன். இம்புட்டுத் தெளிவா செடி நடுறீகளே" என அவர் பாராட்டவும். " அப்ப, என்னையும் உங்க இனம்னு ஒத்துக்குவீகளா, நான் பாஸாயிட்டேனா" என வினயமாக முத்துவைப் பார்த்தும் பார்க்காமலும் குமரன் கேட்கவும் , " அய்யா என்ன சொல்றீக" என அய்யனார் பதறினார். குமரன் நண்பர்கள், “சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்டுறான் பாரு” எனத் தங்களுக்குள் கமெண்ட் அடித்துக் கொண்டனர். " அது தான் விவசாயின்னு ஒத்துக்கிறீகளான்னு கேட்டேன்" எனக் குமரன் சமாளிக்கவும் , " அது தான் பட்டமே வாங்கி இருக்கீகளாமே, பண்ணைக்காரன் நான் ஒத்துக்கிட்டு என்ன ஆகப் போகுது" என்றார் அய்யனார். “அட, நல்ல விவசாயின்னு தான் பாராட்டி விட்டேன், வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது தானே “ என்றார் மகாலிங்கம். “என்னங்கய்யா நான் போயி என்ன சொல்ல” என அய்யனார் பெரியவரிடம் மட்டையாய் மடக்கினார். இந்த வேட்டி சட்டையை அவரைப் போட வைக்கவே குமரன் போராட வேண்டியிருந்தது, “ஐயோ, பெரிய ஆயாவும் போட்டு, நானு அதே மாதிரி உடுப்பு போடுறதா, அது மருவாதி இல்லை “ எனவும் ,”கிழவா சுத்தம்” என அமிர்தா அவனுக்கு மட்டும் கேட்கும் படி கமெண்ட் அடித்தாள். அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, பிறகு குமரன், வேர்கள் அமைப்பு என ஒரு பிரசங்கமே நடத்தி, இதைக் கம்பியூட்டரில் போடுவோம் என ஆயிரம் கதை சொல்லி, சிவநேசன் சொல்லவும், அரை மனதாக ஒத்துக் கொண்டார். " இதில படிச்சவன், பண்ணைக்காரன் எல்லாம் கிடையாது, தொழில் சுத்தமா இருக்கான்னு தான் பார்க்கனும். என்ன வேலு ப்ரோ என்ன சொல்றீங்க " என வேலுவையும் அழைத்துக் குமரன் கருத்துக் கேட்கவும், " யார் சர்டிவிகேட் குடுத்தா என்ன, குடுக்கலைனா என்னா. அது தான் நினைச்சதை சாதிக்கிறீகளே" என முத்துவையும் பார்த்தபடி சொல்லவும், 'உங்க ஆதரவு இல்லாமலா நடந்துருச்சு " என்றான் குமரன். அமிர்தா குனிய வேண்டாம் என நீரஜே செடியை நட, அவர்களுக்கும், குமரன், முத்து உதவி செய்தனர். " சிந்தா அக்கா , வேலு ப்ரோ வாங்க" எனவும், " இருக்கட்டும் சார், நாங்க தானே எல்லாத்தையும் நடப் போறோம். உங்க கூட்டாளிகளை நடச் சொல்லுங்க" என வேலு சொல்லவும். " எங்க முன்னாடியும் ஒண்ணு நடுங்க" எனச் சிவநேசன் வலியுறுத்தவும், வேலு எல்லா வேலையையும் செய்ய, மகன், மகளோடு, சிந்தாவும் ஒரு கை மண்ணை அள்ளிப் போட்டாள். அவள் மண்ணைத் தள்ளும் போது, நிலத்தில் கிடந்து கருவை முள் அவள் விரலில் கீச்சி விட, குபு குபுவென இரத்தம் வந்தது. " சிந்தாமணி பார்த்து புள்ளை " என அவள் விரலை வேகமாகத் தண்ணீர் ஊற்றி அலசியவன், அவள் விரலை, தன் வாயில் வைத்துக் கொண்டான். இது தான் அவளறிந்த வேலு, சிந்தாவுக்குக் கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது , " போதும், விடு. இந்தக் காயம் என்ன செய்யப் போகுது" எனக் கையை உருவியபடி மகளோடு எழுந்து கொண்டாள். அதன் பிறகு ஒவ்வொருவராய் நாற்றை நட, வந்திருந்தவர்களுக்கு வயலில் வைத்தே காலை உணவைப் பரிமாறினர். ராஜேஸ்வரி அம்மாளை கை தாங்கலாகச் சிந்தா தான் , தன் வீட்டுக்கு அழைத்து வந்தாள். வேப்ப மரத்தடியில் சேர் போட்டு அமரவைத்தாள், சுற்றி அவளது வீட்டைப் பார்வையால் அளந்த ராஜியம்மாள், " சிந்தா, உங்க அம்மா ராக்கு போகையில உனக்கு, பதினாலு வயசு இருக்குமா, அவளை மாதிரியே வீட்டை வச்சிருக்கடி. நல்லா லட்சுமி கடாட்சமா, உன் வீடு நிறைஞ்ச வீடு தாண்டி. எதுக்கும் கவலைப் படாத" என்றவரின் கையைப் பிடித்துக் கொண்டு, அவள் கண் கலங்கவும், " எதுக்குடி கண்ணில தண்ணீர்" எனச் சிந்தாவை மிரட்டினாலும், அவர் கண்களும் பனித்துத் தான் இருந்தது. " நீங்க இன்னைக்கு வரவும், எங்க அம்மாளே வந்த மாதிரி மனசு நிறைஞ்சு கிடக்கும்மா" எனவும், "அது என்ன அம்மா மாதிரி, நான் தாண்டி உன் அம்மா." என்றவர் அங்கே வந்த வேலுவை அழைத்து, " என் அம்மாவா பார்க்குறேங்கிறாளே, ஐஞ்சு வருசமா என் கூடப் பேசாமல் , நல்லாத் தான் இருந்தா, ஆனால் பத்து நாள் நீ முகத்தைத் திருப்பவும், என் மகள் பாதியா போயிட்டா பாரு. எதுவா இருந்தாலும், அவளோட மனசு விட்டுப் பேசு, சரியாகிடும். இப்படி முறைச்சுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்" என உரிமையாக அவனைக் கோவிக்கவும், " இல்லம்மா, அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அது தான் நீங்க சொல்லிட்டிங்கல்ல, இனிமே எல்லாம் சரியா போயிடும்" என்றான் வேலு. " அம்மாளுக்கு வாக்குக் கொடுத்தா காப்பாத்தனும், சிந்தா முகத்தை வாட விடாத. உண்மையில அவ கிடைக்கத் தக்கன பொண்ணு இல்லை, நீ போன பிறவில செஞ்சப் புண்ணியம். வைரம், வைடூரியம் தான் பத்திரமா வச்சுக்க" எனவும், சிந்தா, " இதோ வாரேன்" என உள்ளே ஓடிவிட, வேற யாரும் இல்லாததால் வேலு, ரகசிய குரலில் , " அரிய பொக்கிசம் தான் அதுனால தான் வீட்டுக்குள்ள பாதுகாப்பா வச்சு, சூனியக்கார கிழவியைப் பாதுகாப்புக்கு வச்சிருக்கேன். இன்னும் பத்து நாள் பாதுகாக்கனும், அவகிட்ட சொல்லிப் புடாதீக" என்றான் , " நீ ஏதோ திருட்டுத்தனம் பண்றேன்னு நினைச்சேன். சரியாத்தான் போச்சு, நேசன்கிட்ட சொன்னதுக்கு, புருஷன் பொண்டாட்டி விவகாரமுன்னு சொன்னானே, எல்லாரும் கூட்டுக் களவாணிகள் தானா" எனவும் ,"ஆமாம்மா, அவ பாதுகாப்புக்காகத் தான், அவகிட்ட சொல்லிப்புடாதீக " என வேலு கேட்டுக் கொண்டான் ."அவளை ரொம்ப அழுக விடாத. " என்ற ராஜியம்மா, குமரன் வண்டியோடு வந்து அழைக்கவும், " அடியே, சிந்தா, நான் கிளம்புறேன், ரொம்ப நேரம் நட்டமே நிற்க முடியலை" என்றார். அவளும் வேகமாக ஓடி வந்தவள், ஒரு தட்டில் புடவை ரவிக்கை, மஞ்சள் குங்குமம், பூ என வைத்துக் கொண்டு வந்தவள், " நீங்க சொல்லிக் கொடுத்தது தான். எங்க அம்மாளுக்கு வச்சுக் கும்பிட்டேன். நீங்க வாங்கிக்குவீகளா" எனச் சந்தேகமாகக் கேட்கவும் " குடுடி" எனக் கை நீட்டி வாங்கிக் கொண்டார். சிந்தா வேலுவை ஒரு பார்வை பார்த்து விட்டு, அவர் காலில் விழ, வேலுவும் சேர்ந்து விழுந்து வணங்கினான். " நல்லா, மகராசனா, மகராசியா நீண்ட காலத்துக்கு, ஒத்துமையா, நல்லா இருங்க" எனக் குங்குமம் வைத்து விட்டவர், அங்கே வந்த முத்துவுக்கும் பொட்டு வைத்து விட, அவள் விழுந்து வணங்கும் போதே, "பெரியம்மா என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க" எனக் குமரனும் விழுந்தான். அவனைச் சந்தேகமாகப் பார்த்தார் ராஜி, ஆனாலும் "நல்லா இருடா " என வாழ்த்தவும்,"இப்படியா வாழ்த்துவாங்க, மனசுக்கு புடிச்ச பொண்ணைக் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருடான்னு வாழ்த்துங்க " எனப் பெரியம்மாவுக்கே சொல்லிக் கொடுக்கவும், "அடேய் பெரியம்மாளை எங்கயும் மாட்டிவிட்டுடாத , உங்க பெரியப்பா என்னைக் கொன்னு போட்டுருவாரு" எனக் கலவரமாகவே சொல்லவும். "சிந்தாக்கா, நீங்களே சொல்லுங்க, பெரியம்மாவைப் பார்த்துப் பெரியப்பா பயப்புடுறாரா, இல்லை பெரியப்பாவைப் பார்த்துப் பெரியம்மா பயப்புடுறாங்களா " எனக் கேட்டுக் கொண்டே நடக்கவும், மற்ற மூவருமே வாய்ப் பூட்டுப் போட்டது போல் அமைதியாக வர, "இதில என்னடா சந்தேகம், உங்க பெரியம்மாளைப் பார்த்துத் தான் நான் பயந்து இருக்கேன், வயசான காலத்தில பொண்டாட்டியை கோவிச்சுக்க முடியுமா" என அங்கே வந்த மகாலிங்கம் அய்யாவே கேட்கவும், "அப்ப, வயசு காலத்தில பொண்டாட்டியை கோவிச்சுக்கலாம், ஆம்பளைக வைக்கிறது தான் சட்டம் , அப்படித்தானே ஐயா சொல்றீக " எனச் சிந்தா தன் மனக்குறையைக் கேள்வியாகக் கேட்கவும், "வேலு உன்கிட்ட கோவிக்கிறானா, அம்புட்டு தைரியமா வந்துருச்சு " எனக் கேலி பேசியவர், "உன்னைக் கோவிச்சுக்கிட்டு அவன் எங்க போகப்போறான். எல்லாம் சரியாகிடும்.ஒரே இனிப்பா இருந்தாலும் வாழ்க்கை திகட்டிடும், சண்டை சச்சரவுன்னு இருக்கணும் " எனச் சிரித்து விட்டு நடக்க முற்பட, "நான் இறக்கி விடுறேன் அய்யா " என வேலு மகாலிங்கத்தை வண்டியில் ஏற்றுக் கொள்ள , "நல்லாத் தான் சொல்லி குடுக்குறீக போங்க " எனக் கணவனைக் கடிந்த ராஜியம்மா, பெண்கள் கைதாங்கலாகப் பிடித்துவர, குமரன் வண்டியில் பிரம்ம பிரத்தனப்பட்டு ஏறி அமர்ந்தார். இன்று மாலையில் குதிரை எடுப்புக்குக் காப்புக் கட்டுகிறார்கள் அதனால் அதற்குப் பிறகு ஊரிலிருந்து யாரும் வெளியே போகக் கூடாது எனும் கட்டுப்பாட்டை மதித்து, வேர்கள் குழு குமரனைத் தவிர மற்றவர்கள் மதிய உணவுக்குப் பின் கிளம்புகின்றனர். இன்றைய தினத்தை மேலும் சிறப்பாக ஆக்க விரும்பிய ராஜேஸ்வரி அம்மாள். தங்கள் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என வயிற்றுப் பிள்ளையோடு வந்திருக்கும் அமிர்தாவுக்கு வளைகாப்பு பூட்டி அழகு பார்க்க ஆசைப்பட்டார். ஏனெனில் இன்னும் நீரஜ், அமிர்தா வீடுகள் அவர்களை அங்கீகரிக்கவில்லை. தென்வயலில் வேலைகளை ஆரம்பித்து வைத்து, ஆண்கள் , வேலையாட்களோடு அங்கேயே நிற்க, பெண்கள் மட்டும் சிந்தாவின் வீட்டுக்கு வந்தனர். ராக்காயி கிழவி இவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் காணச் சகிக்காமல் நேற்றே மகள் வீடு வரை சென்றிருந்தது. அதனால் பெண்கள் சுதந்திரமாகவே இருந்தனர். பாட்டுப் பாட வந்த கிழவிகள் இரண்டும், " உன் மாமியாக்காரி, திரும்ப வந்தானா வீட்டுக்குள்ள சேர்க்காத" எனச் சிந்தாவுக்குச் சொல்லிக் கொடுத்துச் சென்றனர் . அமிர்தா மற்றும் அவள் தோழிகள் இருவர், வேர்கள் பண்ணையில் ஒரு வீட்டில் வசிப்பவர்கள், முத்துவோடு நல்ல பழக்கம் இருந்தது. மூவருமாகச் சேர்ந்து சிந்தாவிடம் குமரனுக்காகப் பேசினர். " சிந்தாக்கா, எங்க பிரண்டுங்கிறதுக்காகக் சொல்லலை, குமரன் ரொம்ப நல்லவன். பெண்களை மதிக்கத் தெரிஞ்சவன்.நீங்கத் தைரியமா முத்துவை அவனுக்குக் கொடுக்கலாம்" என அமிர்தா நேராக உடைத்தே பேசினாள். " எனக்கு அவுக குணத்தைப் பத்தியெல்லாம் சந்தேகம் இல்லை . இத்தனை நாள் பழக்கத்தில் தெரியாதா. சாதரணம இவுக இரண்டு பேர் மட்டும்னா கூடச் சரின்னு, மத்தவுகளை எதுத்துக்கிட்டு கூட அனுப்பிடுவேன். இந்த விவசாயம், பெரிய வீட்டு ஆளுங்க, ஊர் மக்கள்னு இத்தனை பேர் வாழ்க்கை இதில சுத்தியிருக்கு. அதையும் யோசிக்கனுமுல்ல" என்றாள் சிந்தா. " நீங்க சொல்றதெல்லாம் சரி தான். நானும் நாளைக்கே கல்யாணம் பண்ணனும்னு சொல்லலை, அது தான் முத்துவோட படிப்பு முடிய இரண்டு வருஷம் ஆகுமே. அது முடியவும் செய்வோம். நீங்க இது நடக்கும்னு மனசில நினைங்க " என வலியுறுத்தினாள். முத்து அமைதியாகவே உட்கார்ந்து இருக்கவும், அமிர்தா அவளிடம், " நான் உனக்காக இவ்வளவு பேசுறேன். நீ எதுவும் பேசமாட்டேங்கிற" எனக் கேட்கவும். " அக்கா சொன்ன அதே காரணம் தான் அமிர்தாக்கா. இந்த ஜென்மத்துக்கு அவுகளை நினைச்ச மனசில வேற யாருக்கும் இடமில்லை. எங்க அக்காவையும், குடும்பத்தையும் என்னால மீற முடியாது. " என உறுதியாகப் பேசவும். சிரித்த அமிர்தா, "இப்போதைக்கு ஓகே. ஆனால் உன் கிழவன் ரொம்ப நாள் விடமாட்டான். இந்தக் குதிரையெடுப்புச் சொல்றீங்களே, அந்த மண்குதிரையிலேயே வச்சுக் கடத்தினாலும் கடத்துவான். அப்ப என்ன செய்வேன்னு பார்ப்போம்" எனக் கேலியாகவே சொல்லவும், அக்காளும் தங்கையுமே அதிர்ச்சியாகப் பார்த்தனர்.


மற்ற இரு பெண்களுமே சிந்தாவிடம், இனிமே முத்துவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம், தங்கள் பொறுப்பு என்றவர்கள். " இந்த ஊர், குமரன் சொந்தக்காரங்க ஒத்துக்கலைனா, நீங்களும் குடும்பத்தோட வேர்கள்ல ஐக்கியமாயிடுங்க. " என மற்றொரு யோசனையும் சொல்லிச் சென்றனர். முத்து, அமிர்தாவோடே சத்யாவையும் தூக்கிக் கொண்டு பெரிய வீட்டுக்குச் சென்று அவளை வளைகாப்புக்குத் தயார் செய்யச் சென்றாள். அமிர்தா ஊருக்குக் கிளம்புவதால், அவளுக்கு நினைவுப் பரிசாக ஏதாவது கொடுக்க விரும்பிய சிந்தாவுக்கு , தங்களறையில் பரன் மேலிருந்த பித்தளை முளைப்பாரி சட்டி நினைவில் வந்தது. அதே போன்ற சட்டியில் பூக்கள் மிதக்கவிட்டுப் பார்வையாக எங்கோ வைத்திருந்ததைப் பார்த்த ஞாபகம், எனவே அதையே கொடுக்கலாம் என யோசனை வர, முத்துவை முன்னே அனுப்பிவிட்டு இவள் அதை எடுக்கச் சென்றாள். காலை எட்டி துணி சுற்றி வைத்திருந்த சட்டியை எடுக்க முனைய, பரனுக்கும் அவள் கைக்குமே ஒன்றரையடி தூரம் இருந்தது. வெளியே வந்து சேர், ஸ்டூளைத் தேட, சுப்பு இருந்த ஒரு சேரையும் சற்று முன் வந்து வயலுக்கு எடுத்துச் சென்றிருந்தான்.


 தலையணைகளை அடுக்கி அது மேல் ஏறி, எட்டிப் பிடிக்க முயற்சிக்க, தலையணை சறுக்கி கீழே விழப் போனாள். எதேச்சையாக உள்ளே வந்த வேலு, " சிந்தாமணி " எனப் பதட்டத்தோடு அவளைப் பிடித்தவன். " அறிவு இருக்கா புள்ளை உனக்கு, இந்நேரம் நான் பிடிக்கலைனா, நெத்தி பொட்டு, பீரோல்ல முட்டியிருக்கோம். என்கிட்டச் சொன்னா எடுத்துத் தரமாட்டேன். என்னாத்துக்குத் தவ்விக்கிட்டு இருக்கவ" என அவன் கடிந்து கொள்ளவும், இத்தனை நாள் கழித்துக் கணவன் தன்னோடு பேசியதால், உணர்ச்சி வயப்பட்டவளாக, கோபமும் கூடவே வந்தது. " நான் எப்படிப் போனா உனக்கென்ன, என்னை எதுவும் கேக்கிற நிலைமையிலையா வச்சிருக்க. " என முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டவள், மீண்டும் தலையணையை அடுக்கி ஏறப் போகவும். " இந்தா புள்ளை, என்னா ரொம்ப ஓவராப் பண்ற" எனத் தலையணை உதைத்து தள்ளியவன், " என்னா புள்ளை குறையா வச்சேன். என் பாடு எனக்குத் தான் தெரியும்" எனச் சத்தமாக ஆரம்பித்து, வார்த்தைகளை முணுமுணுக்கவும். " உனக்கு உன் ஆத்தா பேச்சு தானே உண்மையா போச்சு, உனக்குத் தெரியாமல் நான் என்னா செஞ்சிருக்கேன். அதுங்க ஒண்ணை ஒண்ணு விரும்புனா, அதுவும் என் குத்தம் தானா. உங்க எல்லாருக்கும் பழி போட நான் ஒருத்தி கிடைச்சிருக்கேன். " என அவள் அழவும். " ஏய் அழுகாத புள்ளை . கண்ணைத் தொடை. " என வேலு, பல்லைக் கடித்து வீராப்பாகவே சொன்னான். ஆனால் அவன் சொல்லச் சொல்ல அவளுக்கு அழுகை பொங்கி வந்தது. உன் கண்ணில் நீர் வழிந்தால் , என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி எனப் பாடத் தெரியவிட்டாலும், தன் வேஷம், கலைந்துவிடும். மனைவியிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் வந்தது வேலுவுக்கு.


" நல்ல நாளும் கிழமையுமா, என்னாத்துக்கு இப்படி அழுதுகிட்டு இருக்கவ" என அவள் முன் விறைப்பாக நின்று கேள்வி எழுப்பவும்.


"ம், போ" எனச் சிந்தாவே , தன் மகள் சத்தியாவைப் போல் வாயைப் பிதுக்கிக் கொண்டும், மூக்கை உறிஞ்சிக் கொண்டும், " என்னை நாலு அடி கூட அடி, ஆனால் பேசாத இருக்காத மச்சான். என்னால தாங்கமுடியலை" என அவள் அவன் மார்பில் சாய்ந்து அவனைக் கட்டிக் கொண்டு அழவும், பிடித்து வைத்த கோபமும், கட்டிய வேஷமும் கலைய, வேலு உருகி விட்டான். தன் மார்பில் சாய்ந்தவளை, இறுக்கி அணைத்தவன், 

" உன்கிட்ட பேசாம எங்கடி போகப் போறேன். அழாதடி. " எனக் கட்டியணைத்து பத்து பதினைந்து நாள் தாபத்தையும் ஒன்றாய் சேர்த்து அவளை முத்தமிட்டவன். " என் கண்ணுல்ல அழுவாத" என மகளைத் தேற்றுவது போலவே, தாரத்தையும் தேற்றினான். சிந்தாவும் அவன் அணைப்பிலேயே கட்டுண்டு கிடந்தவள், பதினைந்து நாள் வேதனைக்கும் அவனே மருந்தெனத் தன் குறையெல்லாம் தீர்த்துக் கொண்டாள்.


" இப்பச் சொல்லு, ஏன் அப்படி இருந்த " என அவள் விளக்கம் கேட்கவும் , மாட்டிக்கொண்டோமே முழித்த வேலு, " அதெல்லாம் ஒண்ணும் இல்லை" எனச் சமாளித்தவன், " ஆமாம் நான் வரும் போது வித்தைக் காட்டிட்டு இருந்தியே. என்ன வேணும்" எனக் கேட்டான். அவள் விவரம் சொல்லவும், கை எட்டியவரை ஒவ்வொரு பாத்திரமாக அவன் எடுத்துக்காட்ட சிந்தா இல்லை என மறுத்தாள்.

" நீ ஒரு குட்டச்சி. நீயே தேடு வா" என்றவன், அவளை இடுப்பைப் பிடித்துத் தூக்கி , " ம் பாரு" எனவும், " மச்சான் கூச்சமா இருக்கு" என நெளிந்தாள்.

" என்னையும் உலுக்காட்டிடாத" என்றவன், " ஏலேய், சுருட்டுக் கருப்பா" என அவளைத் தூக்கி வலது புற தோளில் உட்கார வைத்துக் கொண்டவன், " இப்பத் தேடி எடு" என்றான். அவன் மேலும் உயரத் தூக்கவும் ," மச்சான் என்ன செய்யிற" எனக் கத்தியவள் அவன் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள், ஒன்வொன்றாய் எடுத்துத் தள்ளி வைத்து விட்டுத் தான் தேடியதை எடுத்தாள்.

" எடுத்துட்டியா புள்ளை " என இடது கையால் அவள் கால்களைப் பற்றியிருந்தவன், வலது கையால் பிடிமானத்துக்கு அவளது இடுப்பிலும் கை வைத்தபடி தூக்கி நிற்க, உள்ளே ஓடி வந்த அவர்கள் மகன் சத்தியமூர்த்தி, அம்மாவைத் தூக்கிக் கொண்டு நிற்கும் அப்பாவைப் பார்க்கவும் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. "அப்போய், என்ன பண்ற" என்றான்.

" உங்க அம்மாளை வச்சு, வித்தைக் காட்டலாமுன்னு இருக்கேன்" என்றான் எகத்தாளமாக. " ஏய் சீக்கிரம் எடு புள்ளை" என வேலு, மிரட்டவும், அப்பா அம்மாவின் வித்தையில் தானும் பங்கு பெறும் ஆசை வந்தது. " அப்போய் நானும் வாரேன்" என அவன் மறுபுறம் தன் அப்பாவின் மீது மரம் ஏற " டேய் சத்தி வேணான்டா" எனச் சிந்தாவும் கத்தினாள். அதற்குள் சுருட்டுக் கருப்பன் பேரன் அப்பாவின் தோளில் தொங்கினான்.

" அய்யா வேலு" என ராக்காயி குரல் கேட்கவும், " அதுக்குள்ள இந்தக் கிழவி எங்க வந்திச்சு" எனப் புலம்பிய வேலு , அதிர்ச்சியில் பேலன்ஸ் தவற சிதறிக்கிடந்த தலையணையில் அவன் விழுந்தான். அவன் மீதே , அம்மாவும், மகனும் கிடந்தனர். சத்தம் கேட்டதில், ரக்காயியும் அதனை முந்திக் கொண்டு சுப்பிரமணியும் உள்ளே ஓடி வர, அந்தக் குடும்பத்தைப் பார்த்து அவனும் சிரித்தான்.

" இது தான் குடும்பச் சர்கஸா" எனவும்,

அம்மாவையும், அப்பாவையும் மிதித்துக் கொண்டு எழுந்த சக்தி, " என்னாப்பா நீயே, இப்படி விழுந்துட்ட, அம்மாளை மட்டும் தூக்கி உட்கார வச்சிருந்த" எனக் குற்றம் சுமத்திக் கொண்டே எழுந்து செல்ல, அக்காளுக்கும், மாமனும் எழுந்து வரட்டும் என , மருமகனைத் தூக்கிக் கொண்டு , அறைக் கதவைச் சாத்தி விட்டு வெளியேறினான் சுப்பு.

ராக்காயி விசாரித்துக் கொண்டே உள்ளே வரவும், " நீங்க, வாங்க. அவுக வருவாக. எல்லாம் இந்தப் பயலால வந்தது" என ராக்காயியையும் சேர்த்துக் கூட்டி வெளியே சென்றான்.

ராக்காயி சத்தத்தில், " ஆத்தி, சின்னாத்தா வந்திருச்சு எந்திரி புள்ளை" என அவன் மனைவியை விலக்கவும். அவனை எழ விடாமல், அவன் மேல் கையை வைத்து அழுத்தி மேலே சாய்ந்த சிந்தா, "அப்பா உன் சின்னாத்தாளுக்காகத் தான் வேஷம் கட்டுறியா , சொல்லு" எனக் கிடுக்கிப் பிடிப் போட்டாள்.

கை இரண்டையும், தலைக்குக் கீழே கோர்த்துப் படுத்திருந்த வேலு, " நீ கேட்டவுடனே நான் சொல்லிடனுமா. போடி " என்றான். " இரு, உன்னைப் போயிட்டு வந்து கவனிச்சுக்குறேன்" என அவள் மிரட்டவும்.

" சாய்ந்திரம் காப்பு கட்டுறாக. பத்து நாள் விரதம், நான் வெளிய கட்டில்ல தான் படுப்பேன். இத்தனை நாள் இருந்த மாதிரி, கோபமா மெயின்டைன் பண்ணு. கொஞ்ச வந்த, கொன்றுவேன்" என்றான் வேலு.

கண்களில் ஆனந்த நீராட, கன்னங்கள் மினுமினுக்க, " காப்புச் சாய்ந்திரம் தான் கட்டுறாக. உன் ஆத்தாளுக்கு முன்னாடி முறைச்சுக்குறேன். இப்ப கொஞ்சிக்கவா" என அவள் மையலாகக் கேட்கவும், வேண்டாம் எனத் தலையை ஆட்டினான் வேலு. ஆம் அர்த்தம் கொண்டாள் சிந்தா.

வேலுவின் வேஷத்துக்குக் காரணம் என்ன. விடை தேடுவாளா சிந்தா. இவன் வேஷம் கலைந்ததில் என்ன பின்விளைவுகள் வரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, 27 August 2021

சிந்தா-ஜீவநதியவள் -17

சிந்தா-ஜீவநதியவள் -17 

 "ஐஞ்சு ரூவா மஞ்சை சீலை புள்ளை

அவளைப் பார்த்தால் சின்னப் புள்ளை!

ஊதா...கருப்புச் சீலை-  புள்ளை உட்காருவேன் பக்கத்தில

தந்தி மரம் பக்கத்தில உனக்கு தந்தேனடி  ஐஞ்சு ருவா !

ஐஞ்சு ரூபாய் மஞ்சள் சீலை புள்ளை 

அவளைப் பார்த்தால் சின்னப் புள்ளை !"


என இருளிக் கிழவி, ராகம் போட்டு, கிராமியப் பாடலை, தலையை ஆட்டி பாடிக் கொண்டிருக்க, குமரன் அங்கிருந்த ப்ளாஸ்டிக் குடத்தைக் கவிழ்த்து  , மஞ்ச சீலையிலிருந்த தன் முத்தழகியைப் பார்த்து ரசித்தவாறே, கிழவி பாட்டுக்கு ஏற்றது போல் தாளம் தட்ட,  அமிர்தா அதனைத் தனது அலைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்தாள். 


இந்த கிராமியக் கச்சேரி நடந்தது, எந்த கிராமத்து மேடையிலும் இல்லை, சிந்தாவின் வீட்டுத் திண்ணையில் தான். நாளை ஆடி பதினெட்டாம் பெருக்கு. மேலப்பூங்கொடி கிராமத்தில் தங்கள் முதல் செயல் திட்டத்துக்காக வேர்கள் அமைப்பினர், தங்கள் பரிவாரங்களோடு இங்கு டேரா போட்டனர். அமிர்தா, நீரஜ், குமரனைத் தவிர ஆணும் பெண்ணுமாக அவர்கள் கூட்டாளிகள் ஐந்தாறு பேரும் வரவுமே, அந்த இடம் திருவிழா பூண்ட பூமியானது. 


இருளி  இந்தப் பாட்டைப் பாடி முடியவும், " இவ தான் பாடுவாளா, நானும் பாடுறேன் பாரு" என ஆண்டிச்சி கிழவி,  அடுத்த பாட்டை அவிழ்த்து விட்டது. 


"வெள்ளி புலியருவா விடலைப்பய அடிச்சருவா !

சொல்லி அடிச்சருவா 

சொழட்டுதடா நெல்கருதை !


மழைக்கும் கீழே கருதறுத்து 

மாராளவு கட்டுக் கட்டி !

மந்தையில வச்சுபுட்டு,

மச்சான் வருவாகண்டு

பார்த்து நிண்டேன்! 


உன் மச்சான் சரக்கடிச்சு

சந்தையில மயங்கி கிடக்கான்

மாமன் வரவா தூக்கிவிட ?

தூக்கி வந்து தந்தேனுண்டா 

புள்ளை எனக்கு என்ன தந்திடுவ


தூரம் தொலைவு போறவுகட்ட 

தூக்கி சொமக்க விட்டுடுவேன்!

தூக்கிச் செத்த விட்டேனுண்டா 

துணைக்குச் செத்த வந்துடுவேன்


துணைக்குச் செத்த போனியிண்டு 

உன் புருசன் கண்டானுண்டா 

உன்னை வச்சு வாழமாட்டான்.

ஆத்தா ஊட்டுக்கு விரட்டிடுவான்! "

 

ன ஆண்டிச்சி வில்லங்கமாகப் பாடவும், அமிர்தா வயிறு குலுங்கச் சிரிக்க, அவளது ஏழு மாத கருவும் குலுங்கியது, " ஏய் அமிர் கேர்புல்" என நீரஜ் பதறவும். 

" ஏய் அம்மிக்கல்லு, பார்த்து மெதுவா சுளுக்கிக்கப் போவுது. என் மருமகனுக்கு எதாவது ஆச்சுனா பாரு" எனக் குமரன் மிரட்டவும்.

" ஏய், கிழவா, நீ தான் அந்தக் கிழவிக்கு ஏத்த மாதிரி தாளமே போட்ட, அதுல தான் எனக்குச் சிரிப்பு வந்தது, ஓவரா சீன் போடாத" என்ற அமிர்தா , " அம்மாச்சி சீரியஸ்லி, இப்படியே பாடுவீங்களா" எனச் சந்தேகம் கேட்கவும். அதில் மகிழ்ந்த இரு கிழவிகளும், " ஆமாத்தா, கருவை வெட்டப் போவோம், நாத்து நட, களையெடுக்க,கருது அறுக்க, இப்படி மொத்தமா போவோம். அப்ப அழுப்புத் தெரியாம இருக்க அப்படியே இட்டுக்கட்டி பாடுறது தான்" என்றார் ஆண்டிச்சி. இவர்கள் பாடியதில் அந்த வட்டார மொழியும் பொருளும் புரியாத கோவையிலிருந்து வந்த பெண்கள் , முத்துவிடம் விவரம் கேட்கவும், குமரன் அவளைப் பார்த்துக் கொண்டே இருப்பதில் முகம் சிவந்தவளாக ,மேலோட்டமாக அதன் பொருளைச் சொல்லவும், அவர்களும் வாயை பிழந்தனர். சிந்தா " இந்தா இரண்டு பேரும் சேர்ந்து, இந்த ஊர் மானத்தை வாங்குங்க. வந்திருக்கவுக என்ன நினைப்பாக" எனக் கிழவிகளைச் சத்தம் போட்டாள். " அடிப்போடி இவளே, பாட்டுக் கட்டுற அழகைப் பார்ப்பாகளா, அர்த்தத்தைப் பிடிச்சிட்டு தொங்குறவ" என அசட்டையாக ஆண்டிச்சி கிழவிச் சொல்லவும், " சரியா சொன்னீங்க பாட்டி , சிந்தாக்கா கிராமத்துப் பாட்டை அனுபவிக்கனும், ஆராயக்கூடாது" எனக் குமரன் கிழவிகளுக்கு வக்காலத்து வாங்கவும், "அப்படிச் சொல்லுங்க என் ராசா, பெரியவூட்டு புள்ளையே சொல்லிடுச்சு, நீ பேசாத கிட" எனக் குமரனுக்குக்கு இருந்த இடத்திலிருந்தே நெட்டி முறித்துக் கொஞ்சியது ஆண்டிச்சி . " ஆமாம்மாம், இந்த ஊர்காரவுகளை ஆராய்ஞ்சமுன்னா, உலகம் தாங்குமா. இட்டுக்கட்டி பாடுறதிலையே இம்புட்டு வருது. நிஜத்துக்கு இன்னும் என்னவெல்லாம் இருக்குமோ" என வேலுவின் அம்மா ராக்காயி மொத்தமாக ஊர் பெண்களைக் கேவலப்படுத்த, மற்ற இரண்டு கிழவிகளும் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டனர் . " எச்க ஊரில கேலி முறை பேச்சோட நிறுத்திக்குவோம். உங்க ஊர்ல, அதைச் செஞ்சே காட்டுவீகளாமுல்ல" என இருளியும். " அட நீ ஒருத்தி, செய்ததுக்குச் சாட்சியே இவுக தான். வேலு அம்மாளே, இவுகளால தானே போய்ச் சேர்ந்துச்சு. கொஞ்சம் ஆட்டமா ஆடியிருக்கு ,ராஜகெம்பீரமே சிரிப்பா சிரிச்சு போச்சில்ல" என ஆண்டிச்சி வம்பிழுக்கவும். " அடியே என் மகன் வீட்டில வந்து உட்கார்ந்து கிட்டு என்னையவே பேசுறீகளா" என ராக்காயியும். " எதுடி உன் மகன் வீடு. இது எங்க மருமகன் அய்யனார் வீடு. அவர் மகள் சிந்தா கட்டிக் காக்கிற வீடு" எனவும் அவர்களிடையே பேச்சு வளர்ந்து கொண்டே சென்றது. சிந்தா மாமியாரை அடக்க முடியாமல், மற்ற இரண்டு கிழவிகளையும் அடக்கி, " அம்மாச்சி, நான் நல்லா வாழனுமுன்னு நினைச்சேனா. இத்தோட இந்தப் பேச்சை நிறுத்திக்க." எனவும் . " ஏண்டி நேத்து வந்தவ, இந்த ஒண்ட வந்த பிடாரி உன்னைப் பேசுனது இல்லாம, ஊர்கார பொம்பளைகளையெல்லாம் அந்தப் பேச்சு பேசுது. கேட்க ஆள் இல்லைங்கிற தகிரியம். இரு இன்னைக்கு, இவ வாயைக் கிழிச்சு விடுறேன்" என ஆண்டிச்சி வெகுண்டு எழ, சிந்தா மன்றாடிக் கொண்டிருக்க, ராக்காயி தனியாக அலறியது. அமிர்தா, அவர்களைச் சமாதனப் படுத்த முயன்றாள் , ஆனால் இந்த வாய்ப்பை எதிர் பார்த்தே இருந்தது போல் ஆண்டிச்சி சத்தம் பெரிதாகவே இருந்தது. "இங்க பாரு, என் பேத்தி புருஷன் வேலுவுக்காகப் பார்க்குறோம், இல்லையினா உண்டு இல்லைனு பண்ணிடுவோம் " என ஆண்டிச்சி எச்சரிக்கை செய்ய, குமரனும் பேசட்டும் என வீட்டுக் கொண்டிருந்தான். முத்துக் குமரனைக் கண்களால் பார்த்து உதவிக்கு அழைக்கவும், " ஹலோ பாட்டிஸ், இங்க பாருங்க. இங்க ஒரு நல்ல விசயம் நடக்கப் போகுது பிரச்சனை வேண்டாம். நாளைக்குக் காலையில் ஏழு மணிக்கு வயலுக்கு வந்துருங்க. உங்க செவ்வாய் பாட்டோட சாமியைக் கும்பிட்டுத் தான் செடி நடனும்" என்றவன், இருவரிடமும் ஆளுக்கு ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டைத் தரவும், ராக்காயி, சண்டை எல்லாரையும் மறந்து, " கட்டாயம் வந்துடுறோம் ஐயா, நீங்க நல்லா இருப்பீக. நீங்க தொட்டதெல்லாம் பாலாப் பெருகும்" என ஆசிகளை அள்ளி வழங்கிச் சென்றன. அந்த இடத்திலும் சிறிது அமைதி வந்தது. ஆனாலும் ராக்காயி அர்ச்சனை மட்டும் ஓயவில்லை. புழக்கடை பக்கம் சென்று, சிந்தாவை ஜாடையாகத் திட்டிக் கொண்டு தான் இருந்தது. சிந்தா எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தவள், வேறு விசயங்களிலும் முன்னைப் போல் கலந்து கொள்ளவில்லை. ஒரு பெரிய லாரியில் மூலிகை நாற்றுகள், தானிய வகைகளுக்கான விதைகள், பூ செடிகள், பணப்பயிர்கள் என இவர்கள் திட்டமிட்டதுக்கு ஏற்ப, கோவையிலிருந்து உற்பத்தி செய்து, நேற்றே தென் வயலில் சேர்த்து விட்டனர்.

அய்யனார், பெரிய வீட்டுப் பண்ணையம் பார்க்கும் கருப்பன் மற்றும் அவன் சகோதரன் என இரண்டு மூன்று பேரைத் துணைக்கு வைத்துக் கொண்டு நாற்றுகளைப் பராமரித்தும், அந்த அந்த வயல்களுக்கு அருகேயும் கொண்டு சேர்த்திருந்தார்.

அவற்றைப் பார்வையிட்டு ,அய்யனாரை பாராட்டி விட்டு தான் நீரஜ் , குமரனோடு வந்திருக்க வேர்கள் அமைப்பினர் சிந்தா வீட்டில் வந்து அமர்ந்திருந்தனர். முத்து, சுப்பு கோவை வந்திருந்ததாலும், அமிர்தா, குமரன் மூலம் சிந்தாவின் பணிகளை அறிந்தாலும், அவளைப் பார்த்து பேசவே இவர்கள் அங்கு அமர்ந்திருந்தனர். அப்போது தான் , குமரன் கேட்டுருந்ததால் இரண்டு கிழவிகளும் வந்து தங்கள் பாட்டுத் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். அமிர்தா தான் சிந்தாவை இழுத்து வைத்துப் பேசினாள். " அக்கா போனதடவை நான் வந்தப்ப எத்தனை இடத்துக்குப் போனோம், எவ்வளவு பேர்க்கிட்ட பேசினீங்க. இப்ப ஏன்கா இப்படி இருக்கீங்க. உங்க முகமே சரியில்லையே" என விசாரித்தாள். " அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நல்லா தான் இருக்கேன். வீட்டு வேலையே சரியா இருக்கு , அது தான் எதுலையும் கலந்துக்க முடியலை. ஆம்பளைங்க மூணு பேருமே வேலை , வேலைன்னு ஓடுறாகளா, அது தான் பார்த்து, பார்த்துச் செய்ய வேண்டியது இருக்கு" என உதட்டை மட்டும் இழுத்துச் சிரிக்க, அவளின் கண்ணை எட்டாத புன்னகையைப் பார்க்கவே சகிக்கவில்லை.

மாலை நேரம் வழக்கம் போல் சத்யாவுக்கு ஏதோ கிண்டி ஊட்டியவள், சிவநேசன் சிந்துஜாவைத் தூக்கி வந்த போது கூட ஆர்வமாக முன்னேற வில்லை. அது தான் சிந்தாவைப் பார்த்துத் தாவி கொண்டு வர, முத்து தூக்கி வந்து அக்காவின் அருகில் வைத்துக் கொண்டாள். அருகில் வந்து, அவளிடம் தாவிய பிள்ளையை மற்றொரு கையில் வாங்கிக் கொண்டவள், " முத்து, இன்னொரு கின்னத்தில வச்சிருக்கேன். எடுத்துட்டு வந்து ஊட்டு" எனவும் முத்து சிந்துஜாவுக்கு ஊட்ட, சிந்தா தன் மகளை மட்டும் வைத்துக் கொண்டாள். ஆனால் சிவநேசனும், இது தான் வழக்கம் என்பது போல், குமரன், நீரஜ், மற்றவர்களை அழைத்துக் கொண்டு வயலுக்குள் சென்றுவிட்டான். அமிர்தாவுக்குத் தான் எதுவும் புரியவில்லை. வேலு தனது வண்டியில் வந்து இறங்கியவன், ஒரு கட்டப்பையில் சில சாமான்களைக் கொண்டு வந்து, திண்ணையில் வைத்து விட்டு, அமிர்தாவை வரவேற்றான். " வாங்க மேடம் நல்லா இருக்கீகளா" எனவும், " ஒரு மாசம் பார்க்கலைனா, மச்சினியெல்லாம் மேடமாயிடுவோமா மாமா" எனச் சிந்தாவை அக்காவெனச் சொல்வதால், அவனை மாமா என ஏற்கனவே அழைத்த முறைக்கு, அமிர்தா வம்பு பேசவும், " ஆமாம், பெரிய இடத்தில இருக்கவுக மேடம் தான். அக்காளைக் கட்டினாளும் வண்டிக்காரன், வண்டிக்காரன் தானே. " என அவனும் பதில் பேசவும் " அப்ப நாளைக்கு முத்து வசதியா இருந்தாலும், அவளும் மேடம் தானா" எனக் கேட்கவும். " அவுகல தான் ஏற்கனவே மேடம் ஆக்கிவிட்டுட்டீகளே. ஆச்சு அவுகளும் உங்களோட கிளம்பிடுவாகல்ல" எனக் கேலி போலவே வேலி பதில் சொல்லவும். " மாமா, சும்மா இந்தக் குத்திக் காட்டுற வேலை எல்லாம் வேண்டாம். நான் படிக்கப் போறது தான் , உங்க பிரச்சனைனா சொல்லுங்க. நான் போகலை. நின்னுக்குறேன். அப்பவாவது எங்க அக்கா சந்தோஷமா இருக்கும்னா சரி தான்" என முத்துக் காட்டமாகப் பதில் தரவும், சிந்தா தங்கையை, " என்னடி வாய் நீளுது. பேசாம இரு" என்றாள். வார்த்தைகள் சத்தமாகவும் பிள்ளைகள் முழித்தன.

அதற்குள் வேலு சத்தம் கேட்ட ராக்காயி, மகனிடம் சற்று முன் நடந்ததுக்குப் பஞ்சாயத்தோடு சேர்த்து ஒப்பாரியம் வைக்கவும், சிந்துஜா அழ ஆரம்பித்தது. சிந்தாவுக்குச் சங்கடமாக இருந்தது. வேலு சின்னம்மாவை, " பேசாத இரு, இரவைக்குப் பேசிக்கலாம்" என்றான்.

" இப்பவே ஒரு முடிவைச் சொல்லு, நான் கிளம்பிக்கிறேன். எனக்கு ஒரு பஸ்ஸோ, ரயிலோ கிடைக்காதையா போயிடும்" எனவும், சிந்தா ஜாடைக் காட்ட முத்து அமிர்தாவிடம், " அக்கா, காலாற நடப்போமா. இல்லைனா சாரை வரச் சொல்லவா. இந்தக் கிழவி இப்போதைக்கு நிறுத்தாது. ஆளுகளைக் கண்டா ரொம்பக் கத்தும்" எனவும். " சரி வா, எனக்கு நடக்கனும் போல இருக்கு. பெரிய வீடு வரைக்கும் நடப்போம் வா" என்றவள் சிந்தாவை திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்ல, முத்து தான் அறிந்தவரை விசயத்தைச் சொன்னாள். " நான் கோவையிலிருந்து வந்தப்ப கூட மாமா நல்லா தான் இருந்துச்சு. இந்தப் பத்து நாளா தான் ஏதோ சரியில்லை. அக்கா என்கிட்ட எதுவுமே சொல்லாது. அப்பா, இது புருஷன், பொண்டாட்டி சண்டை கண்டுக்காதண்டு சொல்லிட்டாரு. அப்பா, வயல்ல சாமன் எல்லாம் இருக்குன்னு செட் போட்டிருக்க இடத்துக்குப் படுக்கப் போகுதா, இந்த மாமன் ரூம்புலையும் படுக்காமல், வெளில படுக்குது. இந்தக் கிழவி எதையோ மூட்டி விடுது. மாமாவும் கேட்டுக்கிட்டு ஆடுது. இது எங்கப் போய் முடியும்னு தெரியலை" என நீளமாகப் பேசிக் கொண்டே வரவும் அமிர்தாவுக்கு ஏதோ சந்தேகம் வந்தது. அமிர்தாவும், முத்துவும் கிளம்பவுமே, ராக்காயி இன்று கிழவிகளோடு வந்த மோதலைச் சொல்லி, " இந்த வீடு உன் வீடு இல்லையாம், இவுக அப்பன் ஊடாம், இவ வீடாம். இம்புட்டு சம்பாரிச்சு போட்டு எல்லாம் செஞ்சும், உனக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு தேவையா" என ராக்காயி மகனைத் தூண்டி விடவும். " அவுக சொல்றது நிசந்தானே இது என்ன நம்ம வூடா, நம்ம ஒண்ட வந்தவுக தானே இன்னும் பத்து நாள் பொறுத்துக்கக் குதிரையெடுப்பு முடிஞ்சு, ஆவணி பொறக்கவும் இதுக்கு ஒரு முடிவு கட்டுவோம். அப்புறம் ஆளும் பேரும் வந்திருக்கையில் இப்படிக் கத்தாத, அசிங்கமா இருக்குது ." எனச் சின்னம்மாளை சமாதானம் செய்தவன், சிந்தாவிடம் ஒரு வார்த்தையும் கேட்டான் இல்லை.

அவள் மௌனமாகப் பொட்டு பொட்டாகக் கண்ணீர் வடிக்கவும், " இது ஒண்ணைக் கண்டு வச்சிருக்கா" என ராக்காயி வக்கனை பேச ஆரம்பிக்கவும், வேலு "சின்னவ போன் போட்டா, அவ மகளுக்கு முடியலையாம், நான் பஸ் ஏத்தி விடுறேன், போயி பார்த்துட்டு, நாளைக்கு ரவைக்குத் திரும்பிடு " என இரண்டாயிரம் ரூபாயை நீட்டவும்,

" அவளுங்க தான், என்னை மதிக்கம துரத்தி விட்டாளுகளே, எனக்குப் போகணுமுன்னு எல்லாம் இல்லை, நீ சொல்றியேன்னு வேணா போயிட்டு வாறன் " என வேண்டா வெறுப்பாகக் கிளம்புவது போல் கிளம்ப, நாளை ஆடி பதினெட்டு , பயிர்க்குழி போடும் நாள் , சுபமாக இருக்கட்டும் என்றும், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஒரு நாளாவது நிம்மதியாக இருக்கட்டும் எனச் சின்னமாளை வேலு ரோட்டில் கொண்டு போய் , ஆட்டோ ஏற்றிவிட்டான். முத்துமணி கோவை சென்ற மூன்றாம் நாள் சுப்புவையும் சிந்தா அனுப்பி வைக்க, அவனுக்குத் தான் அங்குக் கற்பதற்கு நிறைய இருந்தது. முத்துவின் மாற்றத்தைக் கண்டவன், வியந்து அவளிடம் பேசியவன், ஊன்றி எதையும் கவனித்தான் இல்லை. அதே பில்டிங்கில் மற்றொரு தனியறை, வசதி , மற்றும் இந்தச் சொட்டு நீர் விவசாயத்தின் குழாய் பதித்தல் முதலான தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் அதனைக் கற்றுப் பூங்கொடியில் அமைக்க வேண்டிய பணியையும் அவனுக்கே தருவதாகவும் சொல்லவும், மிகவும் ஆர்வமாகவே அதைக் கற்றுக் கொண்டான் இங்கு ஏற்றத் தாழ்வு இன்றிக் குமரனிடம் கூடப் பழக முடிந்ததை எண்ணியவன், தங்கள் ஊரைத் தவிர மற்ற ஊர்களில் இப்படித் தான் போலும் என்ற முடிவுக்கு வந்தான். ஊரில் முத்துவை காக்கும் பணியை வேலு மேற்கொண்டதால், குமரனின் பார்வை, தன் அக்காவைத் தழுவிச் செல்வதையும் கூட வித்தியாசமாக உணர்ந்தான் இல்லை. சுப்பு வேலுவிடம், தனக்குக் கிடைத்த வாய்ப்பை பற்றிச் சொல்லவும், "சரிடா, அங்க இருந்து கத்துக்கிட்டு, முத்துவையும் கூட்டிட்டு வா. உங்க அக்கா கிட்ட நான் சொல்றேன்" எனச் சிந்தாவையும் வேலு தான் சம்மதிக்க வைத்தான். இவள் முத்துவைப் பற்றிப் பேச வர , அந்த வாய்ப்பும் நழுவி போனது. பத்து நாள் கழித்து , குமரனோடே காரில் சுப்புவோடு வந்த முத்துவின், நடை உடை பாவனையில் நிறைய மாற்றம் இருந்தது. அவளது பேச்சில், குமரனை விட அமிர்தாவின் பாதிப்பு அதிகமிருந்தது. " இப்பவே உன் தங்கச்சி பட்டனத்துக்காரியா மாறிட்டா" என வேலு கேலியோடு முடித்துக் கொள்ள, அய்யனார் மகளைப் பார்த்துப் பூரித்துப் போனார். சிந்தாவும், வேலையை முடித்துவிட்டு, மகளையும் தூக்கிக் கொண்டே வேர்கள் அமைப்பின் காரியங்களைக் கவனித்தாள். ராக்காயி அந்தச் சமயம் அடக்கியே வாசித்தது. பெரியவீட்டுக்கு போக வர, சிவநேசன் இங்கு வருவது என எல்லாம் இயல்பாக நடக்க, ராக்காயிக்கு புறணி பேச ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
முத்து ஊரிலிருந்து வந்த பிறகு, ஒரு நாள் எதேச்சையாக அவளது போனில் குமரனோடு அவள் சேர்ந்து எடுத்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியான கிழவி, சத்தமில்லாமல் அதைக் களவாடி, மகனிடம் காட்டியது. முதலில் நம்பாமல் பார்த்தவன், சின்னம்மாளிடம், " இதை வெளியே சொல்லாத, அவன் உள்ள வந்தா, எனக்கு மதிப்பு இல்லாமல் போயிடும். இதை நான் பார்த்துக்குறேன்" என ராக்காயி குணமறிந்து விசயத்தைக் கையாண்டவன், கோபத்தை , சின்னாத்தாள் அறிய மனைவியிடம் காட்டினான். " மச்சான், நான் உன்கிட்ட இரண்டு மூணு தரம் சொல்லத் தான் வந்தேன்" என அவள் விளக்கம் தர முற்படவும். " ஏன் மத்த நேரமெல்லாம் முகூர்த்தம் சரியில்லாமல் போயிடுச்சோ. " எனச் சினம் கொண்டவன், " உங்களுக்கெல்லாம், பட்டாலும் புத்தி வராது. என்னமோ செய்ங்க, தொலைங்க. இதில நான் தலையிட மாட்டேன். உன் தங்கச்சிக்கு ஒரு ரயிலு கிடைக்காமப் போயிடுமா, இல்லை வேலு மாதிரி ஒரு இளிச்சவா பய தான் கிடைக்காமல் போயிடுவானா" என வார்த்தைகளைக் கக்கியவன், அதன் பின் பராமுகமாகவே இருந்தான். ராக்காயி சமய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இவர்கள் மன வேறுபாட்டைப் பெரிதாக்கியது. தென் வயலுக்கான பைப்புகள் வந்து இறங்கவும், அய்யனார் தன் ஜாகையை அங்கு மாற்றிக் கொள்ள, வேலு வாசலில் படுக்க வந்தான். அதற்கு முன் தினம், சிந்தாவோடு நடந்த வாக்குவாதமே அவனை வாசலுக்குக் கொண்டு வந்திருந்தது. ராக்காயி, ஊருக்குள் ஆராய்ந்து அறிந்ததில், சிவநேசனுடன் சிந்தாவை சேர்த்துக் கட்டிய கதையெல்லாம் தெரிய வர, சிந்துஜாவுக்கு இவள் பால் கொடுப்பதையும் முடிச்சிட்டு வேலு இல்லாத நேரத்தில் சிந்தாவை நேரடியாகவே தாக்கி, தன் மகனை அவள் ஏமாற்றுவதாகக் குற்றம் சுமத்தியது. " அனாவசியமா பேசாதீங்க. என் மச்சானுக்கு என்னைப் பத்தி தெரியும்" எனச் சிந்தா காட்டமாகவே பதில் தந்தவள், பெரிய வீட்டில் ராஜேஸ்வரியின் மடியில் விழுந்து அழுதாள். அவளைத் தேற்றியவர், " உன் புருஷன் உன்னை நம்புறான்ல, அது போதும், மத்த கழுதைங்க என்ன சொன்னாலும் காதில வாங்காத " என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். ஆனால் ராக்காயி மீண்டும் அசிங்கமாகப் பேசவும், " என் புருஷன், அன்னைக்கே சொல்லுச்சு. நீ ஊருக்குக் கிளம்பு. உனக்குப் பாவமே பார்க்கக் கூடாது" எனச் சின்ன மாமியார் துணிகளை, கட்டை பையில் வைத்துக் கிளப்பி விட முனைய, " ஏன் உன் காதல் நாடகம், நடத்த விடாம நான் தடங்கலா இருக்கேனாக்கும், இந்தப் புள்ளைகளை என் மவனுக்குப் பெத்தியா, இல்லை பெரியவீட்டுக்காரனுக்குப் பெத்தியா " எனவும், இதுவரை, இந்த ஊரும், கங்காவும் கூடச் சொல்லாத பழி , வேலுவுக்கு வாழ்க்கை பட்ட பிறகே யாராக இருந்தாலும் அவளைப் பேச பயப்படுவார்கள் , அப்படியிருக்க, இவ்வளவு கேவலமாகப் பேசிய பொம்பளையை வெட்டிப் போடும் ஆத்திரம் வந்தது சிந்தாவுக்கு . சாது மிரண்டால் காடு கொள்ளாது, என்பார்கள் . பொறுமைக்குப் பெயர் போன பூமித்தாய் எப்படிப் பொறுமை மீறி நில அதிர்வாகப் பொங்குவாளோ, அது போல் கோபம் வந்து மாமியாரை அடிக்கக் கையை ஓங்கிவிட்டாள் சிந்தா , அந்த நேரம் வேலு மற்றொரு பதட்டத்தோடு வரவும், ராக்காயி அவனிடம், " உன் பொண்டாட்டி, என்னை வீட்டை விட்டே அடிச்சு துரத்துறா. நான் எங்க போவேன். உன் நல்லதுக்காக அவளுக்குப் புத்தி சொன்னது குத்தமா" என ஒப்பாரி வைக்கவும், சிந்தாவிடம் சென்று " என் ஆத்தாட்ட மன்னிப்பு கேளு" என்றான். சிந்தா தன்னிலை விளக்கம் தர முயன்றாள். வேலு எதையுமே கேட்கத் தயாராக இல்லை, " நான் வேணுமுண்டா என் ஆத்தாகிட்ட மன்னிப்பு கேளு" என்றான்.

" என்னை நடத்தையைத் தப்பா பேசுது. புள்ளைகளை உனக்குத் தான் பெத்தேனான்னு அந்தப் பொம்பளைக்குக் கேக்குது, நீ அதுக்குச் சப்போர்ட் பண்ற" என்றவள், " நான் செத்தாலும் இந்த விசயத்துக்காக மன்னிப்புக் கேக்கமாட்டேன்" என்றாள். வேலு இருந்த உணர்வு நிலையில் சிந்தாவின் வார்த்தைகள் அவனை உசுப்பேற்ற, அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். " என்ன பேசறமுன்னு புரிஞ்சு பேசு" என உருமிவிட்டு அவன் வெளியேற, அழுத மகளையும் அணைக்கத் தோன்றாமல் அறையில் அடைந்துக் கிடந்தாள். இது அத்தனையும் முத்துமணி தனது இளநிலை பட்டப்படிப்பின் சான்றிதழ் வாங்க, அய்யனாரோடு சிவகங்கை கல்லாரிக்கு சென்றிருந்ததால் தெரியாது. சிந்தா படுத்தே கிடக்கவும், தங்கையிடம் உடம்புக்கு முடியவில்லை மூன்று நாள் உபாதை எனப் பொய்ச் சொல்ல, அக்காவுக்கு ஓய்வு கொடுத்து தானே சமையல் முதல் வீட்டு வேலைகளைச் செய்தாள். வேலு, பொதுவாக மனைவியை இலேசாகக் கடிந்துக் கொண்டாளும் அன்று இரவே, தானே வலியச் சென்று சமாதானம் செய்பவன் ,இந்த முறை கண்டு கொள்ளாமல் விடவும், சிந்தா மனதளவில் ஓய்ந்துப் போனாள். அது முதல் வீட்டை விட்டு வெளியேறினாள் இல்லை. அவர்களுக்குள் பேச்சு வார்த்தையும் இல்லாமல் போனது. எப்போதும் தோழியைப் பார்க்க வரும் வள்ளியும், குதிரையெடுப்பு வேலை பளுவும் , அவளது உடல் உபாதையும் சேர்ந்து படுத்த, சிந்தா வீடு வரை கூட நடக்க முடியாமல் வருவது இல்லை. முத்துவிடம் சொல்லிவிட்டும் கூட ,அவளைச் சென்று பார்க்கும் மனநிலையிலும் சிந்தா இல்லை. கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறியும் கூவலாம் என்பார்கள். வேலு தந்த நம்பிக்கையில் ஊரையே எதிர் கொண்டவள், அவன் புறக்கணிப்பில் தனக்குள்ளே உழன்றாள். பெரிய வீட்டுக்கும், இவர்கள் ஊடல் அரசல்புரசலாகத் தெரிய வர , ராஜேஸ்வரி மகனிடம், " இந்த வேலுகிட்ட நீ பேசுவேண்டா " என்றார். மீனாளும், " ஆமாம் அத்தான், சிந்தா இந்தப் பக்கமே வரலை. நீங்க அவள் புருஷன்ட்ட பேசுங்க" என்றாள். " இதில நான் தலையிட்டா தான் விசயம் விபரீதமா போகும். அதெல்லாம் இரண்டு பேரும் விவரமானவுக தான், கட்டி உருண்டு கரை ஏறி வரட்டும் விடுங்க " எனத் தாயையும், தாரத்தையும் சமாதானப்படுத்தித் தன் வேலையைப் பார்க்கச் சென்றான். முத்துக் குமரனிடம் விசயத்தைச் சொல்லவும், அவனும் அண்ணனைப் போலவே , இது கணவன், மனைவி விவகாரம் எனச் சொல்லி விலகிக் கொண்டான். அன்று முதல் சிந்தா வீட்டில் கண்ணாமூச்சி ஆட்டம், அவர்கள் மகன் சத்தியமூர்த்தி, மகள் சத்தியாவை வைத்தே நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆடி பதினெட்டாவது சிந்தாவின் வாழ்க்கையில் மன வருத்தத்தைப் போக்குமா. நாளை ஆடி பதினெட்டு , ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஊர் மக்களும் ஆடி பதினெட்டை தேங்காய் சுட்டு, பலகாரம் செய்து விமர்சையாய் கொண்டாடுவார்கள். அதோடு நாளை மேலப்பூங்குடி அய்யனாருக்கு , புறவியெடுப்புக்கு மாலை வேளையில் காப்புக் கட்டுகிறார்கள். அதோடு நாளை , வானம் பார்த்த பூமியாம் கிழக்கு சீமையின் தலையெழுத்தை மாற்றும் இந்தப் புது முயற்சியை ,வேர்கள் அமைப்பினர் தொடங்குகின்றனர். இவர்கள் முயற்சி வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.